https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, August 12, 2019

அம்பேத்கரும் பட்டியல் சாதியினரின் அரசியல் அதிகாரமும்


       அம்பேத்கரும் பட்டியல் சாதியினரின் அரசியல் அதிகாரமும்

                                  -ஆர். பட்டாபிராமன்

பிரிட்டிஷாரிடமும் காங்கிரஸ் இயக்க தலைவர்களிடமும் பட்டியல் சாதியினரின் அரசியல் அதிகாரத்திற்காக உறுதியாக 35 ஆண்டுகளுக்கு மேல் போராடியவர் அம்பேத்கர். விடுதலைக் காலம் துவங்கி இன்றுவரை சட்டமன்ற நாடாளுமன்றங்களுக்கும் அமைச்சரவைகளுக்கும் அவர்களுக்கு உரிமையுண்டு என்றால் அதற்கான பெரும்பாட்டைத் தந்தவர் அம்பேத்கர்.

சவுத் பாரோ கமிட்டிக்கு 1919ல் தன் வாதங்களை எடுத்து  சென்றது  முதல்  அம்பேத்கர் போராட்டம் தொடங்கியதெனலாம்..  லக்னோ உடன்படிக்கையின்படி 1917ல் காங்கிரஸ்- முஸ்லீம் லீக் தனித்த வாக்காளர் முறையில் முஸ்லீம்களின் தேர்தல் முறை என்பதை ஏற்று இருந்தனர். 1909ல் வந்த மிண்டோ மார்லி சீர்திருத்தப்படி இவ்வுடன்பாட்டை அவர்கள் எடட நேர்ந்தது.
மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சார அடிப்படையில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகியுள்ளவர்க்கு பிரதிநிதித்துவம் என அம்பேத்கர் கோரினார். அப்போது சொத்துரிமை, கல்வித்தகுதி, வரிகட்டுவோர் என்பவர்களுக்கே வாக்குரிமை தரப்பட்டிருந்தது. மாண்டேகு- செம்ஸ்பொர்ட் 1919 சீர்திருத்தம் 800 இடங்களில் 5யை மட்டும் தலித் பகுதியினருக்கு தந்தது. அன்று மக்கள் தொகையில் 20 சதம் உள்ள பகுதியது.
1928ல் சைமன் கமிஷன் முன்பாக தலித்களுக்கு வயதுவந்தோர் வாக்குரிமை வேண்டும் என அம்பேத்கர் கோரினார். இரு பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமையை அவர் உணர்ந்தார்.  வாக்குரிமை பெறுவது, தொகுதிகளை பெறுவது என்பதற்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பது அவசியம் என்பதை அவரால் புரிந்துகொள்ளமுடிந்தது.
அக்டோபர் 23 1928ல் புனாவில் சைமன் கமிஷன் முன்னர் அம்பேத்கர் அளித்த பதிலில் அரசியல் பாதுகாப்பிற்கு தாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை முன்வைத்தார்.  As a matter of demand for political protection, we claim representation on the basis as the Mohamedan minority. We claim reserved seats if accompanied by adult franchise..if no adult franchise, then we should ask for separate electorates. Further we would like to have certain safeguards either in the Constitution, if it is possible, or else in the way of advice in the instrument to Governor regarding the education of Depressed Classes and their entry into the public services.
 வயதுவந்தோர் வாக்குரிமை எனில் இட ஒதுக்கீட்டு தொகுதிகள், இல்லையெனில் தனிவாக்காளர் தொகுதி என்ற கோரிக்கையை அவர் வைத்திருந்தார். அத்துடன் அரசாங்க பொதுச்சேவைகளிலும், கல்வியிலும் இடம்பெற பாதுகாப்பு என்பதையும் கோரியிருந்தார்.
அடுத்த வாய்ப்பாக அவர் வட்டமேஜை மாநாடு 1930ல் பங்கேற்று கருத்தை தெரிவித்தார். அவர் மூன்று அம்சங்களில் கவனம் குவித்தார். வாக்குரிமை என்பதை வசதி படைத்தவர்க்கு மட்டும் என்பதிலிருந்து தலித்களுக்கு விலக்கு பெறுவது- வயது வந்தோர் வாக்குரிமை பெறுவது என்பதை அடிப்படையாக பார்த்தார்.  முதல் 10 ஆண்டுகளுக்கு தனிவாக்காளர் முறை, பின்னர் பொது வாக்காளர் முறையில் இட ஒதுக்கீடு என்கிற அணுகுமுறையை அவர் முன்வைத்தார். இதற்கு முன்னரான 1919 சவுத்பாரோ கமிட்டி, 1928 சைமன் கமிஷன் அனுபவங்களிலிருந்து பெற்ற அனுபவங்களையும் எடுத்துக்கொண்டு அவர் 1930ல் கோரிக்கைகளை முன்னெடுத்தார்.
1931 வட்டமேஜை மாநாட்டில் காந்தி பங்கேற்றார்.  அம்பேத்கரும் , இரட்டைமலை சீனிவாசன் ஆகியவர்களும் பங்கேற்றனர்.  மாநாட்டின் உள்ளேயும் வெளி சந்திப்புகளிலும் நடந்த விவாதங்களில் காந்தியுடன் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. வேறுபட்ட நிலைகள் உருவானது.
நவம்பர் 12, 1931ல் சிறுபான்மையினர் உடன்பாடு என இடஒதுக்கீடு கேட்டு ஆகாகான், அம்பேத்கார், ராவ்பகதூர் பன்னீர்செல்வம், ஹென்றி, ஹூபெர்ட்கார் என முஸ்லீம், தலித், இந்திய கிறிஸ்துவர், ஆங்கிலோ இந்தியன், அய்ரோப்பியர் சார்பில் கையேழுத்திட்டு பிரதமரிடம் உடன்பாட்டின் நகலை கொடுத்தனர்.
நவம்பர் 25, 1931ல் காந்தியை சந்தித்தப்போது இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தலில் நிற்கட்டும்- தோல்வியுற்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு நியாயம் பெறலாம் என காந்தி தெரிவித்ததாக ராஜ சேகர் வண்டுரு தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார்.
 இந்தியா திரும்பிய பின்னர் மார்ச் 11, 1932ல் தனது நிலைப்பாட்டை தெரிவித்து எர்வாடா சிறையிலிருந்து காந்தி சாமுவேல் ஹோர், அரசு செயலருக்கு எழுதுகிறார். அதில்  தனிவாக்காளர் தொகுதி என அறிவித்தால் தான் உண்ணாநோன்பு மேற்கொள்ளநேரிடும் என உறுதிபட அறிவிக்கிறார். லோதியன் கமிட்டி இதை பரிசீலித்து வருகிறது என்ற பதிலும் காந்திக்கு தரப்படுகிறது.
நேப்பிள்ஸ் சென்ற அம்பேத்கார் அங்கிருந்து தனிவாக்காளர் முறை, இரட்டை வாக்குரிமை கேட்டு பிரிட்டிஷ் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.
செப்டம்பர் 9 1932ல் பிரதமருக்கு ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும்  முஸ்லிம்கள் போல் இடஒதுக்கீடு  குறித்து காந்தி கடிதம் எழுதுகிறார்.அவர் அதில் what I am against is their statutory separation even in a limited form, from the Hindu fold, so long as they choose to belong to it  என எழுதியிருந்தார். ஏற்கக்கூடிய பதிலை பெற இயலாத சூழலில் செப் 20 1932ல் காந்தி தனது உண்ணாநோன்பை துவங்கினார்.
 செப் 19 அன்று மதன் மோகன் மாளவியா கூட்டிய இந்து தலைவர்கள் மாநாட்டில் அம்பேத்கார் பங்கேற்றார். தனது கொள்கைக்கும் காந்தி உயிர்க்குமான போராட்டம் நோக்கி தன்னை தள்ளக்கூடாது என  அவர் அறிக்கை வெளியிட்டார். காந்தி விடுதலைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கலாம். தலித்களின் தனிவாக்காளர் அவார்டிற்கு எதிராக ஏன் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என அவர் வினவினார்.
எம் சி ராஜாவும் மூஞ்சேயும் கூட்டுவாக்காளர் முறை என்ற உடன்பாட்டிற்கு வந்திருந்தனர். மாநாட்டில் காந்தியின் முன்மொழிவுகள் என்ன என தெளிவாகத் தெரிந்தால்தான் தன்னால் அவார்டில் மாற்றம் பற்றி பேசமுடியும் என்பதை அம்பேத்கார் உறுதிபட தெரிவித்தார். தேஜ்பகதூர்   system of primary and secondary election for the reserved seats என்றார். மாநாடு அம்பேத்கார், தேஜ்பகதூர், ஜெயகர், மாளவியா அடங்கிய சிறு கமிட்டியை அமைத்தது.
ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், தேவதாஸ், தேஜ்பகதூர் சாப்ரூ, பிர்லா, ஜெயகர் பம்பாயிலிருந்து புனே சென்று காந்தியை சந்தித்தனர். அம்பேத்கர், ராஜா ஆகியவர்களுடன்  காந்தி விவாதிக்க விரும்பினார். ராஜா, ராஜ்போஜ், பாலு போன்றவர் காந்தி பக்கம் நின்றனர். பிரதமர் தனிவாக்காளர் தொகுதி அறிவிப்பைவிட கூடுதல் தொகுதிகள் - 197 எண்ணிக்கை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதை அம்பேத்கார் முன்வைத்தார். ஆனால் பிரைமரி தேர்தல்முறை 80க்கு  மட்டும்தான் என்றே சாப்ரு திட்டம் பேசியது.
செப்டம்பர் 23 அன்று முக்கிய தலைவர்கள் 25 பேர் அமர்ந்து பேசினர். பிரைமரி எனில் வேட்பாளர் எவ்வளவு பேர், இடஒதுக்கிட்டிற்கு எவ்வளவு இட எண்ணிக்கை, மத்திய அசெம்பிளி- மாகாண அசெம்பிளி பிரதிநிதித்துவம், எவ்வளவு காலத்திற்கு இட ஒதுக்கீடு போன்றவை தொடர் விவாதப் பொருளாயின.
மாகாணங்களுக்கு  148 தொகுதிகள் என முடிவானது. ஒதுக்கீட்டு காலம் 5 ஆண்டுகளா அல்லது 10 ஆண்டுகளா- பின்னர் ரெபரெண்டம் என்ற கேள்வி வந்தது. 5 ஆண்டா அல்லது என் உயிரா என காந்தி தெரிவித்தார். உண்ணாநோன்பு 6 ஆம் நாளை எட்டியது. எம் சி ராஜா அம்பேத்காரிடம் The Mahatma is staking his life for our sake, if he dies, for the next thousand years we shall be where we have been…I am not going to stand by you any longer. I will join  the conference and find a solution and I will part company from you  என்றார். அம்பேத்கர் அவர்களும் இனியும் சோதனை தொடரமுடியாது என்ற நிலையுணர்ந்து I am willing to compromise  என்றார்.
இருவகுப்பாரும் பரஸ்பர உடன்பாட்டிற்கு வருகிறவரை ஒதுக்கீடு தொடரும் என்கிற (The system of representation of Depressed Classes by reserved seats in the provincial and central legislatures shall continue until determined by mutual agreement between both the communities concerned in the settlement ) ராஜாஜியின் ஆலோசனை ஏற்கப்பட்டது. செப் 24,1932 மாலை புனே ஒப்பந்தம் கையெழுத்தானது. ராஜாஜி தனது பவுண்டன் பேனாவை அம்பேத்கருடன் மாற்றிக்கொண்டார். பிரிட்டிஷ் அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது என்பதை தெரிந்துகொண்ட பின்னரே காந்தி செப் 26 அன்று உண்ணாநோன்பை கைவிட்டார். காங்கிரஸ் கட்சி புனா ஒப்பந்தத்தை ஏற்றதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 1935 அரசாங்க சட்டத்தின் ஒரு பகுதியாக ஒப்பந்தம் மாறியது.
ஏப்ரல் 23 1933 அன்று அம்பேத்கர் எரவாடா சிறையில் காந்தியை சந்தித்தார். வழக்கமாக ஞாயிறு அன்று காந்தி சந்திப்புக்களை வைத்துக்கொள்ளாமல் இருந்தார். அம்பேத்கருடன் 45 நிமிடம் சந்திப்பு நடந்தது. குறைந்தது 25 சதம் பிரைமரி தேர்தலில் பெறவேண்டும் என்பதை காந்தி பரிசீலிக்கவேண்டும் என்றார் அம்பேத்கார். இது குறித்து கருத்துக்களை தருமாறு ரமானந்த சட்டர்ஜி, தக்கர் பாபா, பிர்லா, குன்ஸ்ரு, புருஷோத்தம்தாஸ்தாகூர்தாஸ், சிந்தாமணி ஆகியோருக்கு காந்தி கடிதம் எழுதினார். ஜெயகர், தேஜ்பகதூருக்கும் பின்னர் தனது கருத்தை விளக்கி கடிதம் எழுதினார். மெளலானா அலியின் பார்முலாவைப் போல் ஒன்றை அம்பேத்கர் முன்வைக்கிறார். ஏற்பதற்கில்லை என காந்தி தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 29 1933 ஹரிஜன் இதழில் single election- joint electorates but should secure a fixed minimum of Harijan Votes  என அம்பேத்கார் தெரிவித்தார். திடிரென சொல்லப்படுவதால் என்னால் முடிவிற்கு வரமுடியவில்லை என காந்தி தெரிவித்திருந்தார். If they accepted the Pact in order to save my life, surely, they had their consideration, and it comes with ill grace from them now to repudiate a complete bargain  என்றும் குறிப்பிட்டிருந்தார் காந்தி. உண்மையிலேயே உடன்பாடு சரியில்லை எனில் உண்ணாநோன்பு பற்றி பேசாமல் குறைகளை விவாதமாக்கி பேச காலம் இருக்கிறதே என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உடனடியாக அம்பேத்கார் என்ன பதில் அளித்தார் என்பதை அறியமுடியவில்லை. 1937 தேர்தல் அனுபவத்தைக்கொண்டு 1945ல் காந்தியும் காங்கிரசும் என்ன செய்துவிட்டார்கள் என்பதிலும், 1946ல் அரசும் சிறுபான்மையினரும் என்ற ஆக்கத்திலும் அவர் தனது விமர்சனங்களை தந்திருந்தார். தனிவாக்காளர் முறை கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். ஜூன் 16, 1934ல் காந்தியை மற்றும் ஒருமுறை அவர் சந்தித்தார். அதன் பின்னர் சந்தித்தாரா என அறியமுடியவில்லை.
அக்டோபர் 13 1935ல் தீண்டப்படாதவன் என்கிற களங்கத்துடன் நான் பிறந்திருக்கலாம். அது என் தவறல்ல. ஆனால் இந்துவாக சாகமாட்டேன். அது என் சக்திக்குள் இருக்கிறது என்றார் அம்பேத்கர்.
1937 தேர்தலில் அசெம்பிளி தொகுதிகளில் 1758க்கு 777 காங்கிரஸ் பெற்றது. 10 சத மக்கள்தான் வாக்குரிமை பெற்றிருந்தனர். இதில் 53 சதம் காங்கிரசிற்கு வாக்களிக்கவில்லை என கருத்து தெரிவித்தார் அம்பேத்கார். 50 சத வாக்குகளையோ தொகுதிகளையோ காங்கிரஸ் பெறவில்லை. அதே போல் தீண்டப்படாதவர் என சொல்லப்பட்டோரின் 82 சத வாக்குகள் காங்கிரசிற்கு கிடைக்கவில்லை என்பதையும் அவர் 1945 ஆக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். காங்கிரஸ் பெற்ற 78 தலித் இடங்களும் பெரும்பான்மை இந்துக்கள் போட்ட வாக்குகளின்படி பெறப்பட்டவை. இடஒதுக்கீடு தொகுதி என்பதாலேயே வெற்றிபெற்றவர் தலித்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என சொல்லமுடியாது என அம்பேத்கார் எழுதினார். பூனா உடன்பாட்டின்படியான 1937 தேர்தல் மூலம் Congress had successfully and effectively treated Scheduled caste legislators as dumb driven cattle என்றும் அவர் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
அம்பேத்கர் தலித்களின் குறைகளை அய் நா சபை அறியும்படி செய்திடவேண்டும். அதற்கு குழு ஒன்றை அனுப்பிடவேண்டும் என முயற்சித்தபோது அமெரிக்க ஆப்ரிக்க சிந்தனையாளர் போராளி வெப் டுபாய்ஸ் அவர்களை நீக்ரோ பிரச்சனைகள் பற்றிய புரிதலுக்காக அணுகினார். இனவெறியால் பாதிக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கவிற்கும் அம்பேத்கரின் போராட்டம் குறித்த கருத்துக்கள் சென்றன. அய்நாவில் இந்திய பிரதிநிதியினரில் ஒருவரான மகராஜ் சிங் இனவெறி குறித்து பேசியபோது தென்னாப்பிரிக்கா ஆட்சியாளர் ஜான் ஸ்மட்ஸ் உங்களின் தீண்டாமை குறித்து தெரியாதா என பதில் தந்ததுள்ளார். உங்கள் குறையறியாமல் பிறர் மீது கல்லெறியவேண்டாம் என எச்சரித்தார்.
இரண்டாம் உலகப்போர் சூழலில் வைஸ்ராயின் காபினட்டில் அம்பேத்கார் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1943ல் அரசு வேலைகளில் இடஒதுக்கிடு என்கிற affirmative action policy ஏற்கப்பட்டது. முதலில் 8 ½ சதம் என்பது 1946ல் 121/4 என உயர்ந்தது. உயர்கல்விக்கு கல்வி உதவித்தொகை என்பதும் ஏற்கப்பட்டது.
1946ல் செட்யூல்ட் பட்டியல் வகுப்பாருக்கு பாதுகாப்பு குறித்த மெமொரண்டம் ஒன்றை அரசியல் நிர்ணயசபைக்கு அம்பேத்கார் வழங்கினார். அதில் தலித்கள் வாக்கெடுப்பில் அதிக வாக்குப்பெற்றவர் எப்படி பொதுவாக்கெடுப்பில் தோற்கிறார் என்பதை விளக்கினார்.  The working committee of SCF demands that the system of joint electorates should be abolished and the system of separate electorates be introduced in their place of.  தொடர்ந்து அரசியல் நிர்ணய சபையிலும் தனிவாக்காளர் தொகுதிக்காக போராடிப்பார்த்தார். ஆனால் பொதுத்தொகுதி, 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு என்பதையே அவர் வாழ்நாள் இருந்தவரை அவரால் பெறமுடிந்தது. இன்று பல பத்தாண்டுகளுக்கு அந்த ஏற்பாடு நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதைக் காண அவர் வாழ்நாள் இடம் கொடுக்கவில்லை. 1956ல் அவர் மறைந்தார்.

II
அம்பேத்கார்  ஆகஸ்ட் 15 1936ல் ஐ எல் பி கட்சியை ஆரம்பித்தார். 1937 தேர்தலில் பம்பாய் மாகாணத்தில் ஒதுக்கப்பட்ட 15ல் 11 இடங்களில் வெற்றிபெறமுடிந்தது. 1939-45 இரண்டாம் உலகப்போர் காலம். மார்ச் 26 1940ல் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றியது. காங்கிரஸ் இயக்கம் 1940ல் ஒத்துழையாமை, 1942ல் இந்தியாவிட்டு வெளியேறு இயக்கங்களில் இறங்கியது. கிரிப்ஸ் தூதுக்குழுவால் எவரையும் திருப்திபடுத்த முடியவில்லை. 1945ல் காங்கிரசும் காந்தியும்  செட்யூல்ட் சாதியினருக்கு என்ன செய்துவிட்டனர் என்பதை அம்பேத்கர் எழுதிவெளியிட்டார்.
 செப்டம்பர் 1939ல் நாஜிகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு ஆதரவு என்கிற அறிக்கையை அம்பேத்கர் வெளியிட்டார். அடுத்த மாதம் வைஸ்ராயையும் சந்தித்து  செட்யூல்ட் பகுதியிலிருந்து உண்மையான பிரதிநிதிகள் தேர்விற்கு வேண்டுகோள் விடுத்தார்..அம்பேத்காரை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டிஷ் ஜூன் 1941ல் இணைத்துக்கொண்டது. 1942-46 ஆண்டுகளில் வைஸ்ராய் கவுன்சில் பொறுப்புகளையும் அம்பேத்கர் பெற்றார். ஜூலை 1945ல் அட்லி லேபர் அரசாங்கம் பொறுப்பிற்கு வந்தது. இந்தியாவிற்கு அதிகார மாற்றம் குறித்த நடவடிக்கைகளில் இறங்கியது. செட்யூல்ட் பட்டியல் பிரிவினருக்கு எவ்வித உறுதிமொழியையும் அவ்வரசிடம் பெறமுடியவில்லை.
 அம்பேதகர் அக் 26 1939ல் சட்டமன்றத்தில் நாட்டின் நலன் என்பதில் யாருக்கும் தான் சளைத்தவன் அல்லன்- ஆனால் செட்யூல்ட் சாதியினர் நலன் என்கிற விசுவாசம் தனக்கு மிக முக்கியமானது -கைவிடமுடியாத ஒன்று எனப்பேசினார். கிரிப்ஸ் குழுவினரிடம் அரசியல் நிர்ணயசபை என்பதில் ஏமாற்றமே மிஞ்சும். கையையும் காலையும் கட்டிப்போட்டுவிட்டு ஆதிக்க இந்துக்களிடம் ஒப்படைத்தால் எங்களுக்கு ரொட்டிக்குப் பதில் கல்தான் கிடைக்கும் என்றார். அதேபோல் ஏப்ரல் 1946ல் காபினட் தூதுக்குழுவினரிடம் அரசியல் நிர்ணயக்குழு இந்துக்களின் ஆதிக்கம் கொண்டதாக இருக்கும் என்றார். உண்மையான தலித் பிரதிநிதிகளை பெரும்பான்மை இந்து வாக்காளர்கள் தோற்கடிக்கின்றனர் என்றார். தனிவாக்காளர் தொகுதியால் இந்துக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.
பிரிட்டிஷார்  1945 டிசம்பரில் தேர்தல் அறிவித்தனர். வைஸ்ராய் கவுன்சிலில் அம்பேத்கார் இருந்ததால் தேர்தலில் நிற்கவில்லை. அவரின் செட்யூல்ட் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அவரால் பம்பாய் பகுதியிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்கு வரமுடியவில்லை. ஜோகேந்திரநாத் மண்டல் உதவியால் வங்கப் பகுதியிலிருந்து அவர் தேர்வுபெற்றார்.
அம்பேதகர் மே 17 1946ல் சர்ச்சில் அவர்களுக்கு  காபினட் மிஷன் ஏமாற்றிவிட்டது என்கிற செய்தியை அனுப்பினார். அவர்களை கை- கால் பிணைத்து இந்து ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க முன்மொழிந்துள்ளது என்றார். தொடர்ந்து ஓராண்டிற்கு மேலாக அம்பேத்கர்  சர்ச்சிலுடன் விவாதித்தார். அட்லி அரசை தன்னால் சமாதானம் செய்யமுடியவில்லை என்பதையும் தெரிவித்தார். சர்ச்சிலாலும் தலையிட்டு தீர்க்கமுடியாத சூழலே ஏற்பட்டது.
அம்பேத்கரை அரசியல் நிர்ணய சட்ட வரைவுக்குழு தலைவராக்கிடவேண்டும் என்றார் காந்தி. அம்பேத்கருக்கும் அப்பொறுப்பு வழங்கப்பட்டது. காங்கிரசுடன் தனித்தொகுதி தவிர வேறு சமரசத்திற்கு அம்பேத்கர் செல்லக்கூடாதென அவரது தோழர்கள் சிவராஜ், ஜே என் மண்டல் போன்றோர் கருதினர். 1947ல் பம்பாயில் கூடிய ஃபெடரேஷன் செயற்குழுவில் qualified separate electorates என்கிற அம்சம் விவாதிக்கப்பட்டது. எது இடஒதுக்கீட்டு தொகுதியோ அங்கு தனிவாக்காளர் முறையும் பிற இடங்களில் பொதுவாக்காளருடன் பட்டியல் வகுப்பினர் இருப்பர் என்கிற முன்மொழிவு வந்தது.
அம்பேத்கர் பொறுத்தவரை மூன்று அம்சங்களில் திரும்ப திரும்ப கவனம் செலுத்தினார். சரியான தலித் பிரதிநிதி, பெரும்பான்மையினரிடமிருந்து தலித்கள் அரசியல்ரீதியாக ஒதுங்கிவிடாமல் பார்த்தல், பெரும்பான்மை பிரதிநிதி வருவதிலும் கூட தலித்களின் செல்வாக்கை நிலைநிறுத்தல் என்பனவே அவை.
பட்டேலுக்கும் அம்பேத்காருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிவு விரைவில் எட்டப்படலாம் என பத்திரிக்கைகள் பேசலாயின. சிவராஜ், மண்டல் ஆகியோர் முஸ்லீம் லீக் உதவியுடன் தனித்தொகுதி என வற்புறுத்திவந்தனர். காங்கிரசுடன் உடன்பாட்டிற்கு அம்பேத்கார் முயற்சித்து வந்தார். அவரின் partition or Pakistan 1946ல் மீண்டும் வெளியிடப்பட்டது.
சிறுபான்மையினர் துணைக்குழு ஏப்ரல்17 1947ல் கூடும் என அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும். இருக்கிற 292 உறுப்பினர்களில் தனியாக தான் ஒருவன் மட்டும் என்ன செய்யமுடியும் - அரசியல் நிர்ணயசபையை விட்டு வெளியேறினால் குற்றம் சொல்லக்கூடாது என்றார் அம்பேத்கார். காந்திஜியின் ஆலோசனையை பெற்ற படேல் தனி வாக்காளர் முறையை ஏற்க மறுத்துவிட்டார் என்பதை அம்பேத்கர் சொல்லத்துவங்கினார்.
நாட்டின் பிரிவினையின் தாக்கத்தால் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு என்பதே இனி கிடையாது என படேல் உறுதிபட கூறினார். தலித்களுக்கு இடஒதுக்கீடு என்பதில்லை எனில் தான் வெளியேறுவதாக அம்பேத்கர் தெரிவித்தார். தனது 30 ஆண்டுகால உழைப்பை வீணாக்கிட முடியாதென்றார். நேருவும் படேலும் தலித்களுக்கு இடஒதுக்கிடு என்கிற வகையில் மே  26 1949ல் அரசியல் நிர்ணயசபையில் பேசினர். முடிவும் ஏற்பட்டது.
நேரு உரையில் ஒதுக்கீட்டை மத, சாதி அடிப்படையில் பார்க்கவில்லை (I  do not look at it from the religious point of view or the caste point of view, but from the point of view that a backward group ought to be helped and I am glad that this reservation also will be limited to ten years) எனக் குறிப்பிட்டார். பட்டியல் வகுப்பினர் நன்றி பாராட்டவேண்டும்- தாங்கள் அவ்வகுப்பார் என்பதை எதிர்காலத்தில் மறக்க கற்கவேண்டும் என்றார் படேல்.
அரசியல் அசெம்பிளிக்கு காபினட் மிஷன் மொத்தம் 389 இடங்கள் என்றது. இதில் 296 மாநிலங்களுக்கான இடங்கள்- சமஸ்தானங்களுக்கு இடங்கள் 93. 212 பொது இடங்களில் காங்கிரஸ் 201, அம்பேத்கார் 1, கம்யூனிஸ்ட் 1 மற்றவர் 9 எனப் பெற்றிருந்தனர். முஸ்லீம் லீகிற்கான 78ல் அக்கட்சி 73யை பெற்றது. மொத்தம் 296ல் செட்யூல்ட் வகுப்பார் 31பேர் இருந்தனர். இவர்களில் 29 பேர் காங்கிரஸ் சார்ந்தவர்கள்.
கிறிஸ்துவ சிறுபான்மை சார்ந்த டாக்டர் எச் சி முகர்ஜி சிறுபான்மை கட்டியின் தலைவராக இருந்தார். பெரும்பான்மை அடிப்படையில் 28:3 என்ற வாக்கில் தனிவாக்காளர் முறை இல்லை என முடிவிற்கு இக்கமிட்டி வந்தது. அமைச்சரவையில் சட்டரீதியாக தலித் பிரதிநிதித்துவம் என்பதும் விவாதமானது. கே எம் முன்ஷி அவ்வாறு கூடாதென்றார். ரிசர்வேஷன் தொகுதியில் குறைந்த சதஅளவு கம்யூனிட்டி வாக்குகள் பெற்றே நிற்கவேண்டும் என்பதில்லை என்ற முடிவிற்கு ஆகஸ்ட் 27, 1947ல்  வந்தனர். இதில் சர்தார் நாகப்பா- சர்தார் படேல் கடுமையான விவாதங்களை மேற்கொண்டனர். இவ்விவாதத்தின்போது ஏன் அம்பேத்கார் அவையில் இல்லை என்கிற கேள்வியை, தட்சாயினி வேலாயுதம் , எச் ஜே காண்டேகர் எழுப்பினர்.
பிரிவினையின் தாக்கத்தால் மைனாரிட்டி கமிட்டி பிரச்சனைகள் தள்ளிப்போடப்பட்டன. காந்தியின் படுகொலைக்குப்பின்னர் மைனாரிட்டி விஷயங்கள் படேலின் முழுகட்டுப்பாட்டிற்கு வந்தன.  டிசம்பர் 30, 1948ல் கூடிய அட்வைசரி கமிட்டியில் டாக்டர் எச் சி முகர்ஜி, தாஜ்முல் ஹூசைன் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டு முறையே வேண்டாம் என்றனர்.
சென்னை முனிசாமி பிள்ளை (தலித் காங்கிரஸ்காரர்) செட்யூல் வகுப்பாருக்கு இட ஒதுக்கீடு என்கிற விலக்கு இருக்கவேண்டும் என்றார். சட்ட அமைச்சர் என்கிற வகையில் அம்பேத்கரும் இது ஏற்கப்படவில்லையெனில் தான் வெளியேறவேண்டியிருக்கும் என்பதை உறுதியாக தெரிவித்தார். மே 1949ல் பட்டியல் வகுப்பாருக்கு இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு அவசியம் என்பது உணரப்பட்டதாக (it was recognized, however, that the peculiar position of SCs would make it necessary to give them reservation for a period of ten years and the position would be reconsidered at the end of the period )  மீண்டும் தெரிவிக்கப்பட்டது.
வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது அடிப்படை உரிமை என அம்பேத்காரும், ஜெகஜீவன்ராமும் வாதாடினர். படேல் அவ்வாறு ஏற்கமுடியாதென்றார். அரசியல் அமைப்பு சட்டத்தில் விதியாக இடம் பெறவைக்கலாம் என்கிற அளவில் சர்தார் அதை ஏற்றார். அம்பேத்கர் முன்வைத்த நகல் சட்டத்தில் பிப் 26, 1948ல் இந்த ஷரத்து இல்லை. பின்னர் திருத்தமாக அது ஏற்கப்பட்டது.
அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது ஷரத்து 325ன் படி ஒரே வாக்காளர் பட்டியல் என்பது அழுத்தமாக சொல்லப்பட்டது.
325. No person to be ineligible for inclusion in, or to claim to be included in a special, electoral roll on grounds of religion, race, caste or sex There shall be one general electoral roll for every territorial constituency for election to either House of Parliament or to the House or either House of the Legislature of a State and no person shall be ineligible for inclusion in any such roll or claim to be included in any special electoral roll for any such constituency on grounds only of religion, race, caste, sex or any of them
அதேநேரத்தில் மக்கள் அவை எனில் பட்டியல்-பழங்குடி வகுப்பாருக்கு இடஒதுக்கீட்டு தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ராஜ்ய சபா, மாநில மேல் அவைகளுக்கு ஒதுக்கீடு இல்லை. பெரும்பாலான தொகுதிகள் இருவேட்பாளர் தொகுதிகளாகவே இருந்தன.  வங்கம் வடக்கு மூன்று உறுப்பினர் தொகுதியாக இருந்தது. 489 மக்கள் அவை தொகுதிகளில் எஸ் சி தொகுதிகளாக 72 இருந்தன. மாநிலங்களில் 3283 தொகுதிகளில் எஸ்சி-க்கானவை 477 ஆக இருந்தன.
விடுதலை இந்தியாவில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் நடந்த  1952 முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் 364, கம்யூனிஸ்ட் கட்சி 16, அம்பேத்கரின் பெடரேஷன் 2 யை பெற்றனர். தேர்தலில் அம்பேத்கார் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் வென்றது. அவர் 14561 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும் நிலை ஏற்பட்டது. கம்யூனிஸ்ட்கள் சார்பில் டாங்கே நின்றார். இந்து மகாசபாவும் போட்டியில் இருந்தது.   இரு உறுப்பினர் தொகுதி குழப்பத்தால் ஏற்பட்ட செல்லா வாக்குகள் 77333. இந்த செல்லா வாக்குகளில் தோழர் டாங்கே மட்டுமே 39165 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த குழப்பம் தவிர்க்கப்பட்டிருந்தால் அம்பேத்கார் வெற்றிபெற்றிருக்க முடியும் என்ற பெட்டிஷன் நிராகரிக்கப்பட்டது. 
அம்பேத்காரை அசோக்மேத்தா தலைமையில் சோசலிஸ்ட்கள் ஆதரித்து நின்றனர். சோசலிஸ்ட்கள் 10 1/2 சதம் வாக்குகளைப் பெற்றபோதும் 12 சீட்டுக்களே பெற்றனர். கம்யூனிஸ்ட் கட்சி 3 ¼ சதம் பெற்றபோதும் 16 தொகுதிகளைப் பெறமுடிந்தது.
பந்தோபாத்யா போன்றவர்கள் அம்பேத்கார் தோல்விக்கான காரணங்களை நாட்டு பிரிவினை காரணங்களுடன் பொருத்தி தேடுகிறார். சாதி அம்சத்தை அரசியலற்றதாக்கி அதை சமூக பின்புலத்திற்கு தள்ளிய அதிகாரமாற்ற சூழல் தலித்களுக்கு பாதகமானதாக அவர் சொல்கிறார். அமைப்புரீதியாக அவர்களைப் பலப்படுத்துவதில் அம்பேத்கரின் கவனக்குறைவு காரணம் எனவும் அவர் தன்பார்வையை வைத்தார். ஆனால் சமதளபோட்டியின்மைதான் காரணம் என பந்தோபாத்யாவை ஏற்காதவர்களின் பார்வையாக இருக்கிறது.
அம்பேத்கர்  டிசம்பர் 6, 1956ல் மறைகிறார். முதல் பொதுத்தேர்தலை மட்டுமே அவரால் பார்க்க, பங்கேற்க முடிந்தது.  இரண்டாவது பொதுத்தேர்தல் 1957ல் நடந்தது.  நேரு அமைச்சரவையில் இருந்த  விவி கிரி இரு வேட்பாளர் தொகுதியான பார்வதிபுரம், ஆந்திராவில் நின்று தோற்றார். அங்கு 565 வாக்குகள் வித்தியாசத்தில்  திப்பல சூரி டோரா என்கிற எஸ் சி வேட்பாளர் வென்றார். கிரி உச்சநீதிமன்றம் சென்றார்.  டோரா வெற்றி உறுதி செய்யப்பட்டது. பொதுவேட்பாளரை தலித் வேட்பாளர் வென்றது விவாதமானது.
அம்பேத்கர் அரசியல் அமைப்புசட்டம் வந்த சூழலில் it would be enough to have plural member constituencies with cumulative voting உதவிகரமாக இருக்கும் என கருதினார். அதாவது இருவரா, மூவரா எவ்வளவு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கவேண்டுமோ அவ்வளவு ஓட்டுகள் வாக்காளர் வசம் இருக்கவேண்டும். அவர் விரும்பியவர்க்கு வாக்கை மாற்றி போடலாம்  என்கிற முறை.(voter is allowed to have as many votes as the members to be elected, can transfer votes to one candidate or divide among them). இம்முறையால் தலித்களின் உண்மையான பிரதிநிதிகள் வருவதற்கு வாய்ப்பிருக்கும் என நினைத்தார்.
பத்தாண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என ஏற்படுத்தப்பட்ட ஒன்று  ஜனவரி 5, 1960ல் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. அதேநேரத்தில் two members abolition act 1961ல் நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் அடையும் குழப்பம் காரணமாக்கப்பட்டது. 10 ஆண்டுகள் நீட்டிப்பு என்பது  தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.  95வது சட்ட திருத்தம் 2009ன் படி கீழ்கண்ட திருத்தம் செய்யப்பட்டது. ஜனவரி 26, 2020வரை இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
334. Notwithstanding anything in the foregoing provisions of this Part [Part XVI], the provisions of this Constitution relating to—
(a) the reservation of seats for the Scheduled Castes and the Scheduled Tribes in the House of the People and in the Legislative Assemblies of the States; and
(b) the representation of the Anglo Indian community in the House of the People and in the Legislative Assemblies of the States by nomination, shall cease to have effect on the expiration of a period of sixty years seventy years from the commencement of this Constitution: Provided that nothing in this article shall affect any representation in the House of the People or in the legislative Assembly of a State until the dissolution of the then existing House or Assembly, as the case may be
இந்திய அரசியல் சூழல் தொடர்ந்து திருத்தம் வருவதை  உத்தரவாதப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அம்பேத்கார் தன் வாழ்க்கை முழுதும் போராடி வென்றதை இருந்து பார்க்கமுடியாமல் போனாலும்- அவரே நின்று தோல்வியுற்றபோதிலும் அவரது உறுதிப்பாட்டின் வெற்றியை தொடர்ந்த தலைமுறையினரால் சுவைக்க முடிந்துள்ளது. இதை உணர்ந்து வாழ்பவர்களால் சமூக முன்னேற்றத்திற்கான அடுத்த படிகளை  நோக்கி நகரமுடிந்துள்ளது. அரசியல் அதிகாரம் என்பதில் வாய்ப்பு உருவாகியிருந்தாலும் - ஒரு வாக்கு ஒரே மதிப்பு என்பது தேர்தல் களத்தில் இருந்தாலும் - ஒரே சமூக பொருளாதார மதிப்பு  என்பதற்கான முழுமையை நோக்கி இந்திய சமூக மனிதன் நகர்வதற்கான போராட்டங்கள் முடிந்தபாடில்லை.
 Ref:
  1. Ambedkar Gandhi Patel- The Making of India’s Electoral System by Raja Sekhar Vundru  IAS
  2. Sardar Patel and constitution Making   Shodhganga  Papers
  3. Ambedkar, untouchability and the Politics of Partition Dr. Jesús Francisco Cháirez-Garza




No comments:

Post a Comment