https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, November 23, 2021

தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம் தோழர் பி சீனிவாசராவ் (BSR)

 

தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம் என்கிற தோழர் பி. சீனிவாசராவ் அவர்களின் கடித இலக்கியத்திற்கு தற்போது வயது 75 ஆண்டுகள். 1947 ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரையிலான காலகட்டப் பதிவு அவரின் படைப்பு.


திருச்சி, மதுரை, கடலூர் பகுதிகளில் பல மைல்கள் அலைந்து திரிந்து தோழர்கள், அனுதாபிகள், மில் தொழிலாளர், நெசவாளிகள், விவசாயிகள் என பலரின் வீடுகளிலும் , பல பதுங்குமிடங்களிலும் தங்கி போலீஸ் கண்காணிப்பு தொல்லைகளிலிருந்து ஒவ்வொரு நொடியும் தப்பி அந்த சோகத்தை துயரை பொறுத்துக்கொண்டு துன்பகரமான  வாழ்க்கையை இலட்சிய தாகம் துரத்த பயணித்த அனுபவங்களை தோழர் பி எஸ் ஆர் இதில் கொட்டித்தீர்ப்பதை பார்க்கமுடியும்.

கிடைத்த இடத்தில் சக ஜீவராசிகளுடன் படுத்துறங்கி கொடுத்த உணவில் சுவை கண்டு வாழ்ந்த அனுபவங்கள் இதில் தரப்பட்டிருக்கும். இளம் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும் அனுபவ படைப்பாக இந்த சிறு புத்தகம் இன்றும் விளங்கும் என்றே மனதில் படுகிறது.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி என்ற வகையில் எழுதப்பட்ட அனுபவம் என்பதால் இடதுசாரிகள் அனைவருக்குமான பொது படைப்பாக இதை அணுகி எடுத்துக்கொள்ளமுடியும். தோழர் எம் ஆர் வெங்கட்ராமன் அன்று ’பொதுக்காரியதரிசி’ என்ற வகையில் அக்டோபர் 29, 1947 தேதியிட்டு முகவுரை எழுதியிருப்பார்.

 இந்த மாதிரியான காலத்தை வென்று அனுபவங்களை உரக்கப்பேசும் படைப்புகளையும் மீள் அச்சிற்கு கொணர்ந்து தோழர்கள் அறியச் செய்தல் நலம் பயக்கும் என்று தோன்றுகிறது. தங்குமிடங்களில் மத்தியதர வர்க்கம் சார்ந்தவர்களுடன் அவர் நடத்திய உரையாடல்கள் சுவைபட  தோழர் பி எஸ் ஆரால் தரப்பட்டிருக்கும்.

 

அப்போது பிரதம அமைச்சராக இருந்த  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவரைத்தேடி வந்ததால் கட்சியிடம்  முன் அனுமதி பெறாமல் சந்தித்து தோழர்களின் வழக்குகள் குறித்து பேசிய தவறை செய்துவிட்டதாக பி எஸ் ஆர் விளக்குவார். ஆனாலும் சிலராவது விடுதலை பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் தொழிற்பட்டதை நாம் காணமுடியும்.  சில இடங்களில் பட்ட அவதியில் மனம்வாடி கட்சியில் சில தோழர்கள் உருவாக்கும்சம்பாஷனைகள்குறித்து விமர்சனக் கண்கொண்டு அவர் எழுதியதையும் இக்கடிதங்களில் ஒருவர் உணரமுடியும். சுந்தரராஜ் என்ற புனைப்பெயரிதான் அவர் கடிதங்களை எழுதியுள்ளார்.

அவரின் 18ஆவது கடிதம்  3-7-1947 தேதியிடப்பட்ட ஒன்று. அதில் தோழர்  ஆர் என் கே (நல்லகண்ணு) பற்றி இப்படியொரு பதிவை அன்று பி எஸ் ஆர்  செய்துள்ளார்

இந்தப் பிரதேசத்தில் ( இராமனாதபுரம் பகுதிகளை பற்றிப் பேசும்போது) வேலை செய்யும் நம் கிசான் தலைவர் தோழர் நல்லகண்ணுவைப்பற்றி ஒரு வார்த்தை. இவரைப்பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம். இண்டர்மிடியட்வரை படித்திருக்கிறார். ஆனால் அவர் உண்மையில் ஒரு நல்ல குடியான வாலிபன். பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இருக்கிறார். கிராமம், கிராமமாக சளைப்பின்றி நடந்து வேலைகளை கவனிப்பார். எவ்வளவு வேலையிருந்தாலும் கொஞ்சங்கூட சளைப்பதில்லை. இவர் மாத்திரம் இன்னும் முன்கை எடுத்து தனது வேலைகளைச் செய்வாரானால், அந்த ஜில்லாவில் ஒரு சிறந்த, கிசான் கட்சித் தலைவராக விளங்க முடியும்

இருபதாம் கடிதம் 16-8-1947 தேதியிடப்பட்ட ஒன்று. மதராசில் சுதந்திர தினம்  பதிவுகள் பற்றிய விரிவான கடிதமிது.

“ (ஆகஸ்ட்) 14 ஆம் தேதி இரவு நான் என் பதுங்குமிடத்தைவிட்டு வெளியேறி சரியாக 9.15க்கு சென்னைக்குள் நுழைந்தேன். எங்கே பார்த்தாலும் ஒரே குதூகுலம். ஜனங்கள் ஆயிரக்கணக்கில் எங்கு பார்த்தாலும் போய்க்கொண்டிருந்தார்கள். நான் 10 மணிக்கு கட்சி ஆபீசை அடைந்தேன். அங்கு சிறிதுநேரம் இருந்தபின்னர் கிசான் சபா ஆபிசிற்குச் சென்று படுத்துத் தூங்க முயற்சி செய்தேன். ஆனால் நடு நிசியிலும் ரேடியோ சப்தம் கேட்டது. அரசியல் நிர்ணயசபையின் நிகழ்ச்சிகளை ரேடியோ ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. நான் ரேடியோவின் அருகில் விரைந்து நிகழ்ச்சிகளைக் கவனித்தேன். இடிமுழக்கம்போல் பண்டிதநேருவின் பிரசங்கத்தையும், இறுதியில் மதராஸ் நிலையத்தாரால் அஞ்சல் செய்யப்பட்ட நம் தேசிய மகாகவி பாரதியின் விடுதலை கீதமும் கேட்டேன். ஆம் சுதந்திரம் வந்துவிட்டது. விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால் பாரதி கனவில் கண்ட விடுதலை அல்ல; பூர்ஷ்வா வர்க்கத்தின் கொடுமைகளை வன்மையாக கண்டித்த பாரதிமாத்திரம் இன்று உயிருடன் இருந்திருப்பாரேயானால் அவரும் வேலூர் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பார் என்றெல்லாம் மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்

“…3 மணிக்கு தூங்க முயற்சித்தேன். ஆனால் அடுத்த வீட்டில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருப்பவர்கள் நிகழ்த்திய பிரசங்கங்களும் கூச்சல்களும் என் காதைத்துளைத்தன. ஒரு வினாடி கூட தூக்கமில்லாத சிவராத்திரியாக முடிந்தது.”

ஆகஸ்ட் 15 அன்று அவர் எம் ஆர் வி மற்றும் ஜீவாவுடன் சென்ற இடங்கள் எல்லாம் மக்கள் திரள் பற்றியும் அவர்கள் அறியாமை குறித்த செய்திதனையும் , மாஸ்கோ மேதின எழுச்சியில் காணப்படும் கட்டுபாடு ஏதும் இங்கு இல்லாமை பற்றியும் பி எஸ் ஆர் பதிவிட்டுள்ளார்.  அந்த ஆகஸ்ட் 15ன் மக்கள் உற்சாகம் மிக எமோஷனலானது என இன்று நாம் சற்று நிதானமாக புரிந்து கொள்ள முடியும்.

இருபது கடிதங்களும் இலக்கிய சுவையுடன் அன்று புரட்சிகரபோராளியின் பாட்டைப் பேசுவதை படிக்கும் எவரும் உணரமுடியும்.

23-11-2021

Tuesday, November 9, 2021

விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர் பகுதி 1

                                                   விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர்

                             -    ஆர். பட்டாபிராமன்

சாவர்க்கர் என்றால்  பொதுபுத்தியில் ஏறி நிற்பது அவரது இந்துத்துவா- முஸ்லீம் எதிர்ப்பு அரசியல் என்பதுதான். அவரை காந்திக்கு மாற்றாக தந்தை ஸ்தானம் கொடுக்க விழையும் அரசியலும் தீவிரமாக  பரந்து நிற்கிறது. இணையாக அவரை கடுமையாக அவமதித்து புறந்தள்ளி உதாசீனம் செய்யும் அரசியலும் ஆழமாகவே இருக்கிறது.

இந்தச் சூழலில் சாவர்க்கர் குறித்து சமீபத்தில் வெளியான இளம் ஆய்வாளர் விக்ரம் சம்பத்தின் 1200 பக்க அளவிலான இரு பெரும் ஆங்கில புத்தகங்கள்-சாவர்க்கர் மறந்துபோன கடந்தகால எதிரொலிகள், சாவர்க்கர் மரபிற்கான வாதங்கள் ஆகியன  ஊடகவெளியில் உரையாடல்களை  உருவாக்கிவருகின்றன.



சாவர்க்கர் இப்போது பேசுபொருளாக்கப்பட்டுள்ளார். காந்தி படுகொலைக்குப் பின்னர் மூடுண்டுபோன அவரை பொதுமேடைகளில் பேசவைக்கவேண்டும் என்கிற பெரும் முயற்சியில் வலது அரசியல் ஓரளவிற்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். இதற்கான எதிர்வினை இடது மற்றும்முற்போக்கு முகாம் களிலிருந்து வந்தாலும் சாவர்க்கர் மறுவாசிப்பு என்பது தவிர்க்கவேண்டாத ஒன்றாகியுள்ளது. இதை விக்ரம் தன் புத்தகங்கள் மூலம் சாதித்துள்ளார். கடுமையான உழைப்பை அந்த இளைஞர் தந்துள்ளார். ஆரோக்கியமான விவாதங்களை நம் சமூகம் முன்வைத்து இந்த புத்தகங்கள் எழுப்பும் கேள்விகளை, அல்லது சாவர்க்கரை வைத்து பேசும் அம்சங்களை விவாதிக்கவேண்டும்.

சாவர்க்கர் பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சிகர சாகசங்களில் தன்னை முற்றாக ஒப்படைத்துக்கொண்ட இளம்பருவ வாழ்க்கைக்குரியவர் என்பதை விக்ரம் சம்பத் நிறுவுகிறார். பிரிட்டிஷ் அதிகாரிகள் என சில தனிப்பட்டவர்களை அழித்து ஒழித்தல் (annihilation of enemies என்ற பதத்தை பயன்படுத்தாவிட்டாலும்) என்பதையும் தாண்டி புரட்சிகர அமைப்புவடிவ சங்கிலிபிணைப்புகளில் அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ளமுடியாத இணைப்புகளுடன் தொழிற்பட்டுள்ளனர் என விக்ரம் நிறுவ முயல்கிறார். இதற்கு பெரும் ஆதர்சனமாக சாவர்க்கர் இருந்துள்ளார் என்பது அவரின் மய்யமான முன்வைப்பு.

லண்டனில்  இந்தியா ஹவுசில் இருந்த சூழல் வ வே சு, தி சே செள ராஜன், மதன்லால் திங்கரா, மேடம் காமா, விரேந்திரநாத் , ஹர்தயாள், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என எல்லோரும் ஏதோவொருவகையில் பிரிட்டிஷ் எதிர்ப்பை தீவிரமாக சுவாசித்த காலமது. இரகசிய திட்டங்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள் கொலைகள்- வழக்குகள்  என சாவர்க்கர் சிக்கி இரட்டை ஆயுள்தண்டனை 50 ஆண்டுகளுக்குள்ளாவது- அந்தமான் செல்லுலார் சிறைக்கொடுமைக்கு அனுப்பப்படுதல், அங்கு அவரின் தமையனார் பாபராவுடன்  செக்கிழுத்தல், கயிறு திரித்தல், கால் கை விலங்கிடப்பட்டு  மணிக்கணக்கில் நிற்கவைத்து உடல்நோகும் அவதிக்குள்ளாதல் என்பதெல்லாம் நடந்தது.

இந்தியாவில் எந்த தியாகிக்கும் குறைவில்லாத இந்த தியாகங்களை போற்றிச் சொல்லுதலில் எவரும் குறைகாணமுடியாது. அந்தமான் கொடும் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு குடும்பம், இளம் மனைவியுடன் சேர்ந்து உலகியல் வாழ்விற்கான தாகமிருந்ததும். பிரிட்டிஷ் விதிகளைப் பயன்படுத்தி   கருணைமனுக்களை போட்டதையும் மனிதாபிமானத்தை குருடாக்கிவிட்டு விமர்சிக்கவேண்டிய நிலைப்பாடுகள் பொதுவெளியில் எடுபடுமா எனத்தெரியவில்லை.

அந்தமான், ரத்னகிரி என 14 ஆண்டுகள் சிறைவாசம் கடந்த நிலையிலும் ஊரைவிட்டு செல்ல கட்டுப்பாடு அடுத்து வருகிற  13 ஆண்டுகள் அவருக்கு பிரிட்டிஷ் அரசால் நீட்டிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தது. சாவர்க்கர் தன் விண்ணப்பங்களில் எவ்வளவு பணிவான மொழியை தந்தாலும்- அரசின் அரசியல் சட்ட எல்லைக்குள் நின்று செயல்படுவேன் என்கிற உறுதிமொழிகளை தந்தாலும் பிரிட்டிஷ் பார்வையில் அவர் ஆபத்தானவராகவும் சந்தேகத்திற்குரியவராகவும்தான் பார்க்கப்பட்டார் என்பதை நாம் உணரமுடியும்.

வன்முறை வழியில் விடுதலை, ஆயுதம் நிறைந்த நாடு கம்பீரமானது. ஆயுதம் ஏந்த தெரிந்த இந்துக்களால்தான் அந்த கம்பீரம் உலக அரங்கில் சாத்தியமாகி நிலைக்கும்- எதிரியை நிலைகுலைய செய்யும் என்கிற கருத்துக்கள் வாழ்நாள் முழுவதும் சாவர்க்கருடன்  நின்றவைகளாகும்.

லண்டனில்  சாவர்க்கர் உள்ளிட்டோரை சந்தித்த காந்தி அவர்களுக்கு மறுமொழியாகத்தான் இந்திய சுயராஜ்யம் எழுதினார் என்பது பொதுவாக பேசப்படும்   ஏற்கப்படும் கருத்தாகவுள்ளது. விக்ரம் சம்பத் இதை ஒரு இடத்தில் மறுக்கிறார். அதே போல் கிலாபத் இயக்கத்தையும் ஒத்துழையாமையையும் காந்தி இந்து முஸ்லீம் ஒற்றுமை என முன்னெடுத்ததற்கு எதிர்வினையாகத்தான் சாவர்க்கரின் இந்துத்துவா ஆக்கம் எழுந்தது என்பதும் ஏற்கப்பட்ட ஒன்றாகவுள்ளது. சாவர்க்கரைப் பொருத்தவரை காந்தி இதில் மிகப்பெரிய தவறை செய்ததாகவே பேசிவந்தார்.  காந்தியுடன் சாவர்க்கர் முரண்பட்ட  காந்தியை கடுமையாக ( even below the belt)  விமர்சித்த அமசங்கள் நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன.

சாவர்க்கர் மரபை தூக்கி நிறுத்தவேண்டிய கடப்பாட்டில் விக்ரம் தமது முழு உழைப்பையும் தந்துள்ளார். அத்துடன் நூல் தனது பிரதி பரப்பை வைத்துக்கொள்ளாமல் காந்தி மீதான குற்றப்பத்திரிகையாகவும் விரிவதைப் பார்க்க முடிகிறது

விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர் பகுதி 2

 

2

சாதி குறித்த சாவர்க்கர் பார்வை விவாதகளத்தில் போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பது உண்மைதான். இந்து மதம் என்றாலே அது சாதிகளின் தொகுப்புதான். இந்து என்று சொல்லிவிட்டாலேபோதும் சாதி தானாக ஒட்டிக்கொள்ளும். இந்து என்பவன் சாதி இல்லாமல் இருக்கமுடியாது. எனவே சாதி இல்லாமல் போகவேண்டுமெனில் இந்து என எவரும் இருக்கமுடியாது என்கிற வாதிடல் ஆழமாக தமிழ் சமூகம் உள்ளிட்டு இருப்பதை நாம் காணமுடியும்.



சாவர்க்கர் உரையாடல்களில் சாதிக்கு அப்பாற்பட்டு அனைத்து சாதியினரும் உட்காரவேண்டிய ஒன்றுபட்ட மேடையாக இந்துத்துவா  அமைகிறது. தீண்டாமை அகற்றப்படுதல், சேர்ந்து உணவு உண்ணல், விருப்பப்பட்டு சாதி- வர்ணம் தாண்டிய திருமணம், அனைவரும் கோயிலுக்குள் நுழைதல் போன்ற அம்சங்கள் சாவர்க்கர் உரையாடலிலும் வரும். தீண்டாமை எதிர்ப்பிற்கான வலுவான வாதங்கள் முஸ்லீம்களை முன்னிறுத்தியும் அவரிடம் இருக்கும். இதையெல்லாம் விக்ரம் சம்பத் வெகுவாக கொணர்ந்திருக்கிறார்.

காந்திக்கு சாதிகுறித்து பழமையான வர்ணாஸ்ரம  ஆதரவு பார்வை- அதற்காகவே நிற்கும் பார்வை இருந்ததாக விக்ரம் சம்பத் நிறுவ முற்படும் இடங்களில் அவர் வரலாற்றாசிரியன் என்பதிலிருந்து தடுமாறுவதாகவே தெரிகிறது.  சாதி புரிதலில் சாவர்க்கர் காந்தியைவிட சிந்தனையில் நடைமுறையில் எப்படி மேலான பார்வை கொண்டார் என விவாதித்து இருந்தால் கூட அதை நாம் பேசமுடியும். ஆனால் அம்பேத்கரை காந்தி எதிர்ப்பிற்கு முற்றிலுமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். 1920-30களை மேற்கோள்காட்டி பேசமுடிந்த விக்ரம் சம்பத்தால் 1935ல் caste must go  எனப்பேசி அதில் தொடர்ந்து  பலபடிகளை ஏறிய காந்தியை காணமுடியவில்லை. சமீபத்தில் வெளிவந்த நிஷிகாந்த் கோல்கேவின்  Gandhi against caste  யை பார்த்த எவருக்கும் இந்த விவாதங்களில் விக்ரம் சம்பத்தின் நேர்மை குறித்து சந்தேக நிழல் படியும் என்றே தோன்றுகிறது.

சாவர்க்கர் சாதி குறித்து பார்வை விவாதத்தில் 1932 புனே உடன்பாடு குறித்தும் பேசப்படுகிறது. அந்த உடன்பாட்டை நேதாஜியின் வாதங்களை முன்வைத்து  விமர்சனத்தை விக்ரம் சம்பத்  புத்திசாலித்தனமாக நகர்த்தியிருப்பதுபோல் தோன்றுகிறது. நேருஜியின் அதிருப்தி வாசகங்களும் துணைக்கு அழைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. புனே உடன்பாடு எட்டப்பட்டது குறித்த சாவர்க்கருக்கு கருத்து ஏதாவது இருந்ததா என்பதோ- அப்படி இல்லையென்றால் சாவர்க்கர் இது குறித்து மெளனம் சாதித்தார் என்பதோ விகரம் சம்பத்தால் செளகரியமாக பார்க்கப்படாமல் போகிறது. புரட்சியாளர்கள் குறித்து காந்தியின் மெளனத்தை விமர்சிக்கும் விக்ரம் சம்பத் இங்கு சாவர்க்கரின் மெளனம் குறித்து ஏதும் குறிப்பிடாமல் செல்வது இரட்டை நிலைபாடாக தெரிகிறது.

சாவர்க்கரின் இந்து தேச கட்டுமானம் மிக முக்கிய விவாதப்பொருளுக்குரியது. இந்தியர் என்ற பெயரில் ஒரு மனிதன் ஒரு வாக்கு என்றால் தனக்கு பிரச்சனையில்லை. தனித்த மதம் ஒன்றிற்கு அதன் பெயரில் இடஒதுக்கீடு என்பதை அவர் ஏற்கவில்லை. இந்துக்கள் எவரையும் துன்புறுத்துவதற்கோ வெறுப்பதற்கோ தங்களை திரட்டிக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் இந்துக்கள் மீதான வெறுப்பை அனுமதிக்கமுடியாது. ஒரே மதிப்பு வேண்டும். சிறுபான்மை என்று சொல்லியோ- தாங்கள் ஆண்ட ஆட்சியாளர்கள் என்ற பெருமித உரிமையுடனோ எதையும் கோரமுடியாது என்பதை அவரின் சிந்தனை சாரமாக விக்ரம் சுட்டிக்காட்டுகிறார் .

இந்து மகாசபாவின் பிரச்சார நோக்கங்களில் சாவர்க்கர் மூன்று அம்சங்களை பிரதானப்படுத்தினார் என்று பார்க்கமுடிகிறது.

·         தீண்டாமை ஒழிப்புடன் அனைத்து இந்துக்களையும் இந்து என்ற ஒற்றை அடையாளத்துடன் திரட்டி ஒன்றுபடுத்துவது

·         பள்ளி கல்லூரி மாணவப்பருவத்திலிருந்தே கட்டாய இராணுவப்பயிற்சி- நாட்டை முழுமையாக ஆயுதபயிற்சிகொண்ட தேசமாக்குதல்

·         இந்து ஒற்றுமை என்று நிற்போர்க்கு மட்டுமே இந்துக்கள் வாக்களிக்கவேண்டும்.

மைனாரிட்டிக்கு என்னவெல்லாம் உரிமையோ அல்லது சலுகையோ அது தனித்து இருக்கமுடியாது. அது மெஜாரிட்டிக்குமானதாகவேண்டும் என்ற அவரின் குரலை நூல் நீள நாம் பார்க்கமுடியும்.

அலி சகோதர்களில் ஒருவரான சவுகத்அலியுடன் அவர் நடத்திய உரையாடலில் இந்த அடிப்படைகளை நாம் காணலாம். இந்த உரையாடல் குறித்த சந்தேகங்கள் எழுப்புவர்களை விக்ரம் சம்பத் தனது ஊடக விவாதங்களில் மறுத்துவருகிறார். சவுகத் அலி இது குறித்து எதுவும் பேசவில்லை என்பதை விக்ரம் ஏற்றாலும் சாவர்க்கரின் உதவியாளர் குறிப்புகளில் அந்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாக விக்ரம் பேசிவருகிறார்.

அம்பேத்கரின் பாகிஸ்தான் ஆக்கத்தை விக்ரம் மிக தாராளமாக பயன்படுத்தியுள்ளார். வலது சிந்தனையாளர்கள் தங்கள் பேட்டிகளில் இளைஞர்கள் அதைக் கட்டாயம் படிக்கவேண்டும் எனத் தொடர்ந்து சொல்லிவருவதையும் இணைத்துப்பார்க்கும்போது விக்ரமின் இந்த தாராளம் நமக்கு புரிபடும்.

1939ல் காங்கிரசில் காணப்பட்ட மூன்று நீரோட்டங்கள் குறித்து சாவர்க்கர் பேசியதை விக்ரம் தந்துள்ளார்.  எடுத்த எடுப்பிலேயே காந்திய அகிம்சை இந்துத்துவாவிற்கு பகைமையானது என்ற சாவர்க்கரின் கருத்தைப் பார்க்கிறோம். Gandhian non-violence is inimical to Hindutva என அவர் பேசியுள்ளார். வன்முறைக்காக வன்முறை என்பதை இந்து தத்துவம் ஏற்காவிட்டாலும், தீயவை அழித்து நல்லவை நாட்டிட வன்முறை தேவை. காந்திய சிந்தனை இதை பிரித்துப்பார்ப்பதில்லை என்பது சாவர்க்கரின் விமர்சனம்.

 காங்கிரசில் அடுத்தப்போக்கு சுபாஷ் காட்டும் பார்வார்ட் பிளாக் திசை. அவருடன் சில அம்சங்களில் நாம் (இந்து மகாசபா) உடன்பட்டு இணைந்து பணியாற்றமுடியும். ஆனால் அவரிடத்திலும் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்ற கானல் நீர் இருக்கிறது. இங்கு என்ன வித்தியாசம் என்பது வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது.

எங்கே இணைந்து என்பதை நாம் ஊகித்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஆயுதம் தாங்கிய இராணுவ வலிமையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற துணையுடன்  காங்கிரசை நம்பாமல் பிரிட்டிஷ் எதிர்ப்பு விடுதலைப்போரை நடத்துவது என்கிற பொருளை நூலை வாசிக்கும்போது நாம் புரிந்துகொண்டுவிடமுடியும். இங்குதான் மூஞ்சே- முசோலினி சந்திப்பு, பின்னர் இந்தியா திரும்பி அது குறித்த புகழ்பாடல்கள், ஆரியர் பெருமை உலகளாவிய மீட்பு, இட்லர் ஜெர்மானிய பாசிச வழிமுறைகள் குறித்த உரையாடல்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகவுள்ளன.

ராஷ்பிகாரி- சாவர்க்கர் உறவுகளும் அதன் வழிப்பட்டு நேதாஜி தப்பிச் சென்று அவர் உருவாக்கிக்கொண்ட ஜெர்மானிய- ஜப்பான் உறவுகளும் சாவர்க்கர் கனெக்‌ஷனுடன்விக்ரம் சம்பத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. காந்திய அகிம்சை நிராகரிப்பு என்ற புள்ளியில் சாவர்க்கரை நோக்கி பல்வேறு புரட்சிகர இயக்கங்கள்- பகத்சிங் ராஜகுரு ஆசாத் உட்பட ஈர்க்கப்பட்ட கதையாடலாக விக்ரம் சம்பத் இப்புத்தகத்தை நகர்த்தியிருப்பதாக என் வாசிப்பு மனம் திறக்கிறது.

சாவர்க்கரின் மொழிக்கொள்கையில் விதந்து பேசப்படுவது அவரின் மராத்திய மொழித்தூய்மை முன்னெடுப்புகள். தாய்மொழி பற்று என்பதிருந்தாலும் இந்தியாவிற்கு பொதுமொழி என்பது தேவநாகரியில் உருது கலப்பில்லாத சமஸ்கிருத இந்தி என்றே சாவர்க்கர் பேசுகிறார். அவரே இலக்கிய புலமைக்கொண்ட மராத்திய கவிஞர் என்றாலும் கலை கலைக்காக என்பது வரையறைக்கு உட்பட்டது எனக்கருதியுள்ளார். நாடு பற்றி எரியும்போது அதை அணைக்கும் வேலைதான் தலையாயது- நாட்டின் நன்மையை கருதாத இலக்கியப் போக்கை அவர் நிராகரிப்பதையும் காணமுடிகிறது. அவசியமெனில் இலக்கியகர்த்தாக்களும் பேனாவை முறித்தெறிந்துவிட்டு துப்பாக்கியைத் தூக்கவேண்டும் என இலக்கிய அமர்வில் அவர் பேசியதைப் பார்க்கிறோம்.

தனது எந்த உரையாடலிலும் துப்பாக்கியை அழைத்துக்கொள்ளும் உளவியல் அவரிடம் தொழிற்பட்டுள்ளதையே ஊகிக்கமுடிகிறது. அகிம்சை நிராகரிப்பும் வன்முறை ஆராதனையும் சாவர்க்கருக்கு மட்டுமல்லாமல் விக்ரம் சம்பத்திற்கும் மிக உகந்ததாகவே நூலைப் படிக்கும் என்னால் கருதமுடிகிறது.

சாவர்க்கரின் பொருளாதார கருத்துக்கள் இந்து மகாசபா ஆண்டுகள் என்ற அத்தியாயத்தில் சிலவரிகளில் காணக்கிடைக்கிறது. மூலதனமாக இருந்தாலும் உழைப்பாக இருந்தாலும் அனைத்தும் தேசநலனுக்கு தன்னை கீழ்ப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பொதுவிவரணை இருக்கிறது. எப்படி- எவ்வாறு என்ற விளக்கங்கள் இல்லை. சுயநலத்திற்கு இடங்கொடாமல், இலாபம் என்றால் பங்கிட்டுக்கொள்ளவும், நட்டம் என்றால் அதனையும் பங்கிட்டு ஏற்கவும் வேண்டும். தனியார் நிறுவனங்களவிட அவசியமானது சிறப்பானது எனக் கருதக்கூடிய சில கேந்திர தொழில்களை தேசியமயமாக்கும் இசைவு அவரிடம் வெளிப்பட்டுள்ளது.

விவசாயத்திலும் நிலப்பிரபுக்கள்- விவசாயிகள் இணக்கத்தை சாவர்க்கர் பேசினார் என விக்ரம் சம்பத் காட்டுகிறார். State cultivation with trained peasants  என்பதும் அவரால் ஆலோசனையாக தரப்பட்டுள்ளது. தேசத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வேலைநிறுத்தங்களையும் கதவடைப்புகளையும் அனுமதிக்கக்கூடாது என்பது அவரது கருத்து.

தனியார்சொத்து என்பது சட்டவிரோதமானதல்ல. எந்தவித ஈடும் கொடுக்காமல் சொத்துபறிப்பு அரசாங்கத்தால் செய்யப்படவே கூடாது. அந்நிய மூலதனம் மற்றும் தொழில்களுக்கு ஈடுகொடுக்க வளரும் இந்திய தொழில்களை பாதுகாக்கும்தொழிற்கொள்கை வேண்டும். இந்துக்களின் பொருளாதார நலன்களை புறக்கணித்தால் தேசவளர்ச்சி பாதிக்கும். இந்துக்கள் மத்தியில் நிலவும் வர்க்கவேறுபாடுகளை தீர்த்து முஸ்லீம் சமஸ்தானங்களில் அரசு உதவியுடன் நடைபெறும் வர்த்தக போட்டியை எதிர்கொள்ளவேண்டும் போன்ற சில கருத்துக்களை நாம் பார்க்கிறோம்.

விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர் பகுதி 3

 

3

1942 ஆகஸ்ட் பிரிட்டிஷாரே வெளியேறு போராட்டத்தை குவிட் இந்தியாவா ஸ்பிளிட் இந்தியா போராட்டமா எனக் கேலி பேசியது சாவர்க்கர் தலைமை. அப்போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை இந்து மகாசபா எடுத்தது. காந்தி, நேரு உள்ளிட்ட பலதலைவர்கள் கைது செய்யப்பட்டதை சாவர்க்கர் ஏற்காமல் விடுவிக்கவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

குவிட் இந்தியா போராட்டம் எவருக்கும் என்ன என்ற தெளிவின்றி அறிவிக்கப்போராட்டமாக முன்நிறுத்த விக்ரம் சம்பத் முயற்சிக்கிறார். இதற்கு மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் காந்தி குறித்த விமர்சனத்தை துணைக்கு வைத்துக்கொள்கிறார். இது தேசவிரோத போராட்டம் என அம்பேத்கார் வைத்த விமர்சனத்தை எடுத்துக்காட்டுகிறார்.



அதேநேரத்தில் இந்து மகாசபாவில் சில பிரிவினருக்கு சாவர்க்கர் மீது கடுமையான விமர்சனம் எழுந்ததையும் விக்ரம் காட்டுகிறார். இந்துக்கள் முழுமையாக காந்தி பக்கம் போய்விட்டனர்- இந்து மகாசபா அந்நியமாகியுள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. ஷியாமா பிரசாத் போன்றவர்கள் இந்து மகாசபா தனது தனித்த போராட்டத்தை அறிவிக்கும் என்று சொல்லும் அளவு நிர்ப்பந்தம் உருவானது. பம்பாய் இந்து மகாசபா சார்பில் நிலைப்பாடு சரியானதே- இந்துக்கள் எவரும் பங்கேற்காதீர் என்று சாவர்க்கர் அணி ஒன்று பேசியது. இந்த அணியில் முக்கிய செயல்பாட்டாளராக கோட்சே முன்நின்றுள்ளார்.

அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் களத்தில் இல்லாது சிறையில் இருந்த சூழலில் முகர்ஜி- ஜின்னா சந்திப்பு நடந்தது. உடன்பாடு ஏதும் அவர்களால் எட்டமுடியவில்லை என்பதை விக்ரம் கொணர்ந்துள்ளார். அதேபோல் சாவர்க்கர்- ஜின்னா சந்திப்பிற்காக நாள் குறிக்கப்பட்டு அது நடைபெறாமல் போனது. எவர் எவரைப்போய் பார்ப்பது என்கிற ஈகோ பிரச்சனையும் இருந்தது. சாவர்க்கர் ஜின்னாவை போய் பார்க்க இறுதியில் சம்மதித்தார். இந்த செய்தியும் விக்ரமால் சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு சாவர்க்கர் சேலம், மதுரை கூட்டங்களுக்கு வந்துள்ளார். மதுரை அவர்களின் இந்து மகாசபை மாநாடு. டிசம்பர் 1940ல் நடந்துள்ளது. இம்மாநாடு குறித்த குறிப்பை வைஸ்ராய் லண்டனுக்கு அனுப்பியுள்ளார். டொமீனியன் அந்தஸ்து ஏற்பு, மைனாராட்டிகளுக்கு சட்டப்படியான உரிமை, பாகிஸ்தான் பிரிவினை எதிர்ப்பு, இந்திய இளைஞர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி, போர்க்கருவிகள் உற்பத்தி தொழில்கள், கோரிக்கைகள் தீர்வில்லை எனில் போராட்டம் போன்ற அம்சங்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சாவர்க்கர் 1941 மே 28ல் முழக்கம் ஒன்றை அழுத்தமாக தனது 59 வயதிற்கான செய்தியாக தருகிறார். Hinduise all politics and militarise Hindu Kingdom. அனைத்து அரசியலையும் இந்துமயப்படுத்து- இந்து ராஜ்யத்தை இராணுவமயமாக்கு. இதை செய்தால் இருள் விலகும் எனப்பேசியதை விக்ரம் தந்துள்ளார். முஸ்லீம்களை பிரித்தாண்டும் இதை செய்யவேண்டும் என மூஞ்சேவுடன் சாவர்க்கர் பேசுகிறார்.

அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்தது போல சாவர்க்கரையும் கிரிப்ஸ் குழு சந்திக்கிறது. இதையொட்டி 1942 மார்ச்சில் தங்களது கோரிக்கைகளை இந்து மகாசபா வடித்தெடுக்கிறது. ஆயுத சட்டத்தை தளர்த்து- துப்பாக்கி ஏந்த அனுமதி, தேசிய இராணுவம் அமைந்திட நிதி வழங்குதல், போர்விமானம், போர்க்கப்பல், ஆயுத தளவாட பாக்டரிகளை உருவாக்குதல் போன்றவை கோரிக்கைகள்.

கிரிப்ஸ் உடன் இந்தியா யூனிட்டரி ஸ்டேட்- ஸ்டேட் வித்தின் ஸ்டேட் கூடாது என்ற விவாதத்தை சாவர்க்கர் மேற்கொள்கிறார். இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருக்கவில்லை என்ற மாற்றுக் கருத்தை கிரிப்ஸ் வெளியிட்டார். சாவர்க்கர் அதை ஏற்கமுடியாதென்றார். பலமொழிகள், பல மதங்கள் இருப்பது உண்மை என்றாலும் கலாச்சாரரீதியாக, நிர்வாகரீதியாக இந்தியா மத்திய ஆட்சியை- மாகாணங்களைக்கொண்டிருக்கிறது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பொருந்தாது. அப்படியே பேசப்பட்டாலும் அதை முஸ்லீம்களுக்கு மட்டும் என பேசுவதை ஏற்க முடியாது என தன் வாதத்தை கிரிப்ஸிடம் முன்நிறுத்தியதாக விக்ரம் சம்பத் காட்டுகிறார்.

லூயிபிஷருக்கு கொடுத்த பேட்டியில் அமெரிக்காவில் சிறுபான்மையினரான நீக்ரோக்களுக்கு தனி நாடு சாத்தியமா என்ற எதிர்கேள்வியை சாவர்க்கர் முன்வைத்தார்.  ட்ரெனர் எனும் பத்திரிகையாளர் முஸ்லீம்களை எப்படி நடத்துவீர்கள் எனக் கேட்டதற்கு நீக்ரோக்கள் போல நடத்துவோம் என சாவர்க்கர் பதில் சொன்னதை விக்ரம் தந்துள்ளார். உலகம் தன்னலம் என்பதில்தான் செயல்படுகிறதே தவிர பைபிள் வாசகங்களால் அல்ல எனவும் சாவர்க்கர் பதில் தருவதைப் பார்க்கிறோம். காந்தியின் உண்ணாநோன்பு பற்றிய கேள்விக்கு அது சரி என ஏற்றால் ஹிட்லர் எதிர்த்து சர்ச்சில் உண்ணாநோன்பிருக்கலாமே ஏன் இல்லை என பதில் தருகிறார்.

சாவர்க்கர் குறித்து இக்காலத்தில் பம்பாய் கவர்னர் ரோஜர் லும்லே இரகசிய குறிப்பு ஒன்றை அனுப்புகிறார்.

“ நமது தற்காலிக கூட்டாளி ஆனால் ஆபத்தான நண்பன். முஸ்லீம்களின் எதிரி, அதே நேரத்தில் பிரிட்டிஷ் எதிரியும் கூட. உள்நாட்டு அரசியலில் காந்தி எதிர்ப்பாளர். காந்தியின் அகிம்சையை எதிர்ப்பவர். தனிநபர்கொலை மற்றும் கொரில்லாமுறைகளில் நம்பிக்கையுடையவர். வைஸ்ராய் கவுன்சிலில் காங்கிரஸ் இல்லாமல் முஸ்லீம்லீக்- இந்து மகாசபா மட்டும் இருந்தால் நாய்சண்டை நடக்கும். இன்று பஞ்சாப் பகுதியினர் இராணுவத்தில் அதிகமாக இருக்கும் நிலையில் இராணுவத்தை இந்தியமாக்குவது எனப்போனால் ஜின்னா எதிர்ப்பார். சாவர்க்கருக்கோ இந்து இராணுவம் வேண்டும். பிறகேள்விகளிலும் வேறுபாடுகள்தான்

மேற்குறித்த இரகசிய குறிப்பு அவரைக்குறித்த சரியாக அனுப்பப்பட்ட சித்திரம் என்றே கருதலாம்.

1942 ஜூலையில் அவரது ஜம்மு காஷ்மீர் சொற்பொழிவுகளில் அப்பகுதியை “Hindudom’s Northern Watchman”- இந்துராஜ்யத்தின் வடக்கு காவற்காரன்  எனக் குறிப்பிட்டு அவர் பேசுவதைப் பார்க்கிறோம்.

ராஜாஜியோ அல்லது வ வே சு வோ சித்திரகுப்தன் பெயரில் சாவர்க்கர் சரிதம் எழுதியிருக்கலாம். சாவர்க்கரே தன்னைப்பற்றி சித்திரகுப்தன் பெயரில் எழுதிக்கொண்டவர் என்ற குற்றச்சாட்டு நிலவும் சூழலில் விக்ரம் இதைச் சொல்லியிருக்கிறார். ஊடக பேட்டிகளில் ராஜாஜிதான் நிச்சயமாக எழுதினார் என சொல்லவில்லை என தற்காத்துக்கொள்ளும் சம்பத் ராஜாஜி எழுதினார் என்பதை மீண்டும் இப்புத்தகத்தில் வ வே சு பற்றி சொல்லாமல் ( பக் 333 Leaning on a broken reed chapter) தருவதை பார்க்கமுடிகிறது.

குவிட் இந்தியா பற்றி பேசுபவர்கள் கம்யூனிஸ்ட்கள் துரோகம் என்பதை பேசாமல் போவதில்லை. விக்ரமும் இதை சற்று சாமர்த்தியமாக செய்துள்ளதைப்போல் தெரிகிறது. பிரிட்டிஷ் உள்துறை சர் ரெஜினால்டிற்கு சி பி அய் பொதுச்செயலர் பி சி ஜோஷி எழுதிய கடிதம் சுட்டிக்காட்டப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் பிரிட்டிஷ் ஏஜெண்ட்களாக- சொந்த நாட்டுப் போராளிகளுக்கு எதிராக நின்றதை அக்கடிதம் பறைசாற்றுகிறது என்பதை மேற்கோள்கள் மூலம் சம்பத் காட்ட விழைகிறார். இதற்கு எம் ஆர் மசானி, ஓவர் ஸ்டீரிட்-விண்ட்மில்லர், மஜூம்தார்களை விக்ரம் துணைக்கு வைத்துக்கொள்கிறார்.

இதை சி பி அய் மறுத்துள்ளது- ஆதாரம் ஏதும் கிட்டவில்லை என மஜூம்தார் சொன்னதை புத்தக பிரதியில் சொல்லாமல் விக்ரம் நோட்ஸ் பின்னிணைப்பில் தருவதைக் காண்கிறோம். பிரதியில் மறுப்பும் இடம்பெற்றிருந்தால் வரலாற்றாசிரியர் சாய்வு சற்று மட்டுப்பட்டிருக்கும்.

இந்து மகாசபா தலைவராக சாவர்க்கர் செயல்பட்ட காலத்தில் குழு கருத்துவேறுபாடுகள் விமர்சனங்கள் எழுந்தன.  ஷியாமாபிரசாத்துடனும் வேறுபாடு ஏற்பட்டது. ஹெட்கேவர் காலத்திலேயே ஆர் எஸ் எஸ் மேடையை காங்கிரஸ் எதிர்ப்பிற்கு பயன்படுத்தவேண்டாம் என்று சொல்லப்பட்டதில் இந்து மகாசபா எரிச்சல் அடைந்தது. கோல்வால்கர் பொறுப்பிற்கு வந்தவுடன் மிலிட்டரி டிபார்ட்மெண்ட் இனி இல்லை. அரசாங்க உத்தரவுபடி அது கலைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

ராஜினாமா செய்துவிடுவதாக அடிக்கடி சாவர்க்கர் சொன்னாலும் கான்பூர் மாநாட்டில் போட்டியிடுவேன் என்கிற நிலைப்பாட்டால் தொடர்ந்தார். ஆர் எஸ் எஸ் குறித்த விமர்சனம் சாவர்க்கரிடம் இருந்தது. அவர்கள் பிறப்பார்கள்- ஆர் எஸ் எஸ்ஸில் சேர்வார்கள் பின் மரிப்பார்கள் என்கிற அவர்கள் அரசியல் வெளிக்கு வரத்தயங்குவது குறித்த விமர்சனத்தை சாவர்க்கர் வைத்தார். ஆனால் பலமேடைகளில் இரு இயக்கத்தலைவர்களும் ஒன்றாக பயணித்த விவரங்களை சம்பத் நிறையவே தருகிறார். இரு இயக்க உறவுகள் குறித்து பிரிட்டிஷ் நிர்வாகம் அனுப்பிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

சாவர்க்கருக்கு அவரது 61வது பிறந்தநாள் விழாவில் புனா விழாக்குழுவினர் சார்பில் 28 மே 1943ல் ரூ 1,22,912 பணமுடிப்பு தரப்படுகிறது. இதைத்தவிர பிறகமிட்டிகள் சார்பில் ரூ 71500 கொடுக்கிறார்கள். பெருந்தொகை கிடைத்ததால் இனி தனிப்பட்டவர்கள் தனக்கு செய்துவந்த உதவி போதும் என சாவர்க்கர் சொல்லிவிடுகிறார். ஆனால் தன்னிடம் மிகவும் விசுவாசமாக வேலைபார்த்து உழைத்தவர்களுக்கு ஊதியத்தை கூட்டித்தராமல் இருந்தார். அவரின் மெய்க்காப்பாளர் அப்பா காசர், தனிச்செயலர் கஜன்ராவ் டாம்லே, செயலர் பிதே குருஜி ஆகியோர்க்கு கொடுக்கப்பட்ட ஊதியம் போதவில்லை என்ற கோரிக்கையையும் அவர் பொருட்படுத்தவில்லை. பிதே வெளியேறிவிட்டார் என்ற செய்தியையும் தனஞ்செய் புத்தகத்தை சுட்டிக்காட்டி விக்ரம் தந்துள்ளார்.

கஸ்தூர்பா மறைவின்போது ஆறுதல் தெரிவித்து காந்திக்கு சாவர்க்கர் தந்தி அனுப்பினார். ஆனால் கஸ்தூர்பா நிதி என்பதை கடுமையாக விமர்சித்தார். கஸ்தூர்பா நாட்டிற்காகபட்ட துன்பங்கள் அவ்வளவு குறிப்பிடத்தகுந்ததா என்கிற கேள்வி அவரிடமிருந்து வந்தது. பெயர் தெரியாத தியாகம் நிறைந்த ஏராள பெண்மணிகள் இருக்கின்றனர். அவர்களை அறிந்து அவர்களுக்கு உதவுவோம் என்ற பொருளில் அவர் பேசிவந்ததை சம்பத் சுட்டிக்காட்டுகிறார்.

1944 பிப்ரவரியில் அமெரிக்கர் தர்ஸ்டன், ஹோவர்ட் டினோவன் சந்திப்பு உரையாடல்களில் நாட்டுப்பிரிவினையை ஏற்கவே முடியாது. காந்திய அரசியல் என்பது   dreamy nonsense , அவரது அகிம்சை stupid என்கிற கடுஞ்சொற்களை வீசுகிறார். ராஜாஜி பார்முலா என்பது பெரிதாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது. ஜின்னா அதை நிராகரித்துவிட்டார். இருந்தாலும் சாவர்க்கர் ராஜாஜியை பாகிஸ்தானிய காங்கிரஸ்காரர் எனக் கேலி பேசியதைக் காண்கிறோம்.

காந்திய அரசமைப்புத் திட்டம். சோசலிஸ்ட்களின் திட்டம். எம் என் ராயின் திட்டம் என்று வெளியிடப்பட்டது போலவே இந்து மகாசபா சார்பில் சுதந்திர ஹிந்துஸ்தான் அரசியலமைப்பு திட்டம் ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கென கமிட்டி  மே 1944ல் அமைக்கப்பட்டு விவாதித்து தங்கள் திட்டத்தை அவர்கள் வெளியிட்டனர். அதன் சில முக்கிய அடிப்படைகள் தரப்படுகிறது.

·         நாட்டின் பெயர் இந்தியா அல்ல ஹிந்துஸ்தான்

·         இருபக்க நலன் சார்ந்த உறவு அடிப்படையில் பிரிட்டன் உறவு இருக்கும்

·         பாகிஸ்தான் எனக்கோரப்பட்டுவரும் பகுதி உட்பட அனைத்துப்பகுதிக்கும் இவ்வரசமைப்பு பொருந்தும். பிளவுபடுத்த முடியாத ஒரே ஹிந்துஸ்தான்

·         அரசாங்கம் ஜனநாயக, குடியரசாக ஃபெடெரல் தன்மையுடன் இருக்கும். எஞ்சிய அதிகாரம் மய்ய அரசிடம் இருக்கும். இரு அவை முறை இருக்கும்

·         பொதுஜனவாக்கெடுப்பு, மக்கள் முன்முயற்சியில் சட்டமியற்றல்- திருத்தம், தேர்ந்தெடுக்கப்பட்டவரை திரும்ப அழைக்கும் உரிமை இருக்கும்

·         அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கும்- இரண்டும் மக்களுக்கு கடப்பாடனதாக இருக்கும்

·         அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள்

·         இராணுவத்தில் பயிற்சி வாய்ப்பு

·         21வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை- இதில் ரிசர்வேஷன் வைட்டேஜ் என்பதில்லை

முகப்புரையில் ஹிந்துஸ்தான் மக்களாகிய நாங்கள் சுதந்திர பிரிக்கமுடியாத அரசை உருவாக்குகிறோம். இறையாண்மை மக்களிடத்தில் இருக்கும். மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் வளர்ச்சிக்கும் முழு வாய்ப்புகள் சொல்லப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள் என 16 அம்சங்களை தந்துள்ளனர்.

·         குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமைகள்

·         சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டங்கள் பாரபட்சமாக இருக்காது

·         அனைவருக்கும் இலவச அடிப்படைக்கல்வி. சாதி, நிறம், கொள்கை அப்பாற்பட்டு கல்விக்கூடங்களில் சேர உரிமை

·         உரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமை

·         உடல் ஆரோக்கிய காப்பிற்கான சட்டங்கள்

·         உயிர்வாழ, சுதந்திரமாக இருக்கும் உரிமைகள்

·         சொத்துரிமை- சுரண்டல் இல்லாமல் செல்வம் தேடுதல்

·         உழைப்பவர்க்கு வாழ்வூதியம்- தாய் சேய் நலம்- வயது மூப்பு பாதுகாப்பு சட்டங்கள்

·         அமைதியாக ஆயுதங்கள் இன்றி பொது அமைதிக்கு குந்தகம் இல்லாமல் கூடும் உரிமை- சங்கம் சேரும் உரிமை

·         பொதுஒழுங்கிற்கு உகந்து மதவழிபாட்டுரிமைகள். எந்த மதத்திற்கு ஆதரவாகவோ கட்டுப்படுத்தக்கூடிய வகையிலோ சட்டங்கள் இயற்றப்படமாட்டாது

·         ஹிந்துஸ்தானில் அரசு மதம் என ஏதுமிருக்காது

·         அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் செல்லும் உரிமை

போன்ற சில அம்சங்களை சம்பத் புத்தகத்தில் நாம் பார்க்கலாம்.

முஸ்லீம் லீக் பாகிஸ்தான் நாள் என அனுசரித்தால் அகண்ட ஹிந்துஸ்தான் – பாக் விரோதநாள் என இந்து மகாசபா அனுசரித்தது. அக்டோபர் 1944ல் இதற்கான மாநாட்டையும் நடத்தியது

தமிழ்நாட்டில் புகழ்வாய்ந்த பி வரதராஜூலு நாயுடு சாவர்க்கர் இந்து மகாசபா தலைவராக இருந்த காலத்தில் அவரது அணியிலிருந்து அவருடன்  பயணித்தவராக இருந்துள்ளார் என்பதை சம்பத் புத்தகத்தில் பல இடங்களில் பார்க்கலாம். 1945ல் வைஸ்ராய் வேவல் அனுப்பிய குறிப்பொன்றில் இந்து மகாசபா நூதனமான ஒன்று. அதில் உள்ள பல உறுப்பினர்கள் சாவர்க்கர், முகர்ஜியைவிட  காந்தியை பின்பற்ற விழைபவர்கள் என எழுதியுள்ளார்.