சசி தரூரின் நான் ஏன் இந்து
Why I am a
Hindu Sashi Tharoor
-
- ஆர். பட்டாபிராமன்
சசி தரூர் புகழ்வாய்ந்த
எழுத்தாளர். அரசியல் பிரமுகர். அமைச்சராக இருந்தவர். அய்.நா சபையின் பொதுச்செயலர் பதவிக்கு
போட்டியிட்டவர். அவரின் The Great Indian Novel, India from
Midnight to Millenium, Nehru the Invention, An Era of Darkness, why I am a Hindu போன்ற படைப்புகள் அரசியல் உலகில் முக்கியமானவை.
சசி தரூரின் மொழிநடை அலுப்பின்றி நம்மை அழைத்து செல்லும்.
வெறும் மேற்கோள்களால் சலிப்படைய வைத்துவிடாமல் சொற்செட்டுடன் எடுத்துக்கொண்ட ஆய்படு
அம்சம் விளக்கப்படும். Why I am a
Hindu 2018 துவக்கத்தில் வெளியான புத்தகம்.
அவர் 7 பிரிவுகளில் 300 பக்கங்களில் தனது அனுபவம் மற்றும் நூலறிவு கொண்டு தனது உஅரையாடலை
நகர்த்துகிறார்.
Sashi Tharoor
எனது இந்துயிசம், இந்துவழி, இந்து பழக்க வழக்கங்களை கேள்விக்கு
உள்ளாக்குதல், இந்துயிசத்தின் உன்னத ஆத்மாக்கள் ஆகியவற்றை தொடர்ந்து அரசியல் இந்துத்துவா
நூலில் விவாதிக்கப்படுகிறது. புனித பசுக்களை தாண்டி, இந்து கலாச்சாரம், வரலாறு குறித்த
அவதூறுகள் விவாதிக்கப்படுகின்றன. இந்துயிசத்தை மீண்டும் எடுத்துக்கொள்வது என்கிற இறுதிப்பகுதியில்
முன் பகுதியில் பேசப்பட்டவைகளின் தொகுப்பு என்கிற வகையில் கருத்துக்கள் அழுத்தமாக எடுத்து வைக்கப்படுகிறது.
இந்துவாக இருப்பதில் எவை பெருமிதத்திற்குரியன, ஆனால் இந்துத்துவா
அரசியல் ஏற்புக்குரியதல்ல ஏன் என்கிற இரு கோணத்தில் தரூரின் ஆய்வு செல்கிறது. காஞ்ச
அய்லய்யாவின் நான் ஏன் இந்துவல்ல என்ற ஆக்கத்தை படித்தவர்களுக்கு அக்கோணத்தில் இப்புத்தகத்தில்
இடைவெளிகள் இருக்கும் குறையை காணமுடியும்.
இருவேறு சமூக பின்னணி, வாழ்க்கைமுறைகளிலிருந்து அறிவுலகிற்கு வந்த இருவரின் வேறுபட்ட
அனுபவங்கள், பார்வைகளாக இரு புத்தகங்களையும் எடுத்து விவாதிக்க வேண்டியுள்ளது.
இங்கு சசி தரூரின் நான் ஏன் இந்து என்பதில் அடுக்கப்படும்
வாதங்கள் சிலவற்றை இடம்பெற செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. காஞ்ச அய்லய்யாவின் நான்
ஏன் இந்து அல்ல என்பதில் எழுப்பப்பட்டுள்ள வாதங்கள் தனிக் கட்டுரையாக தரப்பட்டுள்ளது.
தனது குழந்தைப்பருவம், குடும்ப சூழலிருந்து தான் இந்துவாக
கற்பிக்கப்பட்டதை அவர் எடுத்து சொல்கிறார். தன் இந்துவாக இருப்பதின் அனுபவ புரிதலை
வெளிப்படுத்தி பல்வேறு ஆய்வு நூல்களின் துணையுடன் இந்துயிச புரிதலை தருகிறார். அப்பெயரே
வெளிநாட்டவர் தந்ததுதான் என்பதை அவர் ஏற்க தயங்கவில்லை.
எனது இந்துயிசம் lived faith என்கிறார். இந்துயிசம் குறித்த
வரையறை சவால் நிறைந்த ஒன்றுதான். ரிக் வேதம்
பேசும் படைப்பு குறித்தபாடல் ( 10-129) கடவுளே படைப்பிற்கு பிந்திய படைப்புத்தான் என
பேசுவதை சுட்டிக்காட்டுகிறார் (The Gods themselves are later than creation.. who
knows whence this greater creation sparng)
இந்துயிசம் என்பது நாகரீகம்தான். வறட்டு கோட்பாடல்ல. டாக்டர்
ராதாகிருஷ்ணன் சொல்வது போல் நம்பிக்கைகளின் மியூசியமது. விவேகானந்தர் பெருமிதம் கொள்வதுபோல்
அது அனைத்தையும் ஏற்கும் பக்குவம் கொண்டதும் சகிப்புத்தன்மை நிறைந்ததும் ஆகும். இந்துக்களுக்கு
கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். உபநிடதங்கள் நிர்க்குண பிரம்மன் எனப் பேசுகின்றன.
இந்து வழி என்பதை
henothesis- அதாவது பிற இறைகள் மறுப்பில்லாது
தன் இஷ்டதெய்வம் வழிபாடு ஆகும் என்கிறார் தரூர். என் கடவுள் என்பதால் பிற கடவுள்களை
தூஷிப்பது என்பதில்லை. வேறுபாடுகள் உள்ளன என்கிற அறிவின் துவக்கமது.
தர்ம, அர்த்த, காம,
மோட்சம் பற்றி இந்து மதம் பேசுகிறது. இகலோகம்- சொர்க்கம் இணைப்பை உருவாக்குகிறது. இருட்டிற்கு
அப்பால் ஒளியைத்தேடும் முயற்சியை பாடுகிறது. பல நம்பிக்கைகளும், நடைமுறை வழக்கங்களும்
கொண்டு இந்துமதம் இயங்குவதால் அதை கோட்பாட்டாக்கம்- கருத்துருவாக்கம் செய்வதில் பிரச்சனையிருக்கிறது.
அதே நேரத்தில் அதற்கான முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. பகவத்கீதை புனித நூலாக்கிட பெரும்
பேச்சு வராமல் இல்லை. ஆனால் இந்துயிசம் என்பது பகவத்கீதையில் அடங்கும் ஒன்றல்ல. அவ்வாறு
குறுக்கிவிடவும் முடியாது.
ஒரேவகைப்பட்ட இந்துவழி என ஏதும் இல்லை. பல்முனை- பல்மையம்
(Poly centric) என்கிறோம். ஃபெல்லோஷிப் ஆப்
ஃபைத்ஸ் என்கிறார்கள். இந்துமத நூல்கள் என்பனவற்றிலும்
முரண்பட்ட அம்சங்களை எவரும் எடுத்துரைக்க முடியும். பொருந்தாத அம்சங்களை எடுத்துக்கொண்டு
ஆதரவாகவும் விமர்சனமாகவும் பேசுவதால் இந்துயிசம் குறைபாடுகொண்டது என ஆகிவிடப்போவதில்லை
என்கிறார் தரூர். அதன் contradictory
complementary Text குறித்து விளக்குகிறார்.
இந்துயிசத்தில் உள்முகப்பார்வை வலியுறுத்தப்படுவதால் அங்கு
கூட்டமாகத்தான் வழிபாடு என்பது தேவைப்படுவதில்லை. தனி ஒருவரின் சாரம் என்பதும்கூட அனைத்தின்
சாரம்தான் என (Essence of each individual is also essence of all things) உபநிடதம்
சொல்கிறது.
ரிக்வேதத்தில் சாதிகுறித்து
ஏதும் பேசப்படவில்லை என்கிறார் தரூர். புருஷசூக்தத்தில் பேசப்படுகிறது என்கிறார். அவரின்
பார்வையில் இந்தியாவில் சாதிகள் இருந்தன ஆனால் சாதி சிஸ்டம் இல்லை என்கிறார். தெய்வீகம்
என்பது அனைவருக்கும் உரியது. சிறந்த இந்துவாக இருப்பதற்கு சாதிவேறுபாடுகளை கடைப்பிடித்தே
ஆகவேண்டும் என்பது theologically
unsound என்கிற பார்வையை சசி தரூர் தருகிறார்.
தன்னால் சாதி உணர்வுகளுக்கு அப்பால் தொடர்ந்து வாழமுடிகிறது என்கிறார்.
இந்தியாவின் அடையாளங்களில் வலிமையான ஒன்றாக சாதி இருக்கிறது
என்பதை தரூர் ஏற்கிறார். சாதிகள் மறைவது என்பதும் கடினமாக உள்ளது என்கிற எதார்த்தத்தை
உணர்த்துகிறார். பிராமணர் அல்லது மேல்சாதி எனும் எண்ணம் பிற சாதிகளை கீழ்ப்படுத்தும்
பெருமித உணர்வால் வருகிறது. அதே நேரத்தில் பின்பற்றுவோரின் குறைகளையெல்லாம் மதத்தின்
குறையாக பார்க்க வேண்டாம் என்கிறார் சசி.
இந்துயிசம் என்பது விதிவாதமாக (fatalism) புரிந்துகொள்ளப்படுகிறது.
விதியை ஏற்று வாளாயிருப்பது- வி எஸ் நைப்பால் சொல்வது போல non doing. மோசமான செயல்களை செய்தால் அடுத்த பிறவியில்
மோசமாக பிறப்பாய் என்கிற புனர்ஜென்ம நம்பிக்கைகள் ஆகியவற்றை தரூர் விவாதிக்கிறார்.
மானுட மேன்மை என்கிற செயலை மாதவன் தவமாக வலியுறுத்திய பெரியவர்கள் பற்றி பேசுகிறார்.
இந்துயிசத்தின் உயர் ஆன்மாக்கள் என்கிற பகுதியில் அவர் சங்கரர்
, ராமானுஜர், ராஜாராம்மோகன்ராய், விவேகானந்தர், ரமணமகரிஷி, நாராயணகுரு, காந்தி ஆகியவர்கள்
பார்வை குறித்து சுருக்கமாக விவாதிக்கிறார். இந்துமதம் அனைத்து தன்மைகளையும் உள்ளிழுத்துக்கொள்ளும்
பார்வை பற்றி பேசுகிறார். இணைவுபடுத்திக்கொள்ளும் தன்மை பற்றி குறிப்பிடுகிறார். உண்மை
பலபக்கம் கொண்டது- சார்புதன்மையானது என்பதை வலியுறுத்துகிறார். பன்முகத்தனமையை ஏற்கும், தனது என்பதாலேயே பிறரை
விலக்காத இந்துயிசம் தனக்கு உடன்பாடானதே என்கிறார் தரூர். அப்படிப்பட்ட பன்முகத்தன்மையை
ஏற்ற, தனது உண்மை எனும் உரிமையுடன் பிறர் உண்மை என்பதை ஏற்கும் பக்குவம் கொண்ட முறையுடன்
ஒழுகும் இந்துயிசம் 21ஆம் நூற்றாண்டிற்கு தேவைப்படுகிறது என்கிறார்.
அரசியல் இந்துயிசம் எனும் பகுதியில் இந்துத்துவா அரசியலை
விளக்குகிறார். சாவர்க்கர்- இந்துமகாசபா, ஹெட்கேவர்- கோல்வால்கர் சங் அமைப்பு, தீன்
தயாள் உபாத்யாய்- ஜனசங்கம்- அவர்கள் பேசிய இந்துராஷ்ட்ரம், Nationhood, Integral humanism ஆகியனவற்றை விவாதிக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியாக உருமாற்றம் குஜராத் கலவரம், மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்
அதன் செயல்பாடுகள் பற்றி பேசுகிறார். அவர்கள் பேசுவது பிளவு அரசியல் என விமர்சிக்கிறார்.
பா ஜ க தலைமை இன்று சாவர்க்கர், கோல்வால்கர் பக்கம் அதிக சாய்வை கொண்டுள்ளதே தவிர தீன்
தயாள் பக்கமல்ல என்கிறார் சசி. தீன் தயாள் எளிய கிராமப்புற வாழ்க்கைமுறை எனப் பேசினார்.
ஆனால் இவர்களோ பெருமுதலாளிகளின் நலன் என்பதில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுகின்றனர்
என விமர்சிக்கிறார்.
பிரிட்டிஷ் வெறுப்பு என்கிற உரையாடலை சிறுபான்மையர் வெறுப்பு என்கிற பார்முலாவாக்கி இந்துத்துவா அரசியல் ஒற்றுமையின்மைக்கும் அழிவிற்கும்
வழிவகுத்துள்ளது. இன்று இந்தியாவில் பிளவு
அரசியல் ஒற்றுமை அரசியல் என்கிற இரு மைய அரசியல்
போக்குகள் எழுந்துள்ளன. எந்த பெயரில் பயங்கரவாதம் தொழிற்பட்டாலும் அது ஆபத்தானதே. துருவ
அரசியலை மதத்தின் பெயரால் கட்டி எழுப்புவது தேச விரோத செயலேயாகும். இந்துத்துவா பாசிச
நடைமுறையாகவுள்ளது என்கிற கருத்து அறிஞர் பலரிடம் எழுந்துள்ளது என்கிறார் தரூர்.
இந்திய அரசியல் சட்ட தேர்தல் மூலம்தான் இந்துத்வா அரசியல்
ஆட்சிக்கு வந்துள்ளது. தரூர் அடிப்படையான கேள்வி என ஒன்றை எழுப்புகிறார். Will
constitutionalism tame Hindutva or Will Hindutva transforms the workings of the
constitution?. நம் நாட்டின் உச்சநீதிமன்றம்
தெரிவித்த 1995, 2017 தீர்ப்புகளில் தன் ஏற்பை செய்துள்ளது. இதை தரூர் constitutional acceptability of the concept
of Hindutva- constitution and its custodians have made their peace with Hindutva என தெரிவிக்கிறார். அதே நேரத்தில் தனது கேள்வியாக But (the question is) can Hindutva
wholeheartedly accept the constitution என்பதை
அழுத்தமாக முன்வைக்கிறார்.
நேருவின் இந்தியத்தன்மை என்பதில் தனது இந்துயிசம் பக்குவமாகவும்
வசதியாகவும் அமர்ந்திருக்கிறது. அதை இந்துத்துவா என்கிற செக்டேரியன் தன்மை கொண்டதாக
மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன என குற்றம் சாட்டுகிறார் தரூர். என் போன்றவர்க்காக
சங்பரிவார் பேசவேண்டியதில்லை என்கிறார்.
எனது இந்து பெருமிதம் பன்முகத்தன்மையில், பிறர் உண்மையையும்
ஏற்பதில் இருக்கிறது. I am a Hindu, I am
a Nationalist but not Hindu Nationalist என
தெளிவாக தன்நிலையை சசி தரூர் விளக்குகிறார் . இந்திய கருத்துரு என்பது one land embracing many என்பதில்தான் இருக்கிறது. இந்துவாக அதுவும் குறிப்பிட்டவகை
இந்துவாக இருந்தால்தான் இந்தியன் என சொல்வது அபாயகரமான விளக்கமாகும். இந்திய தேசிய
கலாச்சாரம் என்பது வெறும் மத அடையாளமல்ல. மத அடையாளத்தை முற்றிலுமாக கலாச்சார அடையாளத்துடன்
பொருத்துவது ஏற்புக்குரியதல்ல என்கிறார் சசி.
Liberal Tolerant Rulers என அறியப்படும் எவரும் அவர்களது வரலாற்றுக்குள்
வருவதில்லை. வெளிவைக்கப்படுகிறார்கள். அசோகர், அக்பர், ஜெய்சிங், சாஹூ மகராஜ் போன்றவர்க்கு
இடமில்லை. பிரிட்டிஷாரை எதிர்த்த பகதூர் ஷா, மெளல்வி அகமதுல்லா, ஜீனத் மஹல் போன்றவர்க்கு
இடமில்லை.
1947ன் பிரிவினையின் கோரங்களை மெதுவாக எண்ணத்திலிருந்து மறந்து
இந்தியா தனது விடுதலைக்கால வாழ்வை பயணித்துவந்தது. அந்த மறந்துபோன பிசாசை தட்டி எழுப்புவது
ஆபத்தானது. அதை உறக்கத்தில் ஆழ்ந்து உறைந்து போகவிடுவதே நலம் பயக்கும்.
என்னால் இந்துவாக
இருந்துகொண்டு அரசியலில் லிபரலாக இருக்க முடியும். நாம் நமது இதிகாசங்களை ஒடிசி போன்று கற்பிக்க முடியாதா?
திரும்பவும் உள்நாட்டிற்குள் நாகரீகங்களின் மோதல் என ஏற்படுத்த வேண்டுமா? இந்துத்துவா
எனும் அரசியல் திட்டம் மதத்திற்கே கூட உகந்த ஒன்றல்ல என தன் சிந்தனை துளிகளை அடுக்குகிறார்
சசி.
தேசத்தின் முன்னேற்றம்
எனும் கனவில் வேட்கையுடன் ஆசைப்படும் அனைவருக்கும் வாய்ப்பளித்து அழைத்து செல்லவேண்டுமா
வேண்டாமா என்பது மைய சவாலாக எழுந்துள்ளது. இந்துயிசம் என்பது உலகை முற்றுமுழுதான அலகுகளால்
பார்ப்பதில்லை என்கிற புரிதல் தேவைப்படுகிறது.
The greatest
truth to the Hindu is that which accepts the existence of other truths என தெளிவுபடுத்தி பிரகதாரண்ய புகழ்வாய்ந்த பாடல்
வரிகளுடன் சசி நிறைவு செய்கிறார். அவ்வரிகள்
Lead me from untruth to truth- Lead me from darkness to Light.
24-5-18
Dear Sir,
ReplyDeleteyour Article is very nice.
நன்றி. உற்சாகம் கூடுகிறது
ReplyDelete