ஆர் எஸ் எஸ் நகர்வு கட்டங்கள்
(சில தொடுபுள்ளிகளை முன்வைத்து)
இக்கட்டுரை
ஆர் எஸ் எஸ் குறித்த வரலாறல்ல. அவர்கள் வீச்சுடன் வளரத்துவங்கிய காலத்தின் சில புள்ளிகளைக்
காண்பது. தாங்கள் விழையும் பிம்பத்தை இந்தியாவில் கட்ட எப்படி அவர்கள் தங்களை தக அமைத்துக் கொண்டு வருகிறார்கள்
என்பதை தொட்டுக் காட்டுவது என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
ஆர் எஸ் எஸ் அடிமட்ட வேர்க்கால் வேலைகளை ஷாகா எனும் கிளைஅமைப்புகள் மூலம் நடத்தி வருகிறது. 2016ல் கிடைத்த தகவல்படி ஷாகா -கிளைகள் 57000 தினசரி நடைபெற்று வருகின்றன. வாரக்கூட்டங்கள் 14000, மாதம் 7000 issue based ஆக நடைபெறுகிறதாம். இதில் சற்றேறக்குறைய 20 லட்சம்பேர் பங்கேற்றுள்ளனர். இப்போது இது மேலும் கூடியிருக்கலாம். 36000 வெவ்வேறு இடங்களில் இக்கூட்டங்கள் நடந்துள்ளன. பன்முகத் தன்மைகொண்ட இந்தியாவை ஓர்முனையில் ஒன்றுபடுத்துவதற்கான பயிற்சியை ’பிரச்சாரக்’ என நியமிக்கப்படுபவர்கள் பெற்று அதை போகுமிடங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
ஹெக்டேவரும் கோல்வால்கரும் character building என்பதை மய்யமாக வைத்து ஷாகா- கிளைச் செயல்பாட்டை நடத்தினால் பின்னர் வந்த தியோரஸ் ’கல்வி, பழங்குடிகள் , ஊரக வளர்ச்சி போன்ற சமூக சேவைகளின் பக்கம்’ அமைப்பை கவனப்படுத்தினார். தலித்கள் மீதான கரிசனத்தை வெளியிட்டார். முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் கூட அமைப்பில் சேரலாம் எனப் பேசினார். அதன் பின்னர் சேவைத்திட்டங்கள் குறிப்பாக மருத்துவம் கல்வியில் அவர்கள் கவனம் குவிந்தது.
1989லேயே 5000 service projects உருவாக்கப்பட்டு செயல்படுத்தலானது. 2015ல் 1.65 லட்சம் திட்டங்கள் எனச் சொல்வது வியப்பாக இருக்கிறது. சேவைப்பணிகள் Seva work என்பதில் அவர்கள் கவனம் கூடியது. மன்மோகன் வைத்யா எனும் அதன் தலைவர் என்ன உணவு என்ற நிபந்தனையின்றி - மாட்டுக்கறி உணவு எடுத்துக்கொள்பவரும் அமைப்பில் சேரமுடியும் என்றார். எங்கு பசுகொலை என்பது கலாச்சாரமாக பேணப்படவில்லையோ அங்கு (திரிபுரா போன்று-) நடந்தால் ஆட்சேபணை செய்ய முடியாது என சுனில் தியோதர் எனும் அதன் தலைவர் பேசினார்.
இந்தியா நகரமயமாகி வருதலும், 2025ல் 40 சதத்தை தாண்டப்போகும் மத்தியதர வர்க்கத்தின் பெருக்கமும்-, செல்போன் வளர்ச்சியும் சங் பரிவார் வளர்ச்சிக்கு சாதகமான சூழலைக் கூட்டியுள்ளன எனலாம். ஆர் எஸ் எஸ் மிக முக்கிய தலைவர்களுள் ஒருவரான தத்தரேயா ஹோசபலே அனைத்து மாநிலங்களிலும் ஆட்சிக்கு பாஜக வருவது என்பதே அங்கு சமூக மாற்றம் கொணரத்தான் எனப்பேசினார். பொருளாதார விஷயங்களைவிட ethno nationalism கவ்விப் பிடிக்கும் அம்சம் என ஆர் எஸ் எஸ் கருதியிருக்கலாம். இந்து கலாச்சாரம் எனும் பெரும் பரப்பில் தீட்டப்படும் குறு ஓவியங்களாக தல மற்றும் பழங்குடி கலாச்சாரங்களை அமர்த்துதல் எனும் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர். அதாவது assimilation of all Hindu groups.
Social engineering- sanskritisation- social unity ( pan Hindu Unity of all castes) என்கிற சேர்மானங்களை தங்கள் தேவைக்கேற்ப குழைத்து தாராள பொருளாதாரா நடவடிக்கைகளுடன் ஏழை எளியவர்களுக்கு சில safety net என்று சங் பரிவார் பாஜக மூலம் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு உரையாடல்களில் 80:20 என்று இந்து மற்றும் இந்து அல்லாதவர்களை பாகுபடுத்தி ஒருபக்கம் பேசினாலும் , அடிப்படை வசதிகள் அனைவருக்கும் (சாலை- தண்ணீர்- மின்வசதி)- அனைவருக்கும்- வளர்ச்சி அனைவருடனும் வளர்ச்சி போன்ற முழக்கங்களால் அதை சரி கட்டமுடியும் என அவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர். பிறர் ஆக்கப்பட்டவர்களில் ’otherised’ சில பகுதிகளை துணையாக்க முடியுமா என்ற முயற்சியும் (triple talaq) இஸ்லாமிய பெண்கள் சக்தியை சற்றாவது சாதகமாக்கிடவும் முயற்சி நடைபெறாமல் இல்லை.
சங் பரிவாரில் வேலை பார்க்கக்கூடிய பல்வேறு அமைப்புகள் இடையே வேறுபாடே இல்லை என சொல்ல முடியாது. ஆனால் அவற்றை ஓரளவிற்கு இணக்கப்படுத்தி வேறுபாடுகள் பெரிதாகி பிளவிற்கு வழிசெய்யாமல் ஒருவகை balance யை ஆர் எஸ் எஸ் செய்கிறது. இந்தியா போன்ற பெரும் நிலப்பரப்பு மக்களிடையே நவீனமாக்கலும் - ஓர்படித்தாக்கலும் பெரும் சவால் நிறைந்தவை. அந்த சவாலை ஆர் எஸ் எஸ் தனது ’திருஷ்டாந்தத்தில்’ முன்னிலைப் படுத்தி எடுத்துக்கொண்டுள்ளது. எதிர்ப்புகளை வாக்கு- தேர்தல் அரசியல் -வெற்றி - அதிகாரம் மூலம் சமாளித்து வருகிறது.
வெளிநாடுவாழ் இந்தியர் என்பதை தனக்கு உகந்த தொகுதியாக ஆர் எஸ் எஸ்- பாஜக மாற்றி வருவதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. இந்த long distance nationalism மூலம் தன் நிதி கிட்டங்கியையும் அதனால் நிறைத்துக்கொள்ள முடிகிறது என்ற செய்திதனை நாம் காண்கிறோம்.
விவசாயிகள் போராட்டம்- மோடி அரசு பின்வாங்கல் என்பதெல்லாம் இருந்தாலும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள், இடதுசாரிகள் மற்றவர்கள் போலவே பயிர்காப்பீட்டு திட்டம்- மண்வளம் போன்றவற்றுடன் விவசாயிகளுக்கான மின் சந்தை என்றும் ’பாலிசி மேட்டர்’ பேசுவதையும் காணலாம். chinese charateristics என சீனா சொல்வது போல் indian characteristics not western என அவர்கள் பேசுவதையும் பார்க்கவேண்டும்.
கோல்வால்கரை
அடிக்கடி சுட்டிக்காட்டித்தான் காங்கிரஸ்- இடதுசாரிகள் ஆர் எஸ் எஸ்
விமர்சனங்களை பொதுவாக வைத்து வருவதைக்
காண்கிறோம். அவை ஆர் எஸ்
எஸ்காரர்களை பாதிக்குமா எனத் தெரியவில்லை. அவரின்
நீண்ட தலைமைக் காலத்தில் அவர்
அரசியல் அற்ற apolitical நிலைப்பாடுகளுக்கு
முக்கியத்துவம் தந்தார் என
அவர்மீது உள் அமைப்பில் விமர்சனம்
இருந்தது. ஆனால் கோல்வால்கர் காலத்தில்
காந்தி படுகொலையின் கருப்பு நிழல் அவ்வியக்கம் மீதும் படிந்த சூழல் இருந்ததையும் சேர்த்துதான்
அவரது காலம் பரிசீலிக்கப்படும்.
மதுகர் தியோரஸ் (பாலசாகேப்) கோல்வால்காரால் முன்னிலைப்படுத்தப்பட்டவர். அவரும், அவர் சகோதரர் முரளிதர் தியோரஸ் இருவருமே ஹெக்டேவரால் ஆர்.எஸ்.எஸ் கேடர்களாக ஆக்கப்பட்டவர்கள். பாவ்ராவ் தியோரஸ் (முரளிதர்) 1950களிலேயே கோல்வால்கார் எதிர்த்து கருத்தாடினார். தன்னை இயக்கத்திலிருந்துவெளியே வைத்துக்கொண்டார். இந்த பாவ்ராவ் தான் வாஜ்பாயி, அத்வானி, தீனதயாள் உபாத்யாய் போன்றவர்களை ஈர்த்தவர். அவர்களை அரசியல் ஆர்வத்தை தூண்டியவர்.
’வித்யபாரதி’ இன்று அரசில்லாத கல்விப்புலத்தில் மாபெரும் தேசிய சக்தியாக வளர்ந்துள்ளதற்கு விதையை ஊன்றியவர் பாலசாகப் தியோரஸ். அவரும் அவர் சகோதரரும் மாணவர்களை நோக்கி தங்களை கவனப்படுத்திக்கொண்டனர். மாணவர், கல்வி- மருத்துவ சேவை, பொதுத்தொண்டு, அரசியல் என ஆர் எஸ் எஸ் முகத்தை அவர்கள் தீவிரமாக மாற்றத்துவங்கினர்.
கோல்வால்கர் தத்துவத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தபோது உள் அமைப்பை வலுப்படுத்துவதில் தியோரஸ் ஆர்வம் கொண்டார். தியோரஸை 1965ல் பொதுச்செயலராக்கினார் கோல்வால்கர். ஆர் எஸ் எஸ் தலைவர்கள் தியோரசின் policy activismதான் இனி தேவை என்பதை ஏற்றுக்கொண்டு கோல்வால்கருக்கு அடுத்த சர்சர்சங்சாலக் பதவியை கொடுத்து தலைவர் ஆக்கினர். 1974ல் இந்த தலைமை மாற்றம் நடந்தது.
அவர் பொறுப்பேற்றவுடன் சாதி எனும் கொடுமை- குறிப்பாக தீண்டாமை கொடுமை எதிர்த்து பொதுமேடைகளில் பேசலானார். அதேநேரத்தில் இவையெல்லாம் இஸ்லாமியர் ஆட்சிக்கு பின்னால் இந்துக்களை பிரித்திட நடந்தவை எனும் பொருளிலும் அவர் பேசினார். எந்த மதப்பிரதியாவது சாதியை- தீண்டாமையை நியாயப்படுத்தும் என்றால் அவற்றை மறு பரீசீலனைக்கு நாம் உட்படுத்த தயங்கக்கூடாதென்றார் தியோரஸ். இந்து ஒற்றுமைக்கு சாதிப்பிரிவினைகள் பெருந்தடையாகும் என உணர்ந்த உயர் பொறுப்பாளராக அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
உபாத்யாயாவின் Integral humanism இதன் பிரதிபலிப்பதாக
அமைந்தது. பாஜகாவின் கோட்பாட்டு ஆவணமாக இன்றும் அதுதான் காட்டப்படுகிறது. இப்போதுள்ள தலைவர்
பகவத் அவர்களின் உரை ஒன்றில் இவ்வாறு
பேசியுள்ளதைக் காணலாம்
“Special
efforts were made to establish contact with different social groups and bring
them to RSS Shakha activity; especially the social groups that were
psychologically uncomfortable in calling themselves as Hindus due to
discriminatory practices were focussed on..”
இந்திரா அம்மையாரின் நெருக்கடி நிலை பிரகடனம் ஆர் எஸ் எஸ் மீதான தாக்குதலாகவும் இருந்தது. இக்காலத்தில்தான் வெளிநாட்டு தொடர்புகளை ஆர் எஸ் எஸ் பலப்படுத்திக்கொண்டது. தனது கருத்துக்களை வெளியீடுகள் மூலம் எடுத்துச் சென்றது. ஆர் எஸ் எஸ்ஸில் தியோரஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜனதா சோதனை அனைவரும் அறிவர். ஜேபி, மொரார்ஜி, சரண்சிங், ஜெகஜீவன், பெர்ணாண்டஸ், சந்திரசேகர் என்கிற வரிசை வாஜ்பாயி, அத்வானி போன்றவர்களையும் சேர்த்துக்கொண்டது. ஆர் எஸ் எஸ் உறுப்பினர்- இரட்டை உறுப்பினர் பிரச்னையானது. ஜனதா வீழ்ந்து மீண்டும் இந்திரா அம்மையார் ஆட்சிக்கு வந்தார்.
1951ல் துவக்கப்பட்ட
ஜனசங்கம் ’ஜனதாவில்’ கலந்தது
எனினும் ஆர் எஸ் எஸ்
தொடர்புடன் அதன் தலைவர்கள் நீடித்தனர்.
அது பிரச்னையானது. ஜனதா சோதனையிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டியிருந்தது.
ஏப்ரல் 1980ல் பாரதிய ஜனதா கட்சியை
துவக்கினர். பொறுப்பேற்றுக்கொண்ட வாஜ்பாய் ’காந்திய சோசலிசம்’ எனப்
பேசத்துவங்கினார். காந்தி எனும் சொல்லாடல்
- அவரை தன்வயப்படுத்தைக்கொள்ளவேண்டிய தேவை சிலரால் அங்கு
உணரப்பட்டிருக்கலாம். இது
குறித்து அப்போது மெயின்ஸ்ட்ரீம் பத்திரிகை ஏராள கட்டுரைகளை எழுதியிருந்தது.
ஆனால் 1984 பொதுத்தேர்தலில்- இந்திரா படுகொலையின் பின்னணியில்- பாஜக இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையே பெற்று பெருந்தோல்வியை சந்தித்தது. வாஜ்பாய் கொடுத்த ’காந்தியன் சோசலிசம்- பாசிட்டிவ் செக்யூலரிசம்’ முழக்கங்கள் எடுபடாத சூழலில் தனது ஜனசங்க வேருக்கே அவர்கள் திரும்பிட அவர்கள் 1989ல் முடிவெடுத்தனர். ஆர் எஸ் எஸ் பின்புலத்தில் வளர்ந்த பலருக்கு பாஜக ’காந்தியன் சோசலிசம்’ என்று பேசியது நெருடலாக இருந்தது.விவாதத்திற்கு பின்னர் தங்களின் கோட்பாடாக தீன்தயாளின் ’ஒருங்கிணைந்த மனிதாயம்’ என்பதை அறிவித்தனர்.
’ஹிந்துத்துவாவை’ வலிமையாக கொண்டுபோக அத்வானி தலைமை என முடிவெடுத்தனர். 1984 தேர்தல் தோல்வி சூழலில் வாஜ்பாய் நகர்ந்து 1985ல் அத்வானி பொறுப்பிற்கு வருகிறார். விஎச்பி துணைசக்தியாக நின்றது. 1989ல் நாடாளுமன்றத்தில் பாஜக 85 உறுப்பினர்களைப் பெற்று பெரும் வளர்ச்சியைக் காட்டியது. 1991ல் 120 ஆக இந்த எண்ணிக்கை உயர்ந்தது. அப்போது கிளம்பிய ராமஜென்மபூமி இயக்கம்- அயோத்தியா ராமர் கோவில் கனவு இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பால் அவர்களுக்கு நினைவாக மாற்றப்படவிருக்கிறது.
அத்வானி ரதயாத்திரையிலிருந்து அவர்களின் தொடர்ச்சியான 30 ஆண்டுகளுக்கு மேலான இந்து மக்களை கவ்விப்பிடிக்கும் அந்த இயக்கம் மூலம் அரசியல் டிவிடெண்ட் பெற்றதைக் காண்கிறோம். பாபர் மசூதி இடிப்பு எனும் தீராத வடு பிரச்னையில் மீண்டும் ஆர் எஸ் எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. 1993ல் தடை நீங்கியது.
1998ல் அரசியலில் எவராலும் தொடப்படாமல் இருந்த பாஜக தனது தேசிய ஜனநாயக முன்னணி சோதனையை செய்யத்துவங்கியது. கோல்வால்கர் காலத்தில் நுகர்வியம் மீது கடுமையான தாக்குதல்களை ஆர் எஸ் எஸ் செய்துவந்தது. நரசிம்மராவ் துவங்கிவைத்த தாராளமய பொருளாதாரக்கொள்கைகளை ஆட்சிக்கு வந்த எக்கட்சியாலும் விடமுடியவில்லை. பாஜக வும் இந்த உலகமயமாதல் கொள்கையை மாற்றாமல் அதைத் தீவிரப்படுத்தும் திசையை மேற்கொண்டது. ஆரம்பத்தில் சுதேசி இயக்கம் என்ற ’எகனாமிக் நேஷனலிசம்’ குறித்த விழிப்புணர்வை ஜாக்ரன் மன்ச் மூலம் செய்துகொண்டிருந்தனர். இன்று அதன் வீச்சு வெளித்தெரியும் அளவிற்கு இல்லை.
1994ல் தலைமை மாற்றம் ஆர் எஸ் எஸ்ஸில் நடந்தது. ராஜேந்திர சிங் தலைமைக்கு வந்தார். மகாராஷ்ட்ரா மண்ணைச் சேராத- பிராமணர் அல்லாத முதல் தலைமை என ஆர் எஸ் எஸ் வரலாறு அவருக்கு இடம் கொடுத்தது. ’ராஜு பையா’ என அவர் பாபுலர் ஆனார். அவர் இயற்பியல் பேராசிரியர். 6 ஆண்டுகள் சர்சங்சாலக் பொறுப்பில் இருந்தார். வாஜ்பாய் ஆட்சிக்காலம் இவர் பொறுப்பில் இருக்கும்போது துவங்கியது. கார்கில் யுத்தம் கூட 1999ல் இவர் பொறுப்பில் இருந்த காலத்தில்தான் நடந்தது.
ஹிந்துத்துவா நிகழ்ச்சிநிரலான அயோத்தியா ராமர் கோயில், ஆர்ட்டிகில் 370 போன்றவற்றை வாஜ்பாய் சர்க்கார் சற்று மூடி வைத்தது. அரசாங்கத்திற்கான தேசிய நிகழ்ச்சிநிரல் என கூட்டணி கட்சிகளுடன் சரிகட்டிக்கொண்டு நகர்ந்தது. ஆர் எஸ் எஸ் பொதுவாக இட ஒதுக்கீடு மீது எதிர்மறையான கருத்துடைய அமைப்பு. ஆனால் ஓபிசி இட ஒதுக்கீடு என்பதை பாஜக வரவேற்பதாக தன்னை தகவமைத்துக்கொண்டது.
அடுத்து ஆர் எஸ் எஸ் தெற்கிலிருந்து தலைமை எனும் சோதனையை குப்பாள்ளி சீதாராமைய்யா சுதர்சன் முலம் செய்தது.ஆனால் அவர் பிராமணர். தெற்குப் பகுதியில் ஆர் எஸ் எஸ் விஸ்தரிப்பு என்பதில் சுதர்சன் பொறுப்பேற்றது உதவாமல் இல்லை. முன்பு வாஜ்பாய்- ராஜேந்திர சிங் உறவில் முரண் இருந்தது. ஆனால் ராஜேந்திர சிங் வெளிப்படையாக எதையும் பேசாமல் உரிய இடத்தில் பேசுபவராக இருந்தார். சுதர்சன்விட மூத்தவர் வாய்பாய் . ஆனாலும் சுதர்சன் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து சில சங்கடங்களை அரசுக்கு உருவாக்குபவராக இருந்தார். அவர் சுதேசி குறித்து பேசிக்கொண்டிருந்தார். வாஜ்பாய் தனது பொருளாதார சீர்திருத்தப்பாதையை தீவிரமாக்க விரும்பினார்.
அயோத்தியா பிரச்னையை வாஜ்பாய் கிடப்பில் போடுவதை சுதர்சன் விமர்சிக்கலானார். 2004ல் வாஜ்பாய் - பாஜக தோல்வியை அடுத்து மூத்த தலைவர்கள் விலகி அடுத்த இளம் தலைமுறைக்கு வழிவிடவேண்டும் என்றும் சுதர்சன் பேசினார்.
2005ல் அத்வானி
கராச்சியில் ஜின்னாவை மதசார்பற்ற தலைவர் என புகழாரம்
சூட்டியதை ஆர் எஸ் எஸ்
கடுமையாக கண்டித்தது. அத்வானியும் பாஜக அரசியல் முடிவுகளை
ஆர் எஸ் எஸ் கூடாரத்தில்தான்
எடுக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல்
அரசியல் முடிவுகளில் ஆர் எஸ் எஸ்
தலையிடுவதில்லை என்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும் என்றார். வாஜ்பாய்க்கு நெருக்காமாக பாதுகாப்பு அமைச்சராக
இருந்த ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து முக்கிய நூல் ஒன்றை எழுதினார்.
சுதர்சனும்
வாஜ்பாயி, அத்வானி போன்றவர்கள் எவ்வளவு
மூத்தவர்கள் ஆனாலும் சங் பரிவார்
குடும்ப உறுப்பினர்கள் என்ற வகையில் கட்டுப்படுத்த
முயற்சி செய்தார் என்றே நிகழ்வுகள் வழி
நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. சுதர்சன் அவர்களையடுத்து 2009ல் பகவத் பொறுப்பிற்கு
வந்தார். இன்றுவரை அவர்தான் சர்சங்சாலக் பொறுப்பில்
நீடிக்கிறார்.
தன் குடும்ப உறுப்பு அமைப்புகளுடன் தான் rigidity கடைபிடிக்க வேண்டுமா சில தளர்வுகளை அனுசரிக்க வேண்டுமா என்ற விவாதம் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்குள் நடக்காமல் இல்லை. தன் குடும்ப அமைப்புகளை முடிந்தவரை ஒற்றுமையாக அழைத்துச் செல்லவேண்டிய கடமை அதற்கு உனர்த்தப்பட்டுக்கொண்டேயிருந்தது.
மோடி குஜராத் முதல்வராக வந்த காலத்தில் கோத்ரா 2002 கலவரம் ஏற்பட்டது. அதை வாஜ்பாய் விமர்சித்தார். அப்போது அக்கலவரம் பற்றி நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட தகவலின் படி 790 முஸ்லீம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டிருந்தனர். 2500க்கும் மேற்பட்ட்டோர் உடைமைகள் இழந்து ஏதொவொரு இழப்பை சந்தித்தனர். வாஜ்பாய் முதல்வர் மோடி பதவி விலகுவதை விரும்பினார். ஆனால் வாஜ்பாய் பேச்சு எடுபடவில்லை. உடன் நடந்த தேர்தலில் மீண்டும் மோடி வெற்றிபெற்று கட்சியினரிடம் தன் சக்தியை மக்கள் செல்வாக்கை நிரூபித்தார்.
தொடர்ந்த மோடியின் வளர்ச்சி- குஜராத் மாடலில் தேசிய கட்டுமானம் என்கிற வாய்வீச்சுகள் வரலாயின. வளர்ச்சி- ஊழல் என்பதை பேசுபொருளாக்கி அவர் அடுத்து 2014ல் பாஜக ஆட்சியில் பிரதமராக உயர்ந்தார். ஆர் எஸ் எஸ் தலைவர் பகவத் பொருளாதாரம் குறித்த உரையாடலை அவ்வப்போது செய்யலானார். அவர் முழுமையாக மோடியுடன் உடன்பட்டு நிற்கிறாரா என்பதை சொல்லமுடியாவிட்டாலும் பொருளாதாரம் என்பதும் மிக முக்கிய உரையாடல் பிரதியாக ஆர் எஸ் எஸ் முகாமில் ஆக்கப்பட்டது.
மோடியை தேசிய அரசியல் பக்கம் திருப்பியவர் அத்வானிதான். அவர் 1995லேயே டெல்லி வாழ்க்கை எனும் அனுபவத்தை மோடிக்கு உணர்த்தினார். மோடியை கட்சியின் தேசியச்செயலர் ஆக்கினார். சுதர்சன் அப்போது மிக self styled ஆக நடந்துகொண்ட மோடியிடம் முகம் கொடுக்காமல் இருந்தார் என்பதும் நமக்கு கிடைக்கும் செய்தி.
தேசிய அரசியலில் 2004ல் பாஜக தோற்றது. மீண்டும் 2009ல் அத்வானி தலைமையில் வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. காங்கிரஸ் மீண்டும் மன்மோகன் சிங் ஆட்சியைத்தொடர வாய்ப்பை பெற்றது.
தோல்வி துவளல் சூழலில் பம்பாய் சார்ந்த வர்த்தக பின்னணிகொண்ட நிதின் கட்கரியை பாஜக தலைவராக கொணர்ந்தது. நிதினுக்கு கேடர்கள் மத்தியில் மோடியைவிட செல்வாக்கு குறைவுதான். ஆனாலும் ஆர் எஸ் எஸ் பகவத் அவர்களுக்கு சற்று கூடுதல்நெருக்கமானவர் கட்கரி. நிதின் கட்கரியின் வர்த்தகர் முகமே அவரின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருந்தது.
நிலமைகளை சரியாக கனக்கிட்ட மோகன் பகவத் மோடியின் பக்கம் திரும்பலானார். அவர் மோடி வயதொத்தவர். திறமையான அமைப்பாளர் என ஆர் எஸ் எஸ் பின்புலத்தில் பகவத் அறியப்பட்டவர். ஆர் எஸ் எஸ் அமைப்பில் எவர் பொதுச்செயலராக உயர்த்தப்படுகிறாரோ அடுத்து அவர் தலைவராக வாய்ப்பு கிட்டும். பகவத் அவர்களும் பொதுச்செயலராக இருந்து தலைமைக்கு உயர்ந்தவர். முடிந்தவரை சுதர்சனுடன் நட்புபாராட்டியே இருந்தவர். அதேநேரத்தில் பொதுமேடைகளில் ஜாக்கிரதை உணர்வு வேண்டும் எனக் கருதுபவராக இருப்பவர்.
மோடிக்கு துணையாக அமித்ஷா பாஜக தலைவர் ஆனவுடன் அவர் செய்த முதல்வேலை இரு அமைப்புகளின் ஒருங்கினைப்புக்குழு ஒன்றிற்கு முயற்சி எடுத்ததுதான். அமித்ஷா, கட்கரி, ராஜேந்திரசிங் பாஜகவில் என்றால் ஆர் எஸ் சார்பில் அதன் செயலர்கள் சுரேஷ் ஜோஷி, தத்தரேய ஹோசபலே இருந்தனர்.
மோடியின் அதீத புகழ்பாடல் ஆர் எஸ் எஸ் கலாச்சாரத்தில் புதிதான ஒன்று. இதை மோகன்பகவத் தொண்டர்களிடம் புரிய வைக்க முயன்றார். ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு சிந்தாந்தம்தான் முக்கியமானது, தனிநபர் விசுவாசம் என நாம் சுருங்கிவிடக்கூடாது என அவர் எடுத்துரைத்து வருகிறார்.
ஆர்
எஸ் எஸ் குடும்பத்தில் பாஜக
மிக முக்கிய அமைப்பாக மாறிவிட்டது.
ஆட்சி அதிகாரம் என்பதால்- பொதுக்கொள்கைகளில் முடிவெடுத்து அமுல்படுத்தும் அதிகாரம் என்பதால் அதன் முக்கியத்துவம் உள்
அமைப்புகளில் கூடியுள்ளது. ஆனாலும் ஆர் எஸ்
எஸ் தன்னை எப்போதும் ’இலட்சுமணக்கோடு’
எனும் எல்லையாக காட்ட விரும்பும். அதற்கான
வேலைகளையும் நுண்கலையும் கொண்ட
செய்திறன் கூடுதலாக கொண்ட அமைப்பாக
உள்ளது. எவருக்கு
எங்கே அதிருப்தி இருந்தாலும் ஆறுதல் தந்து வேலைகளில் அவர் கவனத்தை திருப்பும்
balancer ஆக தன் குடும்பத்தில் அது செயலாற்ற
முனைகிறது.
பாஜக
தேர்தலுக்கே கூட ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் தன்னல சேவை
பிரதானமானது. அவர்களின் சேவை அமைப்புகளின் செல்வாக்கால் அதை அறுவடை செய்வதாக பாஜக இருக்கிறது
எனபதை அக்கட்சியும் உணராமல் இல்லை. காந்தி படுகொலையின் கருப்பு நிழலிலிருந்து எவ்வளவு
முயற்சி செய்தாலும் அதனால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் காலத்திற்கேற்ப
சில மாற்றங்களை அது செய்துகொண்டு வருவதை பார்க்க முடிகிறது . Ideology அமைப்பு என்ற வகையில் அதன் அடிப்படைகளை அது விட்டுவிடமுடியாமல்
கொண்டாடி வரலாம். மக்கள் தேர்தல் மூலம் பெறுகின்ற அதன் உறுப்பு பாஜக வழியாக அதுபெரும்பயனை
அடையாமல் இல்லை என்பதை ஆர் எஸ் எஸ் உணர்ந்தே
இருக்கிறது.
ஹிந்துத்துவா கோட்பாடு- சமூக நலன் -தேசிய நலன் என்பதன் முரண்களை சமூக பதட்டங்கள் வழியாக வெகுநாட்கள் அதனால் நடத்திக்கொண்டிருக்க முடியுமா என்பது கேள்விக்குரிய ஒன்று. பாஜக வின் தேர்தல் வெற்றியால் பல கட்சிகள் soft Hidutva நோக்கி செல்வதையும் நாம் காண்கிறோம். ஆர் எஸ் எஸ் இதைதான் தன் வெற்றியாக பாவிக்கிறது. முழுச் சமூகமும் இந்துத்துவா எனும் பெரும் உரையாடல்வழி தன் அன்றாடங்களை நடத்திக்கொள்ள வேண்டிய பழக்கம் வந்துவிட்டால் mission succees என்ற திரையை அது தொங்கவிடலாம். எவரும் ’பிறராக’ அந்த இந்து கலாச்சார பெருவெளிக்குள் நடமாடலாம் என்ற உரிமம் தரும் அமைப்பாக தன்னை உயர்த்திக்கொண்டு வருகிறது.
நாக்பூரிலிருந்து
டெல்லி நோக்கி சீனியர் ஆர்
எஸ் எஸ் செயற்பாட்டாளர்கள் திரும்பினர்.
ஆர் எஸ் எஸ் கலாச்சார
அமைப்பு என்பதிலிருந்து தீவிர அரசியல் நிகழ்ச்சிநிரல்களை
கொண்ட அமைப்பு என்ற முகத்தை
வெளிப்படையாக பெற ஆரம்பித்தது. இந்திய
ஜனநாயகம் வேர்பிடித்து பலதரப்பட்ட கம்யூனிட்டிகளுனுடைய அவாக்களின்
போராட்டக் களமாக தேர்தல்களை மாற்றியுள்ளன.
இந்தியா confederation of castes என்கிற
அம்பேத்கரின் கூற்று தேர்தல் அரசியலில்
தன் பிரதிபலிப்பை காட்டாமல் இல்லை. முஸ்லீம்கள் homogeneity என்பதற்கு மாற்றாக
இந்து homogeneity என்பது பாஜக- ஆர்
எஸ் எஸ்க்கு உதவி வருகிறது என்பது
உண்மைதான். இதுவரை காங்கிரசும் கம்யூனிஸ்ட்களும்
சமூகநீதி கட்சிகளும் அனுசரித்தவை psudo secularism-
appeasement politics எனச் சொல்லி பாஜக
காங்கிரசை எதிர்கொண்டது.
ஆர் எஸ் எஸ் பாஜக IT cell மிக வலுவானதாக கட்டப்பட்டிருக்கிறது. எந்தச் செய்தியையும் இலட்சக்கணக்கானவர்களிடம் சமுக வலைத்தலங்கள் மூலம் கொண்டு செல்ல முடியும். இந்திய அரசியல்வாதிகள்- அவர்கள் சமூக பின்புலம் செல்வாக்கு அறியப்பட்டு தொகுக்கப்படுகிறது. தொகுதிவாரியான – சாதிவாரியான- மதவாரியான- ஊர்வாரியான முழு டேட்டாக்கள் கொண்ட துறையாக அதை பெருக்கியுள்ளனர். மீடியாக்கள் முழுமையாக கட்டுக்குள் கொணரப்பட்டுள்ளன. சினிமாத்துறை அவர்கள் கட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.
இப்படிச் சொன்னால் புரிந்துகொள்ளலாம். இந்திய மக்களில் 66 சதம் பாஜக நேரிடையாக அல்லது கூட்டணியுடன் ஆளும் மாநிலங்களில் இருக்கிறார்கள். 2017லிருந்து 2018க்குள் மாற்றம் ஏற்பட்டதை சிஎஸ்டிஎஸ் அமைப்பு வெளிப்படுத்தியது. தலித்கள் ஆதரவில் 10 சதத்திற்கும் மேலாக பாஜகாவிற்கு வீழ்ச்சி, இஸ்லாமியர், கிறிஸ்துவர் அச்சவுணர்வுடன் விலகிப்போதல் நடைபெறாமல் இல்லை.
ஆர் எஸ் எஸ் பாஜக தனது பாரம்பரிய நிகழ்ச்சிநிரல்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ராமர் கோயில், காஷ்மீர் 370 போன்றவற்றை முடித்த நிலையில் யூனிபார்ம் சிவில் கோடு, சிறு மாநிலங்கள் என்பதில் அதன் கவனம் கூடியுள்ளது. சித்தாந்த அமைப்பு ஒன்றின் அனைத்து பண்புகளையும் சமூகப் பண்புகளாக- சமூக இயல்பாக மாற்ற முயற்சிக்கிறது. உயர்தட்டு சாதிகளின் தலைமையில் சமஸ்கிருதமயாக்கல்- சமூக ஒத்திசைவுடன் அனைத்து சாதி ஒற்றுமை என்பதை அது சோதித்து வருகிறது. இங்கு தலைமை என்பது Physical அல்ல ideological என்பதில் அது குறியாக இருக்கிறது.
மோகன்
பகவத் இப்போது எளிமையாக ஒன்றை
வரையறை செய்துள்ளார். இந்தியாவில் அனைவரும் கலாச்சார பின்னணியில் இந்துக்களே- All Indians are
culturally Hindu எனச் சொல்லி வருகிறார்.
மதரீதியாக நீங்கள் முஸ்லீமாக- கிறிஸ்துவராக
வேறு எதுவானவராக இருக்கலாம். ஆனால் உங்களின் ’ஆதார
மூலம்’ இந்து என்கிற பெருங்கலாச்சாரமே என்கிற
தங்களது பாரம்பரிய உரையாடலை பெருக்குகிறார். இதில் தவறேதுமில்லையே என மத்தியதர வர்க்கத்தின்
ஆதரவு அவர்களுக்கு அதிகரிப்பதையும் காண்கிறோம்.
அவர்களின் பிரம்மாண்டங்களைக் காட்டுவது வீழ்த்தவே முடியாத Monster என்ற சோர்வைத்தருவதற்கல்ல. அவர்கள் தோற்கடிக்கப்படவேண்டும் என்கிற விழைவு உள்ளவர்கள் தங்களை எப்படி மாற்றாக தகவமைத்துக்கொள்ளவேண்டும்- அதற்கான பெரு முயற்சிகள் எப்படி தேவைப்படுகிறது என்பதற்காகத்தான்..
பல்வேறு கலாச்சார- மொழி பேசும் பின்னணிகொண்ட இந்தியா போன்ற ஒரு நாடு தனது எதிர்காலத்தை ஒற்றை இந்துத்துவா எனும் வரையறுக்குள் வைத்துக்கொண்டால்தான் உலக அரங்கில் தனது இடத்தை பிடிக்குமா? நாட்டின் வளர்ச்சிக்கு அந்தப் பார்வை அவ்வளவு அடிப்படையானதா? என்ற கேள்விகளுடன் விவாதங்கள் இந்தியாவில் நடைபெறாமல் இல்லை. மக்களை ஒருங்கிணைக்க சிந்தாந்த வகைப்பட்ட single mode- mould மட்டுமே சரியான வழியா? பன்முகவாதம் என்பது எப்போதும் மக்களைச் சேரவிடாதா? என்ற கேள்விகளுக்கு வரலாற்றிலிருந்தும் அன்றாட வாழ்க்கையிலிருந்தும் கிடைக்கும் பதில்கள் என்ன?
தாராளவாதம் என்பது சீரழிவு என சித்தாந்த அமைப்புகள் சொல்வதில் உண்மையிருக்கிறது என வாழ்க்கை அனுபவம் காட்டுகிறதா? சித்தாந்தம் என்பதை இறுகப் பற்றிக்கொள்ளாதவர்க்கு இவ்வுலகில் அனுமதியில்லையா போன்ற பல்வேறு கேள்விகள் பதிலைத் தேடிக்கொண்டிருக்கின்றன.
தங்களிடம் எல்லா
பதில்களும் இருக்கிறதாக நினைப்பவர்கள் பாக்கியவான்கள் போலும்..ஏனெனில் அவர்களிடம்
சித்தாந்தம் இருக்கிறது.
அது எல்லாவற்றிற்கும் பதிலை வைத்துக்கொண்டுள்ளது என மார்தட்ட முடியும். அனைத்து கேள்விகளையும் குற்றப்பத்திரிகைகளையும்
அவர்கள் எவர் மீதும் வைக்க உரிமம் இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். தங்கள் மீது கேள்வி
என வந்துவிட்டால் தங்கள் உத்தமம் காட்ட அதிகார ஆட்டத்தை அவிழ்த்து விடுவார்கள்…இருக்கவே
இருக்கிறது பல முத்திரைகள். எடுத்துக் குத்த தயங்கமாட்டார்கள்…
பிற்சேர்க்கை சில தகவல்கள்:
ஆர் எஸ் எஸ் தனது கேடர்களுக்கான பயிற்சி முகாம்களை திட்டமிட்டு நடத்துகிறது. லெவெல்1,2,3 என எடுத்துக்கொள்ளலாம். 1984ல் ’லெவெல் 1’ 9856 முகாம்கள் என்றால் ’லெவெல்2’ , 9856 ’லெவெல் 3’ 932 நடத்தியிருந்தால், 2015ல் இவை முறையே 15332, 3531, 709 என்று நடத்தியுள்ளது. இந்த 30 ஆண்டுகளில் அது பிரைமரி லெவெல் பயிற்சியை வீச்சாக மாற்றியுள்ளது. அடுத்த லெவெல்களை உயர்மட்ட கேடர்களுக்கு என வடிகட்டி எடுத்துச் சென்றிருக்கலாம்.
சமூகத்தின்
பல தரப்பினரை திரட்டும் வகையில் அதன் அமைப்பு
கரங்கள் பல்கி பெருகியுள்ளன. அதன்
குடும்பத்தின் சில முக்கிய உறுப்பு அமைப்புகள்:
மாணவர் எனில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்,
பொது ஆரோக்கியம் எனில் ஆரோக்ய பாரதி,
வழக்கறிஞர்கள் அகில பாரதிய அதிவாக்த பரிஷத்,
தொழிலாளர் பாரதிய மஸ்தூர் சபா,
விவசாயிகளுக்கு பாரதிய கிசான் சங்,
சமூக சேவைக்கு பாரதிய விகாஸ் பரிஷத்,
வரலாறு எனில் பாரதிய இதிஹாஸ் சங்கலன் யோஜனா,
குழந்தைகள் பாலகோகுலம்,
அரசியல் பாஜக,
ஊரக வளர்ச்சி தீனதயாள் ஷோத் சன்ஸ்தான், கிராம் விகாஸ்-
பசு காப்பு எனில் சம்வர்தன்,
வாடிக்கையாளர்க்கு கிரகக் பஞ்சாயத்,
குடும்ப மரபு என்பதற்கு குடும்ப் பிரபோதன்,
தொழுநோயாளி சிகிட்சை குஷ்ட்ரோக் நிவாரணன் சமிதி,
விளையாட்டு க்ரீதா பாரதி,
சிறு தொழில்கள் லகு உத்யோக் பாரதி,
டாக்டர்கள் எனில் நேஷனல் மெடிக்கோஸ்,
முன்னாள் படைவீரர் அகில பாரதிய சைனிக் சேவா பரிஷத்,
பெண்கள் ராஷ்ட்ர சேவிகா சமிதி,
ஆசிரியர்க்கு ராஷ்ட்ரிய ஷாய்க்சிக் மகாசங்,
சமய ஒருமைப்பாடு எனில் ராஷ்ட்ரிய சிக் சங்கட்,
கூட்டுறவுகள் எனில் ஷகாகர் பாரதி,
இலக்கியம் சாகித்ய பரிஷத், கலை எனில் சன்ஸ்கார் பாரதி,
சம்ஸ்கிருத வலர்ச்சி- சம்ஸ்கிருத பாரதி,
பழங்குடிகள், வனவாசி கல்யாண், கல்வி- வித்ய பாரதி,
சமயம்- விஸ்வ இந்து பரிஷத்,
அறிவியல்
விஞ்ஞான் பாரதி இப்படி 40க்கு மேற்பட்ட அமைப்புகளில்
வழி அதன் சித்தாந்தம் கொண்டுசெல்லப்படுகிறது.
அதன் அமைப்பு முறையில் சர்சங்சாலக் தலைவர்- அடுத்த நிலைக்கு பொதுச்செயலர் - 6 இணைச்செயலர்கள்- துறைவாரியான செயல்களுக்கு 7 சீனியர் பிரச்சாரக். மத்திய கமிட்டியை அகில பாரதிய கார்யகாரி மண்டல் என்பர். பொதுச்சபைக்கு பிரதிநிதி சபா என்பர். கமிட்டியில் 48 உறுப்பினர்கள் இருந்தால் பொதுக்குழுவில்1400 பேர் பிரதிநிதிகளாக பங்கேற்பர்.
ஆரம்ப
அமைப்பு கிளை, 10 கிளைகள்
எனில் மண்டல், நகர அமைப்பு, மாவட்டம், மாவட்டங்கள் சில இணைந்து விபாக்,
மாநிலம்( ஆர் எஸ் எஸ்
மாநிலங்கள்) வட்டாரம்
என்பதை ரீஜன் ஷேத்ர என்பர்.
1949ல்
எழுதப்பட்டு 1972 காலம்வரை திருத்தப்பட்ட அவர்களின் அமைப்பு விதிகளை பார்க்க நேர்ந்தது.
அவர்களும் தங்களுக்கான முகப்புரையை வைத்துக்கொண்டுள்ளனர்.
நாடு
பிரிவினைக்குள்ளான சூழலில் சாதி, கொள்கை, அரசியல்,
மொழி, மாநிலவாரி என மாறுபட்டு உடைப்பு சிந்தனைக்குள் வீழாது இந்துக்களை ஒன்றுபடுத்திட,
அவர்களின் புகழ் வாய்ந்த பழமையான மரபை உணர்த்த சமூகத்திற்கு தன்னலமற்று தியாகத்துடன்
தொண்டாற்றும் உள்ளம் பெற்றிட, கட்டுப்பாடு
ஒழுங்குடன் கூடிய ஒருவகை கார்ப்பரேட் வாழ்க்கை உருவாக்கிட, இந்து தர்மம், சம்ஸ்கிருத
அடிபப்டையில் இந்து சமாஜம் புத்தாக்கம் உருவாக்கிட இந்த அமைப்பான ஆர் எஸ் எஸ் 1925ல்
உருவாக்கப்பட்டதாக அறிவித்தனர்.
இதில்
ஜனநாயகம்- குடியரசு, சோசலிசம் அல்லது ஏதோவொரு சமத்துவ சமூகம் என்கிற சொல்லாடல்கள் ஏதும்
இருக்காது. இந்து தர்மம் வகைப்பட்ட இந்து சமாஜம் கட்டுவது என்பதன் பொருள் அனைத்து நம்பிக்கைகளையும்
மதிப்பதே என்று ஷரத்து ஒன்றில் சொல்கின்றனர்.
சங்
அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. சமூகம், கலாச்சார தலங்களில் பணியாற்ருவது என்கிற
ஷரத்தில் aloof from politics எனப் பயன்படுத்தியுள்ளனர். அதேநேரத்தில் தங்கள்
உறுப்பினர் எவரும் அரசியல் கட்சி, இயக்கங்களில் பணிபுரியலாம். அவை வெளிநாட்டு விசுவாசம்
கொண்டதாக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. இரட்டை உறுப்பினர் என்பதை ஆர் எஸ் எஸ் அமைப்புவிதியிலேயே
அனுமதித்துள்ளதைக் காணலாம்.
உறுப்பினர் ஆக 18 வயது தகுதி. கீழ் இருந்தால் அவர்
பால சுயம்சேவக். அவர்களுக்கான சமூக கலாச்சார பொதுச்சேவை கடமைகள் சொல்லப்பட்டுள்ளன.. அமைப்புகளில் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை. பிரச்சாரக்
என்பவர்கள் தான் முழுநேர ஊழியர்கள். அவர்களுக்கு ஊதியம் கிடையாது. அமைப்புகள் செலவைப்
பார்த்துக்கொள்ளும். பிரச்சாரக் நியமிக்கப்படும் முறைதான் உள்ளது.
கட்டுரைக்கு
ஆதார நூல்: Messengers of Hindu Nationalism- How the RSS Reshaped India by walter Anderson and Shridahar Damle
30-6-2022