https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, July 31, 2022

A piece for BSNL Employees and Absorbed Retirees

 

A piece for BSNL Employees and Absorbed Retirees

 

As Employees you are all expecting wage revision, due from Jan 2017. As pensioners we are all expecting pension revision from the same Jan 2017. In this material world, the expectations and desires of both of us are not unfair.

 

Trade Unions and Pensioners Associations are trying their level best to settle the issue. Even the TUs have gone to the extent of telling the masters that Pension revision may be done delinking wage revision, may be spiritually correct but materially difficult.

 

The Administrative Masters from DOT and DPE (now from MOF ) are showing the guidelines issued for 3 PRC implementation. Those PSUs having profit started implementing the wage revision in the last 5 years. BSNL is not able to implement because of its loss making financial position.

 

In this scenario all unions and associations changed their approach in getting pension revision as it is being paid by GOI thro DOT Demands for Grants. The new approach is delinking. The main advocacy  is that BSNL  not at all concerned with the Pension Expenditure issue and DOT is the responsible apparatus.

 

Though they are all in unity demanding delinking, but started differing on the question of method whether 7th CPC or 3rd PRC. Those advocating 7th CPC fitment ( not from Jan 2016 ) are convincing the stakeholders noting the special privilege of absorbed employees retiring from BSNL, getting pension from GOI vide the special provision made in the Pension Rules at the time of formation of BSNL during 2000 viz 37A after great struggles led by a legendary leader O P Gupta and others.

 

CPC seekers are demanding the eligibility of 7th CPC recommendations and the same to be extended to BSNL absorbed pensioners , as they are doing in the case of Gratuity calculations, minimum and maximum ceilings on pension.

The other pensioners and TUs are following the same old PRC pattern and demanding 3 PRC eligibility, of course with delinking.

All are unanimous on the date of implementation that is from 1-1-2017 whether CPC or PRC. 

 

CPC changers are proposing new demands deviating from the path followed since 2000. One is changing to CPC instead of PRC which will help the BSNL pensioners to join the mainstream of Central Govt Pensioners. The other deviation is, they want the date of implementation not as per CPC date 2016 but from PRC date Jan 2017.

 

The ‘No changers ‘ of PRC have no such deviation, they want the same PRC implementation from the said PRC date 2017 but with delinking.

 

In all these demands, the unfortunate section that are left in lurch is those becoming BSNL absorbed pensioners  that is post 2017 pensioners by the same special provision 37A. If delinking is accepted, this section more than a lakh pensioners are going to be affected and confusion is created by all in their demand comparing the demand of pre 2017 pensioners.

 

For post 2017 pensioners, the demand is not from 1-1-2017 as they are not eligible pensioners on that date but employees on that date, subsequently becoming pensioners. How can there be a different date for them barring 1-1-2017, most of the activists missing this question.

 

If pay revision is not settled then the employees as on 1-1-2017 have to travel in 2nd PRC IDA pattern and Pension Revision is settled accepting delinking then these pensioners  have to travel in 3rd PRC IDA pattern after 1-1-2017. Again a sort of confusion amongst 37A absorbed folk entered in the BSNL on 2000.

Already 5 years over in the given period of 3 PRC. Only 5 more years we have in 3rd PRC period. 2027- 2036 will become 4 th PRC period.

 

Can we as employees go to 4th PRC and Its IDA without entering into 3 PRC and it’s IDA? This is a crucial question need to be taken seriously in this rest of 5 years. Make yourself fit into 3rd PRC becoming an urgent issue, as BSNL is expected to head into profit mode during 4th PRC period of eligibility.

 

Delinking means we are delinking our entire folk together entered from DOT to BSNL on 1-1-2000 thro the same special provision namely the magical 37 A after the great effort of the far thinking great leader Gupta. In the name of  delinking pay revision and pension revision from 1-1-2017, we are actually delinking pre 2017 pensioners from the post 2017 pensioners . This is most unfair and making our Dec 17 celebrations meaningless, creating a wedge in the folk of 37 A pensioners as a class.

 

Delinking means nobody want any pay revision, only pension revision, which is illogical regarding the employees of BSNL on 1-1-2017.

 

If delinking is accepted then pre 2017 may get the benefits, if at all anything from 1-1-2017 but post 2017 would miss that 1-1-2017 date. This is unfair.

 

 Then what is the solution in the given situation and context, though not a novel idea I just place my understanding.

There are 3 categories as on date. One is pre 2016 absorbed pensioners, the second is post 2017 pensioners but employees on 1-1-2017, the third one is BSNL direct recruited employees not connected with 37 A. For all these categories the magical date of benefit should fall on 1-1-2017. What to do for this. The  hitherto existing option is the way out in today’s context.  What is that option  ‘pay revision and thereby pension revision.’

 

 Nothing novel in it but that is the way out. Once we grip this as our focus, our energy will be channelised without any wastage.

The hurdle is DOT which one is yet to address the issue of making BSNL eligibility of 3 rd PRC, seeking exemption in the DPE guidelines. This is the dire need of the present situation.

Once the BSNL proposal for Executives is addressed ( whatever to enter into 3rd PRC and it’s IDA pattern) by DOT and sought approval is obtained by the efforts of DOT with the cabinet, then there will be solution to both Non Executives and pre 2016 pensioners.

 

In order get pension revision for pensioners,we have address the issue of Executive’s wage revision first and foremost. That is the way out. Pressing DOT ‘do pension revision for that do pay revision ‘ is the only best available option in the present context.

 

I hope wisdom will take all to this path, though late.

 

31-7 2022   - R Pattabiraman

Saturday, July 30, 2022

சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

 

                  சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற தொகுப்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியசைவ சித்தாந்தமும் மார்க்சியம்எனும் கட்டுரை ஒன்றும் இருக்கிறது. இந்த தொகுப்பு 1987ல் வெளியான ஒன்று.. இந்நூலில் மெய்கண்டர் தேவர் முதல் மார்க்ஸ்வரை தான் பேசியிருப்பதாக அடிகளார் சொல்லியிருப்பார்.

தோழர் கவிஞர் யுகபாரதி இது குறித்து முகநூல் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார். அடிகளார் 40 பக்கத்திற்குள்ளாகத்தான் தன் ஆய்வை நமக்கு தந்திருப்பார். அவரின் எழுத்துக்கள், பேச்சு எல்லாம் பொருள் பொதிந்ததாக சுருக்கமானதாக அதே நேரத்தில் அடர்த்தி நிறைந்ததாக இருக்கும். சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான்

பிற சமயங்களுடன் விவாதித்து அதில் தெரியும் குறைகளை சுட்டி நிராகரிப்பது போல ஒன்றல்ல மார்ச்கியம் என்பதை அடிகளார் முதலிலேயே சொல்லிவிடுவார். மார்க்சியத்தை உலகாயததத்தின் வளர்ச்சியாக அவர் பார்ப்பார். கடவுள் மறுப்பு தத்துவங்கள் தோன்ற காரணம் எவை என கேள்விகளைக் கேட்டு அடிகளார் ஆய்வை நகர்த்துகிறார் . சைவ சித்தாந்தம், மார்க்சியம் இரண்டையையும் கற்கும் மாணவன் தான் என்பதையும் அவர் அடக்கத்துடன் வைத்துவிடுவார்.



 சைவ சித்தாந்தம் 13 ஆம் நூற்றாண்டில் முழுமையடைந்த ஒன்று. உலகாயதம் 19 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமாக முழுமை பெற்ற ஒன்று. இட - கால வேறுபாடுகள் இருந்தாலும், மானுட சிக்கல்கள்  ஒன்றுபோல இருக்கின்றன. சோவியத், சீனா சுற்றுப்பயணத்தில் அங்கும் சிக்கல்கள் இருப்பதை உணர்ந்ததாக அடிகளார் தெரிவிக்கிறார்.

சைவம் மிகப் பழமையான நெறி. உலகின் சமயங்களுக்கே கூட  மூத்த நெறி என்கிற குரல் அடிகளாரிடம் எதிரொலிக்கும். சிந்துவெளியில் சிவலிங்கம் உண்டு- சங்ககாலத்தில் சைவ சமயம் உண்டு. வைணவமும் கூட சங்க காலத்தில் என்பார் அடிகளார். சங்க இலக்கியங்கள் மறு பிறப்பை ஏற்கின்றன. சைவைத்திலும் அந்த நம்பிக்கை உண்டு.

 சைவ சித்தாந்த சமயம் என்பது அறிவாய்வுடன், வழி வழியான ஆசிரியர்களால் உபதேசம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட சமயம். நல்லெண்ணம், நல்வாழ்க்கை நோக்கம் கொண்ட சமயம். பிற சமய சாத்திரங்களைவிட சைவம் எப்படி மேலானது என்பதை நிறுவிடும் நூல்களாக மெய்கண்ட சாத்திரங்கள் இருப்பதை அடிகளார் சொல்வார்.

 சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் மாறுபாடுகள் உள்ளன என்பதை அடிகளார் ஏற்றாலும் அவை முரண்பட்டவையோ, முற்றிலும் உடன்பட்டவையோ அல்ல எனச் சொல்வார். முக்கிய வேறுபாடு கடவுள் ஏற்பு, மறுப்பு என்பதில் இருக்கிறது. உலகத்தோற்றம், உயிர் நிலை, உழைப்பின் மேன்மை, உழைப்பாளர் தகுதி ஆகிய அம்சங்களில் இரண்டும் ஒன்றுபடுகின்றன என அடிகளார் விளக்குவார்.

மார்க்சின் ஆய்வுப் புலத்திற்குள் சைவ சித்தாந்தம் கிடைக்கப்பெறாமல் போனது தமிழர்தம் குறையே என ஏற்பார் அடிகளார். மார்க்சியம் வறட்டுத்தன நாத்திகம் என்பதை ஏற்கவில்லை. அங்கு ஆக்கும் தன்மை ஓங்கி நிற்பதை அவர் குறிப்பிட்டு சொல்வார். மார்க்சியத்தை வெறும் பொருளாதார மேம்பாடென சுருக்காமல், அதை வாழ்க்கை முறையாக, நெகிழ்ந்து கொடுக்கும் தத்துவமாக, மனித குல மேம்பாட்டை வரித்துக்கொண்ட தத்துவமாக அடிகளார் புரிதல் செல்லும்.

சைவ சித்தாந்தம், மார்க்சியம் இரண்டிற்குமான ஒத்திசைவை அறிஞர் பெருமக்கள் தேடித்தருவாராயின் இம்மண்ணுலகத்தை விண்ணுலகமாக மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை அடிகளாரிடம் வெளிப்பட்டது. சைவசித்தாந்தத்தால் அயல் வழக்கு கலப்புகளை தவிர்த்து தன் தனித்த்னமை கொண்டு மக்களுடன் இயங்கி, நம்பிக்கை விதைத்து இன்பச் சமுதாய விழிவை உருவாக்க முடிந்தால் அதுவும் அருமையானது என்பார் அடிகளார். அப்படி செய்ய முடிந்தால் அது மார்க்சியத்தால் அமையப்பெறும் சமுதாயத்தைக் காட்டிலும் சிறந்த அகநிலை உணர்வுகள் கொண்ட சமூகமாக இருக்கும் என்ற கருத்தையும் அடிகளார் பிரதிபலித்தார்.

 உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை அல்ல என சைவ சித்தாந்தமும் கருதும். மார்க்சியமும் டார்வினின் பரிணாமக்கொள்கையை உயிர் குறித்த கொள்கையாக ஏற்கிறது. சைவ சித்தாந்தத்திற்கு சிவப்பிரகாசத்தை எடுத்துக்கொண்டு விவாதித்தால், மார்க்சியத்திற்கு எங்கெல்சின் நூல்களை எடுத்துக்கொண்டு விளக்குவார் அடிகளார். உயிர்கள் தோன்றியவையுமல்ல அழியக்கூடியவையுமல்ல என்பது அறிவியல் பார்வைக்கு ஏற்ற ஒன்று என்பார் குன்றக்குடி அடிகளார்.

அறியாமையிலிருந்து உயிர் அறிவை நோக்கி தொடர்ந்து வளரவேண்டும் என சைவசித்தாந்தம் விளக்குகிறது. அந்த அறியமைதான் நான் - எனது என்பதற்கு காரணமாகி பொதுமைக்கு விரோதமாக நிற்கிறது. இதிலும் மார்க்சியம் ஒத்துப்போகும். நான் எனது அற்ற நிலை சீவன் சிவத்தன்மை அடியும் நிலை என சைவம் ஏற்கும்.

 மார்க்சியம் அறியாமையை இயற்கையானது என எண்ணாமல்,  அறிவதற்கு வாய்ப்பற்ற காரணத்தின் வெளிப்பாடாக பார்க்கும். அடிகளார் எப்போதும் அறியாமைக்கு ஒன்றும் தெரியாமை என்ற விளக்கம் தரமாட்டார். பதிலாக ஒன்றை பிறிதொன்றாக முறை பிறழ அறிதலே அறியாமை எனச்சொல்வார். சைவ சித்தாந்தம் உயிர்களின் அறிவை சிற்றறிவு என எல்லைப்படுத்திக்கொண்டால் மார்க்சியம் அப்படியொரு எல்லையை வைத்துக்கொள்ளாது.

சைவத்தில் சிவப்பற்று துணைநின்று ஞானநிலை எய்தலாம். மார்க்சியம் அப்படி எந்த சிவனையும் அல்லது வேறு இறைத்துணை வழி நின்று ஞானம் என்பதை ஏற்பதில்லை. உழைப்பு- உற்பத்தி- அதன் வகைப்பட்டு சமதையான வாய்ப்புகள்- அறிவு விரிவாக்கம் என அது தன்னை தகவமைத்துக்கொள்ளும். மார்க்சிய அறிவுலகம் பெறும் வெற்றி சைவம் காட்டும் வழியான அன்பு வழியில் வந்து தன்னை தகவமைத்துக்கொண்டால் மானிட வரலாறு சிறக்கும் என்பது அடிகளார் வந்தடையும் முடிவு.

மார்க்ஸ், லெனின் போன்றவர்களை மார்க்சியர் தங்கள் வழிகாட்டும் விளக்காக ஏந்துவர். சைவ சித்தாந்தம் கடவுளை அப்படி விளக்காக கொள்ளும் என்பார் அடிகளார். அங்கு ஞானம் என்பது இறை துணையால் கிடைக்கப்பெறுவது. பிறவெல்லாம் சிற்றறிவு எனும் எல்லைக்குள்ளானது. மார்க்சியம் இப்படி பார்ப்பதில்லை.

உழைப்பு, அதன்வழி தொழில் முன்னேற்றம், அறிவு பெற்று அதை விரிவாக்கிக்கொண்டேயிருத்தல் என்பதில் சைவ சித்தாந்தமும்  மார்க்சியமும் முரண்படுவதில்லை.

மார்க்சியத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று அதன் சர்வதேச மானுட பார்வை. நாடு, மொழி, இனம் என்பதைக் கடந்து அது உலகத்தொழிலாளர்களே என விளித்தது. இயற்கை - மனிதரின் உழைப்பாற்றல்- மானுடத்துவம் என மார்க்சியம் விரியும். சிவஞான போதம் நாடு, மொழி, சாதி, இனம் என்பதை பயிலவில்லை என கூர்ந்தறிய அடிகளார் வேண்டுவார். அங்கு உயிர்களின் தலைவனான இறைவனும் தொழில் தலைவனாக பார்க்கப்படுவதாகவும் அவர் விளக்குவார். உலகுக்கு அம்மையப்பர் என விளித்தலையும் சொல்வார்.

 திருக்கோயில் வழிபாட்டுரிமையை கோடானுகோடி மக்களுக்கு தராத தவறை- தீண்டாமை எனும் தவறை சமயம் வழி அமைந்த  சமூகம் செய்துவிட்டதை அடிகளார் விமர்சனத்துடன் முன்வைப்பார். மனித குலத்தை ஒருமையுடையதாக காணவேண்டும் என்ற விழைவு இரு சித்தாந்தங்களிலும் இருக்கிறது.

 சைவ சித்தாந்த ஆய்வாளர்கள் காலத்தில் முதலாளித்துவம் என்பது இருந்ததில்லை. ஆனால் வறுமை இல்லாமலா இருந்திருக்கும். நுகர்வு குறித்த எல்லைச் சுருக்கம் காரணமாக இத்துறையில் அவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என அடிகளார் தனது ஏற்பைத்தருவார்.

வினை, விதி, ஊழ் என்பதை சைவம் பேசும். வினை என்பது செயல். மனதினால் ஆனதும் கூட. செயல் பயன் அனுபவிப்பை அதாவது துய்ப்பிற்கு வந்தடைய செய்யும் நியதியை விதி என்பர். பயன்கள் அந்த நியதிகளின்படி வினையாற்றியவர்க்கு வந்து சேர்வது ஊழ். இது இம்மை, மறுமை என இருப்பைக்கொள்ளும்.

ஏழை பணக்காரன் எனும் ஏற்பாடு சுயநல மனிதர்களின் ஏற்பாடே. சமய நூல்களில் இதற்கு மறுப்பு காணப்படாமல் இருக்கலாம். ஆனால் இந்த முறையில் புனிதமில்லை என்பதை அடிகளார் ஏற்பார். உழைப்பின் வழி ஊழ் எனச் சொல்லி உபரியை சிலர் எடுத்துச் செல்வதை சைவ சித்தாந்தம் ஏற்கவில்லை. அங்க்கீகரிக்காது என்கிறார் அடிகளார். ஏழை பணக்காரன் வேறுபாட்டை ஊழ் வழி சொல்வதை அடிகளார் ஏற்கவில்லை.

உழைப்பாளியின் சுரண்டலை வெளிக்கொணர்ந்து அதை மாற்றும் வழியையும் தெளிவாக விளக்கிய முதல் மேதை மார்க்ஸ்தான் என்பார் அடிகளார். பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பிற்குரிய அடிப்படைக் கொள்கைகள் பொறுத்தவரை சைவ சித்தாந்தச் சமயத்திற்கும் மார்க்சியத்திற்கும் வேறுபாடில்லை என்பதையும் அடிகளார் விளக்குவார்.

உலகத்தை உணமையானதாக இயற்கையானதாக உள்பொருளானதாக இரு தத்துவங்களும் பார்க்கின்றன. அதேபோல் உயிர்கள் துய்ப்பிற்கு தேவையானவற்றை இவ்வுலகிலேயே பெற வாய்ப்புண்டு என்பதையும் அவை ஏற்கின்றன. இவற்றில் ஒத்து நிற்பதை ஓர்ந்தறிக என வேண்டுவார் அடிகளார்.

 மானிடரின் தரம் உயர்த்தி ஆன்மாவை செழிப்புறச் செய்தல் என்பதை சைவம் ஏற்று நிற்கும். மானுட வாழ்க்கை செறிவான அர்த்தம் கொண்டதாக மாற- மாற்றிட மார்க்சியம் விழையும். இதிலும் ஏற்பு என்பார் அடிகளார்.

 அம்மையப்பர், சக்தியும் சிவனும், ஆதிபகவன் போன்றவற்றைக் காட்டி தமிழ் சமய நெறியில் பெண்ணிற்கு இணையான பங்கு என்பதை அடிகளார் சொல்வார். நியாயம் நீதிகேட்ட மரபாகவும் சைவம் இருப்பதை அப்பரின் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் வரிகளைச் சொல்லி அடிகளார் பேசுவார். மார்க்சியம் நீதியான சமூக அமைப்பை, பெண்களை இணையாக நடத்தவேண்டிய சமூக அமைப்பையே பேசும்.

சிந்தனை பொருள்களிலிருந்து என்பதை பொருள்முதல்வாதமாக மார்க்சியம் பேசுவதற்கு உகந்ததாகவே சைவ சித்தாந்தம் இருப்பதாக அடிகளார் காட்டுவார். ஆன்மா அல்லது உயிர் சார்ந்ததன் வண்ணமாகும். உடனுறைவின் பயன் பெற்றார் என்பது சமூக விஞ்ஞான தொடர் என்பார் அடிகளார்.

 கடவுள் இருப்பு, மறுபிறப்பு, அறிவின் செயல்பாட்டின் எல்லை போன்ற அம்சங்களில் மார்க்சியம் சைவ சித்தாந்தம் சொல்வதை ஏற்காது. மார்க்சியம் எப்படி செயல் தத்துவமோ அப்படியே சைவ சித்தாந்தமும் செயல் மூலம் தன்னை புதுப்பித்துக்கொள்ள விழையும் ஒன்றே. அதில் மானுடம் தழைக்க வேறுபாடுகள், சமூகத்தீமைகள் நீங்கிய சைவ நெறி மேலான சமூகத்தையே விழையும்.

அடிகளார் 40 பக்க அளவில் பேசியதை மேலே முடிந்தவரை மிகச் சுருக்கமாக  என் புரிதலுக்கேற்ப பதிவிட்டுள்ளேன். பேரா கா. சிவத்தம்பி அவர்களின் கருத்துக்களையும் சேர்த்து பார்த்தல் நலம் எனத் தோன்றியதால் அவரின் மதம் குறித்த பார்வையையும் மிகச் சுருக்கமாக வைத்துள்ளேன்.

                                         2

தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும் என்கிற பேரா சிவத்தம்பி அவர்கள் 1981ல் எழுதி 1983ல் வந்த ஒன்று. இந்த கட்டுரை தொகுப்பில் சைவ சித்தாந்தம் ஒரு வரலாற்று நோக்கு என்ற கட்டுரை ஒன்றும் உண்டு.

மதம்- இலக்கியம் எனும் உறவுப்பாட்டை சிவத்தம்பி பேசுவார். மதத்திற்கு இலக்கிய அவசியமும், இலக்கியங்களில் அன்று ஆத்ம உயிர்ப்புகள் மதமில்லாது இருக்கவில்லை என்பதையும் அதில் அவர் சொல்வார்.

மதம் என்பது நம்பிக்கைகளின் தொகுப்பன்று, சமூக உறவு- உற்பத்தி உறவுடன் சம்பந்தம் கொண்டது. அது நிலவுடைமை அமைப்பில் சமூக உற்பத்தி உறவின் முக்கிய அங்கமாகும். மதமோ இலக்கியமோ தமக்கென முற்றிலும் தனியான இயங்குதளம் கொண்டவையல்ல. மனிதக் குழும முழுமையின் பல்வேறு பரிமாணங்களில் அவையும் உள்ளவை. சமூக வாழ்க்கைதான் அடிப்படை.

மதத்திற்கான 6 பொது பரிமாணங்களையும் சிவத்தம்பி தருவார். கோட்பாடுகள், ஐதீகங்கள், ஒழுக்கநெறி போதனைகள், சடங்குகள், சமூக நிருவனங்கள், மத அனுபவ உந்துதல். Faith  Rituals Myths  அதாவது நம்பிக்கை, சடங்கு, ஐதீகம் அதற்கு அவசியமானவை.

மொழிநிலைப் பண்பாடு என்பது மதத்தை ஓர் உப பண்பாடாக வைத்திருக்கும். மொழி எனும் பொதுக் களஞ்சியத்திலிருந்தே மதத்தினர் கருத்துக்களை எடுத்துக்கூற வேண்டியிருக்கும். அதேநேரத்தில் இந்த உப பண்பாடு முழு பண்பாட்டையும் தன் மேலாதிக்கத்திற்கு கொணர முயற்சிக்கும்.

மதத்துக்கும் ஆட்சிமுறைக்கும் நெருங்கிய உறவு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததாகும். பெரும்பாலும் இவ்வுறவு சுமுகமாக இருக்கும். சிலநேரம் முரண் உருவாகலாம். சமூக மாற்றம் நிகழும் சூழலை தன்மையை கொண்டு இந்நிலை தீர்மானிக்கப்படும். சோழர்களுக்கும் சைவ சித்தாந்தத்திற்குமான உறவை சிவத்தம்பி சொல்வார்.

தெய்வத்தை தன்னிலைப்படுத்தி, மனித உறவுப் படிம அடிப்படையில் அத்தெய்வத்துடன் உறவு கற்பித்துக்கொண்டு அந்த உறவின் அடிப்படையில் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே பக்தி அனுபவத்தின் அச்சாணியாகும். இந்த தமிழ் பக்தியின் சாரம் வடக்கு நோக்கியும் பரவியது.

இதில் கார்ல் மார்க்ஸ் சொன்ன பிரக்ஞை பற்றிய மறுதலை உணர்வை சிவத்தம்பி சொல்வார். மறுதலை உணர்வின் மூலம் பக்தி ரசத்தில் அவர்கள் மனிதநிலை சாரத்தையே காண்பதாகவும் சொல்வார்.

ஐரோப்பிய செல்வாக்கிற்கு முற்பட்ட தமிழர் சிந்தனை முற்றிலும் சமய சார்பற்றதாக இருக்கவில்லை. ஒழுக்க நெறிகள் பாரம்பரிய மதங்கள் சுட்டும் அற அடிப்படை வழியாகவே வருவன என்பார் சிவத்தம்பி.

 மெய்யியல் என்பது சமூக சிந்தனையின் உன்னதமான கருத்துப் பிரமாண நிலை.  சைவ சித்தாந்தம் என்பது மெய்யியற் கோட்பாடு. அது தமிழர் சமூக வரலாற்றை அறிய உதவும்.  ஆரிய பிராம்மண வழிப்பட்டதல்ல என்பதை நிறுவவும், தமிழ்- தமிழக தனித்துவம் பற்றிய அறிவுவாதமாக சைவ சித்தாந்தம் தெரியும்.

சோழர் காலத்து நிலவுடைமை அமைப்பின் மேற்கட்டுமானமாக சைவ சித்தாந்தத்தை கைலாசபதி போன்றவர்கள் 1960 களில் பார்த்தனர். கர்நாடகத்தில் பசவரின் வீரசைவம் மூடப்பழக்க வழக்கங்கள், பிராமண தர்மம் எதிர்த்தும் நின்றதை சிவத்தம்பி காட்டுவார். அதேநேரத்தில் இராமனுசர் நிலைநிறுத்திய அளவு சமூக நெகிழ்ச்சி சைவ சித்தாந்தத்தில் காணப்ப்டவில்லை என்பதும் உண்மை என்பார் சிவத்தம்பி.

சோழர் ஆட்சியின் சிதைவில் பிராம்மணர் அல்லாத மடங்கள் முக்கியத்துவம் பெற்றதையும் சிவத்தம்பி பார்க்கக்கோருவார். அதன் முக்கிய சமூகப் பண்பு வேளாளச் சார்பு- அது பிராமண எதிர்ப்பு தொனிகளைக் கொண்டதாக வளர்ந்தது. சிவஞானபோதம் பிராமணரல்லாத  மெய்கண்டார் எழுதியதுதான். சித்தாந்த அஷ்டகம் எழுதிய உமாபதி சிவாசாரியார் பிராமணரானாலும் வருணாசிரமத்தை போற்றவில்லை.

 சைவ சித்தாந்த விருத்தியை தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய பிராமண சார்பற்ற மடங்கள் செய்தன. சைவ சித்தாந்தம் சங்கரரின் மாயவாதத்தை எதிர்த்த ஒன்று. உமாபதி சிவாசாரியார் தொன்மை என்பதால் நன்மை நன்று என்பதில்லை. இன்று தோன்றிய நூலானாலும் தீதாகா என்பதை எடுத்து சொல்லியிருப்பதை சிவத்தம்பி காட்டுவார். அதாவது 13 ஆம் நூற்றாண்டில்தான்  நிலைபெற்றது என்பதால் தீதாகாது எனச் சொல்லியதைக்  சிவத்தம்பி காட்டுவார்.

 பிராமணியத்தின் வலிமை குன்றிய நிலைமையில் பக்தி இயக்க வழியில் சைவ நெரிமுறைகள் மெய்யியற்கோட்பாடாக வளர முடிந்ததையும் சிவத்தம்பி காட்டுவார்.

இனி மார்க்சியர் பொதுவாக மதம் குறித்து எத்தகைய பார்வையை வெளிப்படுத்தி வருகின்றனர் என சுருங்க சொல்லலாம். மார்க்சின் கீழ்கண்ட வரிகள்தான் அதிகமாக மேற்கோளாக காட்டப்படும்.

Religious suffering is, at one and the same time, the expression of real suffering and a protest against real suffering. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people.

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஜீவனற்ற நிலைகளின் ஜீவனாகவும் இருக்கிறது. அது மக்களுக்கு அபினியாக இருக்கிறது.

மேலும் மார்க்ஸ் இந்த மயக்கு நிலை மகிழ்ச்சியிலிருந்து மனிதனை உண்மையான மகிழ்ச்சிக்கு அழைத்து செல்வதில்தான் மத ஒழிப்பு கடமை இருக்கிறது எனப் பேசுவார்.

The abolition of religion as the illusory happiness of the people is the demand for their real happiness. To call on them to give up their illusions about their condition is to call on them to give up a condition that requires illusions. The criticism of religion is, therefore, in embryo, the criticism of that vale of tears of which religion is the halo.

மனிதன் தன்னிடமிருந்து விலக்கப்பட்ட அல்லது பறிக்கப்பட்ட இந்த உலகை- அப்படி நடப்பதற்கான காரணகாரிய அறிவை பிறழ்வாக புரிந்து அறியாமையில் இருப்பதையே அவனின் சமய உணர்வாக/ பற்றாக மார்க்சியம் காணும். அவன் தற்காலிக அமைதியை ஆறுதலை அதன் மூலம் பெறலாமே தவிர அதனால் நியாயத்தை நிலைநிறுத்த முடியாது. ஏனெனில் அது அரசுடன் கொள்ளும் ஏதோவொரு உறவாலும் பாதுகாக்கப்பட்டுவருகிறது என்ற புரிதல் மார்க்சியர்களிடம் உண்டு.

எனவே ஒருவரின் மதம் தேவைப்பட்டு இறையை இறைஞ்சும் சூழலிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். அப்படியொரு சமூக அமைப்பை சாத்தியப்படுத்தினால் அங்கு மதம் எனும் அபின் போன்றவை தேவைப்படாமல் போகலாம் என்பது மார்க்சியர்களின் புரிதலாக இருக்கிறது.

நாத்திகர்கள் கருத்துமுதல்வாத பார்வையில்தான் மதம் குறித்து பேசிவருகின்றனர். ஆனால் அதை பொருள்முத பார்வையில் அணுகவேண்டும் என்பர் மார்க்சியர். நாத்திக கடவுள் மத மறுப்பு பிரச்சாரத்தை வர்க்கப்போராட்டத்திலிருந்து தனித்த ஒன்றாக பார்ப்பதை மார்க்சியர் ஏற்பதில்லை. மதம் கடவுள் குறித்த விமர்சனத்தை சமூகத்தின் வர்க்க நிலைகள் குறித்த விமர்சனமாக அதனுடன் இணைந்த போராட்டமாகவே மார்க்சியர் பார்ப்பர்.

லெனினும் ஒருவரை மதப்பற்றுள்ளவர் என்று பார்ப்பதைவிட அவர் கட்சியின் கொள்கை திட்டத்தை ஏற்பவராக இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டையும் எடுத்தார். அதேநேரத்தில் கட்சியில் மதபோதனைகள் செய்ய அனுமதிக்க முடியாதென்றார்.

1949 மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு பின்னர் அமைந்த 75 ஆண்டுகளை நெருங்கப்போகும் சீன சமுதாயத்தில் மதம் இன்றும் அவர்களால் ஒழிக்கப்படமுடியாத ஒன்றாகவே, மக்களின் நம்பிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் மதிப்பளிக்கவேண்டிய நிலையிலேயே இருப்பதைக் காண்கிறோம். அங்கு மத சுதந்திரம் குறித்த அரசியல் அமைப்பு ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம்.

இந்தப் புரிதல்களை உள்வாங்கியவராகத்தான் அடிகளார் சைவ சித்தாந்தம் மார்க்சியம் என்கிற இரண்டு தத்துவங்களையும் சமதையான சமூக நல்வாழ்விற்காக, மானுட மேம்பாட்டை நோக்கிய நகர்தலுக்காக இணக்கப்படுத்தி பார்த்துள்ளார் என புரிந்து கொள்ளலாம்.

30-7-2022

Tuesday, July 26, 2022

தமிழ் நெறியும் லெனினியமும்

 

தமிழ் நெறியும் லெனினியமும்

 

குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை 12ல்தமிழ் நெறியும் லெனினியமும்எனும் சிறு பகுதியுண்டு. குன்றக்குடி அடிகளார் லெனினியம் என்பதை எதையும் அறிவின் அடிப்படையில் எதார்த்த உணர்வுடன் ஆராய்ந்து முடிவெடுப்பது என்கிறார். எந்த ஒன்றையும் அறிவில் ஆராய்ந்து அனுபவரீதியாக முடிவெடுக்க வேண்டுமென்பது லெனினிய அடிப்படை. விரிந்தும் பரந்தும் கிடக்கிற உலகத்தை இயற்கையானதாக லெனினியம் பார்க்கிறது. இந்த உலகத்தைப் படைத்த இன்னொரு சக்தி என்பதை அது நம்பவில்லை.



இந்த உலகம் ஒரே மாதிரியாகவும் இல்லை. முழுமைபெற்றுப் பக்குவமாக இல்லை. மாறி வருகிறது. இன்ப துன்ப கலப்பு இருக்கிறது என லெனினியம் புரிந்துகொள்கிறது என்கிற தன் புரிதலை தருவார் அடிகளார்.

தமிழ் இலக்கிய மரபு பல குரல் கொண்டது. உலகத்தைப்பற்றிய கருத்தில் ஒருமைப்பாடில்லை. ஆனாலும் உயிர் வர்க்கங்கள் கடவுளால் படைக்கப்பட்டவையல்ல என்று தமிழ்ச் சமய மரபு அறுதியிட்டுக் கூறுகிறது என்கிறார் அடிகளார். இதற்கு துணையாக ஐங்குறுநூறு, புறப்பொருள் வெண்பா பாடலைக் காட்டுகிறார். அதாவது இறைவனின் தண்ணளியின் நிழலில் தானே தோன்றிய உலகம். கல்தோன்றி, மண் தோன்றி என பரிணாம வளர்ச்சியில்நானே தோன்றிற்று’ எனும் புரிதலை அடிகளார் விளக்குகிறார். அப்பரிடமிருந்தும் உலகமே இறைவன் என்பதை எடுத்துக்கொண்டுஇறைவன் படைக்கப்பட்டதில்லை எனில் உலகம் படைக்கப்பட்டதில்லை’ எனப் பொருள் சொல்வார் அடிகளார்.

உலகம் படைக்கப்பட்டதன்று இயற்கையானது என்கிற தமிழ் மரபுக்கும் லெனினியத்திற்கும் முரண்பாடின்மையை அவர் சுட்டிக்காட்டுவார்.

 தமிழ் மரபுடன் லெனினியம் எங்கு முரண்படுமென்றால் உயிர் பற்றிப் பேசும்போது என்கிறார் அடிகளார். உடலுக்கு அப்பாற்பட்டு உயிர் என்பதை லெனினியம் ஏற்காது. ஆனால் தமிழ் மரபில் உயிர் எனும் தனிப்பொருள் ஏற்பு இருக்கிறது. உடம்பும் உயிரும் வெவ்வேறாக காட்டும் பார்வை தமிழ் மரபில் உள்ளது. இதை நிறுவுவதாக அடிகளாரின் இக்கட்டுரை அமைந்துள்ளது.

 அடிகளார் இந்த வேறுபாட்டை மேலும் சொல்வார். உடம்பே உயிரல்ல உடம்பின் இயங்கு சக்தியும் உயிரல்ல. உடம்பில் தங்கியிருந்து பணிகளைச் செய்வது உயிர். உயிர்கள் நிலைப்பெற்றவை. பிறப்பும் இறப்பும் இல்லை. நிலைபேறான தன்மையுடையன. உயிர் உடம்பினைக் கொண்டு தன்னுடைய மேம்பாட்டுக்குரிய கடமைகளைச் செய்கின்றது என்பதே தமிழ்க் கருத்து என அடிகளார் இதை உறுதிப்படுத்துவார்.

 உயிர் என்றும்உள்பொருள்’ என்பது தெளிவு. உடலுக்குஉயிர்த்தன்மை’ உண்டெனக்கூறும் நெறி தமிழ் நெறியல்ல என்பார்.

 உயிர் உண்டென்ற கொள்கை பெளத்தத்திற்கு இல்லை. அது அறிவை ஒத்துக்கொண்டது. உயிரெனத் தனியே வேறொரு பொருளில்லை என்றது பெளத்தம். புலனறிவில் பொறிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட களங்களிலும் ஒரு வழிப்பட்ட குறையுடைய அறிவையே பெற்றுள்ளன. செவி ஒலியைக் கேட்கும் . கண் கேட்காது. பூரணத்துவம் இல்லை. உயிர் ஒன்றே இந்த பொறிகளால் பெறும் இன்பத்தை முற்றிலும் முழுவதுமாக ஈடுபட்டு அனுபவிக்கிறது என பொறிகள் ஒவ்வொன்றின் குறைத்தனமையை அடிகளார் பேசுவார்.

 ஏகான்ம வாதிகள் அதாவது ஓருயிர் நெறியினர் ‘அறிவுடைய உயிர் ஒன்றே, அது உடம்புகள் தோறும் வேறு வேறாய்க் காணப்படுகிறது”’ எனும் கொள்கையாளர். ஆனால் அடிகளாரைப் பொறுத்து ‘உயிர் ஒன்றே என்கிற இக்கொள்கை  சிறிதும் பொருந்தாது எனக் கருதுகிறார்.

உயிரின் சேர்க்கையின்றி உடம்பு ஒரு வினை செய்ய இயலாது என்கிறார் அடிகளார். அதேபோல்உயிர்’ உடம்பின் சேர்க்கையின்றி என்ன வினையை செய்யும் என்பதும் கேள்வியாக வரவில்லையா. அடிகளார் இந்த எதிர் கேள்வியை எழுப்பாமல் போகிறார் .

நமது உலகாயுதவாதம் இந்த உயிர் கொள்கையில் லெனினியத்தின் கொள்கைகளுடன் உடன்பாடு உடையன என்பதை அடிகளார் சொல்வார். அதாவது உடலின் வேறாய் உயிர் ஒன்று இல்லை என்பதில் அவர்கள் உடன்படுவர். கண்ணால் காண்பதே மெய் என்பதை அவை ஏற்றுள்ளன. அனைத்துலகத்தையும் பொறியால் கண்டு உணர்தல் இயலாததாகும். பல்வேறு இயல்புடைய உலகிடை பொருள்களை அனுபவித்தலும் இயலாது என்பது அடிகளார் தரும் மறுப்பு.

அடிகளார் உயிர்களின் உயிர்ப்பாற்றல் என்பதில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவார். உயிர்வர்க்கத்திடையில் இந்த உயிர்ப்பாற்றல் அளவில் கூடியும் குறைந்தும் இருப்பதைச் சொல்வார். இந்த உயிர்ப்பாற்றல் வேறுபாடுகளை எல்லாம் வெறும் சுபாவம் என்று கூறமுடியுமா எனக் கேட்பதுடன் அவர் இந்த ஆய்வை நிறுத்துகிறார்.

அடிகளார் போலவே சில சிந்தனையாளர்கள் இயக்கவியல், வரலாற்று பொருள்வாதத்திற்கு அப்பால் எனும் சிந்தனையை பேசாமல் இல்லை. இங்கு  அடிகளார் அந்த பதங்கள் எதையும் பயன்படுத்தாமல் விவாதித்து செல்வதைப் பார்க்கிறோம். அதேபோல் ஆன்மா எனும் பதத்தை அவர் எங்கும் பயன்படுத்தவில்லை. ஆன்மா எனும் தத்துவத்திலிருந்து இந்த தமிழ்நெறி எப்படி மாறுபடுகிறது என்பதையும் அடிகளார் இதில் விவாதிக்கவில்லை.

உடலைச் சாராத சுதந்திரமான சுயேட்சையான ஒன்று உயிர் என்பதை மார்க்சியர் ஏற்கமாட்டார்கள். பருப்பொருளைச் சாராமல் அந்த உயிர் எனும் சாரம்சத்திற்கு தனியான சுதந்திர வாழ்நிலை இருப்பதை மார்க்சியர் ஏற்பதில்லை. ஷெல்லிங் போன்றவர்கள் தனிமுதலான ஆன்மாவின் சுயதியானத்தை எப்பவோ பேசிவிட்டனர். பாயர்பாஹ் இருப்பது என்பதை சிந்தனையில் மட்டுமே அல்லாமல் இருக்கிறது என்று நிரூபித்தலில்தான் இருக்கிறது என பேசிவிட்டார்.

இயக்கவியலில் இறுதியானது- நிரந்தரமானது- அழிவே இல்லாதது என ஏதுமில்லை என்பர் மார்க்சியர். எப்போதும் உள்பொருள் என இயக்கவியல் எதையும் ஏற்பதில்லை. உயிர்கள் வாழ்ந்திட உதவும் சூழலும் இல்லாமல் போகும் நிலை வரலாம் என்றும் அது கருதும்.

உடலும் உயிரும் வெவ்வேறு என்கிற நம்பிக்கை தமிழ்நெறி தத்துவம் என  நிறுவுவதுடன் அடிகளார் நிறுத்திக்கொள்கிறார். வெவ்வேறு உயிர்ப்பாற்றல் கொண்ட வெவ்வேறு உயிர்கள் ஏதோவொரு உடலை தரிக்காமல்/ உடல்மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் எங்கு தனித்து தன் உயிர்ப்பாற்றலைக் தனது பணிகளைக் காட்டும் என்ற கேள்விக்கு என்னால் அடிகளாரிடம் இந்த கட்டுரையில் பதிலைக் காணமுடியவில்லை.  

அடிகளார் நிறுவுவதை ’என்றும் உள்பொருளாகிய உயிர்’ தனக்கான பணிக்கான உடல்களை பல வடிவங்களில் தேடிக்கொள்கிறது என தமிழ்நெறியாக முன்வைக்கிறார் என புரிந்துகொள்ளலாம்.

 

 




Saturday, July 23, 2022

மாநில கட்சிகள் பற்றி சிபிஎம்

 

                    மாநில கட்சிகள் பற்றி சிபிஎம்

(2002- 2022 ஆண்டுகளின் 7 கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானங்களை முன்வைத்து)

CPM கட்சி தனது கட்சி காங்கிரசை அதன் அமைப்பு விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வரக்கூடிய கட்சி. இடதுசாரி இயக்கங்களில் பெரிய கட்சியாகவும் உள்ளது. மூன்று மாநிலங்களில் பல ஆண்டுகள் ஆண்ட கட்சி. எனவே  இந்தியாவில் ஆட்சி செய்வது என்றால் எப்படி- எவ்வளவு சிக்கல்கள் என்பதை நிச்சயமாக அறிந்த கட்சியாக இருக்கும்/ இருக்கவேண்டும்.

அக்கட்சி  21 ஆம் நூற்றாண்டின் இந்த 22 ஆண்டுகளில் 2002ல் 17வது காங்கிரசையும், 2022ல் தனது 23வது காங்கிரசையும் நடத்தி முடித்துள்ளது. 17,18,19,20,21,22,23 என 7 காங்கிரஸ் அகில இந்திய மாநாடுகளை இந்த 22 ஆண்டுகளில் நடத்தியுள்ளது. ஒவ்வொரு காங்கிரசிலும் அடுத்து தான் செயல்படப்போகிற மூன்று ஆண்டுகளுக்கான திசைவழியைக் காட்டிட அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்கிறது. அதைத்தவிர கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்பட்டதை ரிவ்யூ செய்வது, ஸ்தாபன நிலைமைகளை சீர்தூக்கி பார்க்கும் தீர்மானங்களையும் அக்கட்சி வடித்தெடுக்கிறது. சிபிஅய் கட்சியிலும் இந்த நடைமுறைதான் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. 1964ல் சிபிஎம் துவக்கப்பட்டதை அறிவோம்.



சிபிஎம் வடித்தெடுத்த இந்த 7 மாநாடுகளின் அரசியல் தீர்மானத்தை மட்டும் ஒருசேர ஒருவர் பார்க்கவேண்டுமெனில் சுமார் 300 பக்கங்களை அவர் படிக்க வேண்டியிருக்கும். சர்வதேச அரசியல் நிலைமைகள்- ஏகாதிபத்திய அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள், சோசலிச சீனா, வியத்நாம், கியூபா, வடகொரியா குறித்து, மேற்காசியா, தெற்காசிய நாடுகள் குறித்தவை இதில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு அறிக்கையிலும் பிரதியில் சுமார் 40 சத பகுதி  சர்வதேச அரசியலுக்காக ஒதுக்கப்படுகிறது.

மத்தியில் ஆட்சிக்கு இடதுசாரிகள் வரும்போது இந்த அரசியல் தீர்மானங்களில் சர்வதேச நிலமைகள் பேசப்படுவது போன்று அரசாங்கமாக நடந்துகொள்ள முடியுமா என்பது பதில் காணவேண்டிய ஒன்றாக இருக்கிறது.  நாடுகளுக்கான டிப்ளமசி- ஐ எஃப் எஸ் அதிகாரிகள் அறிவுரைகள் போன்ற பல அம்சங்கள் கட்சியின் wisdom  தாண்டிய அம்சங்களாக நிற்கும் என்பதை புரிந்துகொண்டு பார்த்தால் மேற்கூறிய கேள்வியின் முக்கியத்துவம் தெரியவரலாம்.

அடுத்து தேசிய நிலைமைகள் பற்றிய மதிப்பீட்டில் அரசியல், பொருளாதார, சமூக பிரச்னைகள் அலசப்படுகின்றன. கட்சிகள் பற்றிய மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. பிஜேபி  காங்கிரஸ் இரண்டுமே பூர்ஷ்வா-நிலபிரபுத்துவ கட்சிகள்- பெருமுதலாளிகளின் தலைமையிலான வர்க்க நலன்களை கொண்டவை என்ற வரையறையிருந்தாலும், பிஜேபியின் ஆபத்தை அது வழக்கமான பூர்ஷ்வா கட்சிஅல்ல- பாசிச சக்திகளால் வழிகாட்டப்படும் கட்சி என்ற வரையறையும் கூடுதலாக செய்யப்பட்டிருக்கும். இவையெல்லாம் விரிவாக இந்த 7 காங்கிரசின் ஒவ்வொரு அறிக்கையிலும் பேசப்பட்டிருக்கும். பிரதியில் தேச அரசியல் பகுதி சுமார் 50 சதத்தை எடுத்துக்கொள்ளும்.

பிரதியின் மீதியுள்ள 10 சதம் இடதுசாரி ஒற்றுமை, இடதுசாரி ஜனநாயக முன்னணி- அதன் வேலைத்திட்டம், சிபிஎம் தன் சொந்த கட்சி பலத்தை வலுப்படுத்திக்கொள்ள செய்யவேண்டியதென்ன என்பது பேசப்பட்டிருக்கும். இது குறித்து தனி கட்டுரை எழுதும் உத்தேசம் உள்ளது.

இந்த 20 ஆண்டுகளில் இந்த pattern  அறிக்கைகளில் பொதுவாக மாறாமல் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு தலைப்பிலும் 7 மாநாட்டின் 300 பக்க அறிக்கையை ஒப்பிட்டு காட்டுவது ஆய்வு மாணவரின் பணிதான் என்றாலும் எனது பார்வையில் மூன்று அம்சங்களை எடுத்துக்கொள்ள முயற்சித்தேன். அவை சிபிஎம் ஒரு தேசிய/ சர்வதேசிய  கட்சி என்ற வகையில் எப்படி மாநில கட்சிகளை  மதிப்பிட்டுள்ளது. 7 அறிக்கைகளிலும் ஏதாவது அதில் இந்த 20 ஆண்டுகளில் மாறுதலை செய்துகொண்டுள்ளதா எனப் பார்ப்பது.

அடுத்து இடதுசாரி ஜனநாயக மாற்று வேலைத்திட்டத்தை இந்த 20 ஆண்டு இடைவெளியில் அறிக்கைதோறும் ஒரே மாதிரியே வைத்துள்ளதா- ஏதாவது மாற்றத்துடன் வைக்கிறதா. அதனையடுத்து கட்சி தன்னை பலப்படுத்திக்கொள்ள இந்த 7அறிக்கைகளில் 20 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என சொல்லிக்கொண்டது. இந்த மூன்று அம்சங்களே விரிந்து போவதால் முதலில் மாநிலகட்சிகள் குறித்து சிபிஎம் பார்வை என்ன என்பதை மட்டும்  அவர்கள் அரசியல் தீர்மானங்களிலிருந்து இக்கட்டுரை பேசுகிறது.

                                                                                         II

17வது காங்கிரசில் மாநில கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதை சிபிஎம் பேசியது. மத்தியில் ஒரு கட்சி ஆட்சிதான் என்ற நிலைமை மாற்றப்பட்ட சூழலில் இந்த முக்கியத்துவம் வந்துள்ளது. இந்த கட்சிகளில் சிலரீஜினல் பூர்ஷ்வா- நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றன. வேறு கட்சிகளோ சாதி வகைப்பட்டு  caste based   ஆக செயல்படுகின்றன. முதலாளித்துவ வளர்ச்சியில் இந்த கட்சிகள் வட்டார பூர்ஷ்வா- நிலபிரபுக்களின் நலன்களை பிரதிபலித்தாலும் தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டுள்ளன. தாராளமய கொள்கையில் தாங்கள் வளர வாய்ய்புள்ளதாக கருதுகின்றன.

தங்களது குறுகிய மாநில நலன்களுக்காக அடிக்கடி அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கின்றன. வகுப்புவாதம் எதிர்த்த போராட்டத்தில் அவைகளுக்கு  inconsistency  இருக்கிறது.  தங்கள் சொந்த நலனைக் கருத்தில்கொண்டு தேசிய அரசியலிலும் பெருவிருப்பத்தைக் காட்டுகின்றன. சில கட்சிகள் பிஜேபியுடன் சேர்ந்தும் சந்தர்ப்பவாதத்தைக் காட்டியுள்ளனர்.

மக்கள் பிரச்னைகளிலும் வகுப்புவாத எதிர்ப்பிலும் நிற்கும் கட்சிகளுடன் சிபிஎம் ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டும். தேர்தல் உடன்பாடுகளை செய்யும். பிஜேபியுடன் சேர்பவர்களை எதிர்க்கும். ரீஜினல் இனவாதம் / குறுகிய இனவேறி எதிர்த்து ( reginal Chauvinism)போராடும்.

இந்த பூர்ஷ்வா கட்சிகளுடன் நாம் கொள்ளும் கூட்டு அதன் செல்வாக்கு மக்களிடம் நம்மை அழைத்துச் செல்ல உதவும். இந்த தேர்தல் கூட்டு என்பது நீண்டகால அணிசேர்க்கையோ அல்லது அய்க்கிய முன்னணியோ அல்ல   (not meant for prolonged alliances or UF). இந்த பூர்ஷ்வா கட்சியின் வாலாக இருக்கக்கூடாது. கட்சியின் தனித்தன்மை மங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

17வது காங்கிரஸ் வரையறை அடிப்படையான அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். தொடர்ந்த காங்கிரசில் சிற்சில அம்சங்கள் கூடுதலாக இருப்பதையும் காணலாம்.

18வது காங்கிரசில் தாராளமய கொள்கைகளில் தேசிய பூர்ஷ்வா கட்சிகளுடன் இவர்களுக்கு எந்த முரணும் இல்லை என்பதை சிபிஎம் சொல்லியது. இந்த கட்சிகள் பூர்ஷ்வா- நிலபிரபுத்துவ ஊசலாட்டத்தில் இருப்பவை. மாநில நலன்கள் என்ற பெயரில் இந்த ஊசலாட்டத்தை அனுசரிக்கின்றன. திமுக போன்ற மாநில கட்சிகள் செக்யூலர் சக்திகளுடன் நிற்பது பிஜேபி அணியை பலவீனப்படுத்துகிறது என்ற ஏற்பையும் சிபிஎம் தந்தது. தாராளமய கொள்கைகள், வர்க்க ஊசலாட்டம், திமுக போன்ற சில கட்சிகள் பிஜேபியை பலவீனப்படுத்த உதவின என்ற ஏற்பு இக்காங்கிரசில் செய்யப்பட்டன. காங்கிரஸ் உடன் இக்கட்சிகள் கூட்டு என்பது பற்றி தனியாக பேசப்படவில்லை.

19வது காங்கிரஸ் 2008 பிஜேபியுடன் அணிசேரும் எந்த மாநில கட்சியுடனும் உறவில்லை. பிஜேபியை எதிர்க்கும் கட்சிகளுடன் ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்பதை அழுத்தமாக தெரிவித்தது.

 20வது கட்சி காங்கிரசில் 2012 தனி தெலங்கானா கோரிக்கையை சிபிஎம் ஏற்கவில்லை. மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களை பிரிப்பது என்பதை ஏற்கமுடியாது என்ற நிலைப்பாட்ட்டை தொடர்ந்து சிபி எம் எடுத்துள்ளது. சிபிஅய் கூட தெலங்கானா உருவாக்கத்தில் ஆதரவாக நின்றது என்பதை இக்காங்கிரஸ் தீர்மானத்தில் சிபிஎம் பதிவு செய்தது. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கமே பல போராட்டங்களுக்கு பின்னர் நடந்தவை. எனவே அதை பிரிப்பது தேவையற்றது என்பதி சிபிஎம் நிலைப்பாடு.

 சிறு மாநிலங்கள் பொருளாதாரரீதியாக நிலைக்க முடியாதவை. ஃபெடரல் தன்மையை சிறு மாநிலங்கள் உருவாக்கம் என்பது நீர்த்து போகச் செய்து மத்திய அரசை நம்பி நிற்கும் பகுதிகளாக்கிவிடும்.. எங்காவது தன்னாட்சி தேவை என்றால் அதற்கு புரவிஷன் இருந்தால் போதும் என தீர்மானம் பேசியது.

 இந்த காங்கிரசில் அணிசேர்க்கை என்ற வகையில் மாநில கட்சிகளின் சந்தர்ப்பவாதமும் சொல்லப்படுகிறது. மாநில கட்சிகள் காங்கிரசை அல்லது பிஜேபியை சார்ந்து என்கிற சந்தர்ப்பாத நிலைப்பாட்டை எடுக்கின்றன. அவர்களின் நவீன தாராளமயக் கொள்கைகளையே ஆட்சியில் இருக்கும்போது அனுசரிக்கின்றன. மத்தியில் கூட்டணி ஆட்சி என்பதன் மூலம் மத்திய அரசாங்கத்தில் காங்கிரசுடனோ அல்லது பிஜேபியுடனோ பங்கேற்கின்றன. மத்தியில் தங்கள் ஆட்சியை உருவாக்க காங்கிரசும், பிஜேபியும் மாநில கட்சிகளை நம்பி இருக்கின்றன.

 ஆளும் வர்க்கங்கள் இந்த இரு கட்சி முறையை அவர்கள் விழைகின்றனர். இதன் மூலம் தங்கள் பெரு முதலாளித்துவ வர்க்க நலனை காத்துக்கொள்ள முடியும் என கருதுகின்றனர். இந்த இரு சேர்மானங்கள் என்பதை நாம் தடுக்க வேண்டும். காங்கிரசுடனும், பாஜக வுடனும் இல்லாத மாநில கட்சிகளுடன் நல்லுறவை நாம் வளர்க்கவேண்டும். தேச இறையாண்மை, மத்திய- மாநில உறவுகள், மக்கள் பிரச்னைகள் வழியான இணைந்த போராட்டங்களில் இந்த ஒத்துழைப்பு சாத்தியமாகும்.

 2015ன் 21வது காங்கிரஸ் கடந்த 15 ஆண்டுகளில்  ரீஜினல் கட்சிகளால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கட்சி குறித்துக்கொள்கிறது எனப்பேசிவிட்டு அந்த வட்டார பூர்ஷ்வாக்களின் நலன்களையே அவை பிரதிபலிக்கின்றன என்பதை திரும்ப மதிப்பிட்டுக்கொண்டது. தாராளமய பொருளாதார கொள்கைகளில் இதைக் காணலாம் என ஆதாரமாக்கியது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் உயர் தலைமை ஊழல் வழக்குகளால் பீடிக்கப்பட்டுள்ளன என்கிற பதிவையும் செய்தது.

மாநில கட்சிகள் ஆட்சியில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராடவேண்டும். அந்தப் பகுதியின் பெரும்பான்மை பலம் கொண்ட மாநில கட்சியின் பூர்ஷ்வா  சித்தாந்தத்தை  எதிர்த்து அரசியல் பிரச்சாரம் செய்யவேண்டும். அப்போதுதான் அக்கட்சியின் செல்வாக்கில் உள்ள மக்களை நாம் வென்றெடுக்க முடியும் என தன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தலை தந்தது.

இந்த காங்கிரசில் முஸ்லீம் கம்யூனிட்டி குறித்தும் தீர்மானம் பேசுகிறது. அவர்களின் சில இயக்கங்கள் பேசும் தீவிர வாயடிப்புகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். தெற்கு பகுதியில் தீவிரவாத பாபுலர் ஃப்ரண்ட்டின் எஸ்டிபிஅய் விரிவாக்கிக்கொள்ள முயற்சிக்கிறது. செக்யூலர் பூர்ஷ்வா கட்சியினர் மீதான அதிருப்தியை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் என்பது அவற்றை பின்பற்றும் ரீஜினல் கட்சிகளை எதிர்த்தும் தான். இடதுசாரி ஜனநாயக மேடைக்கு உழைக்கும் மக்களை திரட்டும் போராட்டத்தில் பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ கொள்கைகளை கொண்ட ரீஜினல் கட்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பும் இருக்கிறது என்ற புரிதலை தீர்மானம் தந்தது.

2018ல் நடந்த 22வது காங்கிரஸ்  21ஆவது காங்கிரசில் சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறது. கூடுதலாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய தன்மையில் மாநில கட்சிகளின் அரசியலை பங்கு பாத்திரத்தைக் காணவேண்டும். இடதுசாரி ஜனநாயக சக்திகளின் வளர்ச்சிக்கு, கட்சியின் நலன்களை முன்னெடுக்கும் வகையில் இந்த கட்சிகளின்பாற் அணுகுமுறை இருக்கவேண்டும்.. எனினும் தேசிய அளவில் இந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி என்பதற்கு வாய்ப்புகள் இல்லை.

 23வது காங்கிரஸ் 2022ல் ரீஜினல் கட்சிகளின் வர்க்க குணம், தாராள பொருளாதாரவாதம் சொல்லப்பட்டாலும், ஃபெடரலிசம் என்ற அம்சத்தில் பல கட்சிகள் பிஜேபியுடன் மோதலை கொண்டுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில கட்சிகள் பிஜேபியின் மிரட்டல்களுக்கு அஞ்சி நாடாளுமன்றத்தில் பிஜேபிக்கு ஆதரவாக நிற்கின்றன.

மத்தியில் ஆளும் பிஜேபி எதிர்த்து மக்கள் விரோத, செக்யூலரசித்திற்கான போராட்டத்தில் இந்த கட்சிகளுடன் சிபிஎம் ஒத்துழைப்பை தேடுகிறது. அந்த மாநிலங்களில் அக்கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டை வைத்து அக்கட்சிகளுடன் அணுகுமுறையை கட்சி மேற்கொள்ளவேண்டும்.

மாநில கட்சிகள் ஆளும் இடங்களில் அவர்களது கொள்கைகளை எதிர்த்து கட்சி போராடும் என்றாலும் இந்த மாநில கட்சிகளை பிஜேபிக்கு நிகராக வைத்து பார்க்கக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வையும் தீர்மானம் தந்தது.

 இந்த காங்கிரசிலும் முஸ்லீம் கட்சிகள் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஜமாத் இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற அடிப்ப்டைவாத தீவிரவாத இயக்கங்கள் உள்ளன. இந்துத்துவா சக்திகளின் விஷச் சூழலில் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற அம்சத்தை இவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் நடவடிக்கைகள் இந்துத்துவா சக்திகளுக்கே உதவும். செக்யூலர் ஜனநாயக சக்திகள் சிறுபான்மையினரின் உரிமைக்கான பாதுகாப்பில் நிற்கவேண்டும். அதாவது இஸ்லாமிய தீவிரவாதம் இந்துத்துவாவிற்கு மாற்றாக முடியாது என்ற புரிதலை இத்தீர்மானம் வைப்பதாக புரிந்துகொள்ளலாம்.

சிபிஎம் பார்வையை சுருக்கமாக சாராம்சமாக பட்டியலிட்டால் :

மாநில கட்சிகளும் காங்கிரஸ், பிஜேபி போல் வர்க்க நலன்களை பிரதிபலிக்கும் கட்சிகள்தான். அவை வட்டார முதலாளிகளின் நிலபிரபுக்களின் கட்சிகள்தான். நவீன தாராளமய கொள்கைகளை கடைபிடிப்பவைதான். ஆனாலும் இவற்றை பிஜேபி போல் நினைத்துவிடக்கூடாது. பிஜேபி மற்றுமொரு பூர்ஷ்வா கட்சியல்ல. பாசிச சக்திகளால் தலைமை தாங்கப்படுகிறது.

மாநில கட்சிகள் இரு பெரிய காங்கிரஸ்- பிஜேபிகளை சார்ந்தே பொதுவாக இருக்கின்றன. அக்கட்சிகளுக்கும் இந்த கட்சிகள் அவசிய தேவையாக இருக்கின்றன

பிஜேபியுடன் நிற்கிற கட்சிகளுடன் எந்த உறவும் இல்லை.

பிஜேபியை, காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளுடன் உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அது போராட்டங்கள் வழியான உறவாக கட்டப்படவேண்டும்.

மாநில கட்சிகளுடன் தேர்தல் உறவுண்டு. அது சிபிம் கட்சியின் நலன்களுக்கு, இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு உதவுவதாக இருக்கவேண்டும். அக்கட்சியின் வாலாக சிபி எம் இருக்கக்கூடாது. சொந்த கட்சிக்கு  வெளிச்சமில்லாத மங்கல் வந்துவிடக்கூடாது.

மாநில கட்சிகளுடன் நிரந்தரமான அய்க்கிய முன்னணி என ஏதும் இல்லை. தேசிய அளவில் இவர்களுடன் அணி என்பது சாத்தியமில்லை.

மாநிலத்தில் ஆளக்கூடிய இந்த கட்சிகள் கொள்கைகள் எதிர்த்த போராட்டம் அவசியம். கட்சியின் தனித்தன்மையை காத்துக்கொள்ளவேண்டும்.

இத்தீர்மானங்களைப் படித்த பிறகு சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சியின் வர்க்க குணாம்சம் என்ன? காங்கிரஸ், பிஜேபி மற்றும் பிற மாநில கட்சிகளை முதலாளித்துவ- நிலபிரபுத்துவ கட்சிகள் என வரையறுக்கும்போது , அந்த பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படும் இந்திய அரசின் மாநில உறுப்பாக செயல்படும் கேரளா அரசாங்கம்  சார்ந்த வர்க்க வரையறுப்பு என்ன? அதனால் முதலாளித்துவ- நிலபிரபுத்துவ நலன்களை முறியடித்து மாற்றான வர்க்க நலன்களை பிரதிபலிக்க முடிந்துள்ளதா?

2002-2022 இந்த 20 ஆண்டுகளில் தேர்தல் அணிசேர்க்கை மூலம் dominant மாநிலகட்சியின் செல்வாக்கில் இருக்கும் மக்கள் திரளை ஈர்ப்பது என்கிற வரையறையில் கிடைத்துள்ள டிவிடெண்ட் என்ன? அவர்கள் மக்கள் திரள் வந்துள்ளனரா அல்லது சொந்த மக்கள் திரள் அவர்கள் செல்வாக்கில் விழுந்துள்ளனரா?

மாநில கட்சிகளின் சித்தாந்த செல்வாக்கிலிருந்து மக்கள் திரளை விடுவிக்க முடிந்ததா?

இதை படிப்பவர்கள் எந்தவொரு தனி விளக்கமும் இன்றி அவர்களது நிலைப்பாட்டை , மதிப்பீட்டை பெறமுடியும். தீர்மானங்களில் எழுதப்பட்டது சரியா தவறா- அல்லது எழுதியது போல் நடைமுறையில் அம்மதிப்பீடுகள் படியே நடந்துகொள்ள முடிகிறதா என்பது உள் மற்றும் பொது விவாதத்திற்குரிய கேள்விகள். ஆரோக்கியமான விவாதச் சூழலில் அவை நடைபெறவும் வேண்டும்.

23-7-22