https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, May 19, 2017

மெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு 2

II
1920 மார்ச் 21 அன்று சென்னை மாகாண மாநாடு ஒன்றை எம் எல் யு உள்ளிட்ட 15 சங்கங்கள் கேசவபிள்ளை தலைமையில் கூட்டினர். திரு வி க பெரும் பணியாற்றினார். ராஜாஜி, சக்கரை செட்டியார்  உட்பட பலர் பங்கேற்றனர். 3000 பிரதிநிதிகள் கூடினர். ஞாயிறு ஊதியத்துடன் விடுமுறை, தொழிலாளர்க்கு வாக்குரிமை, மதிய உணவு இடைவேளை, குறைந்தபட்ச ஊதியம் கோரிக்கைளாயின.  அரசாங்கம் தொழிலாளர் விவகார ஆணயரையும் அதற்கு ஆலோசனைக்குழுவாக கேசவபிள்ளை, ராஜாஜி, தியாகராய செட்டியார் போன்றவர்களை சொல்லியது. கேசவபிள்ளை பத்ரிக்கைகளில் தாக்கி எழுதுகிறார், ராஜாஜி போல்ஷ்விக் அனுதாபி என ஆட்சேபங்கள் அரசு தரப்பில் வந்தன.
1920 பிப்ரவரியில் இரு தொழிலாளர்கள் நீக்கப்பட்டதால் வேலைநிறுத்தம் எழுந்தது. பேச்சுவார்த்தை பிப்12ல் நடந்தது. 10 லிருந்து 20 சத உயர்வு, 3 அனா அரிசிப்படி, வீடுகள் கட்டித் தருவது, அரசாங்க கெசட்படி விடுமுறை நாட்கள், போனஸ்  போன்றவை ஏற்கப்பட்டன, அக்டோபர் 20 அன்று வீவிங் மாஸ்டர் பெண்ட்லி தொழிலாளர் சிலரை காலால் உதைத்து துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட முயன்றது பிரச்சனையானது, வாடியா போலிசாரிடம் புகார் தந்தார். நிர்வாகம் கதையை மாற்றி கதவடைப்பு என்றது. நிதிதிரட்டி குடும்பங்களை காக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வாடியா, திரு வி க, நடேச முதலியார், இராமாஞ்சலு மீது தற்காலத்தடை கோரி வழக்கு ஒன்றை நவம்பர் 11ல் போட்டனர். தலைக்கு ரூ75000 நட்டஈடு இத்தலைவர்கள் தரவேண்டும் என்றது நிர்வாகம். டிசம்பர் 2ல் வாடியா உள்ளிட்டவர்க்கு நீதிமன்றம் வாய்ப்பூட்டு போட்டது. டிசம்பர் 9 அன்று கலகம் வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூட்டில் முருகேசன் - பாபுராவ் என்பவர்கள் இறந்தனர், சிலர் காயமடைந்தனர். இந்து நாளேடு ஜாலியான்வாலாபாக் என எழுதி கண்டித்தது. தியாகிகளின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். துப்பாக்கி சூட்டை கண்டித்து வாடியா தீர்மானம் முன்மொழிய ராஜாஜி வழிமொழிந்து பேசினார். செல்வபதி செட்டியார் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொழிலாளர்களிடம் நடத்தி அறிக்கை வெளியிட்டார்.
பிரம்மஞான சபை உள் தொந்திரவுகளால் வாடியா மெட்றாஸ் விட்டு நீங்கவேண்டும் என்கிற எண்ணம் அன்னி பெசண்ட்டிற்கும் உருவானது. பின்னி தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்கவேண்டிய தார்மீக பொறுப்பும் வாடியாவை உறுத்தியது. பம்பாய் புருஷோத்தம் தாகூர் உதவியுடன் முயற்சிகள் வெளித் தெரியாமல் நடக்க துவங்கின. பெசண்ட், வாடியா இவற்றில் தொடர்புடன் இருந்தனர். திரு வி க உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை குறித்த விவரம் அறியாமல் இருந்தனர்.  ஆனால் தனக்கு அடுத்து திரு வி க சங்கத்தை வழிநடத்துவார் என்பதை வாடியா வெளிப்படையாக அறிவித்தார். வாடியா உள்ளிட்டவர் மீது வழக்குகள் வாபஸ், 13 தொழிலாளர் தவிர மற்றவர் திரும்ப வேலைக்கு  என்கிற உடன்பாடு ஏற்பட்டது. 1921 ஜனவரி இறுதியில் தொழிலாளர் வேலைக்கு திரும்பினர். அதே நாள் ஜனவரி 27ல் வாடியா மாகாண காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகினார்
’வெளியார்கள்’ சங்க பதவிகளில் இருக்கமாட்டார்கள் என வாடியா ஏற்றுக்கொண்டுவிட்டார் என்கிற செய்தி கடும் விமர்சனத்தை அவர்மீது உருவாக்கியது. இந்த உடன்பாட்டை செய்த வாடியா வெளியார் இல்லையா என கேள்விகள் எழுந்தன. புதிய சங்கவிதிகள் ஏற்பிற்கு பின்னர்தான் தொழிலாளரே தலைமை என்கிற விதி வரப்போகிறது என்ற விளக்கத்தை வாடியா தந்தார். சில தினங்களில் வாடியா அய்ரோப்பிய பயணம் சென்றுவிட்டார். நிர்வாகம் திருவிக அவர்களை சந்திக்க மறுத்தது. அன்னி பெசண்ட்டை நிர்வாகம் நெருக்கி வாடியாவின் சங்கத் தலைவர் ராஜினாமாவை பெறக்கோரியது. அன்னி பெசண்ட்டும் வாடியாவை கடிதம் அனுப்புமாறு அறிவுறுத்தினார். வாடியா  வெற்றுத்தாளில் கையொப்பமிட்டு எழுதி கொடுத்து விடுக என சொன்னதாக அறியமுடிகிறது.
சங்கம் கூடி திருவிக அவர்களை தலைவராக, சக்கரை செட்டியாரை துணத்தலைவராக தேர்ந்தெடுத்தது. ஆதிதிராவிட தொழிலாளி  சாவு சடங்கு என காரணம் சொல்லி கேட்ட விடுப்பு மறுக்கப்பட்டு அவர் மீறி எடுத்ததால் பிரச்சனை எழுந்தது. அபராதம், வேலைநீக்கம் போன்ற பெரும் தண்டனைகள் அவருக்கு தரப்பட்டது. ஏப்ரல் 1921ல் வேலைநிறுத்தம் வெடித்தது, திருவிக, சக்கரை செட்டியார் தலையீட்டால் தொழிலாளர் வேலைக்கு திரும்பினர். இதனிடையில் கர்னாடிக் ஆலைத்தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைத்து போராடினர். பின்னியிலும் போராட்டம் என்கிற அறிவிப்பு வெளியானது. ஜூனில் வேலைநிறுத்தம் என்றனர். ஆதிதிராவிட தொழிலாளர்கள் பலரை சந்த்தித்த பின்னர் எம் சி ராஜா அவர்கள் தாங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்றார். ஆனால் கர்னாடிக் மில் பகுதியில் போராட்டத்தில் அப்பகுதி தொழிலாளர்கள் இணைந்தேயிருந்தனர்.

தங்கள் தோழர்கள் ஆலைவாயிலில் தடுக்கப்படுதல் சத்தியாகிரகிகளுக்கு அழகல்ல என ராஜா பத்ரிக்கை செய்தி விடுத்தார். ஜலீன்கான் எனும் தலைவர் ராஜா அவர்களுக்கு ஒத்துழைப்பு கோரி வேண்டுகோள் விடுத்தார். கிலாபத் இயக்கம் தொடர்பாக முஸ்லீம்களுக்கும் ஆதிதிராவிடர் பகுதியினருக்கும் குடியிருப்பு பகுதிகளில் வேறுபாடுகள் நிலவின.  கலகமாகி குடிசைகள் தீவைப்பு , உயிர்ப்பலி ஏற்பட்டது. வேலை நிறுத்தக்காரர்கள் மீது பழி ஏற்பட்டது. சாதிக்கலவரங்களுக்கு இந்நிகழ்வுகள் இட்டுசென்றன.  திருவிக, இ எல் அய்யர் , ஜலீல்கான், சக்கரை செட்டியார் போன்றவர்களை கவர்னர்  அழைத்து நிலைமைகள் சரியாகவில்லையெனில் நாடுகடத்தும் உத்தரவு உங்கள் மீது பாயும் என எச்சரித்தார்.
ஆகஸ்ட் 29 அன்று வேலைநிறுதத்தில் பங்கேற்காதவர்களை கருங்காலிகள் என சொல்லி கலவரம் ஒன்று ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. பெண் ஒருவர் உட்பட 6 பேர் இறந்தனர். பலர் காயமுற்றனர். மறுநாள் சவ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் சவ ஊர்வலம் தாக்கப்பட்டது, தோழர் சிங்காரவேலர் துப்பாக்கி சூட்டை கண்டித்தும் தொழிலாளர் ஒற்றுமை வேண்டியும் கட்டுரை எழுதினார். அக்டோபரிலும் கூட சவ ஊர்வலங்கள் கல்வீச்சுக்கு உள்ளாயின. காங்கிரஸ் தொழிலாளர் பக்கம் நின்று நிர்வாகம் மற்றும் அரசின் அடக்குமுறைகளை கண்டித்தது. ஆதிதிராவிடர் வேறுபாடுகள் குறித்து கவலையை வெளிப்படுத்தியது. சென்னை வந்த காந்தி கடற்கரை கூட்டத்தில் சாதிவாரியாக பிரிந்து நடக்கும் வேலைநிறுத்தம் குறித்த கவலையை வெளிப்படுத்தினார். அகிம்சை, கோரிக்கை உரிமைகள், முதலாளி மோசம் எனில்  வேறுவேலைகளை தேடிக்கொள்தல், தொழிலாளர்களே தலைவர்களாக வருவது, கருங்காலிகள் என எவரையும் தொந்திரவு செய்யக்கூடாது போன்ற பொது அறிவுரைகளை காந்தி அக்கூட்டத்தில் தந்தார். காந்தி முதலாளிகளுக்கு ஆதரவாக பேசி போய்விட்டார் என்கிற கருத்து வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஏற்பட்டது.

ஜஸ்டிஸ் கட்சியினரும் ஆகஸ்ட் 1921 கலவரங்களுக்கு பின்னர் தங்கள் கருத்துக்களை அறிக்கையாக தந்தனர். பின்னி வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை மாநகராட்சி இறங்கி சமரச முயற்சிகள் மேற்கொண்டது. நடுவர்குழு அமைத்து தீர்க்கலாம் என்றது. வேலைநிறுத்தம் 5 மாதங்கள் சென்றதால் குடும்பங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாயின. அக்டோபர் 21 அன்று படிப்படியாக புதிதாக வேலைக்கு எடுத்த 2000 இடங்கள் தவிர மீதமுள்ள இடங்களுக்கு எடுப்பது என்பதை ஏற்று தொழிலாளர் வழியின்றி பணிக்கு திரும்ப நேர்ந்தது.
1920 அக்டோபர் 31ல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் என்கிற  நாடு முழுமைக்குமான முதல் மத்திய அமைப்பு ஏற்பட்டது. வாடியா அன்னி பெசண்ட்டுடன் பங்கேற்றார். ஐ எல் ஓ பிரதிநிதி லாலாலஜ்பத் என்றும் அவருக்கு ஆலோசகர் வாடியா என்றும் முடிவானது. பின்னி வேலைநிறுத்த காலத்தில் ஜாரியா  ஏ ஐ டி யூ சி மாநாட்டில் பின்னி முதலாளியை, அரசை கண்டித்து இ.எல் அய்யர், ஜலீல்கான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலைநிறுத்தம் எதிர்த்து தொடர்ந்து எழுதிவந்த கில்பர்ட் என்பாரை எதிர்த்து சிங்காரவேலர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைவரும் நிற்கவேண்டி கட்டுரைகள் எழுதினார். கூட்டங்களில் பங்கேற்று உரை நல்கி உற்சாகப்படுத்தினார். அவர் 1923ல் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி துவங்கியதை திருவிக இ எல் அய்யர், சக்கரைசெட்டியார் போன்றவர்கள் ஏற்கவில்லை. இக்கட்சியுடன் தொழிலாளர் உறவு கொள்ளக்கூடாது என அவர்கள் தீர்மானம் போட்டனர். சுதர்மா இதழ்  அந்நிய கொள்கை ஏஜெண்ட்டாக சிங்காரவேலரை சித்தரித்தது. அரசு தன்பங்கிற்கு அவரை கான்பூர் சதிவழக்கில் 1924ல் சேர்த்து வதைத்தது.

பின்னி நிர்வாகம் நாடகமன்றம்,முதலுதவி குழு, கூட்டுறவு கடன் சொசைட்டி, குறைதீர் நலக்குழு போன்றவைகளை நிறுவி தொழிலாளர் சிந்தனைகளை திசை திருப்பியது. திருவிகவிற்கு பின்னர் தொழிலாளர் தலைவராக நடேச நாயக்கர் என்பார் வந்தார். தொடர்ந்து அன்னிபெசண்ட் ஆதரவாளர்கள் அருண்டேல், சிவராவ் வந்தனர், 1925 ஜனவரியில் சென்னையில் ஏ ஐ டி யூ சி மாநாடு பொதுக்கூட்டங்கள் நடந்தன, பஞ்சாலை தொழிலாளர் கூட்டங்களுக்கு வந்தனர். 1926ல் மிக முக்கிய தொழிற்சங்க சட்டம் வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இச்சட்டம் வந்ததன் பின்னணியும் வெற்றியும்  பின்னி தொழிலாளர்களுக்கே சரித்திரத்தில் சென்று சேர்ந்துள்ளது. இச்சட்டம் 1927 ஜூனில் அமுலுக்கு வந்தது. சட்டப்படி சங்கம் பதிவாகும் உரிமை முதன்முறையாக இந்திய தொழிலாளிகளுக்கு கிடைத்தது. பல்வேறு போராட்டங்கள், கெடுபிடிகள், வலுப்படுதல், வீழ்தல், திரள்தல் என்பன தாண்டி சில நிபந்தனைகளுடன் நிர்வாகம் பின்னி தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் என்பதை 1933ல் வழங்கியது. The law suit instituted by messrs Binny and co against me and nine others, will also force the pace of legislation for recognition of Trade Unions  என எழுதினார் வாடியா

No comments:

Post a Comment