https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, August 14, 2022

1947 ஆகஸ்ட் 15 விடுதலையை நோக்கிய அந்த நாளில்.

 

                         1947 ஆகஸ்ட் 15 விடுதலையை நோக்கிய அந்த நாளில்...

                                         (75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாளில்)

ஆகஸ்ட் 14 மற்றும் 15 1947ல் சுதந்திரத்திற்கான அதிகாரத்தை அரசியல் அமைப்பு நிர்ணயசபை எடுத்துக்கொண்ட நிகழ்வு பதிவு குறித்த சில அம்சங்களை தர முயற்சித்துளேன். முதல் பகுதி ஆகஸ்ட் 14க்குரியது… அவையில் என்ன நடைபெற்றது என்பது குறித்த சிறு பகுதி. அடுத்த பகுதி ஆகஸ்ட் 15க்கானது. அவை குறிப்பில் காணப்பட்டுள்ளபடி இங்கு தரப்பட்டுள்ளது.                                    

1

இந்திய அரசியல் அமைப்பு சபை ராஜேந்திரபிரசாத் தலைமையில் ஆகஸ்ட் 14 இரவு 11 மணிக்கு கூடுகிறது. சுசேதா கிருபாளனி வந்தே மாதரம் பாடலை பாடுகிறார். அனைவரும் எழுந்து நின்றனர்.

 பிரசாத் தலைமை உரை நல்குகிறார். விடுதலைப்போரில் அறிந்தவர், பெயர் அறியாதவர் அனுபவித்த சொல்ல முடியாத வேதனைகள்- உயிர் தியாகங்களை நினைவு கூர்வோம். அந்தமான் சிறைக்கூட கொடுமைகளையும் அறிவோம். தெய்வத்தின் அனுக்கிரகத்தாலும் இப்போது நாமே நம்மை ஆளும் அதிகாரம் பெற்றுள்ளோம்.

மகாத்மாவின் மேன்மை- அவரது அகிம்சை வழி போராட்டங்கள் மகத்தானவை. உலக நாடுகளுடன் தோழமை கொள்வோம்.  அமைதியை உருவாக்குவோம்.

இயற்கையும் கடவுளும் ஒன்றாக கொடுத்த நாடு இன்று இரு நாடுகளாக பிரிந்துள்ளது. உற்றம் சுற்றம் பிரிந்து போவது துயரமானது. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நல்வாழ்த்தை உரித்தாக்குவோம். இந்தியாவில் இருக்கும் அனைத்து சிறுபான்மையினரும் நல்வகையில் நியாயமாக நடத்தப்படுவார்கள். அவர்களின் மதம், கலாச்சாரம், மொழி பாதுகாப்பாக இருக்கும். அதேபோல் அவர்கள் நாட்டின் மீது தங்கள் விசுவாசத்தை காட்டவேண்டும். மக்கள் அனைவரையும் ஏழ்மை, சுரண்டலிலிருது காத்து கெளரவமான  வாழ்க்கை ஒன்றிற்கு நாம் உத்தரவாதம் செய்திடவேண்டும்.

அடுத்து இந்திய விடுதலைக்காக நல்லுயிர் நீத்த தியாகிகளுக்காக 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேரு பிரேரணை (motion) தாக்கல் செய்ய அழைக்கப்படுகிறார். ஹிந்துஸ்தானியில் அவர் உரையாற்றினார். அந்த உரைதான் பிரசித்தி பெற்ற விதியுடனான சந்திப்பு-  Tryst with Destiny.

நேரு we have almost attained independence  என்றே மிகவும் கவனமாக அப்போது சொன்னார். உறுதிமொழி ஏற்கவேண்டிய தருணம். இந்திய மக்களுக்கு சேவை என்பதான உறுதிமொழியது. இந்த அசெம்பிளி  fully free independent body  ஆகி தனித்த  சுதந்திர நாடாகிவிடும். பொறுப்பை உணராவிட்டால் கடமையை செய்யமுடியாமல் போகும். நாம் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருக்கிறோம். நாட்டின் சில பகுதிகளில் அது இல்லை.  இதயங்களில் துயரம் வழிகிறது.

அந்நியர்களை அகற்றுதல் என்ற கடமை முடிந்துள்ளது. இந்தியர் ஒவ்வொருவருக்கும் சுதந்திர மூச்சுகாற்று கிடைக்கும்வரை நமதுகடமைகள் ஓயாது இருக்கும்.

 இந்தியா ஒரு கட்சிக்கோ, குறிப்பிட்ட மக்கள் பிரிவிற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ ஆனதல்ல. அது அனைத்து மதங்கள், கொள்கைகளுக்கானது. நமது சுதந்திரம் அனைவரின் பகிர்விற்குரியது.

ஆங்கிலத்தில் தீர்மானம் வாசிக்கப்படுகிறது.  Freedom and Power bring responsibility. எதிர்காலம் எளிமையான ஒன்றல்ல. இந்திய சேவை என்பதன் பொருள் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை என்பதே. ஒவ்வொருவரின் கண்ணிலிருந்து வரும் நீரை துடைப்பதே சிறந்த மனிதரின் வேலை. நமக்கான இந்திய கனவுகள் உலக கனவுகளும் கூட.

பின்னர் நேரு அவர்கள் நள்ளிரவு மணி 12 அடிக்கும்போது உறுப்பினர் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமொழி வாசகங்களை முன்வைக்கிறார்.



நேரு முன்வைத்த தீர்மானத்தை வழிமொழிந்து Chaudhari Khaliquzzaman  பேசினார். விடுதலைக்காக மகத்தான தியாகங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்நியருடனான போராட்டம் முடிந்துள்ளது. நம் மத்தியிலான போராட்டம் இனி துவங்கும். வெறும் கைதட்டல்களும் பெரும் கூச்சல்களும் உதவா. தலைவர்கள் முன் கடும் உழைப்பை தொண்டை கோரும் கடமை காத்திருக்கிறது. நிர்வாகியான பின்னர் பலரின் பழிப்புகளை , வசைகளை பொறுத்துக்கொள்ளவேண்டும். இந்த உறுதிமொழி நம் அனைவருக்கும் பெரும் பொறுப்பை தருகிறது. அதனால் நாம் கட்டப்பட்டுள்ளோம். அவரவர்க்கானதை தருவோம். வகுப்புவாதம் கூடாது. நாம் மிக நேர்மையாகத்தான் கடமைகளை சுமக்க உள்ளோம் என்ற செய்தி இங்கிருந்து மக்களுக்கு போகவேண்டும்.

 டாக்டர் ராதாகிருஷ்ணன் உரையாற்ற அழைக்கப்படுகிறார். அவர் தன் உரையில் நேரு பேசியபின் தான் விரிவாக உறுதிமொழி பற்றி சொல்ல வேண்டிய அவசியத்தில் இல்லை. இந்திய மக்கள் தங்களை அற்புதமாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு அரங்கேறும் தருணமிது,.

 அதிகாரத்தை பெற்றது என்பதில் உலகத்திற்கு புதிய அத்தியாயத்தை நாம் கொடுத்துள்ளோம். மற்றவர்கள் நடவடிக்கைகளை பாருங்கள்- வாஷிங்டன், நெப்போலியன், லெனின், ஹிட்லர், முசோலினி என பாருங்கள். அங்கு சிந்தப்பட்ட இரத்தம், படுகொலைகளை அறிவோம். ஆனால் இந்தியாவில் இங்கு அந்த மகத்தான மனிதனின் தலைமையில் நடந்ததையும் பாருங்கள். அதிகார மாற்றம் வெறுப்பின்றி கைமாற்றி தரப்படுகிறது. நாம் மெளண்ட்பேட்டனை கவர்னர் ஜெனரல் என்று சொல்கிறோம். அது நட்பின் புரிதல்.

 1600ல் இங்கிலீஷ் இங்கு வந்தனர். வாங்கினர்- விற்றனர்- இலாபம் பெற்றனர்- ஆட்சி செய்தனர். நம்மை திருத்த வேண்டும் எனவும் செயல்பட்டனர். நவீன மயமாக்க முயன்றனர். சிலர் படுமோசமாக நடந்தும் கொண்டனர். நம்மை மேலும் ஏழ்மையாக்கி பலவீனப்படுத்த முயன்றனர்.. இந்த இரட்டைத்தன்மை ஆட்சியாளர்களாக அவர்களிடத்தில் இருந்தது.

 வகுப்பு பிரிவினை எண்ணம் விதைக்கப்பட்டு பிரிவினை நேர்ந்தது. அவர்களை முழுமையாக குற்றம் சொல்ல முடியாது.  நாம் நம்மை தவறுகளிலிருந்து மீட்டுக்கொள்ளமாட்டோமா? உள் கொடுமைகளை நிறுத்துவோ? குறுகிய மூட நம்பிக்கைகளிலிருந்து வெளியேறமாட்டோமா? நமது குறைகளின் மீது அவர்கள் விளையாண்டனர். எனவே இப்போது நாம்  self examination- searching hearts  செய்துகொள்ளவேண்டும்.  Passion and wisdom never go together.

நமக்கான வரலாறு இருக்கிறது. அரசியல் வாழ்வுதான் துண்டாடப்பட்டுள்ளது. கலாச்சார பிரிவினைகள் எனப் போனால் அது மிக ஆபத்தானதாகும். அதேநேரத்தில் எச்சரிக்கை தேவை. சுதந்திர இந்தியா சாதாரண மக்களுக்கு என்ன செய்கிறது என்பதைக்கொண்டே மதிப்பிடப்படும். பாரபட்சம் கூடாது. இனி பிரிட்டிஷ் என சொல்லமுடியாது. When power outstrips ability we will fall..

தலைவர் பிரசாத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுகிறார். அப்போது எம் வி காமத் எழுந்து தனது திருத்தங்களை வாபஸ் பெறுகிறார். பிரசாத் கடவுளை அழைத்து உரை நல்கியதில் காமத் திருப்தி அடைகிறார்.  Motion Adopted  என தலைவர் அறிவிக்கிறார்.

12 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்கப்படுகிறது. உறுதிமொழி ஹிந்துஸ்தானியிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது.

 அடுத்து  Intimation to the Viceroy about the Assumption of Power by the CA and appointment of Lord Mountbatten as Governor General  என்பது முன்மொழியப்பட்டு ஏற்கப்படுகிறது. தலைவரும் நேருவும் மெளண்ட்பாட்டனிடம் அதை தெரிவிப்பர் என்பதும் ஏற்கப்படுகிறது.

தேசியக்கொடியை ஸ்ரீமதி ஹன்ஸா மேத்தா வழங்குவார் என அறிவிக்கப்படுகிறது.

ஹன்ஸா: ஸ்ரீமதி சரோஜினி இல்லாமையால், இந்திய பெண்களின் சார்பில் நாட்டிற்கு வழங்குவதில் பெருமையடைகிறேன். உயரப்பறக்கப்போகும் நமது தேசியக் கொடியை இந்திய பெண்களின் கொடையாக பெண்ணாகிய நான் தருகிறேன்.

74 பெண்களின் பெயர்கள் Flag presentation Committeeல் இருந்தது.

தலைவர்: டாக்டர் ஷி லுன் லோ, சீன தூதர் அவர்களின்  கவிதை ஒன்றை ஏற்கிறோம்.

சாரே ஜகான் சே மற்றும் ஜனகனமன சுசேதா கிருபளானியால் பாடப்படுகிறது.

ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை காலை 10 மணிவரை அவை ஒத்தி வைக்கப்படுகிறது.

 

2

ஆகஸ்ட் 15 1947 காலை 10 மணி

கவர்னர்ஜெனரல் மெளண்டபாட்டன் அவரது துணைவியாருடன்  ராஜேந்திரபிரசாத் வந்து அமர்தல்.

வாழ்த்து செய்திகளைப் படித்தல் துவங்குகிறது. முதல் செய்தி இங்கிலாந்தின் பிரதமரிடமிருந்து, அடுத்து காண்டர்பரி ஆர்ச்பிஷப், சீனாவின் தலைவர் சியாங்காய் ஷேக், கனடாவின் பிரதமர், ஆஸ்திரேலியா பிரதமர், இந்தோனேஷிய அதிபர், ஆஸ்லோ பிரதமர், நேபாள அமைச்சர் என 9 நாடுகளின் வாழ்த்து செய்திகள் படிக்கப்பட்டன.

 கவர்னர்ஜெனரலை உரையாற்ற தலைவர் அழைக்கிறார்.

கவர்னர் ஜெனரல் உரை:  transfer of power with consent- the fulfilment of a great democratic ideal to which British and Indian peoples alike - achieved by means of peaceful change.

பெரும் பொறுப்புகளை சமாளிப்பீர் என்ற நம்பிக்கையிருக்கிறது. கடமைகளை செவ்வனே ஆற்றிட இறை அருள் கிட்டட்டும்.

 முதலில் அட்லி சொன்ன ஜூன் 1948 காலம் போதுமா என்று தோன்றியது. பின்னர் அது மிக அதிகம் எனக் கருதினோம். இங்கிருந்த வகுப்புவாத டென்ஷன் குறித்து நான் உணரவில்லை. அனைவருடன் பேசி ஜூன் 3 உடன்பாடு திட்டம் ஏற்படுத்தினோம். கடும் மோதல் சூழலில் open diplomacy  அவசியம். ஜூன் 3 திட்டம் வைத்தவுடனேயே நிர்வாக அம்சங்கள் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. 2 1/2 மாதத்தில் 40 கோடி மக்களின் பிரிவினையை இரு நாடுகளாக பிரித்தல் என்ற பெரும் நிலை வந்தது. பலர் இராப்பகலாக வேலை பார்த்தனர். அவர்களுக்கு அனைத்து பெருமையும் சேரும். நாடு பிரிகிறதே என்ற வருத்ததுடன்தான் உங்கள் சுதந்திரம் என்கிற மகிழ்ச்சி வருகிறது. பஞ்சாப், வங்கமும் பிரிவினை என்பதை ஏற்கவேண்டியதானது. எல்லை கமிஷன் அமைக்கப்பட்டது.

 விடுதலை என்பது பிரிட்டிஷ் இந்தியா பகுதிக்குதான். 565 சமஸ்தானங்கள் சுயேட்சையாக இருக்கின்றன. இது பெரும் பிரச்னை. வல்லபாய் நல்ல திட்டத்தை சொல்லியுள்ளார். அவற்றில் பல இந்திய பூகோள எல்லையுடன் தொடர்புகொண்டவை.  Instrument of Accession  மூலமும் சேரமுடியும். ஹைதராபாத் தனித்தன்மைக்கொண்டு நிற்கிறது. அதற்கு சில பிரச்னைகள் இருக்கின்றன. அம்மன்னரும் வெளியுறவு, இராணுவம், தகவல்தொடர்பு போன்றவற்றை ஏற்கிறார். பேச்சுவார்த்தை நிஜாமுடன் தொடரும்.

 கவர்னர்ஜெனரலாக என்னை உங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வீர். கடினமான நாட்களில் உங்களுடன் நிற்கவேண்டும். விரைவில் உங்களில் ஒருவரை கவர்னர்ஜெனரல் ஆக தேர்ந்தெடுத்துக்கொள்வீர்.

At this historic moment, let us not forget all that India owes to Mahatma Gandhi the architect of her freedom thro non violence. We miss his presence today.. In your first PM Pandit Nehru you have a world renowned leader of Courage and vision..

அடுத்து பிரஞ்சு, அமெரிக்க வாழ்த்து செய்திகள் படிக்கப்பட்டன.

தலைவர்: இனி நாம் வருங்காலத்தின் மீது கவனம் செலுத்துவோம் என்கிற உரையை தருகிறார். நாம் கொடுமைகளிலிருந்து மீண்டு நம்பிக்கைக்கொண்ட காலத்தில் நுழைவோம். ஒவ்வொருவரின் சர்வாம்ச வளர்ச்சியை மனம் கொள்வோம்.

நம்மிடம் ஏராள குழுக்கள், கட்சிகள் இருக்கின்றன. பல சித்தாந்தங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் மீது தங்கள் கோட்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த நாட்டின்  நிர்வாகத்தை தங்களுக்கேற்றால் போல் மாற்றவும் விழைகின்றனர். அவர்களுக்கு இந்த உரிமைகள் இருக்கலாம். ஆனால் பதிலாக நாடு அவர்களின் விசுவாசத்தை எதிர்பார்க்கிறது.

இந்தியாவில் சேர்ந்த சமஸ்தானங்களை வரவேற்போம். மன்னர்களுக்கு எதிராக என திட்டம் இல்லை. இருகரம் நீட்டி வரவேற்போம். பல நாடுகளின் அனுபவத்தை கணக்கில்கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க்குகிறோம். மக்களின் விருப்பங்களை சொல்வதாக அது அமையவேண்டும். தனிநபர் உரிமை- பொதுநன்மை என்பது இணக்கமாக்கப்படவேண்டும்.

நமது கடும் உழைப்பும் கஷ்டமும் பட்ட காலம் முடிந்து இனி பலன்களை துய்க்கும் காலம் என எவரும் வாளயிருந்துவிடக்கூடாது..  The task is great, the times are propitious.

 அவை ஆகஸ்ட் 20, 1947 வரை ஒத்திவைக்கப்படுகிறது.

 வானொலியில் நேரு அவர்கள்  Fellow countrymen  என விளித்து புதிய கடமைகளை உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ள சித்தமாவோம் எனும் உரையை நல்கினார்.  production and fair equitable distribution என்பதில் கவனம் குவியட்டும் நாட்டின் சேவைக்கு அனைத்து பிரிவினரும் Comrades போல நின்று செயல்படுவோம்  என அவர் அழைப்பு விடுத்தார்.

 ராஜேந்திர பிரசாத்தும் ஆகஸ்ட் 15 1947ல் வானொலி உரையை நிகழ்த்தினார். எந்த ஒரு சிறுபான்மை பிரிவினர்க்கும் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படமாட்டோம் என்கிற நம்பிக்கையை உருவாக்கவேண்டும். உற்பத்தி போதுமான அளவு இல்லை என்பது மட்டுமல்ல உற்பத்தி சாதனங்களும் போதுமானதாக இல்லை. இதை சரி செய்யவேண்டும். விலை ஏறாமல் பொருட்கள் கிடைக்கப்பெறவேண்டும். உணவு பற்றாக்குறையே 12 1/2 சதம் இருக்கிறது. எனவே உற்பத்தி  என்பதில் நம் முழுகவனமும் செல்லட்டும். உப்புவரி நீக்கம் என்பது குறைவான விலையில் உப்பு கிட்டவேண்டும் என்பதற்குத்தான். ஆனால் அதிகவிலை- தட்டுப்பாடு நிலவுகிறது. இனி பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டக்காலம் முடிவுற்று ஆக்கபூர்வ தேச கட்டுமான வேலை துவங்கட்டும். விவசாயமும், பால் உற்பத்தியும் பெருகவேண்டும். உலக நாடுகளுடன் தோழமை படரட்டும்.

இரு தலைவர்களும் முதல் சுதந்திர தினத்தன்று உற்பத்தி- பற்றாக்குறையிலிருந்து விடுதலை எனப் பேசியுள்ளனர். நேருவின் கனவாக இருந்த பகிர்வு நியாயம் என அவர் குறிப்பிட்டது இன்றும் 75 ஆண்டுகளுக்கு பின்னரும் கனவாகவே இருக்கிறது…

 

14-8-2022

No comments:

Post a Comment