https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, October 14, 2018

எம் என் ராயின் காந்தி


                          எம் என் ராயின் காந்தி
       -ஆர்.பட்டாபிராமன்

எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு பெற்றவர். கம்யூனிசம், தேசவிடுதலை இயக்கம், மானுட இயம் என பயணித்தவர். லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட சோவியத் தலைவர்கள் ஜெர்மன் மற்றும் சீனத்தலைவர்களுடன் உயர் மட்டத்தில் பணியாற்றியவர். திறந்த மனதுடன் புதியன கண்டு அஞ்சாமல் பரிசீலித்து கருத்தை மாற்றிக்கொள்ள தயங்காதவர். தீரா தாகம் கொண்ட வாழ்க்கைப்பாதைக்கு சொந்தக்காரர்.
ராய் தனது 14 வயதிலேயே வங்க புரட்சிகர தொடர்புகள் கிடைக்கப்பெற்றவர். ஆயுதம் வாங்க எனக்கிளம்பி பர்மா, இந்தோனேஷியா, சீனா, ஜப்பான் நாடுகளில் பயணித்து அமெரிக்கா சென்றடைந்தார் . அங்கிருந்து மெக்சிகோ சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக வாய்ப்பு பெற்றார். சோவியத் தொடர்புகளால் மாஸ்கோ சென்றார்.
 சோவியத், ஜெர்மன், சீன கம்யூனிஸ்ட் இயக்கங்களுடனும், இரண்டாவது அகிலத்திலும் பெற்ற பயிற்சிகள் மூலம் உச்சம் சென்று பின்னர் வீழ்ச்சி அடைந்தவர் ராய்.  தாய்நாட்டிற்கு 16 ஆண்டுகள் கழிந்து 1930ல்  திரும்ப நேரும் சூழல் அவருக்கு அமைந்தது. மார்க்சிய கருத்தாயுதத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் பங்கேற்கும் எண்ணத்துடன் ராய் செயல்படத்துவங்கினார். சுபாஷ், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கட்சி, ராயிஸ்ட்கள் என நான்கு இடது பிரிவுகளின் ஏற்ற இறக்க உறவுகளுடன் காங்கிரஸ் தலைமையுடன் விமர்சனபூர்வ உறவைக் கொண்டிருந்தார் ராய்.

  சிறை அனுபவங்களுக்கு பின்னர் 1940ல் ராடிகல் டெமாக்ரடிக் கட்சி துவங்கினார்.  காங்கிரசுடன் மட்டுமல்லாது கம்யூனிசத்துடனும் அவர் விமர்சனபூர்வ உறவுகளை மேற்கொள்ளத்துவங்கினார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சோவியத்திற்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுத்தாலும் ராய்க்கு  மரியாதை நாட்டிலும் சோவியத்திலும் கிடைக்கவில்லை. 1948ல் ராடிகல் கட்சிக்கும் மேலாக  Renaissance- New Humanism  என செல்லத்துவங்கினார். ஜனநாயகமா- டோடலிட்டேரியனிசமா என்கிற விவாதத்தை ஆரம்பத்திலேயே துவக்கியவராக ராய் இருந்தார். முதலாளித்துவமா சோசலிசமா என்கிற கேள்விக்கான பதிலையும் அவர் அதில் பார்த்தார். ஸ்டாலினுக்கு மிகத் துணிச்சலாக அவர் எழுதிய கடித வாசகம் ஒன்றை தனது நினைவலைகளில் குறிப்பிடுகிறார். “ I cannot reconcile myself to the idea that decency, loyalty and honesty should have no place in the catalogue of Bolshevik virtues". போல்ஷ்விக்குகளின் நன்னடத்தை குறித்த விமர்சனமாக அவ்வாக்கியம் இங்கு அமைந்தது.
காரணகாரிய அறிவிற்கு ராய் முன்னுரிமை கொடுத்தார். 1937 பைஸ்பூர் காங்கிரஸ் அமர்வின்போது காந்தி தனது மாலைநேர பிரார்த்தனை நிகழ்விற்கு ராயை அழைத்தார். ராய் செல்லவில்லை. மானுட முன்னேற்றத்தில் காந்தியடிகள் ஓரடி முன்வைத்து ஈரடி பின் இழுத்துவிடுகிறார் என ராய் கருதினார். நேருவை மட்டுமே மேற்குலக பாணி மனிதனாக காங்கிரசில் பார்க்கமுடிகிறது என்றார் ராய். இந்துவைதீக முறையிலான தேசிய முன்வைப்பு முஸ்லீம் வகுப்புவாத வளர்ச்சிக்கும் உதவியது. ஆகையால் மகாத்மா காந்தி விழைந்த இந்து முஸ்லீம் ஒற்றுமை உருவாகவில்லை என்கிற விமர்சனம் ராயிடம் இருந்தது. அதேநேரத்தில் காந்தி தோற்ற இடத்தில் மற்றவர் வெல்லவும் முடியாது என்பதையும் அவர் புரிந்திருந்தார். காந்தியின் காஸ்மோபாலிடன் மனிதநேயப் பார்வையின் அவசியத்தை அவர் அனைவரும் உணரவேண்டும் என வேண்டினார்.
காலகாலமாக நிலவும் சில மதிப்பீடுகளை நிலமான்ய-முதலாளித்துவ வகைப்பட்டவை என ஒதுக்கிவிட்டால் எதிக்ஸ் என்பதே  இருக்காது. எந்த வர்க்கமும் வர்க்கப்போராட்டத்தால் முற்றிலுமாக அழிக்கப்படுவதில்லை என்கிற உண்மையையும் நாம் அறிய வேண்டும். சமூக நலன்கள் என்பவை வர்க்கங்கள் சேர்ந்து வாழவேண்டிய நிர்பந்தத்தத்தையும் தருகின்றன என்பதையும் உணரவேண்டும்.
பொருளாதார அடிப்படையில் கூட உபரிமதிப்பு என்பதை ஒழிப்பது நடைமுறையில் சாத்தியமல்ல. தங்கள் நுகர்வைவிட மிஞ்சக்கூடிய உற்பத்தி என்பதை சமூகம் செய்துகொண்டே இருக்கவேண்டியுள்ளது. அதே நேரத்தில் ஒரு வர்க்கம் உபரியை உறிஞ்சுவது என்பது ஏற்புடையதல்ல. இதில் பொருளாதார அம்சம் மட்டுமல்லாமல் நெறிசார்ந்த அம்சங்களும் உள்ளன என்றார் ராய்.
வரலாறை படைக்கும் மனிதர்கள் என நாம் பேசுகிறோம். முன்னதாக ஒவ்வொருவரும் தனி மனிதர்களாக இருக்கின்றோம். சமூகம் எனும் தொகுப்பில் உறுப்பு தனிமனிதர் என்கிறோம். தனிமனிதர்களின் தொகுப்பாகவே சமூகம் இருக்கிறது. அவனின் பெருமிதம், படைப்பாற்றல் ஆகியவை குறித்த விழிப்படைந்த மனிதனாக அவன் இருக்கவேண்டியுள்ளது. எனவே சமூகம் என்பது வழிதான். தனிமனிதன்தான் அதன் முடிவு எல்லை என்கிற பார்வையை எம் என் ராய் தந்தார். தனிமனித சுதந்திர மறுப்பு என்பதன் மூலம் விடுதலைக்கான பாதை அமையாது .
 Therefore, “the purpose of all rational human endeavour, collective as well as individual, should be the attainment of freedom in ever larger measure, and freedom if real only as individual freedom”
இருக்கின்ற வலிமையானது எதுவோ அது சரியானது என ஹெகல் தொடங்கினால் மார்க்ஸ் வருகின்ற வலிமையானது சரி என முடிக்கிறார். (Hegelian doctrine held that ‘that present might is right’. Marx projecting the Hegelian doctrine into future declared that ‘coming might to be also right’).  அவர் ஹெகலை நேராக நிமிர்த்தியிருக்கலாம் ஆனால் தன் மூளையை அதில் வைத்து அதை மார்க்ஸ் செய்துள்ளார் என்பது ராய் தரும் விளக்கம்.
ராய் தன்னை மார்க்சின் ஸ்பிரிட்சுவல் வாரிசு என அழைத்துக்கொண்டார். மார்க்ஸ் மகத்தான மனிதாபிமானி. மனிதன் தன்னை புரட்சியின் மூலம் விடுவித்துக்கொள்ளமுடியும் என்பதுகூட வலிமையான நெறி அறைகூவல்தான். அதை மார்க்ஸ் ரொமாண்டிஸ்ட் ஆக செய்தார் என்றார் ராய். மனிதனின் மீளாக்க படைப்புத்திறன் மீது மார்க்சின் நம்பிக்கை கோடிக்கணக்கானவரை கிளர்ந்தெழ செய்துள்ளது என்பதை அவர் புறக்கணிக்கவில்லை.
காந்தி குறித்தும் அவருக்கு விமர்சனவகைப்பட்ட பார்வையே இருந்தது. தேசம் காந்தி இரண்டும் ஒரே அர்த்தம் தரும் இணைச்சொற்களாக மாறிவிட்டன, தேசம் தேசபக்தி எனப்பேசுபவர்கள் காந்தியர்கள் என கருதப்படுகின்றனர் என்றும் தேசபக்தி குறுக்கப்பட்டுவிட்டதாகவும் ராய் கருதினார். காந்தி குறித்த உரை ஒன்றை அவர் ஏப்ரல் 21, 1940ல் பரிசால் எனும் பகுதியில் வழங்கினார். தேசியவாதிகளிலேயே உயர் ஆத்மாவாக காந்தி இருக்கலாம். ஆனால் காந்திய கோட்பாடுகளை ஏற்பவர் மட்டுமே விடுதலை போராட்டத்தில் தகுதியான பங்களிப்பை தருகிறார் என உரிமைகோருவது  விவாதத்திற்குரிய அம்சம் என்றார் ராய்.
மாஸ்கோவில் இருந்தபோது ராய் தனது ’மாறும் கட்டத்தில் இந்தியா’ என்கிற அவரது புகழ்வாய்ந்த ஆக்கத்தில் காந்தி குறித்த மதிப்பீடுகளை வைக்கிறார். அது நடைமுறை அரசியலுக்குரிய ஒன்று என்பதால் அரசியலில் நெறி என்பதில் நடைமுறை சார்ந்த மதிப்பீடுகளையும் வைக்கவேண்டியுள்ளது. தீர்க்கதரிசிகளின் வெளிப்பாடு போன்ற ஒன்றல்ல காந்தியம். அது நடைமுறை செயல் தத்துவம். அவர் கருதுகோள்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. காரியங்களில் செயல்முறைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். எனவே காந்தியம் என்பது உடோபியனிசமல்ல. அதே நேரத்தில் காந்தியத்தால் அரசியலில் நெறி என்பதில் வெற்றி பெறமுடியவில்லை. நவீன கலாச்சாரத்தின் நெருக்கடிகளுக்கு அதனால் தீர்வை தரமுடியாமல் போனது. இன்றுள்ள சூழலில் காந்தியத்தை அமுல்படுத்துவது இயலாதாகியுள்ளது என்கிற முடிவிற்கு ராய் வந்தார்.
மேற்கு மற்றும் முதலாளித்துவ சமூகம் குறித்த காந்தியின் விமர்சனங்களை ராய் ஏற்றாலும் அவர் முன்வைக்கும் மாற்றுகள் சாதிய்மானவையல்ல என்றார். அவர் பேசிவரும் ’அன்பின் வழியது உய்வு’  என்றால் சுயராஜ்யம் சொர்க்கத்திலிருந்து வந்தால்தான்  உண்டு என ராய் கேலிபட பேசினார். ராய்க்கு காந்தியுடன் தொழிற்துறை சமூகம் பற்றிய கருத்துவேறுபாடு இருந்தது. உயர் கல்வி என்பது நவீன தொழில்நுட்பத்திற்கு அவசியமானது. நவீன தொழில்நுட்பம் இல்லையேல் சுதந்திரம்-சமத்துவம்- ஜனநாயகத்தை உறுதி செய்வது இயலாத ஒன்று என ராய் கருதினார். தொழிற்துறை இல்லாத சமூகத்தில் உயர்கல்விக்கு பெரும் செலவு பிடிக்கும் என்றார்.
நமது பெண்களுக்கும் அய்ரோப்பிய அமெரிக்க பெண்கள் போல் சுதந்திரம் தேவை. அதன் பொருள் இந்தியப்பெண்மை என்பதை கைவிடுவதாக பொருள் கொள்ளவேண்டாம். ராய்க்கு வைதீக தேசியம் (orthodox nationalism)  மீது விமர்சனம் இருந்தது. முதலாளித்துவம் தேவைப்பட்டாலும் அங்கு பொருள்வகைப்பட்டு நிலவும் பேராசை நமக்கு தேவையில்லை. மேற்குலக வளர்ச்சியை உள்வாங்கும்போது  காந்திய எளிமையை எடுத்துக்கொள்ளும் இசைவை ராய் நல்குவதாக நாம் புரிந்துகொள்ளலாம். மேற்கை நிராகரிக்காமல் இந்தியவகைப்பட்டு தூய்மைப்படுத்திக்கொள்ளமுடியும் என்கிற  synthesis  பார்வையை ராய் முன்வைக்கிறார். நமது சமூகத்தின் மூடநம்பிக்கைகள் சார்ந்த மதப்பார்வையை விட்டொழித்து காரணகாரிய அறிவு முறையை கைக்கொள்ளவேண்டினார் ராய்
காந்தியின் ‘return to village’ என்பதையும் ராய் அம்பேத்கார் போலவே நிராகரித்தார். பாரம்பரிய சமூக அலகுகளை- பழக்க வழக்கங்களை அப்படியே நீடிக்கவைத்துக்கொண்டு புதிய சமூக நிர்மாணம் செய்வது இயலாது- வளர்ச்சியும் உருவாகாது என ராய் கருதினார். அதே போல் காந்தியின் பட்டினிப்போராட்டங்களை ஒருவகை கட்டாயப்படுத்தல் (a form of moral coercion) என்றே ராய் கருதினார். பகுத்தறிவு சார்ந்த விவாத முறையில் பிறரை ஏற்க செய்யாமல் பட்டினிகிடந்து நிர்பந்தம் உருவாக்குவது- கட்டாயப்படுத்துவது ஏற்பிற்குரியதல்ல என்கிற விமர்சனம் ராயிடம் இருந்தது. காந்தியின் அரசியல் பகுத்தறிவு அரசியல் அல்ல- நெறிசார்ந்த அரசியல் என்றார் ராய். காந்தியம் என்பது ஒருவகை நோய்த்தன்மையை கொடுத்துவிடும் என்கிற கடும் விமர்சனமும் அவரிடம் இருந்தது.  மாற்றாக Radicalist ideas are healthy   என ராய் கருதினார்.
ஒரு கட்டத்தில் காந்தியும் ராயை  முதல் எதிரி என்றார். பிலிப் ஸ்பிராட் போன்றவர்கள் காந்தியம் ஒருவகை பாசிசம் என வகைப்படுத்தி பேசிவந்தனர். காந்தியின் மறைவிற்குப் பின்னர் ராயின் பார்வையில் சற்று நிதானம் ஏற்பட்டது. தனது தீவிர மனிதாபிமானம் என்பதில் அவர் காந்தியின் மதம் குறித்த பார்வையை நிராகரித்தாலும் பொருளாதார மய்யம் நீக்குதல், நெறிசார்ந்த வழிமுறைகள் , கட்சி அரசியல் என்பதைவிட மக்கள் ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்களில் காந்தியை நெருங்கினார். அவரின் மறுமலர்ச்சி தேசியம் என்பதை அவர் விமர்சித்து வந்தார்.
காந்தி தியாக மரணமுற்றார் என்கிற செய்தி ராயிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரை விமர்சித்துவந்த ராய் 1948 பிப்ரவரி, ஏப்ரலில் காந்தி மீதான தமது மரியாதையை உணர்த்தும் வண்ணம் இரு கட்டுரைகளை எழுதினார். காந்தியின் செய்தி சர்வாம்சத்தன்மை கொண்டு மனிதாபிமான அடையாளமாகவும் நெறிசார்ந்த ஒன்றாகவும் இருக்கிறது என்றார் ராய்.
மார்க்சை பொறுத்தவரை மானுடத்தின்வேர் மனிதன்தான். காந்திக்கு மனிதன் ஆன்மசக்தி. இருவரின் அணுகுமுறை வேறானது. ராய் மனிதன்தான் அனைத்தின் அளவையும் என்பதை ஏற்றிருந்தார். காந்தியும் ராயும் தனிமனிதனுக்கு மிக முக்கியத்துவத்தை கொடுத்தனர். மார்க்சியத்தில் பொருளாதார சமத்துவ வலியுறுத்தல் இருந்தால் ராயிடமும் காந்தியிடமும் நெறிசார்ந்த வலியுறுத்தல்கள் இருந்தன. நெறியான மனிதர்கள் அமையும்போது சரியான சமூகத்தை கட்டி அமைக்கப்படமுடியும் என காந்தி கருதினார். ராயும் மாரல் சமூகத்திற்கு மாரல் மனிதன் என்றார்.  ஆயுதங்களற்ற ஆன்ம சக்தியில் நியாயம் பெற இயலும் என காந்தி வலியுறுத்தினார்.
மாஸ்கோவில் 1921ல் ராய் எழுதிய India in Transition  ஆக்கத்தில் காந்தி குறித்த விமர்சனங்களே இருந்தன. இரண்டாவது அகிலத்தில் லெனின் ராய்- பிற நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் விவாதங்களின் அடிப்படையில் அவ்வாக்கம் எழுதப்பட்டிருந்தது. பூர்ஷ்வா இயக்கங்களுக்கு ஆதரவு என லெனின் சொல்வதை கைவிட்டு காலனிய பாட்டாளி இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் இயக்கங்கள்  ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என ராய் கருதினார். மக்களை பெருமளவு திரட்டும் சக்திவாய்ந்த காந்தி- காங்கிரஸ் தலைமை புரட்சிகர சக்தியாகதானே இருக்கமுடியும்- அதற்கு ஆதரவு தருவது சரியான அணுகுமுறையாக இருக்கும் என லெனின் கருதினார். காங்கிரஸ் தலைமை புரட்சிக்கு துரோகம் செய்துவிடும் என்றார் ராய்.
காந்தியின் பங்குபாத்திரம் குறித்து லெனினுக்கும் எனக்கும் வேறுபாடு இருந்தது என ராய் தெரிவித்தார். மக்களின் மத்தியகால மனநிலக்கு காந்தியின் சமய சிந்தனைகள் தீனிபோடுவதாக லெனினிடம்  ராய் குற்றம் சாட்டினார். ‘I reminded Lenin of the dictum that I had learnt from him: that without a revolutionary ideology, there could be no revolution.’ These arguments formed the basis of the position on Gandhi – அதாவது புரட்சிகர கொள்கை இல்லாமல் புரட்சி சாத்தியப்படாது என்பது ராயின் பதிவாக இருந்தது
ராயின் மார்க்சியம் சார்ந்த சர்வதேசிய பார்வை தேசியம் என்பதை ஏற்க அவருக்கு தடையாக இருந்தது. இதனால் தேசிய விடுதலை இயக்கத்தை சந்தேகக் கண்கொண்டே அவரால் பார்க்க முடிந்தது. அதனால்  எதார்த்த நிலைகளின்படியிலான காந்திய மதிப்பீடுகளை அவரால் செய்ய இயலவில்லை.
இத்தருணங்களில் ராயின் துணைவியாரான எவ்லின் அவர்களும் காந்தியை கடுமையாக விமர்சித்தே கட்டுரைகள் எழுதிவந்தார். புத்தி சாதுர்யமான பொருளாதார திட்டம் ஏதுமில்லாதவர் காந்தி என்பது அவர்களின் தலையாய விமர்சனமாக இருந்தது. வர்க்க மோதலை புரிந்துகொள்ளாமல் வறட்டுபிடிவாத சமூக ஒற்றுமை என காந்தி பேசி வருவதாகவும் ராய் விமர்சித்தார். The revolt against the Raj  is a question of economics, not metaphysics.’ என்றனர் ராய் தம்பதியர். காந்தி எந்திரங்களின் காலத்தை கற்காலத்திற்கு திருப்ப நினைக்கிறார் என வறட்டுத்தனமாகவும் ராய் பேசிவந்தார்.
காந்தி மேற்கின் நாகரீகம் பற்றி விமர்சிக்கிறார். எளிய வாழ்க்கை என்கிறார் என்பது உண்மைதான்.  காந்தியின் முதலாளித்துவ சமூகம் பற்றிய விமர்சனம் என்பது புரட்சிகர கண்ணோட்டமற்றது. சொத்துரிமையை காப்பதாக இருக்கிறது. Gandhi embodies both Revoultion and Reaction, he must perish in the fierce clash   என எழுதினார் ராய்.
நீர்த்துப்போகும் பலவீனமான மாற்றங்கள் மட்டுமே காந்தியிடம் இருக்கிறது என்ற ராயிடம் அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டுகளில் சில மாற்றங்கள் வரத்துவங்கின. சிறையில் மற்ற தலைவர்களைப் போலவே ராய் ஏராளமாய் படித்தார். நெறிசார்ந்த வாழ்வு- அரசியல் என்பதை தீவிரமாக கருதத்துவங்கினார். மார்க்சியத்திடமிருந்து அவர் விலகத்துவங்குகிறார் என்கிற எண்ணம் பரவியது. அரசியல் சுதந்திரம், சமூக மகிழ்ச்சி, பொருளாதார சுபிட்சம் என்பதற்கெல்லாம் அப்பாலானது ஆன்ம விடுதலைக்கான இலக்கு என ராய் பேசத்துவங்கினார். அவர் ஆன்மீகவாதிகளின் மொழியில் பேசவில்லை என்றாலும்  அவர் பேசத்துவங்கிய spiritual freedom  என்பது மார்க்சியர்களின் சொல்லாடல்களில் ஒன்றல்ல.
அவரின் சிறைக்குறிப்புகளின்படி பார்த்தால் அவர் காந்தி நோக்கி நகர்ந்துவிட்டார் என சொல்வதற்கு இல்லை. அரவிந்தர், விவேகானந்தர் பதங்களை ராய் பயன்படுத்துகிறார். Indian Renaissance  என்பதை விளக்க ஆரம்பிக்கிறார். சுயமுரண்பாடுகளின் மூட்டை காந்தியம் என்கிற விமர்சனத்தை அவர் கைவிடவில்லை. மக்களை அது அன்பு அகிம்சை என்கிற பெயரில் செயலிழக்க பலமிழக்க செய்துவிடும் என்றே எழுதிவந்தார். அவரின் சிந்தனைகள் செயல்பாடுகள்  ‘the ideological reflex’ of India’s ‘cultural backwardness’ and ‘superstition’ க்குத்தான் உதவிகரமாக இருக்கும் என்றார்
உண்மையான வளர்ச்சிக்கு காந்தி தடையாக இருப்பதாகவே ராய் கருதினார். ஆனால் 1940களின் இறுதியில் காந்திய சீடர்களைவிட காந்தியின் சரி தவறை தானே மேலாக புரிந்துகொண்டுள்ளதாகவும் எழுதினார். காந்தியை அரசியல் விழிப்புணர்வாளர்- வெகுஜனங்களைத் தட்டி எழுப்பியவர் என்று புகழ்ந்தார். இந்திய மக்களின் உருவம் என உயர்வுபடுத்தினார்.
ராய்க்கு நெருக்கமாக இருந்த பிலிப் ஸ்ப்ராட்  ராயின் எழுத்துக்களின் தொகுப்பு ஒன்றிற்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில் காந்தி குறித்த ராயின் மதிப்பிடுகள் குறித்து தெளிவுபடுத்துகிறார்.  காந்தி குறித்த ராயின் விமர்சனம் அந்நியர் நாட்டவர் ஒருவர் செய்வது போலவே அமைந்தது. மக்களுக்கு  புரியும் வகையில் அவரால் வைக்க இயலவில்லை. அவர் காந்தியைப் போலவோ அவரது சீடர்கள் போலவோ யோசித்து அதன் பலாபலன்களை அறியாதவராக இருந்தார் என்பது பிலிப் தரும் செய்தி.. விடுதலைகாலத்தில் நடந்த வகுப்புக்கலவரங்களின் நேரத்தில் காந்தியின் செயல்பாடுகள் ராயை மாற்றியதாக ஸ்ப்ராட் சொல்கிறார்
  எம் என் ராய் காந்தியின் அரசியல் நிலைப்பாடுகளை அவரின் தத்துவப்பார்வையை விமர்சித்தவர்தான். ஆனால் அவரின்  greatness  மீது அளப்பரிய மரியாதை கொண்டவர்.  எம் என் ராயின் பார்வையில்  விமர்சனம் என்பது உரிய பாராட்டை ஒதுக்கிய ஒன்றல்ல (criticism does not exclude appreciation).  கண்மூடித்தனமான பக்தியோ கீழ்ப்படிதலோ  தமக்கு இல்லை என்றும். அவரை மனோ உந்துதல்படி பார்க்காமல் விமர்சன ஒளியில் தான் பார்ப்பதாகவும் ராய் தெரிவித்தார். விமர்சித்தாலே எதிரியாக புரிந்துகொள்ளப்படுகிறோம்.  critical appreciation   என்பதன் மதிப்பு சமூகத்திற்கு தெரியாமல் இருக்கிறது என்றார் ராய்.
கோட்பாடுகளை ஆய்விற்கு உட்படுத்தும்போது நாம் நிராகரிக்க வேண்டியதாக இருந்தாலும் சில அம்சங்கள் நமக்கு நிறைவு தரக்கூடியதாக உயர் மதிப்பீட்டிற்குரியதாக காணப்படலாம். அதை நேர்மறையாக மதிப்பிட்டு நாம் பாராட்டவேண்டும். காந்தியின் மீது வழிபாடு செய்பவர்களைவிட விமர்சனரீதியாக பார்க்கும் தனக்கு அவர் குறித்த மேலான புரிதலும் உயர் மதிப்பீடுகளும் இருப்பதாக ராய் எழுதினார்.
காந்தி வரலாற்றில் தீர்க்கதரிசியாக இடம் பெறமாட்டார். ஆனால் மக்களை அரசியல்ரீதியாக பெரும் விழிப்பிற்கு உள்ளாக்கியவர் எனப் பெயர் பெறுவார். நமது விடுதலைப் போராட்டம் காந்தி நுழைந்த 1920க்கு பின்னர்தான் உருவானது என்பதை ராய் ஏற்கவில்லை.. இந்திய மக்களின் உருவாக்கம்தான் மகாத்மா காந்தி என்றே அவர் மதிப்பிட்டார். அது வரலாற்றுத் தருணம். மக்களின் மொழியில்  காந்தி பேசினார்.  மக்களும் அவரை கொண்டாடி பின் சென்றனர். ஆனால் மக்களின் புரிதல் உணர்வு கீழான நிலையில்தான் இருந்தது. ஒருவர் உயர அவர்களையும் உயர்த்த அவர்கள் அளவு இறங்கி வரவேண்டியிருந்தது. இப்படி தன்னை இறக்கிக்கொள்வதே மகத்தானது.  The greater homage would be to regard and respect Gandhiji as the embodiment of the primitive, blind, spontaneous spirit of revolt of the masses. அவரின் அரசியல் முதிர்ச்சியற்றது, பழுதானது என்றெல்லாம் விமர்சிக்கலாம்.  வரலாறே சிறந்த மனிதர்களின்  சுயவரலாறுதான் என்கிற புரிதல் இப்போதில்லை. அவர்கள் அவதாரம் அல்ல. அவர்கள் தங்கள் காலத்தின் சரியான பிரதிநிதியாக இருக்கிறார்கள் என்பதில் அவர்கள் மேன்மை தங்கியுள்ளது. காந்தி அப்படிப்பட்ட மேன்மையாளர்.  Greatness cannot be unlimited.  நான் காந்தியை முட்டாள்தனமாக தொழுது வணங்கமாட்டேன். அவரின் உண்மையான மகத்துவம் போற்றுவேன் என்றார் ராய்.
தேசப்பெருமித துறவி காந்தி. அதே தீவிர பெருமித இறைவியாக எழுந்த அகண்ட இந்துஸ்தானுக்கு அவர் பலியிடப்பட்டார். அந்த வெறித்தனம் அதன் சொந்த தேசம் பேசிய துறவியையே பலியாக கேட்டுவிட்டது. மகாத்மாவின் மொழியானது தியாகம் சுயதுன்பம் அனுபவிப்பதை தாண்டிய ஒன்று. நெறிசார்ந்த மனிதாபிமான அப்பீல் கொண்டது அதன் சிறப்பு என எழுதினார் ராய்.
காந்தி ராமராஜ்யம் அல்லது கடவுளின் ராஜ்யம் என பேசிவந்தார். எனக்கு சொர்க்கம் என்றால் என்ன எனத் தெரியாது. தூரபார்வைக் கொண்டு  பார்க்கவேண்டும் என்கிற அவாவும் எனக்கில்லை. நிகழ்காலம் நன்றாக மைந்து நடைபெறும் என்றால் எதிர்காலமும் வேறுமாதிரியாக அமையாது என நம்புகிறேன் என்றார் காந்தி
 காந்தியின் அகிம்சை கோட்பாடு அரசியல் நடைமுறையில் நேர்மை என்பதை இணைத்தது. ஆனாலும் தனிப்பட்ட முறையில்தான் அவர் அதை கடைப்பிடிக்கமுடிந்தது. அவரின் அரசியல் சீடர்கள் பலர் மீறும்போது அவர் வாளா இருக்கவேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அவர் அரசியல் மனிதனாக மட்டுமே இருக்க முடிந்தது. அதை அவர் மனம் ஒப்பி செய்தார் என ராய் சொல்லவில்லை.. அவரது நெறிகள் மற்றவர்க்கு வறட்டுகோட்பாடுகளாக தெரிந்தது. அவர் பண்டைய முனிவர்களின் ஞானிகளின் மத அனுபவங்களுடன் அதனை குழைத்தார். ஆனால் பகுத்தறிவு அரசியல் நடைமுறை என்ற பெயரில் அவற்றை நிராகரிக்காமல் செக்யூலர் பார்வையில் ஏற்கமுடியும் என ராய் கருதினார். ’அதிகாரஅரசியல்வழிகளைப்பற்றி கவலைப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் காந்தி பொருத்தமில்லை என்ற சூழலும் உருவாக்கப்படுகிறது. ஆனால் காந்தி அரசியலை தூய்மைப்படுத்த விழைந்தார் என்பதை எவ்வாறு புறக்கணிக்க முடியும் என ராய் வினவினார் . மற்ற மத தீர்க்கதரிசிகளைப்போலவே காந்தியும் தனது தோல்வியை கண்டுள்ளார். தனிமனித சுத்ந்திரம் இல்லையெனில் மனிதாபிமானம் சாத்தியப்படுவதில்லை என்பதை ராய் இந்திய அனுபவங்களில் கண்டைந்தார்.
ஆதார நூல்கள்
1. Men I Met    M N Roy
2. Mahatma and Roy A study in Contrast and convergence Hari singh Verma


3 comments:

  1. இவை குறிப்புகளின் தொகுப்பு. இவற்றை ஒருங்கிணைத்து உங்களுடைய ஆக்கமாக ஒன்று வெளிவருமாயின் எம்.என்.ராய், காந்தி இருவரின் மேன்மையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். தோழமையுடன், நீலகண்டன்

    ReplyDelete
  2. Pl change red back ground. Not able to read.

    ReplyDelete