https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, April 18, 2021

காந்தி – லெனின்

 

காந்தி – லெனின்

                    ஆர். பட்டாபிராமன்

காந்தியடிகள் தான் வாழ்ந்த காலத்திலும்  தொடர்ந்தும் பல்வேறு உலகத்தலைவர்களுடன் – ஆளுமைகளுடன் ஒப்பிடப்படுவதை பார்க்கமுடியும். மார்க்ஸ் உடன் காந்தியை ஒப்பிட்டு மஷ்ருவாலா எழுதினார். விநோபாபாவே அவர்கள் அதில் முன்னுரை தந்திருப்பார். காந்தி மார்க்ஸ் ஒப்பீட்டை காந்தியைக் கண்டுணர்தல் என்கிற எனது முந்திய ஆக்கத்தில் பல்வேறு கட்டுரைகளில் இடம் பெற செய்துள்ளேன். மார்க்சியம் - லெனினியம் என்கிற அளவிற்கு மார்க்ஸ் உடன் இணைப்பைப் பெற்ற லெனினுடன் காந்தியை ஒப்பிடுதல் என்பது இங்கே முயற்சிக்கப்பட்டுள்ளது.



காந்தியையும் லெனினையும் ஒப்பிட்டு 1920களில் இரு புத்தகங்கள் வந்தன. ஒன்று மார்க்சிய – சோசலிச சிந்தனைகொண்ட இந்திய இளைஞர்  தோழர் டாங்கே (1899-1991) எழுதி 1921ல் வெளியான புத்தகம்  Gandhi VS Lenin . இப்புத்தகம் அளவில் சிறியது. இந்த 2021 ஏப்ரலில் அப்புத்தகம் நூற்றாண்டைக் கண்டது.

  அடுத்த புத்தகம் ரெனி ஃபுலோப் மில்லர் எழுதி 1927ல் வெளிவந்த லெனினும் காந்தியும் (Lenin and Gandhi) என்பதாகும். அளவில் பெரிய புத்தகம். ரெனி ஃபுலோப் மில்லர்(1891-1963) வியன்னாவில் செயல்பட்ட கலாச்சார வரலாற்றாசிரியர். மில்லர் எழுதியதை இந்திய வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா நல்லவகையில் மதிப்பிட்டுள்ளார். இரு ஆளுமைகளையும் உச்சங்களாக  மில்லர் மதிப்பிட்டதை குஹா தெரிவிக்கிறார்.




Gandhi VS Lenin புத்தகத்தை 1921ல் தோழர் டாங்கே எழுதியபோது அவருக்கு வயது 21 . இளம் தேசபக்தரின் துணிவான செயலாக இவ்வாக்கத்தைப் பார்க்கலாம். காந்தியின்ஒத்துழையாமை இயக்கத்தை கொண்டாடியவர்கள் ருஷ்ய போல்ஷ்விக்குகளுக்கு இணையான போராட்டம் என்று வர்ணித்ததை ஏற்கமுடியாமல்  இரண்டிற்குமான வேறுபாடுகளை இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற அவாவில் டாங்கே அதை எழுதினார். டாங்கே ஒத்துழையாமையில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பைவிட்டு வெளியேறியவர்.

இந்த புத்தகம் லெனின் பார்வைக்கு சென்றதாகவும் , இந்தியர்களிடம் மார்க்சிய உணர்வு பெருகி வருவதாக லெனின் குறிப்பிட்டதாகவும் செய்திகள் உள்ளன.

திலகரின் தொண்டனாகவும் சோவியத் புரட்சி குறித்து அறிந்தவராகவும் இருந்த டாங்கேவிற்கு மாறுபட்ட காந்தியின் போராட்டம்- சிந்தனைமுறை விமர்சனம் செய்யப்படவேண்டிய ஒன்றாக இருந்தது.  அதே நேரத்தில் அதன் வன்முறைக்கு எதிரான உறுதிப்பாட்டை, முதலாளித்துவம்  சுரண்டலுக்குரிய முறை என்கிற காந்தியத்தை முற்றிலுமாக நிராகரிக்கமுடியாத நிலையும் இளம் டாங்கேவால் உணரப்பட்டிருந்தது

 மார்க்சிய கருதுகோள்களான உற்பத்தி உடைமை, உபரிமதிப்பு ஆகியவற்றை டாங்கே விளக்குகிறார். சோசலிச சமுக மாற்றத்திற்கு ஆயுதம் தாங்கிய புரட்சி தவிர சமாதான வழிகளை பேசுவது அறீவீனம் என்பதை ஆரம்ப பக்கங்களில் சொல்கிறார்.

 இந்திய முதலாளிகள் மூன்றுவகை பாவங்களை செய்கின்றனர். அந்நிய கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கின்றனர். இந்திய விவசாயிகளையும், கூலிக்காரர்களையும் சுரண்டுகின்றனர். அய்ரோப்பியர்களுக்கு ஆதரவாக நின்று நமது நாட்டின் வறுமை பெருக்கத்திற்கு துணை நிற்கின்றனர். எனவே இரு கடமைகளாக அந்நிய நுகத்தடியிலிருந்து விடுதலை, முதலாளித்துவத்தை அப்புறப்படுத்தல் ஆகியவை எழுகின்றன. இதற்கு வழி முறை தான் என்ன? என்கிற கேள்விக்கு டாங்கே விடைதேட முயற்சித்தார்.

 நவீன தொழில்மய சமூகத்தின், நாகரீகத்தின் கேடுகளை காந்தியும் விமர்சிக்கிறார். ருஷ்யாவின் போல்ஷ்விக்குகளுக்கும் இந்த பார்வை இருக்கிறது. இந்துக்களுக்கு கீதை, கிறிஸ்துவர்களுக்கு பைபிள் போல போல்ஷ்விக்குகளுக்கு மார்க்சின் மூலதனம் இருக்கிறது. பொருளாதார பொருண்மைவாதம், உபரிமதிப்பு, வர்க்கப்போராட்டம் மூன்றும் போல்ஷ்விக்குகளின் கருத்தில் கவனம் கொண்டு நிற்பவை. சோசலிச புரட்சி என்றால் தொழிலாளர்- விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய வர்க்க புரட்சியைத்தான் சொல்கிறோம். முதலாளித்துவத்தின் கோரமான மூர்க்கத்தை சமாளிக்க இது அவசியம் என அவரது தேடல் சென்றது. டாங்கேவின் எழுத்தில் இது இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

”.. an armed revolution of the workers and peasants, with all the fanaticism of a religious belief is the only remedy.”

 முதலாளித்துவம் அப்புறப்படுத்தப்பட்டபின் இந்த வெறி தணியும்   (when they have been dispossed, fanaticism will fade).

 காந்தி அனைவரும் உழைக்கவேண்டும் எனச் சொல்கிறார். சோம்பிக்கிடப்பவன் திருடன் என்கிறார். ராட்டை நூற்பு என்பதை முன்வைக்கிறார் . ஆனால் உலகின் பேரளவு உற்பத்திக்கு முன்னர் கைத்தறி நெசவால் ஏதும் செய்யமுடியாது. காந்தியம் தொழிலாளர் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது. பிரிட்டிஷ் போன்ற கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து விடுபட காந்தியம் போல்ஷ்விசத்திற்கு நேர் எதிரானவற்றை முன்வைக்கிறது. போல்ஷ்விக்குகள் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூலம் மனிதமனத்தை மாற்றுதல் என முன்வைத்தால், காந்தி மனிதமனம் மாற்றம் என்பதை முன்வைக்கிறார் . அவரைப் பொறுத்தவரை வன்முறை வன்முறைக்குத்தான் வித்திடும்.” என டாங்கே எழுதியுள்ளதை பார்க்கிறோம்.

 காந்தியம் என்பது இரு அம்சங்களைக் கொண்டிருக்கிறது என டாங்கே மேலும் விளக்குகிறார்.

 One relates to general evils, common to all human society and treats of the solution of problems affecting all. Another aspect treats of the special evil of despotism and proposes means to do away with it." 

Non Violent Non cooperation  என்பதை காந்தி முன்மொழிகிறார். டால்ஸ்டாய் சொல்வதை ருஷ்யாவே கைவிட்டுவிட்டது. காந்தி எடுத்துக்கொண்டுள்ளார்-  ’ Gandhism relies on individual purification, individual consciousness , conviction and individual action’. மனசாட்சியின்படி செயலாற்று என அது பேசுகிறது இது நல்ல இலட்சிய கனவாக இருக்கலாம் என்பது அன்றைய டாங்கேவின் விமர்சனம்.

 போல்ஷ்விசம்  inherent goodness  என்ற நம்பிக்கையைக் கொள்ளவில்லை.  லெனின் காந்தி இருவருக்கும் இன்று நிலவும் சமூகக் கொடுமைகளிலிருந்து மக்களை மீட்பது என்கிற பொதுவான இலட்சியம் இருக்கிறது. ஆனால் இதற்கு காரணங்கள் என்பதில் நவீன நாகரீகம்- தொழில்புரட்சி  மனிதனிடம் காணப்படும் தீங்கான செயல்கள் என்பதுடன் காந்தி நிற்கிறார். லெனின் உற்பத்திமுறை- நிலம் - முதலாளி- அசமத்துவம் என்பதைக் காண்கிறார்.

 தீர்வுதான் என்ன என்பதிலும் இருவரும் மாறுபடுகின்றனர். நவீன நாகரீகத்திலிருந்து காத்துக்கொள்தல் என காந்தி மொழிந்தால், லெனின் இந்த வளர்ச்சியை பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்பதைப் பேசுகிறார். வழிமுறைகள் என பார்த்தால் கொடுங்கோன்மை அகல அதனுடன் அனைவரும் ஒத்துழையாமை அனுசரிப்பது என்கிறார் காந்தி. லெனினோ புரட்சிகர சிறுபான்மையால் அவர்களை வீழத்தமுடியும் என்பதுடன்  பெரும்பான்மை அவர்களின் சொந்த நலனை உணர்ந்து பின்தொடர்வர் என்கிறார். அதுதான் சாத்தியமான வழி என்கிறார்.

காந்திக்கோ மத நம்பிக்கையும் அகிம்சையும்தான் சிறந்த வழியாக இருக்கிறது. வன்முறை வன்முறையைத்தான் பெருக்கும் என காந்தி பேசினால், லெனின் வன்முறை தற்காலிகமானதே- குழப்பங்கள் முற்றிலுமாக நீங்கி மக்களின் நல்வாழ்வு திடமாகும் என்கிறார்.

போல்ஷ்விக்குகளால் அவர்கள் முழங்கிய ’land Bread and peace’  என்பதை தரமுடிந்துள்ளது. லெனின் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் மாஸ்கோ சென்ற பத்திரிகையாளர் லெனின் அலுவலகத்தில், அவரின் எளிமையை பார்த்துவிட்டு வியந்து பேசினார். இந்த விஷயத்தில் அவர் காந்தி போல இருக்கிறார் என டாங்கே வியக்கிறார்.

 ருஷ்ய புரட்சி என்பது முதலாளித்துவ காலத்தை முடிவிற்கு கொணர்ந்து உழைப்பவர்க்கான காலத்தை திற்ந்துவிட்டுள்ளது. சோவியத் ஆட்சியின் மேன்மைகளை பேசிய டாங்கே இந்தியாவில் புரட்சி குறித்தும்  தனது எண்ணத்தை தந்துள்ளார்.

Indian Revoultion  என்கிற  பகுதியில் இந்தியாவிற்கு என்ன வழி எனக்கேட்டு டாங்கே விவாதித்துள்ளார். நமது கான்ஸ்டிடூஷன் முறை வெற்றியைத்தராது. நாம் ஆயுதம் தாங்கிய புரட்சிதான் என போகவேண்டியதில்லை. அதேநேரத்தில் தீவிர மாற்றங்களை அடியோடு உருவாக்கும் புரட்சி தேவை என்பதை டாங்கே சொல்கிறார் .

இந்தியாவில் 64 சத சொத்தை 2 சத  பெரும்பணக்காரர்கள் அனுபவிக்கிறார்கள். சாதாரண 88 சத மக்களிடம் 12 சதம் சொத்து இருக்கிறது. நம்முடைய போராட்டத்தில் வன்முறைதான் வழி என இல்லாவிடினும் வன்முறை ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்வது தவிர்க்கமுடியாததாகலாம். கம்யூனிஸ்ட் திட்டம் என்பதை நாம் முழுமையாக ஏற்கவேண்டாம். தேசியமயம்- அரசாங்கத்துறை என்றளவு அத்திட்டத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மூலதன குவிப்பை தடுத்தாக வேண்டும்.

 செல்வம் - சொத்து என்றால் இவ்வளவுதான் அதிகபட்சம் என்கிற உச்சவரம்பு வேண்டும். இன்றுள்ள நிலையில் 4 பேர் உள்ள குடும்பம் எனில் ரு 150 போதும். எனவே  very luxurious life அனுபவிப்பவர் யார் யார் என்பதை அரசாங்கம் கவனிக்கவேண்டும். அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் என உச்சவரம்பு விதிக்கவேண்டும். அதற்கு மேல் அவர் சம்பாதித்தால் உபரியை அரசாங்கம் எடுத்துக்கொள்ளவேண்டும். இது ஆலோசனை மட்டுமே என டாங்கே முன்மொழிந்தார். காந்தியின் தர்மகர்த்தாமுறையில் முதலாளிக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன்  என முன்மொழியப்பட்டதை நாம் அறிவோம்.

அதேபோல் விவசாயிகளுக்கு நிலப்பகிர்வு மற்றும் கிராமப்புற கடன் வசதி மேம்பாடு பற்றி டாங்கே முன்மொழிவுகளை செய்தார். இப்படி சில சீர்திருத்தங்கள் மூலம் முதலாளி- நிலப்பிரபுக்களை கட்டுக்குள் வைக்கலாம். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வரலாம். இறுதியில் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையை இந்த ஆக்கத்தில் டாங்கே தந்திருந்தார்.

 சோவியத் குறித்து பெருமிதங்களை பேசினாலும், திலகரை கொண்டாடுபவராக இருந்தாலும் காந்தியின் தாக்கத்தை நிராகரிக்க முடியாமல்  நூறாண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் டாங்கே இருந்துள்ளமையை நாம் உணரமுடியும். போல்ஷ்விக்குகளின் பாதையை அப்படியே ஏற்பது அவசியமில்லை என்கிற பார்வையையும் டாங்கேயிடம் அப்போது இருந்ததை உணரலாம். தேசபக்த தேசியவாதத்திலிருந்து மார்க்சியராக கம்யூனிஸ்டாக பரிமாணம் பெறும் இளைஞரின் பார்வையாக இவ்வாக்கம் பொதுவாக கருதப்படுகிறது.

II

அடுத்த மிக முக்கியமான புத்தகம் ரெனி மில்லர் எழுதிய லெனினும் காந்தியும் ஆக்கமாகும்.  புத்தகத்திற்கான முன்னுரையில் மில்லர்  ( 1927 மார்ச்) இவ்வாறு வரையறுத்திருந்தார்.



லெனின் காந்தி இருவருமே வெவ்வேறு வழிகளில் தங்களின் துணிச்சல்மிக்க சோதனைகளை மானுட மேம்பாட்டிற்காக செய்தவர்கள். இருவரும் ருஷ்யா, இந்தியா என தங்கள் எல்லைக்குள் நின்று தங்கள் நாட்டின் எதிர்கால திசைக்கான  போராட்டத்தை நடத்தினர். சொந்த நாட்டில் நின்று காலூன்றி  மக்களின் விருப்பங்களை கனவுகளை உணர்ந்து செயலாற்றினர். ஆனால் அவர்களின் செயல்பாடுகள்- அரசியல் திசைவழி நாடு கடந்து உலகில் பரவியது. உலக மக்களின் பரந்த அனுபவத்திற்காக ருஷ்யா லெனினாலும், இந்தியா காந்தியாலும்  ‘subject’  ஆக இருந்தன என புரிந்து கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் நின்ற இரு தீர்க்கதரிசிகளாக லெனினும் காந்தியும் தெரிகின்றனர். அவர்களை கூர்ந்து கேட்போமானால் சகாப்தங்களை தொடங்கி வைத்தவர்கள் என்ற உணர்வை பெறுவோம்.”

லெனின் காந்தி இருவருமே அய்ரோப்பிய கலாச்சாரம் மீதான விமர்சன பார்வையைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் வழிமுறைகள் வேறாக இருந்தன.

 லெனின் கொடும் ஜார் அரசை அப்புறப்படுத்தி தனது மார்க்சிய இலட்சிய அரசை உருவாக்க வன்முறை எனும் வழியை தேர்ந்தெடுத்தார். காந்தி  evil empire  என வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் எதிர்த்து அகிம்சை வழி ஒத்துழையாமையை தேர்ந்தெடுத்தார். லெனின்சோவியத்  நாட்டை மின்சாரமயமாக்குதல்- தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குதல் சோசலிச பாதை என்றார். காந்தி தொழில்புரட்சி என்ற பெயரால் கோடானுகோடி கைகளுக்கு வேலைகொடுக்கமுடியாத எந்திரமயத்தை எதிர்த்தார். எந்திரத்திற்கு மனிதன் அடிமையாகிவிடக்கூடாது என எச்சரித்தார்.

 ரெனி மில்லர் லெனின் வெற்றியின் இரகசியம் என பேசும்போது கோட்பாட்டு செல்வாக்கை நடைமுறையில் கொடுத்ததிலும், நடைமுறை அனுபவங்களின் பாற்பட்டு அவற்றை தனது கோட்பாட்டு அம்சங்களில் குழைத்துக் கொள்வதிலும் இருந்தது என்கிறார். லெனின் தான்பெற்ற கோட்பாட்டறிவை மாற்றிக்கொள்வதிலும்  தயங்காமல் இருந்தார். காந்தியும் தனது  inconsistency  குறித்து வந்த விமர்சனங்களில் வீழாமல் உண்மைக்கு அந்த அந்த தருணங்களில் நெருக்கமாக இருப்பது என்கிற வழியில் வாழ்ந்தார்.

 டால்ஸ்டாய் குறித்த சில விமர்சனங்கள் லெனினிடம் இருந்தாலும் கார்க்கியிடம் பலமுறை மிக உயர்வான மதிப்பீடுகளை வெளிப்படுத்தினார் லெனின்.  " Tolstoi what a mass ! What a wealth of material.. What has Europe to compare with Tolstoi.. Nothing   என கார்க்கியிடம் அவர் மகிழ்ந்து வெளிப்படுத்திய தருணத்தை மில்லர் தருகிறார். காந்தியும் டால்ஸ்டாயால் பெருமளவு ஈர்க்கப்பட்டவர் என நாம் அறிவோம்..

 ஒருமுறை துணைவியார் கிருப்ஸ்காயாவுடன் நாட்டில் உள்ள கல்வியறிவின்மை பற்றி லெனின் உரையாடியபோது, புரட்சிக்கு அந்த கல்வியறிவற்றவர்கள்தானே உடன் நின்றனர் என கிருப்ஸ்காயா தெரிவித்தார். ஜாரின் வீழ்ச்சி என்கிற அழித்தலுக்கு அந்த சூழல் உதவியாக இருந்திருக்கலாம். ஆனால் புரட்சி என்பது வெறும் அழிவுவேலையல்ல. இடிப்பதற்காக மட்டுமே நாம் இடிக்கவில்லையே. புது கட்டுமானத்திற்கு கல்வியறிவின் மேம்பாடு மிக அவசியம் என்றார் லெனின். காந்தியும்நயி தாலிம் என்கிற அடிப்படைக் கல்விக்காக நின்றதை நாம் அறிவோம். . லெனினும் சோசலிச கட்டுமானத்திற்கு liquidate illiteracy  என்றார்.

 லெனினை பொருத்தவரை போல்ஷ்விசத்தின் அரசியல் தேவைகளுக்குத்தான் முன்னுரிமை தந்தார். ஒழுக்க நெறிகள்,  சீலம் என்பதெல்லாம் அதற்கு துணைநிற்கும் அளவிற்குத்தான் அவரிடம் கவனம் பெற்றன. சுதந்திரம் என்பதைக்கூட பூர்ஷ்வா சொல்லாடலாக அவர் பார்த்தார். மரணதண்டனை ஒழிப்பு என மக்கள் கமிசார் கூட்டத்தில் பேச்சு வந்தபோது அதனை ஒழிப்பது பைத்தியக்காரத்தனம் என்றார். எதிரிகளை சிறையில் போடுவதால் மட்டும் வெற்றி கிட்டிவிடும் என இருந்துவிடக்கூடாது என எச்சரித்தார்.

ஓடுகாலிகளுக்கு புரட்சியின் துரோகிகளுக்கு மட்டும் தண்டனை என சொல்லலாமா என காம்னேவ் கேட்டபோது  அந்த நல்ல எண்ணம் மாயைதான் என்றார் லெனின். புரட்சிக்கு எதிராக பயங்கரவாதம் இருக்கும்போது புரட்சியின் வெற்றிக்காக நமது பயங்கரவாதம் தேவை என்கிற கருத்து  அவரிடம் இருந்தது.  ’ Friendly kindly fashion ’  மூலம் அவற்றை செய்ய முடியாது. தூங்குமூஞ்சி சர்வாதிகாரம் என ஏதும் இருக்க முடியாதென்றார்.

நமது சூழல்கள் நம்மை கடுமையாக கொடுமையாக நடக்க வைத்துள்ளன. நமது குழந்தைகள் ஆரோக்கியமான எதிர்காலத்தை பெறுவர் என லெனின் பேசும்போது அவரின் உள்மனம் எதற்காக நின்றது என்பதையும் சேர்த்தே உணரலாம்.

 காந்தியோ வன்முறைதான் வழி எனில் அத்துடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடையாது என்பதில் தெளிவாக நின்றவர். தூய்மையற்ற வழிகளால் எவ்வளவு உயர்வாக பேசப்படும் ஒன்றை அடைந்தாலும் , விரைவில் அடைவதற்கான வழியாக இருக்குமே தவிர நீடித்து நிற்காது என அவர் உறுதியாக நம்பினார். இலக்கு இலட்சியம் என்பதைவிட வழிமுறைகளுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்.

 லெனின் தன்னைப்பற்றி சக தோழர்கள் அவ்வப்போது செய்த விமர்சனங்களையெல்லாம் ஒருமுறை தொகுத்து சொன்னார்.

 ” …autocratic, bureaucratic, centralist, one sided, pig headed, narrow, suspicious and unsociable"

 புரட்சிக்கு பின்னர் ஜெர்மன் தாக்குதல் என அறிந்தபோது டிராட்ஸ்கி லெனினுடன் உரையாடுகிறார். நாம் இருவரும் கொல்லப்பட்டால் புகாரின் சமாளிப்பாரா? அவர்கள் நம்மை கொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன் என டிராட்ஸ்கி கூற  லெனின் பதில் தருகிறார். யார்  அறிவர்- கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லி லெனின் சிரித்தார். நாம் புரட்சிக்குப்பின் நன்றாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தோம். இப்போது பிடரிமயிரை பிடித்துக்கொண்டு செல்லும் நிலையில் இருக்கிறோம்.  நிலைமைகளை சமாளிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என துரிதமாக லெனின் செயல்பட்டதால் பிரஸ்ட் லிட்டொவ்ஸ்க் சமாதான உடன்படிக்கை வந்ததை நாம் அறிவோம்.

 காந்தி அனைத்து நேரங்களிலும் கடவுள் வழிகாட்டுகிறார்- உள் குரல் என செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார் என்பதை அனைவரும் அறிவர். லெனின் அப்படி உள்குரல் என எதையும் சொல்லிக்கொண்டதில்லை.

 லெனின் தனது கருத்துக்களில் உறுதியாக நிற்பார். தான் பலநேரங்களில் தனித்து விடப்படுகிறோம் என்பதை அறிந்தாலும்  no fear of isolation  என்பது அவரிடம்  இருந்தது. காந்தியும் இதே குணம் கொண்டவராக செயல்பட்டார். நாடு பிரிவினையின் போது அவர் எவ்வாறு தனிமையானார் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த செய்தி. அதேநேரத்தில் அஞ்சாமல் உறுதியாக  வகுப்புக்கலவரப் பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் இருந்து கடமையை செய்து அமைதிப்படுத்தினார்.

காந்தியை  மேற்குலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றிய ரொமெய்ன் ரோலந்த் லெனின் குறித்து இவ்வாறு எழுதினார்.  Lenin the greatest man of action in our century and at the same time the most selfless.  ரஸ்ஸல் இந்த நூற்றாண்டில் லெனினும், அய்ன்ஸ்டினும் வரலாற்றின் புருஷர்களாக இருப்பர் என்றார். .

 காந்திக்கு தனது கருத்து சரியாக இருக்கிறது என்கிற நம்பிக்கை பலமாக ஏற்பட்டால்தான் அதை நோக்கி மற்றவரை அழைக்க அவர் முற்படுவார். ரோலந்த் அவரது மனநிலையை அழகாக தருவார்  His forehead remains calm and clear, his heart devoid of vanity. He is  a man like all other men.  கோடானுகோடி இந்தியர்களுக்கு தொண்டன் என்பதைத்தவிர என்னை அழைத்துக்கொள்ள வேறு ஏதுமில்லை என்பார் காந்தி.

காந்தி தன்னைப்பற்றி தருகின்ற சொற்சித்திரம் அவரைப்போல உண்மையானதாக எளிமையானதாக இருப்பதைப் பார்க்கலாம்.

எனக்கு எந்த  பிரிவையும் (செக்ட்) உருவாக்கும் நோக்கமில்லை. கடவுளின் விருப்பங்களை நிறைவேற்றும் ஏகபோக உரிமை கோரல்களும் என்னிடம் இல்லை. உண்மை என அறிந்தவற்றிற்காக நிற்பது செயல்படுவது என இருப்பவன். என்னிடம் எந்த அமானுஷ்ய சக்தியும் இல்லை. நான்  தவறுகள் இழைப்பவன்தான். எனது சேவைகளுக்கு வரம்பு இருக்கிறது. ”

லெனின் படுகொலை செய்யப்பட்டு இறக்கவில்லை என்றாலும் அவர் மீது கொலை முயற்சிகள் நடந்தது. ஆகஸ்ட் 30 1918 அன்று மாஸ்கோவில் ஆலைத்தொழிலாளர் கூட்டம் ஒன்றில் லெனின் பேசிவிட்டு வரும்போதுபுரட்சிகர சோசலிஸ்ட்  கட்சியின் இளம் பெண் கப்ளான் என்பவர் லெனினை சுட்டார். லெனின் உயிர்பிழைத்தாலும் அவரால் தொடர்ந்து ஆரோக்கியமாக  சக்தியுடன் பணியாற்ற முடியாமல் போனது. புரட்சி நடத்திய லெனினை புரட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என விதைக்கப்பட்ட எண்ணத்தால் கப்ளான் சுட்டார்.

லெனின் ஜனவரி 21, 1924 மாலை மறைந்தார்.  அவரின் டாக்டர்கள் அவர் எப்படி தனது  will power  மூலம் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ்ந்தார் என ஆச்சரியமடைந்த செய்தியை நாம் அறிகிறோம். லெனின் மறைவை  அந்நாட்டு மக்கள் பலராலும் ஏற்கமுடியவில்லை. அவர்  ’glass case’ ல் இருந்துகொண்டு கவனித்து வருகிறார் எனக் கூட நம்பினர்.

காந்தி மீது கொலைமுயற்சி  அவ்வப்போது நடந்திருந்தாலும் ஜனவரி 30, 1948 அன்று மாலை அவர் படுகொலை செய்யப்பட்டார். எந்த மதத்தின் மீதும் துவேஷமே பாராட்டாத காந்தியை- தன்னை இந்து சனாதனவாதி என அழைத்துக்கொண்ட காந்தியை இந்துத்துவ அரசியல் பின்புலத்திலிருந்து வெறியூட்டபட்ட கோட்சே கொன்றார். 

பல்வேறு இணை நிகழ்வுகள் கொண்ட  இருவரும் தங்கள் வழிகளில் மானுட மேம்பாட்டை மட்டுமே தாகமாக கொண்டு செயல்பட்டனர். தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்.

17-4-2021

No comments:

Post a Comment