https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 29, 2021

காந்தி -- மாவோ

 

காந்தி -- மாவோ

                                   -ஆர். பட்டாபிராமன்

காந்தியடிகளை மார்க்ஸ் லெனினுடன் ஒப்பிட்டதுபோல் மாவோவுடனும் ஒப்பீடு செய்யலாம். இந்தப்பணியை Mao Tes Tung and Gandhi  என்கிற ஆக்கத்தின் மூலம் Jayantanuja Bandyopadhyaya செய்துள்ளார்.



இந்த ஆக்கத்தில் ஜெயந்தனுஜா காந்தியின் சத்தியாகிரகம் மாவோவின் மக்கள் யுத்தம் குறித்தும், மாஸ்லைன் மற்றும் நிர்மாணத்திட்டம் குறித்தும் ஆய்விட்டுள்ளார். இரு பெரும் ஆசிய ஆளுமைகளான மாவோ மற்றும் காந்தி ஆகியவர்களின் செல்வாக்கு எப்படி பலரிடம் சென்றடைந்தது என்பதை குறித்தும் ஆசிரியர் விவாதிக்கிறார். சமூக மாற்றத்திற்கு இந்தியாவில்- சீனாவில் குறிப்பிட்ட சூழலில் இருவரின்  பங்களிப்பும் விவாதிக்கப்பட்டுள்ளது.

 காந்தி மாவோவைவிட 24 ஆண்டுகள் வயதில் மூத்தவர். ஆனால் சொந்த நாட்டின் அரசியல் மற்றும் நிகழ்வுகளில் அவர்கள் சமகால நுழைவை பார்க்கமுடிகிறது. விடுதலைக்குப் பின்னர் 5 மாதங்களில் காந்தி படுகொலை நிகழ்ந்துவிடுகிறது. மாவோ சீனப்புரட்சியின் நாயகனாக எழுந்து 1976ல் மறையும்வரை அந்நாட்டின் உயர்பீடத் தலைவராக- ஆட்சிபுரிந்தவராக இருந்து மறைந்தார்.

இரு நாடுகளிலும் 80 சத மக்கள் விவசாயம் சார்ந்தவர்கள் . சீனாவில் ஜப்பான்- கோமிண்டாங் வீழ்ச்சியில் மார்க்சிய- லெனினிய வகைப்பட்ட சீனக் கட்டுமானம் என மாவோ செயல்பட்டால், பிரிட்டிஷாரை வெளியேற்றி தன் இந்திய நிர்மாணத்திற்காக காந்தி செயல்பட்டார். இருவருக்குமே கல்வி அறிவு இல்லாத பெரும்பான்மை மக்களை, கிராமப்புற விவசாயிகளை திரட்டுவது என்பது இயக்க ஆதாரமாக இருந்தது.

சீன கம்யூனிச இயக்கத்தில் மத்தியதர வர்க்க அறிவுத்தலைமையும் வளர்ந்து கொண்டிருந்தது. இந்தியாவிலும் மேற்கத்திய கல்வி பின்புலம் கொண்ட மத்தியதர வர்க்கத்தலைமையின்  வளர்ச்சி இருந்தது. இந்த அறிவுத்தலைமையை மக்கள் நல செயல்பாட்டில் முழுவீச்சாக இறங்கவைத்த வரலாற்றுக் கடமையை காந்தியும் மாவோவும் ஆற்றினர்.

சர்வதேசியம்- மானிட சகோதரத்துவம்  என்ற விரிந்த பார்வையில் சீனத்தேசியம்- இந்திய தேசியம் என்கிற எல்லையில் நின்று இருவரும் செயலாற்றினர். அனைத்து சூழலும் இருவருக்குமே ஒரே மாதிரி ஒன்றுபோலவே அமையவில்லை. மார்க்சியர்கள் மாவோவின் வழியை வர்க்கப்போராட்டவழி என ஏற்றால் காந்தியின் வழியை வர்க்க சமரசவழி என்றே  சொல்வர்.

விவசாய எழுச்சிகள் அதிகம் நடந்த பூமியாக சீனா இருந்தது. விவசாயிகள் விழிப்புணர்வும் மேம்பட்டதாக இருந்தது. உற்பத்தி திறன், வாழ்க்கைத்தரம் இந்திய விவசாயிகளை ஒப்பிடுகையில் சற்றுக் கூடுதலாக இருந்தது. இந்திய அம்சங்கள் காந்தியின் அகிம்சைவழி போராட்ட சூழலுக்கு களம் அமைக்க அவருக்கு உதவின. மாவோவிற்கு அமைந்த சூழலைவிட சற்று கடினமான சூழலே மக்களை திரட்டுவதில் காந்திக்கு அமைந்தன என்பது ஜெயந்தனுஜா அவர்களின் மதிப்பீடாக இருக்கிறது.  இந்தியாவின் கிராமங்களுக்கு ஆட்சியாளர் எவரே ஆனாலும் தங்களின் தேவைகளை ஓரளவிற்கு சுயமாக நிறைவேற்றிகொள்ளும் நீண்ட கால வரலாறிருந்தது.

புறச் சூழல் என்பதில் பலவகை இணை அம்சங்கள் இருந்தால் கூட அதனை கருவியாகக்கொண்டு செயல்படும் தனிநபர்  பாத்திரம் அவரது மனோபாவம் என்பதும் ஓரளவிற்கு  தனித்துவ அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். மாவோவின் குடும்ப பின்னணி, கல்விச் சூழல், புரட்சிகர இயக்கத்தில் கற்ற பாடங்கள்  என்பதும், காந்தியின் குடும்பப் பின்னணி. கல்விச் சூழல், தென்னாப்பிரிக்க அனுபவங்கள், இந்திய விடுதலை இயக்க சூழல்  என்பதும் ஒருபடித்தானவையல்ல. இருவரும் மக்களை அணுகினர். அவர்களை அச்சத்திலிருந்து விடுவித்தனர். ஒருவர் ஆயுத வழி என்றால் மற்றவர் அகிம்சை வழி என்றார். இருவராலும் தங்கள் வழியின் மேன்மை  சிறப்பு குறித்து தங்கள் மக்களிடம் உரையாட முடிந்தது.

சீனாவில் மாவோவின் உரையாடலை  செவிமடுத்ததால் சீனப்புரட்சி 1949ல் எழுந்தது. காந்தியின் உரையாடல் இந்திய மக்களை கவ்விப்பிடித்தது. இந்திய விடுதலை 1947ல் அறிவிக்கப்பட்டது. மாவோ தனது இளம் வயதிலேயே மார்க்சிய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். காந்தியோ டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ, பகவத்கீதை , குரான், மலைப்பிரசங்கம் போன்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.  காந்தி தனது முதுமைக்காலத்தில் மார்க்சிய எழுத்துக்களை படித்தாலும் அவற்றால் ஈர்ப்பிற்கு உள்ளாகவில்லை.

மார்க்சிய கருதுகோளில்  socialised production- socialised humanity  என்பது மிக முக்கியமானது.  civil society என்பதோ பிரஞ்சு புரட்சியின் முழக்கங்களோ சுரண்டல் வர்க்கத்திற்கே சாதகமாக இருந்த அனுபவத்தை மார்க்சியம் எடுத்துக்கொண்டது. திறமைக்கேற்ற திறனுக்கேற்ற உழைப்பை பெற்றுக்கொண்டு ஓவ்வொருவரின் தேவைகளை பூர்த்தி செய்யும் கம்யூனிச அமைப்பை மார்க்சியம் முன்மொழிந்தது.

தனிநபர்கள் நெறிகளுடன் அகிம்சவழியில் உண்மைக்கும் நீதிக்குமாக நடைமுறையில் நின்று  செயல்படும் வகையில்அனைவரையும் உள்ளடக்கும் சமத்துவம்என்கிற இலட்சிய சமுதாயம் பற்றி காந்தி பேசினார். அவரது சுயராஜ்யம்  அரசாங்கம் சார்ந்த விஷயமட்டுமல்ல- சமூகத்திற்கும்  தனிநபருக்குமான  சுயராஜ்யம் என்பதாகும்.

மாவோ தனது அனுபவத்தில் சோசலிச புரட்சியின் பொருளாதார கட்டுமானத்திலும் வர்க்கப் போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக அரசியல் மற்றும் சித்தாந்த போராட்டங்களாக அவை எழும் என்றார். நிலைமறுப்பின் நிலைமறுப்பு என முரண்பாடு குறித்து மாவோ பேசியது போல் காந்தியின் இயக்கவியலிலும்  negation of negation இருந்தது என ஜெயந்தனுஜா சொல்கிறார்.

காந்தி முரண்பாடு- நிலைமறுப்பு என்றெல்லாம் சொல்லாடல் செய்திருக்கமாட்டார். ஆனால்  Rejection of untruth is necessary for the vindication of truth  என அவர் பேசுவதைப் பார்க்கலாம். பெரும் முதலாளிகளும் ஏழை உழைப்பாளர்களும் உள்ள சமூகம் நீடிக்கப்பட்டால் அங்கு அகிம்சை சாத்தியமில்லாமல் போய்விடும் எனவும் அவர் பேசினார். மாற்றாக தர்மகர்த்தாகொள்கையை முன்வைத்தார்.

 மாவோ பகை முரண்பாடு- பகையற்ற முரண்பாடு என விளக்குவார். சமூகத்தில்  சுரண்டல் ஒடுக்குமுறை வழிப்பட்டோ அல்லது எதிரிகளை அழித்தொழிக்கும் வழியிலோ தனது பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளமுடியாது எனக் காந்தி கருதினார். மக்களுக்கு சுயராஜ்யம் வன்முறை வழிப்பட்டு வரவே வராது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.  A non violent revoultion is  not a programme of seizure of power but it is a programme of transformation of  relationships  என காந்தி பேசினார்.

முதலாளிகளியோ நிலப்பிரபுக்களையோ  அழித்து ஒழிப்பதல்ல பிரச்னை. அவர்களுக்கும் வெகுஜனங்களுக்குமான உறவை எவ்வளவு ஆரோக்கியமானதாக, தூய்மை நிறைந்ததாக மாற்றமுடியும் என்பதுதான் பிரச்னை என்பது காந்தியின் உரையாடல். இதை மார்க்சியர்கள் பொதுவாக  சந்தேகத்துடன்தான் பார்த்தனர். வாய்ப்பில்லை என நிராகரிக்கவும் செய்தனர். காந்தியோ போல்ஷ்விசம் மற்றும் மேற்கு ஜனநாயகத்தை விமர்சனக் கண்கொண்டே பார்த்தார். ஃபாசிஸ்ட்களையும், நாஜிகளையும் அவர் 1942ல் லூயி பிஷருடன் பேசிக்கொண்டிருந்தபோது விமர்சித்தார்.

 peoples'war- Mass Line  என்பதில் நம்பிக்கை வைத்து  மார்க்சியர்கள்- மாவோ செயல்பட்டிருந்தால் ,  காந்தி மாற்றாக தனது சத்தியாகிரகம்- ஆக்கபூர்வ நிர்மாணத் திட்டம் முன்வைத்து மக்களை திரட்டினார்.

Socialistic consciousness of the individual would follow from the socialization of the means of production  என்பது மார்க்சியர்களின் கருதுகோள். மாவோவும் உற்பத்தியில் ஈடுபடும்போது புரட்சிகர உணர்வைப் பெறமுடியும் என்பார். ஆனால் கலாச்சார புரட்சியின் தருணத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் உற்பத்தி என்பதுடன் நில்லாமல்  personal moral effort  குறித்துப் பேசத்துவங்கினார். அவரது மேற்கோள்கள் தனிநபர்களின் புரட்சிகர உணர்வு மட்டத்தை உயர்த்தும் எனவும் சொல்லப்பட்டது.

காந்தி புரட்சியின் மதிப்புகளைவிட மதிப்புகளின் புரட்சியை கொண்டாடினார் என்பதை அறிவோம்.     உணவையும் அவசியமான தேவைகளையும் அவரவர் தங்கள் உழைப்பின் மூலம் பெறவேண்டும் என்றவர் காந்தி (Bread labour divine law). தான் திரட்டும் மக்களிடம் சுயக்கட்டுபாட்டையும் நேர்மையையும், உண்மைக்கும் கடவுளுக்கும் நெருக்கமாக இருப்பதையும் காந்தி எதிர்பார்த்தால், மாவோ அம்மக்களின் இராணுவக் கட்டுப்பாடு, அரசியல் மற்றும் சோசலிச உணர்வுகள் என்பதை எதிர்பார்த்தார். மாவோ கூட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்கிற நேரிடை சொல்லாடலுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் என்பதை முன்வைத்தார்.

காந்தியின் சத்யாகிரகிகள் போராட்டம் மற்றும் நிர்மாண திட்டத்திலும் ஈடுபடுபவர்களாக இருந்தனர். இரண்டிற்குமான  இணைப்பு அங்கு முக்கியமானது.

மாவோ எட்கர் ஸ்னோவிடம் உரையாடும்போது 1965ல் ஒடுக்கப்பட்டோரின் புரட்சிகர இயக்கத்தினர்தான் மக்கள் யுத்த பாதையை மேற்கொள்ளமுடியும். அது  ’would not work in reverse’  என விளக்கினார்.. காந்தியின் சத்தியாகிரக பாதையும் ஒடுக்கப்பட்டோருக்கான ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது. இராணுவமோதல்களில் அழித்தொழிப்பு என்பது அடிப்படையானது என லின் பியோ விளக்கினார். ஆனால் காந்தி  non violent  non coopeartion  என்பதை முன்வைத்தார்.

மக்கள் ஒத்துழைப்பு இருக்கிறவரைதான் அரசாங்கம் ஆளமுடியும் என்பதை மக்களுக்கு புரியவைப்பதில் காந்தி கவனம் செலுத்தினார்.  Disobedience of the laws of an evil state is therefore duty  என அவர் சொல்லித் தந்தார். உப்பு சத்தியாகிரக வேள்வியை நடத்தியும் காட்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட 78 சத்தியாகிரகிகளுடன் 241 மைல் உப்பு யாத்திரையது.  மாவோ தனது  Long March  எனப்படும் நீண்ட பயணத்தை காந்தியின் உப்பு யாத்திரைக்கு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 1934ல் 2000மைல்கள் நடத்திக் காட்டினார்.

 இருவரின் அணுகுமுறையை விவாதித்த ஜெயந்தனுஜா கீழ்கண்ட ஒப்பீட்டை சுருக்கமாக தருகிறார்

While People's war is essentially the art of the organised destruction of other human beings representing the enemy, through relatively inferior weapons, satyagraha is that of confronting the opponent with a moral challenge and psychological situation. ..People's war is the function of an essentially military machine"

 எதிராளிகளின் பலம் வாய்ந்த ஆயுதங்களை தனது துன்பங்களை தாங்கிக்கொள்ளும் ஆன்ம பலத்தால் செயலிழக்க வைப்பது என்பது சத்தியாகிரகப்பாதை . மக்கள் யுத்தம் சுரண்டுகிற கொடூர முதலாளித்துவ நிலபிரபுத்துவ சமூக முறையை தூக்கி எறிய பயன்படுத்தப்படும் போராட்டவகையாக இருக்கலாம். புதியவகையிலான பாட்டாளிவர்க்க அல்லது மக்கள் ஜனநாயக சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அதைப் பயன்படுத்த அங்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவசியம் இருக்காது என்கிற நம்பிக்கை அங்கே புரிதலாக வைக்கப்படும். சத்தியாகிரகம் சுயராஜ்ய சர்க்கார் அமைந்தாலும்- விடுதலைக்குப் பின்னரான அரசுடன் அவசியமானால் ஒத்துழையாமை என்பதற்கு இடம் கொடுக்கும் முன்மொழிவாக இருந்தது.

1943ல் மாஸ் லைன்  (Mass Line)  பற்றி மாவோ கீழ்கண்டவாறு விளக்கினார்.

கட்சியின் நடைமுறை வேலைகளுக்கு வெகுஜனங்களிடமிருந்து வெகுஜனங்களிடம் பணியாற்ற தலைமை வரவேண்டும். மக்களிடமிருந்து சிந்தனைகளை உள்வாங்கி செரித்து அவற்றை திடப்படுத்தி சித்தாந்தமாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தல் வேண்டும். அவர்களை கவ்விப்பிடிக்கும் சிந்தனைகளாக அவற்றை முன்வைக்கவேண்டும்.. இந்த நிகழ்வு தொடர் நிகழ்வாக மீண்டும் மீண்டும் நடைபெறவேண்டும்.  இதைத்தான் மார்க்சிய அறிவுகோட்பாடாக சொல்கிறோம்.

 நிர்மாணத்திட்டம் என்பது செயல்படுவதில்தான் முகம் கொள்ளும். அதை கட்டவிரும்பும் நாம் அது சொர்க்கத்திலிருந்து வந்துவிடும் என எண்ணலாகாது. அவசரமும் ஆகாது. செங்கல் செங்கல்லாக வைக்கப்பட்டு எழும்பும் கட்டிடம் போல செயலாக்கம் தேவை என்கிற அறிவுரை காந்தியிடமிருந்து வந்தது. மாஸ்லைன் என்பது மார்க்சிய லெனினிய வகைப்பட்டு என்ற பொதுவான அம்சத்தில் திரட்சியைக் கோரினால், காந்தியின் நிர்மாணத்திட்டம் தீண்டாமை, மதுவிலக்கு, காதி, அடிப்படை கல்வி, கிராம சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், தாய்மொழிக் கல்வி போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய வேலைத்திட்டமாக அறிவிக்கப்பட்டது.

 கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மூலம் கிராமப்புற மக்களை திரட்டி பொருளாதாரகட்டுமானம் என மாஸ்லைன் செயல்பட்டால், சத்தியாகிரகிகளை முழுமையாக இறக்கி மக்களுடன்  அவர்களின் தேவை மற்றும் மாற்றங்களுக்கு நிற்கச் செய்வதாக நிர்மாணத்திட்டம் இருந்தது எனலாம். சீனாவில் நிலச்சீர்திருத்தம் மய்யம் கொண்டது. வெகுஜன வழி என்பதற்கு 90 சத விவசாயிகளை இணைக்கவேண்டும் என மாவோ கட்சி ஊழியர்களிடம் எடுத்துரைத்தார். 1957ல் பெரும் பாய்ச்சல் மூலம் 15 ஆண்டுகளில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு இணையான பொருளாதார கட்டுமானம் முன்மொழியப்பட்டது. 10 கோடி விவசாயிகள் மாபெரும் உழைப்பை நல்கி பெரும் சாதனைகளை செய்தனர். காட்டப்பட்ட அதிஅவசர நடவடிக்கைகளால்  நடந்த தவறுகளை சில ஆண்டுகளிலேயே சரி செய்துகொண்டு மாஸ்லைன் கொள்கையை அவர்கள் தொடர்ந்து அனுசரித்தனர்.

கிராமங்களின் சுயதேவையை பூர்த்தி செய்திடும் வகையிலும்  வறுமை- வேலையின்மையை போக்கும் வகையிலுமான திட்டமாக நிர்மாணத்திட்டத்தை காந்தி பார்த்தார். பெருந்தொழிற்சாலைகள்,  விவசாயத்திலும் எந்திரமயம் என்பது சீனாவில் ஏற்கப்பட்டு அமுலானது.  நேருவின் ஆட்சியில் தொழில்மயம், பொதுத்துறை வளர்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்டன. காந்திய மாதிரி என்பது நடைமுறையில் வராத நிலையை விடுதலை இந்தியா கண்டது.

ஜெயந்தனுஜா எழுதுகிறார்  Gandhi was not a materialist in any sense and was not even familiar with the intricacies of the Marxist theory of knowledge and yet he argued like Mao that true  knowledge and education could only result from particiaption in productive labour.  காந்திக்கு மார்க்சிய கோட்பாடுகள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் உழைப்பில் ஈடுபடுவதன் மூலமே அறிவும் கல்வியும் பலனளிக்கும் என அவர் மாவோ பேசியது போலவே பேசியதை காணலாம்.

  மனிதன் சக மனிதர்களுடன் சேர்ந்து செய்திடும் கூட்டுழைப்பின் மூலம் கற்றல் என்கிற ஏற்பு இரு தலைவர்களுக்கும் இருந்தது என்பதை ஜெயந்தனுஜா தெரிவிக்கிறார். இரு தலைவர்களும் உற்பத்திக்கு துணைநிற்கும் கல்விமுறைக்காக நின்றதையும் பார்க்கிறோம்.

 சீனாவில் ஏற்றத்தாழ்வு என்கிற பிரச்னையானாலும் மதம் குறித்த பிரச்னையானாலும் மாவோ திறம்பட தீர்த்தார் என்பதை ஜெயந்தனுஜா சொல்கிறார். காந்தி வாழ்நாள் முழுதும் தீண்டாமைக்கொடுமையை எதிர்த்து பேசினாலும் சாதி பிரச்னை என்பது இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. மதமோதலுக்கு எதிராக இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக காந்தி தன்னை அர்ப்பணித்தாலும் இந்தியாவில் இந்த பிரச்னை அவ்வப்போது கொதிநிலையை எட்டுவதையும் பார்க்கிறோம். மாவோவை ஒப்பிடுகையில் ஏற்றத்தாழ்வு- வகுப்புவாதம்  பிரச்னைகளில் காந்தி வெற்றி பெறவில்லை என்பது ஜெயந்தனுஜா மதிப்பீடாக இருக்கிறது.

மாவோ துவக்கத்திலிருந்தே செஞ்சேனையின் கடமைகளை வரையறுத்து வந்தார். மக்களை திரட்டுவது, ஆயுதப்பயிற்சி அளிப்பது, அவர்களுக்கான புரட்சிகர அரசியல் பயிற்சியை கொடுப்பது- கட்சி அமைப்புகளை கட்டுவதற்கு கூட துணை நிற்கவேண்டிய கடமைகள்  உணர்த்தப்பட்டன. 1938ல் அதன் எல்லையையும் மாவோ தெளிவுபடுத்தினார்.  Our principle is that the party commands the Gun, and the gun must never be allowed to command the party.   ஆயுதம் ஏந்திய சேனையின் எல்லையை வரையறுக்கும் துல்லிய வார்த்தைகளாக மாவோ வெளியிட்டதைப் பார்க்கிறோம்.

 சீனா மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் பொதுவாக விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதற்குப் பொருள் அவர்களுக்கு சுதந்திர உணர்வு இருக்கிறது என்பதல்ல.  If masses have any freedom, it is only the freedom to coopearte with the party leadership and to implement the government policies decided by it  என ஜெயந்தனுஜா எழுதுகிறார்.

 முடிந்தவரை காந்தி அதிகார வெளியிலிருந்து தூரமாக தன்னை வைத்துக்கொண்டார்.  காந்தியின் நிர்மாணத்திட்டத்தில் மக்கள் சுயவிருப்பத்துடன் செயல்படுதல்- எந்தவித முற்றதிகார மய்யத்தின் கட்டுப்பாட்டையோ அதிகார குரலுக்கு செவிமடுக்காமலோ செயல்பட வழி இருந்தது. ருஷ்யா- சீனா அனுபவங்களில்  suppressing  the activities of counterrevolutionaries, liquidation  என்ற பெயரில் மனித உயிர்கள் பறிப்பு என்பது நடந்தேறியது.  லட்சக்கணக்கானவர்கள் பாதிப்பு குறித்து யுனஸ்கோ  1955ல் தகவல் வெளியிட்டது. மில்லியன் கணக்கானவர்கள் அரசியல் கைதிகளாக அவதிக்கு உள்ளான செய்திகள் வெளியாயின. பெரும்பான்மை மக்களின் நலன்காக்க சர்வாதிகாரம் என்றாலும் இவை குறித்த பெரும் விமர்சனங்கள் எழத்துவங்கின.

அறிவியல் தொழில்நுட்பத்தின் பிடியில் அடிமையாக மனிதன் சிக்கிவிடகூடாது என்பதை காந்தி அழுத்தமாக சொல்லிவந்தார். சீனா  தொழில்நுட்பம் மிகுந்த பெரும் பொருளாதார நாடாக நிற்கிறது. இந்தியாவும் பொருளாதார வல்லரசு கனவுகளில் பேரளவு உற்பத்திமுறையை பெரும் தொழில்நுட்பத்தை நம்பி வளர்ந்து வருகிறது. மானுட பொருளாயத தேவைகள் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் காந்தியின் அவசியம் உலகினரால் உணரப்பட்டு வருகிறது .

 

Ref

Mao Tes Tung and Gandhi by Jayantanuja Bandyopadhyaya

Sunday, April 18, 2021

காந்தி – லெனின்

 

காந்தி – லெனின்

                    ஆர். பட்டாபிராமன்

காந்தியடிகள் தான் வாழ்ந்த காலத்திலும்  தொடர்ந்தும் பல்வேறு உலகத்தலைவர்களுடன் – ஆளுமைகளுடன் ஒப்பிடப்படுவதை பார்க்கமுடியும். மார்க்ஸ் உடன் காந்தியை ஒப்பிட்டு மஷ்ருவாலா எழுதினார். விநோபாபாவே அவர்கள் அதில் முன்னுரை தந்திருப்பார். காந்தி மார்க்ஸ் ஒப்பீட்டை காந்தியைக் கண்டுணர்தல் என்கிற எனது முந்திய ஆக்கத்தில் பல்வேறு கட்டுரைகளில் இடம் பெற செய்துள்ளேன். மார்க்சியம் - லெனினியம் என்கிற அளவிற்கு மார்க்ஸ் உடன் இணைப்பைப் பெற்ற லெனினுடன் காந்தியை ஒப்பிடுதல் என்பது இங்கே முயற்சிக்கப்பட்டுள்ளது.



காந்தியையும் லெனினையும் ஒப்பிட்டு 1920களில் இரு புத்தகங்கள் வந்தன. ஒன்று மார்க்சிய – சோசலிச சிந்தனைகொண்ட இந்திய இளைஞர்  தோழர் டாங்கே (1899-1991) எழுதி 1921ல் வெளியான புத்தகம்  Gandhi VS Lenin . இப்புத்தகம் அளவில் சிறியது. இந்த 2021 ஏப்ரலில் அப்புத்தகம் நூற்றாண்டைக் கண்டது.

  அடுத்த புத்தகம் ரெனி ஃபுலோப் மில்லர் எழுதி 1927ல் வெளிவந்த லெனினும் காந்தியும் (Lenin and Gandhi) என்பதாகும். அளவில் பெரிய புத்தகம். ரெனி ஃபுலோப் மில்லர்(1891-1963) வியன்னாவில் செயல்பட்ட கலாச்சார வரலாற்றாசிரியர். மில்லர் எழுதியதை இந்திய வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா நல்லவகையில் மதிப்பிட்டுள்ளார். இரு ஆளுமைகளையும் உச்சங்களாக  மில்லர் மதிப்பிட்டதை குஹா தெரிவிக்கிறார்.




Gandhi VS Lenin புத்தகத்தை 1921ல் தோழர் டாங்கே எழுதியபோது அவருக்கு வயது 21 . இளம் தேசபக்தரின் துணிவான செயலாக இவ்வாக்கத்தைப் பார்க்கலாம். காந்தியின்ஒத்துழையாமை இயக்கத்தை கொண்டாடியவர்கள் ருஷ்ய போல்ஷ்விக்குகளுக்கு இணையான போராட்டம் என்று வர்ணித்ததை ஏற்கமுடியாமல்  இரண்டிற்குமான வேறுபாடுகளை இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற அவாவில் டாங்கே அதை எழுதினார். டாங்கே ஒத்துழையாமையில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பைவிட்டு வெளியேறியவர்.

இந்த புத்தகம் லெனின் பார்வைக்கு சென்றதாகவும் , இந்தியர்களிடம் மார்க்சிய உணர்வு பெருகி வருவதாக லெனின் குறிப்பிட்டதாகவும் செய்திகள் உள்ளன.

திலகரின் தொண்டனாகவும் சோவியத் புரட்சி குறித்து அறிந்தவராகவும் இருந்த டாங்கேவிற்கு மாறுபட்ட காந்தியின் போராட்டம்- சிந்தனைமுறை விமர்சனம் செய்யப்படவேண்டிய ஒன்றாக இருந்தது.  அதே நேரத்தில் அதன் வன்முறைக்கு எதிரான உறுதிப்பாட்டை, முதலாளித்துவம்  சுரண்டலுக்குரிய முறை என்கிற காந்தியத்தை முற்றிலுமாக நிராகரிக்கமுடியாத நிலையும் இளம் டாங்கேவால் உணரப்பட்டிருந்தது

 மார்க்சிய கருதுகோள்களான உற்பத்தி உடைமை, உபரிமதிப்பு ஆகியவற்றை டாங்கே விளக்குகிறார். சோசலிச சமுக மாற்றத்திற்கு ஆயுதம் தாங்கிய புரட்சி தவிர சமாதான வழிகளை பேசுவது அறீவீனம் என்பதை ஆரம்ப பக்கங்களில் சொல்கிறார்.

 இந்திய முதலாளிகள் மூன்றுவகை பாவங்களை செய்கின்றனர். அந்நிய கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கின்றனர். இந்திய விவசாயிகளையும், கூலிக்காரர்களையும் சுரண்டுகின்றனர். அய்ரோப்பியர்களுக்கு ஆதரவாக நின்று நமது நாட்டின் வறுமை பெருக்கத்திற்கு துணை நிற்கின்றனர். எனவே இரு கடமைகளாக அந்நிய நுகத்தடியிலிருந்து விடுதலை, முதலாளித்துவத்தை அப்புறப்படுத்தல் ஆகியவை எழுகின்றன. இதற்கு வழி முறை தான் என்ன? என்கிற கேள்விக்கு டாங்கே விடைதேட முயற்சித்தார்.

 நவீன தொழில்மய சமூகத்தின், நாகரீகத்தின் கேடுகளை காந்தியும் விமர்சிக்கிறார். ருஷ்யாவின் போல்ஷ்விக்குகளுக்கும் இந்த பார்வை இருக்கிறது. இந்துக்களுக்கு கீதை, கிறிஸ்துவர்களுக்கு பைபிள் போல போல்ஷ்விக்குகளுக்கு மார்க்சின் மூலதனம் இருக்கிறது. பொருளாதார பொருண்மைவாதம், உபரிமதிப்பு, வர்க்கப்போராட்டம் மூன்றும் போல்ஷ்விக்குகளின் கருத்தில் கவனம் கொண்டு நிற்பவை. சோசலிச புரட்சி என்றால் தொழிலாளர்- விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய வர்க்க புரட்சியைத்தான் சொல்கிறோம். முதலாளித்துவத்தின் கோரமான மூர்க்கத்தை சமாளிக்க இது அவசியம் என அவரது தேடல் சென்றது. டாங்கேவின் எழுத்தில் இது இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

”.. an armed revolution of the workers and peasants, with all the fanaticism of a religious belief is the only remedy.”

 முதலாளித்துவம் அப்புறப்படுத்தப்பட்டபின் இந்த வெறி தணியும்   (when they have been dispossed, fanaticism will fade).

 காந்தி அனைவரும் உழைக்கவேண்டும் எனச் சொல்கிறார். சோம்பிக்கிடப்பவன் திருடன் என்கிறார். ராட்டை நூற்பு என்பதை முன்வைக்கிறார் . ஆனால் உலகின் பேரளவு உற்பத்திக்கு முன்னர் கைத்தறி நெசவால் ஏதும் செய்யமுடியாது. காந்தியம் தொழிலாளர் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது. பிரிட்டிஷ் போன்ற கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து விடுபட காந்தியம் போல்ஷ்விசத்திற்கு நேர் எதிரானவற்றை முன்வைக்கிறது. போல்ஷ்விக்குகள் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூலம் மனிதமனத்தை மாற்றுதல் என முன்வைத்தால், காந்தி மனிதமனம் மாற்றம் என்பதை முன்வைக்கிறார் . அவரைப் பொறுத்தவரை வன்முறை வன்முறைக்குத்தான் வித்திடும்.” என டாங்கே எழுதியுள்ளதை பார்க்கிறோம்.

 காந்தியம் என்பது இரு அம்சங்களைக் கொண்டிருக்கிறது என டாங்கே மேலும் விளக்குகிறார்.

 One relates to general evils, common to all human society and treats of the solution of problems affecting all. Another aspect treats of the special evil of despotism and proposes means to do away with it." 

Non Violent Non cooperation  என்பதை காந்தி முன்மொழிகிறார். டால்ஸ்டாய் சொல்வதை ருஷ்யாவே கைவிட்டுவிட்டது. காந்தி எடுத்துக்கொண்டுள்ளார்-  ’ Gandhism relies on individual purification, individual consciousness , conviction and individual action’. மனசாட்சியின்படி செயலாற்று என அது பேசுகிறது இது நல்ல இலட்சிய கனவாக இருக்கலாம் என்பது அன்றைய டாங்கேவின் விமர்சனம்.

 போல்ஷ்விசம்  inherent goodness  என்ற நம்பிக்கையைக் கொள்ளவில்லை.  லெனின் காந்தி இருவருக்கும் இன்று நிலவும் சமூகக் கொடுமைகளிலிருந்து மக்களை மீட்பது என்கிற பொதுவான இலட்சியம் இருக்கிறது. ஆனால் இதற்கு காரணங்கள் என்பதில் நவீன நாகரீகம்- தொழில்புரட்சி  மனிதனிடம் காணப்படும் தீங்கான செயல்கள் என்பதுடன் காந்தி நிற்கிறார். லெனின் உற்பத்திமுறை- நிலம் - முதலாளி- அசமத்துவம் என்பதைக் காண்கிறார்.

 தீர்வுதான் என்ன என்பதிலும் இருவரும் மாறுபடுகின்றனர். நவீன நாகரீகத்திலிருந்து காத்துக்கொள்தல் என காந்தி மொழிந்தால், லெனின் இந்த வளர்ச்சியை பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்பதைப் பேசுகிறார். வழிமுறைகள் என பார்த்தால் கொடுங்கோன்மை அகல அதனுடன் அனைவரும் ஒத்துழையாமை அனுசரிப்பது என்கிறார் காந்தி. லெனினோ புரட்சிகர சிறுபான்மையால் அவர்களை வீழத்தமுடியும் என்பதுடன்  பெரும்பான்மை அவர்களின் சொந்த நலனை உணர்ந்து பின்தொடர்வர் என்கிறார். அதுதான் சாத்தியமான வழி என்கிறார்.

காந்திக்கோ மத நம்பிக்கையும் அகிம்சையும்தான் சிறந்த வழியாக இருக்கிறது. வன்முறை வன்முறையைத்தான் பெருக்கும் என காந்தி பேசினால், லெனின் வன்முறை தற்காலிகமானதே- குழப்பங்கள் முற்றிலுமாக நீங்கி மக்களின் நல்வாழ்வு திடமாகும் என்கிறார்.

போல்ஷ்விக்குகளால் அவர்கள் முழங்கிய ’land Bread and peace’  என்பதை தரமுடிந்துள்ளது. லெனின் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் மாஸ்கோ சென்ற பத்திரிகையாளர் லெனின் அலுவலகத்தில், அவரின் எளிமையை பார்த்துவிட்டு வியந்து பேசினார். இந்த விஷயத்தில் அவர் காந்தி போல இருக்கிறார் என டாங்கே வியக்கிறார்.

 ருஷ்ய புரட்சி என்பது முதலாளித்துவ காலத்தை முடிவிற்கு கொணர்ந்து உழைப்பவர்க்கான காலத்தை திற்ந்துவிட்டுள்ளது. சோவியத் ஆட்சியின் மேன்மைகளை பேசிய டாங்கே இந்தியாவில் புரட்சி குறித்தும்  தனது எண்ணத்தை தந்துள்ளார்.

Indian Revoultion  என்கிற  பகுதியில் இந்தியாவிற்கு என்ன வழி எனக்கேட்டு டாங்கே விவாதித்துள்ளார். நமது கான்ஸ்டிடூஷன் முறை வெற்றியைத்தராது. நாம் ஆயுதம் தாங்கிய புரட்சிதான் என போகவேண்டியதில்லை. அதேநேரத்தில் தீவிர மாற்றங்களை அடியோடு உருவாக்கும் புரட்சி தேவை என்பதை டாங்கே சொல்கிறார் .

இந்தியாவில் 64 சத சொத்தை 2 சத  பெரும்பணக்காரர்கள் அனுபவிக்கிறார்கள். சாதாரண 88 சத மக்களிடம் 12 சதம் சொத்து இருக்கிறது. நம்முடைய போராட்டத்தில் வன்முறைதான் வழி என இல்லாவிடினும் வன்முறை ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்வது தவிர்க்கமுடியாததாகலாம். கம்யூனிஸ்ட் திட்டம் என்பதை நாம் முழுமையாக ஏற்கவேண்டாம். தேசியமயம்- அரசாங்கத்துறை என்றளவு அத்திட்டத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மூலதன குவிப்பை தடுத்தாக வேண்டும்.

 செல்வம் - சொத்து என்றால் இவ்வளவுதான் அதிகபட்சம் என்கிற உச்சவரம்பு வேண்டும். இன்றுள்ள நிலையில் 4 பேர் உள்ள குடும்பம் எனில் ரு 150 போதும். எனவே  very luxurious life அனுபவிப்பவர் யார் யார் என்பதை அரசாங்கம் கவனிக்கவேண்டும். அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் என உச்சவரம்பு விதிக்கவேண்டும். அதற்கு மேல் அவர் சம்பாதித்தால் உபரியை அரசாங்கம் எடுத்துக்கொள்ளவேண்டும். இது ஆலோசனை மட்டுமே என டாங்கே முன்மொழிந்தார். காந்தியின் தர்மகர்த்தாமுறையில் முதலாளிக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன்  என முன்மொழியப்பட்டதை நாம் அறிவோம்.

அதேபோல் விவசாயிகளுக்கு நிலப்பகிர்வு மற்றும் கிராமப்புற கடன் வசதி மேம்பாடு பற்றி டாங்கே முன்மொழிவுகளை செய்தார். இப்படி சில சீர்திருத்தங்கள் மூலம் முதலாளி- நிலப்பிரபுக்களை கட்டுக்குள் வைக்கலாம். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வரலாம். இறுதியில் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையை இந்த ஆக்கத்தில் டாங்கே தந்திருந்தார்.

 சோவியத் குறித்து பெருமிதங்களை பேசினாலும், திலகரை கொண்டாடுபவராக இருந்தாலும் காந்தியின் தாக்கத்தை நிராகரிக்க முடியாமல்  நூறாண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் டாங்கே இருந்துள்ளமையை நாம் உணரமுடியும். போல்ஷ்விக்குகளின் பாதையை அப்படியே ஏற்பது அவசியமில்லை என்கிற பார்வையையும் டாங்கேயிடம் அப்போது இருந்ததை உணரலாம். தேசபக்த தேசியவாதத்திலிருந்து மார்க்சியராக கம்யூனிஸ்டாக பரிமாணம் பெறும் இளைஞரின் பார்வையாக இவ்வாக்கம் பொதுவாக கருதப்படுகிறது.

II

அடுத்த மிக முக்கியமான புத்தகம் ரெனி மில்லர் எழுதிய லெனினும் காந்தியும் ஆக்கமாகும்.  புத்தகத்திற்கான முன்னுரையில் மில்லர்  ( 1927 மார்ச்) இவ்வாறு வரையறுத்திருந்தார்.



லெனின் காந்தி இருவருமே வெவ்வேறு வழிகளில் தங்களின் துணிச்சல்மிக்க சோதனைகளை மானுட மேம்பாட்டிற்காக செய்தவர்கள். இருவரும் ருஷ்யா, இந்தியா என தங்கள் எல்லைக்குள் நின்று தங்கள் நாட்டின் எதிர்கால திசைக்கான  போராட்டத்தை நடத்தினர். சொந்த நாட்டில் நின்று காலூன்றி  மக்களின் விருப்பங்களை கனவுகளை உணர்ந்து செயலாற்றினர். ஆனால் அவர்களின் செயல்பாடுகள்- அரசியல் திசைவழி நாடு கடந்து உலகில் பரவியது. உலக மக்களின் பரந்த அனுபவத்திற்காக ருஷ்யா லெனினாலும், இந்தியா காந்தியாலும்  ‘subject’  ஆக இருந்தன என புரிந்து கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் நின்ற இரு தீர்க்கதரிசிகளாக லெனினும் காந்தியும் தெரிகின்றனர். அவர்களை கூர்ந்து கேட்போமானால் சகாப்தங்களை தொடங்கி வைத்தவர்கள் என்ற உணர்வை பெறுவோம்.”

லெனின் காந்தி இருவருமே அய்ரோப்பிய கலாச்சாரம் மீதான விமர்சன பார்வையைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் வழிமுறைகள் வேறாக இருந்தன.

 லெனின் கொடும் ஜார் அரசை அப்புறப்படுத்தி தனது மார்க்சிய இலட்சிய அரசை உருவாக்க வன்முறை எனும் வழியை தேர்ந்தெடுத்தார். காந்தி  evil empire  என வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் எதிர்த்து அகிம்சை வழி ஒத்துழையாமையை தேர்ந்தெடுத்தார். லெனின்சோவியத்  நாட்டை மின்சாரமயமாக்குதல்- தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குதல் சோசலிச பாதை என்றார். காந்தி தொழில்புரட்சி என்ற பெயரால் கோடானுகோடி கைகளுக்கு வேலைகொடுக்கமுடியாத எந்திரமயத்தை எதிர்த்தார். எந்திரத்திற்கு மனிதன் அடிமையாகிவிடக்கூடாது என எச்சரித்தார்.

 ரெனி மில்லர் லெனின் வெற்றியின் இரகசியம் என பேசும்போது கோட்பாட்டு செல்வாக்கை நடைமுறையில் கொடுத்ததிலும், நடைமுறை அனுபவங்களின் பாற்பட்டு அவற்றை தனது கோட்பாட்டு அம்சங்களில் குழைத்துக் கொள்வதிலும் இருந்தது என்கிறார். லெனின் தான்பெற்ற கோட்பாட்டறிவை மாற்றிக்கொள்வதிலும்  தயங்காமல் இருந்தார். காந்தியும் தனது  inconsistency  குறித்து வந்த விமர்சனங்களில் வீழாமல் உண்மைக்கு அந்த அந்த தருணங்களில் நெருக்கமாக இருப்பது என்கிற வழியில் வாழ்ந்தார்.

 டால்ஸ்டாய் குறித்த சில விமர்சனங்கள் லெனினிடம் இருந்தாலும் கார்க்கியிடம் பலமுறை மிக உயர்வான மதிப்பீடுகளை வெளிப்படுத்தினார் லெனின்.  " Tolstoi what a mass ! What a wealth of material.. What has Europe to compare with Tolstoi.. Nothing   என கார்க்கியிடம் அவர் மகிழ்ந்து வெளிப்படுத்திய தருணத்தை மில்லர் தருகிறார். காந்தியும் டால்ஸ்டாயால் பெருமளவு ஈர்க்கப்பட்டவர் என நாம் அறிவோம்..

 ஒருமுறை துணைவியார் கிருப்ஸ்காயாவுடன் நாட்டில் உள்ள கல்வியறிவின்மை பற்றி லெனின் உரையாடியபோது, புரட்சிக்கு அந்த கல்வியறிவற்றவர்கள்தானே உடன் நின்றனர் என கிருப்ஸ்காயா தெரிவித்தார். ஜாரின் வீழ்ச்சி என்கிற அழித்தலுக்கு அந்த சூழல் உதவியாக இருந்திருக்கலாம். ஆனால் புரட்சி என்பது வெறும் அழிவுவேலையல்ல. இடிப்பதற்காக மட்டுமே நாம் இடிக்கவில்லையே. புது கட்டுமானத்திற்கு கல்வியறிவின் மேம்பாடு மிக அவசியம் என்றார் லெனின். காந்தியும்நயி தாலிம் என்கிற அடிப்படைக் கல்விக்காக நின்றதை நாம் அறிவோம். . லெனினும் சோசலிச கட்டுமானத்திற்கு liquidate illiteracy  என்றார்.

 லெனினை பொருத்தவரை போல்ஷ்விசத்தின் அரசியல் தேவைகளுக்குத்தான் முன்னுரிமை தந்தார். ஒழுக்க நெறிகள்,  சீலம் என்பதெல்லாம் அதற்கு துணைநிற்கும் அளவிற்குத்தான் அவரிடம் கவனம் பெற்றன. சுதந்திரம் என்பதைக்கூட பூர்ஷ்வா சொல்லாடலாக அவர் பார்த்தார். மரணதண்டனை ஒழிப்பு என மக்கள் கமிசார் கூட்டத்தில் பேச்சு வந்தபோது அதனை ஒழிப்பது பைத்தியக்காரத்தனம் என்றார். எதிரிகளை சிறையில் போடுவதால் மட்டும் வெற்றி கிட்டிவிடும் என இருந்துவிடக்கூடாது என எச்சரித்தார்.

ஓடுகாலிகளுக்கு புரட்சியின் துரோகிகளுக்கு மட்டும் தண்டனை என சொல்லலாமா என காம்னேவ் கேட்டபோது  அந்த நல்ல எண்ணம் மாயைதான் என்றார் லெனின். புரட்சிக்கு எதிராக பயங்கரவாதம் இருக்கும்போது புரட்சியின் வெற்றிக்காக நமது பயங்கரவாதம் தேவை என்கிற கருத்து  அவரிடம் இருந்தது.  ’ Friendly kindly fashion ’  மூலம் அவற்றை செய்ய முடியாது. தூங்குமூஞ்சி சர்வாதிகாரம் என ஏதும் இருக்க முடியாதென்றார்.

நமது சூழல்கள் நம்மை கடுமையாக கொடுமையாக நடக்க வைத்துள்ளன. நமது குழந்தைகள் ஆரோக்கியமான எதிர்காலத்தை பெறுவர் என லெனின் பேசும்போது அவரின் உள்மனம் எதற்காக நின்றது என்பதையும் சேர்த்தே உணரலாம்.

 காந்தியோ வன்முறைதான் வழி எனில் அத்துடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடையாது என்பதில் தெளிவாக நின்றவர். தூய்மையற்ற வழிகளால் எவ்வளவு உயர்வாக பேசப்படும் ஒன்றை அடைந்தாலும் , விரைவில் அடைவதற்கான வழியாக இருக்குமே தவிர நீடித்து நிற்காது என அவர் உறுதியாக நம்பினார். இலக்கு இலட்சியம் என்பதைவிட வழிமுறைகளுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்.

 லெனின் தன்னைப்பற்றி சக தோழர்கள் அவ்வப்போது செய்த விமர்சனங்களையெல்லாம் ஒருமுறை தொகுத்து சொன்னார்.

 ” …autocratic, bureaucratic, centralist, one sided, pig headed, narrow, suspicious and unsociable"

 புரட்சிக்கு பின்னர் ஜெர்மன் தாக்குதல் என அறிந்தபோது டிராட்ஸ்கி லெனினுடன் உரையாடுகிறார். நாம் இருவரும் கொல்லப்பட்டால் புகாரின் சமாளிப்பாரா? அவர்கள் நம்மை கொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன் என டிராட்ஸ்கி கூற  லெனின் பதில் தருகிறார். யார்  அறிவர்- கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லி லெனின் சிரித்தார். நாம் புரட்சிக்குப்பின் நன்றாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தோம். இப்போது பிடரிமயிரை பிடித்துக்கொண்டு செல்லும் நிலையில் இருக்கிறோம்.  நிலைமைகளை சமாளிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என துரிதமாக லெனின் செயல்பட்டதால் பிரஸ்ட் லிட்டொவ்ஸ்க் சமாதான உடன்படிக்கை வந்ததை நாம் அறிவோம்.

 காந்தி அனைத்து நேரங்களிலும் கடவுள் வழிகாட்டுகிறார்- உள் குரல் என செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார் என்பதை அனைவரும் அறிவர். லெனின் அப்படி உள்குரல் என எதையும் சொல்லிக்கொண்டதில்லை.

 லெனின் தனது கருத்துக்களில் உறுதியாக நிற்பார். தான் பலநேரங்களில் தனித்து விடப்படுகிறோம் என்பதை அறிந்தாலும்  no fear of isolation  என்பது அவரிடம்  இருந்தது. காந்தியும் இதே குணம் கொண்டவராக செயல்பட்டார். நாடு பிரிவினையின் போது அவர் எவ்வாறு தனிமையானார் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த செய்தி. அதேநேரத்தில் அஞ்சாமல் உறுதியாக  வகுப்புக்கலவரப் பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் இருந்து கடமையை செய்து அமைதிப்படுத்தினார்.

காந்தியை  மேற்குலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றிய ரொமெய்ன் ரோலந்த் லெனின் குறித்து இவ்வாறு எழுதினார்.  Lenin the greatest man of action in our century and at the same time the most selfless.  ரஸ்ஸல் இந்த நூற்றாண்டில் லெனினும், அய்ன்ஸ்டினும் வரலாற்றின் புருஷர்களாக இருப்பர் என்றார். .

 காந்திக்கு தனது கருத்து சரியாக இருக்கிறது என்கிற நம்பிக்கை பலமாக ஏற்பட்டால்தான் அதை நோக்கி மற்றவரை அழைக்க அவர் முற்படுவார். ரோலந்த் அவரது மனநிலையை அழகாக தருவார்  His forehead remains calm and clear, his heart devoid of vanity. He is  a man like all other men.  கோடானுகோடி இந்தியர்களுக்கு தொண்டன் என்பதைத்தவிர என்னை அழைத்துக்கொள்ள வேறு ஏதுமில்லை என்பார் காந்தி.

காந்தி தன்னைப்பற்றி தருகின்ற சொற்சித்திரம் அவரைப்போல உண்மையானதாக எளிமையானதாக இருப்பதைப் பார்க்கலாம்.

எனக்கு எந்த  பிரிவையும் (செக்ட்) உருவாக்கும் நோக்கமில்லை. கடவுளின் விருப்பங்களை நிறைவேற்றும் ஏகபோக உரிமை கோரல்களும் என்னிடம் இல்லை. உண்மை என அறிந்தவற்றிற்காக நிற்பது செயல்படுவது என இருப்பவன். என்னிடம் எந்த அமானுஷ்ய சக்தியும் இல்லை. நான்  தவறுகள் இழைப்பவன்தான். எனது சேவைகளுக்கு வரம்பு இருக்கிறது. ”

லெனின் படுகொலை செய்யப்பட்டு இறக்கவில்லை என்றாலும் அவர் மீது கொலை முயற்சிகள் நடந்தது. ஆகஸ்ட் 30 1918 அன்று மாஸ்கோவில் ஆலைத்தொழிலாளர் கூட்டம் ஒன்றில் லெனின் பேசிவிட்டு வரும்போதுபுரட்சிகர சோசலிஸ்ட்  கட்சியின் இளம் பெண் கப்ளான் என்பவர் லெனினை சுட்டார். லெனின் உயிர்பிழைத்தாலும் அவரால் தொடர்ந்து ஆரோக்கியமாக  சக்தியுடன் பணியாற்ற முடியாமல் போனது. புரட்சி நடத்திய லெனினை புரட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என விதைக்கப்பட்ட எண்ணத்தால் கப்ளான் சுட்டார்.

லெனின் ஜனவரி 21, 1924 மாலை மறைந்தார்.  அவரின் டாக்டர்கள் அவர் எப்படி தனது  will power  மூலம் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ்ந்தார் என ஆச்சரியமடைந்த செய்தியை நாம் அறிகிறோம். லெனின் மறைவை  அந்நாட்டு மக்கள் பலராலும் ஏற்கமுடியவில்லை. அவர்  ’glass case’ ல் இருந்துகொண்டு கவனித்து வருகிறார் எனக் கூட நம்பினர்.

காந்தி மீது கொலைமுயற்சி  அவ்வப்போது நடந்திருந்தாலும் ஜனவரி 30, 1948 அன்று மாலை அவர் படுகொலை செய்யப்பட்டார். எந்த மதத்தின் மீதும் துவேஷமே பாராட்டாத காந்தியை- தன்னை இந்து சனாதனவாதி என அழைத்துக்கொண்ட காந்தியை இந்துத்துவ அரசியல் பின்புலத்திலிருந்து வெறியூட்டபட்ட கோட்சே கொன்றார். 

பல்வேறு இணை நிகழ்வுகள் கொண்ட  இருவரும் தங்கள் வழிகளில் மானுட மேம்பாட்டை மட்டுமே தாகமாக கொண்டு செயல்பட்டனர். தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்.

17-4-2021