https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, July 20, 2017

எங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes part 6

VI
மான்செஸ்டர் வாழ்க்கையை முடித்துக்கொண்டு 1870ல் எங்கெல்ஸ் மார்க்ஸ் வீட்டிற்கு மிக அருகாமையில் லண்டனில் குடியேறினார். தினந்தோறும் சந்திப்புகள், விவாதங்கள், குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு அடுத்து செய்யவேண்டிய வேலைகள் என நாட்கள் அங்கு நகர்ந்தன. மே மாதம் 1871ல் பிரான்சில் சிவில் யுத்தம் குறித்து அகிலத்தில் மார்க்ஸ் பேசினார். பாரிஸ் கம்யூனின் வரலாற்று முக்கியத்துவத்தை அவர் கவுன்சில் உறுப்பினர்களுக்கு உணர்த்தினார். ஏற்கனேவே அடக்குமுறை கருவியாக இருந்த அரசு எந்திரத்தை தகர்த்து பாட்டாளிகளின் நலனுக்கு உகந்த புதிதான ஒன்றை கட்டுவது என்பதில் மார்க்ஸ் அழுத்தம் கொடுத்து பேசினார்.  லண்டன் கவுன்சில் சார்ந்த ஒட்ஜர் போன்றவர்கள் மார்க்சின் கம்யூன் கருத்தில் உடன்பாடில்லை என்றனர். அவர்கள் வெளியேறினர். அதேபோல் பகுனின் ஆதரவாளர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்பட்டது, பாட்டாளிகளின் அரசு என்பதும் அடக்குமுறை கருவிதான் – அரசு என்பதே கூடாது என்கிற அராஜக வாதம் சில நாடுகளில் அய்ரோப்பாவில் செல்வாக்குடன் இருந்தது.
பகுனினுடன் எங்கெல்ஸ் பெரும் விவாதம் ஒன்றை மேற்கொண்டார். மார்க்சியத்தின் பொருத்தப்பாட்டை அவர் எடுத்து விளக்கினார். Unpolitical socialism என்பதை ஏற்கமுடியாது என வாதிட்டார். The details of political programmee may vary according to special circumstances in each country, but the fundamental relations between capital and labour being everywhere the same… the principles and goal of the proletarian political programme will be identical atleast in all western countries என்பதை அவர் பகுனிஸ்ட்களுக்கு சுட்டிக்காட்டினார். கட்சி என்பது புரட்சிக்கு அவசியம் என்பதை அவர் அழுத்தமாக தெரிவித்தார். The Collective power of working class cannot act as a class except by constituting itself into a political party  என எங்கெல்ஸ் விளக்கினார்.
                          Bakunin

Authority  Centralisation என்கிற இரு கருத்தங்களையும் பகுனின் எதிர்த்தார். இந்த இரண்டும் இல்லாததால்தான் பாரிஸ்கம்யூன் வீழ்ந்தது என்றார் எங்கெல்ஸ். இந்த இரண்டும் இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதற்கு எங்கெல்ஸ் அழுத்தம் தந்தார். தான் எழுப்பிய நடைமுறை சார்ந்த பல கேள்விகளுக்கு பகுனிடத்தில் மெளனம்தான் பதிலாக இருக்கிறது என்கிற விமர்சனத்தையும் எங்கெல்ஸ் வைத்தார். பகுனிஸ்ட்களை விமர்சித்து அகிலம் இரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. பாட்டாளிகளை ஆயுதமற்றவர்களாக்கிட செய்திடும் தந்திரம் என பகுனின் கருத்துக்கள் அதில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
 1872ல் அகிலம் ஹேகில் கூடியது. பிரதிநிதிகளில் பெரும்பான்மையோர் மார்க்சை ஏற்பவர்களாக இருந்தனர். பகுனினின் அகிலத்திற்கு விரோதமான நவடிக்கைகளை விசாரிக்க கமிட்டி ஒன்று போடப்பட்டது. அக்கூட்டத்தில் அகிலத்தின் தலைமையகம் இனி நியுயார்க்  என்கிற தீர்மானத்தை எங்கெல்ஸ் கொணர்ந்தார். திடுக்கிட்ட பலர் மாற்றுக்கருத்துக்களை வெளிப்படுத்தினாலும் அது நிறைவேற்றப்பட்டது. தங்களுக்கு ஏராள ஆய்வு கடமைகள் இருப்பதால் நேரடி கவனம், பொறுப்பு இயலாது என மார்க்ஸ்- எங்கெல்ஸ் தெரிவித்தனர். நியுயார்க்கில் பிரடெரிக் அடால்ப் சோர்கே பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். எங்கெல்ஸ் அகிலம் குறித்த விவரங்களை சோர்கேவிற்கு அனுப்பினார். எங்கெல்ஸ்  ‘On Authority’   ‘The Bakunists at Work’  போன்ற ஆக்கங்களை எழுதினார். அகிலம் செயல்படமுடியாத சூழலில் 1876ல் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது.
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதில் தரவேண்டிய பொறுப்பை எங்கெல்ஸ் உணர்ந்தார். 1875ல் கோதா வேலைத்திட்டம் விமர்சனத்திற்கு உள்ளானது. முதலாளித்துவ சமூக வீழ்ச்சி- பின்னர் அமையும் எதிர்கால கம்யூனிச சமுதாயம் குறித்து அவ்விமர்சனம் வழிகாட்டுகிறது என பின் நாட்களில் லெனின் எழுதினார்.  மார்க்ஸ் “ Between Capitalist and communist society lies the period of the revolutionary transformation of the one into the other. Corresponding to this also a political transition period in which the state can be nothing but the revolutionary dictatorship of the proletariat” என எழுதினார்.
டூரிங் தனது சுற்றுப்பயணம் மூலம் ஏராள கருத்துக்களை பேசியும் எழுதியும் வந்தார். அவருக்கு பொறுப்பான எதிர்வினை ஆற்றவேண்டிய கடமை எங்கெல்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.   வோர்வார்ட்ஸ் எனும் சோசலிச இதழில் தொடராக 1877-78களில் டூரிங்கிற்கு மறுப்பு வந்தது. டூரிங்கிற்கு மறுப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அரசியல், பொருளாதாரம், தத்துவம் பற்றிய மார்க்சிய கருத்துக்களை முறைப்படுத்தி தருகின்ற வேலையை எங்கெல்ஸ் செய்தார். டூரிங் பொருளாதார நிர்ணயவாதம், மத்தியத்துவம் போன்ற கோட்பாடுகளை தாக்கி பேசிவந்தார்.  wirtschaftscommunen- autonomous communes of working people  என டூரிங் பரிந்துரைத்தார். மார்க்சை  scientific figure of fun என்று கிண்டல் செய்தார். மார்க்ஸ்- எங்கெல்சை சியாமிஸ் ட்வின்ஸ் இணைந்த இரட்டையர்கள் என்றார்..
காட்ஸ்கி எழுதினார் judging the influence that Anti Duhring had upon me, No other book can have contributed so much to the understanding of Marxism. Marx's capital is the most powerful work, certainly. But it was only thro Anti Duhring that we learned to understand capital and read it properly. ஆனால் பின் நாட்களில் லூகாச், சார்த்தர், அல்தூசர் போன்றவர்கள் எங்கெல்ஸ் தொகுத்துக் கொடுத்தது மார்க்சிசம் அல்ல என்கிற கருத்தை வைத்தனர். நார்மன் லெவின் மார்க்சியத்தின் முதல் விலகல் எங்கெல்ஸ் இடம் துவங்குகிறது என்றார்.  It was Engelism which laid the basis for the future dogmatism, the future materialistic idealism of Stalin  என்றார் லெவின்.
டூரிங்கிற்கு மறுப்புக்கு பின்னர்  கற்பனாவாத சோசலிசம் விஞ்ஞான சோசலிசம் குறித்து எழுதினார் எங்கெல்ஸ். பாட்டாளிவர்க்க தலைமையில் மனிதகுலம் அவசியம் எனும் ராஜ்யத்திலிருந்து சுதந்திரம் எனும் ராஜ்யம் நோக்கி பயணிப்பர் என்றார் எங்கெல்ஸ்
எங்கெல்ஸ் அடுத்த துயரை சந்தித்தார். அவரின் இரண்டாவது துணைவியார் லிஸ்ஸி செப் 12 1878ல் மறைகிறார். கனவான் உயர்குடும்பத்து பெண்களுக்கு இணையாக இத்தொழிலாளிவர்க்க அய்ரிஷ் பெண் எனக்கு பெரும் உதவியாக இருந்தார் என எங்கெல்ஸ் வருத்தம்கூடிய பதிவை தந்தார். தங்களின் 15 ஆண்டு தாம்பத்ய வாழ்க்கை கடவுளுக்கு முன்னால் ஏற்கப்படவேண்டும் என லிஸ்ஸி பர்ன்ஸ் விழைந்ததால் தனது நாத்திக கொள்கைகளையும் மீறி செயிண்ட் மார்க் சர்ச்சிலிருந்து  ரெவரெண்ட்  காலோவே பாதிரிமாரை எங்கெல்ஸ் அழைத்துவந்தார். சர்ச் ஆப்  இங்கிலாந்தின் சடங்குப்படி அவர்கள் மணம் முடிக்கப்பட்டது.
                             LIZZIE BURNS

எங்கெல்ஸ் மார்க்சிற்கு மட்டுமல்ல அவரின் இரண்டாவது மருமகன் லபார்க் கேட்டபோதெல்லாம் பண உதவி செய்து வந்தார். ஜென்னி மார்க்ஸ் கான்சரால் கடும் தொல்லைக்கு உள்ளாகி டிசம்பர் 2 1881ல் மறைந்தார். கடைசி வாரங்களில் ஜென்னி தனியே அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். மார்க்சின் உடல் பலவீனமான நிலையில் அவர் ஜென்னியின் இறுதிசடங்கு நிகழ்வுகளில் பங்கேற்கமுடியவில்லை. மார்க்ஸ் பிராங்காடிஸ் தொல்லையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஜனவரி 1883ல் முதல் மகள் ஜென்னிலாங்கேயின் மரணம் நேர்ந்தது. அவரை அது மேலும் உலுக்கியது. மார்க்ஸ் அவர்களும் எங்கெல்ஸ் குடியிருப்பிற்கு அருகாமை மையிட்லாந்த் பார்க் சாலை குடியிருப்பில் மார்ச் 14 1883 மதியம் தனது சாய்வு நாற்காலியிலேயே உயிர் துறந்தார்.
எங்கெல்சின் 122 ரிஜண்ட்ஸ் பார்க் தெரு என்பது சர்வதேச புரட்சிகரவாதிகளின் மெக்கா என சொல்வர். ஜூலை 1870ல் ஜென்னிதான் எங்கெல்ஸ்க்கு உகந்த வீட்டு சூழல் கொண்ட இடத்தை பார்வையிட்டு அவர் வந்து தங்கிட ஏற்பாடு செய்தார். எங்கெல்ஸ் பொறுத்தவரை மார்க்ஸ் வீட்டிலிருந்து 10 நிமிடத்தில் வீடு என்பதே நிறைவு எனக் கருதினார். இப்போதும் லண்டனில் அந்த வீட்டிற்கு முன்னர் அரசியல் தத்துவவாதி எங்கெல்ஸ் வாழ்ந்த இடம் என போடப்பட்டுள்ளதாக த்ரிஸ்ட்ராம் ஹண்ட் தெரிவிக்கிறார். பெர்ன்ஸ்டைன் அங்கு தினசரி வந்து போவார். வா இளைஞனே என எங்கெல்ஸ் பிரான்சின் புகழ்வாய்ந்த பொர்டா ஒயினை அவரே கிளாசில் எடுத்து கொடுக்கும் அற்புத உள்ளம் படைத்தவர் என்பார் பெர்ன்ஸ்டைன்.

பாரிஸ் கம்யூன் காலத்தில் தன் மகனை கெடுத்தது மார்க்ஸ்தான் என்கிற எண்ணத்தை எங்கெல்சின் தாயார் வைத்திருந்தார். ஆனால் மார்க்சை குறை சொல்லாதே என தாயாருக்கு எங்கெல்ஸ் விளக்கத்தை தந்துகொண்டிருந்தார். எங்கெல்ஸ் குதிரை சவாரி பயிற்சி உடையவர். சொந்த குதிரையும் அவரிடம் இருந்தது. வேட்டையாடும் கலையையும் கற்றிருந்தார். அவர் குடும்பத்தில் சகோதரர்கள் மத்தியில் சொத்து பிரிவினை நேர்ந்தபோது அவர் தாயாருக்கு உனக்காக அனைத்தையும் நான் பொறுத்துக்கொள்ள முடியும் என தனது முதல் மகன் என்கிற பொறுப்பில் எழுதினார். I might acquire a hundred other businesses, but never a second mother- it was extremely disagreeable for me to have to withdraw from the family business in this way  என்றும் தனது வருத்தத்தை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்..

No comments:

Post a Comment