https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, June 5, 2022

வ.ரா 2 வ.ரா பார்த்த வரதராஜூலு நாயுடு

 

வ.ரா 2

வ.ரா பார்த்த வரதராஜூலு நாயுடு

பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னைக்கு வந்த கவர்னர்களில் மோசமானவராக பெண்ட்லண்டு பிரபு  இருந்தார். யோசிக்கவேண்டும் என்பதைக்கூட வைத்துக்கொள்ளாத ’உத்தம புருஷன். அடிமைக்கு ஏது சுதந்திரம் என்ற கருத்துடையவர். சுயராஜ்ய நினைப்பு எனில் சிறை என்றவர். அதிகார கொக்கரிப்பின் முன் தமிழர் வாடின கீரைத்தண்டைப்போல துவண்டனர். அன்று மூன்று கோடியாக இருந்தது தமிழர் ஜனத்தொகை. அவர்களுக்கு தலைநிமிர்ந்து ஜவாப்பு சொல்ல ஒரே ஒரு வரதராஜூலு நாயுடு. இப்படித்தான் நாயுடுவின்  entry யை வ.ரா நமக்கு சித்திரமாக்குவார்.



அரண்மனைக்கு எதிர்மனை உண்டு என எழுந்து நின்றவர் நாயுடு.  அவருக்கு இந்த சக்தி எங்கிருந்து வந்தது? என்ன அவருக்கு பரம்பரை செல்வாக்கா? பள்ளிக்கூட பயிற்சியா? என கேள்விகள் எழுப்பி பதில் தேடுவார் வ.ரா.

 நாயுடுவின் பக்கத்துணிவிற்கு நாயுடுதான் துணை. நாயுடு பிரசங்கம் கேட்டதில்லையா ஜன்மமே வீண் போ எனப் பேச்சுண்டு. வ.ரா வும் இதை அறிந்து கேட்கப்போனார். நாயுடுவின் மூர்த்தியோ சிறிது. ஆனால் குரலைக்கேட்டபின்னர் தெரிந்தது கீர்த்தி பெரிதென்று என வ.ராவிற்கு. வெடுக்கு வெடுக்கு எனப்பேசும் குழந்தையிடம் வரும் அன்புபோல வந்தது என்பார். பெரிய பெரிய மனிதர்களையெல்லாம் நாஸூக்காகவும் நாகரிகமாகவும் மண்டகப்படி செய்யும் பிரசங்கியை அதுவரை தமிழ்நாடு பார்த்ததில்லை. உணர்ச்சியை உருவப்படுத்தி நயமான சொற்களில் இங்கித ஜாடையுடன் சங்கீதக்குரலில் பேசும் ஆற்றல் நாயுடுவிடம் இருந்ததை வ.ரா வர்ணிப்பார்.

 ”பண்டிதர்கள் கூடினால் விளங்காத தமிழ், இங்கிலீஷ் படித்த தமிழர் கூடினால் விளங்காத இங்கிலீஷ்! இந்த கட்டுப்பாடான குரும்புத்தனத்தை தவிடுபொடியாக்கிய ஏகபோக பாக்கியமும் பாத்தியதையும் ஸ்ரீமான் வரதராஜூலு நாயுடு அவர்களுக்கே உரித்தானதாகும். பாமரத் தமிழுக்குப் பெருமையும் பொலிவும் பலமும் உண்டு என்பதை நிலை நாட்டிய புண்ணியத்தை, எவரும் நாயுடு அவர்களுடன் பங்கு போட்டுக்கொள்ள முடியாது

இவ்வளவிற்கும் நாயுடுவின் தாய் பாஷை தெலுங்கு. நாயுடு அவர்களின் ஒப்பற்ற தொண்டே அவர் ஜன்மம் எடுத்ததற்கு போதுமானது. மூன்று திரிகடுகங்கள் என வரதராஜூலு நாயுடு, ஜார்ஜ் ஸோசப், கே. ஷண்முகம் செட்டியார் மூவரையும் வ.ரா சொல்லுவார். மூவரும் பழுத்த ராஜதந்திரிகள். செட்டியார் வெற்றிக்கு, சுகத்துக்கு, தாற்காலிகப் பெருமைக்கு தொண்டனாக தமை அமைத்துக்கொண்டுவிட்டார். பாரிஸ்டர் ஜோசப் மனச்சாட்சிக்கும் மன சஞ்சலத்துக்கும் மதத்திற்கும் பக்தனாக ஆட்படுத்திகொண்டு ஆற்றில் கரையாமல் அலைந்தார். ஸ்ரீமான் நாயுடு அவர்களோ, தூய தேசாபிமானம் ஒருபுறம் பிடித்து இழுக்க, சாமர்த்திய இராஜதந்திரம் மற்றொரு பக்கம் பிடித்து இழுக்க,  இரண்டுக்குமிடையே மன அமைதியின்றி ஊசாலாடுகின்றார் என பதிவையும் வ.ரா தந்திருப்பார்.

 நாயுடுவிடம் வ.ரா பார்த்த குணம் ஒன்றை நாம் அறியத் தருகிறார். நாயுடுவிற்கு எதிலும் சந்தேகம் ஏற்படுவதில்லை. தெரிந்த சங்கதிகள் ஆணித்தரமானவை; தெரியாத விஷயங்கள் அவருக்கு தேவையில்லை. இது அவரின் வாழ்க்கை தத்துவ சாரம். ஒரு எல்லைவரை அவரின் துணிவு போல் எவராலும் காண்பிக்கமுடியாது. இதுவே அவரின் பலத்திற்கும் பலவீனத்திற்கும் அஸ்திவாரம் என்பார் வ.ரா. காந்திக்கு தியாகம் வேண்டும்- தந்திரம் கூடாது. நாயுடு இதை ஏற்பதில்லை. அதே நேரத்தில் முற்றிலுமாக தள்ளிவிடுவதும் இல்லை.

 தன்வழி எனும் நெஞ்சழுத்தம் அவரிடம் இருந்தது.. அக்காலத்தில் புலவர் பொறாமை என்றால் இக்காலத்தில் தலைவர் பொறாமை தலைதூக்கி ஆடுகிற அவலட்சணம். நாயுடு மீது சிலருக்கு ஏற்பட்ட பொறாமையாலே அவர் அனாவசியமாய், அநியாயமாய் தனிவழி கோலிக்கொண்டு தத்தளித்து வருவதாக வ.ரா கருதியதை பார்க்கிறோம்.

 நாயுடு தன் இயற்கையான வல்லமையையும் வேலையையும் மறந்துபோனார் போலும்! அடிமைகளுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே நின்று பஞ்சாயத்து வேலை பார்த்து வருகிறார். விடுதலைக்கு தமிழிழரை தட்டி எழுப்பிய வீரன் தன் இயல்பை மறந்து விடுவாரா?

 அபிமான தலைவர்களுக்கு செல்லப்பெயர் கிடைக்கும். சேம்பர்லேனை ஜோ என்றனர். ராம்ஸே மாக்டொனால்டை மாக் என்றனர். அதுபோல் நாயுடுவை துப்பாக்கி நாயுடு என அழைக்கின்றனர். ஆட்காட்டி விரலை காட்டிப் பேசியதால் வந்ததாம்.

 நாயுடு வாய்ச்சொல் ஒத்துழையாதாரல்ல. அனுபவ ஒத்துழையாதார். பர்டோலி தீர்மானம் ஏற்று அவர் வரிகொடுக்கவில்லை. கார் ஏலம் போனது. வீட்டிலே ஜப்திக்கு வந்தனர். நாயுடு அசரவில்லை என்பதை வ.ரா எழுத்து காட்டும்.

 நாயுடுவிற்கு முஸ்லீம்கள் தேசபக்தி மீது நம்பிக்கையிழப்பு ஏற்பட்டது. காந்தி- அலி சகோதரர் வேறுபாடு, ஜின்னாவின் தனிநாடு, ஜின்னாவிற்கு பிரிட்டனின் பரிவு- இந்துக்களை விட்டு பிரிந்தால்தான் முஸ்லீம் வாழ்வு என்று முஸ்லீம் தலைவர்கள் பேச்சு ஆகியவற்றைக் கேட்ட நாயுடுவால் சும்மா இருக்கமுடியவில்லை. அகண்ட இந்துஸ்தான் நம்பிக்கையில் ஹிந்து மகாசபையில் சேர்ந்தார். முஸ்லீம்களுடன் சமரசம் இல்லை- அகிம்சை ஏற்க முடியாது என நாயுடு பேசுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை என அவர் பாதை மாறிய பயணத்தையும் வ.ரா எழுதியுள்ளார்.

நாயுடுவிடம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் ஹிந்துஸ்தானத்தை ஆளுவதற்கு ஹிந்துக்களுக்கே பாத்தியதை என்ற பிடிவாத எண்ணம் ஏற்பட்டது. தனது சுயமரியாதையைக் காப்பாற்ற எதை வேண்டுமானாலும் இழக்க நாயுடு தயார் எனும் நிலையில் இருக்கிறார். சுயமரியதை அறியாதவர் உயர்ந்த தத்துவம் பேசும்போதெல்லாம் நாயுடு சிரிக்கிறார் என வ.ரா தன் பதிவை நிறைவு செய்திருப்பார்.

 நாயுடு கட்சிப் பிரதிகட்சி இல்லாமல் அனுபவத்தை ஒட்டி தமிழர்களில் பெரும்பாலரை ஒன்றுபடுத்தி தமிழர்களுக்கு விடுதலையைக் கொணரவேண்டும் என்பதே தன் ஆசை என வ.ரா தன் விருப்பத்தையும் முன் வைத்திருப்பார்.

No comments:

Post a Comment