https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, January 24, 2018

Centenary of Gandhi Guided Textile workers Strike of Ahmedabad

                                          காந்தியடிகள் வழிகாட்டிய வேலைநிறுத்தம்
                                   பஞ்சுமில் தொழிலாளர் வேலைநிறுத்த நூற்றாண்டு
                      -ஆர்.பட்டாபிராமன்
அகமதாபத் மில் தொழிலாளர்கள் பிளேக் கால போனஸ் என 1917ல் 70 சதம் பெற்று வந்தனர். பிளேக் போனஸை நிறுத்தி  பதிலாக 20 சதம் ஊதிய உயர்வு தருவதாக மில் முதலாளிகள் கூறியது பிரச்சினையானது, தொழிலாளர் 50 சதமாவது வேண்டும் என்றனர். காந்தி தலையிட்டபின்  35 சதம் என்பதில் உறுதியாக இருப்பது என்பது தொழிலாளர் கூட்டத்தில் ஏற்கப்பட்டது. சிலபகுதி தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். முதலாளிகள் கதவடைப்பை செய்து மில்களை மூடினர்.  காந்தி கலெக்டரை நடுவராக கொண்டு  பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்றார்.. இப்போராட்டம் 22 நாட்கள் நீடித்தது . பின்னர் மார்ச் 18, 1918ல்  வேலைநிறுத்தம் முடிவிற்கு கொணரப்பட்டது.

வேலைநிறுத்தம் நடந்த நாட்களில் காந்தி தொழிலாளர் மத்தியில் தினம் அறிக்கை வாயிலாகவும் உரைகள் வாயிலாகவும் என்ன பேசினார் என்பது  வரலாற்று ஆவணம் மட்டுமல்ல.  இன்றைக்கும் தேவைப்படும் அனுபவமாக  காந்திய சிந்தனையாளர்களால் பார்க்கப்படுகிறது. காந்தியடிகள் தனது சூழலில் நேர்மையின்மையையோ, போலித்தனத்தையோ, எதையும் ஆழ்ந்து கற்காமல் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளுதலையோ, கபடத்தையோ, தன்னை முன்வைத்துக்கொள்ளுதலையோ, யாரை எதிர்த்து போராட்டமோ அவர்களை தரக்குறைவாக பேசுவதையோ பொறுத்துக்கொள்ளாமல் இருந்ததை இந்நாட்களின்  பதிவுகளில் பார்க்கமுடிகிறது.
1918 பிப்ரவரி  மாதத்தில் வேலைநிறுத்தம் என்பதை அறிந்து காந்தியை அமைதி உருவாக்க உதவவேண்டும் என அம்பலால் சாரபாய் அழைக்கிறார். அம்பலால் மில் முதலாளி. காந்தியுடன் நின்ற சோசலிச தாக்கம் கொண்ட அனுஷ்யா பென்னின் சகோதரர். சங்கர்லால் பேங்கர் முலம் காந்தி தொழிலாளர் நிலைமைகளையும் அவர்களின் கோரிக்கை குறித்தும் தீர விசாரித்து அறிந்தார். கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்தார்.
பிப்ரவரி 22, 1918 லாக் அவுட் செய்த  முதலாளிகள் மார்ச் 12 அன்று கதவடைப்பை விலக்கிக்கொண்டு தொழிலாளர் மத்தியில் பிளவை உருவாக்க முயற்சித்தனர். காந்தி மார்ச் 15 முதல் உண்ணாநோன்பு மேற்கொள்கிறார். அன்னிபெசண்ட் முதலாளிகளிடம் காந்தியின் முக்கியத்துவம் பற்றியும் சிறிய நிகழ்வுகளில் அவர் உடல் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் எடுத்துரைக்கிறார். பின்னர் மார்ச் 18 அன்று நடுவர் தீர்ப்பிற்கு உடன்பட்டு பிரச்சினை முடிவிற்கு கொணரப்படுகிறது.

காந்தியடிகள் அகமதாபத் பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டத்தில் பங்கேற்று வந்தவுடன் மில் உரிமையாளர் அசோசியேஷனுக்கு  கடிதம் ஒன்றை பிப்ரவரி 21, 1918ல் எழுதினார். எட்டணாசலுகை பெறுவதற்கு தொழிலாளர் சில நிபந்தனைகளை ஏற்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.  எந்த ஆவணத்திலும் தங்களின் ஆலோசகர்களிடம் கலந்து பேசாமல் கையொப்பம் இடவேண்டாம் என அவர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளேன்.. தகராறில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட ஆட்சியரை நடுவராக கொண்டு நடுவர் தீர்ப்பை எட்டலாம். சில  மில்லில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் இறங்கிவிட்டனர். அவர்கள் வேலையில்லாமல் இருப்பது உகந்த சூழலாகாது என்பதை அக்கடிதம் வாயிலாக காந்தி தெரிவித்தார்.
மில் உரிமையாளர்கள் என்ன சம்பளம் தருகிறார்கள் என்கிற விவரத்தை எனக்கு கொடுக்க வேண்டுகிறேன். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை கணக்கில் கொள்ளாமல்கூட மில் உரிமையாளர்கள் பல்வேறு கேடகரி தொழிலாளர் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். எந்த உறுதிமொழியும் தராமல் தங்கள் பிரதிநிதிகள் எங்களுடன் விவாதத்தில் பங்கேற்க இயலுமா? நான் தொழிலாளர் பக்கம் என்கிற கருத்து நிலவுகிறது. நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அவர்களிடம் நியாயம் இருக்கிறது. கடினமான இவ்வேலையில் தங்கள் ஒத்துழைப்பு இருக்கும் என நம்புகிறேன். இக்கடிதத்திற்கு பதில் தரப்பட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். நாங்கள் என்ன விவாதிக்கிறோம் என்பதை விரைவில் தெரியப்படுத்துகிறோம் என அக்கடிதம் சென்றது.
பிப்ரவரி 26 1918 அன்று அவர்கள் வெளியிட்ட துண்டுபிரசுரத்தில் வேலைநிறுத்தம், நடுவர் மன்றம் பற்றி விவரிக்கப்பட்டது. முதலாளிகள் பிப்ரவரி 22, 1918ல் கதவடைப்பு செய்தனர். பிளேக் போனசை நிறுத்தியதால் சில பகுதி தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்தனர். கலெக்டர் தலைமையில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காந்தி, வல்லபாய் படேல், சங்கர்லால் ஆகியோர் தொழிலாளர் தரப்பிலும், மில் உரிமையாளர் தரப்பில் அம்பலால் சாராபாய், ஜகபாய் தல்பத்பாய், சந்துலால் இடம் பெற்றனர். நடுவர் தீர்ப்பிற்கு முன்னர் வேலைநிறுத்தம் என்பதில் முதலாளிகள் கோபம் அடைந்தனர். ஊதிய உயர்வு 20 சதம், இல்லையெனில் வேலையிலிருந்து வெளியேறலாம் என்றனர்.
அறம்சார்ந்த போராட்டம் (Righteous Struggle)  என்ற அடிப்படையில் தினம் துண்டறிக்கைகளை தொழிலாளர்களுக்கு கற்பிக்கும் வகையில் அனுஷ்யா பென் சாரபாய் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. மகாதேவா தேசாய் குறிப்புகளின்படி காந்தியே அவற்றை எழுதினார் என அறியமுடிகிறது. இவ்வறிக்கைகள் மாலைநேர கூட்டங்களில்  தொழிலாளர் மத்தியில் படிக்கப்பட்டன.
தங்களுக்கு 50 சத உயர்வு வேண்டும் எனக் கோரி வந்த தொழிலாளர்களை 35 சதம் நியாயமாக இருக்கும் என்பதை ஏற்கவைத்து அதைக்கோருவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.. 35 சத உயர்வு பெறாமல் வேலைக்கு திரும்புவதில்லை, அமைதியான வன்முறையற்ற வழிகளில், சொத்துக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாமல் போராட்ட உறுதிமொழிகளை தொழிலாளர் ஏற்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பிப்ரவரி 26 அன்று கதவடைப்பின் 5வது நாள். காந்தி தொழிலாளர் மத்தியில் உரை நிகழ்த்தினார். போராட்டம் விரைவில் முடியாமல் கூட போகலாம். சாகவே நேர்ந்தாலும் போராட்டத்தை கைவிடக்கூடாது. பணமில்லாமல் இருக்கலாம். உழைப்பதற்கான கரங்களை பெற்றுள்ளீர்கள். கோரிக்கையை 100 சதம் உயர்வு எனக்கூட நியாமில்லாமல் வைக்கலாம். சூழலில் எது சாத்தியமோ அதை கண்டறிந்து திருப்தி அடைய வேண்டும் என்பது உரையின் சாரமாக இருந்தது.
அடுத்தநாள் பிப்ரவரி 27 அறிக்கையில் உலகம் தொழிலாளர் இல்லாமல் நகரவில்லை. நீங்கள் இல்லாமல் செல்வத்தை எவரும் அனுபவிக்கமுடியாது. இவ்வளவு சக்தி கொண்ட நீங்கள் சில மேலான குணங்களையும் கற்கவேண்டும். பொய் ஏதுமின்றி உண்மையாக இருக்க கற்கவேண்டும். உறுதியாக நிற்கும் தொழிலாளரை எவராலும் தோற்கடிக்கமுடியாது. தொழிலாளருக்கு தைரியம் தேவை. வேலை போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயத்தால் நாம்  அடிமைப்போல் ஆகிவிட்டோம். நியாமான ஊதியம் கேட்காமல் இருந்தால் பலர் வேலைக்கு வைக்க தயங்குவர். நமக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என்கிற வகையில் எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி வேண்டாம். நாம் மீண்டும் அவர்களிடம்தான் வேலை செய்யப்போகிறோம் என்று அவ்வறிக்கை பேசியது. அன்று மாலை கூட்டத்தில் உங்கள் வெற்றி உங்கள் கையில்தான் இருக்கிறது என காந்தி உரையாற்றினார். உங்களின் பலம்தான் உங்கள் வெற்றியை உறுதிசெய்யும் என்றார்.,
பிப்ரவரி 28 அன்று வெளியிட்ட அறிக்கையில் நாம் வேலையில்லை என்பதால் சோம்பித்திரியக்கூடாது என்பது வற்புறுத்தப்பட்டது. சூதாட்டம்பகல்தூக்கம், முதலாளிகள்  மற்றும் பிறர் குறித்து அரட்டை வம்பு பேசுதல்  கூடாது. அடிக்கடி தேநீர்கடை சென்று நேரம் வீணடிப்பதும் கூடாது. கதவடைப்பு செய்த மில் வாயிலில் சென்று நிற்றல் கூடாது. வேலைக்கு செல்லும் காலத்தில் நாம் வாழும் இடங்களை தூய்மையாக வைக்க நேரமிருந்திருக்காது. இப்போது செய்யலாம். படிப்பதற்கு நேரம் கிடைத்துள்ளது. புத்தகம் படிக்கலாம். நூலகம் செல்லலாம். படிப்பறிவு அற்ற பிற தொழிலாளர்க்கு கற்றுத்தரலாம். தையல், கார்பெண்டர் வேலை தெரியும் எனில் அதை செய்யலாம். எந்த வேலையும் தகுதி குறைந்ததாக கருதாமல் செய்து பழகலாம். கதவடைப்பு கால நாட்களை பயனுள்ளதாக மாற்றிட வேண்டும் என்பது பேசப்பட்டது.

மார்ச் 1 அன்று வெளியிட்ட அறிக்கையில் நாம் பொதுமக்களிடம் தொழிலாளர் துயரை எடுத்து செல்லலாம். அவர்களுக்கு உணவளிக்காமல் நாம் உண்ணவேண்டாம். முடியாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்வோம் என்பன வலியுறுத்தப்பட்டது. நாம் முழு பொறுப்புணர்வுடன் இப்பிரச்சினையில் நிற்கிறோம் என்பதை அவ்வறிக்கை மூலம் காந்தியடிகள் வெளிப்படுத்தினார். அதே நாளில் அம்பாலால் சாரபாய்க்கு கடிதம் ஒன்றை அவர் எழுதுகிறார். தங்களின் முயற்சி வெற்றிபெற்றுவிட்டால், ஏற்கனவே ஒடுக்கப்பட்ட அந்த ஏழை தொழிலாளர்கள் மேலும் ஒடுக்கப்படுவார்கள். பணத்தால் அனைவரையும் வாயடைக்க செய்யமுடியும் என்றாகிவிடும்.. உங்களின் முயற்சிகளை விஞ்சி தொழிலாளர் வெற்றி பெற்றால் முடிவை தோல்வியாக நீங்கள் உணரக்கூடும். பணம் ஆளவேண்டும் அதன் கர்வம் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா ? உங்களின் தோல்வியில் வெற்றி இருக்கிறது என  நீங்கள் உணரவில்லையா? ஆழமாக யோசித்து மனதின் சிறு குரலுக்கு செவிமடுக்க வேண்டுகிறேன். என்னுடன் உணவருந்த வரலாமா என்கிற அழைப்புடன் அக்கடிதத்தை காந்தி முடித்திருந்தார்..
 மார்ச் 2 அன்று அடுத்த அறிக்கை வெளியானது. 35 சத ஊதியம் கிடைத்து உள்ளே செல்லலாம். அதை பெறமுடியாமல் சென்றால் மனம் நொந்து மீண்டும் அடிமை போல் செல்ல நேரிடும்அப்படியொரு நிலை ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல என காந்தி கருதினார். எனவே 35 சதம் பெற்று வேலைக்குப்போகும் சூழல்தான் உகந்தது என வலியுறுத்தினார். தொழிலாளர் வெற்றி பெற்றால் தலைக்கனம் கூடிவிடும் என அஞ்சுவது பேதமை என்றார். உலக வரலாறு தொழிலாளர் ஒடுக்கப்பட்டால் அவர்கள் சமயம் கிடைக்கும் போது புரட்சிகரமாக எழுந்துள்ளார்கள் என்பதாகவே இருக்கிறது என்றார் காந்தி.
 தொழிலாளர்களின் ஆலோசகர்களையும் தொழிலாளர்களையும் பிரிப்பது என்கிற செயலிலும் ஒருவர் வெற்றி பெறமுடியாது. தொழிலாளர் கோரியது கிடைக்கப்பெற்றால் திருப்தி கொண்டவர்களாக பணி செய்வார்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களின் ஆலோசகர் மூலம் கூட  அவர்களை சரி செய்யமுடியும். தொழிலாளரின் வெற்றியில்தான் முதலாளிகளின் வெற்றியும் அடங்கியுள்ளது. அவர்களின் தோல்வி முதலாளிகளின் தோல்வியும்கூட.. இதுதான் தூய நியாயம் .இதற்கு பதில் மேற்கத்திய நியாயத்தை அனுசரிப்பது சாத்தானின் நியாயமாகிவிடும் என்றார் காந்தி.
 மார்ச் 3 அன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த  தூய நியாயம் (pure Justice ) என்பதை மேலும் அவரது கண்ணோட்டத்தில் விளக்கினார். எஜமான் மற்றும் வேலைக்காரர்களின் பண்டைய இந்திய நல்லுறவுகள் பற்றியும்,. அதிகமாக வேலை கூடிவிட்டது என்பதால் கூலி உயர்வு என்பதோ, வேலையே இல்லை என்பதால் கூலி குறைப்போ இல்லாத காலம் இருந்தது . இருபக்க கடமை உணர்ந்த காலமது என சொல்கிறார்.
தொழிலாளர் தரப்பிலும் செய்யமுடியாத கோரிக்கைகளை வைப்பது சாத்தான் நியாயமாகவே இருக்கும். செய்ய முடிந்தவைகளை செய்ய முதலாளிகள் மறுப்பதும் சாத்தான் நியாயமே என்றார் காந்தியானைக்கூட்டம் எரும்புகளை  நசுக்குவது போல் முதலாளிகள் ஒன்று சேர்ந்து கொள்வது தர்மம் அல்ல என்றார் காந்தி. ஜைன , வைஷ்ணவ நம்பிக்கை கொண்ட முதலாளிகள் தொழிலாளர்க்கு தரவேண்டியவற்றை மறுப்பது சரி என கருத மாட்டார்கள். எனவே மேற்கு நியாயத்திலிருந்து அனைவரும் வெளிவந்து பண்டைய இந்திய சிந்தனைப்படி நியாயம் செய்வோம் என்றார் காந்தி.
    மார்ச் 4 அன்று வெளியிட்ட அறிக்கையில் தென்னாப்ரிக்கா ரயில்வே தொழிலாளர் போராட்ட அனுபவத்தை அவர் விவரித்தார். அவர்கள் கூடுதல் உயர்வு என்பதோடல்லாமல் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற சாத்தான் நியாய போராட்டம் நடத்தினர். இதனால் அரசிற்கும் அவர்களுக்க்கும் பெரும் கசப்பு வளர்ந்தது. சில அப்பாவிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் மற்றவரின் மோசமான செயல்களை முன்வைத்து பேசினர். யாருக்கும் நியாயம் பற்றிய கவலையில்லாமல் இருந்தது. இந்திய தொழிலாளர் 20000 பேர்  சத்யாக்கிரகத்தில் இறங்கினர். அவர்களுக்கு அரசை தூக்கி எறிவதல்ல நோக்கம். அய்ரோப்பிய தொழிலாளர் இதை பயன்படுத்த விழைந்தபோது, இந்திய தொழிலாளர் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். தான் யாரை எதிர்த்து போராடுகிறோமோ அவர்களின் சங்கடமான சூழலை சாதகமாக்கிக் கொள்ள இந்திய தொழிலாளர் விரும்பவில்லை. அவர்கள் கோரிக்கைகளில் வெற்றியும் பெற்றனர் என்ற அனுபவத்தை காந்தி பகிர்ந்துகோண்டார். சத்தியாக்கிரகத்தில் இருதரப்பும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கமுடியாவிட்டால் கூட ஒரு தரப்பு உறுதியாக இருந்தாலும் அது வெற்றியடையும்  என்றார்.
மார்ச் 8 அன்று வெளியிட்ட அறிக்கையில் தென்னாப்பிரிக்கா மண்ணில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறையில் உயிர்நீத்த 75 வயது விவசாய தொழிலாளி ஹர்பத்சிங் பற்றியும்ட்ரான்ஸ்வாலில் வர்த்தகராக இருந்த மொகமத் கசாலியா சிறையில் வாடி தனது வியாபாரம் முழுமையாக இழந்தது குறித்தும், 17 வயதில் சிறைப்பட்டு  தனது முழு உடல் சுகவீனத்தை தாங்கி சிறைதண்டனைக்காலம் முழுக்க அனுபவித்து வெளிவந்த ஒருவார காலத்திற்குள் மரித்துப்போன வள்ளியம்மை பற்றியும் காந்தி எடுத்துரைக்கிறார். அவர்கள் பொதுநன்மைக்காக தியாகம் செய்தவர்கள்.. தொழிலாளர்களாகிய நீங்கள் உங்கள் மேம்பாட்டிற்காக போராடும்போது அப்போராட்டம் உங்களுக்கு சற்று எளிமையான ஒன்றே என காந்தி எடுத்துரைக்கிறார். அந்த உதராணங்கள் உங்களுக்கு மேலும் உத்வேகம் தருவதற்காக சொல்லப்பட்டன என்றார்..
 மூன்றுமாதம் ஊதியமின்றி, வீடுவாசலை விற்று உணவுப்பொருள் பெறக்கூட காசின்றி அவர்கள் அவதிக்கு உள்ளானதை குறிப்பிடுகிறார். அதில் இந்து முஸ்லீம் என அனைத்து தரைப்பினரும் இருந்தனர். சிறையில் கஷ்டப்பட்ட அப்துல் காதர், சூரத்தின் ததமியா காஜி, தமிழகம் சார்ந்த 17 வயது இளைஞர்கள் நாராயணசாமி, நாகப்பன் கடுமையான சிறைக்கொடுமைகளில் தியாகம் செய்ததை அவர் குறிப்பிடுகிறார்.
மார்ச் 7 அறிக்கையில் வட்டிக்கு வாங்கி கொடும் அவதியில் மில் தொழிலாளர் வாழ்வதை தாம் அறிந்ததாக குறிப்பிடுகிறார். 35 சத உயர்வு அவர்களை மீட்டுவிடாது. இரு மடங்கு ஊதியம் பெற்றால் கூட அவர்கள் வறுமை நீங்காது. ரூபாய்க்கு அணா வட்டி கொடுக்கிறார்கள். அதாவது ஆண்டிற்கு 75 சத வட்டி கட்டுகிறார்கள். நாட்டில் நிலவும் 12 முதல் 16 சதமே கூடுதல் வட்டிதான். சிலர் ரூபாய்க்கு 4 அணா கொடுத்து வருகின்றனர். அதாவது 300 சத வட்டி. வட்டி கட்டியே அவர்கள் மீளாமல் மாள்வர். புனித குரான் வட்டியை தவறு என்கிறது. எனவே  அதிக வட்டி தரமுடியாது என்கிற போராட்ட உறுதி தேவைப்படுகிறது. கூட்டுறவு கடன் நிறுவனங்களை தொழிலாளர்களுக்கு துவங்கி இப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்கிற ஆலோசனையை அவர் முன்வைத்தார்.
 மார்ச் 11 அன்று வெளியிட்ட அறிக்கையில் முதலாளிகள் செயல்கள் பற்றி பேசினார். கதவடைப்பு விலக்கப்படும். 5 தொழிலாளரை வேலைக்கு அழைத்துவரக்கூடியவர்க்கு தனி சன்மானம் வழங்கப்படும் என்கின்றனர். இதையெல்லாம் கேள்விப்பட்டு நாம் பதிலுக்கு ஏதும் செய்ய வேண்டாம் என்றார் காந்தி. முதலாளிகள் தொழிலாளர்களை பெறுவதற்கு எடுக்கும் முயற்சி அவை. தொழிலாளர் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வியை முன்வைத்து  அவர் விளக்கினார்.. ஊதிய உயர்வு 35 சதம் இல்லையெனில் திரும்ப மாட்டோம் என்பதில் உறுதி காட்டுவது- விவரம் அறியாமல் யாராவது 20 சத உயர்விற்கு போனால் அவர்களிடம் நிலைமைகளை எடுத்துரைப்பது. ஆனால் அவர்களை நாம் தொந்திரவு செய்யக்கூடாது. காலைதானே வேலைக்கு செல்லமுடியும். நாம் 7.30 க்கு கூடுவோம். கூட்டத்திற்கு அனைவரையும் வரவழைக்க முயற்சி எடுப்போம். ஒன்றை நாம் அறியவேண்டும். உங்கள் உழைப்பு திருடப்படமுடியாதது. ஆனால் முதலாளிகள் தவறாக நிர்வாகம் செய்தால் வீழ்வர். உழைக்க முடியும் என்பவர் வீழமாட்டார். சோம்பேறிகள் வேண்டுமானால் பட்டினி கிடக்கலாம்  என தொழிலாளர் சோர்ந்துவிடாமல் அவர்களுக்கு நம்பிக்கையை அவர் விதைத்தார்.
 மார்ச் 12 அன்று கதவடைப்பை முதலாளிகள் விலக்கி கொண்டனர். எனவே இனி வேலைக்கு செல்லவில்லை எனில் அந்நாட்கள் வேலைநிறுத்த நாட்களாகும் . சத்தியம் மீறி செல்பவர் பலவீனமானவர்கள். அவர்களை கொண்டு முதலாளிகளால் ஏதும் செய்யமுடியாது. சத்தியம் பக்கம் நிற்போம் என காந்தி உரையாற்றினார். கையில் திறமை உள்ள தொழிலாளி இந்த முதலாளி இல்லையெனில் வேறு வேலை தேடிக்கொள்ள முடியும். நீங்கள் உறுதியாக இருந்தால் கல்நெஞ்சமும் கரையும் என்றார் காந்தி. பொதுவேலையில் நாம் இந்து முஸ்லீம் குஜராத்தி மதராசி என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. அனைவரும் ஒன்றுதான் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அதே தினத்தில் அம்பலால் சாரபாய்க்கு கடிதம் எழுதினார். அதில் தனது நிலையை அவர் தெளிவுபடுத்துகிறார். யாராவது தொழிலாளி மில்லிற்கு போகவிரும்பினால் அவரை மில்வரை கொண்டுவந்து விட்டுவர தான் தயாராக இருப்பதாக எழுதினார். அதே நேரத்தில் உங்கள் வீட்டிற்கு வர இது சரியான நேரமில்லை. உங்கள் குழந்தைகளை பார்க்கவேண்டும் தான். ஆனால் பின்னர் பார்க்கலாம் என குறிப்பிடுகிறார்.
  மார்ச் 15 கூட்டத்தில் எந்திரங்களை கேலி செய்து நாம் பேசவேண்டியதில்லை. அவற்றில்தான் நீங்கள் போய் வேலை செய்யப் போகிறீர்கள். கவிஞர்கள் முதலாளிகளை கடுமையான வார்த்தைகள் கொண்டு எழுதவேண்டாம் என்றார். அன்னிபெசண்ட் அம்மையார் அக்கூட்டத்தில்  பங்கேற்று சுயராஜ்யம் பற்றி உரையாற்றினார் .
மார்ச் 15 அன்று வெளியிட்ட அறிக்கையில் பணக்காரர்களுக்கு பணம் பலம் எனில் உழைப்பவர்க்கு உழைப்பு பலம் என்றார் காந்தி. பணத்திற்கு வேலை கொடுக்காத பணக்காரனும் உழைக்க தயங்கும் தொழிலாளியும் பட்டினிதான். உழைப்பதற்கு தயங்குபவன் உண்பது  உரிமையாகாது. எனவே நாம் ஏதாவது வேலை செய்யவேண்டும். கடல்நீர் உப்புத்தன்மையை இழக்கமுடியாது  என்பது போலவே தொழிலாளர் உழைப்பு எனும் குணத்தை இழந்துவிடமுடியாது என்றார்என்னைப் பொறுத்தவரை நாமே முன்வந்து உண்மைக்காக ஏற்கும் துன்பங்கள் வீண்போகாது. பலனைத்தரும் என்று நம்பிக்கையூட்டினார்.
 காந்தியும் அனுஷ்யா பென்னும் காரில் வருவார்கள், போவார்கள் பட்டினியா நம்போல் கிடப்பார்கள் என்கிற விமர்சன பேச்சு காந்தியை எட்டுகிறது. அவர் தனது நிலையை விளக்கி பேசுகிறார். நான் உங்கள் வாழ்க்கையுடன் விளையாடவரவில்லை. எனக்கு உண்மை உயர்ந்தது போலவே உங்களுக்கான சத்தியமும் உயர்ந்தது என  கருதுகிறேன். நான் விழிப்புடன் மனத்தூய்மையுடன்தான் உங்களுடன் சேர்ந்து நிற்கிறேன் என்றார். உங்களுடன் வீழவும் தயார்தான் என்றார்.
பிரச்சினை தீரும்வரை காரில் ஏறப்போவதில்லை என்றார் காந்தி. உண்ணாநோன்பு மேற்கொண்டார். என் மீது இரக்கம் காண்பித்து 35 சதம் தரவேண்டியதில்லை. தொழிலாளர் கோரிக்கையில் நியாயம் உணர்ந்து தந்தால் போதும் என்றார். தொழிலாளர் கூட்டத்தில் திலகர் மகராஜ் அவர்களின் பெருமிதங்களை  எடுத்துரைத்தார். மதன் மோகன் மாளவியா பற்றி சொல்கிறார். இவ்வுலகில் கபடங்கள் அதிகமாகவே உள்ளன. அந்த சூழலில் இருக்கமுடியுமோ எனக்கூட நினைத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை நான் திடிரென உங்கள் மத்தியிலிருந்து காணாமல் போனால் ஆச்சரியப்படாதீர்கள்- அப்படி போனால் திரும்ப மாட்டேன் எனக்கூட   சொல்லியிருக்கிறேன் என்பதை தெரிவித்தார்.
முதலாளிகளிடம் போய் 35 சதம் தாருங்கள் அப்போதுதான் உண்ணாநோன்பை முடிப்பேன் என சொல்வதும் முறையாகாது என்றார் காந்தி. அவர்கள் முடிவை சொல்லும்வரை காத்திருக்கலாம் என்றார். தொழிலாளர்கள் சபதம் எடுக்கலாம். எங்களை கலந்து எடுக்கும் உறுதிப்பாட்டிற்கு எங்கள் உயிரையும் தர நாங்கள் சித்தமாகவும் இருப்போம் என்றார். ஆனால் கலந்து பேசி உறுதி ஏற்க வேண்டும் என்றார்
மார்ச் 18 அன்று 22 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் 27 சதம் பெறுவது, நடுவர் தீர்ப்பு 20 சதம் என்றால் 7 சதம் திரும்பத்தந்துவிடுவது, 35 சதம் எனில் முதலாளிகள் மீதியை தருவது என்பது முடிவானது.. மார்ச் 19 , 1918 அன்று இருபக்கமும் வெற்றி என்கிற அறிக்கை வெளியிடப்பட்டது. தொழிலாளர் சேரும் மார்ச் 20 அன்று 35 சதம் உயர்வு பெறுவார்கள். அடுத்தநாள் 20 சதம் கொடுக்கப்படும். அதற்கு.அடுத்தநாள் துவங்கி நடுவர் தீர்ப்பு வரும்வரை 27 சதம் என்பது உடன்பாடு என காந்தி  அறிவித்தார். புகழ் வாய்ந்த பேராசியர் அனந்த சங்கர் பாபுபாய் நடுவராக இருப்பார். மூன்று மாதத்தில் அவர் தன் தீர்ப்பை நல்குவார் என்பதும் ஏற்கப்பட்டு இறுதி நியாயத்தை தொழிலாளர் பெற்றனர்.
இப்போராட்டத்தில் இருவகை நியாயங்கள் நிலைநாட்டப்பட்டுள்ளன. தொழிலாளர் மரியாதை காக்கப்பட்டுள்ளது. தகராறு என்பதை நடுவர் ஒருவர் மூலம் தீர்க்கலாம் என்பது ஏற்கப்பட்டுள்ளது எதிர்காலத்திலும் இம்முறையை பின்பற்றப்படமுடியும் என்றார் காந்தி. அதே நேரத்தில் மிகச் சாதாரண பிரச்சினைக்கெல்லாம் மூன்றாம் நபரிடம் போவதும் ஆரோக்கியமாக இருக்காது என்றார் காந்தி. நாம் 35 சதம் நியாயமானது என உணர்ந்ததால் கோரினோம். முதலாளிகள் நமது கோரிக்கையின் தவறை சரியாக நம்மை உணர செய்திருந்தால் நாம் நம்மை மாற்றிக்கொண்டிருப்போம் என்றார் காந்தி. தொழிலாளர்கள் நேர்மையாக மனம் உவந்து வேலை செய்தால் முதலாளிகளின் ஆதரவை பெற முடியும். ஒருவரின் மரியாதையை விலையாக வைத்து பெறப்படும் எந்த அதிகாரமும் தூசியானதுதான் என்றார் காந்தி.

சிறிய பிரச்சனையோ பெரும் பிரச்சினையோ அவர் தன் வழிமுறைகளை மாற்றிக்கொண்டதில்லை. பகை காணாத மனிதநேயம் என்பதில் நின்றவர். பிறருக்கு தோல்வி உணர்த்தாமல் வெற்றி பெறமுடியும் என்பதற்காக தொடர்ந்து போராடியவர்  காந்தியடிகள்.

No comments:

Post a Comment