Skip to main content

நேருவின் நிர்வாகம்


நேருவின் நிர்வாகம்

- ஆர்.பட்டாபிராமன்

நேரு உலக அரசியல் நிகழ்வுகள்- போக்குகள், இந்திய விடுதலைப்போராட்டம் குறித்த ஞானம் மிகுந்தவராக இருந்தார். அலகாபாத முனிசிபல் நிர்வாகம் என்கிற நிர்வாக அனுபவம்  மட்டுமே கொண்ட நேரு 1946ல் இடைக்கால சர்க்காரின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்.  பிரிட்டிஷ் வைத்துவிட்டுப் போகும் நிர்வாக எந்திரத்தை மக்களுக்கு நெருக்கமாக ஜனநாயகப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு விடுதலைக்குப் பின்னர் காத்திருந்தது.

 நாடு பிரிவினையின் துயர்களை அனுபவித்துக்கொண்டிருந்தது. அகதிகள் பிரச்சனை, சமஸ்தானங்களின் பிரச்சனைகள், மகாத்மா படுகொலை என தொடர் துயரங்களின் ஊடே விடுதலை அரசாங்கம் குறித்த நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு நேரு தலைமையில் அன்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள்  அனைவருக்கும் இருந்தது. பல்வேறு சிந்தனை ஓட்டங்களில் இருந்த காங்கிரஸ் தலைவர்களை கொண்டு உடனடியாக தீவிரமான மாற்றங்களை செய்ய இயலாது என்கிற எதார்த்த நிலையும் நேருவால் உணரப்பட்டிருந்தது.


மய்யம்- பரவலான அதிகாரமுறை (Centralisation- Decentralisation)  என்கிற பிரச்சனையை நேரு நடைமுறை சாத்தியங்களுக்கு உட்பட்டு தீர்க்க நினைத்தார். முற்றிலுமாக பரவலாக்கப்பட்ட அதிகார முறைக்காக (Decentralisation) காந்தியடிகள் நின்றவர் என்பதை மற்ற அனைவரையும்விட  நேரு நன்கறிந்தவர். அதேநேரத்தில் ஆட்சியாளர் என்ற வகையில் அதிகாரவர்க்கம் எனும் பயிற்சியாளர்கள் மூலம் நிர்வாகம் என்கிற நடைமுறையையும் அவர் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் அதிகாரவர்க்கம் வளர்வது தவிர்க்கமுடியாததாக இருப்பதை நடைமுறையில்அவர் உணர்ந்தார்.

அடிமட்ட மக்களுக்கான வேர்க்கால் உணர்ந்த நிர்வாகம் அமைக்கப்படவேண்டுமே என்கிற தவிப்பு நேருவிடம் இருந்தது. பஞ்சாயத்து நிர்வாகம் அவசியம்- அடிமட்ட நிர்வாகத்தில் அவர்கள் தவறு கூட இழைக்கட்டும். அனுபவம் வழியே கற்றுக்கொள்ளட்டும் என்பதை நேரு சொல்லிவந்தார். பஞ்சாயத்துக்கள் செய்யும் தவறுகளால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதும் ஆபத்து வந்துவிடப்போவதில்லை என  அதில் நம்பிக்கையில்லாதவர் மத்தியில் அவர் தெரிவிக்கலானார். அதன் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதை எதிர்பார்த்தார். மலைவாழ் மக்கள்- பழங்குடிகளின் மேம்பாட்டில் நமது கவனம் செல்லவேண்டும் எனவும் அவர் வற்புறுத்தினார்.

பிரதமர் என்கிற வகையில் அவர் அரசியலையும் நிர்வாகத்தையும் சரியான குழைவில் கையாளவேண்டிய வித்தையை பயின்றார். அமைச்சரவை அமைப்பது என்பதானாலும், பொறுப்பளிப்பதாக இருந்தாலும், ஒருவரை கவர்னராக அனுப்புவது என்றாலும் அதில் வெறும் அரசியல் மட்டுமில்லாமல் சரியான நிர்வாகத்தேர்வு என்பதும் தேவைப்பட்டது.  தீர்வுகளை வந்தடைய விவாதம் அவசியமானால் நிர்வாக வசதி என்பதையும் கணக்கில்கொண்டுதான் அரசியல் முடிவானாலும் எடுக்கப்படவேண்டும் என்பதில் நேரு உறுதிகாட்டினார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்வாகத் தூண் என அறியப்பட்டவராக இருந்த சர் பாஜ்பாயை நேரு தன் நேரடி கண்காணிப்பில் இருந்த வெளியுறவுத்துறை செக்ரடரி ஜெனரல் ஆக வைத்துக்கொண்டார் அவ்வாறு ஏன் செய்தார் என்கிற விவாதம் உயர் நிர்வாக அதிகாரிகள் மட்டத்தில் இருந்தது.

நேருவிடம் இது குறித்து கேட்கப்பட்டது. நேரு அவர்கள் “ ஆமாம். ஆனால் நான் வார்த்தைகளை சொல்லும்போதே வாக்கியங்களை மிகச்சரியாக  எழுதி , ஒரு கமா கூட மாற்றத்தேவையில்லாத அளவிற்கு எழுதும் ஆற்றல் உள்ளவர் பாஜ்பாய் என பதில் தந்தார். திறமையானவர்கள் எவராக இருந்தாலும் அவரின் பழைய பின்னணி என்ன என்பதைப் பார்க்காமல் பயன்படுத்தப்படவேண்டிய ஆற்றல் உள்ளவராக இருந்தால், நிர்வாகத்திற்கு அவசியமெனில் பயன்படுத்தவேண்டும் என நேரு எண்ணி செயல்பட்டார்.

நிர்வாகத்தில் நேருவின் தாக்கம் என்பதை எப்படி வகைப்படுத்துவது. சரியான கொள்கைகளை வகுத்தல், அமுலாக்கத்திற்கான முறைகள்- ஏற்பாடுகள், பொருத்தமான திறமையாளர்களிடம் அமுலாக்க பணிகளை ஓப்படைத்தல், தொடர்ந்து தாமே நின்று எந்த அளவு எப்படி செல்கிறது என்பதை கவனித்தல் போன்றவற்றால் அவரது தாக்கத்தை நாம் பட்டியலிட்டுக்கொள்ளமுடியும்.
 நேரு விஞ்ஞான வகைப்பட்ட நிர்வாகமுறை- நிர்வாகமுறையின் விஞ்ஞானம் என்பதை அறிந்தவராக இருந்தார் என்கிற அனுபவ மதிப்பீட்டைத்தான் அவர் தலைமையில் பணியாற்றிய உயர் அதிகாரிகளின் பதிவாக இருப்பதை பார்க்கமுடிகிறது.

Indian Statistical Institute    தலைமையில் பொறுப்பில்  பேராசிரியர் மகலானோபிஸ்  இருந்தபோது சாம்பிள் சர்வே ஒன்றிற்கு துணை ஆட்சியர் ஒருவரை மகலானோபிஸ் தெரிவு செய்தார். இது விவாதப்பொருளானது. பிரச்சனை காபினட் செயலர்வரை சென்றது. நேரு தயங்காமல்  அதிகாரிகளிடம் தெரிவித்தார். பேராசிரியரிடம் அமர்ந்து பேசுங்கள்- tailor your rules  என்றார். எவர் திறமைசாலியோ அவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டால் நம்பி செயல்படவேண்டும் என்பதை நேரு இதன்மூலம் உணர்த்தினார் என புரிந்துகொள்ள முடிகிறது.

 நிதி அமைச்சகத்திற்கு வெளியே சுதந்திரமான திட்டக் கமிஷன் என்ற கருத்தை நேரு கொண்டிருந்தார். உச்ச மட்டத்தில் உட்கார்ந்த சில பொருளாதார அறிஞர்கள் எழுதிக் கொடுப்பதை அமைச்சர்கள் அமுல்படுத்த வேண்டுமா என்கிற விவாதம் எழுந்தது. அது அகாடமிக் குழுவா- இல்லை பொதுவெளியில் பிரசித்தி பெற்ற ஆனால் திட்டமிடல் குறித்த  சிறப்பு பொருளாதார விதிகளை அறியாதவர்களின் குழுவா என்பதும் எழுப்பப்பட்டது. நேரு பிரதமர் என்ற வகையிலும், நிதி அமைச்சர் உறுப்பினர் என்ற வகையிலும் கலந்ததொரு குழு என நேரு இதற்கு விடை கண்டார்.

நேருவிற்கு திட்டமிடுதல் என்பதில் எந்த ஒரு கோட்பாட்டு உண்மையையும் நிரூபிக்கவேண்டும் என்கிற அவசியம் இருந்ததில்லை. அவரின் நோக்கம் அதை வைத்துக்கொண்ட செயல் என்பதில் இருந்தது. செயல் என்பதோ உடனடி தேவைகளுக்கானது மட்டுமல்ல - எதிர்கால தேவைகளையும் கணக்கில் கொண்டதாக இருந்தது. தோல்வியே ஏற்படவில்லையா என்றால் நிச்சயமாக தோல்விகள் இருந்தன என்பதாகவே பதில் இருக்கும். ஆனால் சுயசார்பு பொருளாதார திட்டமிடல் என்பதை நோக்கிய நகர்வாக அவை அமைந்தன.

பரஞ்சபே ஏகபோக கட்டுப்பாட்டு கமிஷன் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது நேருவின் இப்பார்வையை சரியாகவே மதிப்பிட்டிருந்தார்.
 For Nehru, planning was more than a method, more than an exercise in administration. Planning meant rebuilding the economic  and social fabric of India, breaking the barrier of poverty, modernising the institutions, and the apparatus of production.." .
 நேருவிற்கு விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்துறை நாகரீகம் முக்கியமானதாக இருந்தது. பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்மயமாதல் அவசியம் என கருதியதுடன் அதற்கான செயல்வடிவமும் தந்தார். மாற்றத்திற்கு தொழில்நுட்பம் அவசியமானது. வெறும் கோட்பாடுகளால் வாழ்க்கை மாற்றங்களை உருவாக்கிவிடமுடியாது. பொருளாதார திட்டமிடுதல் தனிநபர் வளர்ச்சியிலும் ஜனநாயகம் வலுப்பெறுவதற்கும் துணையாக நிற்கவேண்டும் என்கிற புரிதலும் அவரிடம் திடமாகவே இருந்தது.

சோசலிஸ்ட் மாதிரி சமூதாயம் என்பதை அவசியமாக நேரு உணர்ந்தார். எனவே பொதுத்துறை கட்டுமானம் வலுவடைந்தது. நாட்டின் பெரும்பான்மை மக்கள் நம்பி உழைக்கும் விவசாய மேம்பாடு என்பதையும் அடிப்படையாக கொள்ளாமல் இருக்க இயலாது என்ற புரிதலும் அவரின் அனுபவத்தில் உறைந்து இருந்தது.  விவசாயம், கூட்டுறவு, கம்யூனிட்டி டெவலப்மெண்ட் என்கிற ஒருங்கிணைந்த திட்டங்கள் உருவாயின. இவைகள் அய்ந்தாண்டு திட்டங்கள் மூலம் செயல்வடிவத்திற்கு வந்தன.

திட்டமிடுதலில் அவர் உணர்ந்த நடைமுறை பிரச்சனைகள் குறித்தும் எச்சரிக்கைகளை நேரு செய்தே வந்தார். சோசலிச சமூகமானாலும், முதலாளித்துவ சமூகமானாலும் அதில் நிலவும் சில ஆபத்துக்களை புரிந்துகொண்டுதான் நமக்கானவற்றை நாம் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் கருதினார். இது குறித்து நேரு பேசுகையில் கம்யூனிஸ்ட்களை அவர் விமர்சித்தார். உழைக்கும் மக்கள் என நிரம்ப பேசும் அவர்கள் அதை ஸ்தூலமாக பார்க்கத் தவறுகிறார்கள். தூய கோட்பாடாகவே அது அவர்களிடம் வெளிப்படுகிறது. இதனால் சிலநேரம் உழைக்கும் மக்களுக்கு துன்பம்கூட நேர்கிறது என்பது அவரின் விமர்சனமாக இருந்தது. அதே போல் நிர்வாகத்தில் இருப்பவர் மனிதாபிமான பக்கங்களை காணாமல் விடுவதும் முதலாளித்துவ முறையிலான செயல்பாடாகிவிடும். நாம் செயல்படும் ஒவ்வொரு அம்சத்திலும் மனிதர்கள்  இருக்கிறார்கள் என்கிற எண்ணம் அவசியம் என அவர்கள் பற்றிய விமர்சனத்தையும் சேர்த்தே வைத்தார் நேரு.

The Communist talks a tremendous deal about the masses, the toiling masses. The toiling masses become some abstract apart from human beings in them. He may decide something on pure theory, which may lead to tremendous suffering to those toiling masses. So also the other administrator functions in a different - capitalist society. The adminstrator may think in abstract of the people he deals with, come to conclusions which are justifiable apparently, but which miss the human element. After all, whatever department of Govt you deal with, it is ultimately a problem of human beings, and the moement we forget them, we are driven away from reality"
சோசலிச அமைப்பு என நாம் பேசுகிறோம். சோசலிசம் என நாம் சட்டம் போட்டுவிட்டதாலேயே அதற்கான வாழ்வியல் வடிவம் வந்துவிடாது. சட்டம் உதவாது என சொல்லவில்லை. மனித உறவுகள்- உற்பத்தி- விநியோகம் போன்ற பல அம்சங்கள் அதில் இருக்கின்றன. வெறும் தீர்மானங்களும், உத்தரவுகளும் மட்டும் போதாது. புரட்சி என்பதே கட்டுமானமல்ல. புதியவகைப்பட்ட கட்டுமானங்களுக்கான தடைகளை களைவதது என்கிற விளக்கம் நேருவிடம் கிடைக்கிறது.

நேரு ருஷ்யாவிலிருந்து வரும் விருந்தாளிகளிடம் அவர்களின் அனுபவத்திலிருந்து எடுத்துக்கொள்வதை குறிப்பிடுவார். எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உங்களின் புரட்சிகரபயணம் துவங்கியது. புரட்சிக்கு பின்னர் 15 ஆண்டுகள் கழித்தே அய்ந்தாண்டு திட்டங்கள் உருவாயின. நாங்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னர் என்றாலும் உங்களை எங்களது வழிமுறைகள் மூலம் எட்டிப்பிடிக்க விழைகிறோம்.

நிர்வாகம் என்பது மக்களின் தேவைகளை அறிந்து தீர்ப்பதற்கான ஏற்பாடே தவிர, யாரோ சிலர் உயரே உட்காருவதற்கான ஏற்பாடல்ல என்றவர் நேரு.

 நேரு டிசம்பர் 9 1955ல் பொது சேவை ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். சேவை என்றால் என்ன என விளக்கி தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

சேவை யாருக்கு- சமூகத்திற்கு- பரந்து பட்ட நோக்கங்களைகொண்டு அது நடைபெறவேண்டும் . அரசாங்க அமைப்புமுறை மேலிருந்து கீழ் என்ற வகையிலேயே செயல்பட்டு வருகிறது. நாம் விடுதலை அடைந்துவிட்டோம். ஜனநாயக முறையிலான அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். ஜனநாயகத்தில் இறுதி அதிகாரம் மக்களிடம்தான் என்ற உணர்வு அரசாங்க சேவை செய்வோரிடம் ஏற்படவேண்டும்.

அரசு என்பது நிலைத்த அரசல்ல- டைனமிக் அரசு என்ற உணர்வு வேண்டும். எனவே நமது பார்வையில் அரசியல் என்பது மேலோங்கி இல்லாமல் சமூக பொருளாதார வளர்ச்சி என்பது மேலோங்கவேண்டும். நமது வேலைப்பாங்கே மாறியுள்ளது. முன்பு இருந்ததைவிட 100 மடங்கு வேலைமுறைகள் கூடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் வேலைத்தன்மை பிரிட்டிஷ் காலம் போன்ற ஒன்றல்ல என்பது உணரப்படவேண்டும். நிர்வாகத்தில் இருப்பவர்கள் மக்களுடன் அவர்களின் தேவைகளுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்கிற நேருவின் எதிர்பார்ப்பை இவ்வுரை நமக்கு புலப்படுத்தும்.

தனித்தனி அமைச்சர்கள்- துறைகள் அவற்றின் தனித்த வேலைமுறைகள் போன்றவற்றால் விடுதலை அடைந்த ஒரு நாட்டின் நிர்வாகம் மக்களுக்கு பொறுப்பாக்கப்படவேண்டும் என்பதற்கான அடித்தளத்தை நேரு அமைத்தார் என்றால் அது மிகையாகாது. தன்நேரடி கண்காணிப்பில் உள்ள வெளியுறவுத்துறையில் காலை 9 மணிக்கு துவங்கும் வேலைகள் இரவு 8 மணிக்கு கூட முடியாமல் தொடர்ந்து பொறுப்புடன் பணியாற்றிவந்தவதை அவர் முன்னுதாரணமாக சுட்டிக்காட்டினார்.

 நேரம் பார்க்காது செய்வதே சேவை என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கலாம். வேலை - சேவை என்றாலே பொறுப்பு எடுத்துக்கொள்வது என்கிற புரிதலும் அவசியம். எந்திரத்தனமாக ஏதோ மேலிருந்து வரும் உத்தரவுகளை அமுல்படுத்துவது வேலையல்ல. வேலை சமூக கடமையுடன் கூடியது என்பதை அவரது உரை உணர்த்துவதாக  இருந்தது.

போலீஸ்- பொதுமக்கள் உறவு  விடுதலை அடைந்த நாட்டில் பெருமளவு மாறவேண்டும். ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன், வெறுப்புகொண்டு- பயந்துகொண்டு பார்க்கும் பார்வை அகற்றப்படவேண்டும். போலீஸ் என்றாலே கெட்ட சக்தி என்ற உணர்வு மக்களிடமிருந்து அகற்றப்பட்டு அவர்கள் சமூக பாதுகாப்பிற்கு அவசியமானவர்கள் என்ற உணர்வு பெருகவேண்டும் என நேரு விழைந்தார். மக்களுக்கு அவர்கள் ஒத்துழைப்புடன் சேவை செய்யவே போலீஸ் என்ற பொறுப்பு போலீசாரிடமும் வளர்ந்தெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினர்.

Official non official  எறெல்லாம் பேசுவதை அவர் அவசியமா எனக்கேட்டர்.  தான் இதில் யார் என வினவினார். சிவில், மிலிட்டரி, போலீஸ் என எந்த சேவையானாலும் மக்களின் ஒத்துழைப்புடன், மக்களுக்காக என்கிற புரிதலையே அவர் நிர்வாக இலட்சணமாக வலியுறுத்திவந்தார். எங்கு அலுவலர் ஒருவர் பணிபுரிகிறாரோ அங்குமக்களின் ஒத்துழைப்பை பெறுகிறாரா என்பதுதான் அவரின் திறமைக்கான சான்றாக இருக்கும் - வேறுவகை  Efficiency  எல்லாம் என்னவகை பயனைத்தரும் என பொதுச்சேவை நிர்வாகிகளிடம்  நேரு கேள்வியாக முன்வைத்தார்.

அரசாங்க சேவை என்பது வேலைவாய்ப்பை உருவாக்குவதாக இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டுமே சேவைகளை நாம் உருவாக்கவில்லை. மக்களுக்கு பணியாற்றத்தான் சேவைகள். ஏதும் நடைபெறவில்லையெனில் சம்பளம் வாங்கிக்கொண்டு சும்மா இருக்கிறோம் எனபதே பொருள். எனவே வேலையை எவ்வாறு மக்களுக்காக செய்வது என்பது எண்ணமாக இருக்கவேண்டும்.
 ஒரு பக்கத்தில் வேலையின்மை இருந்துகொண்டிருக்கிறது. வேறு பகுதியில் குறிப்பாக சில அலுவலகங்களில் ஏராள பணியாளர்கள் இருக்கின்றனர்- அதுவே சில நேரங்களில் நியுசன்ஸ் ஆக இருக்கிறது. அவர் பேசியதை அவரது மொழியிலேயே தரவேண்டியுள்ளது
 Such numbers bring down efficiency. It is probably better for us to pension them off and let others do the work.

பலவித வேலைமுறைகள் நிலவுகின்றன. மனிதர்களில் எவரும் ஒருவருக்கு மற்றவர் மேலானவர் அல்ல. ஆனால் வேலையைப் பொறுத்தவரை அவரவர் திறமைக்கேற்ப அமர்த்தப்படவேண்டும். இது சாதி போன்ற ஒன்றல்ல. சர்வீஸ்சாதி என நேரு அக்கூட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார். எல்லா இடங்களைப்போலத்தான்  அரசாங்க பொதுச் சேவையிலும் நேர்மையான- நேர்மைகுறைவானவர்கள் இருக்கிறார்கள். அப்படி திறமையற்றவரை- நேர்மைகுறைந்தவரை தனியாக கவனித்து உரிய நடவடிக்கை வேண்டுமே ஒழிய ஒட்டுமொத்த சேவையே பாழ் என விமர்சிக்கக்கூடாது.

Men with greater experience and intelligence may be placed in the higher grade. But do not convert that higher grade into a higher caste.. we in India, who are confirmed practitioners of the caste system, bring in this caste system wherever there is loophole for it. You must change it

 நமது சேவை வருங்காலங்களில் மேலும் மேலும் டெக்னிகல் சார்ந்தவையாக மாறும். நிர்வாகம் கூட டெக்னிகல் பயிற்சியாளர்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

வேலையில் இருவகை மனிதர்கள் தேவை. இருப்பதை தொடர்வது ஒருவகை- மாற்றங்களை கொணர்வது மற்றொரு வகை. நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களாக  continuity  என்பது இருந்து வருகிறது. ஆனால் மாற்றங்களே இல்லை என சொல்லமுடியாது மாற்றம் இல்லையெனில்  மரணம்தான். மாற்றம் முறித்துக்கொண்டு படுவேகமாகவா அல்லது நிதானகதியிலா என்பதில் நாட்டிற்கு நாடு வேறுபடலாம்.

 பொதுத்துறையை நிர்வகிக்க ஒருவரை நாம் போடுகிறோம். அவரோ எனக்கு இந்தவகை பொருளாதாரத்தில் நம்பிக்கை இல்லை என அவ்வேலையை எடுத்துக்கொண்டால் சரியாக இருக்குமா என மிக முக்கிய உளவியல் கேள்வியை நேரு எழுப்பினார். தனியார்துறையிலிருந்து கூட நாம் ஒருவரை போடலாம்- ஆனால் அவருக்கு  public Conscience  இருக்கவேண்டும்-  Private Conscience அல்ல என அவர் தனது பதிலையும் தந்தார். சிவில் சர்வீஸ் விதிகளை தான் பார்த்ததாகவும் சில பண்டிட்களால் மட்டுமே விளக்கம் தரத்தக்க வால்யூம்களாக அவை இருப்பதாகவும் அவர் ஒருமுறை குறிப்பிட்டார். விடுதலை இந்தியாவிற்கு உகந்தவகையில் அவை மாற்றம் பெறவேண்டும். சில விதிகள் பொருத்தமாக இருக்கலாம். அனைத்தையும் விட அதை அமுலாக்குபவர்களின் மனநிலைதான் முக்கியமானது.

 உங்களுக்கு சோசலிசம் வேண்டுமென்றால் நிர்வாக நடவடிகைகள் அதற்கேற்ப இருக்க வேண்டாமா என அவர் உயர் அதிகாரிகளை அறிவுறுத்துவார். இல்லையெனில் முரண்பாடுகள் மலிந்து பெருகும் என எச்சரிப்பார். இதை எந்த தனிநபருக்கும் உரியதாக எடுக்காதீர்- இது ஒரு pattern  என சிஸ்டம் குறித்து அதன் மாற்றம் குறித்து அவர்களிடம் நேரு உரையாடுவார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ருஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த புத்தகங்கள் நமக்கு பயன்படலாம். ஆனால் முற்றிலும் அப்படியே பொருந்திவிடாது. நமது பிரச்சனைகள் என்ன- தீர்வு என்ன  என்பதை நாம்தான் நம்முடைய சொந்த வழிகளில் காணவேண்டும் என உயர் அதிகாரிகளுடன் நேரு உரையாடுவார்.

 நமக்கு நேரம் மிக முக்கியமாக இருக்கலாம். எவராவது நம்மை பார்க்க வந்தால் முடியாது என சொல்லக்கூடாது. வருபவரை தனிநபராக பார்க்கக்கூடாது. அவரைப்போன்ற குறையுள்ளவர்கள் லட்சக்கணக்கானவர்கள் இருக்கலாம். வந்தவரை அவர்களின் பிரதிநிதி என எடுத்துக்கொண்டு குறையை கேட்கவேண்டும்.  இந்தியா என்பது எனக்கும் அதிகாரிகள்- ஊழியர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து மக்களுக்குரியது என புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்பது நேருவின் அறிவுரை. காந்தி எவரையும் திருப்பி அனுப்பியதில்லை என்பது நமக்கு பாடமாகட்டும் என்றார் நேரு.

 சுயாட்சி அரசாங்கம் என்றால் என்ன எனக்கேட்டு அதற்கு தனது விளக்கத்தை தந்தார் நேரு. நாடாளுமன்றம்- அதற்கான தேர்தல்கள்- ஆட்சி என்பது நடைமுறையாக இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டோம் என்பதற்காக ஒரு திசையில் வேகமாக பயணிக்கத்துவங்கி மக்கள் கருத்திற்கு எதிராக போனால் அவர்களுக்கு அவ்வரசாங்கத்தை தூக்கி எறியும் அதிகாரம் இருக்கிறது என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ளவேண்டும். சரியான அரசாங்க நடத்தை என்பது மிக அவசியமானது என்றார் நேரு.

 பல்வேறுபட்ட கருத்துக்கள் முட்டிமோதும் சூழலில் ஒவ்வொருவருக்கும் இணக்கமாக நிர்வாகி ஒருவரால் முடிவு எடுக்கமுடியாது. ஆனால் அவர் பொறுப்புடன் நடந்துகொள்கிறார் என்ற உணர்வு உருவாக்கப்படவேண்டும். ஒருவரது கருத்தை ஏற்கமுடியாமல் போனாலும் அதை பொறுப்புடன் கவனத்துடன் கேட்கிறார் என்ற உணர்வை உருவாக்கவேண்டும். இப்படிப்பட்ட நடத்தை முறைகளால் பிரச்சனையின் சூட்டை தணிக்க முடியும் என்றார் நேரு.

In administration, as in most things in life, it is not only what one does, but the manner of doing it, that is exceedingly important, especially in dealings with large masses of human beings, as in a democracy.. If People get the impression that things are being imposed upon them, then friction arises.
In a way all public administration is bureaucracy. The growth of socialism is the growth of bureaucracy. Bureaucracy will grow.

 நமது பஞ்சாயத்துகள் மோசமாக இருக்கின்றன என அடிக்கடி நமக்கு ரிபோர்ட் வருகிறது. உண்மைதான். ஆனால் ஜனநாயகம் என்பது மேல்மட்டத்தில் இருக்கின்ற ஒன்றல்ல. அது அடிமட்டத்தில் நிலைகொள்ளவேண்டிய ஒன்று. பஞ்சாயத்துகள்தான் நமது ஜனநாயகத்தின் அடிப்படைகள். அதை நாம் மேம்படசெய்யவேண்டுமே தவிர இல்லாமல் ஆக்கிவிடக்கூடாது.

 அடுத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனை பாரபட்சத்துடனான லஞ்ச நிர்வாகம். எல்லோரும் நேர்மையானதற்கு பின்னர்தான் செயல்பாடு என்றால் அது சாத்தியமானதல்ல. வெளிப்படையாக எதையும் செய்யத்துவங்கினால லஞ்சம் குறையலாம் என நேரு நம்பினார்.

கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்று விவாதித்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் நிலைமைகள் மேம்படாதா ? அங்கு போய் அரசாங்கம் உங்கள் கிராமத்திற்கு இவ்வளவு இந்த திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு வேலை செய்யப்பட இருக்கிறது என்று அம்மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தால் சந்தேகம் இருக்காதல்லவா என நடைமுறை சார்ந்த பிரச்சனைகளில் கூட நேரு கவனம் செலுத்தினார். காலதாமதம்தான் ஊழலுக்கு பாதை போடுகிறது. காலத்தில் பணிகளை செய்துமுடிப்பது என்பது பண்பாடாக மாறவேண்டும் என அவர் விழைந்தார். எனவே தான் இவை அனைத்தையும் அடிமட்டத்திலிருந்தே பழகவேண்டும் என்றார்.
கட்சிகளிடம் பாரபட்சம் காட்டாமல் நியூட்ரலாக இருப்பது சிவில் சர்வீஸ் ஊழியனின் கடமை. ஆனால் மக்கள் பிரச்சனையில் அவர் எப்படி நியூட்ரல் ஆக இருக்கமுடியும்.  ஐ ஏ எஸ் பயிற்சியாளர்களுக்கு நமது விடுதலை போராட்டத்தின் தன்மை சமூக பிரச்சனைகளின் தன்மை தெரியவேண்டும்.

 A mistake is far better than not doing a thing. you can rectify the error but you can never catch back the time you have lost by not doing something
பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மாற்றங்களை நேரு செய்யவில்லை என்ற விமர்சனம் இருந்தது. தேச கட்டுமானம் என்பதை அவர் நிர்வாக பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறார் என்கிற விமர்சனமும் இருந்தது. 1949-50ல் காங்கிரஸ் அரசாங்கம் தெலங்கானா கிளர்ச்சியை 12000 ஆயுதம் தாங்கிய காவலர்களைக் கொண்டு முறியடித்ததை பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி என்றே விமர்சகர்கள் பார்த்தனர். போலீஸ் துறை செலவு ஆண்டுதோறும் பலமடங்கு கூடிவருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டிவந்தனர். கலப்பு பொருளாதாரகொள்கையில் பொதுத்துறைக்கு நேரு முக்கியத்துவம் தந்திருந்தாலும் 1960ன் துவக்கத்தில் பொதுத்துறைகளின் தேச வருமான பங்களிப்பு 10 சதமாக இருந்தது போதாது என விமர்சனம் எழுந்தது. இவையெல்லாம் இடதுசாரி விமர்சனங்களாக அமைந்தன.

நேரு அமைச்சரவையில் இருந்த குல்சாரிலால் அக்டோபர் 12, 1953ல் முக்கிய அறிக்கையை தந்தார்.
On the one hand, there was the complaint that the country did not produce enough consumption goods. But when they increased production and took credit for it, they were suddenly faced with accumulation of stocks.
நேருவின் சரிதையை எழுதிய சர்வபள்ளி கோபால் திட்டமிடுதலின் சாலை சோசலிசத்திற்கு அழைத்து செல்லவில்லை- விவசாயத்திலும் தொழிலும் முதலாளித்துவம் வளர்ந்தது என்பதை ஏற்கிறார்.
the planned development under Nehru’s regime did not pave the way for socialism but promoted capitalist enterprise in both industry and agriculture.

டாடா உட்பட பெருமுதலாளிகள் காங்கிரசின் தேர்தல் செலவுகளுக்கு நிதியை அள்ளித்தருகின்றனர் என்ற விமர்சனம் பெரிதாக மறுக்கப்படாமல் இருந்தது. அப்போது டாட்டா, பிர்லாக்கள் 10 லட்சம் நன்கொடை கொடுத்தாலே அவை பெருந்தொகையாக பார்க்கப்பட்டது.
கட்சி மற்றும் அரசாங்க உறவுகள் குறித்த விவாதம் காங்கிரசில் ஏற்பட்டது. விடுதலை காலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த கிருபளானி அரசாங்கம் முடிவுகளை எடுக்கும் முன்னர் காங்கிரசிடம் கலந்து பேசி முடிவெடுக்க வற்புறுத்தினார். நேருவிற்கு கட்சியின் தலையீடு அதீதமாக இருக்கக்கூடாது என்ற கருத்து இருந்தது. அரசாங்க முடிவுகளை பகிரங்கமாக விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவராக கிருபளானி இருந்தார். இதனால் அவர் காங்கிரசைவிட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. காங்கிரஸ் சார்பாளர்கள் மத்தியில் கிருபளானி மனம் திறந்தார். கட்சியைவிட அரசாங்கம் பெரிது என காட்டுவதை ஏற்கமுடியவில்லை என்றார். இரண்டிற்கும் இடையே ஒத்துழைப்பில்லை எனில் குழப்பமே மிஞ்சும் என்பது அவரின் கருத்தாக இருந்தது.
If there is no free and full co-operation between the Governments and the Congress organisation the result is misunderstanding and confusion, such is prevalent to-day in the ranks of the Congress and in the minds of the people.
Nor can the Congress serve as a living and effective link between the Government and the people unless the leadership in the Government and in the Congress work in closest harmony. It is the party which is in constant touch with the people in villages and in towns and reflects changes in their will and temper. It is the party from which the Government of the day derives its power. Any action which weakens the organisation of the party or lowers its prestige in the eyes of the people must sooner or later undermine the position of the Government ....
பின்னர் பொறுப்பிற்கு வந்த பட்டாபிசீதாராமையா வரையறைக்கு உட்பட்ட கட்சியின் பாத்திரம் என்பதில் நின்றார். அவரது உரையில் நமக்கு கீழ்கண்ட  விளக்கம் கிடைக்கிறது.
A Government must govern and is therefore concerned with the problems of the day, and with the passions of the hour. Its work is concrete, its solutions must be immediate... The Congress is really the Philosopher while the Government is the Politician... That is why the Government of the day requires the aid of unencumbered thinking.
காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் (1950ல்) டாண்டன் வெற்றிபெற்ற பின்னர் கட்சிதான் உயரியது என நிரூபிக்கும் முயற்சி நடந்தது. நேரு தனது நேர்த்தியான எதிர்ப்பால் டாண்டனையும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறவைத்தார். பின்னர் நேருவே காங்கிரஸ் தலைமை பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.
 இக்கட்டம் துவங்கி அரசாங்க அதிகாரமிக்க பிரதமருக்கு மட்டுமே கட்சித் தலைமையைவிட செல்வாக்கு அதிகாரம் என்பது இந்திய அரசியலில் நிறுவப்பட்ட ஒன்றாக மாறியது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தகாலத்தில் காங்கிரஸ் தலைமை சற்று அதிகாரம் கூடியதாக வெளித்தெரிந்தது.

1954-59ல் தலைமைக்கு வந்த U.N. Dhebar நேரு ஒருவரே தலைவர் என உரக்கப்பேசலானார்.
It is a mistake to consider that there is a dual leadership in the country. India, for the last forty years, has been accustomed to think in terms of a single leadership and by the grace of God, we have been endowed with men who had borne the brunt out of consideration or service to the country singularly well. There is only one leader in India today and that is Pandit Jawaharlal Nehru. Whether he carries the mantle of Congress Presidentship on his shoulders or not, ultimately, the whole country looks to him for support and guidance

நாட்டின் ஒரே தலைமை நேருவின் தலைமை என்ற அளவிற்கு சொல்லத்துவங்கினார். அனைத்து சுமைகளும் அவர் தோளின் மேல்- அனைத்து தீர்வுகளும் அவரிடத்திலேயே என்ற அளவிற்கு அவரது புகழ் கானங்கள் வரத்துவங்கின.

காங்கிரசின் பிற்போக்குசக்திகளை முறியடிக்க தனது வலுவை கூட்டிக்கொள்ளும் வகையில் நேருவும் இத்தகைய போக்கிற்கு இடமளித்திருக்கக்கூடும்.

 இந்திரா அவர்கள் 1959ல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு வந்தார். முன்னதாக நேரு பிப்ரவரி 8 1959ல் தான் பிரதமர் பொறுப்பில் இருக்கும்போது தனது மகள் காங்கிரஸ் தலைமைக்கு வருவது நல்ல விஷயமல்ல என்றே கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்திரா என சொல்லப்பட்டபோது  அவர் வீட்டோ செய்யவில்லை என்கிற விமர்சனம் எழத்துவங்கியது. அங்கிருந்துதான் dynastic democracy  முளைவிடத்துவங்கியதோ என்கிற கருத்தை  நேரு குறித்த  ஆய்வாளர்களிடம் நாம் காணமுடியும்.

தேபராகவிருந்தாலும், சஞ்சீவரெட்டியாக இருந்தாலும் கட்சியை அரசாங்க அதிகாரத்தில் இருபவர்கள் மதிப்பதில்லை- அவர்களுக்கு ஏற்ற வகையில் ஆடவிரும்புகிறார்கள் என்கிற கருத்தை வெளியிடவே செய்தனர்.

நேருவின் ஆட்சிக்காலத்தில் கேரளா கம்யூனிஸ்ட் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவராட்சி பிரகடமானதும் விமர்சனத்துக்குரியதானது.


Comments

  1. Information explosion and individual failures is typical Indian problem! No body can question Congress patriotism and communist simplicity but after 70 yrs they lost India and west Bengal is the fact!Corrupted good ideology is the worst danger!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு