https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, May 19, 2017

மெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year of Formation of Madras Labour Union)


III
சென்னையில் தொழிலாளர் பாதுகாப்பு குழு ஒன்றை ஜீவா, ராமமூர்த்தி, சுந்தரைய்யா ஏ எஸ்கே போன்றோர் துவங்கி வழிகாட்டி வந்தனர், 1937ல் கர்னாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடத்தியபோது மாகாண சர்க்காரில் முதலமைச்சராக இருந்த ராஜாஜி தலையிட மறுத்து விட்டார், அமைச்சர் வி வி கிரி சமரச ஏற்பாடுகளை செய்தார். 1939ல் பின்னி நிர்வாக அழைப்பை ஏற்று விளையாட்டு விழாவிற்கு ராஜாஜி வந்ததும் கசப்பை உருவாக்கியது.
தலைவர்கள் ரூ75ஆயிரம் அபராத வழக்கு வாபஸ், வேலைநிறுத்த நாட்களுக்கும் ஊதியம், பழிவாங்கல் இல்லாமல் அனைவரும் திரும்ப வேலைக்கு சேர்க்கப்படுதல் போன்ற கோரிக்கைகளை தீர்க்காமல் வேலைநிறுத்தம் முடியக்கூடாது என்கிற குரல் வலுவாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி விசாரணக்குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அக்குழுவோ தொழிற்தகராறு பற்றியில்லாமல் வெளிக்கலவரம் பற்றி விசாரித்தது. நிர்வாகம் புதிய ஆட்களை எடுத்து பயமுறுத்தியது. சாதி இந்துக்கள், ஆதிதிராவிடர்கள், முஸ்லீம்கள் பரஸ்பர குற்றசாட்டுக்களை ஒருவர் மற்றவர் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அடுக்கினர். வர்க்க போராட்ட அமைப்பாக துவங்கி வலுப்பட்டுவந்த அமைப்பு ஹோம்ரூல்- ஒத்துழையாமை இயக்க வேற்பாட்டால், கிலாபத் இயக்க முரண்பாட்டால் வேறு அரசியல் காறணங்களினால் சாதி, மத வடிவம் பெற்று ஒற்றுமையை சீர்குலத்துக் கொண்டது. பிரித்தாளும் சூழ்ச்சியும் அய்ரோப்பிய முதலாளிகளின், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறையும் பெருமிதமாக துவங்கப்பட்ட முதல் தொழிற்சங்கத்தை  பலவீனப்படுத்தின.

Trade Unions and caste system என்பதை வாடியா எழுதினார். இந்துக்கள் அனைத்து சாதியினரும் இஸ்லாமியர், இந்திய கிறிஸ்துவர்கள் அனைவரும் இணக்கமாக தங்களின் நலன் காத்திட ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்ற அறிவுரையை அவர் தந்தார். அனைத்து தரப்பு தொழிலாளர்களின் சமபந்தி போஜனம் அடையாரில் ஏற்பாடு செய்தார்.. மெட்ராஸில் தான் பார்த்த 20 ஆயிரம் ஏழைத்தொழிலாளிகளில் பெரும்பாலோர் பிராம்மணர் அல்லாதவர்களே. அவர்கள் இணக்கமாக செயலாற்ற வேண்டும். அரசியல் அதிகாரம் பெற்றிட முயற்சிக்க வேண்டும் என்றார் வாடியா.

கேசவபிள்ளை இந்தியன் பேட்ரியாட்டில் எழுதிய ஆங்கில கட்டுரைகளை தமிழில் தேசபக்தனில் திருவிக  வெளியிட்டுவந்தார்.  சென்னையில் 1920 மார்ச் 21ல் கூடிய  மாகாணத்தொழிலாளர் சங்க மாநாட்டில்  அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைக்கும் நடுநாயகமாக மத்திய சங்கம் ஒன்று தேவை என்கிற கருத்தி திருவிக முனவைத்தார். ஏறத்தாழ 25 ஆண்டுகள் திருவிக தொடர்பு பின்னி சங்கத்துடன் இருந்தது.. மார்ச் 11 1942 வேலைநிறுத்தத்தின்போது மில் புகுந்து துப்பாக்கி சூடு நடந்தது எழுவர் இறந்தனர். வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் மாண்டனர். தொழிலாளர்களுடன் நின்றிருந்த திருவிக தலைக்கு மேலே தொட்டுவிடுவதைப்போன்று துப்பாக்கி குண்டு பறந்தது. ஆட்சியாளர்களை சந்தித்து அடக்குமுறை குறித்தும் இறந்தவர் குடும்பத்திற்கு நியாயம் வேண்டியும் திருவிக சக்கரை செட்டியார் வாதாடினர். ஆட்சியாளர் எதையும் ஏற்கவில்லை. 1947ல் காங்கிரஸ் மந்திரிசபை அந்தோணிப்பிள்ளை தலைமையில் நடந்த வேலைநிறுத்ததை ஒடுக்க விரும்பியது. தலைவர்களும் முக்கியமானவர்களும் கைதாகினர். திருவிக தலைமை தாங்கட்டுமே என காங்கிரஸ்காரர்கள் பேசினர். அவரும் தலைமை ஏற்றார். ஆனால் அவரை அரசாங்கம் வீட்டுக் காவலில் அடைத்தது. அப்போது முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். செய்தி அறிந்த தொழொலாளர்கள் திருவிக வீட்டுமுன் குழுமினர். மாடியிலிருந்து உரக்க அவர் சொற்பொழிவை தந்து உற்சாகப்படுத்தினார். இதற்கு பின்னர் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சங்கத்துடன் அவர் தொடர்பும் நின்றது.

எநத இயக்கமானாலும் அமைப்பானாலும் அதனை பரிசீலிக்கும்போது அதன் உறுப்பினர்கள் எந்த சமுக பின்புலத்தில் இருந்து வருகிறார்கள்- விழைவுகள் என்ன, எதை நோக்கி அதன் தலைவர்களால் அழைத்து செல்லப்படுகிறார்கள், எந்த அளவு அவர்களின் நகர்தல் அமைகிறது என்பதை பார்க்கவேண்டியுள்ளது. வழிநடத்த வருகின்ற தலைவர்கள் எந்த சமுக பின்புலத்திலிருந்து வருகிறார்கள், அவர்கள் எதனால் ஈர்க்கப்பட்டு எத்தகைய என்ணங்களால், சித்தாந்தங்களால் தனது வேலையை, கடமையாக தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த அளவு பிற தலைவர்களுடன் இணக்கப்படுத்திக் கொள்கிறார்கள், ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள், தியாகங்களை மேற்கொள்கிறார்கள்- தங்கள் பணியில் அவர்கள் நிறைவடைகிறார்களா போன்றவையும் பரிசீலனை வட்டத்தில் வரவேண்டியுள்ளது. அதேபோல் நிர்வாகம் அல்லது அரசாங்கம் அதன் அடக்குமுறை கருவிகளாக உருக்கொள்ளும் மனிதர்கள் சமுக பின்புலம், பார்வை வக்கிரம், அடக்குமுறையின் தன்மை, மனிதாபிமானம், எம்பதி(Empathy) என்கிற தன்னை பிறர் இடத்தில் வைத்து அணுகும் முறை, சட்ட எல்லைகள் மீறல்- மீறாமை, நேர்மை- ஊழல் போன்ற அம்சங்களுடன் பார்க்கவேண்டியுள்ளது.
மெட்றாஸ் லேபர் யூனியனில் கிராமப்புறத்திலிருந்து நகர்னோக்கி வந்த சாதி இந்துக்கள், ஆதிதிராவிடர், கிறிஸ்துவர், இஸ்லாமியர் என  குடும்ப மரபு பின்னனி கொண்ட தொழிலாளர் வந்தனர். மனிதாபிமானம், பிரிட்டிஷார் எதிர்ப்பு என்கிற கோணத்தில் உதவிகள் கிடைத்தது. ஹோம்ரூல் இயக்கத்தார், ஜஸ்டிஸ் கட்சியினர், தேசபக்தர்கள், காங்கிரஸ், மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டவர்கள், ஆதிதிராவிடர் நலனுக்கான தலைமை என ஆதரவு சக்திகளை அத்தொழிலாளர்கள் பெற்றார்கள். ஹோம்ரூல் இயக்கத்தாருக்கு தலைமை தாங்க பெரும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் ஆக உச்ச மாதிரி பிரிட்டிஷ் லேபர் பார்ட்டியாகவும்.  காங்கிரஸ் தலைவர்களுக்கு காந்தியின் மாதிரியும் வழிகாட்டின. நிர்வாகம் அய்ரோப்பிய மேலாண்மை வெள்ளைநிற சிந்தனையுடன் செயல்பட்டது.  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அய்ரோப்பிய முதலாளிகளுக்கும்  அவர்களது மூலதனம் லாபத்திற்கும் துணைநிற்பதை கடமையாக கொண்டிருந்தது. அடக்குமுறைகள் மூலம் தங்கள் நலன்களை காக்க தயங்கவில்லை.
தொழிற்சங்கம் வர்க்கப்பார்வையில் புதுவகையில் வளர்வதை அதிகார வர்க்கத்தால் ஆட்சியாளர்களால் எதிர் கொள்ளமுடியவில்லை. சாதிய, மத பிரச்சனைகள் கிளப்பி சங்கத்தை பலவீனப்படுத்த முடிந்தது. தலைவர்களால் வெளிப்படையாக நெருக்கடிகளை சந்திக்க முடியாமல் போனது. இரகசிய பேச்சுவார்த்தைகள் தலைமையில் பிணக்குகளை உருவாக்கியது. மாபெரும் மாதிரியாக இருந்திருக்கவேண்டிய சங்கம் பலவீனப்பட்டு அதன் பொலிவை இழந்தது. இவை எம் எல் யுக்கு மட்டுமான படிப்பினையல்ல . இன்றும் தொழிற்சங்கத்தில் சாதிய சொல்லாடல்கள் இல்லாமல் இல்லை. சாதி என்கிற எதார்த்தத்தை வர்க்கம் என்கிற வகையில் முரண்பட்டுக்கொள்ளாமல், ஒற்றுமைக்கு குந்தகம் இல்லாமல் சமாளித்து உள்வாங்குவது இன்றும் தொழிற்சங்கங்களுக்கு சவாலாகவே இருக்கிறது.

Ref;
Labour In Madras- B P Wadia
Trade Unionism  In India  S D Punekar
Madras Labour History- veeraraghavan
Trade Union Movement in India -Mathur Brothers
திரு வி க வாழ்வும் தொண்டும்


No comments:

Post a Comment