Skip to main content

Acharya Narendra Deva


                       ஆச்சார்யா நரேந்திர தேவா
           -ஆர்.பட்டாபிராமன்
இந்தியாவின் சோசலிச இயக்கத்தின் தந்தை என அறியப்பட்டவர் நரேந்திர தேவா. ஜனநாயக சோசலிச இயக்கத்தை ஜெயபிரகாஷ் லோகிய உள்ளிட்டோருடன் கட்ட முனைந்தவர்.  உ.பி மாநிலத்தின் சிதாப்பூரில் அக்டோபர் 31, 1889ல் பிறந்தவர். தந்தை பால்தேவ் பிரசாத். தாயார் ஜவஹர்தேவி. அலகாபாத் மற்றும் பனாரஸ் நகர்களில் கல்வியை முடித்த அவர் அக்காலத்தின் முதுகலை சட்டம்(எம்  எல் எல் பி.)   முடித்தவர்

திலகர் , அரவிந்தர் ஆகியோரால் கவரப்பட்டு தேசவிடுதலை இயக்கத்தில் தேவா நுழைந்தார். காந்தியின் ஒத்துழையாமை அறிவிப்பால் தனது சட்டத்தொழிலை துறந்தார். பின்னர் காசி வித்யாபீடத்தில் ஆசிரியராகவும் பிரின்சிபலாகவும் 1936வரை பணியாற்றினார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்டைய வரலாற்றில் தனித்த ஆர்வம் கொண்டு தொடர்ந்து கற்றார். புத்த நூல்களை அறிவதற்காக ஜெர்மன் மற்றும் பாலி மொழிகளில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் வெள்ளையனே வெளியேறு காலத்தில் 1942-45 அகம்மதுநகர் சிறையில் இருந்தபோது அபிதர்மகோஷா சூத்திரங்களை பிரஞ்சு மொழியிலிருந்து இந்திக்கு கொணர்ந்தார். 1932ல் பனாரஸ் சிறைவாழ்க்கையில் துவங்கிய பிரஞ்சு- இந்தி மொழியாக்கத்தை அவர் 1945ல் அகமதுநகர் சிறையில் முடிக்கிறார். நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியாவில் ஆச்சார்யா நரேந்திரதேவ்  அவர்களின் புலமை சார்ந்த அறிவிற்கு நன்றி பாராட்டுகிறார்.
நரேந்திரதேவிற்கு அவரின் பாட்டனார் சோஹன்லால்அவினாஷி லால்’ என பெயர் வைத்தர். தந்தை பால்தேவ் பிரசாத் வழக்குரைஞர் தொழிலில் புகழ் பெற்றிருந்தார். குழந்தைகளுக்காக பல புத்தகங்களையும்  எழுதியவர். இளம் பருவத்திலேயே அவினாஷிக்கு கணிதம், புவியியல், இந்திமொழி நாட்டம் இருந்தது. பண்டிட் மாதவ் பிரசாத் மிஸ்ராவுடன் பழக்கம் ஏற்பட்டபோது அவர்தான் நரேந்திரதேவ் என்ற பெயரை சூட்டினார். தந்தைக்கு காங்கிரஸ் இயக்கம்பாற் தொடர்பு இருந்தது. பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தவராக தேவா இருந்தார். லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் முதல்முறை 1889ல் தேவா பங்கேற்றார். அங்குதான் திலகர், ரானடே, ரமேஷ் சந்திர தத் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார் தேவா இல்லத்திற்கு வந்த மதன்மோகன் மாளவியா அந்த இளஞனின் தீர்க்கமான அறிவைக்கண்டு வியந்தார். தேவாவை அலகாபாத் இந்து போர்டிங் ஹவுசில் சேரவைத்தார்.
1905ல் தேவா காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைகளை கண்ணுற்றார். தாதாபாய் சுவராஜ்ய என்கிற பதத்தை விளக்கியதில் ஈர்க்கப்பட்டார். ஆனாலும் தீவிரவாதிகளுடன் உடன் நின்று 1908ல் காங்கிரசிலிருந்து வெளியேறினார். இணைப்பின்போது திரும்பவும் வந்தார். சுதேசி என்பதில் பற்றுக்கொண்டு அந்நியபொருட்கள் வாங்குவதை தவிர்த்தார். பங்கிம் சந்திர சட்டர்ஜி, லாலா ஹர்தயால், எட்வின் ஆர்னால்ட் போன்றவர்களை படித்தறிந்தார்.
அவர் தனது BA படிப்பை அலகாபாத் முயிர் கல்லூரியிலும்  MA Archeology யை வாரணாசி ராணி கல்லூரியிலும் முடித்தார். அக்காலத்தில்  சச்சிந்திர சன்யால் மூலம் புரட்சிகர கருத்துக்களை அறிந்தார். அவர் தனது  LLB யை 1915 ல் முடித்து ஃபைசாபத்தில் வழக்குரைஞர் ஆனார். அங்கு ஹோம்ரூல் லீகின் கிளையைத் துவங்கினார். உபி காங்கிரஸ் மாநிலத்தலைமையுடன் அவருக்கு இருந்த நெருக்கம் நேருவின்பால் தோழமை கொள்ள உதவியது. அவர் சுபாஷ் சந்திரபோசுடனும் தொடர்பில் இருந்தார். சைமன் கமிஷன் திரும்பி போ இயக்கத்திலும் சிவில் ஒத்துழையாமையிலும் பனாரசில் பங்கேற்றார். நாக்பூரில் காங்கிரஸ் தனது ஒத்துழையாமையை அறிவித்தவுடன் வக்கீல் தொழிலைவிட்டார். நேரு அழைப்பின் பெயரில் காசி வித்யாபீட பொறுப்பேற்றார். அதிலிருந்து அரசியல் கல்விப்புலங்களில் தொடர்ந்து இயங்குபவராக மாறினார். அங்குதான் ஸ்ரீபிரகாஷ் என்பவர் இவரின் மேதமைகண்டு அவரை ஆச்சார்யா என அழைக்கத்துவங்கினார்.
 நாசிக் சிறையில் ஜெயபிரகாஷ், லோகியா, நரேந்திரதேவா, மினுமசானி, அசோக்மேத்தா, யூசுப் மெஹரலி அனைவரும் இருந்தபோது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி துவங்குவது பற்றி விவாதித்தனர். பாட்னாவில் 1934ல் சி எஸ் பி என்கிற கட்சி துவக்கி ஜெயபிரகாஷ் நாராயண் அதன் முதல் பொதுச்செயலராக்கப்பட்டார். ஜெயபிரகாஷ் தொடர்பால் 1934 சோசலிச கட்சி துவக்க நிகழ்வின் தலைவராக இருக்க  தேவா பணிக்கப்பட்டார்.. இரண்டாவது உலக யுத்த காலத்தில் 1940-45 அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் செப்டம்பர் 1941ல் உடல்நிலை பாதிக்கப்பட்டு காந்தியின் பராமரிப்பில் சேவாகிராமில் இருந்தாலும், பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கைது செய்யப்பட்டார். ஜூன் 1945ல்தான் அவர் விடுதலை செய்யப்படுகிறார். 1948ல் காங்கிரசிலிருந்து வெளியேறி சோசலிஸ்ட் கட்சி அமைந்தவுடன் அதன் சேர்மனாக்கப்பட்டார்.
1947-51 காலத்தில் அவர் லக்னோ பல்கலை துணைவேந்தரானார். 1951-53 களில் பனாரஸ் பல்கலை கழக துணைவேந்தரானார். ஆசிரியர்களின் தேர்ச்சி ஒழுக்க நன்னெறிகளில் அவர் கூடுதல் கவனத்துடன் இயங்கினார். இந்தியர்களின் மேம்பட்ட கல்வி அறிவில்தான் நாட்டின் முன்னேற்றம் என்பதை அழுத்தமாக சொல்லி வந்தவர் தேவா.
பின்னர் ஜனநாயக சோசலிச கட்சியின் சேர்மனாக 1955 ல் ஆனார். 1937-48 காலங்களில் அசெம்பிளி உறுப்பினரான அனுபவத்தில் 1952 முதல் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து மறைந்தவர் ஆச்சார்யா தேவா. லக்னோவிலிருந்து ஈரோடு வந்து பெருந்துறையில் அவருக்கு குணமடைவதற்கான ஓய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு 5 வாரங்கள் தங்கியிருந்த தேவா உடல்நிலை மோசமானதால் ஈரோடு அழைத்துவரப்பட்டார். பிப்ரவரி 19 1956ல் மரணம் அடைந்தார். சென்னையில் அப்போது கவர்னராக இருந்த ஸ்ரீபிரகாசம் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு திருச்சியிலிருந்து சென்னை விரைந்தார் என்ற செய்தியை அப்போது வந்த ஹிந்து வெளியிட்டது.
தனது பல்கலைகழக காலங்களில் மாணவர்களுடன் நல்லுறவுகளை அவர் உருவாக்கிக்கொண்டார். ஏழை மாணவர்களுக்கு கற்பதற்கு நிதி உதவி செய்தார். புகழ்வாய்ந்த லால்பகதூர் சாஸ்திரி, கமலபதிதிரிபாதி, சந்திரசேகர் அவரின் மாணவர்கள். இதில் இருவர் பிரதமர் பதவி அளவிற்கு உயர்ந்தவர்கள். சோசலிஸ்ட் கட்சியின் மிகமுக்கிய தலைவராக மாறிய சந்திரசேகர் ஆச்சார்யா தனது குரு என தொடர்ந்து சொல்லிவந்தார்.
சோசலிச இயக்கத்தில் லோகியாவின் பன்ச்மாரி தீசிஸ் என்பதும் ஆச்சார்யாவின் கயா தீசிஸ் என்பதும் பெருமளவு விவாதிக்கப்பட்டவையாக இருந்தன..  தான் கட்சியைவிட்டு வெளியேறுவேனே தவிர மார்க்சியத்தை கைவிடமுடியாது என்ற நிலையை எடுத்தவர் ஆச்சார்யா.
சோவியத்தின் சர்வாதிகார நடைமுறையை அவர் விமர்சித்தார். ஜனநாயக சோசலிசம் என பேசினார். விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்ளும் சக்திகள் என்றார். புரட்சிகர இயக்கம் என்பது தேசவிடுதலை இயக்கத்திலிருந்து அந்நியப்பட்ட ஒன்றாக முடியாது என்ற கருத்து அவரிடம் இருந்தது.
அவரின் இந்தி புத்தகம் புத்த தர்ம தர்சன் என்பதற்கு சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்பட்டது. நமது சுரண்டல் ஒழிப்பு திட்டம் என்பதில் தேசத்தின் மகத்தான மரபுகளின் வண்ணங்கள் இருக்கவேண்டும் என்றவர் தேவா. தனிப்பட்ட மனிதனின் ஒழுக்க நன்னெறிகள் புரட்சிகர மனிதனிடம் அப்பழுக்கற்ற முறையில் இருக்கவேண்டும் என்பதை காந்தி போலவே அதிகம் வலியுறுத்தியவர் ஆச்சார்யா. பி அசெம்பிளியில் காங்கிரசில் போட்டியிட்டு வென்ற பதவியை 1948 சோசலிச கட்சி துவங்கியபோது நெறி அடிப்படையில் ராஜினாமா செய்தவர் நரேந்திர தேவா. இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெருமுயற்சி எடுத்து தோற்கடித்தது.
Nehru in his obituary in the Parliament said, “The death of Acharya Narendra Deva means something much bigger for many of us and, I think, for the country than just the passing away of an important person. He was a man of rare distinction – distinction in many fields – rare in spirit, rare in mind and intellect, rare in integrity of mind and otherwise too. Only his body failed him. I do not know if there is any person present here in this House who was associated with him for a longer period than I was. Over 40 years ago we came together and we shared innumerable experiences together in the dust and heat of the struggle for independence and in the long silence of prison life where we spent – I forget now – four or five years together at various places, and inevitably got to know each other intimately; and so, for many of us, it is a grievous loss and a grievous blow, even as it is a grievous loss for our country. There is the public sense of loss and there is the private sense of loss and a feeling that somebody of rare distinction has gone and it will be very difficult to find his like again.”
2
1947 விடுதலைக்கு பின்னர் நரேந்திரதேவா இருமுறை ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டர். கார்ல் மார்க்ஸ் மீதும் மார்க்சியத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கை வெளிப்பாட்டை கொண்டவராக இருந்தார் ஆச்சார்ய தேவா. சோசலிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி மூவரான ஜேபி, லோகியா, தேவா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சோசலிஸ்ட் இயக்கம் உடைவிற்கு உள்ளானது. மார்க்சியத்தை லெனின் ருஷ்யமயப்படுத்தியது போல, மாவோ சீனமயப்படுத்தியதுபோல நாம் இந்தியமயப்படுத்தவேண்டும் என்பதை தேவா நம்பினார். நரேந்திரதேவா போன்ற சோசலிஸ்ட்கள் மார்க்சியத்தை விஞ்ஞான அணுகுமுறை என ஏற்றிருந்தாலும் அவர்களிடம் மேற்கு ஜனநாயக சமுக தாக்கமும், இந்திய காந்திய தாக்கமும் கலந்தே இருந்தது. இதில் அவர்கள் அன்று செயல்பட்டவந்த கம்யூனிஸ்களிடமிருந்து மாறுபட்டு நின்றனர்.
Social ownership means that all wealth is held in common and shared equitably, the basis of distribution being, initially the amount and character of work done, and finally the needs of individual   என்கிற மார்க்சிய லெனிய விளக்கம் அவரிடமும் இருந்தது. அதேபோல் விவசாய கொள்கையாக  coopearative cum collective farming  என்பதையும் அவர் பேசினார். அதை இருகட்டங்களாக இந்தியாவில் அமுல்படுத்தலாம் என்றார். அதே நேரத்தில் 1946ல் அவர் ருஷ்யா மாதிரியில் கட்டாயப்படுத்துவது எதிர்விளைவுகளை தந்துவிடும் என்கிற எச்சரிக்கையை தந்தார்.
மார்க்சிடமும் சோசலிச பாதை என்பதில் வன்முறை மற்றும் வன்முறையற்ற என்கிற இருவழிகள் இருந்தன. நாடுகளின் நிலைக்கேற்ப எனத்தான் அவர் விளக்கினார் என்பதை தேவா எடுத்துக்காட்டுகிறார். ஆகவே இந்தியாவில் வன்முறையற்ற பாதை என்பது மார்க்சியத்திற்கு உகந்த வழிதான் என்றார்.  அவர் தேசிய இயக்கமும் சோசலிச இயக்கம் அணிசேர்ந்து செயல்பட விழைந்தார். அதை பூர்ஷ்வா இயக்கம் என ஒதுக்காமல் அனைத்து வர்க்கத்தினருடன் இணைந்து விடுதலை போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவேண்டும் என்றார்.  Socialise national struggle by the adoption of an economic ideology for the masses- no sypathy with mere reformism and constitutionalism  என்பதை தனது பார்வையாக தந்தார்.  The working class would always act as a vanguard and the peasants and the intelligentsia are the auxiliaries of an anti imperialist struggle  என்பதிலும் அவர் மார்க்சியர் போலவே நம்பிக்கை வைத்திருந்தார்.
ஸ்டாலினின் சர்வாதிகாரபிடியிலும் சோவியத் யூனியனின் தேர்க்காலில் பிணைக்கப்பட்டும் உள்ள மூன்றாவது அகிலத்துடன் சேரமுடியாது என்கிற நிலைப்பாட்டை எடுத்தவர் ஆசார்யா நரேந்திரதேவா. தேச விடுதலை இயக்கத்தை கம்யூனிஸ்ட்கள் முதலாளித்துவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று பார்த்ததை அவர் ஏற்கவில்லை. ஏகாதிபத்திய அந்நிய ஆட்சியைவிட முதலாளித்துவ ஜனநாயகம் ஏற்புடையதுதான் என்றார் அவர்.
காந்தி காசிவித்யாபீட பட்டமளிப்புவிழாவிற்கு 1929ல் வந்தபோது நரேந்திரர் அவருடன் நேரிடையாக பழக வாய்ப்பு கிடைத்தது. சோசலிசம் குறித்த பார்வையில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையின்மை அரசியல் போராட்டத்தை பெருமளவு பாதிக்கும் என்பதில் ஒத்த கருத்து அவர்களிடம் நிலவியது. ஹரிஜனங்கள் என சமுக ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் முழுமையாக இந்துக்கள் என அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதிலும் பிரிட்டிஷார் அவர்களை பயன்படுத்தி பிரித்தாள முயற்சிப்பதையும் அவர் கண்டிப்பவராக இருந்தார். காந்தியின் மதப்பற்றில் வெறித்தனமோ கன்சர்வேடிசமோ இல்லை என்ற கருத்தும் அவருக்கு இருந்தது. காந்தியின் அகிம்சை என்பதை கோட்பாடு என்கிற மட்டத்தில் ஏற்காவிட்டாலும் சத்தியாக்கிரக வழிமுறைகள் என்பதை  நரேந்திர தேவா ஏற்றார். வன்முறை குறித்து காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்கள் தெளிவாக பேசினால் தன்னால் சி எஸ் பி கட்சியில் இணைந்துகொள்ளமுடியும் என்றுகூட காந்தியடிகள் தெரிவித்தார்.
நரேந்திர தேவா ஜனநாயக சோசலிசம் என்பதற்கான சில வரையறைகளை  கூறினார்.
·         உயர்வு-தாழ்வு  சமுகமுறைக்கு எதிரானதாக இருக்கும்.
·         சமுக அதிகாரம், அரசியல் அதிகாரம், பொருளாதாரம் என்பன ஒருதனிநபரின் ஆதிக்கத்திலோ, ஒருவர்க்கத்தின் ஆதிக்கத்திலோ, சிறப்பு தகுதி கொண்ட குழுவினரிடமோ இருக்ககூடாது.  சர்வாதிகாரம், நிலபிரபுத்துவம் முத்லாளித்துவ பாதையாக இராது
·         ஏகாதிபத்திய எதிர்ப்புடன் சுதந்திர ஜனநாயகமாக இருக்கும்
·         மனித நடத்தைகளில், சமுக உறவுகளை ஜனநாயகப்படுத்துவதாக இருக்கும்
·         சமுக, பொருளாதார அரசியல் அதிகாரம் உழைப்பவர் கட்டுப்பாட்டிலும் அவர்களின் சுய அரசாங்கமாகவும் அமையும்
·         மையம் நீக்கப்பட்ட அதிகார பரவல்முறை, பங்கேற்பு சுதந்திரம் உறுதி செய்வதாக அமையும்.
·         சமுக ஏற்றத்தாழ்வுகளை அனுமதிக்காத சமுக மகிழ்ச்சிக்கு ஆதாரமான தனிநபர் மகிழ்ச்சியை அது உறுதிப்படுத்தும்.
·         அரசு அதிகாரத்தை தனிந்பரோ சிறுகுழுவோ சிறுபான்மை வர்க்கமோ காப்பாற்ற முயற்சித்தால் அதை எதிர்த்து மக்கள் கலகம் செய்திட உரிமை வழங்கப்படும்
.
மார்க்சியம் காந்தியம் இணைவை குழைவை நரேந்திரர் உருவாக்க முயல்கிறாரா என்கிற கேள்வி ஒன்றிற்கு அவர் 1950ல் எழுதிய கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார். சத்தியாக்கிரகம் என்பது மார்க்சியத்திற்கு விரோதமானதல்ல. அதேபோல் வன்முறையற்ற வழியில் சமுக மாற்றம் எனில் மார்க்சியம் அதற்கு முன்னுரிமை கொடுப்பதாகவே உள்ளது என்றார் தேவா.
இந்தியாவில் விடுதலைக்கு முன்னர் தோன்றிய சோசலிச இயக்கம் தேசவிடுதலை இயக்கத்துடன் இணைந்தே செயல்படவேண்டும். இந்திய விவசாயிகளை தேசிய இயக்கமும் சோசலிச இயக்கமும்  இழுத்துக்கொள்ளாமல் விடுதலை துரிதப்படாது. சோசலிசம் என்பது வெறும் பொருளாதார ஒற்றை பிரச்சனையல்ல போன்ற மிக முக்கிய பங்களிப்புகளை செய்தவர் தேவா.
காங்கிரஸ் சோசலிஸ்ட் அமைப்பு மாநாடு மே 17 1934ல் பாட்னாவில் நரேந்திரதேவ் தலைமையில் நடைபெற்றது. அடுத்து  மாநாடு பம்பாயில் அக்டோபர் 21,22 1934ல் நடைபெற்றது. 13 மாநிலங்களில் இருந்து 137 சார்பாளர்கள் பங்கேற்றனர். ஜேபியை பொதுச்செயலராக கொண்ட 21பேர் கமிட்டியில் நரேந்ந்திர தேவாவும் இடம் பெற்றிருந்தார்.
அமைப்பு மாநாட்டில்தேவா ' Most of us in the congress are mere intellectual socialists.. we should avoid dogmatism and sectarianism. We must tkae ou stand on scientific socialism or social reformism என உரையாற்றினார். நரேந்திரதேவா, ஜேபி. பாமர்ஜி, பரிதுல் ஹக் நால்வர் கமிட்டி  சிஎஸ்பி திட்டம் எழுத அமைக்கப்பட்டது. பம்பாய் மாநாட்டின்போது பங்கேற்ற இளைஞர்களின் சராசரி வயதே 30 தான். இளமை ததும்பும் அமைப்பாக அது உருவானது. காங்கிரசில் உறுப்பினர்கள் சி எஸ் பியில் உறுப்பினராகலாம். ஆனால் வகுப்புவாத கட்சியில் இருப்பவர்கள் ஆகிட முடியாது என்றனர். விவசாயிகளை, தொழிலாளர்களை திரட்டுவது, முழுவிடுதலைக்கு மக்களை திரட்டி போராடுவது என அறிவித்தனர்.
கோமிண்டர்ன் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம். பி சி ஜோஷி போன்றவர்களின் அணுகுமுறையால் லக்னோவில் இரு இடதுசாரி கட்சிகள் மத்தியிலும் இணக்கமாக செயல்படுவது என்கிற புரிதல் உருவானது. ஆனால் ஆறே மாதத்தில் கல்கத்தா, பம்பாய், கான்பூர், ஆந்திராவில் இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட கசப்புகள் சி எஸ் பியில் எதிரொலிக்க துவங்கியது. 1937 ஏப்ரலில் கம்யூனிஸ்ட்களின் தந்திரங்களுக்கு இரையாக வேண்டாம் என்கிற எச்ச்சரிக்கையை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தந்தது. ஆந்திராவில் சுந்தரைய்யா, கேரளாவில் நம்பூதிரி, மெட்ராசில் ஜீவா, ராமமூர்த்தி செல்வாக்கு பெறத்துவங்கினர். கிசான் சபாக்களில் டாக்டர் இசட் அகமத், ஜாகீர், கே கோபாலன், அஷ்ரஃப் பணியாற்றினர்.
1937ல் மசானி கையில் கிடைத்த கம்யூனிஸ்ட்களின் இரகசிய ஆவணங்களை அவர் சோசலிஸ்ட் கட்சி செயற்குழுவில் வெளியிட்டு பிளவை அதிகப்படுத்தினார். கம்யூனிஸ்ட்கள் சோசலிஸ்ட் கட்சியை கைப்பற்ற ரகசிய சதி என செய்தி பரப்பப்பட்டது. 1939 ஏப்ரலில் மினு மசானி சோசலிஸ்ட் கட்சியின் தலைவரானார். கம்யூனிஸ்ட்கள் தாங்கள் லக்னோ புரிதலை தொடரவே விரும்புகிறோம் என தெரிவித்ததை நம்பமுடியாது என  சோசலிஸ்ட்கள் நிராகரித்தனர். ரெட்குருப்பை சேர்க்கவேண்டாம் என்கிற முடிவை எடுத்தனர்.
Communist Plot against CSP  என்கிற பிரசுரத்தை மினு மசானி வெளியிட்டார். ஜெயபிரகாஷ் சோசலிஸ்ட் கம்யூனிச ஒற்றுமை என்பதில் நாட்டமாக இருந்தார். 1939 திரிபுரி மாநாட்டில் கம்யூனிஸ்ட்கள் சி எஸ் பி வழிகாட்டலை ஏற்கமுடியாது என அறிவித்தனர். அவர்களை நீக்காததில் சில தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். லோகியா, மசானி, அசோக்மேத்தா, பட்வர்த்தன் ராஜினாமா செய்தனர். 1940ல் ராம்கர் சந்திப்பில் சில கம்யூனிஸ்ட் தலைவர்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவை  சோசலிஸ்ட்கள் எடுத்தனர்மற்றொருபுறம் ராய் போன்றவர்களின் தாக்குதலும் இருந்தது. சி எஸ் பி இடதுசாரியுமல்ல, மார்க்சிய சோசலிஸ்ட் கட்சியுமல்ல என எம் என் ராய் தாக்கினார். ராய் ஆதரவாளர்கள்  சோசலிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியதானது.
 1934ல் சி எஸ் பி துவங்கியபோதே மகாத்மா காந்தி தனது நிலையை தெளிவுபடுத்தினார். Our socialism or communism should be based on non violence and on the harmonious cooperation of labour and capital, landlord and tenant  என்றார்.. 1936 ஜனவரி மீரத் சோசலிஸ்ட்களின் சந்திப்பில் உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு, மார்க்சிய வழியில் என பேசியது  Understand the techniques of revoultion, the theory and practice of class struggle-  Accomplish the tasks within congress an organised body of  என எழுதிக்கொண்டனர்.
1936 டிசம்பரில் பைஸ்பூரில் கூடிய மாநாட்டில் இந்தியா ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு மத்தியில் பங்குதாரராக இருக்காது என்கிற தீர்மானத்தை நரேந்திர தேவா கொணர்ந்தார். காங்கிரசிலும் அதை சோசலிஸ்ட்கள் ஏற்க செய்தனர். 1937 தேர்தல்களில் 1161 போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் 716யை பிடித்தது. அய்ந்து மாகாணங்களில் அறுதி பெரும்பான்மை பெற்றது. நான்கில் தனிப்பெரும் கட்சி நிலைக்கு வந்தது. சி எஸ் பியினர் 1935 சட்டம் போர்க்குணத்தை மழுங்கடிக்கும் என்ற நிலை எடுத்தனர். சி எஸ் பி எதிர்ப்பை பொருட்படுத்தாது காங்கிரசார் அரசாங்கம் அமைத்தனர்.
சுபாஷ்போசை எதிர்த்த வலதுசாரிகளையும் திருப்தி செய்யும்வகையில் அதிகமாக சச்சரவுகளுக்கு உள்ளாகாமல் இருக்கும் நரேந்திரதேவை காங்கிரஸ் தலைவர் ஆக்கலாம் என்கிற போஸின் ஆலோசனை ஏற்கப்படாமல் போனது. பட்டாபி சீதாரமைய்யா எதிர்த்து போஸ் ஜனவரி 1939ல் 1580- 1375 வாக்குகள் கணக்கில் வெற்றி பெறுகிறார். காந்தி மனம் நொந்தார், ஜவஹர்லால் கோட்பாடு மற்றும் காந்தி என்கிற மன உணர்ச்சிக்கு மத்தியில் தடுமாறினார். சோசலிஸ்ட்கள் போஸிற்கு வாக்களித்தனர்.
1942ல் கிரிப்ஸ் தூது வந்தது. கிரிப்ஸ் போன்றவர்கள் சாத்தானுக்கு வக்காலத்து வாங்கலாம் என்கிற கேள்வி நேருவிடம் இருந்தது. காந்தி அது post dated cheque  என்றார். சோசலிஸ்ட்களும் ஏற்கவில்லை. பிரிட்டிஷாருக்கு எதிராக நேரடி வெகுஜன திரள் இயக்கம் என சோசலிஸ்ட்கள் வலியுறுத்தினர். ஆகஸ்ட் 8 1942ல்  வெள்ளயனே வெளியேறு செய் அல்லது செத்துமடி முழக்கமானது. தலைவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். ஜேபி ஹசாரிபாக் சிறையிலிருந்து தப்புகிறார். அருணா, பட்வர்த்தன், ஜேபி, லோகியா இயக்கத்தை தீவிரப்படுத்துகின்றனர். பல இடங்களில் தொலைபேசி இணைப்புகள் துண்டாகின்றன. விவசாயிகள் வரி கொடுக்கமுடியாது என்றனர். ஆசாத் ஹிந்து ரேடியோ லோகியாவால் நடத்தப்பட்டது. 1943ல் அரசு வெளியிட்ட தகவல்படி 92000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜேபி லோகியா ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மே 17 1934ல் தேவா தலைமையில் கூட்டப்பட்ட முதல் சோசலிஸ்ட் அகில இந்திய மாநாட்டில்இந்தியவில் சோசலிசம் என்பது வந்து நிலைபெறதுவங்கிவிட்டது. நாம் அறிவார்ந்த சோசலிஸ்ட்கள் என்பதாக உள்ளோம். வறட்டுத்தனங்களை கைவிட்டு விஞ்ஞான சோசலிசம் நோக்கி நாம் நகரவேண்டும். காங்கிரஸ் கான்ஸ்டிடூஷனலிஷம் என்பதுடன் நிறுத்திவிடும். புரட்சிகர இயக்கமாக தடம் மாறாமல் நாம் செல்லவேண்டும் என்றார்.  மாநாட்டில் கட்சிதிட்டம் அமைப்புவிதிகள் பரிசீலிக்க கமிட்டியில் தலைவராக அவர் அமர்த்தப்பட்டார். பம்பாயில் அக்டோபர் 21 1934ல் அதிகாரபூர்வமாக அனைத்திந்திய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி துவங்கியதாக அறிவித்தனர்மத்திய கமிட்டிக்கு ஆச்சார்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரசில் உறுப்பினர் இல்லாமல் சி எஸ் பியில் உறுப்பினராக முடியாது. வகுப்புவாதிகள் உறுப்பினராக முடியாது என்ற நிலையை அவர்கள் எடுத்தனர். முழுவிடுதலை என்பதே முழக்கம் என்றனர். பிரிட்டிஷாருடன் சமரம் இல்லை. உற்பத்தி செய்திடும் மக்களிடம் ஆட்சி மாற்றம் என்பதே- தனித்த இந்திய அரசு என்பதே நோக்கம் என்றனர்
அனைத்து அதிகாரங்களையும் உற்பத்தி உழைப்பாளர்களிடம் மாற்று
திட்ட அடிப்படையில் அரசு கட்டுப்பாட்டில் பொருளாதார வாழ்க்கைமுறை, முக்கிய தொழில்களை சோசலிசமயமாக்கு
அந்நிய வர்த்தகம் முற்றிலுமாக அரசுடைமை
விவசாயிகளுக்கு நில பகிர்மானம்- கூட்டுறவு முறைகளை ஊக்கப்படுத்தல்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல்
வேலை என்பது உரிமை என சட்டம்
வயதுவந்தோர் வாக்குரிமை
மத உரிமைகளில் ஆதரவோ தலையீடோ அரசு செய்யாது. சாதி மத அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது
பாலினபேதங்களுக்கு அனுமதியில்லை 
ஈடு ஏதுமின்றி மன்னர்முறை ஒழிப்பு  போன்ற முக்கிய செயல்திட்டம் முன்மொழியப்படது
திட்டம் நிறைவேற்றப்பட தொழிலாளர் விவசாயிகளை திரட்டுவது, காங்கிரசுடன் இணைந்து பணியாற்றுவது, இளைஞர் பெண்களை திரட்டுவது, ஏகாதிபத்திய போர்களை எதிர்ப்பது, பிரிட்டிஷ் அரசுடன் அரசியல் அமைப்புவிதி குறித்து விவாதிப்பதில்லை போன்ற நடைமுறைகளை அறிவித்தனர்
கம்யூனிஸ்ட்களுக்கும் சோசலிஸ்ட்களுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால்  கம்யூனிஸ்ட்களை நீக்குவது என முடிவெடுத்தனர். ஜீவா, நம்பூதிரி, ராமமூர்த்தி, சுந்தரைய்யா, அஷ்ரப், அகமது, சஜ்ஜட் ஜாகீர் போன்ற புகழ்வாய்ந்தவர்கள் சி எஸ் பி கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் ஆனவர்கள். எம் ஆர் மசானி போன்றவர்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பில் தீவிரமாக இயங்கினர். ஜே பி கம்யூனிஸ்ட்கள் திருந்தி பணியாற்றிடவேண்டும் என்கிற கருத்தில் இருந்தார். 1939 கல்கத்தா தேசிய குழுவில் கருத்து வேறுபாடுகள் காரணமாக லோகியா, பட்வர்த்தன், மசானி, அசோக்மேத்தா விலகினர். 1940 ராம்கர் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்களை வெளியேற்ற முடிவெடுத்தனர். முன்னதாக 1937ல் ராயிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டனர்.
மீரட் மாநாடு 1936 ஜனவரியில் கமலாதேவி சட்டோபாத்யாய் தலைமையில் நடந்தது. குறைந்தபட்ச ஊதியம் ரூ 30 என்றும் வாரத்திற்கு 40 மணிநேர வேலை எனவும் கோரிக்கை எழுப்பப்பட்டது. மார்க்சியம் மட்டுமே வழிகாட்டும் கோட்பாடு என்கிற அழுத்தம் இருந்தது-  organised body of marxian socialists within Congress  என்பதில்  கவனம் குவித்தனர். பைஸ்பூரில் அடுத்த மாநாடு டிசம்பர் 1936ல் ஜேபி தலைமையில் கூடியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி முக்கிய கடமை எனப்பட்டது. அதே நேரத்தில் கூடிய காங்கிரசில் நரேந்திரதேவா யுத்த எதிர்ப்பு தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டது.
1939 ஜனவரியில் நேதாஜி சுபாஷா பட்டாபி சீதராமைய்யாவா என்கிற போட்டி வந்தபோது நரேந்திர தேவாவை ஆக்கலாம் என சுபாஷே முன்மொழிந்தார். ஏற்கப்படவில்லை. போட்டியில் சி எஸ் பி கம்யூனிஸ்ட்கள் ராயிஸ்ட்கள் ஆதரவுடன் சுபாஷ் வென்றார். நேருவைத்தவிர 12 சி டபுள்யு சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்து நெருக்கடி உருவாக்கினர். காந்தியை சுபாஷ் சந்தித்தும் முன்னேற்றமில்லை. திரிபுரியில் மார்ச் 1939ல் கோவிந்த வல்லப் பந்த் காந்தி சொல்படி கமிட்டி அமை என்றார். நெருக்கடியால் போஸ் ஏப்ரல் 29 1939ல் ராஜினாமா செய்து பார்வார்ட் பிளாக் துவங்கினார். சி எஸ் பி நடுநிலைமையால்தான் இந்நிலை  என்றார் சுபாஷ் . சோசலிஸ்ட்கள் துரோகம் என தாக்கினார். பின்னர் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சி எஸ் பி தலைமை சாகசத்தலைமையாக அங்கீகாரம் பெற்றது. கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டது. ஜேபி போன்றவர் ஏப்ரல் 1946ல்தான் விடுதலை பெறுகின்றனர்
பாகிஸ்தான் பிரிவினை இந்து முஸ்லீம் பெயரால் கூடாது என்கிற நிலையை சி எஸ் பியினர் எடுத்தனர். அசோக்மேத்தா, பட்வர்த்தன் வகுப்புவாதம் குறித்து எழுதினர். பிரிட்டிஷ் வெளியேறுவதற்கு முன்னர் அரசியல் சட்ட அசெம்பிளி என்பதை ஏற்கமுடியாது என்றனர் சோசலிஸ்ட்கள். பிரிவினை தவிர்க்கமுடியாது என காங்கிரஸ் ஏற்கத்துவங்கியவுடன் காங்கிரஸ் என்ற பெயரை நீக்கிக்கொள்வது என சோசலிஸ்ட்கள் மார்ச் 1947 கான்பூரில் கூடி முடிவெடுத்தனர்.
3
மார்க்சியத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்தவர் நரேந்திர தேவாஅவர் சீனா சென்ற நேரத்தில் மே 1952 பஞ்ச்மாரி கன்வென்ஷனில் லோகியா தலைமை ஏற்றிருந்தார்மார்க்சியத்தில் சில விலகல்களை அவர் செய்தபோது, அதை அறிந்த நரேந்திர தேவா செப்ட்ம்பர் 3, 1952ல் அசோக்மேத்தாவிற்கு கடிதம் எழுதினார். தான் கட்சியை வேண்டுமானால் விட்டு விலக முடியுமே தவிர மார்க்சியத்திடமிருந்து விலக முடியாது என அதில் அவர் தெரிவித்திருந்தார். அதற்கு பின்னர் அவர் 4 ஆண்டுகள் கூட வாழ்ந்திருக்கவில்லை. ஜெயபிரகாஷ் போன்றவர்கள் மார்க்சியத்திலிருந்து விலகியபோதும் நரேந்திரதேவா தத்துவத்தை உயர்த்திப்பிடிக்க தவறவில்லை.
1989ல் நடந்த ஒரு விழாவில் நம்பூதிரிபாட் தன் 1934 சோசலிஸ்ட் கட்சியில் நரேந்திரதேவா ஆற்றிய உரைமூலம்தான் மார்க்சிய சோசலிசம் என்பதை அறிந்துகொண்டதாகவும், பின்னர்தான் ஜேபியின் சோசலிசம் எதற்காக புத்தகம் படித்து மேம்படுத்திக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
நேருவின் அறிவுரை ஏற்றுதான் தேவா  பனாரஸ் காசிவித்யாபீடம் சென்றார். நேருவின் இண்டிபெண்டன்ஸ் இந்தியா லீகில் சேர்ந்து பணியாற்றினார். அதன் உபி மாநில செயலர் ஆனார். இந்திய மக்களுக்கு அறிவார்ந்த விஷயங்களை கொண்டுசேர்ப்பதற்கு உழைக்கவேண்டும் என அவர் நேருவிடம் சொல்லிக்கொண்டிருப்பார். கான்பூரில் செப்  1929ல் நடந்த தொழிலாளர் மாநாட்டில் நேரு தலைமை ஏற்றார். நரேந்திரதேவா குறைந்த பட்ச வாழ்க்கை ஊதியம், இலவச கல்வி, மருத்துவம் குறித்தும், நிலம் எந்த தனிமனிதருக்கும் சொந்தமாக இருக்கக்கூடாது அது சமுகத்திற்குரியதாக இருக்கவேண்டும் என்றும் பேசினார்.
1932 வரிகொடா இயக்கத்தின்போது அவர் பனாரஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாம் யுத்தகாலத்தில் ஜனவரி 1941ல் அவர் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டார். பின்னர் 1942 வெள்ளையனே வெளியேறு காலத்தில் காந்தியுடன் சேவாகிராமத்தில் சில தீர்மான வரைவுகளுக்கு நரேந்திர தேவா உதவிக்கொண்டிருந்தார். காந்தி நேருவிடம்  நரேந்திரதேவா தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுவிட்டார் என தெரிவித்தார். வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்கு மறுநாள் கைதான  நரேந்திரதேவா 1945 ஜூனில்தான் விடுவிக்கப்படுகிறார்.
 We have to study the indian problems in a new light that is from the the Marxian point of view. We should not lose sight of the Indian background  என்பதை அவர் இறுதிவரை சொல்லிவந்தார்.   கம்யூனிஸ்ட் நண்பர்கள் சோசலிஸ்ட் கட்சியின் மார்க்சிய குணங்களை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். உலகம் முழுவதிலும் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் மோதலால் நாஜிக்கள் பயன் அடைந்துவிட்டனர் என்றார் .
 காங்கிரஸ்- லீக் ஒற்றுமையையும் இந்து- முஸ்லீம் ஒற்றுமையும் ஒன்று என கருதுவது தவறு என்றார். பாகிஸ்தானோ இல்லையோ இந்து முஸ்லீம் மக்களின் பொருளாதரா பிரச்சனைகளை எடுத்து தீர்விற்கு கொணராமல் ஒற்றுமையை கட்டிவிடமுடியாது என்கிற கருத்தும் அவரிடம் இருந்தது. 1946ல் ஜின்னா பாகிஸ்தான் ஏற்கப்பட்டால் கலவரம் நின்றுவிடும் என பேசுவதையும் அதே நேரத்தில் பாகிஸ்தான் உருவாகும்வரை கலகம் நிற்காது என பேசிவருவதையும் தேவா விமர்சித்தார். இந்துமகாசபா மதத்தின் பெயரால் கலகம் உருவாக்க நினைக்கும் அமைப்பாக மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் அமைப்பாக இருப்பதாக தேவா விமர்சித்தார். இந்து விவசாயத்தொழிலாளியும் முஸ்லீம் தொழிலாளியும் இரு பக்க நிலப்பிரபுக்களால் சுரண்டப்படுவதை நாம் பார்க்க தவறக்கூடாது என்றார்.
 விடுதலைக்கு பின்னர் நடந்த சோசலிஸ்ட்களின் நாசிக் மாநாட்டில் காங்கிரஸ் அரசாங்கம்  மற்றும் சர்தார் பட்டேல் அணுகுமுறைகளை விமர்சித்து தேவா உரையாற்றினார். காங்கிரஸ் விடுதலைக்கு முன்னர் பேசியது ஒன்றாகவும் ஆட்சிக்குவந்த பின்னர் விடுதலை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது வேறாகவும் இருக்கிறது. அவர்கள் சோசலிஸ்ட்களை வெளியேற்றுகிறார்கள். முதலாளித்துவவாதிகளுக்கும் வகுப்புவாதிகளுக்கும் இடம் தருகிறார்கள். பட்டேல் ஆர் எஸ் எஸ், இந்துமகாசபாவை தட்டிக்கொடுக்கிறார். சண்முகம் செட்டியார் நிதி அமைச்சர் முதலாளிகளின் நலன்களை காப்பார் என்கிறார். கடவுள் காங்கிரசை காப்பாற்றட்டும்  என்பதாக அவர் உரை அமைந்தது
1938ன் இறுதியில் காந்தியே நரேந்திர தேவா காங்கிரஸ்  தலைவராக இருக்கலாம் என்றார். சுபாஷ் வேண்டாம் என்கிற எண்ணம் இருந்தது. நேருவும் இதை மார்ச் 1939ல் குறிப்பிடுகிறார். காந்தி அடிக்கடி சோசலிச எண்ணம் கொண்ட ஒருவர் நேருவோ அல்லது நரேந்திர தேவாவோ வரலாம் என்று சொல்லி வந்தார். ஆனால் நான்தான் சோசலிஸ்ட்கள் யாரும் இப்போது வேண்டாம் எனக் கருதினேன் என நேரு எழுதுகிறார். ராம்காரில் 1940 மார்ச்சில் தேவா சுபாஷின் நடவடிக்கைகளை  விமர்சித்தார். 1942ல் கம்யூனிஸ்ட்கள் மக்கள் யுத்தம் என்று பேசியபோது அதை அவர் ஏற்கவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பில் பாசிச எதி்ர்ப்பில் முதலாளித்துவம் எதிர்ப்பில் நடத்துவதுதான் மக்கள்யுத்தம் என அவர் விளக்கம் தந்தார்.
தேவாவைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது அரசாங்க முறை மட்டுமன்று வாழ்க்கை முறையும் கூட. மனித நடத்தையில் அரசியலுடன் நிற்கக்கூடிய ஒன்றல்ல. அது பழக்கமாகவும் மரபாகவும் மாறவேண்டும் என்பார். மானுட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அது உளப்பூர்வமாக ஊடுருவிய ஒன்றாக மாறவேண்டும் என்பார். சர்வாம்ச கல்வி முறை ஜனநாயகத்தின் முதல்படி.  Socialisation of culture   என்பது மூலமே மனித கூட்டுறவு ஏற்பட்டு பொது நன்மைக்கான முயற்சிகள் கைகூடும். மக்களின் விமர்சனாபூர்வ திறன்களை வளப்படுத்தி தேர்ந்தெடுக்கும் ஆற்றலை மேம்படுத்தும் கல்விமுறை குறித்து அவர் பேசினார். கற்பது என்பது ஒரு வயதில் நின்று போகக்கூடிய செயல் அல்ல என்பதை அவர் வலியுறுத்தி சொன்னார். அரசாங்கமே முக்கிய நிகழ்ச்சிகளில் மக்களை பயிற்றுவிக்கும் வகையில் செயல்படவேண்டும் என்றார். பிறப்பு, வசதி அடிப்படையில் சிறப்பு தகுதிகளை வழங்காது வாய்ப்புகளை அனைவருக்கும் உருவாக்கித்தரும் கடமை ஜனநாயகத்திற்கு இருக்கிறது
இந்து சமுக அமைப்பில் சாதிய ஏற்ற- இறக்க படிமுறைகளும் அசமத்துவமும் நிலவுகிறது. நாகரீகத்தின் வெளிச்சம் படாமல் ஏராள மக்களை வைத்துள்ளோம். அவர்களை கீழ்மையாக நடத்துகிறோம். இப்படிப்பட்ட சமுக முறைகள் ஜனநாயக வளர்ச்சிக்கு தடைகளாகவும் இருக்கின்றன. மனிதர்களை வேறுபடுத்தும் சமுக நடைமுறைகளுக்கு எதிராக உறுதியாக போராடாமல் நம்மால் ஜனநாயகத்தை மேம்படுத்த இயலாது என்ற எச்சரிக்கையை அவர் தந்தார்.
தேவா மேற்கு கிழக்கு தத்துவங்களை ஆழமாக கற்றார். புத்த மத ஆய்வுகளில் ஈடுபட்டார். ருஷ்யா குறித்த மதிப்பீடுகளில் இரண்டு அம்சங்களில் அவர் உடன்படவில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்ஜனநாயகமின்மை என்றார். நவீன கல்வியும் அரசியல் சிந்தனையும் நிரம்பிய புரட்சிகரமானவர்களால்தான் பாட்டாளி- விவசாயிகளுக்கு தலைமை தாங்க முடியும் என அவர் 1951ல் எழுதினார். அளவிற்கு மீறி வானளாவிய அளவு வெகுஜனங்களை புகழ்வது சரியல்ல எனக் கருதினார்.  The revoultionary intelligentia alone can provide the right leadership to the proletariat.... There is no wisdom in extolling the masses to the skies. The peasant and worker find find it hard to comprehend the theoretical aspect of revolution  என்கிற கருத்து அவரிடம் வெளிப்பட்டது.
நரேந்திரதேவா தேசிய புரட்சி்யும் சோசலிசமும் என்கிற புத்தகம் ஒன்றை 1946ல் எழுதினார். கல்லூரி காலத்திலேயே அவரால் கரிபால்டி, மாஜினி எழுத்துக்களை முழுமையாக படிக்க முடிந்தது. குரோபோட்கின், அனந்த குமரசாமி, அரவிந்தர், ஹர்தயால், துர்கானேவ் ஆகியோரையும் படித்தார்.
1934 மே 17ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அமைப்பு மாநாட்டில் அவர் காங்கிரசில் இருந்து செயல்படவேண்டிய தேவையை குறிப்பிட்டு பேசினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தில் பல பலவீனங்கள் இருந்தாலும் காங்கிரஸ்தான் தலைமை தாங்குகிறது என்றார். தற்போதுள்ள கட்டமும் பூர்ஷ்வா ஜனநாயக புரட்சிகர கட்டம்தான் என்பதையும் புரிந்துகொள்ள தவறக்கூடாது என்றார் நரேந்திரா. மார்க்சிஸ்ட் என்பவன் வறட்டு செக்டேரியனாக இருக்கக்கூடாதென்றார். இலக்கு அறிந்து இருக்கும் நிலைகளில் தங்களது பலம் உணர்ந்து செயல்படும் இயக்கவியல் புரிதல் வேண்டும்.. அடிமைப்பட்ட நாட்டிற்குஅரசியல் விடுதலை’ சோசலிசம் நோக்கிய பாதையில் மிக அவசியம். அந்நிய சக்திகளின் ஆட்சி என்பதற்கு முதலாளித்து ஜனநாயகம் விரும்பதக்கதே என்றார் தேவா.
குட்டிமுதலாளிகள் தலைமை எனச் சொல்லி விடுதலைப்போரில் ஒதுங்குவது சோசலிஸ்ட்களின் கண்ணோட்டமல்ல. அதே நேரத்தில் வர்க்கப்போராட்டம் என நாம் சொல்வதை விமர்சிப்பவர்களையும்  ஏற்கமுடியாது. ஒடுக்கப்பட்டவர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பிற்கால  தேதிக்கு ஒத்திப்போட அவர்கள் சொல்வதை ஏற்கமுடியாது என்றார் தேவா. மக்கள்திரள் காலத்தின் அவசியம். சோவியத் ருஷ்யா அனுபவம் வெகுஜனங்களை உலகின் மையவிவாதப்பொருளாக மாற்றியுள்ளது. சோசலிச கருத்து எங்கும் உலாவத்துவங்கிவிட்டது. காங்கிரசும் தீவிர திட்டங்களுடந்தான் நகர்ந்தாகவேண்டும்.
தொழிலாளர்கள் இன்று தொழிற்சங்கவகையில் திரள்கிறார்கள். அவர்கள்  அரசியல் உணர்வு பெறவேண்டும். அவர்களுக்கென அனைத்திந்திய கட்சி உதயமாகிவிட்டது. அவர்கள் தேசிய விடுதலைப்போரில் தலைமைதாங்கும் அளவு வரவேண்டும். அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் விவசாயிகளை அணியாக்கிக்கொள்ளவேண்டும். ஆனால் இயக்கமோ பிரிந்து கருத்துவேறுபாடுகளுடன் கிடக்கிறது. சந்தர்ப்பவாத தலைவர்கள் கையில் சிக்கியுள்ளது. பலநேரம் அவர்களது வேலைநிறுத்தங்கள் வெற்றிபெறாமல் போகின்றன. முதலாளித்துவவாதிகள் பக்கம் ஏகாதிபத்திய அரசு போய் நிற்கும் என அறியும்போது தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் அரசியல் போராட்டமாக மாறும். அவர்கள் தங்கள் போராட்டங்களுக்கு தாங்களே முன்கை எடுக்கிறார்கள். நமது இயக்கத்துடன் உயிர்ப்புள்ள தொடர்புகளை அப்போராட்டங்கள் ஏற்படுத்தவில்லை என்கிற விமர்சன் பார்வையும் அவரிடம் இருந்தது.
ஏகபோகம் ஏகாதிபத்தியம் குறித்து லெனின் எழுதியவைகளை நரேந்திரா சுட்டிக்காட்டி அவ்வுரையை நிகழ்த்தினார். முசோலினையைப்போல ஹிட்லரும் பெருந்தனக்காரர்களின் நிதி செலவில்தான் ஆட்சியேறியுள்ளார். சில சோசலிச திட்டங்களை அவர்கள் முன்மொழியலாம். ஹிட்லர் பேசும் பொருளாதார தேசியம் ஜெர்மனிக்குப் பொருந்தாது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை வீழ்த்தி அதிருப்திக்கு இட்டுசெல்லும். அங்கு மத்தியதரவர்க்கத்தின் ஒருபகுதி சோசலிசத்தை ஒடுக்குவோருடன் கூட்டணி சேர்ந்துள்ளது. உழைப்பாளர்களிடமிருந்து தனித்துக்காட்டிக்கொள்ள அவ்வர்க்கம் விழைகிறது. பாசிசத்தின் எதிர்காலம் என்னாவாகுமோ ஆனால் முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளை தீர்க்காமல் அதை ஒடுக்க மட்டும் அது விழைகிறது என பேசினார் தேவா.
 வேலையின்மை என்பது இல்லாத நாடு ருஷ்யா மட்டுமே.. அங்கு அராஜகம் இல்லை. திட்டமிட்டப்படி பொருளாதாரம் செல்கிறது. ருஷ்யாவின் ஓவ்வொரு அடியையும் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. அங்கு நகரும் கட்டங்கள்தான் நமக்கும் நடக்கும் என்பதும் அல்ல. நம்மை பொறுத்தவரை ஒரே இரவில் உருவாவதல்ல சோசலிசம். அது வளர்ந்து வரவேண்டிய ஒன்று. ’மேட்டர்- மைண்ட்’ என்பதில் மைண்ட்  என்பதை மார்க்ஸ் விட்டுவிட்டார் என்பது சரியல்ல. அதன் உறவு நிலைகளை அவர் பேசாமல் இல்லை. சோசலிசம் வருவதால் மனிதர்களிடம் முன்னேற்றகரமான மாற்றங்கள் வரும் என்கிறோம். இதன்பொருள் சோசலிசம் வந்தால் மனிதன் தேவனாகிவிடுவான் என்பதல்ல. அதேபோல்  சோசலிசத்தில் அனவரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்பதுமல்ல. ஒருவர் உடல்ரீதியாக மூளைரீதியாக பிறரை விஞ்சக்கூடிய நிலை இருக்கவே செய்யும். 1940களில் தேவாவிடம் இருந்த இவ்வகை புரிதல் பிரமிக்க வைக்கிறது. தங்களைப்போன்ற அறிவுஜீவிகள் செய்திடும் தவறை நரேந்திரா சுட்டிக்காட்டுகிறார்.  The Great mistake that we members of the intellectual classes are apt to commit is to relegate the people to the background. The truth is that we are always willing to teach the masses but never to learn from them. This attitude is wrong.
விவசாயிகள் மனநிலையும் மாறத்துவங்கியுள்ளது. மிராசுதாரர் நிலப்பிரபுக்களுடன் மட்டுமே கொண்டிருந்த உறவுகள் என்பதிலிருந்து காங்கிரஸ் மத்தியதரவர்க்கம் நோக்கி அவர்கள் திரும்பியுள்ளார்கள் என்று கணித்தார் தேவா. அவர் சோவியத் அனுபவம், மற்றும் ஸ்டாலின் 17வது கட்சிகாங்கிரசில் வைத்த ஆவணங்களை சுட்டிக்காட்டி விவசாயிகளும் இந்திய புரட்சியும் என்ற  தனது உரையை மார்ச் 1939ல்  நிகழ்த்தினர். அரசாங்கம் கட்டாய வரி வசூல் செய்வதை அவர் கடிந்துகொண்டார். முதலாளித்துவ நெருக்கடியின் பகுதியாகவே விவசாய நெருக்கடியும் எழுவதாக குறிப்பிட்டார். சென்னை, வங்க மாநிலங்களில் விவசாய அமைப்புகள் பலப்பட்டுவருவதை குறிப்பிட்டார். நிலம் சொத்துரிமை என்பதைவிட சமுக உற்பத்தி தேவைக்குரியது என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. இத்தாலி, ஜெர்மனியில்கூட நிலச்சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன. சொத்து என்பது உரிமை மட்டுமல்ல கடமைகளையும் உள்ளடக்கியது என ஜெர்மானிய சட்டம் பேசுகிறது. ருஷ்யா ஒரே ஆணையில் நிலப்பகிர்வை முடித்துவிட்டது. பொருளாதாரவாதிகள் மத்தியிலும் நிலவுடைமை பெரும் அநீதிக்குரியது என்கிற என்ணம் உருவாகியுள்ளது. அது வாடகைக்குரியது என்பதைவிட அதில் உழைப்பவர்களின் பயன்பாட்டிற்குரியது என்கிற கருத்து செல்வாக்கு பெற்றுள்ளது என்றார் நரேந்திர தேவ். ஊரக மக்களை கடன்வலையிலிருந்து காப்பது, விவசாய விளைபொருட்களை இடைத்தரகர் கொள்ளையிலிருந்து காத்து சந்தைப்படுத்த உதவுவது போன்றவற்றை அவர் பேசினார். ஒருங்கிணைந்த விவசாய கொள்கையை அரசு வெளியிட்டு அமுல்படுத்த வற்புறுத்தினார்.
விவசாய அமைப்புகளை கட்டுங்கள் என நாம் சொல்லும்பொது ஏதோ காங்கிரஸிற்கு பகை அமைப்பை உருவாக்குகிறோம் என பேசுவதை ஏற்கமுடியாது என்றார் தேவ். இரண்டும் ஒன்றுக்கொன்று துணைநிற்கும் அமைப்புகள் என புரிந்து செயலாற்றமுடியும் என்றார். தேச விடுதலைப்போராட்டத்தில் பொருளாதார சமுக உள்ளடக்கம் தரும் அவை என்றார். கூலி பிரச்சனையில் சிறுவிவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் முரண்பட்டு தோழமை சேர்மானத்தை தொலைத்துவிடக்கூடாது என்கிற கவலையை பகிர்ந்து கொண்டார் தேவ். நிலப்பிரபுக்களிடம் பெரும் விவசாயிகளிடம் அதிக கூலி கேட்பதில் தவறேதுமில்லை என்றார்.
இதற்கு கிசான் சபாக்களும் அவர்களுக்கு துணைநிற்கவேண்டும். விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் மத்தியில் சாதிய ஏற்றத்தாழ்வு பூசல் நேராவண்ணம் இணக்கம் தேவை என்றார். விவசாய இயக்கம் குறுகிய பெசண்டிசம் என்கிற விவாசாயவாத கன்ணோட்டத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார்.
4
வலது, இடது என இருபகுதிகளிலிருந்தும் நம்மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நாம் சர்வதேசியவாதிகள் எனவும் நமது தேச விடுதலை போராட்ட பங்களிப்பு சந்தேகத்திற்குரியது என வலதுசாரிபிரிவினர் விமர்சிக்கின்றனர். விடுதலை இல்லாமல் சோசலிசம் இல்லை என்பதை நாம் உறுதிபட கூறுகிறோம். அதற்காக செயல்படுகிறோம். இடதுசாரிபிரிவோ காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்கிற இரட்டைப் பிரிவே பூர்ஷ்வாக்கள் ஏற்பாடு என்றும் நாம் ஏமாற்று எனவும் சொல்கின்றனர். பிற தேசங்களை அடிமைப்படுத்தும் எந்த தேச பெருமிதமும் நமக்கு மார்க்ஸ் சொன்னபடி தேவையில்லை என்கிறோம்.  No fatherland  என மார்க்ஸ் சொன்னதை சரியாக உள்வாங்காமல் பேசுவது கூடாது. முதலாளித்துவ வர்க்கம் மட்டுமே தனியாக முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை செய்துவிடமுடியாது என உணர்ந்துதான் நாம் தொழிலாளர் விவசாயி வர்க்க அமைப்புகளை கட்டுங்கள் என்கிறோம். தொழிலாளர் பலம் வாய்ந்த வேலைநிறுத்தங்களை நடத்துகின்றனர். அவை பெரும்பாலும் பொருளாதார கோரிக்கைகளில் அழுந்தியுள்ளன. அரசியல்ரீதியாக பலவீனமாகவே உள்ளன. ருஷ்யா போல் நிலைமை இல்லை என உணர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பிரதான மேடை என்கிறோம் என்றார் தேவா.
கம்யூனிஸ்ட்கள் கொள்கை நடைமுறை பற்றி பேசிவிட்டு எதிர்மறையாக நடந்துகொள்வதாக அவர் விமர்சித்தார். மூன்றாவது அகிலம்கூட தற்போதெல்லாம் ருஷ்யாவின் உள்நாட்டுகொள்கையின் விரிவாக்கம் போலவே பேசுகிறது என்ற விமர்சன பாரவையும் அவரிடம் இருந்தது. மூன்றாவது அகிலத்தை ருஷ்யாதேர்க்காலில் மட்டும் கட்டிவைத்துக்கொள்வது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்றார். கம்யூனிஸ்ட்கள் அதை அப்படியே இறக்குமதி செய்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள் என விமர்சித்தார்.
 A party that wants to establish its hegemony over the national movement must send its  members to all the classes; and it is in this way its political influence can grow. Socialists must be found whereever the masses are; and they must be in the forefront of every anti imperilaist action and every battle that is waged in the interests of the masses.
  பாசிசம் குறித்தும் அவர் விவாதிக்கிறார். இன்று பாசிசமா சோசலிசமா என்ற நிலை வந்துவிட்டது. முதலாளித்துவ ஜனநாயகம் எதிர்காலமற்று நிற்கிறது. வெகு மக்களுக்கு ருஷ்யா நிலைமைகள்தான் தீர்வை தந்துள்ளது என்பதை தேவா ஏற்று அதையும் வெளிப்படுத்தி வந்தார்.. காங்கிரஸ் சோசலிசத்திற்கான மேடையல்ல ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கான பரந்தமேடை என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம் என விளக்கமளித்தார்.
உபி சட்டமன்ற விவாதம் ஒன்றில் செப்4, 1937 Political democracy is meaningless and farcical unless it is accompanied by economic emancipation equality and unless it stands for the economic emancipation of the masses. It is the duty of the majority community to win the confidence of minorities. It is not enough for a majority to think that it is doing justice to the minorities but  are convinced that justice is being done to them. என அவர் உரக்க கருத்தாடல் செய்தார்.
 நாம் சொல்லக்கூடிய காங்கிரஸ் சோசலிஸ்ட் திட்டம்தான் லெனின் கூற்றுப்படியான ருஷ்யவகைப்பட்ட சோசலியல் டெமாக்ரசியின் இந்திய வடிவமாக அமையும் என 1938ல் அவர் நம்பிக்கையை தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி நம் கட்சியின் மார்க்சிய கேரக்டரை புரிந்துகொள்ளாதது துரதிருஷ்டமானது என்றார் தேவ். சோசலிச சக்திகளின் ஒற்றுமையை நாம் விழைகிறோம். சில அடிப்படைகளில் குறிப்பாக கட்சியில் உள் விமர்சனம் உட் ஜனநாயகம்  உறுதிப்படுத்தப்பட்டு இரு கட்சிகளையும் கலைத்துவிட்டு புதிதாக மார்க்சிய கட்சியை உருவாக்கி செயல்படலாம் என்கிற முன்மொழிவை அவர் துணிச்சலாக தந்தார். இருபக்க பிரதிநிதிகள் கமிட்டி அமைத்து விவாதிக்கலாம் என்றார். எந்திரவகையிலான ஒற்றுமையை தான் சொல்லவில்லை என்றார். எம் என் ராய் கூட காங்கிரஸ் புரட்சிகர ஜனநாயக இயக்கம் என பேசத்துவங்கிவிட்டார். ஆனால் கம்யூனிஸ்ட்கள் அதை வெறும் முதலாளித்து அமைப்பு என்கிற பார்வையிலேயே உள்ளனர் என்கிற விமர்சனம் அவரிடம் இருந்தது. 1935ல் அகிலத்தின் 7வது மாநாடு அய்க்கிய முன்னணி பற்றி வழிகாட்டியது. 1936ல் தத்- பிராட்லி தீசிஸ் வந்தது . அதில் காங்கிரசை வலுப்படுத்துவது பேசப்பட்டது என தேவ் குறிப்பிட்டார்.
 1942ல் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பட்டை அவர் மார்க்சிய பார்வையல்ல என  விமர்சித்தார்.  The communists have betrayed socialism and have distorted Marxism and dialectics to justify their unconditional support to this war..it is the task of the socialists and communists to expose the imperialist character of the war.  நடைமுறைக்கும் கொள்கைக்கும் இடையேயான உறவு குறித்து லெனினிய பார்வையை தேவ் வலியுறுத்தி வந்தார்.  Theory divorced from practice breeds a pestilence of thought. Similarly action not informed by principles and not inspired by idealism is blind and chaotic
காங்கிரஸ் சோசலிஸ்ட்களாக இருந்து சோசலிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர்களில் ஜேபி, லோகியா உள்ளிட்ட பலரும் மார்க்சியத்திலிருந்து விலகிப் போன நிலையில் நரேந்திராவும் யூசுப் மெஹ்ரலி போன்றவர்கள் மட்டும்தான் இறுதிவரை மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்தனர் என பரஞ்பே தனது தேவா கட்டுரையில் எழுதினார். Marxist communism is really democratic socialism  என்பதை அழுத்தமாக பேசியவர் தேவா.  Marxism is entirely opposed to Romanticism என்பார். ஜனநாயகமின்றி சோசலிசம் கட்டமுடியாது என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். சோசலிசம் கட்டுவதற்கு குறுக்குவழிகள் என ஏதுமில்லை என்றார்.
 பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக 1955ல் அவர் கயா மாநாட்டில் ஆற்றிய உரை மிகவும் உயர்ந்த ஒன்றாக சோசலிஸ்ட்களால் கொண்டாடப்படுவதை பார்க்கமுடியும். சோசலிச மனிதாபிமானம்  Social Humanism  என்பதை அவர் பேசிவந்தார். அது கலாச்சார உரிமைகளை காத்திட உதவும் என்றார். சோசலிஸ்ட் தலைவர் பிரேம் பசின் குறிப்பிடும்போது  Deva renounced force but not class struggle  என்றார். பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை கயாதீசிஸ் என்கிற பெயரில் 1955ல் தேவாவால் எழுதி வெளியிடப்பட்டது. அதில் ஆளும் வர்க்கம் பிற வர்க்கம் மீது அன்பு பாராட்டி எதையும் விட்டுக்கொடுத்து விடாது. அதற்கு வரலாறில்லை. இந்திய முதலாளித்துவம் பிற நாடுகளின் முதலாளித்துவத்தை விட கருணை கூர்ந்தது என்பதற்கு ஆதாரமில்லை என்று குறிப்பிட்டிருந்தார் தேவா. சோசலிசம் என்பது வெறும் அரசியல் மற்றும் பொருளாதாரமல்ல. அது நன்னெறி மற்றும் கலாச்சார கூறுகளையும் கொண்டது என்றார்.
அவர் தன்னை தலைவர் என நினைத்துக்கொள்ளாமல் இருந்தவர். இதை மது லிமாயி போன்றவர்கள் குறிப்பிடும்போது  Not being ambitious was perhaps a weakness. என்றனர். ஜே பி, லோகியா, தேவா என்கிற மூன்று பெரும் ஆளுமைகள் இணைந்து இணக்கமாக வேலை செய்திருந்தால் சோசலிஸ்ட் கட்சியின் முகமே இந்தியாவில் செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்கிற தனது ஆதங்கத்தை மதுலிமாயி வெளிப்படுத்தியிருந்தார். தேவாவின் ஆதங்கமோ மார்க்சிய ஒளியில்  மேம்பட்ட புரிதலில் கம்யூனிஸ்ட்களும் சோசலிஸ்ட்களும் இணைந்து பணியாற்றிருக்கவேண்டும் என்பதாக இருந்தது.

Ref:
1.       Narendra Deva A profile by Qurban Ali
2.       Narendra Deva The cradle of Socialism and Gandhism  by Pratyay Dutta
3.       Narendra Deva In the Freedom Movement-Anil Nauriya
4.       Socialism and the National revolution- Narendra Deva
5.       Narendra Deva and the socialist movement- H K Paranjpe




Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு