https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, July 25, 2017

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ்
ஐந்து கட்டுரைகள்                 

                                                               முன்னுரை
மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்றுஅவரின் வளர்ச்சி, மகிழ்ச்சி, துன்பம், போராட்டங்கள், குடும்பத்தார்கள்- உறவுகளை பேணுதல், அவரின் attitude, பெருமை-குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை.
மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன்.

மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு இம்மாதிரியான எழுத்துக்கள் சற்று வலியைத்தரும் அவ்வகை எழுத்தாளர்கள் குறித்து வசைப்பாடத் தோன்றும். நம்மைபோன்ற சக மனிதன் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்து தனக்கு முந்திய காலத்தின் அறிவையெல்லாம் சேகரித்து ஜீரணித்த மனிதன், பிற்காலம் குறித்த கனவுகளை வசப்படுத்த தனக்கு சரி என உணர்ந்த வழியை அழுத்தமாக தெரிவித்த மனிதன்- கொண்டாடப்படவேண்டிய மனிதன் என்கிற நிதான பார்வை இருந்தால் இம்மாதிரி புத்தகங்கள் பயன்படுவதாக இருக்கும்.
 மனித குல முயற்சியில் முற்றானது முடிந்து போனது என எதுவும் இல்லை. கடக்கவேண்டும்- ஒவ்வொன்றையும் கடந்தாக வேண்டும். மார்க்ஸ்க்கு அவருக்கு முந்தி இருந்த எவரும் முற்றானவராக தோன்றவில்லை. மார்க்சியத்தின்படி மார்க்ஸ் முற்றானவர் அல்ல. ஆனால் இதன் பொருள் எதிர்மறையான ஒன்றல்ல. மார்க்ஸ் தேவைப்படுகிறார் என்பதை குறைக்கும் அர்த்தத்தில் அல்ல. இந்தியாவில் மார்க்ஸ் உடன் பெரியார், அம்பேத்கார், காந்தி என சிந்தனை சேர்மான கலவை - chemistry of ideas நடந்து கொண்டுதான் இருக்கிறது. யார் விரும்பினாலும், விலகினாலும் இந்திய சமுகத்தின் எதார்த்தங்களில் மார்க்சியம் ஊடாடவேண்டியிருக்கிறது.
சமுக மேம்பாடு குறித்த விழிப்புணர்வும் சுய சிந்தனையும் கொண்ட எவரும் மார்க்சியத்தை ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் வாழ்க்கையின் ஓட்டம் குறித்தகூகுள் மேப் ஆகமார்க்சியத்தை வறட்டுத்தனமாக பார்க்கவும் கூடாது.. செயலுக்கும், சிந்திக்கும் பாங்கிற்குமான பொதுவான வழிகாட்டல் என்பதில் கவனம் தேவைப்படுகிறது. அட்சரம் பிசகாமல் மேற்கோள்களை கொண்டு வாழ்க்கையை அளக்கவோ செப்பனிடவோ முடியாது என்கிற அனுபவத்தை புறக்கணிக்கமுடியாது. இந்திய சமுகத்தில் மக்களை ஒன்றுபடுத்த விழையும் பிற சிந்தனைகளை ரீ-ஆக்ஷ்னரி என்று முத்திரை குத்தி அப்புறப்படுத்துவதற்கு முன்னர் பலமுறை யோசிக்கவேண்டும். அச்சிந்தனைகள் தோழமை கொள்ளத்தக்கவையா- இல்லை எதிரி பக்கம் தள்ளப்படவேண்டியவையா என்று.
தமிழ் வாசக பரப்பில் ஹெகல் குறித்த செய்திகள் மிகவும் குறைவுதான். மார்க்ஸ் பற்றி அறியும்போது ஹெகல் குறித்து சில வார்த்தைகள் சொல்லப்படும். அதுவும் ஹெகலை மார்க்ஸ் திருத்தி நேராக்கினார் என்கிற அளவில்தான் இருக்கும். ஹெகலிய மொழி கடினமானது. ஹெகல் குறித்த பல அறிஞர்களின் புத்தகங்களுக்குள் போவதும் எனக்கு கடினமாகவே இருக்கிறது. இங்கு அவர் குறித்த நீள் கட்டுரை ஒன்றும் தரப்படுகிறது. கடைசி பகுதி முற்றிலுமாக அவரது மேற்கோள்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. மீதி 6 பகுதிகளில் அவரது வாழ்க்கை குறித்த சித்திரம், சிந்தனைகள் பேசப்படுகிறது. கடினமான ஒன்றுதான் எனக்கு... முயற்சி செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். சுவாரசியமற்ற எழுத்துக்களில் உள் நின்று வாசிப்பது பொதுவாக கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அவசியம் புரிபடும்போது அவை தரும் பயனை அனுபவிக்க முடியும். தமிழில் நான் பார்த்திராத ஹெகல் குறித்த செய்திகள் சிலவற்றை தேடிப்பிடித்து இக்கட்டுரையில் சொல்ல முயற்சித்துள்ளேன்.
மார்க்சின் தளபதி என அழைக்கப்பட்ட தோழர் எங்கெல்ஸ் குறித்து நீள் கட்டுரை ஒன்றும் இங்கு  தரப்பட்டுள்ளது. தமிழ் வாசகர்களுக்கு பல செய்திகள் புதிதாக இருக்கும் என நம்புகிறேன். பல மணிநேர உழைப்பை இக்கட்டுரைகள் விழுங்கின. மார்க்ஸ்- எங்கெல்ஸ் பற்றி தொடர்ந்து தேடல் கொண்ட தோழர்களுக்கு தமிழில் இவற்றை கிடைக்க செய்துள்ளேன் என்கிற அளவில் சிறிய மகிழ்ச்சி. மார்க்ஸ் தனது motto ’Doubt Everything’ என்றார். எங்கெல்சோ Take it Easy’ என்றே சொன்னார். அப்படியே வாழ்ந்தார் என்பதை எங்கெல்ஸ் குறித்த கட்டுரையை படிக்கும் ஒருவரால் புரிந்து கொள்ளமுடியும்.

 23-7-17                                        ஆர்.பட்டாபிராமன்    

No comments:

Post a Comment