ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்
தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்-
2
2
தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அவதி
துயர் துடைக்க அவர் இங்கிலாந்து பயணத்தை 1906 லும், 1909லும் மேற்கொண்டார். லண்டன்
அவர் படித்த பழகிய நகரம்தான்.
தென்னாப்பிரிக்கா ஒற்றுமை என்பதற்கான
நகல் அரசியல் சாசனம் குறித்துப் பேசுவதற்கு அந்நாட்டு தலைவர்கள் போத்தா, ஸ்மட்ஸ் போன்றோர்
1909 ல் லண்டன் சென்றனர். அந்த அரசியல் சாசனம், ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான
இந்தியர்களுக்கு மேலும் பாதகமாக அமைந்துவிடக்கூடாது என்கிற கவலையில் காந்தி மற்றும்
ஹாஜி ஹபீப் ஆகிய இருவரும் இங்கிலாந்திற்கு ஜூலை 1909ல் சென்றனர். தென்னாப்பிரிக்கா
இந்தியர்களுக்கான துயர் துடைக்கும் வேலைகளில் தங்களால் முடிந்தவற்றை இருவரும் செய்கின்றனர்.
உடனடி பலன் ஏதுமின்றி நவம்பர் 13,1909 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பிட கப்பல்
ஏறுகின்றனர்.
லண்டனில் இருந்த இந்த மாதங்களில்
ஏராள இந்தியர்களை சந்தித்து காந்தி உரையாடினார். அவர்கள் ஒருமித்து பிரிட்டனின் வெளியேற்றம்
வன்முறை வழியில் மட்டுமே சாத்தியமாகும் என்கிற கருத்தை வெளிப்படுத்தினர். லண்டனிலிருந்து
தன் அனுபவங்களை மகன்லால், போலக், கல்லன்பக் போன்றவர்களுக்கு காந்தி எழுதிக்கொண்டிருந்தார்.
பிரதிநிதிகளின் குறிப்புகள் என தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கான செய்திகளையும், தாங்கள்
செய்தவை குறித்தும் ’டெபுடேஷன் நோட்ஸ்’ எனப்படும் அறிக்கைகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.
காந்தி லண்டனில் இறங்குவதற்கு 9
நாட்கள் முன்னதாக, ஜூலை 1 அன்று பிரிட்டிஷ் அதிகாரி கர்சான் வைலியை, பஞ்சாபை சார்ந்த
படிக்க வந்த இளைஞர் மதன்லால் திங்கரா கூட்டம் ஒன்றில் கொலை செய்தார். லால்காக்கா என்பவரும்
கொலையுண்டார். திங்கரா மீது காந்தி வருகிற நேரம் விசாரணை நடந்துகொண்டிருந்தது. சில
பிரிட்டிஷ் நல்லெண்ணக்காரர்களும் மரண தண்டனை திங்கராவிற்கு வேண்டாம் என வாதிட்டு வந்தனர்.
காந்தி அப்போதே அன்பு வழி- சாத்வீக
எதிர்ப்பு- உறுதியான நிலைகுலையா அச்சமற்ற சத்தியாகிரகம் என்கிற போராட்ட முறையை சோதித்தவராக
இருந்தார். கொலை வழியாக எதையும் செய்வதை அவரால் ஏற்கவே முடியாது. திங்கரா போன்றவர்
தவறாக வழிகாட்டப்பட்டு வன்முறை வழியில் வழுக்கி விழவைக்கப்பட்டதாகவே காந்தி கருதினார்.
இவர்கள் போன்ற இளைஞர்களை விட்டில் பூச்சிகளாக
தியாகம் செய்யவைக்கும் எழுத்துக்களைத் தருபவர், மயக்கு சொற்பொழிவுகள் செய்பவர்களே தண்டிக்கப்படவேண்டியவர்
என காந்தி கருதினார். எய்தவன் இருக்க அம்பு நோகடிக்கப்பட்டதாக அவர் எண்ணினார்.
சோசலிஸ்ட்கள் 1907ல் ஸ்டட்கர்டில்
கூடியபோது, அங்கு லெனின், ரோசா லக்சம்பர்க் போன்ற புரட்சியாளர்களுடன் விரேந்திரநாத்
சட்டோ, மேடம் காமா போன்ற இந்தியர்களும் பங்கேற்றனர். இத்தாலியின் மாஜினி இந்திய இளைஞர்களுக்கு
ஈர்ப்பான நாயகனாக இருந்தார்.
தாரக்நாத் தாஸ் என்பார் அமெரிக்கா,
கனடாவிலிருந்த நண்பர்கள் பலரின் உதவியுடன் ’ப்ரி இந்துஸ்தான்’ என்கிற இந்திய விடுதலைக்கான
பத்திரிகையை நடத்தி வந்தார். அவர் டால்ஸ்டாயுடன் விவாதம் மேற்கொண்டார். தாரக்கும் டால்ஸ்டாயும்
நடத்திய உரையாடல்களை தனியாக தாரக்நாத் கொணர்ந்துள்ளார். டால்ஸ்டாய் பதிலை ஏற்க இயலாது
என்று தெரிவிக்கும் கட்டுரை ஒன்றை சரோஜினி நாயுடுவின் சகோதரரான விரேந்திரநாத் சட்டோபாத்யாயா
எழுதினார். இந்த விவாதம் பற்றி டாக்டர் பிரஞ்சீவன் மேத்தா காந்தியிடம் தெரிவிக்கிறார்.
தாரக்நாத்திற்கு வன்முறை வழியல்ல,
அன்பே வாழ்வின் வழி என்பதை சொல்லும் வகையில் டால்ஸ்டாய் எழுதிய கடிதம் காந்திக்கு கிடைத்தது.
டால்ஸ்டாயின் நூல்களுடன் பழக்கம் கொண்ட காந்தி, டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதி, அவரின்
சம்மதத்துடன் ’ஓர் இந்துவிற்கு கடிதம்’ என்பதைக் கொணர முயற்சிகள் மேற்கொண்டார். அந்நூலிற்கான
முன்னுரையைக்கூட தன் கப்பல் பயணத்தில்தான் அவர் எழுதினார்.
லண்டனில் இருந்தபோது அவர் பல கூட்டங்களைப்
பேசினார். முக்கியமாக அவர் கிழக்கும் மேற்கும் அவற்றின் நாகரிகம் பற்றியும் , சாத்வீக
அமைதி வழி எதிர்ப்பு போராட்டம் குறித்தும் மாணவர்கள் உட்பட பலரிடம் பேசினார். அப்படியாக
அமைந்த கூட்டம் ஒன்றாக காந்தி தலைமையில் சாவர்க்கர் உரையாற்றும் விஜயதசமி கூட்டமும்
அக்டோபர் 24, 1909 அன்று அமைந்தது. இந்தியர் பலரின் சந்திப்பு, அவர்களின் உத்வேக அவசரங்கள்,
வன்முறை மீதான ஆராதனை, இந்தியாவில் காங்கிரசின் நிலை- அதன் தலைவர்கள்- சூரத் பிளவு
போன்ற புறச் சூழல்கள் குறித்து அவர் விரிவான விடையை மனதளவில் தேடிக்கொண்டேயிருந்தார்.
இவர்கள் வேறுபட்டாலும் ஏன் அனைவரும் நவீன நாகரிகம்- அதன் பண்பாடு பயன்பாடு என்பதை ஏற்கும் ஒரு புள்ளியில் சந்திப்பவர்களாக
இருக்கின்றனர் என்பதையும் காந்தி சிந்திக்கலானார்.
Comments
Post a Comment