https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, May 29, 2017

தேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Movement and Secularism

தேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும்
                     
                                       -ஆர். பட்டாபிராமன்

காலனிய எதிர்ப்பில் எழுந்த இந்திய தேசிய விடுதலை இயக்கம் சில முக்கிய கருதுகோள்களை உட்கிரகித்துக்கொண்டே வளர்ந்தது. விடுதலை எழுச்சிக்கு மதத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் ஒற்றுமை அதன் அவசரத்தேவையாக இருந்தது. கிறிஸ்துவத்தைவிட இந்து, இஸ்லாம் மதங்கள் எவ்வகையிலும் குறைந்தவை அல்ல என்கிற உரையாடல்  இருந்திருக்கலாம். ஆனால் முழுமையான காலனிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை கிறிஸ்துவத்திற்கு எதிரான சொல்லாடலாக தேசிய இயக்கம்  மாற்றவில்லை. தேச கட்டுமானம்,  இந்து- முஸ்லீம் ஒற்றுமை, விடுதலைக்கு பின்னர் ஜனநாயக முறையில் அரசாங்கம், வலுவான இந்திய அரசாங்கத்தை உருவாக்கி வளர்த்தல்,  மதசார்பின்மை- வழிபாட்டு சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம் அதன் நோக்கங்களாக இருந்தன. இவற்றில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களுக்கு ஒத்த  கருத்தும் இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டதிலிருந்து கிலாபத் இயக்கம் தவிர   மற்ற காலங்களில் மத கோரிக்கைகளை விடுதலை இயக்க தலைவர்கள் பொதுவாக முன்னெடுக்கவில்லை. அதே நேரத்தில் மதத்திற்கு எதிராக பேசக்கூடியவர்களாகவோ, மக்களின் மத நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என விமர்சிப்பவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. மதத்தின் பெயரால் நடக்கும் சாதியம் போன்ற ஒடுக்குமுறைகளை கூட அதற்கு அப்பாற்பட்டு தீர்க்க அவர்கள் விழைந்தார்கள். கிலாபத் கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் இந்து- முஸ்லீம் ஒற்றுமை அடையாளத்தையும் முன்நிறுத்தியது.   மதபிரிவினை வகுப்புவாத உரையாடல்களை அவர்கள்  பொதுவாக எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். அனைத்து இடது, வலது பிரிவினரின் பொதுமேடையாக காங்கிரஸ் தேசியவிடுதலை இயக்கம் இருந்தது.

 மத வகுப்புவாத அடிப்படையில் 1930களின் இறுதிப்பகுதியில்  முஸ்லீம் தேசம், இந்து தேசம் என்கிற இருதேச உரையாடல்கள் கட்டப்பட்டு பெருகத் துவங்கின. இதனால் வெறுப்பு பேச்சுக்களும், விடுதலை இயக்கத்தில் சேர்ந்து ஒத்துழைப்பதில்லை என்ற நிலைமை உருவானது. பிரிட்டிஷாருக்கு இதில் பங்கில்லாமல் இல்லை.

 நேதாஜி சுபாஷ் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் இந்துமகாசபா சார்ந்தவர்க்கோ , முஸ்லீம் லீக் தொடர்புடையவர்க்கோ  கீழ் அமைப்புகளில் உட்பட பொறுப்பு கிடையாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வகுப்புவாத பிறமத துவேஷ  எதிர்ப்பு போராட்டத்தில் மதசார்பின்மை புரிதலை சித்தாந்த இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்லாத தவறையும் விடுதலை இயக்கம் செய்தது. இதனால் வகுப்புவாத அபாயம், வன்முறைகளை நாடு பிரிவினையின்போது தடுக்கமுடியாமல் போனது.

அரசாங்கம் என்பது தனது குடிமகன்/மகளை மத அடிப்படையில் வித்தியாசப்படுத்தி பார்க்காமல் நியூட்ரல் ஆக இருக்க வேண்டும் என்கிற புரிதல் தேசிய இயக்க தலைவர்களிடம் இருந்தது. மதரீதியான சலுகைகள் கூடாது என்பதும், நாத்திகனுக்கும் இடமுண்டு என்பதும் ஏற்கப்பட்ட ஒன்றாக இருந்தது. காந்தி மததுவேஷ வாதங்களை கடுமையாக எதிர்ப்பவராக இருந்தார். வகுப்புவாதத்திற்கு எதிராக இருந்ததாலேயே அவர் படுகொலைக்கும் உள்ளானார். அரசியலிருந்து மதத்தை பிரிப்பது என்பதில் அவருக்கு ஆரம்பத்தில் உடன்பாடில்லை. மதத்தை வழக்கமான இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்ற பார்வையில் மட்டுமல்லாமல், தனிநபர் கடைபிடிக்கவேண்டிய தர்மம், ஒழுக்கம், நன்னெறி, அகிம்சை, சேவை, உண்மை என்பதாகவும் அவர் கட்டமைத்தார். அவருக்கு உண்மைதான் கடவுள் என்றானது. அரசியல்- மதம் என்கிற பிரச்சனையில் கூட அவர் ’இந்துமதம்  சார்ந்த அரசியல்’ என்பதை சொல்லவில்லை.


அடுத்தடுத்து ஏற்பட்ட அனுபவங்களையும் காந்தியடிகள் கணக்கில்கொள்ளத் தவறவில்லை. மதம் தனிநபர் விஷயம் என்று அழுத்தமாக சொல்லத் துவங்கினார். அது கடவுளுக்கும் தனிமனிதனுக்குமான உறவு என்றார். இடைத்தரகர்கள் தேவைப்படாத விஷயம் என விவேகானந்தர் பேசியதைபோல வெளிப்படையாக அவர் பேசவில்லை என்றாலும் தனிநபர் விஷயமென்றார். 1942ல் மனிதர்களை மதரீதியாக பிரித்து பார்ப்பது தன்னைப் பொறுத்தவரை பெரும் தவறு என்றார் காந்தி. 1946ல் தான் சர்வாதிகாரியாக இருந்தால் அரசும் மதமும் பிரிக்கப்பட்டேயிருக்கும் என்றார். ’எனது மதம் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அது எனது தனிப்பட்ட விவகாரம் அதற்காக நான் சாககூட துணிவேன். அரசிற்கு அதில் வேலை இல்லை’ என்ற உறுதியான கருத்தை  காந்தி வெளிப்படுத்தினார் . 1947லும் அரசு என்பது கண்டிப்பாக மதசார்பின்மை கொண்டதாகவே இருக்கவேண்டும் என்றார். வகுப்புவாதத்தை கணக்கிட்டு செய்யப்படும் அனைத்துவகை எழுத்துக்களும் தடைசெய்யப்பட வேண்டியவையே என்கிற கருத்து 1930 களின் மத்தியிலேயே அவருக்கு ஏற்பட்டுவிட்டது.


ஜவஹர்லால் நேருவும் வகுப்புவாதத்தில் சமரசம் செய்து கொள்வதை ஏற்கவில்லை. சமரசம் செய்வது தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கங்களுக்கு துரோகம் இழைப்பது என்றார். நம் நாடு மதசார்பின்மையில் எழட்டும் இல்லையேல் அதனுடன் வீழட்டும் என்றவர் நேரு. அவர் அவ்வப்போது நாட்டின் முக்கியமான விஷயங்கள் குறித்து முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார்.  1948 டிசம்பரில் தீங்கு எனத்தெரியும் ஒன்றுடன் சமரசம் செய்வது ஆபத்தானது. இந்திய தேசிய இயக்கம் எதற்கெல்லாம் நின்றதோ அதையெல்லாம் கண்டிப்பாக தவறு என ஆர் எஸ் எஸ் நினைக்கிறது என சுட்டிக்காட்டியிருந்தார். 1951ஜூலையில் நடந்த  காங்கிரஸ் கூட்டத்தில்  மதசார்பின்மை அரசை காத்திட சாகக்கூட துணியவேண்டும் என்கிற கருத்தில் அவர் பேசினார். அய்ரோப்பவில் பாசிச வடிவில் எழுந்த அமைப்புகள் மாதிரி ஆர் எஸ் எஸ்  இருக்கிறது என்றார் . ’நேருநீக்கம்’ என்பது ஏன் இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கு அதிஅவசர கடமையாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.

அரசின் மதசார்பின்மை என்பதற்கு நேரு விளக்கமளித்தார். மக்களின் மதநம்பிக்கையை அரசாங்கம் ஊக்க குறைப்பு (discourage) செய்வதல்ல மதசார்பின்மை. அனைத்து மதநம்பிக்கையாளர்களுக்கும் உரிய  சுதந்திரமது. நாத்திகர்களுக்குமான சுதந்திரமும் ஆகும் என்றார். இந்த விளக்கம் சரி எனில் கல்புர்கி போன்றவர்கள் படுகொலைக்கு என்ன நீதியுள்ளது. இன்று பட்டேல் குறித்து பேசப்பட்டுவருகிறது. பேசப்படவேண்டும்   விடுதலைக்காக போராடிய எந்த தலைவரும் இருட்டடிப்புக்கு உள்ளாக்கப்படக்கூடாது. அவர்கள் கருத்துக்கள் பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் எவரையும் இல்லாதவர்களாக (unperson)  இருட்டடிப்புக்கு உள்ளாக்குவது சரியற்ற ஒன்றுதான்..


பட்டேல் ஜூன் 1947ல் இந்து அரசு என்பதை ஏற்கமுடியாது என்றார். இந்தியாவில் இருக்கும் பிற சிறுபான்மையினர் பாதுகாப்பு நமது தலையாய கடமை என்றார். அரசு என்பது சாதி, மதம், வழக்கம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு இயங்கவேண்டிய ஒன்று என பேசினார் படேல் .  1948 டிசம்பர் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியா அதன் உண்மைப்பொருளில் மதசார்பற்ற நாடாக ஆகவேண்டும் என்றார். 1950ல் கூடிநின்ற மக்கள் மத்தியில் நாம் பாகிஸ்தான் போன்ற அரசை உருவாக்கவோ அவ்வாறு நடந்து கொள்ளவோ முடியாது. நமது சார்பின்மை நடைமுறை அமுலாக்கத்தை நாம் கண்டாகவேண்டும். இங்குள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் தாங்கள் இந்திய குடிமகன், தங்களுக்கு இந்தியருக்கான சம உரிமை உள்ளது என்கிற உணர்வை பெறவேண்டும். அப்படிப்பட்ட உணர்வை அவருக்கு நம்மால் தர இயலாமல் போனால் நாம் பேசிவந்த மரபிற்கும் நாட்டிற்கும் தகுதியற்றவர்களாவோம் என பட்டேல் பேசினார். பட்டேலுக்கு ஆக உயர சிலை எழுப்பும் அரசியல் இதைப் பொருட்படுத்தி புரிந்து கொள்ளவேண்டும் என வேண்டுகிறோம். காந்தியின் படுகொலைக்கு பின்னர் உள்துறை அமைச்சர் என்கிற பொறுப்பில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடை செய்யவும் அவர் தயங்கவில்லை.


விடுதலைக்கால புகழ்வாய்ந்த மற்றொரு தலைவரான நேதாஜி சுபாஷ் அவர்களும் வகுப்புவாதம் எதிர்த்து குரல் கொடுத்தவர். அவர் தனது இந்திய போராட்டங்கள் என்கிற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்தாளும் சூழ்ச்சியில் வகுப்புவாத சக்திகள் ஊக்கப்படுத்தப்படுவதையும், தேசிய விடுதலை இயக்கம் பலவீனப்படுத்தப்படுவதையும் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். 1938ல் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் இந்து முஸ்லீம் ஒற்றுமை, கலாச்சார பன்முகத்தன்மையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்தல், மேலும் அதை ஒவ்வொருவருக்குமான சுதந்திரமாக விரிவுபடுத்தல் வரையிலான கனவை வெளிப்படுத்தி பேசினார். விடுதலை இயக்க ஒற்றுமை என்பதற்காக மிக உயர்ந்த பன்முகத்தன்மையான கலாச்சார அழிவை ஏற்கமுடியாது என்ற பொருளில் அவர் உரை அமைந்தது.


பகத்சிங் போன்ற புரட்சிகர இளைஞர்கள் நிறுவிய நவஜவான் பாரத் சபா தனது நோக்கவரையறுப்பில் தங்கள் உறுப்பினர்கள்  வகுப்புவாத கட்சிகள், கருத்துக்களுடன் உறவுகொள்ளவேண்டாம் என தெரிவித்திருந்தது. மத வழிபாட்டு சுதந்திரம் தனிநபர் சார்ந்தது என்கிற சகிப்புத்தன்மையை வளர்த்தெடுப்பது குறித்தும் அவர்கள் பேசினர். ககோரி வழக்கில் (1925-28) சிக்கி தியாகம் செய்த ராம்பிரசாத் பிஸ்மில் தனது சகாவான அஸ்வகுல்லா கானுடன் சேர்ந்து தங்களின் கடைசி விருப்பம் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதே என்றனர். எங்களுக்கு இந்த ஒற்றுமை ஒன்றே நினைவு சின்னமாகட்டும் என்றனர் அந்த விடுதலைத் தியாக இளைஞர்கள்.

ஜின்னா, சாவர்க்கர், மாஸ்டர் தாராசிங், மெளலான சவுகத் அலி , ஹெட்கேவர், பாய் பரமானந்த் இவர்களில் பலர் தீவிர தேசிய இயக்கத்தில் நின்றவர்கள்தான். 1930களின் இறுதியில் வகுப்புவாத சிந்தனைகளை உயரே பிடித்தவர்களாக சிலர் மாறினார்கள். இந்துவோ முஸ்லீமோ எந்தவகை சார்ந்த வகுப்புவாதமாக இருந்தாலும் அவை நாணயத்தின் இருபக்கங்களாகவே அன்றிருந்த முன்னணி தேசத்தலைவர்களால் உணரப்பட்டது. கோல்வால்கர் அவருக்கு கிடைக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் மிகத்தீவிர முன்னெடுப்புகளை நாம், நமது தேசத்துவம் நூலில் வைக்கிறார். இஸ்லாமியர் இங்குள்ள பெரும்பான்மை இந்துமதம், கலாச்சாரம் ஆகியவற்றை மதித்து மரியாதையுடன் நட்ந்துகொள்ளவேண்டும். இல்லையானாலும் இங்கு இருக்கலாம். ஆனால் உரிமை கோரல் எதுவும் இல்லாமல்- குடிமகன் என்கிற உரிமையைக்கூட கேட்காமல் இருக்கலாம் என்றார். இக்கருத்து நடைமுறையாகவேண்டும் என்கிற விழைவு மிகமிக ஆபத்தானது என்பது உணரப்படுதல்வேண்டும். இந்திய நாட்டின் விடுதலை கனவுகளுக்கு உகந்த முன்னெடுப்பாக இக்கருத்து இருக்கமுடியாது என்கிற பக்குவம் இன்று மிக அதிகமாக தேவைப்படுகிறது.


தாதாபாய் நெளரோஜி முதல் காந்தி, நேரு,பட்டேல், நேதாஜி, பகத்சிங் ஈறாக தலைவர்கள், போராளிகள் இந்தியாவின் சமுக பொருளாதார முறைகள் பற்றி வெவ்வேறு வகைப்பட்டு சிந்தித்திருக்கலாம். ஆனால் மத துவேஷ அரசியலின் ஆபத்தை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருந்தனர். மக்களின் ஒற்றுமை மத அடிப்படைவாத சிந்தனையால் சிதறிவிடகூடாது என்பதில் கவனம் செலுத்தினர். மதசார்பின்மை, மதம் என்பது தனிநபர் உரிமை என்பதில் பொதுவாக தேசிய விடுதலை இயக்க தலைமை பொதுப்பார்வை கொண்டிருந்தது. அதை இன்றுள்ள அரசியல் சூழல் பின்தள்ளி பாழாக்கிவிடகூடாது என்பதை ஜனநாயக சக்திகள் காலத்தே உணரவேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது. 

Wednesday, May 24, 2017

Kindle E Book




 பட்டாபி அவ்வப்போது எழுதிய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் பற்றிய 9 கட்டுரைகள்  'இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள்'  (Fore Runners of Communist Movement) KIndle E Book ஆக நிர்மலின் உதவியுடன் வெளியாகியுள்ளது.  அமேசான் கிண்டில் ஸ்டோர்களில் இ- புக்காக இதை பெறமுடியும். கிண்டிலில் வாங்கி தரவிறக்கம் செய்திட விலை ரூ 99. கிண்டில் அன்லிமிடெட் சந்தா உடையவர்கள் இதை இலவசமாக தரவிறக்கம் செய்து படித்துவிட்டு கிண்டில் ஸ்டோரிடம் ( நூலக புத்தகம் போல) திரும்ப கொடுத்து விடலாம்.
 கிண்டிலில் பட்டாபியின் முதல் புத்தகம்  பகவத்கீதை பன்முககுரல்கள். 138 பக்கங்கள் - 946 KB பைல்  Rs 49.  இரண்டாவது புத்தகமான இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள் 143 பக்கங்கள்- 1554 KB . பைல்  Rs 99.  Amazon.in   authorதேடலில்  புத்தக விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகளுக்கு பட்டாபி எழுதிய எளிய முன்னுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

                     கம்யூனிச இயக்க முன்னோடிகள்
விடுதலை இயக்க காலத்தில் சோவியத்  புரட்சியின் தாக்கத்தில் வெளிநாடுகளில் சென்ற புரட்சிகரவாதிகளும், இந்திய இளைஞர்கள் சிலரும் இந்தியாவில் விடுதலைக்கு பின்னர் சோவியத்வகைப்பட்ட சோசலிச ஆட்சி என்கிற கனவை வைத்திருந்தனர். அதற்கு காங்கிரஸ் பேரியக்கமும், காந்தியும் வாகனமா என்பதில் அவர்கள் கொள்கை, நடைமுறை தெளிவுகளை போதுமான அளவு பெறமுடியாமல் போனது. சோவியத், பிரிட்டிஷ் வகைப்பட்ட சொல்லிக்கொடுப்புகளுக்கும், இந்தியாவில் யதார்த்த வெளியில் அவர்கள் உணர்ந்ததற்கும் ஏராள இடைவெளிகளை   கண்டனர். காங்கிரஸ், காந்தி என்பதுடன் மட்டுமல்லாது இடதுசாரிகள் என பல்வேறு போக்குகளுடன் ராய், போஸ், ஜேபி-லோகியா முரண்பாடுகளை அவர்கள் பார்த்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பணியாற்றிய இளைஞர்கள் தங்கள் மத்தியிலும்  கருத்து போரிட்டுக்கொண்டனர்.
ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களுடன் அரசியல் பயணம் நடத்திவரும் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னோடி தலைவர்கள் பற்றிய சில குறிப்புகள் இங்கு கட்டுரைகளாக தரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக இங்கு தரப்படுகிறது இதில் சுந்தரையா, ஜோதிபாசு, சர்தேசாய், அதிகாரி, முசாபர், காட்டே போன்ற பலர் இடம் பெறவில்லை., சுந்தரையா, பாசு குறித்த எழுத்துக்கள் கிடைக்கின்றன . தொடர்ந்து முன்னோடிகளை அவர்களது வெற்றிகளை, தடுக்கி தடுமாறிய இடங்களை அனுபவத்திற்காக எடுத்துக் கொள்வது இந்திய அரசியல் பயிலும் மாணவர்களுக்கு அவசியமானதாக இருக்கும். படிக்கவும் கருத்துக்களை செழுமைபடுத்தவும் வேண்டுகிறேன்.

20-5-17                               ஆர்.பட்டாபிராமன்




Friday, May 19, 2017

மெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year of Formation of Madras Labour Union)

மெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு
(Centenary year of Formation of Madras Labour Union)
                                                                 -ஆர்.பட்டாபிராமன்

இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் என பெயரும் புகழும் பெற்ற மெட்றாஸ் லேபர் யூனியன் (எம் எல் யு) பி அண்ட் சி மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கம் துவங்கிய நூறு ஆண்டுகளை நாம் நம் காலத்தில் காண்கின்றோம். 1918 ஏப்ரல் 27 அன்று சங்கம் துவங்கியதாக B P வாடியா பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டத்தில்  அறிவித்தார்.
I propose that we should form a little association to be called  the Madras Labpur Union. சங்க சட்டங்கள் என்ன, சந்தா எவ்வளவு என முடிவு எடுங்கள். முதலில் ஆயிரக்கணக்கானோர் சேரமாட்டார்கள் சில நூறில் துவங்குவோம். . எண்ணிக்கை என்பதைவிட குவாலிட்டி மிக முக்கியமானது. உங்கள் நலன் உங்கள் கையில்தான் உள்ளது. அரசாங்கம் செய்யாது. தலைவர்கள் கூட செய்யமுடியாது. பிராம்மணர்கள், பிராம்மணர் அல்லாதவர், நிர்வாகம், அரசாங்கம் என எதற்கும் depend ஆகாமல் உங்களை நம்பி செயலாற்றுங்கள் என அவர் உரை நிகழ்த்தினார்.
1850களிலேயே பருத்தி சணல் மில்கள் பம்பாய், கல்கத்தாவில் உருவாயின. 1880களில் பாக்டரி கமிஷன், பாக்டரி சட்டம் உருவாயின. இதற்காக லோகாந்தே போன்றவர்கள் முன்நின்று தொழிலாளர்களை திரட்டி போராடினர். லோகாந்தே பிராமணர் அல்லாதவர் எழுச்சியில்  மகாத்மா பூலேவுடனும் இணைந்து பணியாற்றியவர். பம்பாய் மில் தொழிலாளர் அசோசியேஷன், ஏற்படுத்தப்பட்டு தீனபந்து என்கிற பத்ரிக்கையும் வெளியிடப்பட்டது.. தொடர்ந்த 15 ஆண்டுகளில் ரயில்வே ஊழியர்களின் அமல்கமேட்டட் சொசைட்டி, அச்சக  தொழிலாளர் சங்கம், போஸ்டல் கிளப் என பல உருவாயின.
  1917ல் அலுமினியம் தொழிலாளர் சங்கம் என்ற ஒன்று மெட்றாசில் அமைந்து செயல்பட்டாலும் நவீன ஆலைத்தொழிலாளர் சங்கம் என்கிற வகையில் இந்தியாவில்  அமைந்த முதல் தொழிற்சங்கமாக மெட்றாஸ் லேபர் யூனியன் என்பதையே அனைத்துதரப்பு வரலாற்றாய்வாளர்களும் ஏற்றுள்ளனர். 1878ல் பின்னி பஞ்சாலையை ஐரோப்பியர் திறந்தனர். 1884ல் பின்னி மற்றொரு ஆலையை கர்னாடிக் மில் என்றும் திறந்தனர். சுந்தர்தாஸ் மூல்ஜி என்பார் சூளைப்பகுதியில் மில் திறந்தார்சூளை இந்திய மூலதனத்தாலும் , பி அண்ட் சி அய்ரோப்பியர் மூலதனத்திலும் நடந்துவந்தன.

1895ல் அகமதாபாத் நெசவு தொழிலாளர் வேலைநிறுத்தமும் நடந்தது. தொடர்ந்த ஆண்டுகளில் பம்பாய் கல்கத்தா சென்னை நகரங்களில் பல்வகைப்பட்ட வேலைநிறுத்தங்கள் நடந்தேறின. திலகர்  சிறைத்தண்டனை எதிர்த்து தங்களின்  அரசியல் வேலைநிறுத்தத்தையும் தொழிலாளர் நடத்திக்காட்டினர். முதல் உலகப்போர் அதன் காரணமான பொருளாதாரா நெருக்கடிகள், அவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஆங்காங்கே  தொழிலாளர்களின் போராட்டங்களை அதிகப்படுத்தின. சிறைவிதிகளின்படி தரப்படவேண்டிய வாழ்க்கை சூழலைவிட மோசமான நிலையில் 40 சத தொழிலாளர்கள் இருந்ததாக முதல் உலகப்போர் சூழல் ஆய்வு ஒன்றில் முல்கராஜ் என்பார் தெரிவித்திருந்தார். Therir scandoulous wages, seminakedness, ghastly hovels, awful surroundings are of a nature of which any state ought to be throughly ashamed என்று வாடியா எழுதினார்.
முதல் உலகப்போர் முடிந்த தருவாயில் மாத ஊதியம் ரூ 20 ஆக இருந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கான செலவோ அதைவிட ஒன்றறை மடங்கு கூடுதல் என்பதால் பொருளாதார அவதிகள் அதிகமாயிற்று. கெல்லர்ட் இன்ஸ்டிடியூட் ஆய்வின்படி குறைந்தது ரூ 22.80 ஆவது வேண்டும். அவ்வறிக்கை வீட்டுவாடகையை மிக குறைவாக ரூ 1.50 என எடுத்துக்கொண்டு மோசமாக ஆய்வுதனை வெளியிட்டுள்ளது என பிரச்சனைகள் எழுந்தன. கழிப்பிட வசதியற்ற, காற்றோட்டமில்லாத கூண்டுகளாக வீடுகள் இருந்தன. அரிசி தட்டுப்பாடு நிலவியது. ரூபாய்க்கு 41/2 படி திடிரென 3 படிதான் என விலை உயர்ந்தது.
விடுதலை இயக்கத்தில் காந்தியின்  நுழைவு, ஒத்துழையாமை இயக்கங்கள், சோவியத் புரட்சியின் தாக்கம் - சோசலிச கருத்துக்கள் என்கிற சூழல் நாட்டில் உருவாகியிருந்தது. மெட்றாசில் ஹோம்ரூல் இயக்கத்தார்  அன்னிபெசண்ட் தலைமையில் செயல்பட்டு வந்தனர். தியோசாபிகல் சொசைட்டி இதழ்களில் மக்கள் பிரச்சனைகளை எழுதி வெளியிட்டு வந்தது. பி பி வாடியா அன்னி பெசண்ட்டுடன் இணைந்து பணியாற்றிவந்தார்மெட்றாசில் பின்னி கர்நாடக மில்லில் பிரிட்டிஷ் சூப்பர்வைசர்களின் கொடுமையும் தொழிலாளர்களை மிக மோசமாக நடத்துவதும் பிரச்சனையாகி வந்தன. மதிய உணவு இடைவேளை 30 நிமிடம் என்பதைக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.
பட்டு கேசவ பிள்ளை என்பவர் தனது 22 வயதிலேயே  இந்து நிருபராக இருந்தவர். இந்தியன் பேட்ரியாட்டில் எழுதிவந்த்வர். பின்னாட்களில் சென்னை சட்டம்ன்றத்திற்கு சென்றவர்.  1885 இந்தியதேசிய காங்கிரஸ் அமைப்பு மாநாட்டில் பங்கேற்றவர். மக்களின் பிரச்ச்னைகளை பத்ரிக்கைகளில் தனது எழுத்துக்கள் மூலம்  வெளிக்கொணர்ந்தவர். 1917ல் அவர் மெட்றாஸ் டெக்ஸ்டைல் தொழிலாளர் பிரச்ச்னைகள் அவதிகள் குறித்து செய்தி எழுதியிருந்தார். இறைப்பற்றுடன் செயல்பட்டுவந்த ஸ்ரீ வெங்கடேஷ் குணாம்ருத வர்ஷினி சபாவுடன் சேர்ந்து இளைஞர்களாக இருந்த ஜி ஆர் நாயுடு, கி சி செட்டி என்பவர்கள் நியு இந்தியா பத்ரிக்கை அலுவலகத்தில் வாடியா அவர்களை சந்தித்து துணிஆலை தொழிலாளர் துன்பங்களை எடுத்துரைத்தனர்.
பின்னி ஆலைக்கருகில் இருந்த வணிக பெருமகனார்கள் செல்வபதி செட்டியார், ராமாஞ்சலு நாயுடு ஆகியோருடன் பின்னி தொழிலாளர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. மனித சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கேவலமாக தொழிலாளர் நடத்தப்படுவதை பத்ரிக்கைகளில் இடம் பெற வைத்தனர். வெங்கடேச குணாம்ருத வர்ஷணி செல்வபதி குடும்பத்தார் நடத்திய பஜனை கூடம். திருவிக அங்கு சொற்பொழிவாற்றுவார்.
பின்னியில் தொழிலாலர் நிலைமைகளை விளக்கி கூட்டம் ஒன்றிற்கு பெரம்பூர் பகுதியில் மார்ச் 2 1918ல் ஏற்பாடு செய்யப்பட்டது.. சுதர்சன முதலியார் தலைமையில் திரு வி க சொற்பொழிவாற்றினார். போலீசார் அச்சுறுத்தல் செல்வபதி அவர்களுக்கு தரப்பட்டது. அவர்கள் கேசவப்பிள்ளையை அணுகினர். அவரின் அறிவுரைப்படிதான் வாடியா அணுகப்பட்டார். 1918ல் ஏப்ரல் 13ல் அவர் தொழிலாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். திரு வி க மொழிபெயர்த்தார். மூன்றாவது கூட்டம் ஒன்றில் ஏப்ரல் 27 சனிக்கிழமை 1918ல் மெட்றாஸ் லேபர் சங்கம் என்பதை அறிவித்தனர். வாடியா தலைவர், திரு வி க துணைத்தலைவர், செல்வபதி, ராமாஞ்சலு செயலர்களாக அறிவிக்கப்பட்டது. இந்த முதல் தொழிற்சங்கம் அமைவதற்கு வர்க்க அரசியல் உணர்வு தூண்டுகோலாக அமையவில்லை என்பது தோழர் வீரராகவன்  அவர்களின் பதிவாகவுள்ளது.
பூர்னிகர் அவர்கள் For the first time in India, class consciousness had arisen among workers. The Madras Textile Labour Union seized the opportunity and enhanced the spirit of class consciousness and class solidarity என எழுதினார்- முதன்முறையாக தொழிலாளர் மத்தியில் வர்க்கணர்வின் பிரதிபலிப்பாக வர்க்க ஒற்றுமை அதிகரிப்பின் அடையாளமாக மெட்றாஸ் டெக்ஸ்டைல் லேபர் யூனியன் உருவாக்கத்தை பூர்னிகர் குறிப்பிட்டார்-  பூர்னிகர் தொழிலாளர் அமைச்சகத்தில் ஆய்வு அதிகாரியாக செயல்பட்டவர், பின்னாட்களில் டாட்டா நிறுவன ஆய்வுகூடத்தில் பணியாற்றியவர். மேற்கூறிய கருத்தை  S D பூர்னிகர்  தனது  ’தொழிற்சங்க இயக்க வரலாறு’ புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். தொழிலாளர் பிரச்ச்னைகள் குறித்து எகானாமிக் பொலிட்டிகல் வீக்லியில் பூர்னிகர் பல கட்டுரைகள் எழுதியவர்.
MLUவில் உறுப்பினர் ஆகாத தொழிலாளரே இல்லை என்ற நிலை துவக்கத்திலேயே உற்சாகமூட்டியது. பிறபகுதி தொழிலாளரும் உறுப்பினர் ஆகலாம் என்கிற பொதுத்தொழிலாளர் அமைப்பாக அத்தொழிற்சங்கம் இருந்தது. சந்தா என்கிற முறை அவசியம் என வாடியா தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஆர்பிட்ரேஷன் முறையை வாடியா கோரினார். தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கோரப்பட்டது. பிரிட்டிஷ் தொழிற்சங்க இயக்கங்களின் தாக்கத்தில் சங்கம் முறைப்படுத்தப்பட்ட ஒன்றாக நவீன தொழிற்சங்கம் என்ற பொருளில் செயல்படுத்திட முயற்சித்தனர்.
 மில் நிர்வாகம் 1918 மே மாதம் கடைசியில் தொழிலாளர்களுக்கென பலசரக்கு கடை ஒன்றை ஏற்படுத்தியது. அறை ஒன்றை ஒதுக்கி நூலகம்  ஏற்படுத்தியது. 25சத ஊதிய உயர்வு, பிரதிமாதம் 7ஆம் தேதிக்குள் சம்பளம், இன இழிவுகளை பிரிட்டன் சூப்பர்வசர்கள்  செயக்கூடாது, மதிய உணவிற்கு 30 நிமிடங்கள் கோரிக்கையாயின. வாடியா வேலைநிறுத்தம் என்பதை ஏற்கவில்லை. நிர்வாகம் லாக் அவுட் செய்தது. தொழிற்சங்கம் மலிவு உணவுக்கடைகளை திறந்தது. கடன்கள் கொடுத்து குடும்பங்களை மீட்பதற்கு சிறிய அளவிலாவது வாய்ப்புக்களை உருவாக்கியது..

முதல் தொழிலாளி வர்க்க ஸ்தாபனம் என்கிற வகையில் சமுக நலம் என்கிற சிந்தனையுடன், போர்க்குணமிக்க ஆலைத்தொழிலாளி என்கிற தன்மையையும் அச்சங்கம் வெளிப்படுத்த வேண்டியிருந்ததுசில அடிப்படையான அனுபவங்களை சங்கம் சந்திக்க வேண்டியிருந்தது. தொழிற்சங்கம் எந்த அளவு அரசியல் சார்பை கொள்ளவேண்டும். வாடியா பேசிய ஹோம்ரூல் , பிரிட்டிஷ் லேபர் கட்சியுடன் உறவு என்கிற அரசியலா, இந்திய தேசிய காங்கிரசின் பின் நிற்கவேண்டிய அரசியலா பிராமணர் இல்லாதோர் இயக்கமா, ஆதிதிராவிடர் நலன் என்கிற அம்சமா என அது உள்வாங்க வேண்டியிருந்தது. சட்டரீதியாக தீர்க்கலாம் என்றால் போதுமான பாதுகாப்பு சட்டங்கள் இல்லையே என உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியாவின் எதார்த்தமாக இருந்த (இன்னும் இருக்கின்ற) சாதிய வேறுபாடுகளை  சமாளித்து சமுகத்தில் நிலவும் வேறுபாடுகளை தொழிற்கூடத்தில் அண்டவிடாது சமமானவர்கள் என்கிற உணர்வை உருவாக்கி தொழிலாளிகளை ஒன்றுபடுத்துவது சவாலாக இருந்தது. முன்னணி தலைவர்களாக இருப்பவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை இணக்கப்படுத்தி உடைவை தடுப்பது போன்ற சவால்களையும் அனுபவங்களையும் அது பெறவேண்டியிருந்தது.
வீரராகவன் அவர்களின் ஆய்வில் வந்த மெட்றாஸ் லேபர் வரலாற்றின்படி 1918ல்  பின்னிஆலையில் 67 சதம் சாதி இந்துக்கள், 20 சதம் ஆதிதிராவிடர்கள், 8 சதம் கிறிஸ்துவர், 5 சதம் இஸ்லாமியர் இருந்தனர். 1921 வேலைநிறுத்தத்திற்கு பின்னர் ஆதிதிராவிடர் 39 சதமாகவும், சாதி இந்துக்கள் 46 சதம் என்கிற மாற்றத்தை ஆலை நிர்வாகம் உருவாக்கியதுசூளை மில்லில் சாதி இந்துக்கள்தான் அதிகம் இருந்தனர்பின்னி ஆலைத்தொழிலாளியைவிட சூளைத் தொழிலாளி சம்பளம் குறைவாக இருந்தது.
1918ல் சங்கம் வருவதற்கு முன்னரே பின்னியில் போராட்டங்கள் நடக்காமல் இல்லை. ஞாயிறு வேலை மறுப்பு,, உற்பத்தி பழுதுகள் தொடர்பாக அடிக்கடி நடக்கும் சம்பளவெட்டு எதிர்ப்பு என போராட்டங்கள் எழுந்தன. அவை காவல்துறை உதவியுடன் முறியடிக்கப்பட்டன. சங்கம் அமைந்தபின் நடைபெற்ற இயக்கங்களை கண்ணுற்ற கவர்னர் பெட்லண்ட் கூட்டங்களில் பங்கேற்று நிலைமைகளை மோசமாக்காதீர் என்கிற எச்சரிக்கையை வாடியாவிடம் தந்தார். பேச்சுவார்த்தை மூலம் குறைகளை சரி செய்வீர் என அறிவுறுத்தினார். வாடியா மேற்பார்வையில் கோரிக்கை சார்ட்டர் தயாரிக்கப்பட்டது. 20 சத உயர்வு (சில ஆய்வாளர் 25 சதம்) எனவும், மதிய இடைவேளை 40 நிமிடம் , (சிலர் 30 நிம் இடம் என), ஊதிய வெட்டு கூடாது என்பன கோரிக்கைகள். மெட்றாஸ் மெயில் போன்றவை தொழிலாளர்களை தூண்டும் வாடியாவை தண்டிக்கவேண்டும் என்றது. நிலைமைகளில் மாற்றம் ஏற்படாததால் வேலைநிறுத்தம் என்ற குரல் வரத்துவங்கியது. தொழிலாளர் கூட்டம் 1918 செபடம்பர் 25ல் கூட்டப்பட்டது. வேலைநிறுத்தம் என  ஏதும் முடிவாகவில்லை. ஆனால் நிர்வாகம் அக்டோபர் இறுதியில் கதவடைப்பு செய்து பழிவாங்கியது. தொழிலாளர் சரியான வேலைநேரம் என்பதை ஏற்றால்தான் ஆலை இயங்கும் என்றது நிர்வாகம்.


வாடியா வேலைக்கு செல்வீர் என அறிவுறுத்தினார். சங்கத்தலைமைக்கு கட்டுப்பட்டு பணிக்கு  சென்றனர். நவம்பர் மாதம் ஆலைக்குள் ஏற்பட்ட கைகலப்பை காரணமாக்கி கதவடைப்பு செய்த்னர். சங்கம் இதில் தனக்கு பொறுப்பில்லை என விளக்கம் தந்தாலும் நிர்வாகம் கேட்க மறுத்தது. காந்தி வந்தால் பிரச்சனை தீரும் என்கிற கருத்து வலுப்பட்டது. வாடியாவும் அழைப்பை விடுத்தார். காந்தி வரமுடியவில்லை. சி எஃப் ஆண்ட்ரூஸ் ஆண்டு இறுதியில் வந்தார். பேச்சுவார்த்தைகளில் சமரசம் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ரூஸ் வெளியார் எனச் சொல்லி முதலில் நிர்வாகம் பேசத்தயங்கியது பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆலையில் அய்ரோப்பியர் பாதுகாப்பு, கிராஜுட்டி மீட்பு , பழிவாங்கல் இல்லாமை என்பன பொதுவாக ஏற்கப்பட்டன. அய்ரோப்பியரை தாக்கியவரை நிர்வாகம் வேலைக்கு எடுக்க மறுத்தது.