https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, August 18, 2018

காந்தியும் மார்க்சும் 2 Gandhi and Marx Essay 2




                         காந்தியும் மார்க்சும்    2
      -ஆர்.பட்டாபிராமன்

காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளனர். சோசலிஸ்ட்களுடனும் காந்தி தனது உரையாடலை நடத்தியுள்ளார். காந்தி- மார்க்ஸ் குறித்த கட்டுரைகள் சிலவற்றை எழுதிப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்   ஏற்பட்டது. எனது மார்க்சிய வாசிப்பும் காந்திய வாசிப்பும் மிக ஆரம்பநிலையில்தான் இருக்கிறது என்பதை நான் அறிந்தாலும் எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள எழுதி பார்த்துக்கொள்வது உதவும் எனக் கருதி இரண்டாவது கட்டுரையை தந்துள்ளேன். இக்கட்டுரை எழுத உதவிய ஆக்கம் Gandhi and Marx  by  K G Mashruwala.
கிஷோரிலால் மஷ்ருவாலா காந்தியின் நெருக்கமான தோழர்களில் ஒருவர். உப்பு சத்தியாக்கிரகம், பிரிட்டிஷாரே  இந்தியாவை விட்டு வெளியேறு போராட்டங்களில் பங்கேற்றவர். காந்தி துவங்கிய ஹரிஜன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். தனது 62ஆம் வயதில் 1952ல் மஷ்ருவாலா மறைந்தார். அவர் கல்வி முறை, சர்வோதயா குறித்த புத்தகங்களையும் எழுதியுள்ளார். ’காந்தி மார்க்ஸ்’ அவரின் மிக முக்கிய ஆக்கங்களில் ஒன்று. இதற்கு வினோபா பாவே முன்னுரை தந்துள்ளார். இருவரும் முன்வைக்கும் சாரப்பொருள் இக்கட்டுரையில்  இடம்பெறுகிறது.

சொர்க்கம் கிட்டும் என்ற நம்பிக்கையில் திரும்ப திரும்ப புராணங்களை படிப்பவர்கள் இருக்கிறார்கள். அதே போல் நமது நண்பர்கள் சிலர் ருஷ்யாவில் சொர்க்கம் தரை இறங்கிவந்ததாக படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற கேலியுடன் தன் முன்னுரையை தந்தார் வினோபாபாவே. நூல் நூற்கும் போது கம்யூனிஸ்ட் நண்பரை ஒருமணிநேரம்  1940ல் தேர்ந்தெடுக்கப்பட மார்க்ஸ் நூல்களை வாசிக்க சொல்லி கேட்பேன். மார்க்சின் மூலதனத்தை முன்பே படித்திருந்தபடியால் என்னால் எளிதாக உள்வாங்க முடிந்தது. அவை திரும்பக்கூறல் முறையிலேயே இருப்பதை நான் கண்ணுற்றேன். அவர்கள் பெளதீகம் சித்தம் என்கிறார்கள். இந்தியா போன்ற நாட்டில் வன்முறையற்ற வழியில் புரட்சி சாத்தியமானது. ஜனநாயக முறைகளிலேயே சாத்தியம்  என்பது எனது கருத்து என்றார் வினோபாஜி.
எந்த சமூக அமைப்பும் நிரந்தரமானதல்ல- சர்வாம்சமானதல்ல- காலாகாலத்திற்குமானதல்ல. குறிப்பிட்ட நிலைமைகளுக்கேற்ப , இடத்திற்கேற்ப, பல்வேறு காரணிகளுக்கேற்ப மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். சமூக கட்டுமானத்தில்  மூட நம்பிக்கை வைப்பது பயனளிக்காது. நடத்தை நெறிகளை மேம்படுத்தும் கட்டுமானங்களை மாற்றம் உருவாக்கினால் பயனளிக்கும். அதற்கு அவசரப்படமுடியாது. மெதுவாக நடந்தேறினாலும் காத்திருக்கத்தான் வேண்டும். இதன் பொருள் மனிதர்களை தேவதைகளாக மாற்றும் செருக்கல்ல. நெறிகளின் மீதான விடாப்பிடியான நம்பிக்கையில்சமூக கட்டுமானம்’ என்கிறோம்.
 காந்தியை மகா ஆத்மா என்றும் மார்க்சை மகா முனி என்றும் வினோபாஜி குறிப்பிடுகிறார். உலகில் கசடாகவாவது ஏதாவது தங்கும் என்றால் அவர்கள் இருவருடையதாகத்தான் இருக்கும். காந்திய தத்துவம் என்பது எங்கும் அமைப்புப்படுத்தப்பட்டதாக திரட்சியானதாக இல்லை. ஆனாலும் சரியான சிந்தனை முறையின் வீரியத்தை அது கொண்டிருக்கிறது.. அமெரிக்காவின் முதலாளித்துவமா அல்லது ருஷ்யாவின் கம்யூனிசமா என்பது போட்டிக்குரியதாக தெரியலாம். ஆனால் காந்தியம் தான் பலப்பரிட்சையில் உள்ளது.. சிலர்  Gandhism is communism minus violence என்கிறார்கள். ஆனால் அவை அடிப்படையில் வேறுபடும் கோட்பாடுகள் (The fact of the matter is that these two ideologies are irreconcilable , the differences between them are fundamental).
கம்யூனிசம்  Intellectual jaundice கொண்டதாக உள்ளது  என விமர்சிக்கிறார் வினோபா பாவே.   அவர்கள் Mind Matter சர்ச்சையில் தெளிவாக கருத்துக் கூறுகின்றனர். ஆனால் ஆத்மா என எதையும் ஏற்பதில்லை.  A soul less ideology has no place for the freedom of the individual.  தனிமனிதர் வருவர் போவர் ஆனால் சமூகம் இருக்கும் என்பார்கள். புரட்சியின்போது ஆரம்பத்தில் ரத்த ஆறு ஓடினாலும் பின்னர் தேனும் பாலும் பாயும் என்கிறார்கள். ஜியோமதி கணக்குப் போல் புரட்சியின் விஞ்ஞானம் பற்றி அவர்கள் பேசுகிறார்கள் என்பது அவரது விமர்சனம்.
.  காந்தி இந்திய கலாச்சார பின்னணி உடையவர் என்பதால் அம்மக்களின் மொழியிலேயே அவர் உரையாடினார்.. வர்ண வியஸ்தா என்பதற்கு அனைத்துவகை வேலைகளுக்கு சம ஊதியம், போட்டியின்மை, தலைமுறைகளின் சக்திதனை முழுமையாக பயன்படுத்துவது போன்ற விளக்கங்களை நாம் பெறுகிறோம். அதே போல் தர்மகர்த்தா கொள்கை என்பதையும் அவர் விரிவுபடுத்தினார். அது சொத்துக்குரியது மட்டுமல்ல. அனைத்துவகைப்பட்ட மேலான அம்சங்கள் எனக் கருதப்படுகின்ற அனைத்திற்கும் உரியது. தன்னிடம் மிகுந்து இருப்பதாக கருதும் எதற்கும் அவன் தர்மகர்த்தா என்கிற மனோபாவம் என அதை விரிந்து காந்தி பொருள்தருவார்.( Whatever talents, physical strength, wealth or other capacities a person might possess, he should tkae them as having been given to him as a trustee, for the benefit of the world. loka sangraha- accommodation and adjustment of every one or the total well being of all.) இதை எவ்வாறு நிராகரிக்கமுடியும் என கேட்கிறார் வினோபாஜி.
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட  ஆயுதங்களைப்போலவே மெஷின்களும் மனிதனல்லவே. அவனை அடிமையாகக்கூட ஆக்கிவிடுகிறதே. எனவே தான்  decentralisation  என்கிறோம். அது தொழிலுக்கு மட்டுமல்ல. அரசு அதிகாரத்திற்கும் ஆனது. கம்யூனிஸ்ட்கள் அது உதிர்ந்து விழும் என ருஷ்யாவில் பேசினாலும் அரசு இருந்துகொண்டே பலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. டிராட்ஸ்கி தலையிலும் சம்மட்டி விழுந்ததே என்று குறிப்பிட்டார் வினோபா.
காந்தியம் மார்க்சியத்திற்கு மத்தியில் பொதுத்தன்மையே இல்லை என சொல்லமுடியாது. இல்லாதவர் குறித்த  கரிசனம், பெரும் திரள் மக்களிடமிருந்து  அவர்கள் நலன்களுக்காக எழுவது என்பதில் ஒற்றுமை நிலவுகிறது. ஆனால் அம்மாவின் அன்பால் மட்டுமே தீர்வு வந்துவிடுவதில்லை. தீர்வை கொணரத் திறனும் தேவை.  If the communist philosophy sets forth a permanent order of society, it is only an opiating drug   என்கிற கருத்தை வினோபாஜி வெளிப்படுத்தினார். 
காந்தி வன்முறையில்லாத கம்யூனிஸ்ட் என்றும் காந்தியம் வன்முறை நீங்கிய கம்யூனிசம் எனவும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் இவ்வரையறை துல்லியமானதல்ல என்று வாதாடுகிறார் மஷ்ருவாலா. இப்படிப்பட்ட எளிய சுருக்கங்கள் மேலெழுந்தவாரியானவை.. காந்தியத்தை மார்க்சிய வழியில் சொல்லவேண்டும் என்கிற விழைவால் வருவது.  முதலாளித்துவத்துடன் மார்க்சியம் முரண்பட்டாலும் மைய அதிகராம் என்பதில்  பொதுநிலையைக் காண்கிறது.  பணப்பொருளாதாரம் பற்றியே இரண்டும் பேசுகின்றன என மஷ்ரூவாலா விசனப்பட்டார்.
அடித்தட்டு மக்களின் ஒடுக்கப்பட்டோரின் ஆதரவற்றவர்களின் உயர்வு என்பதில் மார்க்சியம் காந்தியம் பொதுப்புள்ளிகளை எடுக்கின்றன. ஆனால் அதை எட்டுவதற்கான பயணங்களில் வெவ்வேறு திசைப்படுகின்றன.  மனிதர்கள் தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட கோட்பாடுகளில் நிறைவுறாது புதியன தேடுகிறார்கள். விளக்குகிறார்கள். தன் விளக்கப்படியான உலகை மாற்ற முயற்சிக்கிறார்கள். இதில்  சிலர் வழிகளைப் பற்றி கவலைப்படுப்வதில்லை-  ( hesitate not to use foul means.)
மார்க்ஸ் காந்தி இருவருமே  ஒரு மூல அடிப்படை கொண்டவர்கள் (monobasists) என  கிஷோரிலால் வரையறுக்கிறார். காந்திக்கு அடிப்படை பொருள் அல்ல வாழ்க்கை (basic is Life not matter--    accepts the doctrine of God or Life alone is  ). வாழ்வு என ஒன்றில்லாமல் பொருள் தன்னை சோதிட்டுக்கொள்ள முடியாது அனைத்து வாழ்வும் ஒன்றே என்கிற கருத்தை காந்தி வைத்திருந்தார். அனைத்தும் கடவுளின் படைப்பு என்றால் வெறுப்பு எப்படி இருக்கமுடியும். எவ்வாறு எனது இலக்கிற்காக எவரையும் தியாகம் செய்யமுடியும் என வினவினார்.
மார்க்சியத்தில் பொருள் தீர்மானகரவாதம். முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து பாட்டாளிகளின் ஆட்சியை ஸ்தாபிப்பது அங்கு இலட்சியம். பாட்டாளிகள் அதிகாரம்- கம்யூனிசம் என்றால் அங்கு வர்க்க மோதல்கள் இருக்காது- தனியார் சொத்துரிமை இராது- இலாபம் இராது என்பதும் பேசப்படுகிறது. அதன் பின்னர் வன்முறைக்கு வேலையிருக்காது என்கிறார்கள். இந்த லட்சிய முடிவை எட்டவேண்டும் என்பதில் அழுத்தம் தருவார்கள். வழிமுறைகள் பற்றி கவலைப்படுவதில்லை. இங்கு நியாய வழிகள் அநியாய வழிகள் என் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் அர்த்தமற்றவை. இந்த இலக்கிற்கு தடையாக எவர் வந்தாலும் அவர் துடைத்தெறியப்படுவார். இதற்கு புரட்சி நாடு தழுவிய அளவில் தேவைப்படும். நெறிகள் மதங்கள் எல்லாம் மக்களை குழப்புவன. அவை அபின் போன்றவை. சுரண்டுபவரின் சாதனங்கள் என்கிற கருத்தும் அங்கு நிலவுகிறது.
காந்தியோ தொழில் வளர்ச்சிக்கு எதிராக சர்க்கா எனப் பேசிக்கொண்டிருந்தார். உலகம் பின்னோக்கி நகராது. எனவே காந்திய பொருளாதாரவாதம் தோல்விக்குரியது என்கிற நிராகரிப்புவாதம் எழுந்தது.  According to Marxists, Gandhism is incompatible with communism. பொருளாதார காரணங்கள் மட்டுமல்ல, காந்தியம் மதம் கடவுள் என்கிறது. வன்முறையை நிபந்தனையாக்குகிறது என்பதாலும் காந்தியம் ஒத்துப்போகும் ஒன்றல்ல என மார்க்சியம் கருதுகிறது. அரசாங்கம் என இருந்தால் அது வன்முறையை இறுதியாக பயன்படுத்தியே தீரும். எனவே அதை எதிர்ப்பதற்கும் புதிய அரசு அதிகாரம் வருவதற்கும் வன்முறை தேவைப்படலாம். எனவே வன்முறை புரட்சி ஒன்றின் மூலம் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு என்கிறது மார்க்சியம்.
சிலர் சமூகத்திற்கு முக்கியத்துவம் தந்து தனிநபர்களை காவு கொடுப்பது பற்றி பேசுவார்கள்.  வேறு சிலர் தனிநபர்கள் இல்லாமல் சமூகம் இல்லை என்பார்கள். எனவே வாழ்க்கை குறித்து அனைவருக்கும் ஏற்புடைய ஒரே கண்ணோட்டம் இருப்பதில்லை. சிலர் தங்களது கருத்துதான் மிகச்சரியானது என்கிற வறட்டுபிடிவாதத்தில் நிற்பர். தங்களை ஏற்காதவர்கள் அறிவிலிகள், எதிரிகள் என்பர். எனவே அவர்களை அழித்து ஒழிக்க தங்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது என நியாயப்படுத்துவர்.
மானுட முன்னேற்றம் என்பது அறியாமையிலிருந்து விடுதலை என்பதாகவும், சார்ந்திருத்தல் என்பதிலிருந்து தன்னிறைவு என்பதாகவும், வறுமை அதிகாரமின்மை என்பதிலிருந்து வளம் அதிகாரம் என்பதாகவும் பார்க்கப்படுகிறது. உண்மையை அறியும் கடப்பாட்டில் அனைவரும் இருக்கின்றோம். நியாயமாக அன்பாக நடத்தப்படவேண்டும்  என விழைகிறோம். அச்சமின்றி இருக்க வேண்டும் என விழைகிறோம்.
சமூகமும் தனிநபரும் சேர்ந்தே வளரவேண்டியுள்ளது. அதற்கு பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் அவசியமாகிறது. சில நேரங்களில் தனிநபர்கள் சமூகத்திற்காக தியாகம் செய்கிறோம். சிலநேரம் சமூகம் தனிநபருக்காக தியாகம் செய்துகொள்ள வேண்டியும் இருக்கிறது. குடும்பத்தில் இதை நாம் பார்க்கிறோம். உணர்கிறோம்.. இப்படி கடமையை செய்கிறோம் என்கிற உணர்வுக்கூட இல்லாமல் அங்கு அது நடந்தேறுவதையும் பார்க்கிறோம். எங்காவது சுயநலம் தலைதூக்கும்போது அதை சுட்டிக்காட்டும் நிலை ஏற்படலாம். எல்லா நெருக்கடிகளிலும் முடியாதவர், பலவீனமானவர்கள்தான் முதலில் காப்பற்றப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள். 
காந்தியின் பாதை மத்திய காலத்திற்கு நம்மை இட்டு செல்லும் என்கிற விமர்சனம் சரியானதல்ல. கடந்தகாலம் பொற்காலம் என்கிற பொதுவான கூற்றும் சரியானதல்ல.. அவ்வப்போது மனிதன் ஏற்படுத்திக்கொண்டுவரும் முன்னேற்றங்களை நாம் விட்டுவிடவேண்டுமா.  அந்த அந்தக்காலத்தில் சாக்ரடிஸ், புத்தர், கன்பூசியஸ், யேசு என கிடைத்ததுபோல்தான் காந்தியும் என்கிறார் கிஷோரிலால்.
அரசியல் நிறுவனம் என்கிற வகையில் முடியாட்சி, ஜனநாயகம், ஒற்றையாட்சி, ஃபெடெரல் ஆட்சி என்று மனிதன் ஏராள சோதனைகளை செய்துள்ளான்.. மார்க்ஸ் இவற்றின் உருவாக்கத்தை பொருளாதார காரணிகளிலிருந்து பார்த்தார். இனி வருங்காலம் தொழிலாளர் கரங்களில் ஆட்சி என்கிற முடிவினை எட்டினார். அதற்கு முயற்சிக்க கோரினார். இந்த முடிவினை எட்ட அதற்கு முன்னரான சமூகத்தின் பல நூற்றாண்டு ஆன்மீக நெறி சார்ந்த அம்சங்களை கைவிடவேண்டும் எனும் போது மார்க்சியத்தால் முழுமையான உண்மை என்கிற நிலையை எட்ட முடியவில்லை.
காந்தியைவிட மேலான மனிதன் வரமுடியும். அற்கு ஆயிரக்கணக்கான தனிநபர்கள்  நெறி சார்ந்த போராட்டங்களை மேலும் மேலும் தூய்மைபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். பலகொடுங்கோலர்களைவிட மோசமான கொடுங்கோலன் என்ற பெயரை வரலாற்றில் ஹிட்லர் எடுத்தர். ஹிட்லரைவிட கொடுங்கோலன் வரவும் வாய்ப்பிருக்கிறது. அத்ற்கான சாகசங்களை  நடத்துவதன் மூலம் தான் அத்தகைய பிறப்பு  ஒன்றும் நடந்தேறலாம்.  The moral goal is as important as political and economic goal. இதை புறக்கணிக்கும்போது பொருளாதார நன்மைகள் கூட உருவாகாமல் போகலாம்.
 நெறியை விடுத்து பழமையை முறித்துக்கொள்வது  என்பதே வளர்ச்சியாகாது. மார்க்ஸ் பேசிய வர்க்கமற்ற சமூகம் உருவாக வர்க்கப்போராட்டம் என்பது moral and psychological மாற்றங்கள் என்பதில்லாமல் வெற்றிபெறாது என்கிற கருத்தை கிஷோரிலால் தெரிவிக்கிறார். ஜாரின் கொடுங்கோன்மையை வன்முறை மூலம் வீழ்த்திவிட்டு அதனிடத்தில் குறிப்பிட்டவகை சர்வாதிகாரத்தை நிறுவியுள்ளதால் அதே முறையில் அவ்வாட்சியும் துடைத்தெறியப்படலாம் (If the Tsar's rule had become tyrannical and absolute and could be put an end to only by violence, a particular dictatorship  on becoming unbearably so, would have to be liquidated by the same method) என்றார் கிஷோரிலால் மஷ்ரூவாலா.
காந்தியின் பார்வையில் மனிதகுல மகிழ்ச்சிக்குரிய அடிப்படையான தேவைகள் என்பன
) கடமையின்பாற்பட்டு மனிதர்கள் இயங்குவது- பேராசை, அதிகாரம், இலாப நோக்கத்திற்காக இல்லாமல் செயல்படுதல்
 ) தன்னிடம் கூடுதலாக இருக்கும் அதிகாரம், சொத்து, கல்விப்புலமை, உடல்வலிமை போன்ற எதையும் தான் சமூகத்திற்கான டிரஸ்டி என்பதை உணர்ந்து செயல்படுதல். இதனை மூலதனமாக வைத்து சுரண்டாமல் இருத்தல்
) தங்களின் திறமைகளுக்குரிய நேர்மையான கணக்குடையவர்களாக இருந்த்தல்- தனது ஆகச்சிறந்ததை கொடுப்பதற்கு ஈடாக  குறைந்தபட்சமும் நியாயம் அடிப்படையில் தேவைப்படுவதை நுகர்தல்.
 இந்த நிபந்தனைகளுடன் கூடிய மனித இயக்கம் மகிழ்ச்சியைத்தரும். காந்தி அடிப்படைகளை குறித்து கவனம் செலுத்தியவர். மனிதன் அன்பு என்பதைக் கொள்ளாது எப்போதும் வெறுப்பை உட்கொள்ளமுடியாதவன்.  மனிதன் தன் வாழ்நாள் முழுதும் பயமுறுத்தும் பெரும் பேய் ஆக இருக்கமுடியாது என்கிற நம்பிக்கை அவரிடம் செயல்பட்டது.
காந்தி வர்ணதர்மா என பேசும்போது உயர்வு தாழ்வு என்ற பொருளில் பேசவில்லை. அவரவர் வழிவழி வேலை என்பதில் மட்டமானது அருவருக்கத்தக்கது என்கிற பொருளில் அவர் பேசவில்லை. கடின உழைப்பு - உடல் உழைப்பு என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் இருந்தது என்கிற விளக்கத்தை நாம் பெறமுடியும். அதேபோல் தனியார் சொத்துரிமை என்பதை அவர் எந்தவித சார்புகொண்டும் ஆதரிக்கவில்லை. அதை ஒழிப்பதற்கு உண்மையான வன்முறையற்ற அகிம்சா வழிதனை அவர் கண்டறியவில்லை என்பதுதான் என்கிற புரிதல் தேவை என மஷ்ருவாலா காந்தியத்திலிருந்து சோசலிசத்திற்கு என்பதில்  எழுதினார்..
உடல் உழைப்பு, சிறிய தன்னிறைவு வகைப்பட்ட தொழில் முறைகள், மய்யம் குவிக்கப்படாத அரசியல் பொருளாதர ஏற்பாட்டுமுறைகள் ஆகியவற்றிற்கு காந்தி அழுத்தம் தந்தார்.  மேற்கு வகைப்பட்ட பெருந்தொழில் மீது அவருக்கு உடன்பாடில்லை. கிராமங்கள் தன்னிறைவு கொண்டவைகளாக மாறவேண்டும் எனக் கருதி செயல்பட்டார்.  இதன் பொருள் எளிய வாழ்க்கை முறையில் வன்முறை அறவே இராது என்பதல்ல. அங்கு அது குறைவாக இருக்கும். எளிதில் கண்டுகொள்ளத்தக்கதாக- விரைவில் தடுக்கத்தக்கதாக இருக்கும் என்கிறார்.
அரசின் ரெஜிமெண்டேஷன் குறைவாகவும் தனிநபரின் சுதந்திரம் அதிகமாகவும் இருக்கவேண்டிய சமூகம் குறித்து காந்தி பேசினார். நகரங்களின் கோமான்கள் வாழ்க்கைக்கும் உழைப்போர் வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டைவிட நிலச்சுவான்தாரின் விவசாயத்தொழிலாளியின் வேறுபாடுகள் கிராமங்களில் குறைவாகவே இருக்கும் . கருத்துவேறுபாடுகள் மோதல்களை உருவாக்கும் என்கிற நிலையில் உண்மையான வன்முறையற்ற வழிகளில் தீர்வு என்பது மிக அவசியமாகிறது. நல்லமுடிவுகளை எட்ட தூயவழிகள் என்பது சமதையான சமூக உருவாக்கத்திற்கு அவசியமானது. அங்கு எந்த ஏமாற்று வழிகள் மூலம் அடைதல் என்பது இருக்காது. தான் சரி என நம்பிவிட்டதால் அப்படி நடந்து கொண்டோம் என்கிற சமாதானம் தேவைப்படாது. உன்னத சமூகம் அமைப்பதற்கு குறுக்கு வழிகள் சுலபப்பாதைகள் என்பது இல்லை.
காந்தியத்திற்கும் கம்யூனிசத்திற்கும் வேறுபாடுகளைவிட காந்தியத்திற்கும் முதலாளித்துவ சுரண்டல், சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் அதிகம் என்றார் மஷ்ருலா. அப்படி உயர்தட்டில் பொருளாதார சாதிரீதியாக இருப்பதாக நினைப்பவர்கள் டிரஸ்டியாக சமூகத்தில் மாறி  தங்கள் சமூக பொறுப்புகளை உணர்ந்து நடக்கவில்லையெனில் வேறு விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டும். வன்முறையற்ற வாழ்க்கை முறை குறித்து பேசிய காந்தி இல்லாத நிலையில் வன்முறையுடன் கூடிய கம்யூனிசம் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே என மஷ்ருலா கருதினார்.
 காந்தியியம் என நாம் பேசுவது ரேங்க், தீண்டாமை, சாதியற்ற இந்தியா என்பதைத்தான். வட்டாரவாதம், வகுப்புவாதமற்ற இந்தியாவைத்தான். சுயநலமற்ற, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இந்தியாவைத்தான். கடமையை உணர்ந்த ஜனநாயகத்தைதான்.  எனது கருத்துக்கள் என்பவை எப்போதும் இறுதியானவை அல்ல என காந்தியே பலமுறை தெரிவித்துள்ளார். ”என் வாழ்நாளில் மாற்றிக்கொள்ளக்கூடியனவாகவே எனது கருத்துக்கள் இருந்துள்ளன. ஆனால் குன்றுகளைப்போல உண்மையும் அகிம்சையும் பழமையானவை. இவற்றுடன் சோதனை மேற்கொண்டதே நான் செய்தவை எல்லாம்” என்றே அவர் பேசினார்.
 அகிம்சை என்பது நான் மெதுவாக கற்றுத்தேர்ந்தது. காந்தியியம் என்பதில் எந்த இசமும் இல்லை என்பதுதான் உண்மை என சொல்லவிரும்புகிறேன் என்றார் காந்தி. உள்ளுணர்வு உந்துதலால் உண்மையின் பக்கமே நின்றிருக்கிறேன் என்றார் அவர். பிரச்சனைகளை உண்மையுடன், சேவை மனப்பான்மையுடன், அகிம்சை வழியில் அணுகவேண்டும் என்பதே காந்தி தரும் வெளிச்சம் என்கிறார் மஷ்ருவாலா.  உண்மை என்பதற்கான விளக்கத்தையும் அவர் தருகிறார். உண்மை என்பது திற்ந்த மனதுடன் இருப்பது, அஞ்சாமல் தவறு என்றால் ஏற்பது, முரட்டு வன்முறைத்தன்மைக்குப் பதில்  ஆத்ம சக்தியை அனுசரிப்பது என்றார் (Truth means that you will be always open minded and never afraid of retracing from or confessing an error, and will be prepared to risk your all for the cause, which for the time being you clearly conceive to be true-Soul force than brute force).
காந்தி. அவருக்கு ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தாதவை குறித்தோ, தானே முன்நின்று நடத்தவேண்டும் என நினைக்காத ஒன்றுக்காக போராடுவதில்லை. சவுண்ட் கிளப்பும் போராட்டங்களில், மீடியா வெளிச்ச போராட்டங்களில் அவர் நம்பிக்கை அற்று இருந்தார். (He does not believe in sound box agitations or soap bubble demonstrations made more for the sake of newspaper reports than for coming to grips with the problem in hand.)
ஆகாகான் மாளிகையில் அவர் தங்கியிருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் புத்தகங்களை காந்தி படித்ததாக மஷ்ருவாலா தெரிவிக்கிறார். மார்க்சின் தாஸ் காபிடலுடன் எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் நூல்களையும் படித்தார். சீனக் கம்யூனிஸ்ட்கள் குறித்தும் படித்தறிந்தார். துன்பப்படும் மனிதர்களின் துயர் நீக்குதல் கம்யூனிசம் என புரிதல் அவரிடம் இருந்தது. அவரது ஆசிரமத்தில்  To each according to his need, from each according to his capacity  என்பது வழிகாட்டும் வாசகமாக இருந்தது.
 காந்தி தனது சட்டபூர்வ தர்மகர்த்தாமுறை (statutory trusteeship)  குறித்து விளக்கம் அளித்தார். முதலாளிகளுக்கு இது நல்வாய்ப்பு என்றார். தர்மகர்த்தா முறையில்  பொறுப்பை சொந்தப்படுத்திக்கொள்தல் கீழிலிருந்து துவங்கவேண்டும் என்றார். பஞ்சாயத்துக்களில் துவங்கட்டும் என்றார். இன்று கம்யூனிஸ்ட்கள் சமத்துவம் என்பது குறித்த பிரச்சாரங்களில் மட்டும் இருக்கிறார்கள் என்றார். ஆனால் அதில் வெறுப்பும் சேர்ந்தே விதைக்கப்படுகிறது என்கிற தனது கவலையை அவர் பகிர்ந்துகொண்டார்.  எனது திட்டத்தில் அரசாங்கம் மக்களின் விருப்ப உறுதிகளை நிறைவேற்றுவதாக இருக்குமே தவிர தன் அதிகாரத்தை பிரயோகிக்கும் ஒன்றாக இருக்காது. வன்முறையற்ற வழியில் சமத்துவம் என்பதை கொணரவேண்டும். அதற்கு மக்களை ஏற்க செய்திட வேண்டும்.   I claim to be a foremost communist எனக்கூட அவர் சொல்லிக்கொண்டார்.
 சத்தியாக்கிரக வெற்றிக்கான நிபந்தனைகளாக அவர் மூன்றை குறிப்பிட்டார். எதிரி குறித்த வெறுப்புணர்வு இல்லாமை, பிரச்சனையின்  நியாயத்திற்காக இறுதிவரை துயர்களை ஏற்கும் சித்தம்  மற்றும் உறுதி என அவர் குறிப்பிட்டார். லூயி பிஷருடன்  அவர் நடத்திய உரையாடலின் போது  சோசலிஸ்ட் நண்பர்களின் தன்னல மறுப்பு, தியாகம் ஆகியவற்றை தான் போற்றுவதாகவும் அவர்களுடன்  வன்முறை -அகிம்சை என்பதில் தான் வேறுபடுவதாகவும் காந்தி தெரிவித்தார். பல சோசலிஸ்ட்கள் பிறப்பதற்கு முன்னரே நான் சோசலிஸ்ட் ஆனவன். ஜோகன்ஸ்பர்க்கிலேயே அதற்கான உறுதிப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது.  My socialism means even unto this last.   I want freedom of full expression of my personality.   சோசலிசத்தில் தனிநபருக்கு சுதந்திரம் இல்லையெனில், எதை அடையமுடியும். எனது சோசலிசம் ருஷ்ய வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. அரசாங்கமே எல்லாம் என்பதாக இல்லாதது. மார்க்சியத்தை கம்யூனிஸ்ட்கள் பழுதாக்கிவிட்டனர். லெனின் துவங்கிவைத்தார். ஸ்டாலின் முடித்துவைக்கிறார் என்கிற விமர்சனப் பார்வை காந்தியிடம் இருந்தது.
ஆதாரம்: Gandhi and Marx   sep 1951  K G Mashruwala




No comments:

Post a Comment