மஹாதேவ தேசாய் பற்றி..
(தன்னலமற்ற தொண்டின் தனி முத்திரை)
“ அவருடைய பேச்சு சுத்தமாய் இருந்தது, விஷயத்தை தழுவியிருந்தது. பேசும் முறையில் ஒரு குற்றமும் இல்லை. அவருடைய வாதங்கள் கண்டிக்க முடியாதவை. அவர் சுற்றி வளைத்து வீண் பேச்சுப் பேசவில்லை, பயனற்ற ஒரு சொல்லும் சொல்லவில்லை. இரண்டு அர்த்தத்தை அளிக்கும் சொற்களையும் பேசவில்லை. அவருடைய சொற்கள் எடைப்போட்டுப் பேசியவையாய் இருந்தன. பேச்சில் இனிமை இருந்தது. கேட்போர் அவரின் எந்த பேச்சையும் எதிர்க்க முடியாது”
“ சேவைத் துறையிலே தூயமுறைகளை நம் கண்முன் இட்டு நமக்கு ஓர் சிறந்த வழிகாட்டியாக விளங்கினார் மஹாதேவ தேசாய்”
- கிஷோரிலால மஷ்ருவாலா
” காந்தியடிகளின் கட்டளையினால் அவர் செய்த பற்பல வேலைகளைக் காந்தியடிகளோ பியாரிலாலோதான் வர்ணிக்க முடியும். காந்தியடிகளின் நம்பிக்கையான தூதராகி அவர் செய்த சமாதான முயற்சிகளின் சரித்திரத்தை யார் எழுதமுடியும்? அவரிடத்தில் காந்தி பக்தி, சுயராஜ்ய பக்தி, தேசபக்தி என்ற மூன்றும் ஒன்றியிருந்தன”
- காகா கலேல்கர்
” காரியத்தைக் கண்டு நாம் பயப்படக்கூடாது, காரியம் நம் மீது வெற்றிபெறக்கூடாது என்ற மர்மத்தை அவர் தன் வாழ்க்கையின் ஆதியிலேயே உணர்ந்தார். அதனால் வெற்றி பெற்றார். அவருக்கு ஆயுள் நீண்டதாக கிடைக்கவில்லை. நூறாண்டுகள் பிழைத்திருக்கும் பிறர் என்ன சாதித்துவிடுகிறார்கள்?
மஹாதேவ தேசாயின் எழுத்துத் திறமையை நான் அறிவேன். காந்தியடிகளின் சிறு சிறு விஷயங்களையும் பொறுக்கி எடுத்துப் பாதுகாத்து பெரும் பொக்கிஷமாக வளர்த்தார். எப்போதும் வேலையை தன் கடமையாக கொண்டு வாழ்ந்த இவருக்கு எழுத்து திறமை வளர்க்க நேரம் எப்படிக்கிடைக்கிறது என்று கேட்டபோது- கலேல்கர் ஓய்வற்ற வேலை, அளவற்ற ஆராய்ச்சி மஹாதேவ தேசாயால்தான் முடியும் என்றார்”
”சுதந்திர தேவதையை இந்திய நாட்டின் வாயிற்படிவரையில் அழைத்துவரும் வேலைதான் அவருடையது. அந்தத் தேவதையின் நலன்களை அனுபவிக்க அவருக்குத் தருணமில்லை. அனுபவிக்கும் பெரும்பாக்கியம் நமக்குத்தான் உண்டு...”
- சியாராம் சரண் குப்தா
” மஹாதேவ தேசாய் கோபமடைந்தோ கலவரங்கொண்டோ பார்த்ததாக எனக்கு நினைவே இல்லை. அறுபது நாழிகையும் அவர் முகத்தில் முன்முறுவல் வீற்றிருக்கும். எவரிடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று அறிந்தவராக, ஒவ்வொரு நிமிஷமும் ஏதோவொரு வேலையில் ஈடுபட்டிருந்தார்.. சோம்பலை அறியாதவர், ஞானத்திற்கோர் பொக்கிஷம்.. மஹாதேவ தேசாய் இறந்ததால் காந்தி அனாதையாகிவிட்டார் என்று ராஜாஜி கூறியது உண்மையே..
“ தாகூர் விஸ்வபாரதிக்கு நிதி திரட்ட வயதையும் பொருட்படுத்தாது கலை நிகழ்ச்சிகள் ந்டத்தி துன்பப்பட்டதைப் பார்த்து காந்தி மஹாதேவ தேசாயிடம் வருந்தினார். இரவு 10 மணிக்கு என் வீட்டிற்கு தேசாய் வந்தார். காந்தியின் வேதனையை சிறு உபந்நியாசமாக விளக்கினார். அவரது வாக்கில் ஆவேசம், ஒளியிருந்தது. குருதேவர் இப்படியா அவதிக்குள்ளாகவேண்டும் என்ற வேதனை தெரிந்தது.
கனசியாமதாஸ் மற்றும் 6 நண்பர்கள் ஆளுக்கு பத்தாயிரம் அளித்து இந்தியாவை இப்பெரும் வெட்கத்திலிருந்து காக்க வேண்டுமென காந்தி சொன்னதை தேசாய் சொன்னார்.. இதற்கா இந்த இரவு குளிரில் வந்தீர்கள். என்னிடமிருந்து பெற்று காந்தி மூலம் குருதேவிடம் சேர்த்துவிடுங்கள் என்றேன். இதன் பெருமை முழுதும் மஹாதேவ தேசாயினுடையதே”
உண்மையில் மஹாதேவ தேசாய் கந்தியடிகளின் காரியதரிசி அல்ல. அவருடைய மற்றொரு உடலாகவே விளங்கிவந்தார்.. காந்திக்கு புத்திமதி கூறுபவராகவும் வழிகாட்டியாகவும் கூட ஆக நேர்ந்தது. காந்தியடிகள் எந்தெந்த சொற்களை எவ்வெப்பொழுது உரைப்பார் என்பதை தேசாய் நன்கு உணர்ந்திருந்தார்..ஆனால் காந்தியடிகள் உரைப்பதில் தகாத சொல் வந்துவிட்டால் தேசாயின் எழுத்து தடைப்பட்டு, பிடிக்கவில்லை என்று சொல்லி வாக்கு வாதம் நடக்கும். பிறகுதான் அவர் எழுதத் துவங்குவார்.
காந்தியடிகளைப்
போலவே நடக்கவேண்டும், அவரைப்போல் ஆடை அணியவேண்டும் என்ற
எண்ணம் அவருக்கு உதிக்கவில்லை, குட்டிக் காந்தியாகவேண்டுமென்ற எண்ணமும் இல்லை. தன்னைக் காந்தியடிகளின்
எண்ணங்கள் மயமாக்கிக்கொண்டு, அவர் வேறு, தான்
வேறு என்ற பேதமில்லாமல் ஆகிவிட்டார்”..
யாரறிவார் , நாமிழந்த மாணிக்கத்தின் மதிப்பை?” - ஜி
டி பிர்லா
” மனிதன் மற்றெல்லாவிதமான விருப்பங்களையும் வெல்லலாம். தான் பெருமையடடையவேண்டும், கெளரவம் பெறவேண்டும் என்ற விருப்பத்தை வெல்ல முடியாதென்பார்கள்..ஆனால் மஹாதேவ தேசாய் இந்தக் குறையையும் கலைந்து விட்டார். அதுவும் வெகு சுலபமாக கலைந்தார். காந்திக்கும் தேசாய்க்கும் இடையே தர்க்கம் நடக்கும். ஆனால் சண்டை அன்பு நிறைந்ததாயிருக்கும். உண்மையில் காந்தியடிகளின் நன்மைக்காகவே மஹாதேவ தேசாய் தன்னை அழித்துக்கொண்டார்”
- பண்டித சுந்தர்லால்
Comments
Post a Comment