https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, December 13, 2017

British Raj to Billionaire Raj

பிரிட்டிஷ் ராஜ் முதல் பில்லியனர்கள் ராஜ்வரை
இந்தியா ஏற்றத்தாழ்வு வளர்ச்சி- ஆய்வறிக்கை
                  -ஆர்.பட்டாபிராமன்
லுகஸ் சான்சல் பாரிஸ் பொருளாதார பள்ளியில் உலக செல்வம்- வருவாய் ஆய்வாளர். உலக நாடுகளில் வருவாய்- செல்வக்குவிப்புகளில் நடைபெற்றுவரும் ஏற்றத்தாழ்வுகள் குறித்த ஆய்வறிக்கைகளை வெளியிட்டுவருபவர்.
தாமஸ் பிக்கட்டி கடந்த 250 ஆண்டுகளில் செல்வக்குவிப்பும் பகிர்ந்தளிபும் என்பது குறித்த ஆய்வுகளை நடத்திவருபவர். பாரிஸ் பொருளாதார பள்ளியில் தொடர்புடையவர். லிமாண்ட், லிபரேஷன் பத்ரிக்கைகளில் எழுதிவருபவர். அவரது புகழ்வாய்ந்த புத்தகம் Capital in the 21st Century.  இந்த இரு ஆய்வறிஞர்களும் இணைந்துஇந்தியாவில் ஏற்றத்தாழ்வு- பிரிட்டிஷ் ராஜ்யத்திலிருந்து பில்லியனர் ராஜ்யம்வரை’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இங்கு தரப்படுகின்றன.
இந்த ஆய்வறிக்கை ஜுலை 2017ல் வெளியிடப்பட்டது. மின்வடிவமாக செப்டம்பரில் கிடைக்கத்துவங்கியது. இந்தியாவில் கடந்த 93 ஆண்டுகளில் (1922-2014) வருவாய் கிடைக்கப்பெற்றதில் நிலவிய அகலபாதாள வேறுபாடுகளை  ஆய்விட்டு அறிவித்துள்ளனர். இந்திய வருமானவரி என்கிற ஒன்று 1922ல் துவங்கப்பட்டதிலிருந்து   ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
ஒருசத அளவினர் என்ணிக்கை கொண்ட உயர்தட்டுப்பகுதி 1930ல் மொத்த வருவாயில் 21 சதம் வைத்திருந்தது. 2014ல் இது 22 சதமாகவுள்ளது என்பது அவர்களது ஆய்வின் வெளிப்பாடு.
1951-80 காலத்தில் எண்ணிக்கையில் 0.1 சதமாக இருந்தவர்கள் வசம்  வருவாய் வீழ்ச்சியை கண்டபோது 50 சத மக்கள் மொத்த வருவாய் 28 சதம் என்கிற உயர்வை கண்டது. ஆனால் 1980-2014ல் இந்த .01 சத உயர் தட்டிடம் 12 சத வருவாய் கிடைக்கப்பெறும் சூழல் உருவாக்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 50 சதத்தினர் வருவாயை சேர்த்தால் கூட 11 சதம்தான்  என்ற நிலைதான் அப்போதும் இருந்தது. அதேபோல் இக்காலத்தில் ஒருசத உயர் தட்டு மத்திய இடைத்தட்டின் 40 சத மக்கள் வருவாயை விட 6 சதம் கூடுதலாக (29 % 23% ) வைத்திருந்தது. ஆனால் இந்தியா டிஜிட்டல் ஏஜில் நுழைந்தவுடன் வரி குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது
உண்மையில் 1950-80களில் உயர்  ஒருசதமானவர்கள் வருவாயில் வீழ்ச்சியை காண முடிகிறது. 1980ல் 5 சதமாக வீழ்ந்ததை தூக்கி நிறுத்தும் தேவையை உயர்தட்டு உணரத்துவங்கியது. வர்த்தக நலனுக்குகந்த கொள்கைகள் உருவாக்கப்பட்டு 2000ல் வருவாய்  அவர்களின் 10 சதம் தொட்டது
தேசிய கணக்காய மதிப்பீடுகள் 2000க்குப் பின்னர் வருவாய் வளர்ச்சி முந்திய ஆண்டுகளை விஞ்சியதாக தெரிவிக்கிறது.. உண்மையான ஆண்டு  சராசரி வருவாய் வளர்ச்சி 1960-70களில் 2 சதத்திற்கும் குறைவாகவே இருந்தது. 1980-90களில் இது 2.5 சதமாக உயர்ந்தது. 2000 துவங்கி சராசரி ஆண்டுவருவாய் 4.4 சதமாக உயர்ந்துள்ளது. ஆனால் இதன்  பகிர்வு தாக்கம் (distributional impact)  பற்றி நம்மால் மதிப்பிடமுடியாமல் போயுள்ளது. அரசாங்கம் வருவாய் புள்ளிவிவரங்களை வெளித்தெரியாமல் பார்த்துக்கொள்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
2016ல் வருமானவரித்துறை வெளியிட்ட தகவல்களை வைத்துப் பார்த்தால் 2011-14 ஆண்டுகளில் அடிமட்ட 50 சதத்தினர் வருவாய் வளர்ச்சி மிக மந்தமானதாகவும், இடைத்தட்ட 40 சதம் மெதுவாகவும் முதல் 10 மற்றும் முதல் ஒரு சததட்டு அதிவேகமாகவும் வளர்ந்துள்ளதை அறியமுடிகிறது.
தேசிய மாதிரி சர்வே நிறுவனம் (NSSO) நுகர்வு பற்றி மட்டுமே ஆய்வைத்தருகிறதுவருவாய் பற்றி அங்கு போதுமான விவரங்களை பெற முடியவில்லை. இந்தியாவில் வருவாய், சொத்து குறித்த ஜனநாயக வெளிப்படைத்தன்மை மிகக் குறைவாக இருப்பதை உணரமுடிகிறது என்ற விமர்சனத்தை ஆய்வறிக்கை வைத்துள்ளது.
நேரு காலத்தின் கொள்கைகளை பொதுவாக  இந்திராவும் பின்பற்றியதால் 1970களில்    சற்று முற்போக்கான வரிவிதிப்பு முறையை (progressive tax system ) பார்க்கமுடிகிறது. 7வது 5 ஆண்டுதிட்டக்காலமான 1985-90ல் ராஜிவ் பொறுப்பேற்றிருந்தார். மார்க்கெட் தளர்வுகளை அவர்  செய்யத்துவங்கினார். 1970 களில்  top marginal Income tax rate 97.5 %  என்பது 1980களின் இறுதியில் 50 சதமாக மாறியது.  அதாவது வருவாய் பெருக்கத்திற்கேற்ப உயர் வரி விகித அடிப்படையில் வருமான வரி வசூலித்தல் என்பதில் உயர்தட்டு சாதகமான சூழலை பெற்றது. அய் எம் எப் நிபந்தனைகளில் இந்தியா சிக்கியது.
1991-2000களில் பெரும் பொருளாதார சீர்திருத்தங்களை நரசிம்ம ராவ் அரசாங்கம் செய்யவேண்டியிருந்தது. தொடர்ந்த அரசாங்கங்கள் வாஜ்பாய் உட்பட  அக்கொள்கைகளை தீவிரப்படுத்தினர்.
போர்ப்ஸ் தரும் இந்திய செல்வந்தர்கள் அறிக்கைப்படி ஆக உயர்ந்த பணக்காரர்களின் செல்வ வளம்  தேசிய வருவாயில் 2 சதமாக 1990லிருந்தது . ஆனால் இந்நிலை மிக உயர்ந்து 2008ல்  வளம் 27 சதமாக  குவிந்ததை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில் 2008 பொருளாதார  நெருக்கடிக்கு பின்னர் கனக்கிட்டதில் 2015ல் அது 10 சதத்தை காட்டுகிறது. இந்தியாவில்  செல்வ புள்ளிவிவரங்கள் (wealth data)  சரியாக கிடைக்கப்பெறாமையால் நம்மால் இதை உறுதி செய்துகொள்ள முடியாமல் போகிறது.
இந்து  கூட்டுகுடும்ப முறை (HUD- Hindu Undivided Family)  என்கிற வகையில்  வரி செலுத்தியவர்கள் 20 சதம் என்பதிலிருந்து 1990ல் 5 சதமாக மாறி 2011ல் 2.5 சதமாக வீழ்ந்துவிட்டது.  இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை என்றால் 1950களில் 0.5 சதம், 1960 களில் 1 சதம்வரை உயர்ந்தது. 1990 களின் இறுதியில் இது 3 சத , பின்னர் 6 சதம் என உயர்வைக்கண்டது.
 இந்தியா வருமான வரியை ஜிடிபியில் 2 சதம் அளவிற்கு பெறுகிறது சீனாவில் இது ஒருசதமாக இருக்கிறது. பிரேசில் ருஷ்யா போன்றவை 4 சத ஜிடிபி அளவிலும் தென் ஆப்ரிக்கா போன்றவை 9 சதமும் பெறுகின்றன.  இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை மிக சிறிய அளவாக இருப்பதால்  Fiscal Income என்கிற நிதி வருவாய் ( total personal income of individuals or tax units)   பற்றிய விவரங்கள் நமக்கு கிடைக்கவில்லை.  கிடைத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும்போது முதல் ஒரு சத தட்டினர் 1922-23ல் 13 சத தேசிய வருவாயை வைத்திருந்தனர் என்றால் 1939-40 உலகப்போர் துவக்கத்தில் 20.7 சதமாக உயர்ந்து 1949-50களில் 10.3 சதமாக சரிந்ததை அறிக்கை தெரிவிக்கிறது.
 1950களில் முதல் 10 சத தட்டினரும் இடைத்தைனரான 40 சதத்தினரும் ஏறக்குறைய சம அளவு தேசிய வருவாயை பெறக்கூடியவர்களாக இருந்துள்ளனர். 40 சத இடைத்தட்டினர் 1982-83ல் வருவாயில் 46 சதம் பெற்றவராக உயர்ந்தனர். ஆனால் இத்தட்டினர் 2013-14ல் 29.6 சதம் பெற்று வருவாய் வீழ்ச்சியை கண்டுள்ளனர்.
 அடித்தட்டு 50 சதத்தினர் 1955-56ல் 19 சத தேச வருவாயை பெற்றனர். 1982-83ல் அவர்கள் 23.6 சதம் என்கிற உயர்வை கண்டனர்பொருளாதார சீர்திருத்த காலம் துவங்கிய பின்னர்  2000-01ல் 20.6 சதம் என வீழ்ச்சியையையும் 2013-14ல் மிக மோசமான வருவாய் சரிவாக 14.9 சம் என்கிற நிலையில் வீழ்ந்தனர்.
 1980-2014 ஆண்டுகளில்  வருவாய் பகிர்வு குறித்த வளர்ச்சி விவரங்களைப் (growth rates across full distribution of incomes)  பார்த்தால் இந்தியாவில் முதல் உயர் 1 சதம் 750 சத வளர்ச்சி ( 0.1 சத தட்டு 1138 சத வளர்ச்சி, 0.01 சத தட்டு 1834 சத வளர்ச்சி) முதல் 10 சத தட்டினர் 394 சத வளர்ச்சியையும், இடைத்தட்டு 40 சதத்தினர் 93 சத வளர்ச்சிஅடித்தட்டு 50 சதத்தினர் 93 சத வளர்ச்சியையும் காட்டுகின்றனர். அனைத்து மக்கள் சராசரி வளர்ச்சி என்பதான 187 சதத்தைவிட அடிதட்டும் இடைத்தட்டும் குறைவாக உள்ளன. சீனாவில் இது முறையே 1074 சதம் (1825, 2210)) 615 சதம் ,312சதமாகவுள்ளன. பிரான்சில்198 (306,437)) 45%,  4 % ஆகவும்  வருவாய் பங்கீட்டு வளர்ச்சி இருக்கின்றன.
முதல் 0.1சதம் என குறிப்பிடும்போது (2013-14ன் அடிப்படையில்) 8 லட்சம் நபர்களைத்தான் சொல்கிறோம். அதாவது டெல்லியின் அருகாமை குர்காவுன் மக்கள் தொகைக்கு சமம் எனலாம். அடிதட்டு எனும்போது நாம்  38.9 கோடி  வயது வந்த மக்களை குறிக்கிறோம். முதல் ஒரு சதம் எனும்போது 80 லட்சம் நபர்கள் இந்தியாவின் வருவாய் வளர்ச்சியில் 29 சதம் எடுத்து செல்கின்றனர். அடிதட்டில் 84 சத மக்களின் வருவாய்க்கு இணையான ஒன்றை எடுத்து செல்கின்றனர். நாட்டில் நிலவும் கொடுமையான ஏற்றத்தாழ்வுகளை இந்த ஒப்பீடு நமக்கு சொல்கிறது.
அடித்தட்டு 50 சதத்தினர்  வருவாய் பெறுவது என்பதை ஒப்பிட்டால் சீனா 13 சதம் இந்தியா 11 சதம் என்கிற நிலையில் உள்ளன. சீனாவில்  100 சத வருவாய்  எவ்வாறு பிரிகின்றது என்பதை பார்த்தால் முதல் .001 சதத்தினர் 1 சத வருவாயும் அடுத்த உயர் .01 தட்டினர் 3 சத வருவாயும் அடுத்த .1 தட்டு 6 சத வருவாயும் முதல் ஒரு சத தட்டு 15 சதம்  அடுத்த 9 சத தட்டு 29 சதம், இடைத்தட்டு 40 சதம் என்பது 43 சத வருவாயையும் அடித்தட்டான 50 சத மக்கள் 13 சதத்தையும்  பங்ககீடாக பெறுகின்றனர். இது இந்தியாவில் 3 %, 6 %, 12%, 29%, 37%, 23 %, 11% ஆக அமைகிறது. பிரான்சில் 2 %,6 %, 12%, 21,20,42,17ஆக உள்ளது. அமெரிக்காவில் 4, 9, 18, 34, 32, 33, 1 என புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெருகின்றன.
ஒப்பீட்டு அளவில் பார்த்தால் மேல்தட்டு 10 சதம் இந்தியாவில் 66 சத வருவாயையும்  இடைத்தட்டு 40 சதம் 23 சத வருவாயையும் அடித்தட்டு 50 சதத்தினர் 11 சதமும் பெறுகின்றனர். சீனாவில் இது 44 சதம், 43 சதம்,13 சதமாகிறது. பிரான்சில் 41,42, 17 ஆகவும் அமெரிக்காவில் 66,33, 1 என்ற நிலையிலும் இருக்கிறது.
அடித்தட்டில் வயது வந்தவர் 38 கோடி 92 லட்சம் எனில் இவர்களது சராசரி வருவாய் 43734 ரூபாய். இடைத்தட்டில் 38 கோடியினர் சராசரி வருவாய் ரூ 86841, முதல் 10 சத தட்டில் 77 லட்சத்து 83 ஆயிரம் என்றால் அவர்களின் சரசரி வருவாய் ரூ 7.72 லட்சம். முதல் ஒருசத தட்டினர் 77.83 லட்சம் சராசரி வருவாய் 30.93 லட்சம், பெரும்தட்டு முதல் 0.1 சதத்தில் 7.78 லட்சம்பேர்களின் சராசரி வருவாய் 1.22கோடி என அறிக்கை ப்டம் பிடித்துள்ளது. உயர் பெரும்தட்டு 0.01 சதம் 77838 நபர்களை கொண்டு அவர்களின் சராசரி வருவாய்5.46 கோடி என்றும், ஆக உயர் தட்டு 7784 நபர்களின் சராசரி வருவாய் 26.65 கோடியாகவும் இருக்கிறது.  காந்தியடிகள் எனது கிராமப்புற உழைப்பாளி எட்டணா கூலி பெறும்போது வைஸ்ராய் ரூ 750 பெறுவது அநியாயமான ஒன்றாக மாபெரும் வேறுபாடாக தெரியவில்லையா என்ற கேள்வியை அன்று எழுப்பினார். இன்று அடித்தட்டின் 43000 எங்கே- ஆக உயர்தட்டின் 26 கோடி எங்கே என்ற கேள்வி ஜனநாயக பெரும்பரப்பில் போதுமான விவாத எல்லைகளை தொடவில்லை.
2002க்கு பின்னர் செல்வம் ஓரிடத்தில் குவிதல் பலப்படத்துவங்கியுள்ளது. இது அதலபாதாள வேறுபாடுகள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இடைத்தைட்டில் ஒருபகுதி ஆக உயர்தட்டிற்கு கீழ் உள்ள மத்தியதரவர்க்கமாக மாறியுள்ளது. ஆனால் ஒளிர்விடும் இந்தியா என்கிற முழக்கம் உயர்தட்டு 10 சதம் மத்தியில் மட்டுமே பிரகாசிக்கிரது. அதாவது உயர் 8 கோடியினர் பிரகாசிக்கின்றனர்.
 செங்கோட்டையிலிருந்து ஆட்சியாளர்கள் கவர்ச்சிகர சொற்ஜாலங்களால் மயக்குமொழிகளால் பேசும் வளர்ச்சி என்பதெல்லாம் ஆக உயர்தட்டினருக்கான ரோஜாமலர் சாலைகளே என்பதை மேற்கூறிய ஆய்வு விவரங்கள் புலப்படுத்துகின்றன. வழக்கம்போல் அடித்தட்டு தனது பெரும் உழைப்பாலும், போராட்டங்களாலுமே பிழைக்கவேண்டும் என்ற நிலையே இவர்களது பொருளாதார கொள்கைகள் காட்டும் உண்மைகளாக இருக்கின்றன.
(ஆதாரம்: Lucas Chancel  Thomas Picketty
India income equality from 1922-2014    From British raj to Billionaire Raj)


No comments:

Post a Comment