https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, December 3, 2021

இந்தியாவில் சோசலிஸ்ட் இயக்கம்

 

                     இந்தியாவில் சோசலிஸ்ட் இயக்கம்

                (வரலாற்றின் சோகம்- சில குறிப்புகள்)

                                    - ஆர். பட்டாபிராமன்

இந்திய விடுதலைக்காலம் பல சித்தாந்த நீரோடைகள் நிரம்பிய ஒன்று. காந்திக்கு முந்திய காங்கிரஸ் இயக்கம், வெளிநாடுவாழ் புரட்சியாளர்கள் இயக்கம், காந்திகால காங்கிரஸ் இயக்கம், முஸ்லீம்லீக், இந்து மகாசபா, கம்யூனிச இயக்கம், சோசலிச இயக்கம், இந்தியாவிற்குள் புரட்சியாளர் இயக்கம் என பல போக்குகளுடன் பிரிட்டிஷ்  எதிர்ப்பு  இந்திய விடுதலைக்காலம் நகர்ந்தது.

தாஷ்கண்டில் இந்திய புரட்சியாளர்களான எம் என் ராய், அபானி முகர்ஜி,அகமது ஹாசன், முகமது ஷாபிக். எம் பி பி டி ஆச்சார்யா ஆகியோர் அக்டோபர் 17, 1920 கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா என ஒன்றை ஆரம்பித்தனர். எம் என் ராய் அவர்களுக்கு அனுசீலன் சமிதி, ஜூகாந்தர் புரட்சிகரகுழுக்களுடன் தொடர்பும் இருந்தது. ருஷ்ய புரட்சிக்குப்பின்னரான லெனின் தலைமை சோவியத் கட்சியுடனும் ஆரம்பத்தில் நல்ல உறவும் இருந்தது. லெனினுக்கு மாற்று ஆவணம் வைக்கக்கூடிய அளவிற்கு அன்று எம் என் ராய் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் தொடர்புகள் அறுந்து ஓரம் கட்டப்பட்டு இந்தியா வந்து பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தவராக மாறிப்போனார். இந்தியாவில் இயங்கிவந்த  சில கம்யூனிஸ்ட் குழுக்கள் சேர்ந்து 1925 டிசம்பரில் சத்திய பக்தா முன்முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர். தோழர் காட்டே, டாங்கே, முசாபர் அகமது, சிங்காரவேலர் போன்றவர்கள் துணை நின்றனர்.

மோதிலாலும் நேருவும் சோவியத் புரட்சியின் 10 ஆண்டுகள் கொண்டாட்டத்திற்கு போய்வந்த பின்னர் தனது அனுபவங்களை நேரு எழுதினார். அது புத்தகமாகவும் வந்தது. அவர்களிடமிருந்து புரட்சிகர பொருளாதார திட்டங்களை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தியாவிற்கான பாதை ஏகாதிபத்திய எதிர்ப்புடன் கூடிய சோசலிச திசைதான் என நேரு பேசத்துவங்கினார்.

 உத்த்ரபிரதேச பகுதியில் செயல்பட்டுவந்த சம்பூர்ணானந்தும், ஆச்சார்யா நரேந்திரதேவாவும் காங்கிரஸ் அனுசரிக்கவேண்டிய சோசலிச திட்டம் என்பதை காங்கிரசிற்குள் சுற்றுக்குவிட்டனர். அமெரிக்கா அனுபவத்தில் முழுமையான மார்க்சிய சிந்தனை தாக்கத்துடன் திரும்பிய ஜெயபிரகாஷ் நாராயணன் காங்கிரசில் சேர்ந்து இயங்கத் துவங்கினார். காந்தியின் உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை காலத்தில் இப்படி தனித்த சோசலிச சிந்தனைகள் நிரம்பிய பல இளைஞர்கள் காங்கிரசிற்குள் தாங்கள் விவாதித்துக்கொள்ள போரம் ஒன்றை அமைத்தனர். ஜெர்மனியில் டாக்டர் பட்டத்துடன்  மட்டுமல்லாமல் சோசலிச சிந்தையுடன் லோகியா 1932ல் நாடு திரும்பினார்.

விடுதலைக் காலத்தில் செயல்பட்ட நான்கு இடதுசாரி எண்ணவோட்டம் கொண்ட எம் என் ராய், கம்யூனிஸ்ட்கள், நேதாஜி பார்வார்ட் பிளாக், சோசலிஸ்ட்கள்- என்பதில் காந்திக்கு மிக அருகில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பெற்றவர்களாக சோசலிஸ்ட்கள் இருந்தனர்.

 தனித்தனி சிந்தனையாளர்களாக இருந்த சோசலிஸ்ட்களுக்கு அமைப்பு உருவாக்கிட நல்வாய்ப்பு ஒன்றும் கிட்டியது. சிவில் ஒத்துழையாமையில் கைதான ஜேபி, அசோக் மேத்தா, அச்சுத் பட்வர்தன், மினு மசானி, சார்லஸ் மஸ்கிரனாஸ், டாண்டவாலா போன்றவர்கள் 1932-33 காங்கிரசிற்குள் சோசலிஸ்ட் கட்சி ஒன்றின் தேவை குறித்து விவாதித்துக்கொண்டனர்.  1933ல்  இதை முன்கொணரும் வடிவத்தில் கமலாதேவி, புருஷோத்தம் திருகும்தாஸ்,யூசுப் மெஹ்ரலி , மினு மசானியுடன் பம்பாய் பிரசிடென்சி சோசலிஸ்ட் கட்சி என ஒன்றை அமைத்தனர். இருமுக்கிய நோக்கங்களை அவர்கள் வெளிப்படுத்தினர். காங்கிரஸ்அரசியல் அமைப்பு சட்டவடிவங்களில் நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வது, தொழிலாளர்- விவசாயிகளை சோசலிச நோக்கத்தில் திரட்டுவது. இதனடிப்படையில் சோசலிஸ்ட்கள் சந்திப்பு ஒன்றை அவர்கள் புனேவில் 1933ல் செய்தனர்.

அதில் ஏற்பட்ட முடிவையடுத்து பாட்னாவில் 1934 மே 17ல் கூடி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை காங்கிரசிற்குள்ளாகவே அமைத்தனர். துவக்க மாநாட்டிற்கு ஆச்சார்யா நரேந்திர தேவா தலைமை தாங்கினார். நூறு சார்பாளர்கள் பல திசையிலிருந்தும் அம்மாநாட்டிற்காக திரண்டனர். பேராசிரியர் அப்துல் பாரி வரவேற்புக்குழு பொறுப்பில் செயல்பட்டார். கட்சிக்கான அமைப்பு விதிகள், கொள்கை திட்டம் வடித்தெடுக்கப்பட்டன. பதினொரு உறுப்பினர்களாக அப்துல் பாரி, புருஷோத்தம் திரிகும்தாஸ், மசானி, சம்பூரணானந்த், சி சி பானர்ஜி, பரிதுல் ஹக் அன்சாரி, பேராசிரியர் அப்துல் அலீம், பேராசிரியர் என் ஜி ரங்கா, ஜேபி போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துவக்க அமர்விற்கு பின்னரான முதல் மாநாட்டை பம்பாயில் அக்டோபர் 21, 22 1934 நாட்களில் நடத்தினர். டாக்டர் சம்பூரணானந்த் தலைமையில் 150 சார்பாளர்கள் பங்கேற்றனர். ஜேபி பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மினு மசானி, என் ஜி கோரே,, மோகன்லால் கெளதம் செயலர்களாக, எம் எஸ் நம்பூதிரிபாட் துணைச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



ஆச்சார்யா நரேந்திர தேவா சோசலிஸ்ட்களால்இந்திய சோசலிசத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர். தன் தலைமையுரையில் இந்தியாவில் சோசலிசம் என்கிற சிந்தனை வந்து நிலைபெறத் துவங்கிவிட்டது. காங்கிரசில் மட்டுமின்றி நாடு முழுதும் அச்சிந்தனை பரவி வலுப்பெற்று வருகிறது. இதை வலுப்படுத்த ஜனநாயக அறிவார்ந்த வர்க்கம் காங்கிரசில் செயல்படத்துவங்கியுள்ளது. வெளியே தொழிலாளர்களையும், விவசாயிகளையும்  ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய சக்திகள் என்ற உணர்தல் அவசியம். உண்மையில் தொழிலாளிவர்க்கம் தலைமையேற்கவும் விவசாயிகளும், அறிவு வர்க்கமும் துணையாகவும் நிற்கவேண்டும்.

காங்கிரசில் உள்ள நாம் நம்மை சோசலிச அறிவுஜீவிகள் என்றே மதிப்பிட்டுக்கொள்ளவேண்டும். காங்கிரசின் தேசிய நீரோட்டப் போராட்டத்தின் ஊடே மக்கள் திரளுடன் நாம் நிற்கும் வரையில் நாம் சீரழிந்து போய்விடமாட்டோம் என நம்பலாம்.. சோசலிச படிப்பு வட்டங்களை உருவாக்குதல்- தொழிலாளர்க்கு சோசலிச கல்வி, வெளியீடுகளைக் கொணர்தல் என்பவற்றில் நாம் வீச்சாக செயல்படவேண்டும். ஆனால் வெகுஜனங்களின் அரசியல் பயிற்சி என்பதுதான் அடிப்படையான வேலை என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அப்படி வேலை செய்யும்போதுதான் நம்மிடத்தில் புரோலிடேரியன் கருத்தமைவு வலுப்பெறும்.

நாம் மக்களை பின்னுக்கு தள்ளிவிடும் குறைதனை செய்யக்கூடாது. நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள ஏதுமில்லை- கற்றுக்கொடுக்க மட்டுமே இருக்கிறோம் என நினைக்கக்கூடாது. அப்படிக்கருதும் போக்கு மிகத்தவறான ஒன்றாகும். அவர்களின் அபிலாஷைகளை புரிந்துகொண்டு அதற்கு உரிய வடிவம் கொடுக்க நாம் கற்கவேண்டும். மேற்கூறிய வரிகள் அவர் உரையில் இடம் பெற்ற சில முக்கிய கருதுகோள்கள் எனலாம்.  இந்த உரையின் சாரம் எந்த மார்க்சிய தலைவரும் அமைப்புகளில் பேசும் முறையை ஒத்தே இருந்ததை அமைப்பு பயிற்சியுள்ள எவராலும் உணரமுடியும்.

நேரு நேரிடையாக அவ்வமைப்பில் இணையாமல் இருந்தாலும் அவரின் ஆலோசனைகளும் அறிவுரைகளும் தங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நரேந்திர தேவா குறிப்பிட தவறவில்லை. அவரைப்பற்றி உயர்வான மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

 சோசலிஸ்ட்களின் அடுத்த மாநாடு ஜனவரி 20, 1936ல் மீரட்டில் நடந்தது. ஜேபி மீண்டும் பொதுச்செயலராகவும் மசானி, எம் எஸ், லோகியா இணைச்செயலர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாநாட்டிற்கு கமலாதேவி தலைமை தாங்கினார். மூன்றாவது மாநாட்டை பைஸ்பூரில் காங்கிரஸ் மாநாட்டையொட்டி  டிசம்பர் 24, 25 1937ல் நடத்தினர். அடுத்த நான்காவது மாநாடு ஏப்ரல் 12,13 நாட்களில் 1938 லாகூரில் நடந்தது. இம்மாநாட்டில் முன்பிருந்த பொறுப்பாளர்களுடன் புதிதாக யூசுப் மெஹ்ரலி இணைச்செயலரானார்.

கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருந்த இ.எம்.எஸ், சுந்தரையா போன்ற சிலரும் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தனர். சோசலிஸ்ட்கள் கம்யுனிஸ்ட்கள் வேறுபாடு முற்றத்துவங்கியது. தேசிய செயற்குழுவில் இருந்த முக்கியமான தோழர்களான எம் எஸ், சுந்தரையா, இசட் அகம்மது, செளரப் பால்டிவாலா, திங்கர் மேத்தா போன்றோர் விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவர்களை சி எஸ் பி வெளியேற்றவும் செய்தது. ஆரம்பத்தில் சி எஸ் பியை அவர்கள்சோசியல்பாசிசம் என விமர்சித்தாலும் இரண்டாம் உலகப்போர் சூழலில் இணைந்து பணியாற்றத்துவங்கினர். ஆச்சார்யா நரேந்திர தேவா முழுமையாக மார்க்சிய வகைப்பட்ட சிந்தனையின் அவசியத்தை வலியுறுத்தியவராக இருந்தமையால் கம்யூனிஸ்ட்கள் சி எஸ் பியில் சில காலம் தாக்குப்பிடிக்கமுடிந்தது எனக் கருத இடமுண்டு. ஜேபியும் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு பகுதிகளில் சி எஸ் பி முழுமையாக கம்யூனிஸ்ட்கள் கையில் இருப்பதை அனுமதித்தார். ஜீவா போன்றவர்கள் இங்கு செயல்பட்டனர்.  ஆனால் சி எஸ் பியைவிட தங்கள் செல்வாக்கை உயர்த்த அவர்கள் சி எஸ் பியை கருவியாக்கிக்கொண்டனர் என்ற குற்ற சாட்டை ஜேபி பின்னால் வெளிப்படுத்தினார்.

 விடுதலைக்கு முன்னர் பிப்ரவரி 1947ல் சி எஸ் பியின் 5வது மாநாடு கான்பூரில் நடைபெற்றது. லோகியா தலைமையேற்றார். காங்கிரஸ் என்ற பதத்தை இனி நீக்கிவிட்டு தங்களை சோசலிஸ்ட் கட்சி என அழைத்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர். அம்மாநாடு 9 ஆண்டுகளுக்குப்பின்னர் நடந்த மாநாடு. குவிட் இந்தியா இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட பல தலைவர்கள் கைதான சூழலில் கட்சி செயல்பாடுகள் முடங்கின. விடுதலைக்குப் பின்னர் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக சோசலிஸ்ட் கட்சி செயல்படவேண்டும் என்பதை ஜேபி வலியுறுத்தினார். நரேந்திர தேவாவும் லோகியாவும்  இதில் தயக்கம் காட்டினர். மகாத்மாவிடம் அணுகி கேட்டபோது அவர் காங்கிரசில் இருந்து செயல்பட அறிவுறித்தியதாக சோசலிச இயக்க ஆய்வாளர் குர்பான் அலி தெரிவிக்கிறார். காங்கிரசும் மகாத்மாவின் படுகொலையை அடுத்து கட்சிக்குள் தனி கட்சி என்பதோ வேறுஒரு அமைப்புவிதி வைத்திருப்பதையோ இனி அனுமதிக்கமுடியாது என்ற நிலையை எடுத்தது. இதன்பின் சோசலிஸ்ட் தலைவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறுவது என்ற முடிவை எடுத்தனர்.

சோசலிஸ்ட் கட்சி தனது ஆறாம் மாநாட்டை நாசிக்கில் மார்ச் 1948ல் கூட்டியது. திரிகும்தாஸ் தலைமையேற்றார். காங்கிரசிடமிருந்து உறவுகளை துண்டித்துக்கொள்வது ஆக்கபூர்வ எதிர்கட்சியாக செயல்படுவது என்ற முடிவை மாநாட்டிலெடுத்தனர். ஜேபி பொதுச்செயலராகவும் என் ஜி கோரே, கே பி மேனன், பிரேம் பாசின் ஆகியோர் இணைச்செயலர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நரேந்திரதேவா, லோகியா, அசோக் மேத்தா, அச்சுத் பட்வர்தன், யூசுப் மெஹ்ரலி, கமலாதேவி, அருணா ஆசப் அலி, மதுலிமாயி போன்றவர்கள் தேசிய செயற்குழுவில் இடம் பெற்றனர்.

 1950ல் நடந்த மதராஸ் மாநாட்டில் நரேந்திர தேவா தலைவராகவும், அசோக்மேத்தா பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1952 தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேர்தலை சந்தித்த சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களை மட்டுமே பெற்றது. வாக்கு சதம் 10.5 %. கம்யூனிஸ்ட்கள் இவர்களைவிட அதிக இடம் பிடித்தனர்.

காங்கிரசில் அதிருப்தி அடைந்து கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியை துவங்கியிருந்த ஆச்சார்யா கிருபளானியுடன் கூட்டு வைக்கவேண்டும் என ஜேபி வலியுறுத்தினார். நரேந்திரா அதை ஏற்கவில்லை. லோகியா அசோக் மேத்தா போன்றவர்கள் இரு கட்சி இணைப்பு எனப் பேசினர்.

 தேர்தல் குறித்து ஆய்வு செய்திட மத்திய பிரதேசம் பன்ச்மாரியில் சோசலிஸ்ட்கள் மே 23-27 1952ல் கூடினர். அங்கிருந்த கருத்தின்படி கிருபளானியின் கேஎம்பிபி கட்சியுடன் சோசலிஸ்ட் கட்சியை இணைத்துவிடுவது என்ற முடிவை எடுத்தனர். அப்போது கிருபளானி சீன சுற்றுப்பயணத்திலிருந்தார். அவர் நாடு திரும்பியவுடன் நரேந்திரதேவாவும் கிருபளானியும் ஆகஸ்ட் 25 1952ல் கூட்டறிக்கை விடுத்தனர். இணைப்பையடுத்து புதிய கட்சிக்கு பிரஜா சோசலிஸ்ட் கட்சி எனப் பெயரிட்டனர். இரு கட்சிகளின் பெயர் அடையாளங்களும் ஏதோவொருவகையில் வெளிப்படத்தக்க வகையில் பிரஜா என்பதும் சோசலிஸ்ட் என்பதும் சேர்க்கப்பட்டு செப்டம்பர் 1952ல் அக்கட்சி உருவானது. கிருபளானி தலைவராகவும் அசோக்மேத்தா பொதுச்செயலராகவும் புதிய பிஎஸ்பி கட்சியில் பொறுப்பேற்றனர்.

 இதற்கிடையில் அசோக்மேத்தா எழுதிய  ’Compulsion of Backward Economy and areas of Cooperation’  என்ற கட்டுரை குறித்தும் , நேரு- ஜேபி கடிதப் போக்குவரத்து குறித்தும் கட்சி விவாதிக்கவேண்டும் என்கிற அவசியம் ஏற்பட்டதால் ஜூன் 1953ல்பெடுல்நகரில் பி எஸ் பி கூடியது. அசோக்மேத்தா விலகி பொதுச்செயலர் பொறுப்பிற்கு என் ஜி கோரே வந்தார். நேரு அழைத்த அடிப்படையிலேயே தான் அவரை சந்தித்ததாகவும் தொடர்ந்து எங்கெல்லாம் இரு கட்சிகளும் ஒத்துழைத்துக்கொள்ளமுடியும் என்பது பற்றி விவாத்திததாகவும் அதை கடித வாயிலாக தெரியப்படுத்தியதையும் கூட்டத்தில் ஜேபி ஏற்றுக்கொண்டார்.



 கிருபளானிக்கும் எனது 14 அம்சங்களில் ஏற்பிருக்கும் என ஜேபி தெளிவு படுத்தினார்., கிருபளானி இனி காங்கிரசில் போய் வேலை செய்யமுடியாதென்றார். காங்கிரஸ் சோசலிசம்விட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கிறது. அங்கு நேரு மட்டும் இல்லை என்கிற கருத்தை வெளிப்படுத்தினார். காங்கிரசை நம்பாமல் இருக்கமுடியாது என்ற கருத்தை ஜேபி வெளிப்படுத்தினார். நேருவே ஜேபியின் 14 அம்சங்களை ஏற்பதற்கில்லை என்றும்  பிஎஸ்பி ஒத்துழைப்பை நிபந்தனையற்று கோரியதையும் அடுத்து அப்பிரச்னை முடிவிற்கு வந்தது. ஆனால் நேரு ஜேபி சந்திப்பு பல சந்தேகங்களை கிளறிவிட்டது. ஜேபி துணைப்பிரதமராகலாம் என்ற வதந்தியும் பரவியது. பெடுல் கூட்டத்தில் ஜேபி மீது ’Power Hungry Person’  என்ற தாக்குதல் கொடுக்கப்பட்ட நிலையில் ஜேபி தனிப்பட்ட தாக்குதல் எல்லைமீறி சென்றதாக உணர்ந்தார்.

பெடுல் அமர்விற்கு பின்னர் அலகாபதில் டிசம்பர் 1953ல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டில்தான் அதிகாரபூர்வமாக இரு கட்சி இணைப்பு ஏற்பு,புதிய திட்டம் குறித்த விவாதங்கள் நடந்தன.

பன்ச்மாரியில் சோசலிஸ்ட் கட்சிக்காக லோகியாவால் எழுதப்பட்ட கொள்கையறிக்கையை ஏற்க முடிவெடுத்தனர்.  ஜனவரி 1, 1954ல் கிருபளானி தலைவராகவும், லோகியா பொதுச்செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதுலிமாயி, சாதிக் அலி, அசோக்மேத்தா இணைச்செயலராகின்றனர். லோகியா மக்கள் பிரச்னைகளுக்கு இயக்கம் என கட்சியை விரிவாக்க முயற்சித்தார். விலைவாசி உயர்வு எதிர்த்து இயக்கத்தை நடத்தினார். உபியில் நடந்த கூட்டம் ஒன்றில் 50 ஆயிரம் மக்கள் பங்கேற்றதுடன் அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி 5000 போராளிகளை கைது செய்தது. உபி அரசாங்கத்தின் இந்த அதிகாரத்தை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் லோகியா வழக்கு தொடுத்தார். அலகாபாத் நீதிமன்ற வழக்கில் இரு மாதங்களிலேயே அச்சட்டம் அரசியல் அமைப்பிற்கு விரோதமானது என தீர்ப்பு பெற்று அனைவரும் விடுதலை பெற்றனர். காந்தியின் ஒத்துழையாமை வடிவங்களை தொடர்ந்து மேற்கொள்வதே வழி என லோகியா பேசிவந்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் துப்பாக்கி சூடு என்றால் ஆட்சியைவிட்டு விலகு எனவும் பேசிவந்தார். கேரளாவில் தமிழர் பகுதிகள் தமிழகத்துடன் இணைப்பு போராட்டத்தில் பி எஸ்பி ஆட்சியின் முதல்வர் பட்டம் தாணுபிள்ளை ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். லோகியா அதே அளவுகோல்படி நாமும் பதவி விலக வேண்டுமென பேசினார். அசோக்மேத்தா சோசலிஸ்ட்களாகிய நாம் மத்திய ஆட்சிக்கு வந்தபின்னர் போலீஸ் சூடு என்றால் பதவி விலகவேண்டும் என்பது எங்கே போய் சேர்க்கும் என மாறுபட்ட நிலையை எடுத்தார். நீதி விசாரணையா பதவி விலகலா என்ற விவாதம் கட்சிக்குள் பெரிதாக எழுந்தது. நாக்பூரில் நவம்பர் 25ல் 1954ல் பிஎஸ்பி கூடியது. சிறப்பு மாநாட்டிற்கு முன்னதாகவே லோகியாவும் கிருபளானியும் பதவி விலகினர். நரேந்திரதேவா தலைமையில் மாநாடு நடந்தது. பட்டம் தாணுபிள்ளை பதவி விலகல் லோகியா தீர்மானம்  வாக்கெடுப்பில் தோற்றுப்போனது.

இந்த வேறுபாடுகளால் கட்சி பிளவிற்குள்ளானது. அசோக்மேத்தாமீது வெளிப்படையான விமர்சனங்களைச் செய்த மதுலிமாயி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுலிமாயி உடன் நின்றார் என்ற வகையில் லோகியா மீதும் நடவடிக்கை வந்தது. இந்த சூழல்கள் லோகியாவை பி எஸ் பி விட்டு வெளியேற வைத்தன. அவர் டிசம்பர் 1955ல் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினார். பி எஸ்பி தன் மாநாட்டை 1956ல் கயா, பீகாரில் நடத்தியது. லோகியா தனது துவக்க மாநாட்டை ஜனவரியில் ஹைதாராபாதில் நடத்தினார். இரு இயக்கங்களாக 1964வரை அவர்கள் நீடித்தனர். இடையில் பிப்ரவரி 1956ல் நரேந்திரதேவா இயற்கை எய்தினார்.

அடுத்து நடந்த தேர்தல்களிலும் இரு கட்சிகளாலும் தங்கள் பலத்தை மக்கள் ஆதரவை நிரூபிக்க முடியவில்லை. சுதந்திரா கட்சிக்கும் , ஜனசங்கத்திற்கும் கிடைத்த ஆதரவைக்கூட தாங்கள் பெறாத நிலையில் சோசலிஸ்ட்கள் ஒற்றுமை என்ற முழக்கத்தை லோகியா 1962ல் முன்னெடுத்தார். 1963ல் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் 4 முக்கிய ஆளுமைகள் நின்றனர். சுதந்திரா சார்பில் மினு மசானி, லோகியா சோசலிஸ்ட் கட்சி சார்பில், கிருபளானி சுயேட்சை வேட்பாளராக, தீனதயாள் உபாத்யாயா ஜனசங்கம் சார்பில் - இதில் தீன்தயாள் தவிர மற்ற மூன்று தலைவர்களும் வெற்றி பெற்றனர். 1962 சீன யுத்த சூழல் நேருவை பலவீனப்படுத்தியிருந்தது. காங்கிரசிற்கு எதிராக அனைத்து கட்சியினர் ஒற்றுமை என லோகியா முயற்சித்தார். டிசம்பர் 1963 கல்கத்தா மாநாட்டில்  ’NON Congressim ’ என்ற முழக்கம் கொடுக்கப்பட்டது.

லோகியாவின் இந்த அறைகூவலை மது லிமாயியும் ஜார்ஜ் பெர்ணானட்ஸ் எதிர்த்தனர். பி எஸ் பியில் இருந்த தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் முற்றி அசோக் மேத்தா, என் டி திவாரி, வசந்த சாத்தே, சந்திரசேகர் போன்றவர்கள் காங்கிரசில் இணைந்தனர். மீதியிருந்த பி எஸ் பி தலைமை லோகியாவுடன் இணைந்து எஸ் எஸ் பி எனும் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி ஒன்றை அமைத்தனர். எஸ் எம் ஜோஷி தலைவராகவும், ராஜ்நாராயண் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரேம் பாசின், வாசுதேவ் சிங், சுரேந்திரமோகன் ( வெகு ஆண்டுகள் ஜனதாவின் ஆசிரியராக இருந்தவர்) இணைச்செயலர்கள் ஆனார்கள். எஸ் எஸ் பி ஏராள போராட்டங்களை நடத்தியது. லோகியா உட்பட பல தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 1966ல் ராஜஸ்தான் கோட்டாவில் மாநாடு நடந்தது, லோகியா மீண்டும் எதிர்கட்சிகளின் ஒற்றுமை முழக்கத்தை எழுப்பினார். ஜூலை 1966ல் இடது கட்சிகளுடன் இணைந்து எழுச்சியான பி பந்த் ஒன்றை நடத்தினர்.

காங்கிரசிற்கு எதிராக பொது வேட்பாளர் என்ற சோதனையை லோகியா வற்புறுத்தி அச்சோதனையும் 1967 தேர்தலில் நடத்திப்பார்க்கப்பட்டது. ’எஸ் வி டிஎன்கிற சம்யுக்த விதயக் தல் அரசாங்கங்கள் 9 மாநிலங்களில் அமைந்தது. ஆனால் அச்சோதனைகள் சில மாதங்களிலேயே தோல்விக்குள்ளானது. லோகியா அவர்களும் அக்டோபர் 12, 1967ல் மறைந்தார்.

 1969ல் காங்கிரஸ் ஆனது தனது உட்சண்டைகளால் பிளவுண்டது.மொரார்ஜி, நிஜலிங்கப்பா, காமராஜ், அசோக்மேத்தா, சஞ்சீவ ரெட்டி, எஸ் கே படீல் போன்ற மூத்தவர்கள் மக்கள் பார்வையில் பழைய காங்கிரஸ் தலைவர்களாயினர். இந்திரா தனக்கான வகையில் ஜெகஜீவன்ராம் அவர்களை தலைவராக்கி இந்திரா காங்கிரசை உருவாக்கினார். இந்திரா  ஏழைகளுக்காக நிற்பவர் என்கிற பார்வையை பலப்படுத்தினர். அவரும் 1970ல் தேர்தலை சந்திக்க முடிவெடுத்தார். இந்திரா தனது காங்கிரஸ் கட்சியை பெருமளவு வெற்றியைக் காணச் செய்தார். கம்யூனிஸ்ட்கள் தவிர சோசலிஸ்ட்கள் உட்பட பலர் தோல்வியைத் தழுவினர். மீண்டும் சோசலிஸ்ட்கள் ஒற்றுமை எனப்பேசப்பட்டது. சோசலிஸ்ட் கட்சிக்கு கர்ப்பூரி தாக்கூர் தலைவராகவும் மது தந்தவதே பொதுச்செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராஜ்நாரயண் மட்டும் வெளியேறி சம்யுக்த சோசலிஸ்ட் லோகியா என்கிற கட்சியை ஆரம்பித்தார். அதில் பி என் மண்டல், மணிராம் பக்ரி போன்றவர்கள் பொறுப்பிற்கு வந்தனர்.

 1973ல் நடந்த சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தலைவராகவும், சுரேந்திர மோகன் பொதுச்செயலராகவும் பொறுப்பேற்றனர். இதன் பின்னர் ஜேபி அவர்களின் இயக்கம் தீவிரமானதை அறிவோம். ஜுன் 12, 1975ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திரா தேர்தல் செல்லாது என்று சொன்னதும் அதைத் தொடர்ந்து ஜூன் 25, 1975ல் எம்ர்ஜென்சி அறிவிக்கப்பட்டு அடக்குறைரைகள் எழுந்த வரலாற்றையும் அனைவரும் அறிவர். பல முன்னணி தலைவர்கள் 19 மாதக்கணக்கில் மிசா கைதிகளாக்கப்பட்டனர்.

பழைய காங்கிரஸ், லோக்தல், ஜனசங்கம், சோசலிஸ்ட்கள் இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கினர். மொரார்ஜி தலைவராகவும், துணைத்தலைவராக சரண்சிங்கும், அத்வானி, சுரேந்திரமோகன் போன்றவர்கள் பொதுச்செயலராகவும் பொறுப்பிற்கு வந்தனர். வலதுசாரிகளும் சோசலிஸ்ட்களும் கலந்த கலவையான ஜனதா சோதனை நடந்தேறியது. 1977 தேர்தலில் இந்திரா அம்மையார் தோற்கடிக்கப்பட்டு மொரார்ஜி தலைமையில் ஜனதா ஆட்சி ஏற்பட்டது. சோசலிஸ்ட் கட்சியை நடத்தியவர்கள் முதன்முதலாக மத்திய ஆட்சியில் அமைச்சர்களாக பதவியேற்றனர். ராஜ்நாரயண், மது தந்தவதே, பெர்ணாண்டஸ் , ரபி ரே போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

காங்கிரசிலிருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய ஜெகஜீவன்ராம் அவர்களும் காங்கிரஸ் டெமாக்ரசி கட்சியை இணைத்து ஜனதா அரசில் இடம் பெற்றார். சந்திரசேகர் ஜனதாவின் தலைவரானார். இரு அமைப்பு உறுப்பினர் பிரச்னையில் ஜனசங்க தலைவர்களுடன் பிணக்கு ஏற்பட்டது. ஜனதா சோதனை தன் உட்கட்சி பிரச்னைகளால் தோல்வியை சந்தித்தது. மீண்டும் இந்திரா பிரதமரானார். சோசலிஸ்ட் கட்சியில் பயின்றவர்கள் பீகார், பி என மாநில அரசாங்கங்களில் சில சோதனைகளை நடத்திப் பார்த்தனர்.

பல தோல்விகளை சந்தித்தாலும் பெரும் பிளவிற்கு 1964ல் கம்யூனிச இயக்கம் உள்ளாகியிருந்தாலும் அவர்கள் இந்திய அரசியலில் தாக்குப்பிடித்து நின்ற அளவிற்கு தங்கள் சோதனைகளை சோசலிஸ்ட்களால் வெற்றிகரமாக நடத்திக்கொள்ளமுடியாமல் போனது. புகழ்வாய்ந்த  ஜேபி, லோகியா, நரேந்திரதேவா, மதுதந்தவதே, சந்திரசேகர், சுரேந்திரமோகன் என பல அறிவார்ந்த உயர் தலைவர்கள்- தியாகம் செய்த தலைவர்கள் இருந்தாலும் பல்வேறு திசை இழுப்புகளுக்கு அவர்கள் உள்ளாகி அரசியல் உலகிலிருந்து மறக்கடிக்கப்பட் மறைவு பிரதேச தலைவர்களாக ஆன தோல்விக்கதை சோகமான ஒன்றே. காங்கிரஸ் எதிர்ப்பு, ஜனநாயக சோசலிசம், சமூக நீதி என்ற திசையை காங்கிரஸ் பலமாக இருந்த காலத்தில் அவர்கள் எடுத்தாலும் அரசியலில் சோசலிஸ்ட் கட்சி என்பது காணாமல் போய்விட்டது. ஜனதா சோதனை அன்றைய ஜனசங்கம் போன்ற அமைப்புகள் மய்ய அரசில் கால் ஊன்ற வழிகோலியது.

இப்படியொரு நீண்ட வரலாற்றை கொண்ட சோசலிஸ்ட்கள் ஆய்வு உலகில் எங்கும் இல்லாமல் போனதும் பெரும் சோகமே…

டிசம்பர் 2, 2021

Ref :  75 years of Socialist Movement  by Qurban Ali

No comments:

Post a Comment