https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, December 31, 2017

The Future of Tamil Nadu Politics

                 தமிழக அரசியலின் எதிர்காலம்
         -ஆர்.பட்டாபிராமன்
தமிழக அரசியல் கடந்த  சில பத்தாண்டுகளில் தான் பார்த்து நகர்ந்த ஆளுமைகளை இழந்துள்ளது. புதிய ஆளுமைக்காக காத்துக்கிடக்கிறது. புதிய ஆளுமை யார் என்பதற்கான சோதனை ஓட்டங்கள் துவங்கியுள்ளன.
திரு கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா என்கிற திராவிட இயக்கம் சார்ந்த ஆளுமைகள் 50 ஆண்டுகளில்  அண்ணாவால் துவங்கப்பட்ட தேர்தல்அரசியல்- ஆட்சி அதிகாரம் என்கிற பயணத்தை நிகழ்த்தியுள்ளனர். தனது பெரும் உழைப்பால் பெரியார்- அண்ணாவிடம் தொண்டாற்றி, மொழி, இனப்பற்று சமூகநீதி மற்றும் திராவிடக் கொள்கைகள் வழியே தன்னை ஆளுமையாக உயர்த்திக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சினிமா சிநேகமும், வசனகர்த்தா தொழிலும் உதவின.
எம் ஜி ஆர் முழுமையாக சினிமா பின்னணியில், அண்ணாவின் அன்பில், கலைஞரின் நட்பில் அரசியலுக்கு நுழைந்தவர். கலைஞரின் எதிர்ப்பில் புதிய  அரசியல் இயக்கம் கண்டு கோடானுகோடி ஏழைகளின் மனதில் இடம் பிடித்தவர்.  திராவிட இயக்க கொள்கைகளின் தீவிரத்தை தணித்துக்கொண்டு மத்திய அரசுடன் ஒத்துழைப்பு என்கிற நடைமுறை அரசியலை கையாண்டு பெரும் ஆளுமையாக  உருவெடுத்தவர்.
திராவிடஇயக்க பின்னணி என ஏதுமற்று, சினிமா பின்னணியுடன், எம் ஜி ஆர் ஆசியில் அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா அம்மையார். எதையும் விரைந்து கற்கும் திறனும், சூழலை ஆய்ந்து காய்களை நகர்த்தும் ஆற்றலும் வாய்க்கப்பெற்றவராக அவர் விளங்கினார். எம் ஜி ஆரின் அரசியல்வாரிசு எனும் போட்டியில் திருமதி ஜானகியை நிறுத்தியவர்களுடன் போராடி தன்னை நிறுவிக்கொண்டவர். தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து கோடானுகோடி மக்களின் அன்பை,  ஆதரவை பெற்று ஆளுமையாக உயர்ந்தவர். திராவிட இயக்க பாரம்பரியத்தில் புதிய முன்னெடுப்புகளை நடத்திக்காட்டவேண்டிய நிர்பந்தம் ஏதும் அவருக்கு இருக்கவில்லை. அவ்வப்போது எதிர்ப்படும் நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்து பெற்றவைகளை தக்கவைத்தால் போதும் என்கிற நிலையை அவர் சாதுர்யமாக  கையாண்டார். இந்த 50 ஆண்டுகளில் இவர்கள் பல முரண்பட்ட நிலைகளை எடுத்தாலும் தங்கள் இயக்கத்தில் ஒப்பற்ற ஒரே தலைவர் என்கிற உயர்நிலையிலிருந்து வீழவில்லை. தேர்தல் தோல்விகள்கூட தலைமை பொறுப்பிற்கு நெருக்கடிகளை தந்துவிடவில்லை.
இந்த ஆளுமைகள் இல்லாத சூழலில் இன்று ஆட்சி பொறுப்பில் உள்ள தலைவர்கள் இயக்கத்தில் அடிமட்ட தொண்டர்களாக இருந்து தங்களின் விசுவாச அரசியல் காரணமாக பல்வேறு மட்டங்களுக்கு தலைமையால் உயர்த்தப்பட்டவர்கள். மாவட்டச் செயலர்களாக, அமைச்சர்களாக, முதலமைச்சராகக்கூட உயர்த்தப்பட்டவர்கள். தங்களுக்கென தனித்திறமையை உணரவேண்டிய, வளர்த்துக்கொள்ள அவசியமற்ற சூழலில்  அவர்கள் இருந்தார்கள். தாய்க்கோழியின் அரவணைப்பு குஞ்சுகள் போன்ற நிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் திறமைகள் விசுவாசம் என்கிற எல்கைக்குள் வெளித்தெரிய வேண்டியவையாக இருந்தன.
இன்று ஆட்சி பொறுப்பை நேரடியாக எடுக்கவேண்டிய சூழலில் கூட்டுத்தலைமை- ஜனநாயக விவாதம்- சரிகட்டல்கள்- முடிவுகள் என்கிற புதிய பாதையில் அவர்கள் செல்லவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.  அவர்களில் எவரையும் தனித்து பிம்பமாக உயர்த்த யாரும் தயாரில்லை. ஆட்சியை தக்கவைக்க மத்திய அரசின் தலைமைக்கு முன் அளவற்ற பணிவையும், விட்டுக்கொடுத்தல்களையும் செய்யவேண்டியுள்ளது. திராவிட இயக்கத்தின் எந்த முகத்தையும் வெளிப்படுத்திக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
திரு தினகரனின் ஆர்.கே நகர் வெற்றி பெரிதும் பேசப்படும் ஒன்றாகியுள்ளது. தமிழகம் ஆர்.கே நகரல்ல என்கிற எதார்த்த குரல்களும் எழாமல் இல்லை. ஜெயலலிதா அம்மையாரின் தோழி, நெருக்கமான துணை என்கிற சசிகலா அம்மையார் பிம்பத்திற்கு இணையாக மன்னார்குடி மாபியா என்கிற எதிர் விமர்சனமும் வலிமையாகவே தமிழகத்தில் உலா வருகிறது.
திரு கமலஹாசன் கல்லூரி போகாமல் இருக்கலாம். சினிமா பின்னணி என்றாலும் படித்தவர், கற்க பெரும் விருப்பமாக இருப்பவர் என்கிற பார்வையை அவர் மத்தியதட்டு மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார். அவருடன் மத்தியவர்க்க உயர்தட்டு பிம்பம் நிழலாக கூடவே வருகிறது. கவித்துவமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு  வெகுஜன உரையாடலுக்கான வெளியை அவரே மூடிவிடுகிறார். பெரியாரியம், இனப்பற்று, சமத்துவம் என்கிற கொள்கைகளில் புதிதாக உணர்த்தும் அளவிற்கு அவரது உரையாடல் வலுவாக இல்லை.
நாம் தமிழர் சீமானின் ஆவேசம் இளைஞர்களை கவ்வி பிடிக்கலாம். கவனித்து பொருட்படுத்தவேண்டிய நியாயக்குரல் என்கிற தர்க்க அரசியல் முயற்சியில் அவர் ஓரளவிற்கு வெற்றி பெறத்துவங்கியுள்ளார். ஆனால் நாம் இந்துக்கள், நாம் இஸ்லாமியர்,  நாம் தமிழர் என்று சொல்லும்போதெல்லாம் ஒன்றுபடுத்தலின் அடையாள வலிமை மட்டுமின்றி, விலக்கி வைத்தலின் உக்கிரமும் தொழிற்படுகிறது. பன்முகத்தனமை வாய்ந்த நம் சமூகத்தில் இப்படிப்பட்ட குரல்கள் ஜனநாயக வெளியை நாளடைவில் அடைத்துவிடும்.
திரு ரஜினிகாந்திற்கு மக்கள்திரளை ஈர்க்கும் வசீகரம் இருக்கலாம். ஆன்மீகவாதி, அமைதியானவர், நிதானமும் பக்குவமும் வாய்க்கப்பெற்றவர், அளந்து குறைவாக பேசக்கூடியவர், வெற்றி என்று அனுமானித்தால் மட்டுமே செயலில் இறங்கக்கூடியவர் என்கிற ஒளிவட்டம் அவர்மீது சுற்றப்படுகிறது. ஆனால் அவர் தன் பன்ச் டயலாக் மூலம் துணுக்கு அரசியலைத்தான் இதுவரை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பம் என்கிற நிறுவனத்தை அவர் உயர்த்திப் பிடிப்பது பெண்களின் ஆதரவை பெற உதவலாம். அவரது பின்புலமாக இருந்து யார் இயக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். மக்கள் எளிதில் நெருங்க முடிந்த ஜனநாயக முகத்தை கொண்டவராக அவர் இருப்பாரா என்பதும் சோதிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.
தேசிய கட்சிகளாக கருதப்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பா ஜ க ஆகியவை தனித்து நின்று தங்கள் பலத்தை சோதிக்கக்கூட முடியாத எதார்த்த நிலைமை நீடிக்கிறது. திமுக தவிர தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் பெரும் கட்சி ஒன்றுடன் துணை நிற்கும் அமைப்புகளாகவே தொடரும் சூழல் நிலவுகிறது. திரு ஸ்டாலின் தலைமையிலான தி மு க கலைஞர் ஏற்படுத்திய உச்சங்களை தொடுமா என்பதும் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
மக்கள் அடுத்து யாரை ஆட்சியில் அமரவைத்தாலும் தமிழக அரசியல் பயணிக்கவேண்டிய பாதை குறித்து பரந்த கருத்தொற்றுமை தேவைப்படுகிறது. தனித்தமிழ்நாடு நோக்கிய தமிழ்தேசியம் என்பது இன்றுள்ள சூழலில் இரத்தக்களறியின்றி பெரும்பான்மை மக்களுக்கு அமைதியை தருமா என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும். மத்திய அரசுடன் சரணாகதியோ அல்லது நிரந்தர பகைமையோ தமிழக நலன்களுக்கு உதவாது. மத்திய அரசுடன் அரசியல் அமைப்பு சட்ட எல்கைக்குள் நின்று பிரச்சனைகளின் அடிப்படையில் உடன்படுதல், எதிர்குரல் கொடுத்து தங்கள் நிலையை வலியுறுத்தல் என்பது நடைபெறவேண்டும். மாநில அரசின் அதிகார விரிவுபடுத்தல், மாநில அரசிற்குள் அதிகார பரவல் என்பதற்கான தொடர் வினைகள் நடைபெறவேண்டும்.
தமிழக வரவு செலவு இனங்கள் குறித்து தொடர் விவாதங்கள் மூலம் கருத்தொற்றுமை உருவாக்கப்படவேண்டும். தமிழகத்தின் வருவாய் இனங்களில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள்-மாற்றுகள் பொது புத்தியில் உறையும் அளவிற்கு விவாதப்பொருளாக மாறவேண்டும். அதே போல் செலவினங்களில் முன்னுரிமை பட்டியல் என்பதும் வரையறுக்கப்படவேண்டும். குறிப்பாக விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்புகள் குறித்து கருத்தொற்றுமையை ஆட்சிக்கு வருபவர்கள் உருவாக்கவேண்டும். மத்திய அரசின் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் போன்ற ஒன்றை தமிழக அடித்தட்டு 20 சத குடும்பங்களுக்கு தனியாக மாநில அரசு உருவாக்கிடவேண்டும். மத்திய அரசின் பணிகள், மாநில அரசின் வேலைத்திட்ட பணிகள் என்பவற்றை வரையறுத்து செய்திடவேண்டும்.
வருவாய் பெருக்கம், ஒதுக்கிய செலவினங்களை ஊழல் இன்றி உரிய மட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு செல்வதை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர்- மக்கள் பிரதிநிதி தலைமையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்கவேண்டும். மாவட்டந்தோறும் இதற்கான காலாண்டு அறிக்கைகளை மக்கள் பார்வைக்கு முன்வைக்கவேண்டும்.

மாநிலத்தின் வளர்ச்சிக்குரிய கண்ணியமான உரையாடல் களமாக சட்டமன்றம்,  மற்றும் தமிழக அரசியலின் பொதுவெளியை மாற்றக்கூடிய ஆளுமைகளை தமிழகம் பெறட்டும்.

Tuesday, December 19, 2017

Dakshayayani The First Dalit woman Leader In the Constituent Assembly

தாட்சாயிணி வேலாயுதம் (1912-1978) 
                    -ஆர்.பட்டாபிராமன்

தாட்சாயிணி வேலாயுதம் இன்றுள்ள இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய பெயர். விடுதலை இந்தியாவின் கனவுகள் குறித்து பெருமித பார்வை கொண்ட ஒருவர். இந்தியாவின் அரசியல் சட்ட நிர்ணய அசெம்பிளிக்கு சென்ற 15 பெண்களுள் ஒருவர். அங்கு இடம் பெற்ற ஒரே தலித் (அரிசன) பெண்மணியும் அவர்தான் என்பது வரலாற்று முக்கியம் வாய்ந்த அம்சம். தற்காலிக நாடாளுமன்ற அவையில் அவர் 1946 முதல் 1952 வரை சிறப்பாக செயல்பட்டார். அவர் அரசியல் நிர்ணய சபைக்கு செல்லும் போது  அவரின் வயது 34  மட்டுமே. சிறு வயதிலேயே பெரும் பொறுப்புகளுக்கு தயாராகும் பயிற்சியும் பக்குவமும்  குடும்ப சூழலில் , சமுக சூழலில் கிடைக்கப்பெற்றது.
 கேரளா சமூகத்தில் நிலவிவந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளின் சூழலில்தான் புலையர் சமூகத்தில் தாட்சாயிணி முலவக்காடு கிராமம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 1912ல் பிறந்தார்.  தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் பெரும் சமுக கேட்டிற்கு ஆளாக்கப்பட்டிருந்த சூழல். மேலாடை கூட போடமுடியாது. தெருவில் செல்லமுடியாது. நிமிர்ந்து  பார்த்துவிடமுடியாது. ஆபரணங்கள் அணிந்து செல்லவும் தடையிருந்தது. அப்போது சாதியக் கொடுமைகளை எதிர்த்து நாராயணகுரு, அய்யங்காளி இயக்கங்கள் வலுப்பெற்ற சூழல் நிலவியது.
அய்யங்காளி 1904லேயே புலையர்களுக்கான பள்ளியை தொடங்கியிருந்தார். அய்யங்காளியும் கற்பி, ஒன்றுசேர் என்கிற முழக்கத்தை வைத்தார். தாட்சாயிணி தந்தை வேலுத குஞ்சன் ஆசிரியராக இருந்தவர். அவரின் சகோதரர் கிருஷ்ணதி ஆசான் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக இருந்தார்.. குஞ்சன் வீட்டில் புலைய குடும்பத்து சிறுவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு சமஸ்கிருதம் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணதி தங்களுக்கு தடையாக வைக்கப்பட்டிருந்த சங்கீதம், சமஸ்கிருதம் ஆகியவற்றை கற்றார். புலையன் மகாசபையில் அனைவரும் கூடுவதற்கு ஏற்பாடு, ஆபரணங்கள் அணிவது, தலைமுடி வெட்டிக்கொள்ள ஏற்பாடு, சாதி எதிர்ப்பு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டனமுலவக்காடு பகுதியில் உள்ள புனித ஜான் தேவாலயம் கட்ட கிருஷ்ணாதி நிலம் கொடுத்து உதவினார்
 கிருஷ்ணாதி ஆசான், கே பி வல்லான் ஆகியோர் 1913ல் புலையர் மகாசபை அமைத்து உரிமைகளுக்காக போராடத்துவங்கினர். தாட்சாயிணி சமுக கட்டுக்களை மீறி மேலாடை அணிந்தார். பள்ளிப்படிப்பு, கல்லூரி என சென்றார். பட்டப்படிப்பு முடித்த முதல் தலித் பெண்மணி என்கிற வரலாற்றையும் அவர் தன் சாதனையில் சேர்த்துக்கொண்டார். கொச்சி அரசாங்கத்தின் கல்வித்தொகை மூலம் இச்சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது. சென்னை பல்கலையில்தான் அவர் பட்டம் பெற்றார்.
கொச்சின் அரசாங்க பள்ளியில் தாட்சாயிணி 1935-42வரை  திருச்சூர் பெரிகோதிகரா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். அங்கும் தீண்டாமையின் கேடுகளை உணர்ந்தார். தன் குடும்ப அரசியல் பின்புலம் மீது பெருமிதம் கொண்டு  கொச்சி சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். சென்னை ராஜதானி சார்பிலான அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினர்களில் ஒருவராக அங்கு இடம் பெற்றார்.
தாட்சாயிணி காந்தி, அம்பேத்கார் என்கிற இரு ஆளுமைகளின் செல்வாக்கில் தன்னை  வெளிப்படுத்திக்கொண்டார். சட்டமுன்வரைவு என்பதை தாண்டி அரசியல் சட்ட நிர்ணயசபை சிந்திக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். வாழ்க்கை குறித்த புதிய பார்வையை அரசியல் நிர்ணயசபை நாட்டிற்கு வழங்கவேண்டும் என்றார். தீண்டாமையை சட்டவிரோதமானது என்பதுடன் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கு நெறிசார்ந்த பாதுகாப்பை வழங்க உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வற்புறுத்தினார். மற்ற அனைவரும் உணரத்தகுந்த சுதந்திர உணர்வை தலித்களும் பெறவைக்க உதவவேண்டும் என்றார்.
நேரு பேசியவுடன் தாட்சாயிணி அரசியல் சட்ட நிர்ணய சபையில் பண்டைய இந்தியாவின் லிச்சாவி குடியரசு குறித்து  டிசம்பர் 19, 1946 அன்று விவாதத்தில் எடுத்துரைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சன பார்வையும் அவ்வுரையில் காணப்படுகிறது. அதே நேரத்தில் சோசலிஸ்ட் குடியரசின் மூலம்தான் தலித்களின் நலன்களை காக்கமுடியும் என்கிற தனது நம்பிக்கையும் அவர் தெரிவிக்க தவறவில்லை.
அதேபோல் சர்தார் வல்லபாய் உரையாற்றியவுடன் சிறுபான்மையினர் குறித்த தனது பார்வையை அவர் ஆகஸ்ட் 28, 1947 அன்று நடந்த விவாதத்தில் முன்வைத்தார்தனித்தொகுதி, இட ஒதுக்கீடு என்பவற்றையெல்லாம் புறந்தள்ளி உரையாற்றினார். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார அடிமைகளாக இருக்கும்வரை தனித்தொகுதி, இணைத்தொகுதி, கூடுதல் சதவீத   ஒதுக்கீடு இடங்கள் என்ற முறையெல்லாம் பயனளிக்காது என தனது உரையில் அவர் கருத்துக்களை வெளிப்படுத்தினார். அனைவருக்கும் வாய்ப்புகள் நிறைந்த பொதுவான அடையாளம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு உகந்தது என அவர் கருதினார். இல்லையெனில் பிரிட்டிஷ்காரர்கள் விட்டு செல்லும் சமூக மோதல்கள் அதிகரிக்கும் களமாக இந்தியா மாறும் என்கிற எச்சரிக்கை அவர் உரையில் இருந்தது.
 அதேபோல்  அவர் நவம்பர் 8 1949ல் அரசியல் சட்ட நகல் குறித்து கடுமையான விமர்சனத்தை எழுப்பினார். கொள்கை கோட்பாடுகளற்ற தரிசுநிலமாக நகல் இருக்கிறது என்ற காட்டமான வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. . கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசில் குவித்துக்கொள்வதை அவர் ஏற்கவில்லை. பிரிட்டிஷ் 1935 சட்டத்தில் சில மாற்றங்களை மட்டும் செய்து ஏற்பதுபோல் இருக்கிறது என்றார். கவர்னர் என்கிற பதவி தொடர்வதை சாடினார். அவசியம் எனில் 1952 பொதுத்தேர்தலில் மக்கள் வாக்கிற்குவிட்டு பின்னர்கூட முடிவெடுக்கலாம் என்றார் குடியரசு ஆவதற்கான ஜனநாயக ஏற்பாக கூட அது இருக்கும் என்றார்.

தீண்டாமை குறித்து ஷரத்து இல்லாமல் இந்திய அரசியல் சட்டம் இருக்க முடியாது என்கிற கருத்தை அழுத்தமாக தன் உரையில் முன்வைத்தவர் தாட்சாயிணி. அவர் கல்லூரி காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை அவர் உரையில் எடுத்துரைத்தார். தீண்டாமை எதிர்ப்பு எனக்கோரி நண்பர்கள் சிலர் அவரிடம் நன்கொடை கேட்டபோது, இதற்கு காரணமானவர்களிடம் மட்டும் கேட்டுப்பெறுங்கள். அதனால் பாதிக்கப்பட்ட என்போன்றவர்களால் தர இயலாது என காரணம் சொல்லி அவர் மறுத்தார்.. தனது பள்ளி, கல்லூரி காலங்களில் பொதுவிழாக்களில் பங்கேற்கமுடியாமல் தான் கட்டாயமாக ஒதுங்கி நின்ற அவலத்தை அவர் சுட்டிக்கட்டினார்.
 தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்கிற தீர்மானத்தை அவையில் நிறைவேற்றவேண்டும் என தாட்சாயிணி கேட்டபோது பண்டிதநேரு இது காங்கிரஸ் காரியகமிட்டியல்ல தீர்மானம் போடுவதற்கு என்றார். ஆனால் கண்டிப்பாக இப்பிரச்சனை மீதான அணுகுமுறையை மேற்கொள்ளலாம் என்ற உறுதியை அவர் தரவேண்டியிருந்தது.  ஆனாலும் மீண்டும் அழுத்தம் கொடுத்து  தனது கோரிக்கையையை அவர் வலியுறுத்தினார்ர். இச்சபையில் நிறைவேற்றப்படும் பிரகடனம் பயன் விளவிப்பதாக அமையும் என மிகத்துணிச்சலாக தன் கருத்துக்களை முன்வைத்தார் தாட்சாயிணி. தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றினால் மட்டும்போதாது, நடைமுறையில் நாம் எப்படி நடந்துகொள்ளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் இந்தியா உலக நாடுகளில் தலைநிமிர்ந்து நடக்கமுடியும் என்றார் அவர்.
லிச்சாவி குடியர்சில் குடிமகன் ஒவ்வொருவரும் ராஜா என்றே அழைக்கப்பட்டனர். இன்று  இடர்களுக்கு ஆளாகி பரிதவிக்கும் தலித்கள் போன்றவர் நாளை இந்தியாவில் ஆள்வோர் என்கிற நம்பிக்கையை விடுதலை இந்தியா தரவேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் எந்த பிரிவினையும் கோரவேண்டாம் என  ஹரிஜன உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர். கிறிஸ்துவம் , முஸ்லீம், சீக்கியர், அரிஜனங்கள் என எவ்வகையிலும் பிரிவினைவாதமற்ற தேசியம் உருவாக வேண்டும் என்கிற விழைவை அவர் தனது உரையில்  தெரிவித்தார். சர்ச்சில் அரிஜனங்களின் பாதுகாப்பிற்கு பிரிட்டிஷ் காரணம் என பீற்றுகிறார். அவர்கள் என்ன செய்தார்கள் என்கிற கேள்வியை தாட்சாயிணி அவையில் எழுப்பினார். தீண்டாமை ஒழிக்க சட்டம் கொணர்ந்தார்களா என வினவினார். ஏழுகோடி தாழ்த்தப்பட்டவர்களை சர்ச்சில் இங்கிலாந்து அழைத்துப்போய் எந்த பாதுகாப்பும் நல்கிவிடமுடியாது. எங்களை மைனாரிட்டி என பேசுவதை ஏற்கமுடியாது என்றார். அரிசனர்களும் மற்றவர்களும் இந்தியர்களாக இங்குதான் வாழ்ந்தாக வேண்டும். அதற்கு நெறிசார்ந்த பாதுகாப்புகள் உத்திரவாதமாக வேண்டும். எங்களுக்கு சுதந்திரம் இந்தியர்களிடமிருந்துதான் கிடைக்கவேண்டுமே தவிர பிரிட்டிஷாரிடமிருந்தல்ல என்றார்.
அதேபோல் முஸ்லீம் பிரதேசங்களில் நிறுத்தப்படும் இந்து வேட்பாளர்களில் ஏன் தலித் வேட்பாளர் ஒருவர் கூட இல்லை என்கிற கேள்வியை அவர் காங்கிரசாரிடம் எழுப்பினார். தங்களை இந்துக்களாக கருதவில்லையா என்கிற கேள்வியை அவர் தொடுத்தார். அரிசனங்கள் மற்றும் பிற இடர்ப்படும் சமூகத்தினரகளை கட்டாய உழைப்பிலிருந்து விடுபட வைப்பது பாசிச சமுதாய வடிவங்கொண்ட இந்திய நாட்டில் பொருளாதார புரட்சியாக அமையும் என்றார் தாட்சாயிணி. மத்திய அரசின் நேரடி நிர்வாக பகுதிகள் என்கிற முறையையும் அவர் பிரிட்டிஷ் மாடல் என சாடினார். கவர்னர்பதவி என்பது தேவையற்றது என்கிற கருத்து அவரிடம் இருந்தது.
தலித் தலைவர்களுல் ஒருவரான வேலாயுதத்தை அவர் காந்தி, கஸ்தூரிபாய் முன்னிலையில் வார்தா ஆசிரமத்தில் மணம்புரிந்துகொண்டார். வேலாயுதமும் தற்காலிக நாளுமன்றத்திற்கு தேர்ந்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் கருத்து மாறுபாடு கொண்டு அவர் காங்கிரசிலிருந்து விலகினார். 1952 தேர்தலில் வேலாயுதம் கொல்லம்- மாவ்லிகரா தொகுதியில்  சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். விடுதலைக்குப்பின்னர் தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டுவந்தார் தாட்சாயிணி. பாரதிய மகிளா ஜாக்ரதி பரிஷத்  என்கிற அமைப்பைத் துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார்.

                                                 ( கே ஆர் நாரயணன் திருமண வரவேற்பில்)
1971ல் அடூர் தொகுதியில் பார்கவி சி பி அய், குஞ்சாச்சன் சி பி எம் எதிர்த்து தாட்சாயிணி சுயேட்சையாக நின்று தோல்வியை அடைந்தார். அப்போது அத்தேர்தலில் சி பி அய் பார்கவி 65 சத வாக்குகளைப் பெற்று வென்றார். சி பி எம் 30 சத வாக்குகளை பெற்றது. அவரின் உறவினர் கே ஆர் நாரயணன் இந்தியாவின்  தலித் பகுதியிலிருந்து வந்த முதல் குடியரசுத்தலைவர் என்ற வரலாற்றை உருவாக்கினார்.  தாட்சாயிணி ஜூலை 20, 1978ல் இயற்கை எய்தினார். இந்திய விடுதலை கொண்டாட்டங்களில் நிற்க வேண்டிய பெயர்களில் தாட்சாயிணியும் ஒன்றாக நிலைபெறட்டும்.
.

.