https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, November 3, 2023

இந்தியாவின் பாலஸ்தீன கொள்கை

 

இந்தியாவின் பாலஸ்தீன கொள்கை

இந்தியாவின் பாலஸ்தீன கொள்கை விரிவான ஆய்விற்குரிய ஒன்று. பாலஸ்தீனியர்களுக்கு நாடு என்கிற நிலைப்பாட்டைத்தான் இந்தியா எடுத்தது. 1974ல் பி எல் வை அங்கீகரித்த அரபியர் அல்லாத நாடு என்றால் அது இந்தியாதான். யாசர் அராபத்துடன் நல்லுறவை பேணும் தொடர் நடவடிக்கைகளை இந்திரா அம்மையார் ஆட்சி எடுத்தது. பாலஸ்தீன அரசாங்கம் என்பதைக் கூட 1988ல் இந்தியா அங்கீகரித்து தூதரக உறவை உருவாக்கியது. காசாவில் இந்திய பிரதிநிதி அலுவலகத்தையும் 1996ல் திறந்தது. பின்னர் இது ரமல்லா பகுதிக்கு மாற்றப்பட்டது.

அய்நா பொதுச்சபை 53வது அமர்வு  பாலஸ்தீனியர் சுய நிர்ணய உரிமை தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்கு செலுத்தியது. இஸ்ரேல் எழுப்பிய சுவர் குறித்த தீர்மானத்திலும் 2003ல் இந்தியா பாலஸ்தீனம் பக்கம் இருந்தது. அதேபோல 2012 நவம்பரில் அய்நா தீர்மானமான பாலஸ்தீனத்திற்கு வாக்குரிமை இல்லா  ’non member observer state’  என்பதற்கும் இந்தியா ஆதரவாகவே நின்றது.  அய்நாவில் பாலஸ்தீன கொடி என்கிற  பிரச்சனையிலும் செப் 2015ல் இந்தியா பாலஸ்தீனம் பக்கமே நின்றது. ஆசிய ஆப்ரிக்க 2015 மாநாட்டிலும் பாலஸ்தீன பாண்டுங் பிரகடனத்திலும் இந்தியா உரிய பங்காற்றியது.

இந்திய குடியரசு தலைவர் என்கிற வகையில் முதல் முறையாக திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் அக்டோபர் 2015ல் பாலஸ்தீனம் சென்றதும், பிரதமராக மோடி அவர்கள் பிப்ரவரி 2018ல் பாலஸ்தீனம் சென்றதும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவே என்று அறிவிக்கப்பட்டது. பலமுறை பாலஸ்தீன அதிபரான முகம்மது அப்பாஸ் அவர்களை , சர்வதேச அமர்வுகளின் இடைவெளியில் இந்திய பிரதமர் உட்பட பிரதிநிதிகள் சந்தித்து தங்கள் ஆதரவையே தந்துள்ளனர். கடந்த 2017ல் அப்பாஸ் அவர்களும் டெல்லியில் குடியரசு தலைவர், துணைத்தலைவர், பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.



இந்தியா பாலஸ்தீன் இடையே ஒரு ஜேசிஎம் Joint commission Meeting நடைபெறவும் செய்தது.

 காசாவில் ஜவஹர்லால் நேரு பெயரில் நூலகம் ஒன்றை அமைக்கவும், மகாத்மா காந்தி மாணவர் செயல் மற்றும் நூலக பணிகள் கூடம் அமைக்கவும், தொழில்நுட்ப கல்லூரிகள்  சில அமைக்கவும் இந்தியா உதவியது. நேரு பெயரில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி இந்தியா சார்பில் உருவாக்கித் தரப்பட்டன.

அல்குட் பல்கலை சேவைகள், மற்றும் பாலஸ்தீனை டிஜிட்டல்மயமாக்குதல் ஆகியவற்றில் இந்தியர் உதவியை பாலஸ்தீனியர்  வரவேற்றனர். பல இடங்களில் தொழிற்கல்விக்கூடங்கள் அமையவும் இந்தியா துணை நின்றது. பெத்தலஹேம் பகுதியில் super speciality Hospital  அமைய இந்தியா பேருதவி செய்தது. ’துராதி’ என்கிற பாலஸ்தீனிய பெண்கள் மேம்பாட்டு திட்டத்தில் இந்தியாவிற்கு பங்குண்டு. பாலஸ்தீனிய Heritage products Marketing  என்பதற்கும் இந்தியா உதவியது. ரமல்லாவில் பிரிண்டிங் பிரஸ் நிறுவிட அதன் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் இந்தியா பக்க பலமாக நின்றது. விவசாயம், மருத்துவம், இளைஞர் நலன் விளையாட்டு, தகவல் தொழில் நுட்பம் போன்ற பலவற்றில் புரிவுணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

ரமல்லா மைதானம் ஒன்றில் காந்தி சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்திய உணவுவகை ஓட்டல்கள் கூட ரமல்லாவில் திறக்கப்பட்டன. உணவு திருவிழாவும் கூட அனுசரிக்கப்பட்டது. இன்னும் ஏன் பாலஸ்தீனம் யோகா தினம் அனுசரிக்கக்கூட தன் அனுமதியை தந்தது.

 சமீப ஆண்டுகளில் இஸ்ரேல் உடன் இருதரப்பு உறவுகளை இந்தியா குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு துறை சார்ந்து மேற்கொண்டு , உறவுகள் பலப்பட்டு வரும் சூழலில் இந்தியா நிதான போக்கை கடைப்பிடிப்பதாக காட்டத்துவங்கியது. இஸ்ரேல் பாலஸ்தீன் என்கிற இரு நாட்டு கொள்கை என்பதை - இஸ்ரேல் போலவே பூரண அங்கீகாரம் பெற்ற பாலஸ்தீன் நாடு என்பதை - இந்தியா தொடர்ந்து சொல்லி வந்தாலும்,  அமெரிக்க வழி இஸ்ரேல் சாய்வு அதிகமாகி வருவதை பலரும் சுட்டிக்காட்டி வருவதைக் காண்கிறோம்.  சமீபத்திய வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை என்பது , இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமா என்கிற கேள்வியை விமர்சனத்தை அதிகப்படுத்தியது.

IMEC என்கிற  India Middle East Europe Economic Corridor  என்கிற மிகப்பெரிய பொருளாதார மேம்பாட்டு வாய்ப்பை சீர்குலைக்கவே ஹமாஸ்- ஈரான் முயல்வதாக அமெரிக்க நாட்டின் அதிபர் பேசி வருகிறார். ஹமாசை அராபட்டிற்கு எதிராக வளர்த்துவிட்டதே இஸ்ரேலிய உளவுத்துறைதான் என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஹமாசின் தலைவர்களில் பலர்ஸ்காலர்கள்’- அறிஞர்கள்- நிபுணர்கள் என்ற செய்தி இருந்தாலும் மதவாத பயங்கரவாத முத்திரையும் நிழலும் அவர்கள் மீது படிந்துள்ளது.

இஸ்ரேலுக்கான நியாயங்கள் என்னவாக இருந்தாலும், ஹமாஸ் பெயரைச் சொல்லி பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும் பாலஸ்தீனியர்களையும், அவர்களுடைய அடிப்படை ஆதாரங்களையும் சீர்குலைப்பதை நியாய உணர்வு கொண்ட எவரும் ஏற்க முடியாது. குறைந்தபட்ச மானுட நெறிகளைக் கூட பின்பற்றாத  கொடுமைகளையும் ஏற்கமுடியாது.

பயங்கரவாதம் குழுவின் இயக்கத்தின் சார்பில் வந்தாலும்விடுதலை’ என்ற பெயரில் அதை நியாயப்படுத்த முடியாது. அதேபோல் அரசை காப்பது இஸ்ரேலியர் நலன் காப்பது என்கிற பெயரில் இராணுவ வழி பயங்கரவாதத்தையும் படுகொலைகளையும் ஏற்க இயலாது.

அய்நாவிற்கு சக்தியை அல்லது பலவீனத்தை கொடுப்பவை வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் தான். ரஷ்யா உக்ரைனில் ஓராண்டாக போர் நடத்திக்கொண்டு அதனால் உபதேசிக்க முடியுமா எனத் தெரியவில்லை. உலகின் ஆயுத ஏஜெண்டாகவே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முனையும் அமெரிக்காவிற்கும் உபதேசிக்கும் தார்மீக உரிமை இல்லாவிடினும், தீர்விற்கான அதன் தலையீட்டை அரபு நாட்கள் உட்பட பலர் நிராகரிக்கமுடியாது.

இந்தியா, இன்னும் கொஞ்சம் - சொந்த நாட்டின் நலன் -மேற்காசிய கொள்கை- geo political understanding என்பதையெல்லாம் தாண்டி,  அப்பாவி மக்களின் உயிர்ப்பலிகளை தடுக்க சற்று கூடுதலாக வெளிப்படையாக  pro active positions  எடுக்கலாமோ- எனத் தோன்றுகிறது.

(Disclaimer- டிப்ளமசி குறித்த அறிவு எனக்கு கிடையாது- வால்ட்டர் லாகுவர் எடிட் செய்த Israel Arab Reader A Documentary History ல் இஸ்ரேல்- பாலஸ்தீன் தொடர்பாக 1880 துவங்கி வெளிவந்த  நூற்றுக்கணக்கான ஆவணங்களையும் நான் படிக்கவில்லை. 3000 ஆண்டுகள் அரபியர் வரலாறு குறித்து வந்துள்ள சில புத்தகங்களைக் கூட நான் படிக்கவில்லை. எட்வர்ட் செய்த் அவர்களின் the question of Palestine படிக்க நினைத்தும் செய்யவில்லை.   ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் என்கிற தொடர்கதை போன்ற ஒன்றையும், சில கட்டுரைகளையும் மட்டும் தான் பார்த்துள்ளேன்)

2-11-2023

No comments:

Post a Comment