https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, May 24, 2020

காந்தி நேரு விவாதம்


                       காந்தி நேரு விவாதம்

                                    - ஆர். பட்டாபிராமன்


காந்தியின் சீடர்கள் என அழைத்துக்கொள்வோரில் நேரு தனித்துவம் மிக்கவராக இருந்தவர் . தன்னளவில் சரி என அறிந்தவற்றை முகம் பார்க்காமல் பேசக்கூடியவராக இருந்தார். அவர் காந்தி சகாப்தத்தின் விளைபொருள் என்றாலும் மேற்கு ஜனநாயகம், ருஷ்யபுரட்சி, மார்க்சிய தாக்கம், சோசலிச சிந்தனைகளின் கூட்டுவிளைபொருளாகவும் இருந்தார்.
காந்தி நேரு உறவுகள் விடுதலைக்கால சிந்தனைகள் போராட்டங்களின் ஊடாக வளர்ந்த ஒன்றாக, தனிப்பட்ட உறவுகளை எப்போதும் மேம்படுத்திக்கொண்ட ஒன்றாக இருப்பதை காணமுடியும்.
காந்தியின் வாழ்வியல் சிந்தானாமுறைகளில் பெருமளவு வேறுபட்டு நின்றார் நேரு. அதேநேரத்தில் காந்தியின் செயல்பாட்டிற்கு தலைவணங்கி உடன் நின்றார். காலப்போக்கில் நேருவின் அறிவாற்றல்திறன் பெருமளவு காந்தியால் கொண்டாடப்பட்டது. தனக்குப்பின் நேரு என்றும் அறிவித்தார். நேரு தன் மொழியைப் பேசுவார் என்கிற நம்பிக்கை காந்தியிடம் இருந்தது.
இந்தியாவிற்கு திரும்பிய சில ஆண்டுகளிலேயே காந்தியின் செல்வாக்கில் காங்கிரஸ் கட்டுண்டது. ஏறக்குறைய அதே காலத்தில் இளம் நேரு தனது பொதுவாழ்க்கையை இந்தியாவில் துவங்கினார். அய்ரோப்பிய பயணம், சோவியத் சென்றுவந்த காலத்திற்கு பின்னர் நேருவின் செல்வாக்கு கூடத்துவங்கியது. காங்கிரஸ் அமர்வுகளில் சோசலிசம் குறித்த சொல்லாடல்கள் பெருகின. முழு சுதந்திரம், அகிம்சைகோட்பாடு, மதம், சோசலிசம், அமைப்பு கட்டுப்பாடு, இரண்டாம் உலகப்போர் பார்வை போன்ற அம்சங்களில் அவர்களிடம் விவாதங்கள் இருந்தன.
 அவர்கள் இருவரும் தொடர்ந்து வேறுபாடுகளை மூடாமல் விவாதம் நடத்தி வந்தனர். தனது வளையத்திற்குள்  தன்னை வருத்திக்கொண்டு ஜவஹர் நிற்கவேண்டிய அவசியமில்லை. கலகம் கூட செய்யலாம் என்றவர் காந்தி. இருவரும் கடும் விவாதங்கள் நடத்திய காலங்களில் ஒருவர் தேவையை மற்றவர் உணர்ந்தவராகவே இருந்தனர்.
கடுமையான கருத்துவேறுபாடுகள் கொண்டவராக நேரு இருந்தாலும் காந்தியின் எல்லைக்குள் நின்று அவர் பேசிக்கொண்டிருந்தார். காந்தியும் நேருவை காங்கிரஸ் தலைவராக கொணர்வதில் செல்வாக்கு செலுத்தினார். படேலா- நேருவா என வந்தபோது கூட நேரு என நின்றார் காந்தி. அன்பை காட்டுவதிலும் வேறுபாடுகளை வெளிப்படையாக இறக்கி வைப்பதிலும் எந்த பாசாங்கும் அவர்களிடத்தில் இல்லை என்பதை நாம் அவர்களின் விவாதங்கள் வழியே கற்கமுடியும். இந்த விவாதங்கள் கவனப்படுத்தப்படவேண்டியனவாக உள்ளன.
சுதந்திர போராட்டக் காலத்தில் நடந்த முக்கிய விவாதங்களில் ஒன்றாக அவ்வப்போது காந்தி- நேரு மத்தியில் நடந்த விவாத கடிதங்களும் கருதப்படவேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் குறித்த- இந்தியாவின் கட்டுமானம் குறித்த விவாதமாக அவற்றை கொள்ளமுடியும். சோவியத் மற்றும் அய்ரோப்பா பயணத்திற்கு பின்னர் சோசலிச தாக்கம் கூடுதலாக நேருவிடம் வெளிப்பட்டது. கூட்டங்களிலும் அவர் அதை அவர் வெளிப்படுத்த தயங்கவில்லை.
நேரு மதராஸ் காங்கிரஸ் அமர்வில் (1927) சோசலிச சிந்தனைகளை வெளிப்படுத்தினார். நிலபிரபுத்துவத்தை தாக்கினார். தொழிலாளர், விவசாயி, மாணவர்களை திரட்டுவோம்- முழு சுதந்திரம் பெற போராடுவோம் என பேசினார். காங்கிரசில் பலருக்கும் புதிய மொழியை கேட்டதுபோல் இருந்தது. காந்திக்கு நேரு அவசரப்படுவது போல் தெரிந்தது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து காந்தி “hastily conceived and thoughtlessly passed.” என கருத்து சொன்னார். கால அவகாசம் தேவைப்படுகின்ற தீர்மானங்களாக அவர் பார்த்தார்.
.நேருவிற்கு காந்தி எழுதிய கடிதத்தில் அவர் வெளிப்படையாக தன் கருத்தை தெரிவித்திருந்தார். குறும்புக்காரகளை உற்சாகப்படுத்துவதாக இருக்கிறது. தாங்கள் கட்டுப்பாடுள்ல கட்சிக்கூட ஆரம்பிக்கலாம் என தெரிவித்திருந்தார்.
 ”Most of the resolutions you prepared and got carried could have been delayed for one year. Your plunging …was a hasty step. But I do not mind these acts of yours so much as I mind your encouraging mischief-mongers and hooligans ….If careful observation of the country in the light of your European experiences convinces you of the errors of the current ways and means, by all means enforce your own views, but do please form a disciplined party.”
நேருவும் சற்று கோபமாக தனது பதிலை தந்தார். காந்தியின் செல்வாக்கால்தான் காங்கிரஸ் முழுசுதந்திரம் தீர்மானத்தை நிறைவேற்றாமல் இருக்கிறது என நேரு கருதினார். தீர்மானங்கள் குறித்த காந்தியின் கருத்துக்களில் நியாயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 “I hope you will agree with me that it is not healthy politics for any organisation to subordinate its own definite opinion on a public issue out of personal regard only.”
  மாணவர்களை பள்ளிவாத்தியார் நடத்துவதுபோல் எங்களை நடத்துகிறீர்கள். வழிகாட்டாமலும்- இது பாடம் என எடுக்காமலும் தவறை மட்டும் சுட்டிக்காட்டும் வாத்தியாராக ஏன் இருக்கிறீர்கள் என நேரு கேட்டிருந்தார். 1909 காந்தியின் இந்திய சுயராஜ்யம் குறித்தும் தனக்கு நிலவும் வேறுபாடுகளை நேரு தெரிவித்திருந்தார்.
காந்தி அமைதியாக தன் பதிலை எழுதினார். நேரு தன் கருத்துகளுக்கு எதிரான போராட்டத்தை துவங்கி நடத்தலாம். வேறுபாடுகள் அடிப்படையாக இருப்பதால் சந்திப்பு புள்ளிகள் இல்லாமல் போயுள்ளது. நான் தவறு என்றால் என்னை எதிர்த்து கலகம் செய்யவேண்டியது நேருவின் கடமை என அவர் சுட்டிக்காட்டினார். அருமையான, நேர்மையான, நம்பிக்கையான, தைரியமிக்க தோழனை இழப்பது என்கிற துக்கம் எனக்கு நேரலாம். ஆனால் சரியான செயலுக்காக தோழர்களை இழப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும் என்பது காந்தியின் பதிலில் காணப்பட்டது.
முன்பாக 1920களின் துவக்கத்தில் சிறு வேறுபாடுகளை இருவரும் சுட்டிக்காட்டி விளக்கமளித்துக்கொண்டுள்ளனர். ஆங்கிலேயர்கள் விரட்டப்படவேண்டும் என நேரு கடுமையாக பேசினார் என அறிந்து அது குறித்து காந்தி வினவியிருந்தார். அதற்கு நேரு பெரிய விளக்கம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆங்கிலேயர்கள் மீது எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை . ஆங்கில மொழி குறித்து தனக்கு பெருமிதம் இருக்கிறது. ஆங்கிலேயர் இந்தியரை விட என்னை சரியாக புரிந்துகொள்ள முடியும் எனக் கருதுவதாக நேரு தெரிவித்திருந்தார்.
நேருவின் விளக்கத்தை காந்தி யங் இந்தியா 8-12-1921ல் வெளியிட்டிருந்தார். அதில் வன்முறையை தாம் ஏற்கவில்லை என்கிற நேருவின் விளக்கமும் இருந்தது.
செளரி செளரா குறித்து பர்தோலியிலிருந்து காந்தி பிப்ரவரி 19, 1922ல்நேருவிற்கு எழுதுகிறார். செளரி செளராவிற்கு பின் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காந்தி தெளிவுபடுத்துகிறார். நாட்டின் பல்வேறு இடங்களில் வந்த தகவல்களை சுட்டிக்காட்டுகிறார். அகிம்சை போராட்டம் என நடத்திய நாம் அதை வாபஸ் பெறாமல் போய் இருந்தால் வன்முறை போராட்டமாக மாறியிருக்கும் என தான் அஞ்சியதை காந்தி சொல்கிறார். இயக்கத்தின் பாதை சரியான திசையிலிருந்து மாறிவிட்டதையும், தென்னாப்பிரிக்கா அனுபவம் பற்றியும் எழுதுகிறார்.
 செப்டம்பர் 15, 1924ல் நேருவிற்கு செலவிற்கு பணம் தேவையா- அனுப்பட்டுமா- ஏதாவது வேலைக்கு சேருகிறீர்களா எனக்கேட்டு காந்தி கடிதம் எழுதினார். அதேபோல் நேருவும் கமலாவும் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை கவலையுடன் விசாரித்து மீளவேண்டும்- மனநிம்மதியும் ஓய்வும் எடுக்க அறிவுறுத்தி கடிதம் ஒன்றை செப்டம்பர் 30 1925ல் எழுதினார்.
 மோதிலாலுக்கு காந்தி ஜூன் 19 1927ல் எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் நிலைமை மோசமாக ரவுடித்தனமும் அராஜகமும் நிறைந்ததாகவுள்ளது. சுமையை நேரு மேல் ஏற்ற காங்கிரசில் சற்று ஒழுங்கு  கூடுதலாக ஏற்படட்டும் என்றார். நேரு மீதான  தன் எதிர்பார்ப்பற்ற கரிசனத்தை அவர் இவ்வாறு அவசியமான தருணங்களில் வெளிப்படுத்தியிருப்பதை நாம் காணமுடியும்.
ஜனவரி 4 1928ல் காந்தி சபர்மதி ஆசிரமத்திலிருந்து நேருவிற்கு கடிதம் எழுதினார். நீங்கள் வேகமாக போகிறீர்கள். நிறைவேற்றிய தீர்மானங்களுக்கான சூழல் வரவே ஓராண்டு ஆகலாம். கலப்படமற்ற அகிம்சையில் இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? தங்கள் கருத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் வன்முறையால் ஏதும் ஆகாது. நமது கருவிகள் குறித்து கவனமில்லாமல் இருக்கக்கூடாது. எல்லாப் போராட்டங்களிலும் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த மனிதர்கள் தேவை. காங்கிரசின் செயலர் என்கிற வகையில் அமைப்பிற்குள் ஒற்றுமை என்பது தங்களின் தலையாய வேலை. சைமைன் பகிஷ்கரிப்பு முக்கியமானது ஆனால் அது ஒற்றுமைக்கு அடுத்ததுதான் என அறிவுரை அக்கடிதத்தில் இருந்தது.
காங்கிரஸ் தீர்மானங்களை காந்தி விமர்சிக்கிறார் என அறிந்து நேரு ஜனவரி 11, 1928ல் அலகாபாதிலிருந்து காந்திக்கு கடிதம் எழுதுகிறார். தங்களின் காங்கிரஸ் தீர்மானங்கள் பற்றிய விமர்சனத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே தங்களுக்கு எழுதுவது என முடிவெடுத்து இக்கடிதம் அனுப்புகிறேன். காதில்பட்டதை மட்டும் வைத்துக்கொண்டு மதிப்பிடுப்பது  பாதுகாப்பாக இருக்காது. ஒழுங்கு குறித்து தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு நினைவுபடுத்த விழைகிறேன் தாங்களும் செயற்குழு உறுப்பினர். அப்படி இருந்துகொண்டு முடிவுகளை விமர்சிப்பதும் காங்கிரசை கீழே தள்ளுவதும் அசாதாரணமானது.
பொதுவாக தீர்மானங்கள் குறித்து பாராட்டுக்களே வந்தன. உங்கள் விமர்சனத்தால் அவர்களின் இந்த உற்சாகம் மட்டுப்படும்- தவறாக புரிந்துகொள்ளப்படும். அவசரகோலத்தில் திர்மானம் இயற்றியதாக சொல்கிறீர்கள். நிகழ்ச்சிநிரல் விவாதிக்கப்பட்டு 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராகவும் பேசி பின்னர் ஒருமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிந்தனையில்லாம்ல் என தாங்கள் சொல்வது ஊகம்தான். எந்த அமைப்பிலும் தனிப்பட்ட கருத்திற்கு கீழானதாக அமைப்பின்  உறுதியான முடிவுகளை மாற்றுவது ஆரோக்கியமான ஒன்றல்ல என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
அந்நியதுணி பகிஷ்காரம்- கதர் முயற்சி வெற்றியா பெற்றுவிட்டது. ஆனாலும் செய்கிறோம் அல்லவா. நாட்டிற்கு நல்லது என தொடர்கிறோம். காதி சர்வமயமானால் விடுதலை என தாங்கள் கருதுகிறீர்கள். என்னைப்போன்ற மத நம்பிக்கையில்லாதவர்க்கு பல ஆண்டுகள் ஆனாலும் அதனால் மட்டும் விடுதலை வராது எனத் தோன்றுகிறது.
இதைத்தொடர்ந்துதான் நேரு அந்த பள்ளிவாத்தியார் வாதத்தை வைக்கிறார். தங்களின் சுயசரிதை , யங் இந்தியா கட்டுரைகளை படிக்கும்போது எனது இலட்சியங்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. ராம்ராஜ்யம் என சொல்லப்படுவது கடந்த காலத்தில் நல்லதாக இருக்கவில்லை. அதை மீண்டும்  நான் விரும்பவும் இல்லை. மேற்கின் தொழில்மய நாகரீகம் சிற்சில மாற்றங்களுடன் இந்தியாவை வெற்றிக்கொள்ளும். முதலாளித்துவமுறையில் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் மோதல் தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
நேருவின் இக்கடிதத்திற்கு காந்தி ஜனவரி 17 1928ல் பதில் கடிதம் எழுதுகிறார். தங்களை முடக்கிக்கொண்டு சுய அமுக்கத்துடன் என்னுடன் வந்துகொண்டிருக்கிறீர்கள். நாட்டின் தேவைக்காக இதை தாங்கள் செய்வதுபோல் எனக்கு தெரிகிறது. என்னிடமிருந்து தங்களுக்கு விடுதலை அவசியமெனில், நான் தருகிறேன். எனது கருத்துக்களிலிருந்து மாறுபடும்போது தாங்கள் வெளிப்படையாக  யுத்தம் செய்யவேண்டும். ஏனெனில் நான் தவறாக செயல்படுவேன் என்றால் அது தேசத்திற்கு சரிசெய்ய இயலாத தீங்காகிவிடும். எனவே என்னை எதிர்த்த கலகம் என்பது அப்போது தங்களின் கடமையாகிறது. தங்கள் நிலைப்பாடு குறித்து சந்தேகம் இருந்தால் முழுமையாக நான் தனிப்பட்டு விவாதிக்க விழைகிறேன்.
நமது வேறுபாடுகள் பெருமளவாகவும் தீவிரமானதாகவும் உள்ளன. சந்திப்பு புள்ளிகள் இல்லாமல் இருக்கின்றன. எனது துக்கத்தை நான் மறைக்கவிலை. மிகச்சிறந்த, ஆளுமையான, நேர்மையான தோழமையை நான் தியாகம் செய்யவேண்டியிருக்கும். ஆனால் நாம் ஆற்றும் காரியத்தின் காரணமாக தோழமை இழப்புகள் நேரிடலாம். அந்த செயல்கள்தான் அனைத்தையும்விட மேலானவை. அதேநேரத்தில் நமது இருவரின் தனிப்பட்ட உறவுகளின் நெருக்கம் பாதிக்காது. நாம் நெடுங்காலமாக ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்துவருகிறோம். கடுமையான அரசியல் வேறுபாடுகளின் இடையேயும் அப்படியே இருப்போம்.
கருத்துவேறுபாடுகளை குறித்து எழுதுங்கள். அதை பிரசுரிக்கிறேன். எனது விளக்கத்தையும் தருகிறேன். மேற்கண்ட காந்தியின் கடிதம் நேரு ஜனவரி 11, 1928ல் காந்திக்கு எழுதியதற்கு பதிலாக எழுதப்பட்டிருந்தது
காந்தி ஏப்ரல் 1 1928ல் நேருவிற்கு எழுதினார். பணக்காரர்கள் இல்லாத, வாய்பேச்சு மட்டும் கொண்ட படித்த வர்க்கமில்லாத ஓர் இயக்கத்தை நாம் இருவரும் ஆரம்பிக்கவேண்டும் என்பதில் தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் அதற்கு காலம் கனியவில்லை .
ஜூலை 29 1929ல் காந்தி எழுதிய கடிதத்தில் நேரு இந்திராவிற்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களை பாராட்டுகிறார். மனிதனின் ஆரம்பம், மதம் குறித்தவைகள் விவாதத்திற்குரியவை என்றாலும் கடிதங்கள் நன்றாகவுள்ளன என எழுதினார். இந்தியிலும் அவை வந்தால் நல்லது என்றார்.
 அடுத்த காங்கிரஸ் தலைமை என்பது குறித்து காந்தி எழுதியிருந்தார். அதில் தன்னால் அச்சுமையை ஏற்கமுடியாது என்பதை விளக்கியிருந்தார். நேரு எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தார். நேருவிற்கு இருக்கும் அய்ரோப்பிய அரசியல் தொடர்புகள் சொத்துபோன்றது- அவருக்கு உழைப்பாளர், விவசாயிகளுடனும் தொடர்புள்ளது என அவர் யங் இந்தியாவிலும் குறிப்பிட்டிருந்தார்.
நேரு தனது சூழலை தாண்டி தீவிர சிந்தனை உள்ளவர். ஆனால் உடைவை உருவாக்கும் அளவிற்கு அவர் அதை திணிக்க விரும்பமாட்டார். அவரின் கரங்களில் காங்கிரஸ் பாதுகாப்பாக இருக்கும் என அவர் யங் இந்தியா ஆகஸ்ட் 1, 1929ல் எழுதினார்.
பொங்கி ஆற்றலுடன் செயல்படும் இளைஞர்களின் ஆற்றலை கட்டுக்குள் வைத்து பயன்மிகுந்ததாக மாற்றவேண்டும் என்ற கருத்தை காந்தி யங் இந்தியா அக்டோபர் 10ல் எழுதியிருந்தார்..
காந்தி  நவம்பர் 4 1929ல்  நேருவிற்கு எழுதிய கடிதத்தில் தங்கள் மூளைக்கும் இதயத்திற்கும் ஏற்கமுடியாத ஒன்றை நான் சொன்னால் தாங்கள் அதை எதிர்க்கவேண்டும் என எழுதினார். அப்படி எதிர்ப்பதால் எனது அன்பு குறைந்துவிடாது. தாங்கள் சோர்ந்து ஏமாற்றம் அடையவேண்டாம். நமது நாட்டின் சுதந்திரம் என்பது ஆக உயர்ந்த விடுதலை என்பதுடன் முரண்படவேண்டாம். அடுத்த ஆண்டில் தலைமை ஏற்கப்போகும் தாங்கள் முழுமையாக பிறருடன் இணைந்து செயலாற்றவேண்டிய கடமையிலிருந்து வெளியேறமுடியாது. பொதுவெளியில் தரப்படும் கருத்துக்களை கண்டு தங்களுக்கு பயமில்லை என நான் நம்புகிறேன்.
நேரு அலகாபதிலிருந்து 1929 நவம்பரில்  காந்திக்கு எழுதினார். இன்று பொதுச்செயலர் என்கிற வகையில் நான் அமைப்பு கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்பது சரியானதுதான். ஆனால் எனக்கு வேறு கடப்பாடுகளும் இருக்கின்றன. AITUC தொழிற்சங்க தலைவராகவும், இண்டிபெண்டண்ட் லீக் செயலராகவும். இளைஞர் இயக்க அமைப்பு வழிகாட்டியாகவும் கடப்பாடுகள் இருக்கின்றன. பல்வேறு குதிரைகளில் சவாரி சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது. இப்படி மோதல்கள் நிறைந்த கடப்பாடுகளில் எனது மனசாட்சி சொல்வதுபடித்தான் செயல்படவேண்டியுள்ளது.
காங்கிரஸ் செயலர் பதவியிலிருந்து நான் விலகியாகவேண்டும். அப்பாவிற்கு அனுப்பிவிட்டேன். அதன் நகல் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். காங்கிரஸ் தலைவர் பதவி கடினமானது. நான் சரியான தேர்வு அல்ல. தாங்கள்தான் சரியாக இருப்பீர்கள். மாளவியாஜி போன்றவர்கள் சொல்வதுதான் காங்கிரஸ் கொள்கையாகும் எனில் நான் பொருத்தமானவன் அல்ல.
நவ்ம்பர் 8 1929ல் காந்தி எழுதினார். தாங்கள் சூடப்போகும் கிரிடம் மலர்கிரீடமல்ல- முட்கிரீடம்தான். அதை தங்களைத்தவிர யாரும் எடுக்கப்போவதில்லை. நான் எடுப்பதாக இருந்தால் முன்னரே எடுத்திருந்திருப்பேன். .
 காங்கிரஸ் லாகூர் அமர்வில்  (டிசம்பர் 31 1929) ஜவஹருக்கு வாய்ப்பளிப்போம். இளைஞர்கள் எடுத்துக்கொள்ளாமல் வாய்ப்பளிக்கவில்லை என சொல்லக்கூடாது எனப் பேசினார் காந்தி.
ஏப்ரல் 17, 1930ல் காந்தி பெண்களுக்கும் அறைகூவல் ஒன்றை விடுத்தார். ஜவஹர் சிறைவைக்கப்பட்டுள்ளார். அதாவது இந்தியாவை பிரிட்டிஷ் சிறைவைத்துள்ளது. எனவே கடமை உணர்வீர்- போராடுவோம். என்பது செய்தி.
1933 பூனா அறிக்கைகள் என்ற பெயரில் நேரு காந்தி நேரு அறிக்கை கடிதங்களை நேரு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்றுள்ள விவாத சாரம் இங்கு தரப்படுகிறது
செப்டம்பர் 14 1933 மகாத்மா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தண்டணைக்காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்பட்டதை தெரிவிக்கிறார். உடல்நிலை பலவீனமாகி தெம்பு வருவதற்கு சில வாரங்கள் பிடிக்கலாம். எனது தண்டனைக்காலமான ஆகஸ்ட் 1934 முடியும்வரை சிவில் மறுப்பு இயக்கம் நடத்தி கைதாகக்கூடாது. எனது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறேன்.  எனது விடுதலை எனக்கு சங்கடத்தை தந்துள்ளது.
விடுதலை இயக்கம் தவறான வழியில் செல்லக்கூடாது என என்னிடம்கேட்டு வருபவர்களுக்கு எனது அறிவுரை ஆலோசனைகளை நல்குவேன். வன்முறையை ஆள்பவரோ அல்லது பாதிக்கபடுபவரோ எவர் செய்தாலும் அதற்கு பதில் அகிம்மசை வழியான  சட்டமறுப்பு போராட்டம்தான். இந்தக் காலத்தை ஹரிஜன மேம்பாட்டிற்காக செலவிடுவேன் என்பது அறிக்கையின் சாரம்.
 செப்டம்பர் 14 1933 நேரு அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். விடுதலையானவுடன் என் தாயாரின் உடல்நிலைமோசமானதால் அவருடன் இருக்கவேண்டியதானது. 20 மாதங்களாக எவ்வித தொடர்பும் இல்லை. இரண்டுவருடமாக காந்தியை பார்க்க முடியாமல்போனது. சிலநாட்கள் தாயாருடன் இருந்துவிட்டு பூனாவில் காந்தியைப்பார்த்து நெடுநேரம் விவாதித்தேன். பூனாவிற்கு காந்தியை பார்க்கவந்ததே பல விஷயங்களை தெளிவுபடுத்திகொள்ளத்தான்.
 இந்தியாவில் எண்ணற்றவர்களைப்போலவே நானும் காந்தியின் தலைமையில் கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். மதரீதியாக பார்க்காமல் அரசியல் பொருளாதார பார்வையுடனே, சத்தியாகிரகத்தில் அதன் நெறிசார்ந்த அம்சங்களுக்காக  உடன்பட்டுநின்றுள்ளேன். ஆனால் காந்திக்கோ சமயம் அடிப்படையானது. இந்த வேறுபாட்டைதாண்டி என் போன்ற பலர் அவரின் தலைமையின்கீழ் செயல்படுகிறோம். இந்தியாவும், உலகமும் செயல்மிகு தலைவர் அவர் என்பதை அறியும்.. நமது வாழ்விற்கும் நாம் மேற்கொள்ளும் துன்பத்திற்கும் அழகான அர்த்தம் கொடுத்தவர் காந்தி. அவருடைய முறைகள் சரியானவை- அதை நாம் பின்பற்றிவருகிறோம்.
இந்நாட்டின் சுரண்டப்படுபவர்க்கு சுதந்திரம் என்பது இல்லையெனில் அது சுதந்திரமாக இருக்காது. எனவே நமது நோக்கத்தை நாம் தெளிவுபடுத்தவேண்டும். பொருளாதார நெருக்கடி முற்றியுள்ள இக்காலத்தில் தேசிய இயக்கம் தனது பொருளாதார கொள்கைகளில் தெளிவாக இருக்கவேண்டும். எனக்கு காங்கிஸ் கமிட்டியை கூட்டச்சொல்லி நண்பர் சொல்கின்றனர் . நிலவும் சூழலில் அது கடினம்.
நேரு அவர்கள் காந்திக்கு செப்டம்பர் 13, 1933 ல் கடிதம் எழுதுகிறார். முழுவிடுதலை மற்றும் கராச்சி வழிகாட்டலான அடிப்படை உரிமைகள் பொருளாதார மாற்றங்கள் தீர்மானத்தில் தெளிவுடன் இருப்பது அவசியம் என வற்புறுத்தினார். இந்தியாவின் வெகுஜன மக்களை முன்னேற்ற வேண்டுமெனில் சுயநலமிக்க பகுதி தனது சிறப்பு சலுகைகளை கைவிடவேண்டும். இல்லையெனில் மக்கள் முன்னேற்றம் எப்படி சாத்தியமாகும் எனக்கேள்வி எழுப்பியிருந்தார்.
வட்டமேஜை மாநாடு இந்தியாவின் சுயநல சக்திகளை வலுப்படுத்துவதாகவே முடிகிறது. இந்தியாவின் பல்வேறு பிரச்ச்னைகளை  தீர்க்க பயன்படவில்லை. இந்திய விடுதலை என்பது உலகபிரச்சனைகளுடன் சேர்ந்தே இருக்கின்றது. இதில் நாம் அமைதி காக்கமுடியாது.
 காங்கிரஸ் கமிட்டிகளை அரசாங்கம் தடை செய்துள்ள நிலையில் செயல்படுவது கடினமாகியுள்ளது. நம்பிக்கைக்கு பாத்திரமில்லாத மனிதர்கள் தலமட்டங்களில் காங்கிரஸ் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு விரும்பாத செயல்களில் காங்கிரசை அழைத்து செல்கின்றனர். அவர்கள் தடுக்கப்பட்டாகவேண்டும்.. சிவில் ஒத்துழையாமை குறித்தும் கடுமையான குழப்பங்கள் நிலவுகிறது. நீங்களோ அமைப்புகள் வலுவாக இருப்பதாக கருதினால் சிவில் ஒத்துழையாமையை நடத்திக்கொள்ளட்ட்டும் என்கிறீர்கள்.
இரகசியம் என்பதை ஏற்பதற்கில்லை எனவும் சொல்கிறீர்கள். நமது இயக்கம் அடிப்படையில் திறந்த இயக்கம். அங்கு இரகசிய செயல்பாடுகளுக்கு இடமில்லை. ஆனால் அதை மூடநம்பிக்கையாகவோ மீமதிப்புடனோ பார்க்கமுடியாது. சிலதகவல்களை அனுப்புவதில் தலமட்டத்தில் இந்த இரகசியமுறைகள் தேவைப்படலாம். நாம் அதற்கு ஊக்கம் கொடுக்கவேண்டாம். தவிர்க்கமுடியாத நேரங்களில் அதை அனுமதிக்கவேண்டும்.
 சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய தகவலைத் தந்துவிட்டு போராடவேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு எரிச்சலைத்தருகிறது. சத்தியாகிரகத்திற்கு செல்லப்போகிறவர் அதற்கு பின் கைது செய்யப்படலாம். தண்டனைக்கு உள்ளாகலாம்.  முன்கூட்டியே அறிவிப்பு அபத்தமாகப்படுகிறது.
நேருவிற்கு செம்படம்பர் 14 அன்று காந்தி பதில் கடிதம் எழுதினார். வெளிபடையாக பல அம்சங்கள் குறித்து எழுதியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். நமது குறிக்கோள் முழுவிடுதலை என்பதில் சந்தேகமில்லை. சுயநலக்காரர்களை சரிப்படுத்தாமல் வெகுமக்களின் வாழ்க்கை முன்னேற்றம் இராது என்பதையும் ஏற்பதாக கூறினார்.
வட்டமேஜை மாநாடு குறித்த அனுபவம் பற்றியும், உலகத்தொடர்புகள் இல்லாமல் முற்போக்கான தேசியம் இருக்கமுடியாது என்பதிலும் உடன்படுவதாக் சொன்னார். இலக்கு குறித்து திரும்பத் திரும்ப தான் பேசுவதில்லை. வழிமுறைகள் சரியானதாக வேண்டும் -  அப்படியிருக்கும்போது இலக்கு நோக்கி செல்ல இயலும் என்பது தலையானவை என அக்கடிதத்தில் தெளிவுபடுத்தினார்..
 எவரையும் கொடுமைக்கு வற்புறுத்தலுக்கு உள்ளாக்காமல் மனமாற்றத்திற்கு முயற்சிக்கவேண்டும். இதற்கு நீண்டகாலம் பிடிக்கலாம் எனத்தோன்றலாம். என்னைப்பொறுத்தவரை அதுதான் குறுகிய தூரம்.
 சட்டவிரோத அமைப்பு என்பதால்  demoralisation  என்கிறீர்கள். சத்தியாகிரகம் சரியான முறையில் தொடர்ந்தால் மனச்சோர்வு ஏற்படாது. சிவில் ஒத்துழையாமைக்கு தனிநபர் தயாராக இருக்கும்வரை இயக்கம் வீழாது. திரள் சத்தியாகிரகம் எனில் அதற்கு தலைமை வேண்டும். அதில் தவறு ஏற்படக்கூடும்.  இன்றுள்ள சூழலில் எந்த அமைப்பும் சுமையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதை அறிவேன்.
 அடுத்து இரகசிய முறைகள் குறித்தது. அதனை உறுதியாக கட்டுப்படுத்தவில்லையெனில் குறும்புகள் உருவாக்கும். தவிர்க்கமுடியாத நிலைகளில் அது அவசியமாகலாம். ஆனால் வெகுமக்கள் இயக்கத்தில் அவர்களை அச்சமின்றி பங்கேற்க வைக்கவேண்டும் என்பதால் அதனை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. சிவில் ஒத்துழையாமை  வளர்ச்சிக்கு இரகசிய முறைகள் எதிரானது.
 தனிநபர்கள் சத்தியாகிரகம் எனசொல்லி நோட்டிஸ் கொடுப்பது என்பது கேலிக்குரியது என்பதை ஏற்கிறேன்.
 காங்கிரசின் ஆக்கபூர்வதிட்டங்கள் பற்றி தாங்கள் குறிப்பிடாத இடைவெளியை தங்கள் கடிதம் தருகிறது. தீண்டாமை ஒழிப்பு, வகுப்பு ஒற்றுமை, கதர் காதி போன்ற ஆக்கபூர்வதிட்டங்கள் நடந்துவருகின்றன. இப்படி பல இயக்கங்களில் பங்கேற்று சிவில் ஒத்துழையாமையில் பங்கேற்க இயலாது என வெளிப்படையாக பேசுபவர்களும் நாட்டின் விடுதலைக்கு பணியாற்றுபவர்களே. விடுதலை எனும் வீட்டை கட்டும் கலையை காங்கிரஸ்காரர்கள் கற்கட்டும். முன்பே நான் சொன்னபடி எரவாடாவிலிருந்து முன்கூட்டியே வந்ததால் சிறைத்தண்டனைக்காலம் வரை தனிபட்ட வகையில் நான் போராட்டங்களை நிறுத்திக்கொள்கிறேன் அது கடமை என உணரப்பட்டால் எவரையும் புண்படுத்தாது.
மேற்கூறிய கருத்து பரிமாற்றத்தை பூனா 1933 அறிக்கை தொகுப்பில் காணமுடியும்.
காந்தி  டிசம்பர் 22 1933 அன்று மதராஸ் மெயிலுக்கு பேட்டி அளித்தார். அதில்நேரு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. நேருவிற்கு கம்யூனிஸ்ட் கொள்கை சார்பு இருப்பதால் காங்கிரஸ் அக்கொள்கையை அவரது வழிகாட்டலில் பெறுமா என்பது கேள்வி. அப்படி நான் கருதவில்லை என காந்தி பதில் அளித்தார்.
ஜவஹர் மிக நேர்மையான மனிதர். சக தோழர்களுக்கு உரிய அறிவிப்பை தராமல் அவர் காங்கிரசின் கொள்கைகளை மாற்றமாட்டார். மேலும் ஜவஹருக்கு அவரது சொந்தக் கருத்துக்கள் போதுமான அளவு உருப்பெறாத நிலையில் (Not sufficiently crystalised) அவர் காங்கிரஸ் அடிப்படைகளிலிருந்து விலகமாட்டார். அவர் சோசலிசத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர். ஆனால் இந்தியாவில் அதை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது அவரிடம் இன்னும் கெட்டிப்படாத உருகு நிலையில்தான் (still in melting pot ) இருக்கிறது. எனவே அவரது கம்யூனிச கருத்துக்கள் எவரையும் பயமுறுத்தவில்லை.
ஜனவரி 21 1934ல் அவர் நேருவிற்கு எழுதிய கடிதத்தில் இதை காந்தி அவரிடமே தெரிவித்திருந்தார்.
You have no uncertainty about the science of socialism but you do not know in full how you will apply it when you have the power.
காந்தி கொடுத்த வேறு ஒரு பேட்டி சோசலிஸ்ட் அணி தொடர்பானது. இந்துஸ்தான் டைம்ஸ் மே 21, 1934 பத்திரிகைக்கானது. காந்தி தனது பதிலில் சோசலிஸ்ட் குரூப் உருவானதை வரவேற்பதாக சொன்னார். இந்தியாவின் சிறப்பான நிலைமைகளை கணக்கில்கொண்டு அவர்கள் செயல்படவேண்டும். அவர்களும் வன்முறையற்ற பாதை என சொல்லியிருப்பதை நான் வரவேற்கிறேன் என்பது அப்பேட்டியின் சாரம்.
1934 ஆகஸ்ட் 13ல் ஜவஹர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஒத்துழையாமையை முடித்துகொண்டதற்கு அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதற்கு தாங்கள் கூறிய காரணங்களை பத்திரிகைகளில் பார்த்தப்பின் அதிர்ச்சியடைந்தேன். இப்பெரும் உலகில் தனித்து இருப்பதுபோல் உணர்கிறேன். சிறுவயது முதல் இவ்வுணர்விற்கு நான் பழக்கமாகியுள்ளேன். ஆனால் இப்போது பாலைவனத்தில் தனித்துவிடப்பட்டதுபோல் உள்ளது.
காங்கிரசில் சமூக பொருளாதார அம்சங்களில் பயிற்சி கொடுக்கப்படவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் செயற்குழுவில் பலருக்கு இவ்வாறு எவராவது பயிற்சி பெற்றவர் இருந்தாலே அவர்களை வெளியேற்றவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. பிரச்சனைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமில்லை.
இஞ்சின் டிரைவர் என அழைக்கப்படுபவர் மரவண்டியை மாடுபூட்டி இழுப்பேன் என சொன்னால் அவர் ’இஞ்சின் டிரைவர்’ என்பதை தவறாக பயன்படுத்துகிறார் என்றே பொருள்கொள்ள முடியும். எனது வரிகள் சில தங்களுக்கு வலியைத் தரலாம். ஆனால் தங்களிடமிருந்து என் இதயத்தை மறைத்துக்கொள்வதை தாங்கள் விரும்பமாட்டீர்கள்.
இக்கடிதத்திற்கு காந்தி பதில் எழுதினார். நேருவிற்கு ஆகஸ்ட் 17 1934ல் காந்தி எழுதிய கடிதத்தில் முழுவிடுதலை என்பதற்கான முழு அர்த்தத்தில் தானும் அவ்விடுதலையே விரும்புவதாக எழுதினார். ஆனால் தீர்மானங்கள் உருவாவதற்கான உரியகாலம் வேண்டும் என நினைக்கிறேன். இலக்கைப்போலவே வழியும் முறைகளும் இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சோசலிசம் குறித்து அகராதிகளைப் பார்த்தேன். படித்தபின்னர் எனக்கு எதுவும் புதிதாக புலப்படவில்லை. மசானி புத்தகத்தையும் படித்தேன். நரேந்திர தேவா குறிப்பிடும் புத்தகங்களை நேரம் வாய்க்கும் போதெல்லாம் படித்துவருகிறேன்.
 செயற்குழுவில் நீங்கள் கடினமாக இருக்கிறீர்கள். இருப்பவர்கள் நமது தோழர்களே. இயக்கம் சுதந்திரமானது. நம்பிக்கைக்கு பாத்திரமில்லாதவர்கள் என்றால் அவர்களை மாற்றிவிடலாம். அவர்களின் இயலாமையை குறைசொல்லி பயனில்லை என்கிற அறிவுரையுடன் அக்கடிதம் சென்றது.
வல்லபாய் படேலுக்கு  காந்தி செப்டம்பர் 5 1934ல் எழுதிய கடிதத்தில் காங்கிரசிலிருந்து விலகுவதாக தெரிவிக்கிறார். காங்கிரஸ் மற்றும் நாட்டின் நலன்களுக்காக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதே சரி என தெரிவித்தார்.
1920 முதல் மிக நெருக்கமாக இருந்த அமைப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கமாட்டேன். கடினமான இதயத்துடனேயே இம்முடிவை எடுத்ததாகவும் காந்தி சொல்கிறார்.  வருகின்ற எதிர்காலத்திற்கு ஜவஹரே சரியான தலைமையாக இருக்கமுடியும். அவரின் தொடர்பு மற்றும் அறிவுரையை நான் இழக்கநேரிடுகிறது.    (I miss at this juncture the association and advice of Jawaharlal).
சோசலிச அணி ஒன்று வளர்ந்துவருகிறது. ஜவஹர் அவர்களின் தலைவர். அவர் என்ன விழைகிறார் என்பதை நான் அறிவேன். அறிவியல் உணர்வு அடிப்படையில் அவர் அணுக விழைகிறார். அவர் மிகத் தைரியமானவர். அவருக்கு சேவை செய்ய வயது நிறைய இருக்கிறது. அவரது இலக்கில் அவருக்கு பெரும் நம்பிக்கையும் இருக்கிறது. சோசலிச குரூப் பொதுவாக அவரது கருத்துடன் இருக்கிறது.  முறைகள்  சில மாறலாம்.
சோசலிச குருப் வளர்வதை நான் வரவேற்கிறேன். அவர்கள் தியாக சித்தம் கொண்டவர்கள். வளர்ந்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் வெளியிட்ட ஆவணங்களுடன் எனக்கு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. என் காங்கிரஸ் இருப்பு அவர்களின் சோசலிச கருத்தியல்கள்  பரப்பப்படுவதற்கு நெருக்கடி எதையும் தந்துவிடக்கூடாது. இருந்தால் ஒருவகை moral pressure தருவதற்கு ஒப்பாகிவிடும். இவ்வாறு காந்தி தனது விலகல் கடிதத்தில் காரணங்களை குறிப்பிடுகிறார்.
 வல்லபாய் பட்டேலுக்கு ஏப்ரல் 5 1935ல் எழுதிய கடிதத்தில் தங்களுக்கு உண்மையான தலைவர் ஜவஹர்தான் என எழுதினார். மற்ற நாங்கள் அனைவரும்  அவருக்கான டிரஸ்டிகள் போலத்தான். ஜவஹர் முழுமையாக நிர்பந்தமற்ற சுதந்திரத்துடன் பணியாற்றவேண்டும் என்கிற விழைவை காந்தி தெரிவித்திருந்தார் என கருத முடியும்.
 அகதா ஹாரிசன் அவர்களுக்கு காந்தி ஏப்ரல் 30 1936ல் எழுதிய கடிதத்தில் நேரு குறித்து சொல்கிறார். நேரு தனது கருத்துக்களை தீவிரமாகத் தருபவர். நான் அறிந்தவரை அதை மோதல் அளவிற்கு அவர் எடுத்து செல்வதில்லை. வந்தால் அவர் விடுவதில்லை. காங்கிரஸ் ஒரே வகைப்பட்ட இயக்கமல்ல.  பெரும்பான்மை முடிவுகளை ஜவஹர் ஏற்பவர். அவரைப் போன்ற இயல்புடைய ஒருவருக்கு இது மிகக் கடினமான ஒன்று. வாழ்க்கை குறித்த பார்வைகளில் மிகப்பெரும் வேறுபாடுகள் எங்களிடம் இருந்தாலும் இதயத்தால் மிக அருகாமையில்தான் இருக்கிறோம்.
நேருவிற்கு காந்தி ஜூலை 15, 1936ல் கடிதம் எழுதினார். உங்கள் கடிதம் என்னை தொட்டுவிட்டது. உங்கள் சக தோழர்கள் பலருக்கு உங்களைப்போல் நெஞ்சுரமோ, வெளிப்படைத்தன்மையோ இல்லை. இதனால் விபரீதமாகிறது. உங்களிடம் பயமில்லாமலும் சுதந்திரமாகவும் விவாதியுங்கள் என அவர்களிடம் சொல்லிவருகிறேன். அவர்கள் பேச்சில் நீங்கள் அடையும் எரிச்சல்- பொறுமையின்மை கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்.  சோசலிசஸ்ட்கள் செய்திடும் கேலிகளிருந்து அவர்களை காக்காமலும் அவர்கள் மீது எந்தவித மரியாதை காட்டாமலும் தாங்கள் நடந்துகொள்கிறீர்கள்.
அவர்களின் பெரும்பான்மை கண்டு தாங்கள் விசனப்படுகிறீர்கள். அவர்களின் ஒருமித்த கருத்தால்தான் பொறுப்பிற்கு தாங்கள் வந்துள்ளீர்கள். அதிகாரம் இன்னும் உங்களுக்கு வரவில்லை. உங்களை பொறுப்பில் அமர்த்தியது அதிகாரம் பெறவைக்கவும்தான். கமிட்டி கூட்டங்களில் சற்று நகைச்சுவையை கூட்டுங்கள். அது தங்களின் இயல்புதான் என சொல்கிறது அக்கடிதம்.

 காந்தியிடம் சென் மற்றும் பெளலா பேட்டி ஒன்றை ஆகஸ்ட் 8 1936ல் எடுத்தனர். நேரு குறித்த உணர்வென்ன என்பது கேள்வி. அன்பும் பாராட்டும்தான் என்பது காந்தியின் பதில். வாரத்திற்கு இருமுறை பேசிக்கொள்கிறோம். அவர் பேசுவது போல் நான் பேசாமல் இருக்கலாம். என்ன தோன்றுகிறதோ அதை அவர் என்னிடம் சொல்லாமல் இருப்பதில்லை.  ஜவஹரின் கொள்கையால் எனக்கு எந்த வேலையிலும் பாதிப்பில்லை.

 அவரின் திட்டம் குறித்த பரிவு என்னிடம் இல்லை. அவர் என்ன செய்து அதற்கு நான் பரிவுகாட்டாமல் இருந்துள்ளேன். அவரின் விக்ஞான சோசலிசத்திற்கு என்னிடம் ஜாடி இல்லை. அவர் ருஷ்யா கம்யூனிசத்திற்காக நிற்கிறார் எனச் சொல்வதில் உண்மையில்லை. அது ருஷ்யாவிற்கு உகந்தது என்கிற கருத்து அவரிடம் இருக்கிறது. அதில் கூட அய்யமற்ற சான்றிதழை அவர் தருவதில்லை.

இந்தியத் தேவைகளுக்கேற்ப நமது முறைகள் இருக்கவேண்டும் என நேரு வெளிப்படையாக சொல்கிறார். வர்க்கப்போர் என அவர் பேசவில்லை. அது தவிர்க்கமுடியாதது என்கிற கருத்து அவரிடம் இருக்கிறது. சமீபத்தில் ஈடு கொடுக்கப்படாமல் பறிமுதல் இருக்காது என்று பேசியுள்ளார். இதில் எதிர்ப்புகாட்ட என்ன இருக்கிறது. வேறுபாடுகள் இருப்பதால் எதிரிகள் என எங்களை சித்தரிப்பது கேலிக்குரியது என காந்தியின் பேட்டி சென்றது.

ARE WE RIVALS ? நாங்கள் எதிரிகளா? எனத் தலைப்பிட்டு  ஹரிஜன் ஜூலை 25 1936ல் விளக்கமளித்தார் காந்தி. எனது வாழ்நாள் வேலைகள் ஜவஹர் திட்டத்தால் பாழாய்போய்விட்டது என நான் சொன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு சொல்லவில்லை. நான் அறிந்தவரை இந்தியாவின் சுதந்திரம் வன்முறையில்லாத வழிகள் மூலமே என்றுதான் ஜவஹர் முடிவுடன் இருக்கிறார்.
கருத்துவேறுபாடுகள் எங்களிடம் இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட உறவுகளை அவை பாதித்ததில்லை. எனது வாழ்நாள் வேலை ஜவஹரின் திட்டத்தால் பாதிக்கப்படமுடியாது. பிரிட்டிஷ் அடக்குமுறைகளால் கூட வை பாதிக்கப்படவில்லை. I cannot think of myself as a rival to Jawaharlal or him to me .

காந்தி ஏப்ரல் 20 1937ல் காந்தி சேவா சங்கத்தில் நேருவிற்கும் தனக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி பேசுகிறார். 1935 சட்டப்படி நடக்கும் தேர்தலில் ஆட்சிபொறுப்பு ஏற்பது குறித்தும் அகிம்சை குறித்தும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறார்.
 ஒரு தீர்மானத்தை ஜவஹர் அர்த்தப்படுத்துவதற்கும் நான் அர்த்தப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கலாம். அகிம்சைவழியில்  அரசாங்க பொறுப்புகளில் உள்ளே சென்று பிரிட்டிஷ் தந்த சட்டத்தை உடைக்கலாம் என நான் நம்புகிறேன். ஜவஹருக்கும் அப்படி நடந்தால் மகிழ்ச்சி என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் சாத்தியம் இல்லை என நினைக்கிறார். மனித ஜாதி மீது சற்று சந்தேகம் ஜவஹருக்கு இருக்கிறது. அவர் வர்க்கப்போராட்டத்தில் நம்பிக்கை வைக்கிறார். இது அடிப்படையான வேறுபாடு.
 மூலதனம் உயிரற்றது- ஆனால் முதலாளிகள் வேறு- அவர்கள் இதயத்தை மாற்றலாம் எனக் கருதுகிறேன். அவ்வாறு இதுவரை நடந்ததில்லை என்கிறார் ஜவஹர். வரலாற்று உதாரணங்களைத் தருகிறார். வன்முறையற்ற அகிம்சைவழியில் அது சாத்தியம் என நான் நம்புகிறேன். அகிம்சை வெல்லும் என்பது என் நிலைப்பாடு.
 அரசாங்க அதிகாரத்திற்கு போய் மாற்றுவது என முடிவெடுத்தாலும், போகவேண்டாம் என முடிவெடுத்தாலும் தனிப்பட்ட வகையில் எனக்கு நட்டம் ஏதுமில்லை. நமது சொந்த இலட்சியங்களுக்காக நாம் பொறுப்பு ஏற்றுக்கொண்டால், பயமின்றி, சுயநலமின்றி பணியாற்றினால் சுயராஜ்ய போராட்டத்தில் வெற்றிபெறலாம். ஜவகருக்கு மாற்று கருத்து இருப்பதை மறைக்கவேண்டியதில்லை.
 ஜவஹர் சிலநேரம் கடுமையாக பேசிவிடுவார். அவருக்கு தன் தோழர்களின் மதிப்பும் தெரியும். அவர்களை தன் கருத்திற்கு கொணரமுடியும் என்கிற நம்பிக்கையில் அவர் வேலை செய்துவருகிறார். பிரிட்டிஷ் எதிர்த்து ஒத்துழையாமை நடத்தலாம் என்பது அவர் கருத்து. அவருக்கு அகிம்சை என்பது ஆக உயர்ந்த தர்மம் அல்ல எனவும் சொல்கிறார். விடுதலைக்காக பிரிட்டிஷ்காரர் தொண்டையை அறுக்கவேண்டும் எனில் அதை செய்யலாம் என கருதுவார். ஆனால் அதை இரகசியமாக அல்லாமல் வெளிப்படையாக செய்ய நினைப்பார்.
 எனது கொள்கையில் அகிம்சைதான் தலையாயது. வன்முறை வழியாக வரும் விடுதலை விடுதலையல்ல. ஜவஹருக்கு அகிம்சை வழியில் சுதந்திரம் எனில் மகிழ்ச்சிதான். ஆனால் வன்முறை  அறவே இல்லை என்கிற கருத்து அவரிடமில்லை.
ஏப்ரல் 25, 1938ல் காந்தி நேருவிற்கு எழுதிய கடிதத்தில் நாம் நமது வேறுபாடுகளால் பலவீனமாகி வருகிறோம். மிக முக்கிய வரலாற்று கட்டத்தில் எதிலும் நம்மிடம் உடன்பாடில்லாமல் இருந்துவருகிறது. தங்களை என்னுடன் அழைத்துச் செல்லமுடியவில்லை. நானும் தனியாக இருப்பதாக உணர்கிறேன்.
 எனது அன்பிற்காக நீங்கள் நிறைய செய்கிறீர்கள் என்பதை அறிவேன். நமது அறிவு கலகம் செய்யும்போது அன்பிற்காக நாம் விட்டுக்கொடுப்புகளை செய்துவிடமுடியாது.. தங்களின் கூடுதல் கிளர்ச்சிக்கு எனது வாழ்த்துகள். அது எனது தனிமையை மேலும் அதிகரிக்கும். நான் நிறுத்தியாகவேண்டும்.
காந்தி சேவா சங்கத்தில் காந்தி மே 5 1939ல் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். ஜவஹர் சோசலிசத்தில் நம்பிக்கையுள்ளவர். சோசலிஸ்ட்களுடன் கலந்து பேசுவார். ஆனால் எந்த சோசலிஸ்ட் குரூப் உடனும் அவர் இணையவில்லை. அவர்கள் வேலைப்பாங்கிலும் வேறுபாடுகள் உள்ளன.
எனக்கும் சோசலிஸ்ட்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்கள் இராட்டை சுற்றுவதை வேடிக்கையாக்குவர். மனமாற்றத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. அவர்களுக்கு அது இல்லை. அவர்களும் தினம் என்னிடம் வருபவர்கள்தான். அல்லது நான் அவர்களிடம் நெருங்குவதாகவும் கொள்ளலாம். இது எவ்வளவு நாட்கள் நீடிக்கும் எனத்தெரியாது.
எனக்கும் ஜவஹருக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. அவை அவ்வளவு முக்கியமானவையல்ல. அவர் இல்லாமல் நான் முடமானது போல் இருக்கும். அவருக்கும் அப்படிப்பட்ட உணர்வு இருக்கிறது. எங்கள் இதயங்கள் ஒன்றாக இருக்கின்றன. பயணம் வெறும் அரசியலில் துவங்கவில்லை. அதற்கும் முன்பேயானது.
 டாக்டர் பி சி ராய்க்கு அக்டோபர் 12, 1939ல் காந்தி எழுதிய கடிதத்தில் என்னால் தோளில் சுமையை தொடர்ந்து தாங்க முடியவில்லை. ஜவஹரால்தான் என் இடத்திற்கு வந்து ஓட முடியும். அவரின் மாறுபட்ட பார்வைகளை சரிசெய்யலாம். அப்படியே இல்லாவிடினும் அவரது கருத்து நோக்கி அனைவரையும் அவர் அழைத்து சென்றாலும் என்ன இருக்கிறது? ஜவஹர் போல் வெளிப்படையான, நேர்மையானவர் வேறு எவரும் இல்லை. இதுவரை கமிட்டிமூலம் நாட்டில் செல்வாக்கு  செலுத்திவந்தேன். இனி ஜவஹர் மூலம் அதை செய்யவேண்டும் என்பதை ஏற்பீர்கள் என கருதுகிறேன் என மனம் திறந்திருந்தார்.
பம்பாய் காங்கிரஸ் அமர்வில் செப்டம்பர் 16, 1940ல் காந்தி உரையாற்றினார். சுயராஜ்யம் குறித்து நானோ, ஜவஹரோ சரியான விளக்கம் தரமுடியாது. எவராவது சொன்னால் அவரின் மாணவனாக நான் இருப்பேன். அது வரையறுக்கமுடியாத ஒன்று. சில விஷயங்களை மட்டும் என்னால் சொல்லமுடியும். பேச்சுரிமை, சிவில் சுதந்திரம் என்பன அதன் வேர்கள் என சொல்லலாம். இவையின்றி சுயராஜ்ய அடிப்படைகள் இருக்கமுடியாது.
ஜனவரி 15, 1942 காங்கிரஸ் அமர்வில் காந்தி உரையாற்றினார். ஜவஹரும் நானும் பிரிந்துவிட்டோம் என்பது அபத்தமானது. தடியால் அடித்து நீரை பிரிக்கமுடியாது. நேருதான் எனக்கு பின்பானவர் ராஜாஜியோ, வல்லபாயோ அல்ல.  (I have always said that not Rajaji, nor Sardar Vallabhbhai, but Jawaharlal will be my successor.)
நேரு மனதில் உள்ளதை சொல்வார். ஆனால் நான் எண்ணியதை அவர் செய்வார். நான் போனபிறகு நான் செய்ததை அவர் செய்வார். எனது மொழியைக்கூட அவர் பேசுவார். நான் இருக்கிறேன். என்னிடம் அவர் சண்டையிடுகிறார்.போனபின்? என் மொழியை அவர் பேசுவார் என்பது நடக்காமல் போனாலும் அந்த நம்பிக்கையுடன் நான் மரணிப்பேன்.(  I would atleast die with this faith)
காந்தி தொடர்ந்த மாதங்களில் வெளிநாட்டு உறவுகளில் ஜவஹர் சொல்வதே தன் கருத்து என சொல்லும் அளவு  சென்றார். அவரை தன் வாரிசு என பலமுறை பேச்சுக்களில் வெளிப்படுத்தினார். ஏப்ரல்1, 1947 பிரார்த்தனை கூட்டத்தில் கூட ஜவஹர் நம்மிடையே ஆகசிறந்த மனிதர் என குறிப்பிட்டார். ஏப்ரல் 4 அன்று அவர் சந்தித்த எகிப்திய பிரதிநிதிகளிடம் நேருவின் திறமையை வியந்து பேசினார். நான் இல்லாமல் போகலாம். ஆனால் இந்தியா உலக சமாதானத்தின் ஒளியாக இருக்கும். ஜவஹர் இருப்பார் என்றார்.
 நேருவும் தனது சுயசரிதையில் காந்தி குறித்த விமர்சனப்பார்வையுடன் வியந்து நோக்கும் அம்சங்களையும் முனவைத்திருக்கிறார். கோகலே குறிப்பிட்ட ஒன்றை நேரு மேற்கோள் காட்டியிருப்பார். எப்படி களிமண்ணிலிருந்தும் காவியமனிதர்களை காந்தி உருவாக்கிவிடுகிறார் என்பது அம்மேற்கோள். மனிதர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து இயக்கம் கட்டும் பெருந்தலைவர் காந்தி என நேரு குறிப்பிட்டு இருப்பார்.
தங்களைப்போன்ற  அனைவருக்கும் காந்தியுடனான பிணைப்பு எவ்வாறானது என நேரு குறிப்பிடுவார். காந்தியுடன் இருந்து தோல்வி அடைவதுகூட ஒன்றுமில்லாததே- அவர் இல்லாமல் நாம் பெறும் தற்காலிக  முன்னேற்றங்களை விட..
சித்தாந்தரீதியாக் சிலநேரம் அவர் பிற்போக்கு போல் தெரிவார். ஆனால் செயலில் அவர்தான் இந்தியாவின் மிகப்பெரிய புரட்சிகரவாதி எனவும் நேரு குறிப்பிட்டுள்ளார்.
காந்தி ஒத்துப்போகிறவர்களுக்கு மட்டுமல்ல விமர்சிப்பவர்களுக்கும் அவசியமானவர். போராட்டம் என அவர் அறிவித்துவிட்டால் அனைவரும் அதில் வந்து சேர்வதை பார்ப்பதாகவும் நேரு இந்தியாவை கண்டுணர்ந்தேன் புத்தகத்தில் சொல்கிறார். Mahatma Gandhi taught us to place politics on an ethical level  என்று ஏப்ரல் 3, 1948ல் நேரு அரசியல் அமைப்பு சட்ட அவையில் பேசினார்.
வாஷிங்டனில் டிசம்பர் 18, 1956ல் நேரு தொலைகாட்சி, வானொலி உரை தந்தார். இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் நல்லவையும் அல்லவையும் நடந்தேறியுள்ளன. வரலாறு தன் நீள்பாதையில் அமைதி சமாதானம் சகிப்புத்தன்மையை சுமந்துகொண்டே வந்துள்ளது. நமது காலத்தில் இச்செய்தியை காந்தி பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தார். அவர் அமைதியான அகிம்சைவழியில் விடுதலை நோக்கி பெருமக்களை செயல்படவைத்தார் .
சீனா யுத்தம் தாக்குதல் தொடர்பாக நேரு நாடாளும்ன்றத்தில் ஆற்றிய உரையில் கீழ்கண்டவாறு தெரிவித்தார். காந்தி கொடுமையானவர் என எவரும் சொல்லமுடியாது. அவர் பலவீனமானவர் என சொல்லவே முடியாது.
No man can say that Gandhiji was brutal. He was the essence of humility and of peace. No man can say that Gandhiji was weak. He was the strongest man that India or any country has produced
வளரும் பொருளாதாரம் எனும் கருத்தரங்கில் நேரு செப்டம்பர் 22 1963ல் உரையாற்றினார். எந்திரங்கள் குறித்து காந்தியின் அணுகுமுறையை அவர் விளக்கினார். மக்களுக்கு உதவாத மக்களை பயன்படுத்தாத எந்திரமுறையை அவர் ஏற்காமல் இருந்தார் என்பது நேரு விளக்கமாக அமைந்தது.
 அக்டோபர் 19, 1963ல் நேரு தன் வாழ்க்கையில் தான் பார்த்த மகத்தான தைரியசாலி மகாத்மாவே என்றார். அவரின் ஆன்மாவை எவரும் விலைபேசிட வாங்கிவிட அவர் அனுமதித்ததே இல்லை.
காந்தி மறைந்தபோது நேரு ஆற்றிய உரை உலகோரை உலுக்கியது.
The light has gone out of our lives and there is darkness everywhere.. The light has gone out, I said, and yet I was wrong.. For that light represented something more than the immediate past, it represented the living, the eternal truths, reminding us of the right path, drawing us from error, taking this ancient country to freedom.
மகாத்மா என்கிற ஒளிவிளக்கு அணைந்துவிட்டது.  தவறு, அந்த தீபம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தன் ஒளியை நல்கும்.. உண்மையை, சரியான பாதையை பிரதிநிதித்துவப்படுத்தும்.
.



2 comments:

  1. A long and interesting blog. The differences are well KO own. But here they are out in perspective. G has given his reasons for mixing politics and religion in his autobiography. The entire Satyagraha movement was based on religion. Secondly, G emphasized on means over ends. Thirdly, G was insisting on Swsrajya and he as ready to wait indefinitely.. But others were impatient. Congressmen did not like the suspension after chaurichaura
    They thought the freedom was at hand. Salt Satyagraha was ridiculed. A pinch of salt in a remote beach - how could drive British out they asked. Most congressmen did not understand khadi, spinning, prohibition, village uplift which were close to G's heart. But there was only one Gandhi in Congress.. He was alone. N was obsessed with his socialism. G was a nationalist
    N an internationalist. They were poles apart.

    ReplyDelete
  2. Dear பட்டாபி u r utilising the time after retirement in this usefulway to the others to know about our leaders in unbiased style of writing. Keep up the pace. Have a long healthy life. Regards Mohan.

    ReplyDelete