Skip to main content

இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி

 

               இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி

பழகிய தோழர்களால் பாலா என அழைக்கப்பெறும் பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களின் இன்றைய காந்திகள் சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் பேசப்பட்ட புத்தகம். அதன் திறனாய்வுகளை மட்டுமே பார்த்த எனக்கு அப்புத்தகத்தை படிக்கும் நல்வாய்ப்பு இப்போதுதான் கிட்டியது. கவிஞர் யுகபாரதி உபயம்.





தமிழக பொதுவெளியில் அதிகம் பேசப்படாத உணரப்படாத பல ஆளுமைகளை சுருக்கமாக அவர்களின் செயல்களின் வழியே ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.  வர்கீஸ், அருணாராய் சிறிய வட்டாரத்திலாவது பேசுபொருளாக இருந்திருப்பர். அரவிந்த் கண் மருத்துவமனை பலரிடம் போய் சேர்ந்திருக்கும். ஆனாலும் அதன் துவக்க நாயகர் பற்றிய செய்திகளை பொதுபுத்தி உள்வாங்கியிருக்காது. இவர்களைத்தவிர லஷ்மி சந்த் ஜெயின், பங்கர் ராய், ராஜேந்திர சிங், அபய்- ராணி பங்க், சோனம் வாங்ச்சுக், அர்விந்த் குப்தா பேசப்பட்டுள்ளனர். இலா பட் அவர்களை தொழிற்சங்க தோழர்கள் சற்று அறிந்திருக்கலாம். கட்டுரைகளை படிப்பவர்கள் இந்த செயலூக்க நல்மாதிரி மனிதர்களை மேலும் தேடிச்செல்லும் வகையில் அவர்கள் குறித்த அறிமுகத்தை ஆசிரியர்  பாலசுப்ரமணியம் முத்துசாமி தந்துள்ளார்.

சத்தியம் தோற்பதில்லை- இந்த காந்திய வார்த்தைகளை நான் எப்பவும் நம்புகிறேன். நோக்கத்தில் உண்மை குடியிருக்கும் எச்செயலும், எச்சொல்லும் நிச்சயம் நிறைவேறும்என்கிற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் அனுபவம் தோய்ந்த குரலுடன் புத்தகம் விரிகிறது.

இப்புத்தகத்தை அழகுற பதிப்ப்பித்துள்ள தன்னறம் நூல்வெளி இவ்வாறு மிகச் சரியாக குறித்துள்ளனர்.

“ இக்கட்டுரைகள் காந்திய வழியில் பயணப்பட்டு, தங்கள் செயலிலக்கு தாண்டியும் நம்பிக்கையோடு நகர்கிற சாட்சி மனிதர்களின் தொகுப்பாக நிறைந்துள்ளது…. எளிய வாசிப்பின் வழி, நம்முள் பெருங்கனவை உருவாக்கும் எழுத்து நடை இப்புத்தகத்தை மனதுக்கு மேலும் அண்மைப்படுத்துகிறது. தரவுகளைத்தாண்டி அனைத்து வார்த்தையிலும் ஒரு மானுட அரவணப்பை உணரமுடிகிறது…எதன் வழி இம்மானுடம் ஆற்றுப்படவேண்டும் என்பதை நாம் மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும்” தன்னறம் தோழர் எழுதிய இந்த சரடு நூல் நீள நம்மை அழைத்துச் செல்வதை வாசிக்கும்போது உணரமுடியும்.

இன்றைய ’அருஞ்சொல் சமஸ்’ தனது அரவணைப்பாக படைப்பூக்கத்தில் வாழ்கிறது காந்தியம் என்கிற எளிய அறிமுகத்தை தந்துள்ளார்.

“ நண்பர் பாலா தன்னுடைய எழுத்துப்பணியை சரியான இடத்திலிருந்தே தொடங்கியிருக்கிறார். நூற்றுக்கணக்கான கதவுகள் சடசடவென அடைபடுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதவுகள் திறக்கப்படுவதுமான காலகட்டத்தில், பத்து கட்டுரைகளின் வழி இந்தப்புத்தகத்தில் பத்து உலகங்களைத் திறந்து காட்டுகிறார்; பாலா திறக்கும் கதவுகளின் வழி கசியும் ஒளியை நாம் காந்தியம் என்று மொழிபெயர்க்கிறோம். ஆனால் அது சாமான்யர்களுடமிருந்து வெளிப்படும் ஒளிதான்”

’போற்றப்படாத இதிகாசம்’ வர்கீஸ் குரியனின் பிரகாசத்தை வெளிக்கொணரும் கட்டுரை. ஆசிரியருக்கு அவருடனான நேரடி அனுபவம் – தன் சொந்த அனுபவ ஒளியில் கூடுதல் புரிதலை தருகிறது. ஆசிரியர் குஜராத் ஆனந்த் நகரின் ஊரக மேலாண்மைகழகமான் இர்மாவின் மாணாக்கர் என்பதால் அருகிருந்து வர்கீசை- அவரது செயல்திறனை உள்வாங்கமுடிந்துள்ளது. படேல், சாஸ்திரி ஆகியோர் துணையுடன் அமுல் கூட்டுறவு சொசைட்டி எனும் அற்புதத்தை கூட்டுழைப்பில் தனி ’சிரத்தை’யில் வர்கீஸ் உருவாக்கி வளர்த்த கதையைத்தான் இக்கட்டுரை மிக பொறுப்புடன் இந்திய தொழில்மாதிரியாக முன்வைக்கிறது. வர்கீசின் பெரும்பங்களிப்பை பத்ம விபூஷனும், மாக்சசே விருதும் பேசிக்கொண்டாலும் பாரத ரத்னாவும், நோபல் பரிசும் பாராமுகம் காட்டியது பெரும் சரித்திரச் சோகம் என ஆசிரியர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். குரியனின் பங்களிப்பு உலகைக் காத்தது என்கிற உரிமைப்பாரட்டல் ஏதுமில்லை. ஆனால் பலகோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்கிற நிஜத்தை இக்கட்டுரை தரிசிக்க வைக்கும்.

பங்கர் ராய்- அருணா ராய் தம்பதியர்கள். இருவர் குறித்தும் தனிக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பங்கர் ராய் ராஜஸ்தான், அஜ்மீர் மாவட்ட டிலோனியா Bare foot collegeயை உலகறிய செய்தவர். நீர்மேலாண்மை, சுகாதாரம், சக்தி போன்றவற்றிற்கான வாழ்க்கை செயல்முறை கல்விகூடமது. பங்கர் டூன் பெரும்படிப்பு மாணவர் – ஜெயபிரகாஷ் நாரயண் ஏற்படுத்திய உளத்தூண்டல்- தானே கிணறு தோண்டி உழைப்பிற்கு முன்னுதாரணமாக நின்று கிராம மக்களை அய்க்கியப்படுத்தியவர்- தங்கள் சொந்த தேவைகளுக்கு அவர்களே நிபுணர்கள் என்பதை செயலில் உணரவைத்தவர் என அடுக்கிக்கொண்டே போகலாம். ராஜஸ்தானில் கிராமம் தன் சொந்த முயற்சியால் நீராதாரம் சாதாரண விஷயமல்ல. சூரியஒளி விளக்குகள் திட்டம் பல நாடுகளும் விழையும் திட்டமானதிலும் பங்கர் ராய் பங்கு சிறப்பாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.

அருணாராய் என்றால் அய் ஏ எஸ் என்பதும் தகவல் உரிமைச் சட்டம் என்பதும் சட்டென நினைவிற்கு வந்துவிடும். இந்த சட்ட உருவாக்கம் கருக்கொண்ட தேவ்துங்க்ரி குடில், வளர்ந்து வசப்பட்ட சூழலை அருணா மற்றும் அவர் சக தோழர்களின்  அரும்பயணத்தை இக்கட்டுரையில் பார்க்கலாம். குறைந்தபட்சக் கூலிக்கான பெரும்போராட்டங்களை ஆசிரியர் அறியத்தருகிறார். மக்கட்குரல் கேட்பு எனும் பழக்கம் உருவான பின்னணியை அறிகிறோம்.

ராஜேந்திர சிங்கை ’தண்ணீர் காந்தி’ என பாலசுப்ரமணியம் அறியத்தருகிறார். தருண் பாரத் சங் என்கிற இளைஞர் செயல் களம் வழியாக வறட்சிப்பகுதிகளில் நடந்த குளம் வெட்டுதல்- பயிர்  விளைவிக்கும் பூமிகளாக மாறிய அற்புத நிகழ்வுகள் இக்கட்டுரைகளில் காணக்கிடைக்கின்றன.

அபய்பங்- ராணிபங் தம்பதியினர். தங்கள் தோழர்களுடன் சக மக்களுடன் உருவாக்கிய ஆரோக்கிய ஸ்வராஜ்யம் தான் இக்கட்டுரையின் சாரம். மலேரியா, குழந்தை இறப்பு, குடி இவற்றை எதிர்த்து தாங்கள் கிராமத்தில் அமைத்த மாத்ந்தேஷ்வரி மருத்துவமனை மூலம் நடந்த ஊக்கம் தந்த மாற்றங்களை இந்த கட்டுரை நமக்கு சொல்கிறது. அறிவியலின் துணையால் சொந்த மக்களின் முன்முயற்சியால் குறைந்த செலவில் மனிதர்கள் விடுதலைசாலையில் பயணிக்க இயலும் என்பதை பேசும் கட்டுரை.

லடாக்கின் சோனம் வாங்ச்சு தான் கண்டறிந்த மக்களின் கல்வி,, சூரிய ஒளியை பயன்படுத்தல், பனிஸ்தூபி எனும் புதியவழியில் நீராதாரம் மேம்படுத்திய சோதனைகளை இக்கட்டுரை பேசுகிறது.

அரவிந்த் கண் மருத்துவமனையின் உருவாக்கத்திற்காக நின்ற டாக்டர் வெங்கிடசாமி அவர் தம் உழைப்பு, அதன் சேவைகள் விரிவாக இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன. Spiritual consciousness then no exploitation என்கிற டாக்டரின் உள்ளுணர்வு இக்கட்டுரையில் நமக்கு கொடுக்கப்படுகிறது.

அர்விந்த்குப்தா எனக்கு அவர் இணையதளம் வழியாக ஏராளம் தந்தவர். பலருக்கும் தந்திருப்பார். குழந்தைகள் உலகில் அவரின் அனுபவத்தை இக்கட்டுரை நமக்குத்தரும். கல்வியின் நோக்கம் பற்றிப்பேசும். ஊரககுழந்தைகளை விரட்டாத வெருட்டாத கல்விக்காக அர்விந்த் குப்தாவின் போராட்டங்களை அறிகிறோம்.

லஷ்மி ஜெயின் இன்றைய NDTV சீனிவாச ஜெயினின் தந்தையார். சுதந்திர போராட்ட வீரர்- பத்திரிகையாளர். விடுதலைக்காலத்தில்- பிரிவினை அகதிகள் பிரச்சனையில் சுசேதா கிருபளானி, கமலாதேவி வழிகாட்டலில் உடன் நின்று அவர்கள் வாழ்க்கையை அவர்களது சொந்த முயற்சிகளால் முன்னேற்றியவர். அவரைப்பற்றிய கட்டுரையும்  இடம் பெற்றுள்ள புத்தகம்.

பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள் தன் சொந்த நிர்வாக அனுபவ வெளிச்சத்தில்  அறம் சார்ந்த நிர்வாகத்தை- மக்கள் நிர்வாக இயலை காந்திய வழிப்பட்டு நிற்கும் ஆளுமைகளை தமிழர்கள் அறிதல் முறைக்கு நெருக்கமாக கொணரும் வழியில் சிறப்பாக செயல்பட்டு வருவது பெருமைக்குரிய அம்சம். சிறக்கட்டும் அவரது எழுத்துக்கள்.

28-10-2021


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு