https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, May 25, 2020

நேருவின் சோசலிசம்


நேருவின் சோசலிசம்

           - ஆர். பட்டாபிராமன்

சோசலிஸ்ட்களும், கம்யூனிஸ்ட்களும் இன்றைய உலகில் ( 1934) செல்வாக்கு பெற்றுவருவதற்கு காரணம் அவர்கள் விஞ்ஞானத்தின் பக்கமும், தர்க்க நியாயத்தின் பக்கமும் நிற்பதுதான் என நேரு எழுதியிருந்தார். மார்க்சை அவர் தீர்க்கதரிசி என்றே மதிப்பிட்டார்.
1931 கராச்சி காங்கிரசில் நேருவும், பின்னர் ஹரிபுராவில் சுபாஷ் போஸ் அவர்களும் சோசலிசம் என்பதை காங்கிரஸ் தீர்மானங்களாக்கி விழிப்புணர்வை கூட்டினர். அறிவியல் தொழில்நுட்ப உதவியால் உற்பத்தியை பெருக்கி மனிதர்கள் தங்கள் நுகர்வுத்தேவையை பூர்த்தி செய்யமுடியும் என்றால் என்ன அதில் தவறு இருக்கமுடியும் என்பது நேருவின் வாதமாக இருந்தது.
 மார்க்சியத்தின்பாற் ஈர்ப்பு கொண்டவராகவும், 1929 ரஷ்ய பயணத்திற்கு பின்னர் அந்நாட்டின் முன்னேற்றத்தை வியந்து பேசுபவராகவும் அவர் இருந்தார். அதேநேரத்தில் அனுபவம் கூடக்கூட மார்க்சியம் பேசுபவர்களின் வறட்டுத்தனத்தை அவர் விமர்சிக்கத்துவங்கினார். பொருளாதாரமல்லாத பல்வேறு காரணிகளில் நிலவும் குறையை அறியத்துவங்கி விமர்சிக்கலானார்.
காந்திஜி ஒருமுறை காங்கிரஸ் செயற்குழுவிற்காக தீர்மானம் ஒன்றை எழுதியிருந்தார். காங்கிரசின் பொருளாதார சமுக நோக்கங்களை வெளிப்படுத்தவே அத்தீர்மானம். அதில் சோசலிசம் என்கிற வார்த்தை இல்லாமை கண்டு நேரு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். என்ஜின் டிரைவர் என அழைத்துக்கொண்டால்  மாடுகளால் இழுக்கப்படும் மரத்தால் ஆன வண்டி என தன் என்ஜினைப்பற்றி சொல்வது சரியா என்பது நேருவின் விமர்சனமாக இருந்தது. காந்தியோ அய்யத்திற்கு அப்பாற்பட்ட ஒரே வகையிலான விளக்கத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என அதற்கு பதிலளித்தார்.
விடுதலைக்குப் பின்னர் இதே போன்றதோர் விவாதத்தில் நேரு போல் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களும், காந்தி போல் நேருவும் பதிலளித்துக்கொண்டனர். நேருவை பொறுத்தவரை தேங்கிய சிந்தனை என்பதை அவர் ஏற்றதில்லை. அவர் தனது சோசலிசம் குறித்த சிந்தனை முற்ற நிலையான ஒன்றாக இருக்கவேண்டியதில்லை எனக் கருதினார். வறட்டு பிடிவாத கோட்பாடாக இருக்கவேண்டியதில்லை-அது வளர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும் என விழைந்தார்.
 மாறும் வாதத்தை முன்வைப்பதால்தான் புத்தர் அவரிடம் வந்தார். வாழ்க்கையை துறத்தல்- துறவு என்பது மனித வாழ்க்கையின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல எனக்கூட நேரு நினைத்தார். அதே நேரத்தில் மனிதனை தாழ்த்தும் எதையும் அவர் ஏற்கமுடியாது என செயல்பட்டார். மனிதனின் மாண்பிற்கு கேடு விளவிக்கும் அநீதிக்கு இடமாகும் எந்த வகைப்பட்ட நிறுவனமும் அகற்றப்படவேண்டியவையே என்பதில் அவர் உறுதி காட்டினார்.
 மனிதனைவிட உயர்ந்தது என எதையும் ஏற்கவேண்டியதில்லை என அவர் மனம் பேசியது. மனிதனை மனிதன் வேறுபடுத்தும் சாதி, கம்யூனல் அம்சங்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது. வெறுப்பால் வெறுப்பு மட்டுமே பரவும். பல்வேறு கலாச்சாரங்கள் ஊடும்பாவுமாக ஒன்றை ஒன்று உள்வாங்கி இந்தியாவில்  Composite Culture  ஏற்பட்டுள்ளது - அதை காத்திடவேண்டும் என அவர் போராடிவந்தார். அவரவர் கலாச்சாரத்தில் வேரோடியிருக்கும் பழக்கங்களை போக்கமுடியாமல் இருக்கலாம். அதே நேரத்தில் பல் கலாச்சாரங்களின் உறைவிடமாக நாடு இருக்கிறது என்பதையும்  அனைவரும் சரியாக உள்வாங்கவேண்டும் என நேரு நினைத்தார்.
 காலத்தின் வளர்ச்சியில் அறிவியல் தொழிநுட்ப பார்வையுடன் கூடிய வளர்ச்சியே நவீனத்துவம் என நேரு கருதினார்.
மார்க்சியம் என்பது நடைமுறை செயல்பாட்டின் வழியே கொணரப்படும் புதிய வாழ்க்கை முறைக்கான கோட்பாடுகள். துன்பக் கடலில் தத்தளிக்கும் உலகை மீட்க ஒரு தீர்க்கதரிசி போல் மார்க்ஸ் கருத்துக்களை தந்துள்ளார் என நேரு கருதினார். சோசலிசத்தை அந்த நாட்டின் தனித்தன்மைகள் கொண்ட சூழலில் கொணர்வதெப்படி என்பதில் நமக்கான நடைமுறைகள் அவசியம் எனக் கருதி நேரு  செயல்பட்டார்.

Recent Essays and writings  என்கிற அவரது கட்டுரை தொகுப்பு ஒன்று 1934ல் வெளியானது. அதில் Whither India  என்கிற கட்டுரையில் மிக அற்புதமான வரிகளை நேரு தந்து இருந்தார் . முதலாளித்துவம் ஏராள சாதனைகளை படைத்திருக்கலாம். ஆனால் அதன் காலம் முடிவடைந்து அதைவிட சிறப்பான மனிதகுல நடவடிக்கைகளுக்கு மனித அறிவு நகரவேண்டாமா என்பது அவரது கேள்வியாக இருந்தது
It is not a question of blaming capitalism or cursing capitalists and the like. Capitalism has been of the greatest service to the world and the individual capitalists are but tiny wheels in the big machine. The question is whether the capitalist system has not outlived its day and must now give place to a better and saner ordering of human affairs, which is more in keeping with the progress of science and human knowledge
பாசிசம் கண்டிப்பாக முதலாளித்துவத்திற்கு மாற்றல்ல எனவும் அதில் தெளிவுபடுத்தியிருந்தார். செல்வம்- சொத்து- நியாய பகிர்வு என்பதை தீர்க்காத எந்த அரசாங்கத்தையும் முதலாளித்துவத்திற்கு மாற்றாக கருத இயலாது என்பது இளம் நேருவின் சிந்தனையாக இருந்தது. மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சோசலிசம்தான் தீர்வு என்பதை அவர் அழுத்தமாக தெரிவித்திருந்தார்.
நேருவின் அக்கட்டுரைக்கு பல எதிர்வினைகள் வந்தன. அதையும் அவர் பொருட்படுத்தி தனது நிலைப்பாட்டை விளக்கி மற்றொரு கட்டுரை எழுதியிருந்தார். பெரும் தொழில், அறிவியல் எனப் பேசும் நேரு கதரை, சர்க்கா சுற்றுவதை ஏன ஆதரிக்கிறார் என்கிற கேள்விக்கு மிக அற்புதமான பதிலை நேரு அதில் தந்திருந்தார். இரண்டிற்குமான முரண் ஏதுமில்லை என்பதை அதில் விளக்கியிருந்தார்.  நம்நாட்டின் கிராமப்புற விவசாயிகளுக்கும் கதர் எப்படி மிகப்பெரிய அரசியல் கருவியானது என்கிற புரிதலை  அவரால் சொல்லமுடிந்தது.
 கோட்பாடுகள் மற்றும் நடைமுறை செயல்பாட்டு பொருத்தப்பாடுகளை அவர் அழகாக மற்றொரு கட்டுரையில் விளக்கியிருந்தார்.
 An ideology is presumed to lead action on a mass scale. If such action is meant for the whole of India, the ideology cannot ignore present day objective facts and conditions all over the country.
 சமூகம் வறுமையை கொண்டாடக்கூடாது என அவர் அறிவுறுத்தினார். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இருக்கும் அதல பாதாள வேறுபாடுகளை சகித்துக்கொள்ளும் சமூகத்தால்  எவருக்கும் நன்மையுண்டாகாது. அது  பணக்காரர்களுக்கும் கெளரவ வீழ்ச்சியாகவே இருக்கும் என அவர் பேசிவந்தார்.
 விடுதலைக்குப் பின்னர் திட்டமிட்ட பொருளாதாரத்திற்காக திட்டக்குழு அமைக்கப்பட்டாலும் அதற்கு முழுமையான சோசலிச திசைவழியை கொடுப்பது சவாலாகவே உணரப்பட்டது. அரசியல் சுதந்திரம் பொருளாதார சுதந்திரமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். அப்போதுதான் சோசலிசம் வசப்படும் என்கிற கருத்தில் அவர் வலுவாக நின்றார்.
Socialism is the inevitable outcome of democracy. Political democracy has no meaning if it does not embrace economic democracy. And economic democracy is nothing but socialism. Monopoly is the enemy of socialism. To that extent it has grown during the last few years, we have drifted away from the goal of socialism. That is something for all of us, and particularly for Congressmen, to ponder over.
என்கிற நேருவின் பொருள்பொதிந்த நடைமுறை கவலையை நேரு குறித்து எழுதிய மெயின்ஸ்டிரிம் நவ 17, 1973ல் வெளியிட்டது. அதே நேரத்தில் ஜனநாயகமும்- சிவில் உரிமைகளும் இல்லையெனில்  அங்கு சோசலிசம் இராது என்பதிலும் அவர் உறுதியாக நின்றார்.
”.. democracy and civil liberties had to be basic constituents of socialism and were inseparable from it.”
சோசலிசம் என்பது பொருளாதார தத்துவ வாழ்க்கைமுறை என்ற வகையில் அதில் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நிலம், தொழில் இரண்டிலும் தீவிரமான மாற்றங்கள் செய்யப்படாமல்- ஏற்படாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. பொருளாதார சமூக சமத்துவம் நோக்கி  இந்தியா தன்னை தகவமைத்துக்கொள்ளவேண்டும் என அவர் விழைந்தார்.
விடுதலை அடையும் இந்தியாவால் முற்றிலுமாக தனியார் சொத்துரிமையை தகர்த்துவிடமுடியாது என்கிற எதார்த்தமும் அவரிடம் இருந்தது. நேரு இதனை அவரது 1936 காங்கிரஸ் தலைமையுரையில் வெளிப்படுத்தினார். ருஷ்ய மாதிரியை அப்படியே இந்தியாவில் நகலெடுத்து வைக்கமுடியாது என்ற பார்வையும் அவரிடமிருந்தது. நேருவின் சோசலிசத்தை  empirical collectivism- தாராளவாதம், தீவிரமாற்றங்கள், பாபுலிசம், முற்போக்குவாதம் ஆகியவற்றின் கூட்டிணைவு என்று வரையறுப்பவர்களும் உள்ளனர். மார்க்சியர்கள் முற்றுமுதல் நிர்ணயவாதம் பேசுவதை  ஏற்கமுடியவில்லை என்றார் நேரு.
 கலெக்டிவிசம் என்பதை பொதுத்துறை- தொழிலாளர் நல சட்டங்கள், விலைகளை ஒழுங்குக்குள் வைத்தல், நிலம் மற்றும் வரிக்கொள்கைகளில் மாற்றங்கள் என நடைமுறை சார்ந்து புரிந்துகொள்ளலாம். தனி சொத்துடைமையில் தொழில் இருந்தாலும் அவை தொழிலாளர் சட்டங்களை அனுசரித்து ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதில் கலெக்டிவிசம் முன்நிற்கும்.
இலாபமும் சொத்து சேகரிப்பு  என்பதை முதன்மை நோக்கமாக கொண்ட சமூகம் குறித்து அவருக்கு எதிர்மறை கருத்து இருந்தது. வன்முறை வழியல்லாத சோசலிசம் என்பது மாற்றாக வரவேண்டும்  சோசலிசம் வன்முறையிலிருந்து விலக்கிக்கொள்ளும்போது தன்னை தூய்மைப்படுத்திக்கொண்டதாக இருக்கும் என  அவர் வற்புறுத்தினார்.
 விடுதலைக்கு முன்னரான காங்கிரஸ் இயக்கம் தன்னை சோசலிஸ்ட் அமைப்பு என பிரகடனப்படுத்திக்கொள்ளவேண்டும்- உலக முற்போக்கு இயக்கங்களுடன் அது சேர்ந்து செயல்படவேண்டும் என அவர் விரும்பினாலும் அதன் சாத்தியக்குறைவை  வரம்புக்குரிய செயல்பாட்டை அவர்  உணர்ந்தே இருந்தார்.
காங்கிரஸ் சுயராஜ்யம் என்பதற்குத்தான் முன்னுரிமையுடன் செயல்படமுடியும் என்பதை அவர் மிகச்சரியாக உணர்ந்தவராகவும் இருந்தார். இல்லையெனில் இயக்க ஒற்றுமை பெருமளவு பாதிக்கப்பட்டு  அதன் முதன்மை நோக்கம் கூட நிறைவேறாமல் போய்விடும். விடுதலை என்பதில் முழு ஒற்றுமையுடன் செயல்பட்டுவரும் நாம் சமூக பிரச்சனைகளில் கருத்துவேறுபாடுகள் கொண்டவர்களாகவே பயணிக்கிறோம் என்கிற உண்மையை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். சிலநேரங்களில் அவரின் இப்பார்வையால் எம் என் ராய், சுபாஷ், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்களால் கூட விமர்சிக்கப்பட்டார்.
சுபாஷின் விமர்சனம் இவ்வாறு சென்றது. நேரு தீவிர சிந்தனை கொண்டவர் ஆனாலும் மகாத்மாவின் சீடராகவே இருப்பார். அவரின் மூளை இடதுசாரிகளுடன் இயங்கும்- இதயமோ காந்தியுடன் இருக்கும்.
 The position of Pandit is an interesting one. His ideas and views are of a radical nature and he calls himself a full blooded socialist, but in practice he is a loyal follower of Mahatama. It would  probably correct to say that while his brain is with the Left wingers, his heart is with Mahatma Gandhi"
  சுபாஷ் அவர்களும் ஹரிபுரா காங்கிரசில் தன் தலைமையுரையில் நமது உடனடி நோக்கம் சோசலிசமல்ல- சுயராஜ்யம் என்றே பேசினார். அதே நேரத்தில் சோசலிசம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்யவேண்டும் என்றார்.
 1929 லாகூர் காங்கிரசில் நேரு தன்னை சோசலிஸ்ட் மற்றும் ரிபப்ளிகன் என அழைத்துக்கொண்டார். ஜனநாயகம் தன்னை விடுதலையில் துவக்கிக்கொண்டாலும் சமத்துவத்தில்தான் நிறைவைப் பெறமுடியும் என நேரு உறுதியாக நம்பினார்.
International Journal of Advanced Research and development  ஜனவரி 2018 இதழில் டாக்டர் ஷபாலி ஜெயின் நேருவின் சோசலிச கருத்தாக்கம் என்பது பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். மிக சுருக்கமான அக்கட்டுரையில் சாரமாக விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.
 Nehru's socialism was a brood tendency and not a precise body of rigid beliefs".  இறுக்கமான வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளில் அல்லாது  சோசலிச அணுகுமுறை மாதிரியிலான வளர்ச்சிப்போக்கு என்ற புரிதல் நேருவிடம் இருந்தது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு, வேலையின்மை, அவர்களின் மீட்பு என்பது சோசலிச பாதையில்லாமல் சாத்தியமில்லை என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்தவர். நியாய பகிர்வின் மூலம் அநியாய நிலைகள் நீக்கப்படுதல் என்கிற அணுகுமுறையை அவர் மேற்கொண்டார்.. இதற்காக ஜனநாயக சோசலிச வழிகளை கையாள்வது அவசியம். தனது சோசலிச கட்டுமானம் என்பதை அவர் கீழ்கண்ட மொழியில் புரியவைத்தார்
” I look upon it as a growing, dynamic conception, as something which is not rigid, as something which must be fit in with the changing conditions of human life and activity in every country. I do not know why I should be asked to define socialism in precise, rigid terms. What I want is that all individuals in India should have equal opportunities of growth, from birth upwards and equal opportunities for work according to their capacity"
 சுரண்டலிருந்து உழைப்பவர்களை விடுவித்து கண்ணியமான வாழ்க்கைமுறைக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என அவர் எண்ணினார். ஒருவரின் பொருளாயத முன்னேற்றம்- வாழ்க்கைதரத்தை உயர்த்துவதில்தான்  தான் கலாச்சார, அறிவார்ந்த வாழ்வியலும் சாத்தியமாகும் என அவர் நம்பினார்.. நல்ல உற்பத்தி, செல்வ வளம் பெருக்குதல், வாழ்க்கைதரம் உயர்தல் ஆகியவற்றை முரண்பட்டவைகளாக இல்லாமல் செய்துவிட்டால் நாம் விரும்பும் நல்வாழ்க்கைக்குரிய சமூகம் உருவாகும் எனவும் அவர் சொல்லிவந்தார். எனவே சோசலிசம் என்று பேசுவது பொருளாதார முறைகள் வழிப்பட்டே எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
சுபாஷ் அவர்களுக்கு ஏப்ரல் 3 1939ல் எழுதிய கடிதத்தில் தனது சோசலிச பார்வை தனிநபர் சுதந்திரமான வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாக இருக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்
"I hope that socialism does not kill or suppress individuality; indeed, I am attracted to it because it will release innumerable individuals from economic and cultural bondage"
விடுதலை என்பது மானுட மேம்பாட்டிற்கு சாதனமே அன்றி அது இறுதியல்ல. மானுட நலன் என்பதுதான் இலக்காகவேண்டும். ஓவ்வொருவரின் உடல்- மனம் ஆகியவற்றின் ஆரோக்கியம் என்பதாக இருக்கவேண்டும் என்பதை நேருவின் உரைகளில் காணமுடியும்.
ஜனநாயகம் என்பது வெறும் அரசியல், பொருளாதாரம் மட்டுமல்ல- மனதுடன் நெருக்கமாக வேண்டிய ஒன்றுமாகும் என்றவர் நேரு. அரசியல், பொருளாதார சமவாய்ப்புகளை உருவாக்கவும், தனிநபரின் சர்வாம்ச வளர்ச்சிக்குரிய சூழலை உருவாக்குவதாகவும் ஜனநாயகம் அமைய நேரு விழைந்தார்.
"Democracy is not only political, not only economic, but something of the mind. It involves equality of opportunity to all people, as far as possible, in the political and economic domain. It involves the freedom of the individual to grow and to make the best of his capacities and ability. It involves a certain tolerance of others and even of other's opinions, when they differ from yours"
 வாய்ப்புகளை பாரபட்சமின்றி உருவாக்கித் தருதல் எனபதில் அவரின் சமத்துவ புரிதல்  தங்கியிருந்தது. அனைவரும் சமம் என்பது யாந்திரீகமாக புரிந்துகொள்ள முடியாது. கற்றல் திறன், உடல் பலம், திறமை வெளிப்பாடு, புரிந்துகொள்ளும் ஆற்றல் என்பதில் மனிதர்கள் வேறுபட்டே இருப்பார்கள். ஆனால் வாய்ப்புகளை மறுத்தல் என்பதை ஜனநாயக சமூகம் ஏற்க முடியாது என அவர் சமத்துவம் பற்றிய தன் பார்வையை விளக்கிவந்தார். அவர் தனது சோசலிச மாதிரி சமுதாயம் என்பதை இப்படித்தான் விளக்கினார். சாதியற்ற வர்க்கமற்ற சமூகமாக இருக்கும் என்றார்.
”By a socialistic pattern of society, "We mean a society in which there is equality of opportunity and the possibility for everyone to live a good life. We have; therefore, to lay great stress on equality, on the removal of disparities and it has to be remembered always that socialism is not the spreading out of poverty. Socialist pattern of society was to be classless and casteless.”
சோசலிச சமூகம் என்பது அனைவரின் நலன்- பாதுகாப்பு- நலிந்தவர்களை  உயர்த்துவது என்பதில் நம்பிக்கை கொண்ட சமூகமாக இருக்கும். மக்களின் பொருளாதார, கலாச்சார மட்டத்தை உயர்த்துவதன் மூலம் சாதியற்ற, வர்க்கமற்ற சமூகத்தை அது உருவாக்கும் என்பதும் அவரது புரிதலாக இருந்தது.
1929 லாகூர் காங்கிரஸ் அமர்விலும், 1931 கராச்சி  மற்றும் 1936 லக்னோ அமர்வுகளிலும் அவர் கம்யூனிசம் என்பதை பேசிவந்தார். விடுதலைக்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் தனது  சில அமர்வுகளில் ( 1955, 1964)  Vote based Communism/ Socialism  என்பதற்காக தாங்கள் நிற்பதாக  தெரிவித்தது. நேருவை  standard Marxist  என எவரும் வரையறுக்கவில்லை. அவர் மார்க்சியம் அறிந்தவராக இருந்தார். ஹரால்ட் லாஸ்கி மற்றும் பாபியன் சோசலிஸ்ட்களின் எண்ணங்களை எடுத்துக்கொண்டார். சோவியத் புரட்சியின் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அதன் சாதனைகளை இந்திய மக்களுக்கு எடுத்துரைத்துவந்தார். திட்டமிட்ட பொருளாதாரம்- 5 ஆண்டு திட்டங்கள், அரசு பொதுத்துறை என்பதற்கு முன்னுரிமை கொடுத்தார்.
  சமூக பொருளாதார முற்போக்கான முன்னெடுப்புகளுக்கு அரசியல் ஸ்திரத்தனமை அவசியம் எனபதில் அவர் உறுதியாக இருந்தார். பெரும்பான்மையினர் ஆதரவுடன் அரசாட்சி என்பதுடன் சோசலிசத்தை ஒருங்கிணைக்க முடியும் என அவர் என நம்பினார். சோசலிஸ்ட்டாகவும் டெமாக்ரட்டாகவும் இருக்க முடியும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.
காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் 1938ல் தேசிய திட்டக்குழு ஒன்றை நேருவின் தலைமையில் அமைத்தார். நேரு சிறைக்கு செல்லும்வரை ஏறத்தாழ 15 மாதங்கள் அக்குழு செயல்பட்டது. பின்னர் 1945ல் திரும்ப செயல்படலானது. டிசம்பர் 1938 முதல் செப்டம்பர் 1940 வரையிலான காலத்தில் நடந்த 72 கூட்டங்களில் 71ல் நேரு பங்கேற்று கருத்துக்களை செவிமடுத்தார். சரி செய்தார் என ஹிரன் முகர்ஜி சொல்கிறார்.
1944ல் இந்திய தொழிலதிபர்களின் கமிட்டி தங்கள் Bombay Plan  யைத்தந்தன. 1946ல் இடைக்கால அரசிற்கு நேரு பொறுப்பேற்றவுடன் திட்ட ஆலோசனை குழு ஒன்றை நேரு அமைத்தார். அதேபோல் நவம்பர் 1947ல் காங்கிரஸ் சார்பில் பொருளாதார திட்டக்குழு ஒன்றை தன் தலைமையில் ஏற்படுத்தினார்.. அதன் அறிக்கை அடிப்படையில்தான் நிரந்தர  planning Commission  என்கிற திட்டக்குழு 1950ல் உருவாக்கப்பட்டது. 1948ல் தொழில்கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு நேரு சுவையான பதில்களை தந்துகொண்டிருந்தார். ”Individuals and nations who do not know how to die do not know also how to live. Only where there are graves are there resurrections” என்பது போன்ற பதில்களாக அவை இருந்தன.
நேரு தனது நோக்கதீர்மானத்தை டிசம்பர் 13, 1946ல் அரசியல் அமைப்பு சட்ட நிர்ணயசபையில் முன்வைத்தார். நாம் ஜனநாயகம் என்கிற முரையை மட்டுமல்ல, அதன் சாரத்தையும் முன்வைக்கிறோம்- அதாவது பொருளாதார ஜனநாயகம் என்கிற பொருளில் வைக்கிறோம். இதை சிலர் ஆட்சேபிக்கலாம். நாம் சோசலிச அரசாங்கம் என சொல்லாதபோது ஏன் இவ்வாறு முன்வைக்கவேண்டும் என வினவலாம். தனிப்பட்ட என் கருத்து என்றால் சோசலிச அரசாங்கம் என சொல்லமுடியும். அனைவரின் ஏற்புடன் செல்லவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதால் சர்ச்சைக்கு இடம்தராத வகையில் நோக்கத்தீர்மானத்தை முனவைக்கவேண்டியுள்ளது என நேரு தெளிவுபடுத்தினார். இதை குறிப்பிட்டுவிட்டு நேரு கட்சிகளைத் தாண்டி தேசம் கட்டமைத்தல், ஏன் உலக நோக்குடன் செயல்படுதல் என்ற வகையில் நாம் சந்திக்கவேண்டும் என்றார் நேரு.

தனியார் முதலாளிகள் தயங்கிய அல்லது போதுமான மூலதனமிட வழியில்லாத தொழில்களை பொதுத்துறையில் துவங்கி கலப்பு பொருளாதார மாதிரி ஒன்றை நேரு நிறுவியது விமர்சனத்திற்கும் உள்ளானது.  Socialization of the Vacuum  என விமர்சித்தவர்களும் உண்டு. திட்டமிட்ட பொருளாதாரத்தில் அன்று நிலவிய குறைகளை ஹிரன் முகர்ஜியும் சுட்டிக்காட்டுகிறார். அதனால் இலாப மய்ய பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது ஹிரனின் விமர்சனமாக இருந்தது.
அரசியல் அமைப்பு சட்டத்தில்  directive principles  இணைக்கப்பட்டது. சோசலிச திசையின்றி திட்டமிடல் தன் வலுவை பெறாது என தனது விமர்சகர்களுக்கான பதிலை நேரு தந்தார்.
1959ல் அய்ந்தாண்டு திட்டங்களின் நோக்கங்களை பற்றி வால்டர் லிப்மான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதை ஹிரன் முகர்ஜி தனது நேரு குறித்த புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். 
The revoultionary objectives of the Third Five year plan would require the organised pressures of a popular movement under the Govt leadership so dynamic and so purposeful that it can inspire people to do voluntarily the kinds of things that in Communist China are done  by Compulsion" 
சீனா குறித்து ஒப்பீட்டளவில் குறையாக பேசுவதை ஹிரன் ஏற்கவில்லை. நேருவே சீனாவின் வளர்ச்சியை பார்த்து பிரமித்துள்ளார் என ஹிரன் முகர்ஜி எழுதுகிறார்.
நேருவிற்கு சட்டத்தை மீறக்கூடியவர் எவரானாலும் சோசலிஸ்ட் ஆனாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கம்யூனிசம்- கம்யூனிஸ்ட்கள், சோவியத் ஏஜெண்டுகளாக இருந்து கலகம் செய்வபவர்கள் ஆகவே ஒடுக்கப்படவேண்டும் என விடுதலைக் காலத்தில் காங்கிரசில் வந்த குரலை அவர் ஏற்கமறுத்தார். மற்ற எல்லா கோட்பாடுகளையும் போல அமைதியான முறையில் கம்யூனிச கோட்பாடும் மக்களிடம் செல்வதில் அவருக்கு தயக்கமில்லாமல் இருந்தது என ஜகாரியா பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில்  premature Leftism குறித்து அவர் ஜேபி யிடம் எச்சரிக்கை செய்யாமல் இல்லை. ஜெயபிரகாஷோ முதலாளிகளின் உதவியுடன் நேரு எப்படி சோசலிசம் கட்டுவார் எனக் கேட்டுவந்தார்.
சோசலிஸ்ட்கள் வெளியேறியபின்னர் படேல் தன் கை ஓங்கியதாக நினைத்தார். 1950 காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். கிருபளானி, புருஷோத்தம் டாண்டன், சங்கர் ராவ் தவிர விண்ணப்பித்த பிற 4 பேர் விலகிக்கொண்டனர். அதில் நேருவும் ஒருவர். கிருபளானிக்கு 1026 வாக்குகளும் படேலின் ஆதரவாளரான டாண்டனுக்கு 1306 வாக்குகளும் கிடைத்தன. நேரு செயற்குழுவில் சேர மறுத்தார். 1950 அக்டோபரில்தான் சேர ஏற்பை தெரிவித்தார். டிசம்பரில் படேல் மறைந்தார். ஆனாலும் காங்கிரசின் வலதுபிரிவின் பலம் முற்றிலுமாக குறைந்துவிடவில்லை. ராஜேந்திரபிரசாத் மூலம் அது வெளிப்பட்டது.
காங்கிரசில் இணைந்து பணிபுரிய அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. ”காங்கிரசே ஜவஹர் அல்ல. அல்லது ஜவஹரே காங்கிரசும் அல்ல. பலநேரங்களில் அதன் முடிவுகளை என்னால் மாற்றமுடியாமல் போயுள்ளது. என் கருத்திற்கு நேர் மாறாக கூட சில முடிவுகள் வந்திருக்கலாம். ஆனால் நாட்டின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்கான கருவியாக இருந்த அமைப்பில் பணியாற்றி வருகிறேன் என்பது நிறைவானது என நேரு குறிப்பிட்டார்.
படேல் மறைவிற்கு பின்னர் நேருவிற்கு முற்றிலுமாக செயல்படும் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. ராஜேந்திரபிரசாத் இந்து சட்டத்தில் குடியரசுத்தலைவர் என்ற வகையில் தனது சொந்த கருத்துக்களை சொல்லிவந்தார். நேரு தான் பதவி விலக வேண்டியிருக்கும் என்று தெரிவித்துதான் பிரசாத்தை நிறுத்த முடிந்தது. இதை  ஜகாரியா கீழ்கண்டவாறு சித்தரிக்கிறார்.
”With Patel’s death, the balance of power shifted slightly. But the ascendancy of the Congress right was still underpinned by the president of India, Rajendra Prasad, who had attempted to block land reform legislation relating to his home state, Bihar, in 1950, and had opposed his prime minister by presenting his personal views on the Hindu Code Bill to Parliament in 1951, causing a minor constitutional crisis. On both occasions Nehru had threatened to resign as prime minister, and Prasad had retreated.”
நேருவின் வசம் காங்கிரசின் தலைவர் பொறுப்பும் வந்தது. செப்டம்பர் 1951 முதல்- நவம்பர் 1954வரை அப்பொறுப்பில் அவர் இருந்தார். பின்னர் யு என் தபர் வந்தார். திட்டக்குழுவை கம்யூனிஸ்ட் முறை- தீவிர சோசலிச முறை என்று வலது பிரிவினர் விமர்சித்தனர். ஆனால் அது பாபியன் சோசலிச தாக்கம் கொண்டது என்று அறியப்பட்டாலும், சிறப்பு வல்லுனர்களின் ஆலோசனையுடன், பலவித சமரசங்களுடன் சிறுக சிறுக முன்னேறும் வகைப்பட்ட பொருளாதார முறையே என ஜகாரியா தன் நேரு புத்தகத்தில் சொல்லிச்செல்கிறார்.
The Planning Commission was far from the ultra-socialist or quasi-communist body that it was depicted as in the propaganda of the emergent Indian right. And if Nehru’s governments acquired a reputation for Fabian socialism, the Planning Commission was to a large extent responsible for the impression. ‘Fabianism’ was less a philosophical choice than a tendency retrospectively named: here was a system that worked by gradualism, by permeation, by compromise, and by advice from think tanks, academics and technocrats. 
இதைத்தொடர்ந்து நேருவியன்கள் என்ற வட்டம் ஏற்பட்டது. சிலர் அவரின் சோசலிச பார்வையாலும் அவரின் நவீனம் குறித்த பார்வையாலும் இவ்வட்டத்தில் சேர்ந்தனர். கருத்தொற்றுமை- மற்றவர்க்கும் இடமளித்தல் அரசியலை (consensus and politics of accomomodation  )  அவர் கையாண்டார்.
 என் எம் எம் எல் ஆய்வுத்தாள் ஒன்றில் அஜாய் குதவர்த்தி Nehruvian centrism  குறித்து விவாதிக்கிறார். இந்தியாவில் வட்டார கட்சிகளின் ஆட்சி அனுபவம் ஆனாலும் பி ஜே பியின் அனுபவம் ஆனாலும்  left leaning centrism- right leaning centrism  என்பதாகவே இருந்துவருகின்றன. நேருவின் செண்டரிசம்- மிடில் வே என்பதாக இருந்தது. மத்திய வழி என்பதில் இடது அல்லது வலது விலகலோ  ஏற்படலாம். ஆனாலும் முற்றிலுமாக மய்யமுறிவு என்பதை அவை ஏற்படுத்தவில்லை. இதற்கு நேருவின் அடிப்படைகளே காரணமாக இருந்துவருகின்றன என அஜாய் வாதிடுகிறார்.
தேச ஒருங்கிணைப்பிற்கும் ஒற்றுமைக்கும் மதம் மற்றும் மொழி பிரச்சனைகளை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வதன் அவசியத்தை உணர்ந்த தேசத்தலைவராகவே நேரு இருந்தார்.  சமூக நீதி கோட்பாட்டின்படி ஒடுக்கபட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட விளக்கமாகும். அதே நேரத்தில் உரிமைகளை மட்டும் வலியுறுத்தி கடமைகளை புறக்கணிப்பது சமூக அநீதியாகவும் முடியும் என்கிற பொறுப்புணர்த்தும் எச்சரிக்கை அவரிடமிருந்து வெளிப்பட்டது. சமத்துவம் மற்றும் கடமை உணர்வுகளை அவரின் வாசகங்கள் வெளிப்படுத்துவதை நாம் காணமுடியும்
 ” No person should be specially privileged, none amongst us  an honourable exception; no job should be considered as below dignity, no duty should be shunned or shirked, no privilege can be calimed without any sufficient sacrifice or without fulfilling any obligation, because human life is all inter- related and interdependent, and hence, nobody can run away from his duties or obligations either to the family or to the society or to the state or to the world at large"  .
 மூலதனம் சுரண்டிக்கொழுப்பதற்காக மட்டுமே என்றால், அதிகாரம் கொடுமைப்படுத்துவதற்கே என்றால் அவை இல்லாதொழியட்டும் என்றவர் நேரு.
இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பட்டதாரிக்கூட ரயில்வே போர்ட்டர்களாக சிலகாலம் பணியாற்றுவதை பார்த்த நேரு, இந்தியாவில் மட்டும் இன்ன ஜாதிக்கு இன்ன தொழில் என வரையறை இருப்பதேன் என வினவினார். ஏன் பிராமணர்களும், சத்திரியர்களும் தெருக்கூட்டவோ, மலம் சுத்தம் செய்யும் கடமையோ பரிமாறிக்கொள்ளக்கூடாது -இங்கிலாந்தின் பிரதமர் கிளாட்ஸ்டோன் செருப்புதைக்கும் தொழிலை செய்யவில்லையா என வினவினார்.  Dignity of Labour  என்பதை சமூகம் உணரவேண்டும் என்பதை காந்தியைபோல் நேருவும் வற்புறுத்தியவர்தான். கடைக்கு போகும்போது கூலியை அமர்த்திக்கொள்வதை பெருமிதமாக நினைக்கும் சமூகம் குறித்து விமர்சனப்பார்வையே நேருவிடம் இருந்தது.
 ஆண் பெண் சமத்துவம் என்பதையும் அவர் வற்புறுத்தும் தலைவராகவே இருந்தார். உடல்ரீதியாக வேறுபாடு இருப்பதால் பெண் இளைத்தவரல்ல. விரைவில் இந்தியா அனைத்து துறைகளிலும் பெண் தலைமையை ஏற்றுக்கொள்ளும் நாடாக வளரும் என்கிற நம்பிக்கை அவரிடமிருந்தது.
சோசலிசம் என்பதை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சோதிக்கமுடியும் என கருதி நேரு செயல்பட்டார். மக்களை கலக்காமல் சோசலிச திட்டம் என சிலர் எழுதிவைத்துக்கொண்டு அதை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமுல்படுத்துவது என்கிற முறையை ஏற்காமல் இருக்கலாம்.  மக்களின் உடன்பாட்டுடன் சோசலிசம் என்பதை அவர் சிந்தித்தார்.
ஒருமுறை காங்கிரஸ் கட்சியினரை  சோசலிசப்பாதை எனக் கட்டுப்படுத்துவதற்கு அதன் அமைப்புவிதிகளில் திருத்தம் வேண்டுமா இல்லையா என்கிற விவாதம் வந்தது. பிரிட்டிஷ் லேபர் கட்சிக்கூட அப்படி ஒன்றை வைத்துள்ளது. அதை பின்பற்றலாமே என்கிற ஆலோசனையும் வந்தது. உறுப்பினராவதற்கு வருவாய் உச்சவரம்பு பற்றிக்கூட பேச்சுவந்தது. அன்றிருந்த நிலையில் ரூ 5000க்குள்  வருவாய் இருப்பவரே காங்கிரசில் உறுப்பினராகலாம் என சொல்ல முடியுமா என்ற வினாவும் எழுந்தது. சரியான ஆலோசனைதான், கொஞ்சம் பொறுப்போம் என நிதானப்படுத்தினார் நேரு. காங்கிரஸ் அனுபவத்தில் அதை அவரால் அமைப்புவிதி திருத்தமாக கொணரமுடியவில்லை . தன்னால் முடியவில்லை என்பதை வெளிப்படையாகவும் அவர்  தெரிவித்தார்.
இந்தியாவில் செய்யவேண்டியது சொத்து ஒழிப்பல்ல- வறுமை ஒழிப்புதான் என அவர் சோசலிசம் பற்றி பேசும்போது ஒருமுறை குறிப்பிட்டார். மத, கலாச்சார சகிப்புத்தன்மையை நாம் எவரையும் தேடிப்போய் கற்கவேண்டிய அவசியத்தில் இல்லை. ஆனால் அரசியல், சிவில் உரிமைகளை பிரஞ்சு புரட்சி, அமெரிக்க புரட்சிகளிடமிருந்து நாம் கற்றாகவேண்டும். அதேபோல் பொருளாதார சமத்துவம் பற்றி ருஷ்யபுரட்சியிடமிருந்து  நமக்கேற்ற வகையில் கற்கவேண்டும் என்பதை நேரு மக்களுக்கு எடுத்து சொல்லிவந்தார்.
உலக அனுபவங்களை பார்க்குமிடத்து காங்கிரஸ் இயக்கம் மிகுந்த ஜனநாயகபூர்வ இயக்கம்தான். பரந்துவிரிந்த கிளைகளை கொண்டிருந்தாலும் அதன் ஊழியர்கள் பரவலாக ஜனநாயக பழக்கம் உள்ளவர்கள் என்ற உணர்வையே  நேரு வெளிப்படுத்தினார்.
சோவியத்தில் அய்ந்தாண்டு திட்டங்கள் ஸ்டாலின் காலத்தில் உருவாக்கப்பட்டன- பியட்டிலெட்காஸ் Piatiletkas  என அழைக்கப்பட்ட இத்திட்டங்கள்  1928-1991 வரையிலான ஆண்டுகளில் 13 அய்ந்தாண்டு திட்டங்களாக அங்கு நிறைவேற்றப்பட்டன. சீனாவும் கூட இதை பின்பற்ற துவங்கியது. சோவியத்தால் ஈர்க்கப்பட்ட ஜவஹர் பான்ச் வருஷ் பிரனலிகா  என்கிற அய்ந்தாண்டுதிட்டமுறையை இந்தியாவிலும் அமுல்படுத்தினார். அவர் காலத்தில் வளர்ச்சி இன்று Hindu Rate of Growth இந்து வீத வளர்ச்சி  என அழைக்கப்படுகிறது. அவ்வளர்ச்சி 3.5 சதமாக இருந்தது.
இன்று அவ்வளர்ச்சி விமர்சனப்பார்வையுடன் பார்க்கப்படுகிறது. The cake is distributed even before it was baked  என குருசரண் தாஸ் போன்ற உலகமயமாதல் ஆதரவாளர்கள்  நேருவின் அன்றைய பொருளாதார கொள்கைகளை விமர்சித்துவருகின்றனர்.
விடுதலை இந்தியாவில் நேரு பொறுப்பேற்ற பின்னர் பொருளாதார சவால்கள் ஏராளம் இருந்தன. 1956ல் மக்கள் பெற்ற சராசரி கலோரி அளவு 1700 ஆக இருந்தது. சராசரி தனிநபர் வருமானம் 1951ல் ஆண்டிற்கு ரூ 250  கூட இல்லை. விவசாய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்க்கு ரூ 100 கூட இல்லை. இரவு இந்தியா மின்வசதியில்லாமல் இருட்டாகவே இருந்தது. கிராமங்கள் 10 சதம் கூட மின்வசதி பெறவில்லை. 80 சத மக்கள் கல்வியறிவற்றவர்கள். இப்படிப்பட்ட இந்தியாதான் நேருவிற்கு கிடைத்தது.
முதல் 5 ஆண்டுதிட்டம் பெயரளவிற்குத்தான் திட்டம். ஆனாலும் சில மாற்றங்கள் உருவாயின. உணவு உற்பத்தி பெருகியது. பஞ்சம் இனி இல்லை என்ற நம்பிக்கை பிறந்தது.  தனிநபர் வருவாயும் அன்றுள்ள டாலர் கணக்கில் உயர்ந்தது.  ஆவடி சோசலிச மாதிரி சமூகம் தீர்மானத்திற்குப் பின்னர் போடப்பட்ட 1955 பட்ஜெட்டை சிலர் ஆர்வ மிகுதியால் இந்தியாவின் முதல் சோசலிஸ்ட் பட்ஜெட் என வர்ணித்ததாக மைக்கெல் சொல்கிறார்.
1958 மே மாதம் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தனது அரசாங்கம் செய்துவரும் திட்டங்களை உறுப்பினர்கள் அறிய சொல்கிறார். அரசாங்கம் அரசியல்ரீதியாக வலுவானது. எனவே பொருளாதரா பரவலாக்கம் அவசியம் என்றார். சில தொழில்கள் மய்யப்படுத்தப்பட்டவைகளாக இருக்கவேண்டிய அவசியத்தையும் அவர் உணர்த்தினார். எதிலும் வறட்டுத்தனம் தேவையில்லை. நடைமுறை அனுபவத்தின் வழியே முன்னேறவேண்டியதின் அவசியத்தை அவரது உரை உணர்த்தியது. தனது சோசலிசத்தில் தனிநபர் சம வாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமையிருக்கவேண்டும்.
I do not want State socialism of that extreme kind in which the state is all powerful and governs practically all activities.The state is very powerful politically...I should, therefore, like decentralisation of economic power. We cannot, of course, decentralise iron and steel and locomotives and such other big industries, but you can have small units of industries as far as possible on a cooperative basis with State contorl in a general way. I am not at all dogmatic about it. We have to learn from practical experience and proceed in our own way..
My idea of socialism is that every individual in the State should have equal opportunity for progress"
இரண்டாவது திட்டத்தில் பொதுநிதி ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டது. குழந்தைகளுக்கான பள்ளி மேம்பாடு 23 சதம் கூடியது. ஊரக கிளினிக்குகளை பெருக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து சோவியத்துடன் நல்லுறவு ஏற்பட்டு தொழிற்பெருக்கத்திற்கு சாலை அமைக்க்ப்பட்டது.
சோசலிசமுறை எனப்பேசிவருகிறோம். அதற்கான சட்டம் அவசியம் என்றாலும் அதை வெறும் சட்டம் இயற்றி மட்டும் கொணர்ந்துவிடமுடியாது. சமூகம் சிக்கலானது- பல்தரப்பட்ட இயக்கம் உடையது. சோசலிசம் என்பது சட்டம் அல்ல. உற்பத்தி- விநியோகம்- பரஸ்பர மனித உறவுகள் சார்ந்த அமைப்புமுறையது. இந்த நடவடிக்கைகளை நாம் விரைவுபடுத்தலாம். அதிலும் முறிவு ஏற்பட்டு எதிர்மறை விளவுகளை உருவாக்காமல் கவனமாகவும் செயல்படுதல் வேண்டும் என்பது நேருவின் சோசலிச கட்டுமானம் குறித்த எச்சரிக்கை, கவனமாக இருந்தது.
We talk socialistic structure of society.. that structure cannot take place, develop just by some legislation, although legislation helps. But it really means building up a complex society. Society is complicated with innumerable relations. Socialism is not a law. It is a structure governing production, distribution, mutual relationships everything- that takes time. It just cannot be done by a resolution or by a decree. If we are going in right direction it is all well. We can speed up process. Speeding it too much sometimes really results in delay- structure may crack- cracking means delay- you have to mend.
புரட்சி என்பதே கட்டுமானத்தை செய்துவிடாது. கட்டுமானத்திற்கு தடையாக இருப்பவற்றை அகற்றுவதைத்தான் புரட்சி செய்கிறது. புதிய சமூக கட்டுமானம் என்பது நிதானமான கடுமையான உழைப்பின் மூலம்தான் உருவாகும் என சொல்லிக்கொடுத்தவர் நேரு.
 The (so called) revolution did not build up. The revolution only removed obstacles to building up. That is the most it could do. Having done that, then comes the slow laborious process of building up a new society
நாடாளுமன்ற பிரசுரக்குழு நேருவின் நூற்றாண்டுன்போது பல்வேறு ஆளுமைகளிடமிருந்து அவரது நினைவுகளை பெற்று நேரு வாழ்வும்- பணியும் பற்றிய தொகுப்பை  1990ல் கொணர்ந்தது. அதில் நேருவின் சோசலிசம் என்பது குறித்து பி வி நரசிம்மராவ் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அதில் நரசிம்மராவ் அவ்ர்கள் குறிப்பிட்டிருந்ததாவது
He was certainly inspired by the ideas of Marx and Lenin and his writings showed that he was profoundly moved by the revolution in Russia. However, he clearly recognised that India must find for itself its own road to socialism, which would be influenced by the peculiarities of its own historical experiences and the genius of its race.
It would be no exaggeration to say that the adoption of socialism as a coherent objective of the Indian National Congress was Panditji's achievement.
 நேரு இயன்றவரை சுயராஜ்யமும் சோசலிசம் தோழமையாக செல்லவிழைந்தார். அந்நிய ஆதிக்கம் நிலவும்வரை விடுதலை போராட்டம் முன்னுரிமைப்பெறும் என்பதை அவர் உணராமல் இல்லை.
 சோசலிசத்தை ஏதோ கட்சிசார்ந்த விஷயமாக சுருக்கிவிடாமல் அதை  basic tenet of the nation  என எடுத்து சென்றதில் நேருவிற்கு முக்கிய பங்குண்டு. அதேபோல் இன்னொரு முக்கிய அம்சம் காங்கிரஸ் சோசலிசம் என அதிகாரபூர்வ அமைப்புவிதியை எழுதிக்கொள்வதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 1954ல்  country's economic policy should be socialistic pattern of society என தீர்மானம் நிறைவேற நின்றவர் நேரு. இதற்கு பின்னர் 1955 ஆவடி காங்கிரஸ் இஅதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது
தேசிய வளர்ச்சி கவுன்சில் நவம்பர் 1954 கூட்டத்தில் அவர் தன் அணுகுமுறை குறித்து பேசினார். சோசலிச மாதிரி சமுகம் என சொல்லும்போது எந்த வறட்டுத்தனத்திற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் விழிப்பாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். உற்பத்தி சாதனங்கள் சமூகமயமாக்கப்பட்டு சமூக நலன்களுக்கு உதவும் வகையில் கட்டுக்குள் இருக்கவேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார். இதற்காக விவசாய- தொழிலாள்ர் புரட்சி என்பதையோ- வர்க்கமற்ற சமுதாயம் என கற்பனையூர் ஒன்றையோ தான் பரிந்துரைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒருமுறை முஸ்லீம்லீக் தலைவர் ஒருவர் நேருவை மாஸ்கோவிற்கும் பனாரஸிற்கும் இடையில் ஊசலாடுபவர் எனக்கூட கேலி பேசியுள்ளார். நேரு இந்தியாவின் தொன்மை குறித்தோ அதன் மரபு குறித்தோ அறியாதவரல்ல. ஏறத்தாழ 5000 ஆண்டுகள் வரலாற்றுப்பின்னணி கொண்ட ஒருநாட்டில் சோசலிசம் என்பதை அவர் புரிந்துகொண்டு செயல்பட்டவர். கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை வைத்துக்கொண்டு அவர்  சோசலிசம் பேசாமல் இருந்திருக்கலாம். ஜனநாயகமும் சோசலிசமும் நாணயத்தின் இருபக்கங்கள். ஒன்றில்லாமல் ஒன்றில்லை என ஜனநாயக சோசலிசம் குறித்து விளக்கியவர் நேரு. எங்களைப் போன்று அவரின் உரைகளை நேரிடையாக் கேட்டு வளர்ந்தவர்கள் இதை மறக்கமுடியாது.
நரசிம்மராவ் இவ்வாறு அக்கட்டுரையை முடிக்கிறார். மிகச்சிறந்த காந்தியர் என்றால் நேருவை சொல்லமுடியும்- மிகச்சிறந்த நேருவியன் என்றால்…
Today the greatest Gandhian I can think of is Nehru. Now, who can be called the greatest Nehruite is still to be decided...But, in the context of our march towards the 21st century or on the eve of the 21st century, how Panditji is to be interpreted is something which is a challenge to the younger generation.
நேரு ஒருமுறை தன் சிந்தனையை வெளிப்படுத்தும்போது ஆரூடங்கள் எதையும் வெளிப்படுத்தாத உரையை தந்தார். இந்தியாவிலும் சோசலிசம் வரலாம். எப்போது வரும் எனத்தெரியாது. என் போன்ற சிலர் விழைவதால் அது வராது. அது நம் நெறிமுறைகளுக்கு உகந்ததாக உள்ளது. அது யுகதர்மம் என நம் மொழியால் அறியப்படக்கூடியதாக உள்ளது என்றார்.
 "I do not know when it is going to come, but I am sure, it is going to come because as it has become part of our ethos and what we have called in our language Yuga Dharma".
இ எம் எஸ் நம்பூதிரிபாட் நான் அறிந்த ஜவஹர்லால் என்கிற கட்டுரை ஒன்றை நேரு நூற்றாண்டு நாடாலுமன்ற தொகுப்புக்குழுவிற்கு வழங்கியிருந்தார். நேருவின் நூற்றாண்டை ஒட்டி அவரின் நிறைகுறைகளை மதிப்பிட்டு   Nehru Ideology and Practice  என்ற புத்தகம் ஒன்றையும் அவர் எழுதினார். கட்டுரையில் இ எம் எஸ் தரும் சொற்சித்திரம்:
பாசிச சக்திகளை எதிர்த்து நேரு உறுதியாக நின்றபோது அவர் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தால்  fellow traveler   ஆக பார்க்கப்பட்டார் . இரண்டு முக்கிய இடதுசாரி சக்திகளான கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட்களுக்கு அவர் அனுசரணையாக இருந்தார். ஆனால் இது சிலகாலம் மட்டுமே நீடித்தது. பின்னர் தொடர்ந்த 1942, 1946, 1952, 1957, 1962 என நிகழ்வுகளில் நேருவை நாங்கள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரானவராகவே பார்க்கமுடிந்தது.
விடுதலை இந்தியாவில் கேரளாவில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை நீக்குவதில் நடந்த பிரச்சாரங்களில் அவர் கம்யூனிச விரோத படையின் தளகர்த்தராகவே இருந்தார்.
the hysterical campaign against the Communist Party in 1959-62 showed that the "fellow traveller" of the Communist Party had transformed himself into the general officer commanding the anti-Communist army in the country.
நம்பூதிரி தன் மதிப்பீட்டில் நேரு இந்திய முதலாளிகளின் typical representative என்றார். அவர்களுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற முகமும் கம்யூனிச எதிர்ப்பு என்கிற முகமும் ஆக இரட்டை முகம் இருக்கும் என்றார். முதலாளித்துவ வர்க்கம் சார்ந்த முற்போக்கு தீவிர தலைவர்- அறிவார்ந்தவகைப்பட்டு மகாத்மா காந்தி கொள்கைகளை அவர் பாராட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் அரசியல் வகைப்பட்டு முதலாளிகள் வர்க்கத்திற்கு தலைமை ஏற்று விடுதலைப்போராட்டம் நடத்திவந்த காந்தியை அவர் பின்தொடர்ந்தார். அவர் மார்க்ஸெங்கெல்சின் விஞ்ஞான சோசலிசத்தை பின்பற்றவில்லை என நம்பூதிரி எழுதுகிறார்
A radical leader belonging to the bourgeoisie, he could not intellectually understand and appreciate the philosophy of Mahatma Gandhi; but, as the political leader of the class, he had to follow the most acute leader under whose leadership the class was fighting for freedom.
As a radical leader of the class again, he had his sympathy for the labour and socialist movements in the world as well as for the new socialist system that was developing in Soviet Russia. But he was no follower of scientific socialism as expouhded by Marx, Engels and Lenin.
அவரின் சோசலிசத்தை இடதுபக்க சாய்வுடைய பூர்ஷ்வா தாராள ஜனநாயகம் என நம்பூதிரி வரையறுத்தார். அவரின் சோசலிச நாடுகளின் தொடர்பைக்கூட உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பிற்கு பயன்படுத்தினார் என்பது நம்பூதிரி தரும் மதிப்பீடு.

வி ஆர் கிருஷ்ணய்யர் The Patriot, New Delhi, 3 September, 1989 ல் நேருவின் இரகசியம் அவரின் பெரும் மனிதாபிமானத்தில் இருந்தது. மானுட விதியுடனான சந்திப்பை அவர் பெருங்கருணையுடன் அணுகினார். He was, in short, the sublime epitome of the Manifesto of Man. சுருக்கமாக சொன்னால் மனிதனின் மானிபெச்டொ நேரு என்று எழுதியிருந்தார்.
ஜவஹர்லாலின் பொதுவுடைமை என்கிற விமர்சன தலையங்கத்தை பெரியார் குடியரசு 21-6-1936ல் வெளியிட்டிருந்தார். நேரு பேசிவரும் அபேதவாதம் குறித்த முரண்பாடுகளையும், காங்கிரசில் வலது தலைவர்களுடன் அவர் ஒத்துப்போவதையும் அதில் பெரியார் குறிப்பிட்டிருந்தார். பூரண சுயேட்சை- பின்னர் அபேதவாதம் எனும் பேசிவரும் நேரு தனது கவுன்சிலுக்கு முக்கால்வாசிப்பேர்களை அபேதவத எதிர்களாகவே பார்த்து நியமித்துக்கொண்டிருக்கிறார். படேல், பிரசாத், மாளவியா, விஜயராகவாச்சாரியார், ராஜாஜி, சத்தியமூர்த்தி எனும் பெயர்களை பெரியார் பட்டியலிடுகிறார்.
இந்தியாவுக்கு சுதந்திரமில்லாமல் எப்படிப் பொதுவுடைமை வராதோ, அதுபோலவே இந்தியாவில் பார்ப்பானும், பறையனும், மேல்ஜாதியும், கீழ்ஜாதியும் ஒழியாமல், அழியாமல் சுதந்திரம் வரமுடியுமோ என்று கேட்கின்றோம்அபேதவாதம் பேச்சுக்கு சிங்காரம்தான். ஜவஹர்லாலே எப்படி வரும், அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்கிறாரே என பெரியாரின் விமர்சனம் செல்கிறது.
The Gentle Colossus  A study of Jawaharlal Nehru  என்ற புத்தகத்தை Hiren Mukherjee எழுதியிருக்கிறார். கம்யூனிசமா- கம்யூனிலசமா எது ஆபத்து என்றால் கம்யூனிலசம்  என்கிற  மதவெறியே ஆபத்தாந்து என நேரு கருதியதை ஹிரன் குறிப்பிடுகிறார்.

" If any people choose to think of me, then I should like them to say- this was the man who, with all his mind and heart, loved India and Indian people. and they in turn were indulgent to him and gave him of their love most abundantly and extravagantly"
சோசலிசத்திற்கான் வன்முறை குறித்த நியாயங்களை புகழுரைகளை ஒருவர் சொல்லலாம். முதலாளித்துவ பாசிச வன்முறைகளை ஒப்பிடும்போது சோசலிசத்திற்கான வன்முறை சாதாரணமானது என்று கூட சொல்லலாம். ஆனால் நாட்டின் பிரிவினை கால வன்முறைகளை, மகாத்மாவின் படுகொலைகளை பார்த்த பின்னர் வன்முறைக்கு முகம் கொடுக்கமுடியாது என்றே நேரு உணர்ந்ததாக ஹிரன் பதிவு சொல்கிறது.
ஆவடி தீர்மானமானாலும் பின்னர் 1963ல் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் கூட்டமானாலும் அவர் சோசலிச மாதிரியை உயர்த்திப்பிடித்தார். சோசலிச திட்டத்தில் நாம் உண்மையாக் நிற்கவில்லையெனில் அடுத்த 10-15 ஆண்டுகளில் மக்கள் நம் மீது நம்பிக்கையற்ரு போய்விடுவார்கள் என்கிற எச்சரிக்கையை நேரு கொடுத்ததாக ஹிரன் சொல்கிறார்.
நேரு theorist அல்லர் ஆனால் சிந்தனையாளர் இந்த பெரிய மனிதர் உறுதியாக சோசலிசம் நோக்கி வழிகாட்ட இயலாதவர் ஆனாலும் அவரை மன்னித்துவிடலாம் என ஹிரன் எழுதினார்.




No comments:

Post a Comment