https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, June 13, 2022

தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாட்

 

 

E M S Namboodripad              தோழர் எம் எஸ் நம்பூதிரிபாட்

                                                                                                   -ஆர் பட்டாபிராமன்

நம்பூதிரிபாடும் மினுமசானியும் நாகபுரியிலிருந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் செயற்குழுவை முடித்துவிட்டு ஆந்திரா திரும்பினர். அங்கு காங்கிரஸ் சோசலிஸ்ட்களின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர் பசவபுன்னையா மசானியை கேள்விக்கணைகளால் துளைத்துக்கொண்டிருந்தார். 1935அக்டோபரில் காங்கிரஸ் கமிட்டி சென்னையில் நடந்தபோது ராயிஸ்ட்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் என அனைவரும் ராடிகல் மாநாடு ஒன்றை நடத்தினர். அதில் கிருஷ்ணன்பிள்ளை, நம்பூதிரி, சுந்தரையா போன்றவர்கள் பங்கேற்றனர். அப்போதுதான் நம்பூதிரி அவர்களுக்கு  கம்யூனிஸ்ட்களுடன் விவாத தொடர்பு ஏற்படுகிறது. இத்தொடர்பு குறித்து அவர் ஜெயபிரகாஷ் அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். ஆனாலும் கட்சி உறுப்பினர் என்பதில் ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதால் அவ்வாறு ஆனதை அவர் தெரிவிக்கவில்லை  டாக்டர் ஹரிதேவ் சர்மாவிற்கு அளித்த பேட்டியில்  இஎம்எஸ் மேற்கூறிய நினைவை பகிர்ந்துகொள்கிறார்.

 கேரளாவில் செயலாற்றிய தான் காங்கிரசிலிருந்து காங்கிரஸ் சோசலிஸ்ட்டிற்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடைமுறை அனுபவம் விவாதங்கள் வாயிலாகவே பயணப்பட்டேன் என்பார் நம்பூதிரிபாட். 1938ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் மாநாட்டிற்கு சென்றுவந்த கிருஷ்ணன் பிள்ளை அங்கு நடந்த விவாதங்களை எடுத்துரைத்தார். கேரளா காங்கிரஸ் சோசலிஸ்ட்களில் பெரும்பாலோர் 1939 இறுதியில் கூடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வது என முடிவெடுத்தோம் என்கிறார் நம்பூதிரிபாட் .

அன்றைய சோவியத்யூனியன் அனைவரின் ஈர்ப்புக்குரியதாக இருந்தது. சோசலிஸ்ட்களின் பத்திரிகைபிரபாதம்’ என்பதில் சோவியத் மாடலை பின்பற்றாவிட்டால் மனித நாகரிகம் அழிந்துவிடும் என நம்பூதிரி அவர்கள் எழுதினார். அறிவியல் சிந்தனையில்  இயக்கவியல் மூலம் மனிதனை, சமுகத்தின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தலாம் என்றார்.. 1952ல் National question in Kerala என்பதை அவர் எழுதினார்.  நம்பூதிரி அவர்கள் தனது சாதிய சூழல், திராவிடர் என்கிற இனவாதம், மலையாளி என்கிற மொழிசார்ந்த அடையாளம் என அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

இளங்குளம் வேத மரபை சார்ந்த குடும்பமது. மேற்குமலபார் பகுதியில் மிகப்பெரும் நிலச்சுவான்தாரர்களாகஅத்யன் நம்பூதிரிகள்இருந்தனர். வேதபாராயணங்களும் சம்ஸ்கிருத கல்வியும் நிறைந்த சூழல். நம்பூதிரி நல கழகத்தில் பணியாற்றியவரில் சிலர் ஆங்கில கல்வி அவசியம் என கருதினர். அங்கிருந்த முற்போக்கானவர்களின் முயற்சியால் ஆங்கில பள்ளி சூழல், கல்லூரி செல்ல வாய்ப்பு நம்பூதிரி அவர்களுக்கு ஏற்படுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைவேட்கை சிந்தனையாலும், சோவியத் புரட்சி மார்க்ஸ்- லெனின் தாக்கத்தாலும் இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தனது உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் காணத் துவங்கியது. கேரளாவில் அன்று விடுதலை தாகம் கொண்டவர்கள்  காங்கிரஸ் இயக்கம், காங்கிரஸ் சோசலிச இயக்கம் கம்யூனிச இயக்கம் என தனது அமைப்புரீதியான மாற்றங்களை கண்டனர்.



இளங்குளம் மன சங்கரன் நம்பூதிரிபாட் என்பது அவரது முழுப்பெயர்.  ஜூன் 14, 1909ல்  கேரளா நம்பூதிரி குடும்பம் ஒன்றில்  பெரிந்தலமன்னா தாலுகாவில் பிறந்தார். அவரை வீட்டில் செல்லமாக குஞ்சு என அழைத்தனர் அவர் வாழ்நாளில் மிகவும் நேசித்த தாயார் பெயர் விஷ்ணுதத் அந்தர்ஜனம். சிறுவயதிலேயே காலமான அவரது தந்தை பெயர் பரமேஸ்வரன் நம்பூதிரிபாட். ஆங்கில கல்வி கற்பிக்கும் கூடத்திற்கு அவரது மாமா ஒருவரால் இடம் வழங்கப்பட்டது. மரபில் ஊறிப்போன நம்பூதிரி சமுகத்தினர் இதை எதிர்த்தனர். ’ஆங்கிலம் ஆபாசம்’ என்ற பிரச்சாரம் இருந்தது.

ஆரம்பத்தில் வீட்டில் தனிஆசிரியர் மூலம் கல்வி, ஆசிரியர் இல்லத்தில் தங்கி  கல்வி- பிறகுதான் முறையான பள்ளிக்கல்விக்கு தான் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கிறார் எம் எஸ்.. அங்குதான் பல சாதி மாணவர்களுடன் பழகும் முதல் வாய்ப்பு ஏற்பட்டது.  வள்ளுவநாடு பகுதியில் ஹோம்ரூல்- அன்னிபெசண்ட், திலகர் பற்றிய பேச்சுக்கள் இருந்தன. கேசவமேனன் அவர்கள் எழுதிய கோகலே, திலகர், காந்தி புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன. காந்தியிடத்தில் எம் எஸ் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.  .

சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் சில நம்பூதிரிமார்களும் பங்கேற்றனர். அவர்கள் சாதி பிரஷ்டம் செய்யப்பட்டனர். கிலாபத் இயக்க சூழலில் தமிழகத்தில் ஆசிரியர் நண்பர்களுடன் திருச்சி, பழனி, ராமேஸ்வரம் யாத்திரை வந்தததாக எம் எஸ் எழுதியுள்ளார். மாத்ருபூமி, யோகஷேமம், கைராளி இலக்கிய பத்திரிகை கிடைக்கிறது. விவேகானந்தர் எழுத்துக்கள் பரிச்சயமாகின்றன. 1923ல் காந்தி திருச்சூர் வந்தபோது ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவராக  எம் எஸ் அவரை பார்க்க சென்றார். அதே ஆண்டில் தனது 15 வயதில் நம்பூதிரி நல கழக செயலராகிறார். அவரின் முதல் பொதுப்பணி அங்கு துவங்கியதாக  தெரிவிக்கிறார்.  பள்ளி விடுமுறையில் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கிறார். அங்கு நடந்த ஆங்கில விவாதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. முழுவிடுதலை ஏற்புடையதாக இருந்தாலும் , குடும்ப சூழல் காரணமாக குத்தகைதாரர் உரிமை விஷயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அன்று அவரால் ஏற்க இயலவில்லை . சைமன் கமிஷன் போராட்டத்தில் தான் பங்கேற்க முடியாமல் போனது குறித்து வருந்துகிறார்.

1929ல் அவர் திருச்சூர் செயிண்ட் தாமஸ் கல்லூரியில் சேர்கிறார். சி அச்சுதமேனன், அலெக்சாண்டர் போன்றவர்கள் கல்லூரி நண்பர்கள் . கல்லூரி நூலகம் மூலம் பெர்னார்ட்ஷா, எச் ஜி வெல்ஸ், ஹரால்ட் லாங்கே புத்தகங்கள் அறிமுகமாகின்றன. லாங்கேவின் சோசலிசம்- கம்யூனிச உரையாடல் அவருக்கு அறிமுகமாகிறது. நேரிடையாக மார்க்ஸ்- லெனின் புத்தகங்கங்கள் கிடைக்கப் பெறவில்லை. பாசுபதம், யோகசேமம் பத்ரிக்கைகளில் பிரஞ்சு புரட்சி- நம்பூதிரி சமுகம் குறித்து கட்டுரைகள் எழுத துவங்குகிறார். மலபாருக்கு ராஜாஜியும், ஜமன்லால் பஜாஜ் அவர்களும் வந்துள்ளதை அறிந்து கல்லூரியில் பேசவைக்க முயற்சிக்கின்றனர். அது முடியாத நிலையில் அவர்களை நம்பூதிரி உட்பட நண்பர்கள் சந்திக்கின்றனர். இந்தி பயில ராஜாஜி அறிவுரை தந்ததாக எம் எஸ் குறிப்பிடுகிறார்.

சாதியை கேட்காதே- சொல்லாதேநாரயணகுரு தாக்கம், அய்யப்பன் அவர்களின் சமபோஜன இயக்கம் போன்றவற்றின் சூழலில்உன்னி நம்பூதிரிமுற்போக்கு மாற்றங்களை விழையும் இதழாக வருகிறது. 1930களில் நம்பூதிரி சமுகத்தில் பெண்கள் விடுதலையை முன்வைக்கும் நாடகங்களில் எம் எஸ் பங்கேற்கிறார். வீடுகளில்கூட இந்நாடகங்கள் விவாதமானது. குடுமி களைதல்-கிராப் வைத்தல், பெண்கள் நகை அணிதல் போன்றவைகூட அச்சமுகத்தில் இயக்கமாக பரவின.

1932ல் நேருவின் தாக்கத்தில் அவரது வாழ்க்கை வரலாறு ஒன்றை எம் எஸ் எழுதி வெளியிடுகிறார். சட்டமறுப்பு இயக்கத்தில் கைதாகி வேலூர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி,, பட்டாபிசீதாரமைய்யா, ஆந்திர கேசரி பிரகாசம், தொழிற்சங்க தலைவர்கள் முகுந்தலால் சர்க்கார், வி வி கிரியின் நண்பர் ராமலிங்கம் போன்றவர்களின் விவாத தொடர்பு ஏற்படுகிறது. பட்டாபிசீதாரமைய்யாவிடம் உருது கற்க வாய்ப்பு ஏற்படுகிறது. சத்தியமூர்த்தி பூணூல் ஒன்றை கொடுத்து நம்பூதிரியை அணிய சொன்னதாகவும், மரியாதை நிமித்தம் தான் அதை பெற்றுக்கொண்டாலும் அணியவில்லை என்ற பதிவை தருகிறார் எம் எஸ்.

1934ல் காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் பாட்னாவில் மாநாடு நடத்துகின்றனர் என்பதை அறிந்து எம் எஸ் அதற்கு அனுப்பப்படுகிறார். கேரளா கமிட்டிக்கு  கிருஷ்ணன்பிள்ளை செயலராகிறார். கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக செயல்பட்ட காலத்தில் சுந்தரையா, அமீர்ஹதர்கான் தாக்கத்தில் அவர் கட்சி உறுப்பினராகிறார்... எம் எஸ்  காங்கிரஸ் சோசலிச மாநாடுகள் குறித்தும், சோசலிஸ்ட்கள்- கம்யூனிஸ்ட்கள் வேறுபாடுகள் குறித்தும் தனது கட்டுரைகளில் பின்னாட்களில் விளக்கமாக  எழுதியுள்ளார். 1939களில் நம்பூதிரி அவர்களின் குடும்பசொத்தை அரசாங்கம் பறிமுதல் செய்து அவரது துணைவியாரை நடுத்தெருவில் நிறுத்தியது. 1942ல் திரும்ப பெற்ற சொத்தை விற்று கடன் அடைத்ததுபோக கட்சி பத்திரிக்கை தேசாபிமானி துவங்க ரூ 70 ஆயிரம் தந்து தான் சொத்து ஏதுமற்றவராக மாறியதையும் நம்பூதிரி குறிப்பிடுகிறார்.

ஜெயபிரகாஷ் நாரயண் எழுதி வெளிவந்த ’Why Socialism’  கேரளாவில் நம்பூதிரி போன்றவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதை பாடபுத்தகம் போல கொண்டாடினோம் என எம் எஸ் பதிவு செய்கிறார். அதேபோல் ஜேபியின் கேரளா வருகை,  கலந்துரையாடல் போன்றவை இத்தோழர்களை தொழிற்சங்கம், விவசாய அரங்கங்களின்பாற் வேலை செய்ய வைத்தது. வலதுசாரி படேல் போன்றவர்கள் பர்தோலியை உருவாக்கும்போது, நாம் ஏன் சோசலிச பர்தோலிகளை உருவாக்கக்கூடாது என ஜேபி வினவினார் என்ற பதிவையும் நம்பூதிரி தருகிறார். விவசாயிகள் இணையான அரசாங்கங்களை உருவாக்கவேண்டும் என்றார் ஜேபி. ஜேபி மசானியால் மட்டுமே நாங்கள் சோசலிஸ்ட்களாக இல்லை. ஏகேஜி, கிருஷ்ணபிள்ளை, எம் எஸ் அவரவர் அளவிலேயே சோசலிஸ்ட்களாக மாற முடிந்தது என்ற கருத்தையும் எம் எஸ் வெளிப்படுத்தியிருந்தார்...

1931ல் திருவனந்தபுரத்தில் பொன்னாரா ஸ்ரீதர், குருக்கல், திருவட்டார் தானுபிள்ளை, சிவசங்கரபிள்ளை, ஆர்.பி.அய்யர், பாஸ்கரன். சேகர் போன்றவர்கள் கம்யூனிஸ்ட் லீக் ஒன்றை அமைத்தனர். தோழர்கள் பி கிருஷ்ணபிள்ளை, எம் எஸ், கே தாமோதரன் , என் சி சேகர் உதவியுடன் S V காட்டே கேரளாவில் கம்யூனிஸ்ட் குழு ஒன்றை அமைத்தார். 1937 முதல் இக்குழு இரகசியமாக செயல்படதுவங்கியது.  வெளியில் காங்கிரசினராக, காங்கிரஸ் சோசலிஸ்ட்களாக கம்யூனிஸ்ட்கள் செயல்படும் சூழல் இருந்தது. 1939 டிசம்பரில் பினராயி, தெல்லிசேரியில் 90 தோழர்கள் கூடி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.  ஜனவரி 1940ல் சுவர் விளம்பரங்கள் மூலம் கட்சி உதயம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

  இத்தலைவர்களில் பலர் கேரளா காங்கிரஸ் கமிட்டியில் ஆங்காங்கே முன்னணி தலைவர்களாக இருந்தனர். 1940ன் இறுதியில் மலபார் பகுதியில் விவசாய கிளர்ச்சிகள் எழுந்தன. போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவரும், பீடித்தொழிலாளி ஒருவரும் சுடப்பட்டனர். கம்யூனிசத்தின் பெயரால் நடந்த முதல் களப்பலியாக கேரளாவில் இது பார்க்கப்படுகிறது. பின்னர் 1943ல் கையூர் தோழர்களின் தியாகத்தை கேரளா கண்டது. பொதுச்செயலராக இருந்த தோழர் ஜோஷி நேரிடையாக தூக்குமேடை தியாகிகளை காணவந்து பெருமிதமாக அவர்கள் உரையாடிய  நிகழ்வும் நடந்தேறியது. சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள், விவசாயதொழிலாளர்கள், விவசாயிகளுடன் கட்சி இயக்கம் வளர்ந்தது. மலபார் பகுதியில் விவசாயிகள் இயக்கத்தை வழிகாட்டும் செயலில் எம் எஸ் இறங்கினார். அனைத்திந்திய கிசான் இயக்கத்தில் அவருக்கு பொறுப்பு வந்தது.  1954ல் கட்சியின் விவசாய அரங்கில் கட்சி கடமைகள் என்ற ஆவண தயாரிப்பில் எம் எஸ் பெரும்பங்கை வகித்தார்.

மலையாளிகள்- கேரளா தேசிய இனம் என்பது குறித்து தொடர்ந்த ஆய்வுகளை தந்தவர் நம்பூதிரிபாட். 1952ல் The National Question In Kerla என்பதை எழுதினார் . அய்க்கிய கேரளம் என்கிற  எம் எஸ் முன்வைப்பு, விசால் ஆந்திரா பற்றி சுந்தரையா, பவானிசென் அவர்கள் வங்காளம் குறித்த ஆய்வுகள் குறித்து தனது கட்டுரை ஒன்றில் பிரகாஷ் காரத் குறிப்பிடுகிறார்.

                                                                                               எம் எஸ் பகுதி 2

 விடுதலைக்கு பின்னர் இந்தியாவிலேயே காங்கிரஸ் அல்லாத முதல் மாநில அரசு என்பது  எம் எஸ் தலைமையில் 1957ல் அமைந்தது மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் கேரளா மாநிலம் நவம்பர் 1956ல் உருவாக்கப்பட்டது. 1957 மார்ச்சில் மாநில தேர்தல் நடந்தது. அரசியல் நிலைத்தன்மை, வளமான கேரளம், சமுக நீதியுடன் கூடிய பொருளாதரா மறுகட்டுமானம் என்ற முழக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. கட்சியின் பொதுச்செயலர் அஜாய்கோஷ்  சுற்றுப்பயணம் செய்து கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே காங்கிரசை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை  அழுத்தமாக எடுத்துரைத்தார்.

CPI 100 இடங்களில் போட்டியிட்டு 60ல் வென்றது. காங்கிரஸ் 124ல் போட்டியிட்டு 43ல் வெற்றி பெற்றது  PSP 62ல் போட்டியிட்டு 9,   RSP 28லும் தோல்வி,  ML லீக் 18ல் போட்டியிட்டு 8யை பெற்றனர். சோசலிஸ்ட் கட்சியின் புகழ்வாய்ந்த பட்டம்தாணுப்பிள்ளை கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவு இல்லை என அறிவித்தார். பின்னாட்களில் சோசலிஸ்ட்கள் மத்தியில் குறிப்பாக ஜே பி- லோகியா மத்தியில் வேறுபாடுகள் ஏற்படவும் இவர் காரணமாக இருந்தார். எம் எஸ் தான் முதல்வராக வருவார் என 1957  மார்ச் 23 மாத்ருபூமி -அவருக்கு இருந்த திறமை, செல்வாக்கை குறிப்பிட்டு எழுதியது. மார்ச் 22, 1957ல் சி பி அய் கட்சியின் நிர்வாக குழு எர்ணாகுளத்தில் கூடி எம் எஸ் அவர்களை சட்டமன்றகுழு தலைவராகவும் அச்சுதமேனன் அவர்களை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

தனிப்பட்ட மத உணர்வுகளில் கட்சி தலையிடாது, கம்யூனிச எதிர்ப்பாளர் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் என்ற அறிக்கையை நம்பூதிரிபாட் வெளியிட்டார். 1957 ஏப்ரல் 5 அன்று உலகிலேயே மக்களால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 11 தோழர்களை கொண்ட அமைச்சரவை என்கிற கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அதிகார மாதிரி ஒன்று உருவானது. நம்பூதிரிபாட்  அப்போது 48 வயதில்தான் இருந்தார். மகத்தான மனிதனாக அச்சுதமேனன் கருதப்பட்டார். புகழ்வாய்ந்த நீதிமானாக வி ஆர் கிருஷ்ண அய்யர் உருவாகியிருந்தார். சுகாதார அமைச்சர்  மேனன் விடுதலை போராட்ட வீரர் மட்டுமல்ல, பெரும் அறுவை சிகிட்சை நிபுணர். கல்வி அமைச்சர் பேரா ஜோசப் முண்டேசேரி  ஆசிரியர் இயக்க போராளி, ஏராள புத்தகங்களின் ஆசிரியர், சம்ஸ்கிருதம் குறித்த விமர்சன கட்டுரைகளை எழுதியவர். சபாநாயகர் சங்கரநாராயணன்தம்பி வழக்கறிஞர், விடுதலை போராட்டவீரர் இப்படிப்பட்ட பல  புகழ்வாய்ந்தவர்களின் முகமாக ஆட்சி தெரிந்தது. இந்திய அரசியல் சட்ட எல்லைக்குள் என்ற வரையறையும் புதியவர்களுக்கு இருந்தது.

முதல்வராக பதவியேற்றவுடன் தங்கள் நிலைகளை விளக்கி எம் எஸ் உரையாற்றினார். நாங்கள் ஆட்சி நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லாதவர்கள். கடும் பிரச்சனைகள் நிலவும் மாநிலத்தை ஆள முன்வருவது என்பதே கடுமையானது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவு குரல்கள் வருகிறது. நால்புறமும் நிற்கும் வரையறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றவேண்டும். கற்பனைக்கு எட்டாத விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ள சூழல் பழக்கமாகவேண்டும். நாங்கள் தனிப்பட்ட நபர்களாக இவ்வேலையில் நுழையவில்லை. நிறுவனவகைப்பட்ட ஒன்றில் நுழைகிறோம். நாங்கள் கட்சியின் பிரதிநிகள் மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுள்ளோம். .மத்திய காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகள் பலவற்றை முன் இருந்த காங்கிரஸ் கேரளா மாநில அரசுகள் செய்ய தவறிவிட்டன. அதை நாங்கள் செய்து முடிப்போம். சோசலிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள்  ஒத்துழைப்பை கோருகிறோம். We are being elected ‘Not as Representative of Party but as Representative  of People’ என்கிற நம்பூதிரிபாட் உரையின் வரி மகத்தான வழிகாட்டும் வரியாக தொடர்ந்து காப்பாற்றப்பட்டிருந்தால்  கம்யூனிஸ்ட் கட்சிகள் மேலும் மக்களுக்கு நம்பிக்கை தந்திடும் கட்சியாக இருந்திருக்கமுடியும். வெகுஜன இயக்கங்களிலும் பிளவுகள் தவிர்க்கப்பட்டிருக்கமுடியும்.

நேரு உட்பட பலர் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியால் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் கூட்டம் ஒன்றில் நேருகம்யூனிஸ்ட்கள்வெளிநாட்டின் செல்வாக்கில் இருப்பவர்கள், பொறுப்பற்றவர்கள் என்ற கடும் விமர்சனங்களை வைத்தார். அரசியல் அமைப்புப்படியும் மத்திய அரசு- மாநில அரசுகள் உண்மையான ஒத்துழைப்பும் இருக்கும்போதுதான் எங்களது கம்யூனிச அரசாங்க சோதனை வெற்றி பெற முடியும் என்ற கடிதத்தை ஏப்ரல் 1957லேயே நேருவிற்கு எம் எஸ் எழுதினார். Red Interlude in Kerala என்கிற பிரசுரத்தை கேரளா காங்கிரஸ் வெளியிட்டது. அதில் கம்யூனிஸ்ட்கள் எவ்வாறு வென்றனர் என்பதை ஆய்வு செய்தனர். பல்வேறு பத்ரிக்கைகள் கம்யூனிஸ்ட் கேடர்கள் பல கிராமங்களில் மக்களுடன் என படம் பிடித்தன. நாயர்கள், ஈழவர், தாழ்த்தப்பட்டவர்கள்  வாக்குகளால்தான் வெற்றி என சிலர் தெரிவித்தனர். நியுயார்க்டைம்ஸ் பத்திரிகை காங்கிரஸார்களின் திறமையற்ற நிர்வாகம், ஊழல்தான் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்குவர உதவியது என எழுதியது. கம்யூனிஸ்ட்களின் தியாகமும் தன்னலமற்ற தொண்டால்தான் மக்கள் ஆதரவை பெறமுடிந்தது என .கே கோபாலன் கருத்து தெரிவித்திருந்தார்.

1957 துவங்கி ஆட்சியில் இருந்த 28 மாதங்களில் 175 அசெம்பிளி அமர்வுகள் நடத்தப்பட்டன. மக்களுக்கு பயனளிக்கும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.. கல்விஅறிவு பரப்புதலிலும் ஊர்தோறும் நூலக இயக்கத்திலும் ஆசிரியர்கள் முன்நின்றனர். நிலசீர்திருத்தம், குத்தகைதார் உடைமை, விவசாய தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் கல்விக்குமான சட்டங்கள் மக்கள் ஆதரவை பெற்றன. ஜனநாயக போலீஸ் கொள்கை என்பதும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக தொழிற்தகராறுகளில் முதலாளிகளுக்கு ஆதரவாக, நிலத்தகராறுகளில் ஜமின்களுக்கு ஆதரவாக தலையிடுவதை கட்டுபடுத்தியது.  18 தொழில்களில் குறைந்தபட்ச சம்பளம் சட்டத்தை இயற்றியது, பேறுகால சட்டம் போட்டது. மே தினம் சம்பளத்துடன் விடுமுறையானது, காண்ட்ராக் தொழிலாளர்க்கு என 42 லேபர் சொசைட்டி உருவாக்கப்பட்டது போன்றவை ஆட்சி அமுல்படுத்திய  சில நல்ல திட்டங்கள்.

விவசாய சீர்திருத்தங்களில் கோபம் கொண்ட பிரிட்டிஷ் தோட்ட அதிபர்கள், நிலபிரபுக்கள், காங்கிரஸ், பிரஜா சோசலிஸ்ட்கள், ரோமன் கத்தோலிக் பிஷப்கள் என அணிசேர்க்கை போராட்டங்களை உருவாக்கின.  மொரார்ஜிதேசாய், டி டி கே, இந்திராகாந்தி போன்றவர்கள் வெளிப்படையாக தங்கள் விமர்சனங்கள் மூலம் ஊக்கப்படுத்தினர். கேரளா சோதனை அனுமதிக்கப்பட்டால் , அந்த தொற்று (Infection) நாடு முழுவதும் பரவிவிடும் என காங்கிரஸ் கமிட்டியில் பேசப்பட்டதாக தனது பதிவில் அஜாய் கோஷ் தெரிவிக்கிறார். நாடு முழுதும் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன. கேரளாவில் வன்முறை, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் போராட்டங்கள்  உருவாக்கப்பட்டன.

1959 ஜூலை31 அன்று நம்பூதிரி அவர்களின் சி பி அய் ஆட்சி 356 விதியை பயன்படுத்தி நேரு சர்க்காரால் கலைக்கப்பட்டது. மக்களின் பெரும்பான்மை பெற்ற மாநில ஆட்சி இந்திய குடியரசில் முதல்முதலாக கலைக்கப்பட்ட நிகழ்வாகவும் அது அமைந்தது. இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு எவ்வாறு கேரளா நம்பூதிரி அரசாங்கம் குந்தகம் விளவித்தது என குடியரசுதலைவர் ராஜேந்திரபிரசாத் பிரகடனத்தில் தெரிவிக்கப்படவில்லை.

                                                                               எம் எஸ் பகுதி 3

மார்க்சின் ஆசியவகை உற்பத்திமுறை என்ற கருத்துருவில் இந்திய மார்க்சியர்கள் பலர் நின்றாலும், எம் எஸ் அதிலிருந்து மெல்ல நகர்ந்துவிட்டதாக பிரபாத் பட்நாயக் தனது  நம்பூதிரிபாட் குறித்த கட்டுரையில் தெரிவிக்கிறார். பண்டைய அய்ரோப்பிய சமுகம் போல் இங்கு அடிமை முறையில்லை என்பதற்கும் அவர் வருகிறார். அதே நேரத்தில் முதல் மூன்று வர்ணங்களும் நான்காவது சூத்திர வர்ணத்தாரை சுரண்டும் வர்க்கங்களாக இருந்தன என குறிப்பிடுகிறார் எம் எஸ். “The defeat of oppressed castes at the hands of Brahminic overlordship, of materialism by idealism, constituted the beginning of the fall of India's civilisation and culture, which in the end led to the loss of national independence” என்கிற வரலாற்று பார்வையை அவர் தந்தார்.

 செவ்வியல் முதலாளித்துவம் போல் அல்லாமல் இந்தியாவில் முதலாளித்துவம் கட்டவிரும்பிய அவ்வர்க்கம் வரலாற்றில் தாமதமாகவே நுழைந்தது. நிலபிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டே முதலாளித்துவ உறவுகளை சூப்பர் இம்போஸ் செய்தது என எம் எஸ் குறிப்பிடுகிறார். இங்கு ஏவுகணை விடும்போதும் பூஜை நடத்திதான் விடுவார்கள் என கேலி பேசினார். நில சொத்து உறவுகள், சாதி- வர்க்கம் பற்றி தோழர் ம் எஸ் ஆய்வுகளை தந்தார். 1957 முதல்வராக இருந்தபோது நிர்வாக சீரமைப்பு கமிஷனில் மேல்தட்டிற்கு சென்ற பகுதிக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார்.  தற்போது வழக்கத்தில் நிலவும் creamy Layer approach அன்றே அவரால் எடுக்கப்பட்டதாகவும் பிரகாஷ் காரத் பதிவு செய்கிறார். இதை ஒட்டிதான் மண்டல் பிரச்ச்னையின்போதும் சி பி எம் கட்சி நிலைப்பாடாக அது வந்தது.

நாடாளுமன்ற அரசியல் குறித்தும் எம் எஸ் தனது ஆய்வுகளை முன்வைத்தார். முதல் கம்யூனிஸ்ட் மாநில ஆட்சி அனுபவ நினைவுகளை அவர் பகிர்ந்தபோது நாடாளுமன்ற- சட்டமன்றங்களில் பெரும்பான்மை பெறுவதும் வர்க்கப்போராட்ட வடிவங்களே. அதே நேரத்தில் அவை நாடாளுமன்றத்திற்கு வெளியேயான மக்கள் திரள், வர்க்கப்போராட்டத்திற்கு  கட்டுப்பட்டவையே என்ற வரையறையை அவர் தந்தார்.

சிந்தா  வார இதழில் அவர் அளித்த பதில்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கமும் நாடாளுமன்ற அரசியலும் என்ற புத்தகமாக 1981ல் வெளிவந்தது. தங்கள் சட்டமன்ற ஆட்சிகள் மூலம் போலீஸ் தொழிலாளர்களை ஒடுக்கிவந்ததை தடுக்க முடிந்ததாக தெரிவிக்கிறார். பலாத்கார புரட்சி நடத்துவதற்கு தேவையான வலுவுள்ள வெகுஜனப்படையை உருவாக்க நாடாளுமன்றம் உட்பட அனைத்து சட்டரீதியான முறைகளையும் அங்கீகரிக்க வேண்டியது பற்றி மார்க்சிசம்-லெனினிசம் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். வர்க்க எதிரி என்ற சொல் குறிப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான பொருளாதார நலன்களை கொண்ட முதலாளித்துவ- நிலபிரபுத்துவ வர்க்கங்களையும் அவர்களை அண்டி நிற்பவர்களையும்தான் என விளக்கமளிக்கிறார். அதேபோல் அமைதியான முறையில் சோசலிச மாற்றம் சாத்தியமா என்ற கேள்விக்குரிய பதில் அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்கிறார். வாய்ப்பு மிக குறைவு. ஆனால் அப்படி எங்குமே நடக்காது எனக்கூறுவது சரியாக இருக்காது என்கிறார்.

 1955-56களில் நியுஏஜ் பத்திரிகையில்  காந்தி குறித்த கட்டுரைகள் பின்னர் 1958ல் மகாத்மாவும் இசமும் என்ற பெயரில் வெளியானது. அதில் எம் எஸ் அவர்கள் ஆழமாக காந்தி குறித்து தனது பார்வையை முன்வைத்திருந்தார்.. காந்தியடிகளின் பங்களிப்பும் அதே நேரத்தில் போதாமைகளும் தனிநபர் பார்வையில் மட்டும் வைக்காது தேசிய பூர்ஷ்வாக்களின் எல்லைக்குள் என்ற பார்வையில்  எம் எஸ் அலசியிருந்தார்.  அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகளில் முதலாளித்துவ வர்க்க மேலாதிக்கத்தை அரசியல் பொருளாதார தளங்களில் மட்டுமல்லாது கலாச்சார தளங்களில் எதிர்கொள்வது குறித்தும் விவாதித்தார். கிராம்சி குறித்தும் கூட தனது பார்வையை முன்வைத்தவர் அவர்.

சோவியத்- சீனா சர்வதேச விவாதங்களை கவனித்த தோழர் எம் எஸ் போன்றவர்கள்  அந்தந்த நாடுகளின் பிரத்யேக தன்மைக்கு ஏற்ப புரட்சிகர இயக்கங்களை கட்டுவது- சோசலிசத்திற்கான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம் என்ற முடிவிற்கு வந்தனர். சோவியத்துடன்  அல்லது சீனாவுடன்  என்ற பார்வையிலிருந்து விடுபடுவது என்ற முடிவிற்கு வந்தனர். சமதூரம் என்ற கொள்கையை கட்சி பிளவிற்கும் - நக்சல் அனுபவத்திற்கும் பின்னர் சி பி எம் கட்சி எடுத்தது. சீனாவில் டெங்ஷியோபிங் காலத்தில் எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் எதிர்மறை விளவுகளை தரும் என்ற கருத்துடன் எம் எஸ் உடன்படவில்லை என்கிறார் பிரகாஷ் காரத். சோவியத் வீழ்ச்சியிலிருந்து சோசலிச கட்டுமான படிப்பினைகளை கட்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என எம் எஸ் தெரிவித்து வந்தார்

கேரளாவில் வெகுமக்கள் மத்தியில்  அரசியல் மற்றும் தத்துவார்த்த உரையாடலை தொடர்ந்து செய்து வந்தவர் எம் எஸ் அவர்கள். தனது தாய்மொழியில் ஏராளம் அவர் எழுதி குவித்துள்ளார்.

1942ல் கட்சி சட்டரீதியாக இயங்க வாய்ப்பு பெற்றது. சி பி அய் கட்சியின் முதல் காங்கிரஸ் 1943ல் நடந்தது. அதில் எம் எஸ் மத்திய கமிட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார். 1953-54ல் நடந்த மூன்றாவது கட்சி காங்கிரசில் அவர் பொலிட்ப்யூரோ உறுப்பினராகிறார். நியுஏஜ் பத்திரிக்கை ஆசிரியராகிறார். கட்சியில் காங்கிரஸ் குறித்த அணுகுமுறை, சீன யுத்த கருத்துவேறுபாடுகள் தீவிரமாக இருந்தன. கட்சியின் 6வது காங்கிரசில் விஜயவாடாவில் மூன்று திட்ட நகல்கள் வந்தன. வலதுசாரி திரிபு- இடது வறட்டு சூத்திரவாதம் தவிர்த்த தனது மூன்றாவது நகல் என தனியான ஒன்றை எம் எஸ் முன்வைத்தார். இறுதியாக முடிவிற்கு வரமுடியாமல் அஜாய் சொற்பொழிவின் பொது அம்சங்கள் மட்டும் அரசியல் தீர்மானமாகியது. 

தோழர்  அஜாய் மறைவிற்கு பின்னர்  ஒன்றுபட்ட கட்சிக்கு எம் எஸ் பொதுச்செயலரும் ஆகிறார். டாங்கே சேர்மன் என்ற சமரசம் ஏற்பட்டது. எம் எஸ் ரிவிஷனிசம் எதிர்த்த போராட்டம் என்பது செக்டேரியன் பாதைக்கு கட்சியை அழைத்துசென்று விடக்கூடாது என்பதையும்  பேசிவந்தார். கட்சி உடைவு தவிர்க்கமுடியாத்து என்பதை பல தோழர்கள் அவருடன் விவாதங்கள் மூலம் ஏற்கவைத்தனர் என்ற பதிவு ஒன்றை தோழர் சுர்ஜித் செய்துள்ளார். கட்சியில் நிலவிய வேறுபாடுகள் காரணமாக  இடதுநிலை எடுத்தவர்கள் என்று அறியப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். எம் எஸ் செய்யவில்லை, பொதுச்செயலராக தொடர்ந்தார். ஆனால் டாங்கேவின் அகம்பாவமான பேச்சு அவரை பாதித்தது என அவர் குறிப்பிட்டு சொல்கிறார். நீர் பொம்மைதான் நாங்கள்தான் கட்சி விஷயங்களை முடிவு செய்வோம் என்ற டாங்கே பேச்சும், பொதுச்செயலராக இருந்தும் அவரது கட்டுரை ஒன்றைகருத்துவேறுபாடு இருக்கிறது என்ற பெயரில்வெளியிடாத சூழலில் அவர் ராஜினாமா செய்தார். பின்னர் நடந்த தேசிய கவுன்சிலில் டாங்கே பிரிட்டிஷாருக்கு தனது விடுதலைக்கு வேண்டி எழுதிய கடிதம் சர்ச்சையானது. 32 தேசியகவுன்சில் உறுப்பினர்கள் வெளியேறினர். 1964ல் சி பி எம் கட்சி அமைக்கப்பட்டது.

சீனகட்சி சி பி எம் கட்சியை நவீன திருத்தல்வாத கட்சி என முத்திரை குத்தியது. சீனா நிலைப்பாட்டில் இருந்த சிலர் வெளியேறி நக்சல் இயக்கமான சி பி எம் எல் துவங்கினர். இந்திராவின் அவசர நிலை பிரகடன காலத்தில் சி பி எம் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பொதுச்செயலராக இருந்த சுந்தரையா அவர்கள் கொரில்லா போர் முறை, தலைமறைவு போராட்ட கருத்துக்களை முன்வைத்தார். கட்சியில் ஏற்பில்லாமல் போனதால் சுந்தரையா பொதுச்செயலர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

1977ல் நம்பூதிரி அவர்கள் சி பி எம் கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 14 ஆண்டுகள் செயல்பட்டார். 1965 இந்திய பாகிஸ்தான் யுத்த காலத்தில் சி பி எம் கட்சியின் பிரதான பரப்புரையாளராக அவர் செயல்பட்டார். மண்டல் கமிஷன் பிரச்சனையிலும் அவர் நிலைப்பாட்டை விளக்கி பிரசுரம் கொணர்ந்தார். Mahatma and the Ism, Nehru Ideology and Practice, Indian Freedom Struggle , கேரளா குறித்த ஆய்வுகள், இந்தியாவின் சோசலிச பாதை, கம்யூனிஸ்ட்களும் நாடாளுமன்ற ஜனநாயகமும் போன்றவை அவரின் குறிப்பிட தகுந்த முக்கிய ஆக்கங்கங்கள். ஆதிசங்கரின் தத்துவம், இந்திய விடுதலை இயக்க வர்க்கத்தன்மை, கேரளாவில் விவசாய இயக்கம், வர்க்கம்- சாதி- கட்சி, முதலாளித்துவ நீதித்துறை, கிராம்ஸி சிந்தனை போன்ற சில முக்கிய கட்டுரைகளை அவர் எழுதினார்.. அவரது முக்கிய கட்டுரைகள் ஆங்கிலத்தில் இரண்டு வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆரம்பநாட்களில் தோழர் ஜோஷியுடன் எம் எஸ்க்கு நெருக்கம் இருந்தது. பின்னர் பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து தோழர் ரணதிவே விடுவிக்கப்பட்டு அவர் மீது விசாரணை நடந்த கமிட்டியில் 1950ல் எம் எஸ் உறுப்பினராக்கப்பட்டிருந்தார். ஆந்திர கொள்கைப்படி அமைந்த மத்திய கமிட்டியிலும் அவர் உறுப்பினர். மாஸ்கோ சென்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் நால்வர் குழு ஆலோசனை நடத்தி வந்தது. தோழர் ரணதிவே மீது நடவடிக்கை கைவிடப்பட்டதாக எம் எஸ் பதிவு செய்கிறார். தோழர்கள் எம் எஸ் ராஜேஸ்வரராவ் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவினாலும் பரஸ்பர மரியாதையுடன் உறவு இருந்ததாகவும், 1976க்கு பின்னர் இரு கட்சி அரசியல் நிலைப்பாட்டின் நெருக்கத்திற்காக, கூட்டான செயல்பாட்டிற்காக  லிங் பத்திரிக்கை ஆசிரியர் இல்லத்தில் சி ஆர்- எம் எஸ் சந்திப்பிற்கு ஆசிரியர்  எடட்டா நாராயண்  ஏறபாடு செய்தார். தொடர்ந்து 6 முறை சி ஆர் அவர்கள் நம்பூதிரிபாட் இல்லம் சென்று கட்சிகளின் இணந்த செயல்பாட்டிற்கான விவாதம், உடன்பாடு வர உதவி செய்தார் என்ற பதிவையும் எம் எஸ் செய்துள்ளார்.

எளிய வாழ்க்கையில் நிறைவுபெற்றவராகவும், எந்நேரமும் தளர்வின்றி உழைப்பவராகவும் அவர் இருந்தார். Marxist Scholar என அவர் ஏற்கப்பட்டவராக இருந்தார். விவசாய இயக்கத்திலிருந்து தனது வர்க்கப்போராட்ட களப்பணியை துவக்கினார். காலை 4 மணிக்கே எழுந்து தனது கட்டுரைகளை எழுதும் வழக்கம் அவரிடம் இருந்தது என்பதை ராமச்சந்திரகுஹா தெரிவிக்கிறார். தனது இறுதி நாளில்கூட அவர் தனது உதவியாளரிடம் இரு கட்டுரைகளை டிக்டேட் செய்ததாக அறிகிறோம்.

நாட்டின் விடுதலையை அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார். அவரது தலைக்கு ரூ 5000 என அறிவிக்கப்பட்டிருந்தது. 1967-69 காலத்திலும் அவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தது. எதிர்கட்சி தலைவராக 60-64 மற்றும் 70-77 ஆண்டுகளில் அவர் பணியாற்றினார். சி பி எம் கட்சியின் பொதுச்செயலராக அவர் 1977-92 ஆண்டுகளில் செயல்பட்டு கட்சிக்கு வழிகாட்டினார். வாழ்நாள் முழுதும் உழைத்த, சிந்தித்த  தோழர் எம் எஸ் மார்ச் 19, 1998ல் தனது 89ஆம் வயதில் அவர் காலமானார். இந்திய மார்க்சியர் முன் வரிசையில் வரலாறு அவருக்கு இடம் கொடுத்துள்ளது.

References: .  1. How I Became A Communist- EMS 

  2. Communist Party Documents

3. Peoples Democracy Articles of Surjit, Ramachandran, Prakash Karat, Patnaik

4. FrontLine – A G Noorani

5. EMS- Syed, Pk Singh

6. Being Brahmin- The Marxist Way

7. இந்தியாவில் சோசலிச பாதை     

 8. நாடாளுமன்ற ஜனநாயகம்

No comments:

Post a Comment