சொற்களின் சரிதம்
சொற்களின் சரிதம் அளவில் சிறிய புத்தகம்தான். பல நூல்களை
தந்திட்ட வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதிய நூல். அவரின் மறைவையடுத்து டிசம்பர் 1956ல் வெளியான நூல். அவரின் சில கட்டுரைகளை தொகுத்து தந்துள்ளனர்.
முதல் கட்டுரை ’கழகம்’ எனும் சொல் குறித்த ஆய்வு. திருக்குறள், சிந்தாமணி, கலித்தொகை என பல நூல்களில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ’சூதாடுமிடும்’ என்பது இதற்கு பொருளாக இருந்துள்ளது. காலகதியில் வேறு பொருள் தரும் சொல்லானது என வையாபுரி அவர்கள் குறிப்பிடுகிறார்.
திருவாய்மொழியில் ’திரள்’ என்கிற பொருளில் இடம்பெற்றதை அவர் சொல்கிறார்.
இராமயணத்தில் இதன் பொருள் ’கல்வி பயிலுமிட’மென வருவதாக வையாபுரி வகைப்படுத்துகிறார். சொற்பொருள் வரலாற்றில் இழிவு பொருண்மை ( degradation) உயர்வுப் பொருண்மையில் (elevation) வருதல் பற்றி வையாபுரி விளக்குவார்.
Nice என்ற ஆங்கிலச் சொல் ஆதியில் அறியாமை- மடமை என்ற பொருளில்தான் வழங்கப்பட்டது. இப்பொழுது அது நேர்த்தி- சீர்மை என பொருள் தருகிறது. இப்படி ‘கழகம்’ என்பதும் உயர்வுப் பொருண்மை நெறிக்கு உள்ளான சொல் என்பார் வையாபுரி.
‘களம்’ என்ற சொல் நெற்கதிரடிக்கும் இடத்திற்கான பொருளில் இன்று பொதுவாக வழங்குகிறோம். இது பழமையான பொருள்தான். புறநானூற்றில் விதை விதைக்கும் இடம் களமாக இருந்துள்ளது. போர்க்களம் என்பதும் பண்டைய நூற்களில் உள்ளது. ஏர்க்களம்- நெற்களம் என்பதிலிருந்து போர்க்களம் வந்திருக்கலாம் என வையாபுரி பிள்ளை கருதுவார். அதிலிருந்து ’களமர்- களவன்’ என்ற சொற்கள் வருவதையும் அவர் சொல்வார்.
பூசாரிக்கு வேலன் என்பது முற்காலத்து பெயர். பூசாரி ஆடி நோய் தணியும் முறையை ’வெறியாட்டு’ என்றனர். அதன் நிகழ் இடம் ’வெறியயர் களம்’ எனப்பட்டதாம்.
வையாபுரியாருக்கு இந்த ’களம்’ என்பதும் வடமொழியினின்று பெறப்பட்ட ஒன்றே என்ற கருத்து இருக்கிறது. இப்படி ஆரம்பித்து அவர் தமிழ்- வடமொழி, தமிழர்-ஆரியர் நாகரீகத் தொடர்புவரை கேள்விகளை உருவாக்கிச் செல்வார். விடை எளிதானதல்ல என்பதை ஏற்றே வினாக்களை அவர் முன்வைத்துள்ளார்.
அடுத்து அவர் ’பொழுது’ என்ற சொல்லை எடுத்து விவரிப்பார்.போழ்து என அழுத்தம் பெற்றதை, கன்னடத்தில் பொழ்து என, தெலுங்கில் பொர்து என பேசப்படுவதைச் சொல்வார்.
திருக்குறள், நான்மணிக்கடிகை, நாலடியார் போன்றவற்றை காட்டி விவரிப்பார். ’போது’ எனத் தமிழில், ’போழ்’ என மலையாளத்தில் சொல்லப்படுவதையும் அவர் காட்டுவார். அப்போது, இப்போது, எப்போழ்து என்பன அப்போ, இப்போ, எப்போ என பேசப்படுவதையும் அவர் எடுத்துக்காட்டுவார்.
’தோடு’ என்கிற சொல் குறித்து வையாபுரி தேடிச் செல்கிறார். இன்று காதில் அணியும் ஆபரணம் என்ற பொது புரிதல் இருக்கிறது. திவாகர் நிகண்டு தொகுதி, பனையிதழ், பூ இதழ் என்கிற பொருளில் ‘தோடு’ என்பதை பார்த்தது.
சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், குமரகுருபரர் ’தோடு’ என்பதை பெண்களின் ஆபரணமாக காட்டியுள்ளதை வையாபுரி சொல்கிறார். இதற்கெல்லாம் முன்பே நாவுக்கரசர், ஞான சம்பந்தர், சுந்தரர், ஆண்டாள் எடுத்தாண்டுள்ளனர்.
. இப்படி தேடிச் சென்ற வையாபுரி பிள்ளை அவர்கள் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் காதோலை- காதணி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்ற முடிவிற்கு வருகிறார். முன்னர் அது பனம்பூ- பனையோலையை குறித்து நின்றதாம். பனையோலை காதில் மாட்டியிருந்தவர்களை ’பெண்ணை’ என்றும் குறித்துள்ளதாக அவர் சொல்கிறார். சங்க இலக்கியங்களிலே ’தோடு’ காணப்படுவதில்லை- குழை பேசப்படுவதாகவும் வையாபுரியார் சொல்கிறார்.
சங்க காலத்திற்கும் தேவார காலத்திற்கும் இடைப்பட்ட 4-5ஆம் நூற்றாண்டளவில் காதில் தோடணியும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். பொற்றோடு அணியும் பழக்கம் கிபி 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டிருக்க வாய்ப்பில்லை என வையாபுரி கண்டடைகிறார்.
தோடு என்பதையும் அவர் வடமொழி சொல்லுடன் ஒப்பிடுவார். தாடங்கம் என்பதற்கு பனையோலை அணி எனப் பொருள். அப்போது ’தாட’ என்பதற்கும் ’தோடு’ என்பதற்கும் தொடர்புண்டா என அவரது ஆராய்ச்சி நீளும். காதோலை பழக்கம் முதலில் தென்னாட்டிலே அல்லது வடநாட்டிலா என்ற கேள்வியுடன் அவர் விடையை தேடவேண்டும் எனச் சொல்லி நிறுத்துவார்.
’ விருந்து’ எனும் சொல்லை எடுத்து ஆய்வு செய்வார் வையாபுரி. விருந்து என்பதை தொல்காப்பியம் பேசியுள்ளதிலிருந்து அது பழங்கணக்கில் வருவது என்பார். வருகின்ற விருந்தாளிகளை உபசரித்தல் என்ற பொருளில் பண்டைய இலக்கியங்கள் பேசியுள்ளன.
ஆனால் புறநானுற்றுக்கு பிந்தியதாகக் கருதப்படும் திவாகர் சூத்திரம் இதற்கு புதுமை எனப் பொருள் கொண்டுள்ளது. அது ஆகுபெயராகி புதிதாய் வந்தார் மேல் நின்றது எனவும் பரிமேலழகர் உரை செல்வதாக வையாபுரி விளக்குவார். விருந்தோம்புதல் வேள்வியாகவே பல இலக்கியங்களில் பேசப்படுவதாகவும் அவர் சொல்வார்.
உத்தமர்களாகிய பெரியோர்களை விருந்து உபசரித்தல் என்பது முக்கியமாக பார்க்கப்பட்டுள்ளது. இதற்கென அரண்மனைகளில் ’விருந்துக்கோயில்’ என தனி இடம் கூட இருந்ததாம்.
வடமொழியிலும் அதிதி- ஆதித்தியம் சிறப்பாக பேசப்படுகிறதென்பார் வையாபுரி. ’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ எனத் தமிழ் பேசினால் ’அன்னம் பிராணக’ என பெளதாயணம் பேசுவதாக வையாபுரி ஒப்பிடுவார்.
பஞ்சம் என்ற சொல்லை ஆய்வு செய்த வையாபுரியார் அச்சொல் 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நூல்களில் ஏறத்துவங்கியதாக சொல்கிறார். மலையாளத்திலும் இச்சொல் தமிழிலிருந்து போயிருக்கலாம்.
கன்னடத்தில் மலடி எனப் பொருள்தர பஞ்ஜெ என்பதைச்சொல்கிறார்கள். தமிழில் கூட பூமி வறங்கூர்ந்ததை நிலம் மலடானது என மலட்டு தன்மையை பஞ்சம் எனும் பொருளில் வழங்கியதாக சொல்கிறார்.
வையாபுரி வேறு பல சொற்கள் குறித்தும்
இதில் பேசியுள்ளார். என் பார்வைக்கு எளிதாக உணர்ந்தவை குறித்தே இங்கே சொல்லியுள்ளேன்.
ஆர்வம் உள்ளோர் அவர் நூலை படிக்கலாம்.
22-8-2022