https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, November 3, 2020

மண்ணில் உப்பானவர்கள்

 

மண்ணில் உப்பானவர்கள்

விடுதலையை நோக்கிய மகத்தான யாத்திரை

 


திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன் தமிழ் பேராசிரியையாக இருந்தவர். தொலைகாட்சி வழியே நாடறியப்பட்டவர். செய்தி வாசிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக, ஆளுமைகளை பேட்டி எடுப்பவராக பல பரிமாணங்களில் மிளிர்ந்து வருபவர். காந்தியப் பற்றாளராக பல அரிய நூல்களை தமிழ் மக்களுக்கு குறிப்பாக இளம் தமிழர்கள் மத்தியில் எடுத்துச் சென்று அறிமுகப்படுத்தி வருபவர். தீவிர வாசிப்பாளராக நூல் திறனாய்வுகளை சிறக்க செய்து வருபவர்.



தொலைகாட்சி ஒருங்கிணைப்பாளராக தன் பெரும் பொறுப்புணர்ந்து குறித்து விவாத விஷயத்தில் தேவையான ஞானத்துடன்   சித்ரா அவர்கள் வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய சிறப்புத்திறன்கள் கொண்ட அவர் எழுதியுள்ள புத்தகம்தான் மண்ணில் உப்பானவர்கள். இந்நூலை தன்னறம் நூல்வெளி வெளியிட்டுள்ளனர். நன்கொடை ரூ 200 கொடுத்து நூலை பெறமுடியும்.

தமிழகமும் கர்நாடகமும் ஒருசேர அறிந்த புகழ்வாய்ந்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் ’உப்பு என்னும் ஆயுதம்’ என்கிற சுருக்கமான அறிமுகவுரையை தந்துள்ளார்.  வானத்தில் வட்டமிடும் பறவையின் வேகம் எப்போதும் கொண்டவர் சித்ரா என பாவண்ணன் அறிமுகம் நிறைவான வரியைத் தருகிறது. அன்று இருந்த இந்திய அரசியல் சூழல்- வரிகொடா இயக்கம், சத்தியாகிரக போராட்டங்கள் ஊடாக  உப்பை ஆயுதமாக்கி மக்கள் திரள் போராட்டமாக தண்டியாத்திரை நடந்ததை பாவண்ணன் சொல்லி செல்கிறார்.

காந்திய அணுக்கம் உருவாக்கும் அறமென்பது காலத்தால் காந்தியர்களை விட்டு அகலாது என்பது குறித்த ஷோத்யாத்ரா சித்திரத்தை திரு சிவராஜ், குக்கு காட்டுப்பள்ளி தருகிறார். ஒவ்வொரு ஊரிலும் அந்ததந்த ஊருக்கான காந்தி இருப்பார். கொஞ்சம் கவனித்தால் நம் கிராமங்கள் அனைத்திலும் ஒரு காந்தியைக் காணமுடியும் . காந்தியம் இந்திய மண்ணில் விதையைப்போல் கலந்திருக்கிறது என்பதை ஜெயகாந்தன் போலவே சிவராஜ் சுட்டிக்காட்டுகிறார்.

தண்டியாத்திரையின் மக்கள்திரள் மகத்துவத்தை எளிமையாக அதன் வரலாற்று பின்புலத்துடன் திருமதி சித்ரா இப்புத்தகத்தில் தருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்றவர்கள், அதற்கான தயாரிப்பு பணிகளை முன்கூட்டியே கவனத்துடன் செய்தவர்கள் குறித்து பேசுகிறார் . அவர் முதலில் அறிமுகப்படுத்துவது அருண்டுக்டி எனும் மாணவ இளைஞன் மற்றும் அவரது தோழர்களைத்தான். தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தங்கள் மீது வெளிச்சம் படவேண்டும் என்கிற ஆசையில்லாமல் இக்குழாம் முன்சென்று யாத்திரைப் பாதைதனை செப்பனிடுகிறது. கழிப்பறை குழிதோண்டுவதிலிருந்து தங்கள் கடமைகளை ஆற்றுகிறது. ஆர்மி ஆப் டான் – விடியலின் விடுதலையின் படை என இவர்கள் வர்ணிக்கப்படுகின்றனர். இப்படி மண்ணில் உப்பானவர் பலர் குறித்து இந்த யாத்திரை தொடர்பாக இப்புத்தகம் பேசுகிறது.

இப்போராட்டத்தில் தொடர்புகொண்ட ஆனால் காலத்தால் நினைவு வெளியில் நிறுத்தப்படாமல் போன பலர் குறித்து கொஞ்சமாவது சொல்லவேண்டும் எனகிற முயற்சியில் சித்ரா ஈடுபட்டுள்ளதை புத்தகம் படிக்கும்போது உணரமுடியும். அப்பாஸ் தியாப்ஜி, ஆனந்த ஹிங்கரேனி, காரக் பகதூர்சிங், ஹரிதாஸ் மஜூம்தார் போன்றவை வெறும் பெயர்கள் மட்டுமல்ல. தன்னலமற்ற செயல்நேர்த்தி கொண்ட அடையாளங்கள் என்பதை சித்ரா உணர்ந்த்துகிறார்.

1983ல் தாமஸ் வெபர் மேற்கொண்ட உப்பு யாத்திரை வழித்தட பயணத்தால்  பதிவிடப்படாதிருந்த பல புதிய  செய்திகள் கிட்டியதை சித்ரா நன்றியுடன்  குறிப்பிடுகிறார்.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரைக்கு காந்தி எவ்வளவு கவனத்துடன் பெயர்களை தெரிவு செய்தார்- எப்படி பெரும்பாலானவர் இளைஞர்களாக இருந்தனர்- அவர்களின் ஆசிரம பயிற்சி போன்ற விவரங்களை இந்நூலில் காணலாம். யாத்திரை துவங்கிய மார்ச் 12 1930 முதல் நாள்தோறும் பயணப்பாதையில் எங்கு எந்த கிராமத்தில் என்ன நடந்தது  என்பது சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. காந்தியடிகளுக்கு நேர்ந்த உபாதைகள், பத்திரிகைகளின் கேலிப்பேச்சுகள், யாத்திரையாளர் மத்தியிலான சிறு பூசல்கள் என அனைத்தையும் காந்தி வழிப்பாதையை கடப்பதுபோல் எப்படி உறுதியாக கடந்து சென்றார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களை பிறருடன் இணைத்து பொதுநீரோட்டத்தில் அழைத்து செல்வது, உப்பு அள்ளும் நாளில் இஸ்லாமியர் வீட்டில் தங்கியே அதை செய்வேன் என 14ஆம் நாள் யாத்திரையில் அறிவித்தது என்பதெல்லாம் விடுதலை போராட்டம் என்பது வெறும் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்கிற ஒற்றை சாலை பயணமாகாது- நம் உள்போராட்ட – சாதி மதம் கடந்த  நம் ஒற்றுமைக்கான பயணமாகவும் இருப்பதை இந்த போராட்டத்திலும் காந்தி உணரச் செய்தார்.

எளிய மக்களுக்காக எளிய மக்கள் இணைந்து நடத்தும் போராட்டமாகவே காந்தி அதை நடைபெற செய்தார். ஆடம்பரமும் பணபலமும் போராட்டத்தை வெற்றி பெற வைக்காது என்பதை எடுத்துரைத்தார். போராட்டத்தின் முடிவுநாளில் எங்கள் மண்ணை நாங்கள் மீட்டுக்கொள்வோம் என பிடி உப்பை அள்ளி அதை பெரும் செய்தியாக மாற்றினார்.

காந்தி எப்போராட்டத்தையும் முன்கூட்டியே ஆட்சியாளர்களுக்கு  அறிவிக்க்காமல் செய்யமாட்டார். அவரிடம் இரகசியம் என்பது கிடையாது. தண்டி யாத்திரை குறித்தும் அவர் வைஸ்ராய்க்கு மார்ச் 2 1930 அன்றே கடிதம் எழுதினார். அதில்  As the independence movement is essentially for the poorest in the land, the beginning will be made with this evil என குறிப்பிட்டிருந்தார்.

இக்காலத்தில் சில அற்புதமான எழுத்துக்களையும் காந்தி தந்தார்.  Departure, The Duty of Disloyalty போன்றவைகளை சொல்லலாம்.  Disloyalty to state is Virtue,  Sedition is our Dharma  என்கிற வரிகளையும் நாம் பார்க்கமுடியும்.

இப்போரட்டத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் உப்பு சத்தியாகிரகம் மேற்கொள்ளப்பட்டது. ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யம் யாத்திரை குறித்தும் இந்நூலில் சித்ரா எழுதியுள்ளார். தொடர்ந்த அடக்குமுறைகள், தாரசானா போராட்டம் - அடக்குமுறைகள் சிறு குறிப்புகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

 அமெரிக்க பத்திரிகைகள் காந்தி குறித்து ஏராளம் எழுதின.  Most Talked About Man in the World  என குறிப்பிட்டன. டைம்ஸ் பத்திரிகை அட்டைப்படம் போட்டு  saint gandhi  என விவரித்தது. உப்புக்கு  போராட்டமா (உப்பு போறாத விஷயம்) எனக் கேட்ட பலர் எப்படி இவ்வளவு வீச்சான இயக்கமாக இது பரிமாணம் கொண்டது என்பதைக் கண்டு வியந்தனர். ஒரு விஷயம் மக்களை கவ்விப் பிடித்தால் அவர்களை இயக்கும் மாபெரும் பொருளாயத சக்தியாகிவிடும் என்கிற மார்க்சின் கூற்றை காந்தி இப்போராட்டம் மூலம் நிரூபித்தார். 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நினைவு கூறும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் உப்பளம் நோக்கி சென்ற யாத்திரை நினைவுக்கு வருகிறது. சுதந்திர போராட்டத்தியாகிகள் பங்கேற்ற கூட்டமாக அதை தொழிற்சங்கத்தலைவர்கள்  ஜெகன், ஆர்.கே போன்றவர் மாற்றினர். எங்களைப்போன்ற அன்று இளைஞர்களாக இருந்தவர்கள் அதில் பங்கேற்ற நினைவை மண்ணில் உப்பானவர்கள் புத்தகம் என்னுள் கிளறியது.

திருமதி சித்ரா தமிழகத்திற்கு தந்துள்ள உவப்பான புத்தகமிது.

3-11-2020