https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, May 29, 2020

நேருவும் நாடாளுமன்றமும்



நேருவும் நாடாளுமன்றமும்

- ஆர்.பட்டாபிராமன்

இந்தியாவின் எதிர்காலம் அய்ந்து அடிப்படைகளைக் கொண்டது எனக் கருதி அதற்காக செயல்பட்டவர் ஜவஹர்லால் நேரு. நாடாளுமன்ற ஜனநாயகம், திட்டமிட்ட வளர்ச்சி, மதசார்பின்மை, அறிவியல் மனோபாவம், சோசலிசம் என்பனவே அவை.
பாராளுமன்றத்தின் அணிகலன்  என்கிற போற்றுதலுக்குரியவராக நேரு திகழ்ந்தார்.  நாடாளுமன்ற அமைப்பும்  மற்றும் இருக்கிற பிற நிறுவனங்களும் நமது மக்களின் சிந்தனை - குறிக்கோள் நடத்தைகளை பிரதிபலிப்பவையாகவே இருக்கும். அவைகளின் வலிமையும் நீடித்த தன்மையும் மக்களின் நடத்தை  மற்றும் சிந்தனையை பொறுத்தே அமையும் என்று கருதியவர் நேரு.

வாக்கு போடுவது என்பதுடன் மக்களை நிறுத்தாது அவர்களுடன் ஜனநாயகத்தை நெருக்கமாக்க சிந்தித்தவர்- செயலாற்றியவர் நேரு. ஜனநாயகத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியுடன் கூடவே வளர்வது- இரண்டறக் கலந்தது என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.
வறுமையும் கல்வியறிவின்மையும் நிறைந்த நாட்டில் வாக்களிக்க வரும் மக்கள் புரிந்து வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு கற்றுத்தருவது தன் கடமை என செயலாற்றியவர் நேரு. அரசின் திட்டங்கள் அவர்களிடம் எடுத்து செல்லப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதில் தயக்கமின்றி செயல்பட்டவர்.
பெரும்பான்மை மக்கள் பின்னடைந்த நிலையில் இருக்கும் இந்தியாவிற்கு வாக்குரிமை அரசியல் ஜனநாயகம் மட்டுமே போதுமானதாக இராது என்பதை உணர்ந்தவராக நேரு இருந்தார். பொருளாதார ஜனநாயகம் நோக்கி நாடு செல்லவேண்டும் எனக் கருதினார். நல அரசு என்கிற அடிப்படையில் பொருளாதார அம்சங்களில் சம வாய்ப்பு நோக்கி நகர்வதற்காக  செயல்படவேண்டியதன் அவசியம் குறித்து வற்புறுத்தினார்.
பாராளுமன்ற ஜனநாயகம் பொருளாதார ஜனநாயகம் நோக்கி பயணிக்கவேண்டும். பொருளாதார பிரச்சனைகளின் தீர்வில் அடையும் வெற்றியைப் பொறுத்தே பொருளாதார ஜனநாயகம் நோக்கிய நகர்வுகள் இருக்கும் என்றார் நேரு. நமது விருப்பங்களுக்கும் நிறைவேற்றங்களுக்கும் இடைவெளி இருக்கவே செய்யும். நாடாளுமன்ற ஜனநாயகம் இடைவெளியை குறைப்பதற்கான கருவியாக செயல்படவேண்டும் என அவர் விழைந்தார்.
 நாடாளுமன்ற ஜனநாயகம் தனிநபருக்கு முன்னுரிமை தருவதாக இருந்தாலும் தனிநபர்- சமூகத்தின் ஒத்திசைவை அவசியமாகவும் கருதுகிறது. மானுட வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் அது பிரதானமாக கொள்கிறது. அவனது படைப்பூக்க செயல்பாட்டிற்கு  ஏற்ற சூழலை உருவாக்குகிறது.  ஜனநாயகத்திற்கு இறுதி இலக்கு என ஏதாவது இருக்குமெனில்  தனிநபர்களின் நல்வாழ்வு  என்பதாகவே இருக்கும் என்றார் நேரு.
 நாடாளுமன்ற செயல் அதன் மேம்பாடு என்பது மந்திரக்கோலால் நடைபெற்றுவிடாது. அது முகிழ்த்து வளரவேண்டிய ஒன்று- உட்கிரகிக்க வேண்டிய ஒன்று ( It had to evolve and grow- imbibed ) என்று சொல்லித்தந்தவர் நேரு..
ஜனநாயக முறை எனப்படுவது பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்விற்கு கொண்டுவருவதுதான். அமைதிவழி இல்லையெனில் ஜனநாயகமில்லை. எந்த சமூக அமைப்பும்  ஜனநாயகத்தில் சுயகட்டுப்பாட்டை வரித்துக் கொள்ளவேண்டும். கட்டுப்பாடு குலையும் எனில் அங்கும் ஜனநாயகம் இருக்காது என ஜனநாயகத்தின் அடிப்படைகளை உரக்கச் சொல்லி கற்றுத்தந்தவர் நேரு.
" Democracy means to me an attempt at the solution of problems by peaceful methods. If it is not peaceful, then to my mind, it is not democracy. ..A social organisation must have some discipline to hold it together... In a proper democracy, discipline is self imposed. There is no democracy if there is no discipline" 
எதேச்சதிகாரிகளுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் எளிய வழி என்பது எதையும உடன் தீர்த்துவிடுவதாகவே இருக்கும்- சரி தவறு என்பதெல்லாம் அங்கு பார்க்கப்படுவதில்லை. தொடர்ச்சியும் மாறுதலும் என்பதே நாடாளுமன்ற முறையின் சிறப்பு. அதே நேரத்தில் இளம் தளிராக இருக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒடிந்துபோக செய்துவிடக்கூடாது ,  அது பிரச்சனைக்குரியதாகிவிடும் என்கிற விழிப்போடும் எச்சரிக்கையுடனும் இந்திய விடுதலைக்கு பின்னரான ஜனநாயக முறையை நகர்த்தி சென்றவர் நேரு.
நாடாளுமன்றத்தில் மாறுதல்கள் நிதானகதியில் நடந்தாகவேண்டும். ’வேருடன் பிடுங்குதல் போன்ற மாற்றங்கள் அங்கு எடுபடுவதில்லை. அங்கு தொடர்ச்சியும் மாற்றமும் இருக்கவேண்டும். தொடர்ச்சியே இல்லை எனில் அங்கு வேர் இருக்காது. இற்று வீழும் சூழல் உருவாகும் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் மாற்றம் குறித்த பிரச்சனைகளை நேரு கையாண்டார்.
நேரு பிரதமர்  என்ற பொறுப்பிலும் அவையின் தலைமை உறுப்பினர் என்ற வகையிலும் சிறந்த ஆரோக்கியமான நடைமுறைகளை முன்னுதாரணங்களை படைத்தார். நியாயமான தேர்தல், வயது வந்தோர் வாக்குரிமை எனும் நம்பிக்கைகளை அவர் ஆழமாக பதித்தார். சக அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தோழமையும் கண்ணியமான உறவையையும் அவர் பேணினார்.
உறுப்பினர்களிடமிருந்து வரும் கேள்விகளை கவனத்துடன் உள்வாங்கி பதில் அளிப்பதாக இருந்தாலும் அவர்களின் கடிதங்களுக்கு தவறாமல் பதில் அளிக்கும் பக்குவத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.  சில தருணங்களில் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பிற்கு குறைவாக அமைச்சர்கள் பதில் இருக்குமானால் உரிய தகவல்களை அவையில் வைப்பதற்கு அவரே முன்கை எடுப்பார். அறிவியல் கொள்கை, தொழில்கொள்கை போன்றவற்றில் அவர் இந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். வெளியுறவுத்துறை சார்ந்த விவகாரங்களில் அவரின் விவாதத்திற்கு உலக நாடுகளே காத்துக்கொண்டிருக்கும். நாடாளுமன்ற காலரி முழுமையாக நிரம்பி நிற்கும்.
விடுதலைக்கு முன்னர் அவர் பாசிசம் குறித்து தெளிவாக அறிந்திருந்தார். முசோலினியை சந்திக்க மறுத்தார். நாஜிகள் அழைப்பை ஏற்று அவர் ஜெர்மனி செல்ல இசையவில்லை. சோவியத் புரட்சியும் அரசாங்கமும் அவரை ஈர்த்தன. மனிதகுல முன்னேற்றத்திற்கு துணைநின்ற புரட்சி என அதனை அவர் ஏற்றார். அதன்ரெஜிமெண்டேஷன் என்பதை அவர் ஏற்கவில்லை. தனிநபர் சுதந்திரம் என்பதை இழக்கமுடியாது என அவர் கருதினார். சமூக பொறுப்புடன் தனிநபர் சுதந்திரம் என்பதற்காக அவர் நின்றார். மத்தியத்துவ ஆட்சி என்ற இறுக்கத்தில் தனிநபர் நசுங்கிவிடக்க்கூடாது என நினைத்தவர் நேரு.
அரசியல் அமைப்புசட்ட நிர்ணய அவையில் நேரு மிக முக்கியமான பங்களிப்பை செய்தார். அவரின் கருத்துக்கள் அவையால் எடுத்துக்கொள்ளப்பட்டன. நாடாளுமன்ற ஜனநாயகம் மூலமாக நேரு  நம்மை தேசமாக்க பெருமுயற்சி எடுத்தார். நம்மை சுயசார்பு சிந்தனைப்போக்கில் வழிநடத்தினார் என சரியாகவே கே கே ஷா மதிப்பிட்டிருந்தார் . ஷா காட்டிய நேருவின் உரையில் :
"Whatever system of government we may establish here must fit in with the temper of our people and be acceptable to them. We are going to make a Constitution for India, and it is obvious that what we are going to do in India is going to have a powerful effect on the rest of the world, not only because a new free and independent nation comes out into the arena of the world, but because of the very fact that India is such a country that by virtue, not only of her large size and population, but of her enormous resources. and her ability to  exploit those resources, she can Immediately play an imporatant and a vital part in world affairs. Therefore, it is right that the framers of our Constitution should always bear this larger international aspect in mind."
அரசியல் அமைப்பு சட்ட அமர்வில் பல்வேறு தரப்பு வாதங்கள் எதிரும் புதிருமாக வரும்போது அமைதியாக கண்மூடிக்கொண்டும், சில நேரங்களில் தன் வழுக்கைதலையை தடவிக்கொண்டும் நேரு இருப்பார். விவாதங்களின் ஊடே கருத்தொற்றுமையை உருவாக்கும் அல்லது இதுதான் தீர்வாக அமையும் என அவருக்கு உதித்த தருணம் கண்ணை திறந்து பேசத்துவங்குவார் என்கிற பதிவை என் ஜி ரங்கா தனது கட்டுரையான ஜனநாயக சிந்தனையாளர் நேரு என்பதில் தந்துள்ளார். சிம்மம் போல் உறுமுவதை பார்த்து ரசித்துள்ளதாக அவர் பதிவு செல்கிறது.
அரசியல் அமைப்பு நிர்ணயசபையில் டிசம்பர் 13, 1946ல்  குறிக்கோள்- நோக்கம்பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து நேரு பேசினார். ஆகஸ்ட் 14 1947 அரசியல்சட்ட நிர்ணயசபையில் நேரு முன்மொழிந்த தீர்மானத்தில் இறையான்மைகொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களும் மக்களிடமிருந்தே பெறப்படுகிறது என்பதை வலியுறுத்தி இருந்தார்.
மக்களுக்கு சமூக, பொருளாதார அரசியல் நீதி உறுதி செய்யப்படும்-அனைவரின் வழிபாட்டு சுதந்திரம் பொதுநெறி மற்றும் சட்டத்தின்பாற்பட்டு காக்கப்படும் என்பதையும் உறுதியளித்தார். சிறுபான்மை- பிற்பட்ட- மலைவாழ்பகுதியினரின் வாழிடபாதுகாப்பும் அதில் பேசப்பட்டிருந்தது. நாட்டின் எல்லைகளை காத்து நிற்பதும், உலக அமைதிக்காக நிற்பதற்கும் அத்தீர்மானம் வழியே உறுதி ஏற்கப்பட்டிருந்தது.
அரசியல் நிர்ணயசபை அரசியல் அமைப்பு சட்டத்தை இறுதிப்படுத்த 2 ஆண்டுகள்  11 மாதங்கள் 18 நாட்களை எடுத்துக்கொண்டது. அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்த், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா அரசியல் அமைப்பு சட்டங்களின் ஷரத்துக்களிலிருந்தும் இந்திய அரசாங்க சட்டம் 1935லிருந்தும் எடுத்தாளப்பட்டன. ’டைரக்டிவ் பிரின்ஸ்பிள்ஸ்’ என்பதில் நேரு மிகுந்த கவனம் செலுத்தினார். அமெரிக்க புரட்சி, பிரஞ்சுபுரட்சி, சோவியத் புரட்சியின் சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்களின் தோல்விகளை நாம் தவிர்க்கவேண்டும் என நேரு பேசிவந்தார்.
ஜனவரி 26 1950ல் அரசியல் அமைப்பு சட்டத்துடன் இந்தியா குடியரசானது. அதை உருவாக்கியவர்கள் மத்தியிலேயே கருத்துவேறுபாடு வராமல் இல்லை. குடியரசு தலைவர் அதிகாரம் என்ன என்பதறிய சட்ட வல்லுனர்களை ராஜேந்திரபிரசாத் நாடினார். ஜவஹருக்கு இதில் வருத்தமிருந்தது. அதேபோல் பிரதமரின் அதிகாரம் குறித்து படேலுடன் வேறுபாடு உருவானது. பிரதமர் என்ற வகையில் கூடுதல் பொறுப்புண்டு. இறுதி முடிவை அமைச்சரவை எடுக்கலாம் என்பது நேருவின் பார்வை. படேலோ பிரதமர் முடிவு எடுத்து அமைச்சர் சகாக்கள் ஏற்பது எனும் நடைமுறை சர்வாதிகாரமாகவே இருக்கும் என நினைத்தார்.
இந்தியாவில் சில காலத்திற்கு  Restricted Franchise  நீடிக்கலாமா என்ற கேள்வி வந்தபோது அதை காந்திஜி நிராகரித்தார். வயதுவந்தோர் வாக்குரிமை என நேரு உறுதியாக நின்றார். வளர்ந்த நாடுகளே வயதுவந்தோர் வாக்குரிமை நோக்கி  மிக மெதுவாக நகர்ந்தபோது இந்தியாவில் துணிச்சலான முயற்சியை அன்றைய விடுதலைக்கால தலைவர்கள் மேற்கொண்டனர். இந்தியாவில் கூட்டுக்குடும்ப முறை சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயக உணர்வுகளுக்குமான சிஸ்டம் என காந்தி கருதினார். இந்தியா சுயராஜயத்திற்கு தயாராகவில்லை என பேசியவர்களுக்கு இதை 1920களில் பதிலாக காந்தி தந்தார்.
நவம்பர் 1951ல் முதல் தேர்தலின் போது கீழ்கண்ட வேண்டுகோளை மக்களுக்கு நேரு விடுத்தார். கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்களது எதிர்காலத்தை முடிவெடுக்க இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வாக்குப்பெட்டிகளில் தங்களின் பிரதிநிதி யார் என சொல்லப்போகிறார்கள். மிக அமைதியாக அவர்கள் இதை செய்யவேண்டும். மக்கள் தரும் முடிவை எவ்வித கேள்வியுமின்றி அனைவரும் ஏற்க இருக்கிறோம். ஜனநாயகத்தின் சாரமிது. வெற்றிபெறுகிறவர்கள் தலைக்கு ஏற்றிக்கொள்ளக்கூடாது. தோற்றவர்கள் துவண்டுவிடக்கூடாது - வெற்றியும் தோல்வியும் பெரிய மனதுடன் ஏற்கும் பக்குவம் வாய்க்கப் பெறவேண்டும். தேர்தல் என்பதன் அனுபவத்தை இளம்விடுதலை நாட்டவர் எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பதற்கு நேரு தந்த இலக்கணமாக அவ்வுரை அமைந்தது.
விடுதலைக்குப்பின் தேசிய அளவில் முக்கியத்துவம் உள்ள தலைவர்களைக்கொண்ட அரசாங்கம் என்ற விவாதம் வந்தது. நேருவும் அதை நேர்மறையாகவே பார்த்தார். தனது அமைச்சரவை சகாக்களாக காங்கிரசில் அல்லாத சண்முகம் செட்டி, அம்பேத்கார், ஜான் மத்தாய், ஷியாமாபிரசாத் முகர்ஜி போன்றவர்களையும் உள்ளடக்கினார்.
விடுதலைக்கு முன்பாக புனைப்பெயரில் நேரு தன்னைப்பற்றி இப்படி ஒரு மதிப்பீட்டை தந்திருந்தார். ஆனால் விடுதலை போராட்டங்களும், ஆட்சிபொறுப்பும் அவரை பெரிய அளவில் மாற்றின. தன் முகம் பார்த்து தன்னை சரி செய்துகொள்ளும் விமர்சனமுறையாக அதை நாம் பார்க்கலாம்.
"Man like JawaharlaJ, with all their capacity for great and good works, are unsafe in a democracy. He calls himself a socialist and a democrat.... but every psychologist know that the mind is ultimately a slave to the heart and logic can always be made to fit in with the desires and irrepressible urges of a person. A little twist and JawaharIal might turn a dictator sweeping aside the paraphernalia of a slow moving democracy!"  The Modern Review about himself anonymously)
விடுதலையடைந்த ஆசிய நாடு ஒன்றில் வயதுவந்தோருக்கு வாக்குரிமை அடிப்படையில் நடந்த முதல் தேர்தல் 1951-52 தேர்தல். உலகமே அதை உற்று நோக்கிக்கொண்டிருந்தது. 17.3 கோடி வாக்காளர்கள் என்பதை உலக நாடுகள் எதுவும் அதுவரை பார்த்ததில்லை. இதில் 80 சத கல்வியறிவற்றவர்கள். 17000 பேர்கள் தேர்தலில் 59 கட்சிகள் சார்பில் நின்றனர். பலர் சுயேட்சைகளாகவும் நின்றனர். 25 லட்சம் வாக்குப் பெட்டிகள், 60 கோடி வாக்கு சீட்டுகள், 1.33 லட்சம் வாக்கு மய்யங்கள் என மத்திய மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பயன்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தில் நேரு தனித்து நின்றார். இதை நேருவின் அரசியல் சரிதை எழுதிய மிஷேல் பிரெக்சர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
The congress campaign was a one man affair- Nehru, Nehru and more Nehru. He was the chief of staff, field commander, spokesman and foot soldier at one and at the same time. It was he who drafted the party's election manifesto. It was he who set the tone of the partys appeal- selfless service, devotion to basic principles and faith in the indian people. Nehru the incorruptible, Nehru the favourite son of Mahatma, had taken charge of the congress." (page 168 Nehru A political Biography Michael Brecher)
நேரு 43 நாட்களில் 30 ஆயிரம் மைல்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றார். முப்பது லட்சம் மக்களாவது அவரது பொதுக்கூட்ட உரைகளை கேட்டிருப்பர். தினம் குறைந்தது 9 கூட்டங்கள். இதுதவிர சாலை ஒர சந்திப்பு சிறு கூட்டங்கள். தினம் 5 மணிநேர ஓய்வுக்கூட அவர் எடுக்கவில்லை என்பது மிஷல் பிரெக்சரின் பதிவு.
மத்தியில் காங்கிரஸ் 45 சத வாக்குகளை பெற்றது கம்யூனிஸ்ட்களைவிட சோசலிஸ்ட்கள் அதிக சதம் பெற்றிருந்தாலும் குறைவான இடங்களையே பெற்றனர். சோசலிஸ்ட்கள் 10 சதம், கம்யூனிஸ்ட்கள் 4.4 சதத்தில் 16 தொகுதிகளைப்பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். ஜனசங்கம் 3 சதம்- 3 இடங்களை பெற்றது. நேருவின் கடுமையான விமர்சனதாக்குதல் வலதுசாரியினர் மீதே அதிகம் இருந்தது.
நேரு அவர்கள் தலைமையில் 1952 தேர்தலில் காங்கிரஸ் 489 இடங்களில் 362யைப் பிடித்தது. நாடாளுமன்றத்தில் 3/4 பகுதி காங்கிரஸ் என்ற நிலை.  1957 தேர்தலில் 371 இடங்களையும், 1962 தேர்தலில் 361 இடங்களையும் காங்கிரசால் பிடிக்க முடிந்தது. பெரும்பான்மை என்பதால் சிறு கட்சிகளை அவர் ஒடுக்கி ஒழிக்க விழைந்ததில்லை. அவர்கள் சிதறிய சிறு கட்சிகளாக இருந்தாலும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை துடைத்தேறிய அவர் விரும்பியதில்லை.
 The Parliamnetary sytem of work requires not only a stout opposition, not only forcible expression of opinions and views, but an essential basis of cooperation  between opposition and the Government; not in regard to any particular matter, but the whole basis of approach is after all a cooperative basis. In so far as we succeed in doing that, we succeed in laying the foundations of parliamentary work firmly" ( J Nehru  as quoted by A N Das in his article Nehru's Vision of Parliamentary democracy )
எதிர்கட்சி உறுப்பினர்கள் பலவீனமானவர்கள் என்பதால் எந்த மரியாதை குறைவும் கூடாது என நினைத்தவர் நேரு. அவர்களில் எவர் சிறப்பாக பேசினாலும் அவர்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துபவராக  நேரு விளங்கினார்.  அவை உறுப்பினர்களின் அதிகாரவரம்பு வெட்டப்படுவதை அவர் ஏற்காதவராக இருந்தார். இந்த அவையின் அதிகார வரம்புகளை பார்த்து பொறாமை கொள்ளவேண்டும். எவரும் அதை குறைத்துவிடக்கூடாது என நாடாளுமன்ற மக்கள் அவை குறித்த பெருமிதம் அவரிடம் இருந்தது 
நேரு அவையின் மரபுகளில் முன்னுதாரணமாக திகழ்ந்தார். மாவ்லங்கர் சபாநாயகராக இருந்தபோது நேருவை பார்க்க வரட்டுமா எனக் கேட்டார். தங்கள் அலுவலகத்தில் சந்திப்பதுதான் முறையாகும் என நேரு வந்து விவாதித்து சென்றார். சபாநாயகர் என்ற பதவி குறித்த நேருவின்  மதிப்பீடு மிக உயர்வானதாக இருந்தது. நீண்டதொரு மேற்கோளாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் கருதி இங்கு தரப்படுகிறது.
“ The position of the speaker is not an individual's position or an honour done to an individual. The Speaker represents the House. He represents the dignity of the House, the freedom of the House and because the House represents the nation, in a peculiar way, the Speaker becomes the symbol of the nation's freedom and liberty. Therefore , it is right that that should be an honoured positon, a free position and should be occupied always men of outstanding ability and impartiality  (march 8 1948)
The speaker has to abstain from active participation in all controversial topics in politics. The essence of that a Speaker has to place himself in the position of Judge. He is not to become a partisan so as to avoid unconscious bias for or against a particular view and thus inspire confidence in all sections of the House about his integrity and impartiality.” 
சபாநாயகர் அவையின் சரியான பிரதிநிதி. அவையின் கண்ணியத்திற்கான- சுதந்திர செயல்பாட்டிற்கான வெளிப்பாடு அவர். அவை நாட்டையே பிரதிபலிக்கிறது. கருத்துமாச்சரியங்கள் நிரம்பிய அன்றாட அரசியலிருந்து சபாநாயகர் தள்ளியே நிற்கவேண்டியவராகிறார். சுருங்க சொன்னால் அவர் நீதிமான் போன்ற சமநிலை பிறழாதவராக செயல்படுபவர் என்கிற அற்புத வரையறையை மேற்கூறிய பகுதியில் நம்மால் பார்க்கமுடிகிறது.
பாராளுமன்ற ஜனநாயகம் வேர்பிடிக்க  நேரு தன் செல்வாக்கை முழுமையாக பிரயோகித்தார் என்கிற மதிப்பீட்டை அவரது வாழ்க்கை வரலாற்றை தந்த கோபால் தருகிறார்.  அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்தபோது அதன் அவசியத்தை  அது தொடர்பான விவாதத்தை அவையில் வரவேற்றவர் நேரு. மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதே அரசாங்கமாக இருக்கவேண்டும் என்பதை அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார். 
A Government in a democratic society is a reflection of the will of the people and it should continue to be a reflection of this will all the time 
மேற்கோளாக காட்டப்பட்டுள்ள இந்த சுருக்க விளக்கம் என்றென்றும் தேவைப்படுகிற ஒன்றாகவே நீடிக்கிறது.
 அவை உறுப்பினர்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். குடியரசுத்தலைவர் 1963 பிப்ரவரியில் உரையாற்றும்போது கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட உறுப்பினர்கள் மீதான பிரச்சனை  கமிட்டியின் பார்வைக்கு விடப்பட்டது. கமிட்டி அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு நேரு உரைநிகழ்த்தினார். கண்ணிய குறைவான நடவடிக்கைகளை அவை கறாராக கண்டிக்கவேண்டும்- ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக எடுத்துச் சொன்னார். 
 ”This parliament is supposed not only to act correctly but lay down certain principles and conventions of decorous behavior"  
நாடாளுமன்றம் என்பது மக்களின் விருப்பார்வங்களை நிறைவேற்றும் சாதனமாக திகழவேண்டும் என்பதை அவர் உளமாற விழைந்தார்.
 நேரு தனது வாழ்நாட்களின் இறுதிகட்டத்தில்கூட நாடாளுமன்றம் வருவதை கடமையாக கொண்டிருந்தார். தன்னால் ஒவ்வொருமுறையும் எழுந்து பதில் சொல்வது கூட கடினமாக உண்ர்ந்தபோதும்- சபாநாயகரே அமர்ந்து பதில் தரலாம் என்கிற அன்பு அனுமதியை தந்தபோதும் அவர் மரபின் மரியாதையை உயர்த்திப்பிடித்தார்.
 சுயவிமர்சனத்தின் மீது நம்பிக்கை மட்டுமல்ல அதை செய்துகொள்ளவும் தயங்காதவராக நேரு இருந்தார். காரணகாரியத்திற்கு உட்படாத எதன் மீதும் அவருக்கு விமர்சனம் இருந்தது. பிறரின் கண்கொண்டும் விஷயங்களை பார்க்க பழகவேண்டும் என்று கற்றுத்தந்தவர் நேரு.
 விடுதலைக்கு முன்னர் நேருவும் சட்டமன்ற நுழைவு என்பதில் நம்பிக்கை கொண்டவராக இல்லை. parliament of People என மக்களை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தார். நேருவிற்கு மக்களை தான் வழிநடத்துபவன் மட்டுமல்ல அவர்களால் வழிநடத்தப்படுபவனும் கூட என்ற கருத்து இருந்தது. நமது நாடு விவாதங்கள் நிரம்பி வழிந்த நாடு. பிரபஞ்சம் கடவுள் மனித உறவுகள், மன்னன் பிரஜா உறவுகள் என விவாதங்கள் நடந்த நாடு. இதை நன்கு அறிந்தவராக நேரு விளங்கியதால் விவாதங்கள் மூலம் தீர்வை எட்டுவதற்கு அவரால் முடிந்தது.
விடுதலைக்குப் பின்னர் உருவாகப்போகும் நாடாளுமன்றம் ஆக்கபூர்வ விவாதங்களுக்கு உதவும் கருவியாக்கப்படவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மக்களுக்கான நலத்திட்டங்களில் உண்மையை உணர்த்தும் இடமாக இருக்கவேண்டும் என நேரு உழைத்தார்.
 நாடாளுமன்றத்தில் எவ்வளவு பேசுகிறோம் என்ன கேள்விகள் கேட்டோம் என்பனவெல்லாம் லட்சக்கணக்கான பக்கங்களில் ஆவணங்களாக இருக்கலாம். அவற்றின் மூலம் என்ன செய்துள்ளோம்- எவ்வளவு ஆழமாக தேச கட்டுமானத்திற்கு துணை நின்றோம் என்பதன் மூலம்தான் எதிர்காலம் பார்த்து நம்மை மதிப்பிடும் என்றார் நேரு.
 நாடாளுமன்ற ஜனநாயகம் பல நன்னடத்தைகளை எதிர்பார்க்கிறது. திறமையைக் கோருகிறது. வேலைமீதான ஈர்ப்பை கோருகிறது. ஒத்துழைப்பும், சுயகட்டுப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் எனும் நெறியில் எவருக்கும் சிறப்பு விலக்கு இருக்கமுடியாது. இனி அவரின் வார்த்தைகள் .
 Parliamentary democracy demands many virtues. It demands, of course , ability. It demands a certain devotion to work. But it demands also a large measure of cooperation, of self discipline,of restriant…. No one was beyond Parliament's Preorogative”
 கட்சிக்கூட்டங்களில் கூட பேசவிருப்பம் தெரிவிப்பவர்கள் பேசட்டும் என ஊக்குவிக்கும் பண்பு அவரிடம் இருந்தது.
 நேரு அரசாங்கத்தை எதிர்த்து முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. விடுதலை போராட்டக்காலத்தில் அவரின் தோழர்களில் ஒருவராக இருந்தவரும், பின்னர் வேறுபாடு காரணமாக வெளியேறியவருமான ஆச்சார்ய கிருபளானி அத்தீர்மானத்தைக் கொணர்ந்தார். எண்ணிக்கை அடிப்படையில் அது தோற்கும் எனத் தெரிந்தாலும் விவாதம் நடைபெறவேண்டுமென நேரு கருதினார். பொறுமையாக தாக்குதல்களை செவிமடுத்தார். மிருக பலம் என்பதும் முக்கிய தாக்குதலாக இருந்தது. மெஜாரிட்டி என்பதற்காக நேரு எப்போதும்  சமநிலை இழந்தவராக செயல்படவில்லை. தோழர் ஹிரன்முகர்ஜி நேருவை Gentle Colossus- மென்மையான பெருபிம்பம்  என்றே வர்ணித்ததை நாம் பார்க்க முடியும்..
பலதரப்பட்ட உறுப்பினர்களின் வித்தியாசமான பார்வைகளின் ஊடே  நாம் பெறும் கடினமான உடன்பாடே (Hard core Agreement)  நாடாளுமன்ற ஜனநாயகம் என ஒருமுறை நேரு விளக்கம் தந்தார். அவர் பதவி வகித்த காலத்தில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மணிநேரம் பிரதமர் ஒருவர் அவையில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தைக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே என பல்ராம் ஜாக்கர் தன் நினைவாக தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் ஒருமுறை டாக்டர் ராதாகிருஷ்ணன் சேர்மனாக இருந்தபோது நடந்த நிகழ்வொன்று இன்றும் நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இரு பெரும் ஆளுமைகளின் பெருந்தன்மையை ஜனநாயக மாண்பை அந்த நிகழ்வு சித்தரிக்கிறது.
 கேள்வியை உறுப்பினர் எழுப்பிக்கொண்டிருக்கிறார். அமைச்சர் பதில் சொல்ல வருகிறார். நேரு அவர்கள் தன் ஆசனம்விட்டு எழுந்து வேறு அமைச்சர் அருகே சென்று பேசத்துவங்குகிறார். அவைத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்  Mr Prime Minister , what is that you are doing ?  என கடிந்தார். உடனே நேரு அவர்கள் தன் ஆசனம் திரும்பி  Mr Chairman, I am sorry, I shall not do it again"  என்கிற பணிவான பதிலை தந்தார்.
இரு அவைகளுக்குமான மரியாதை என்பதில் நேரு கவனமாக இருந்தார். சில நிதி அதிகாரங்கள் மக்கள் அவைக்கு இருக்கலாம்- இருஅவைகளும் அரசியல் அமைப்பு சட்டவிதிகளின்பாற்பட்டே இயங்குகின்றன என்கிற தெளிவு அவரிடம் இருந்தது.
தினேஷ் சிங் நேருவை நினைவுக்கூறும்போது அவரின் அனுபவத்தை எடுத்துச்சொல்கிறார். வெளியுறவுத்துறை சார்ந்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருக்கையில் நேரு உணவு எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் தினேஷ் சிங்கை அழைத்து நான் போய் வர 20 நிமிடங்கள் ஆகலாம். குறிப்பை எடுத்து வை- நான் வந்து பார்க்கிறேன் என பொறுப்புடன் சொல்லி அவையை விட்டு உணவிற்காக செல்கிறார் .
ஒருமுறை அட்டார்னி ஜெனரலை நாடாளுமன்றத்திற்கு அழைக்கவேண்டும் என்ற குரல் வலுத்தது. மொரார்ஜி முடியாது என பிடிவாதமாக இருந்தார். நேரு அவர்கள் தலையிட்டு நாடாளுமன்ற விருப்பத்திற்கு செவி சாய்ப்பது நல்லது என அறிவுறுத்தி அழைத்துவிடுங்கள் என்றார்.
சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என குற்றம் சாட்டி மாவ்லங்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் டிசம்பர் 18 1954ல் வந்தது. நேரு இம்மாதிரியான ஒன்று  வக்கிரத்தனமானது என்று கருதியிருந்தாலும் வாக்கெடுப்பு வரட்டும் என விழைந்தார். கட்சி கட்டளை என ஏதும் காங்கிரஸ் தரப்போவதில்லை. இது அவையின் பிரச்சனை. கட்சிப்பிரச்சனையல்ல. சபாநாயகர் பற்றி இன்று விருப்பப்படி பேசிவிடலாம்- ஆனால் அது நம் ஒவ்வொருவருவருக்கும் திரும்பும். நாட்டை பாதிக்கும் என்ற கருத்தை நேரு வெளியிட்டார். தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. சபாநாயகர் எனும் இடத்தின் கண்ணியத்தை நேரு தானே முன்நின்று காக்கவிரும்பியதற்கான சாட்சியாக இந்நிகழ்வு அமைந்தது.
அமைச்சரவை கூட்டங்களில் துணை அமைச்சர்கள் இடம்பெறாமல் இருந்தனர். காபினட் முடிவுகளை பத்திரிகைகளைப் பார்த்துதான் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது என்கிற குறையை நேருவிடம் கொண்டுசென்றனர். அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பேப்பர்களை தரலாமே என அறிவுரை நல்கி துணை அமைச்சர்களும் தங்கள் முக்கியத்துவத்தை உணர்வதற்கு துணைநின்றார் நேரு.
நேரு சில முக்கிய மசோதாக்களை கட்சி உறுப்பினர்கள் எப்படி புரிந்து விவாதிக்கிறார்கள் என பார்க்க விரும்புவார். அவர்கள் அதில் சரியான புரிதலுடன் இருக்க விரும்புவார். இந்து கோடு பில், அலிகார் பல்கலைகழக மசோதா, விஸ்வ பாரதி மசோதா, பனாரஸ் பல்கலைகழக மசோதா போன்றவற்றில் கட்சி உறுப்பினர்களும் முழு சுதந்திரத்துடன் கருத்தை வெளியிடவேண்டும் என அவர் வற்புறுத்தினார். அதேபோல் கமிட்டிகளுக்கு விடப்படவேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை வருவதற்கு முன்னரே அவர் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கமிட்டியின் தேவை குறித்து விவாதித்துவிடுவார்.
எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதன் உள்ளார்ந்து நிற்கும் ஜனநாயகம் அதன் அரசாங்க நிர்வாகத்தில் வெளித்தெரியும்.. இதை உறுதிப்படுத்த நினைத்தவர் நேரு.
 சோசலிசம் என்பதை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சோதிக்கமுடியும் என கருதி நேரு செயல்பட்டார். மக்களை கலக்காமல் சோசலிச திட்டம் என சிலர் எழுதிவைத்துக்கொண்டு அதை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமுல்படுத்துவது என்கிற முறையை ஏற்காமல் இருக்கலாம்.  மக்களின் உடன்பாட்டுடன் சோசலிசம் என்பதை அவர் சிந்தித்தார். .
 நேரு ஒருமுறை அவை உறுப்பினர்களிடம் மிக முக்கிய ஆத்ம பரிசோதனைக்குரிய கேள்வியை எழுப்பினார். நாடாளுமன்றத்திற்கு வந்த நாம் பெரும் விஷயங்களை பேசுகிறோம். என்ன செய்தோம் எனக்கேட்டுக்கொள்ள வேண்டாமா? குறைந்தபட்சம் நமது பகுதி கிராமங்களுக்கு குடிநீர்வசதியாவது செய்திருக்கிறோமா என சுயவிமர்சனத்தை துவங்கி வைத்தார். நாடாளுமன்றத்தில் 80 சத உறுப்பினர்கள் கிராம மக்களின் பிரதிநிதியாகத்தான் வந்துள்ளோம். அதனை  பிரதிபலிக்கவேண்டும் என்றார்.
கல்வி அறிவும் ஒழுக்க சீலர்களாகவும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நாடாளுமன்ற ஜனநாயகம் மேலும் சிறப்பாகும் என அவர் நம்பினார்.  பெருந்திரளான மக்களிடத்து கல்வியறிவு மேம்படாமல் அரசியல் ஜனநாயகம் என்பதை சரியாக உணரமுடியாது  என்பதை அழுத்தமாக நேரு முன்வைத்தார்.
இளைஞர்கள் அடிமட்டத்திலிருந்து சற்று அனுபவப்பட்டு நாடாளுமன்றத்திற்கு வருவது கூடுதல் பயிற்சி நிறைந்ததாக இருக்கும். நாடாளுமன்ற நெறிகள்- நன்னடைத்தைகள் என இருக்கின்றன. கூடுதல் வேலையில் சிரத்தை என்பது அங்கு தேவைப்படும். சட்டமன்ற அனுபவம் பெற்று நாடாளுமன்ற நுழைவு இருந்தால் அவர்களின் தேர்ச்சித்திறன் அவைக்கு பயனைக்கூட்டும் என்ற கருத்து நேருவிடம் இருந்தது. குறைந்தபட்ச பயிற்சி மற்றும் பொறுப்புடன் நாடாளுமன்ற நுழைவு என்பதை அரசியல் கட்சிகள் தங்களின் பாடமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவை நாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் கண்ணுறுகிறோம்.
நாடாளுமன்றத்தில் பிரச்சனைகள் வந்தால் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கு அருமையான வழிகாட்டலை நேரு தந்தார் பிரச்சனைகளே இல்லையெனில் சமூகம் சவமாகும். சில நேரங்களில் பிரச்சனைகள் உருவாகும். வேறு சிலநேரங்களில் உருவாக்கப்படும். அதை தீர்ப்பதற்குத்தான் நமது திறமையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமைதிவழிப்பட்ட முடிவுகள் செயல்பாடுகள் வேண்டும். அங்கு மாறுதலைக்கூட அமைதி வழியிலேயே செய்தாக வேண்டும். எவ்வளவு பேசுகிறோம் என்பதல்ல, நாம் பேசுவதால் எப்பகுதி மக்கள் நன்மையடைய வாய்ப்பு என்பதே நாடாளுமன்ற விவாதத்தில் பொருட்படுத்தப்படவேண்டிய ஒன்று . 
பிரச்சனைகள் இயல்பானது- அதை அமைதிவழியில் உரியவர்களுக்கான வகையில் தீர்க்கும் திறனே வளர்த்துக்கொள்ளவேண்டியது என்கிற அருமையான பாடம் நேருவிடமிருந்து கிடைக்கிறது.
மக்களின் கருத்துக்களை செவிமடுக்கவேண்டிய பொறுமை மிக அவசியம். விமர்சிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது - அது பெரும்பான்மை முடிவுகளை ஏற்று நடத்தல் என்பதானதே. அதேபோல் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அலட்சியம் செய்து பொருட்படுத்தாமல் இருந்தால் அங்கு நாடாளுமன்ற ஜனநாயக உணர்வு மங்கிவிடும்  என்கிற அவசியம் தேவைப்படுகிற பாடத்தையும் நேரு தருகிறார்.
" If you don't tolerate people's views, if you do not tolerate criticisms, then parliamentary system cannot function..Those criticise must also remember that they must follow ultimately the majority opinion. A majority which ignores the minority is not working in true spirit of parliamentary democracy"
 ஜனநாயக அரசாங்கம் என்ற ஆட்சிமுறையில் இரகசியங்கள் இருக்கமுடியாது. இரகசிய நடைமுறைகள் பலவீனத்தைக்கூட ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றமாக இருந்தாலும், சமூகமானாலும் வெளிப்படையான அமைதிவழிப்பட்ட விவாதங்களின் வழியே கூட்டுஞானம் மூலம் பலப்படுத்திக்கொள்ளமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை நேருவிடம் இருந்தது. இங்கு அவர் காந்தியின் மொழியை பேசினார்.
 தனிநபர் தாக்குதல் மற்றும் எதிர்ப்புக்கான இடமல்ல நாடாளுமன்றம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்ப்புக்கூட நிறுவனமான ஒன்றாக இருக்கவேண்டும்.  Institutional opposition not personal opposition  என நேரு இதை விளக்கினார்.
பலகட்சிகள், பலமொழிகள், பல்வேறு பழக்க வழக்கம் கொண்டவர்கள் பிரதிநிதிகளாக வரும் இடம் நாடாளுமன்றம். அங்கு பெரும்பான்மை உறுப்பினர்களை பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடிகிறது. எனவே இந்த பன்முகத்தன்மையை அக்கட்சி புரிந்துகொண்டால் அன்றி  மற்றவர் எனக்கருதப்படுபவரை செவிமடுக்கமுடியாது. கருத்தொற்றுமைக்கொணர முயற்சிக்கவும் முடியாது. செவிமடுக்காவிடில் நாடாளுமன்றத்தின் அரிய நேரம் வீணாகிப்போவதே நமது அனுபவமாக இருக்கிறது.
ஜனநாயகம் நான்கு அடிப்படைகளில்தான் நிலைக்கமுடியும்- தனிநபர்  சுதந்திரம், பிரதிநிதித்துவ அரசாங்கம், பொருளாதார சமூக சமத்துவம், சுயகட்டுப்பாடு (Individual freedom, Representative government, economic and social equality, self discipline) என அவற்றை வகைப்படுத்தலாம்.  இதற்கு கட்சிகள் பொறுப்பாக துணைநிற்கவேண்டும்.
 மாற்றுக்கருத்துக்களை பொருட்படுத்தி அமைதிவழியில் விவாதம் மூலம் தீர்வு என்பதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு.  Executive  எனப்படும் அமைச்சரவை அல்லது பிரதமர்அதிகார போதை தலைக்கு ஏறி செயல்பட்டால் நாடாளுமன்றமுறையில் பலவீனம் ஏற்படும். இந்திய அனுபவங்கள் இதை நன்கு நமக்கு உணர்த்திவருகின்றன.  சகிப்புத்தன்மை என்பது தன்னுடன் உடன்படாதவர்களும் தங்கள் கருத்துக்களை உரியவகையில் அமைதிவழியில் பலமாக சொல்வதை தாங்கிக்கொள்ளும் மனப்பாங்கு என்கிற புரிதல் சமூக அமைதிக்கு அவசியமாகிறது.
நேரு 1962 பிப்ரவரி மாதம் பெங்களூரில் நிகழ்த்திய உரை ஒன்றில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருப்பது சிறந்ததுதான், ஆனால் பசியும் பட்டினியும் கூட இருந்தால் அது என்ன உரிமை என சுயவிமர்சனமாக கேட்டுக்கொண்டார். அரசியல் விடுதலை போதாது- அது பொருளாதார விடுதலை நோக்கி பயணிக்கவேண்டும். ஏதோ ஒருவகைப்பட்ட சோசலிச சாலையில் நாடு பயணிக்கவேண்டும் என அவர் தன் பெரும் விருப்பத்தை பகிர்ந்துகொண்டார்.
ஜனநாயகத்தை வெறும் தேர்தல் என குறுக்கிவிடக்கூடாது.  பெரும்பான்மை மக்களுக்கு  அரசாங்கத்தை, நாட்டை தாங்கள்தான் நடத்துகிறோம் என்கிற பாத்தியதை உணர்வை உருவாக்குவதுதான் ஜனநாயகத்தின் சாரமாக இருக்கும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியவர் நேரு.
நேரு ஒருமுறை தான் இப்படிக்கூட எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். சிலநேரங்களில் ஜனநாயக அரசாங்கம் தவறான மனிதனைக்கூட உட்காரவைத்து ரிஸ்க் எடுக்கும். ஆனால் அதை சரியான நடைமுறையில் செய்யும் (  the democratic state must take the risk of even choosing wrong people by the right method and hope for the best). அவரின் தீர்க்கதரிசனத்தை நாடு இன்றுள்ள அரசியல் சூழலில் நன்றாக உணர்கிறது.
 அதேபோல் தனிநபர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அதே நேரத்தில் ஒழுங்குடன் திரட்டப்பட்ட கட்சி தனது செயல்பாட்டால் மக்களுடன் உள்ள தொடர்பால், அவர்களுக்கான விருப்பங்களை அறிவதால் பிரதிநிதியாக இருக்கமுடியும் என்றார் நேரு.  மக்களின் அடிமட்ட வேர்ப்பகுதியிலிருந்து பொருளாதார திட்டங்கள் குறித்த விவாதங்கள் தேவை என அவர் நினைத்தார். 
நேரு காலத்தில் இன்னொரு தனி சிறப்புஎன்னெவெனில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரே எதிர்கட்சி போன்று அரசாங்கம் குறித்து விமர்சனம் வைக்கும் உரிமைகிடைக்கப்பெற்றவராக இருந்ததாகும். நேருவிற்கு இடைக்கால அரசை தலைமைதாங்கி நடத்தும்போதே சகிப்புத்தன்மையும் பொறுமையும் பழக்கமானது. பிரிட்டிஷ் வைஸ்ராய், மற்றும் பல்வேறு முகத்துடன் அமைந்த அமைச்சரவை என்பதை அவர் முதலில்  எதிர்கொண்டு அழைத்துச்செல்ல வேண்டியிருந்தது.
 ஒருமுறை  லோக்சபாவில் நேருவின் உரையை காங்கிரஸ் உறுப்பினராக இருந்த பண்டிட் லஷ்மிகாந்த மைத்ரா விமர்சனம் செய்தார். கிழக்கு பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட நிலைமை குறித்த உரையது.  யார் பேசுகிறார்கள் நேருவா - லியாகத்தா என புரிந்துகொள்ள முடியவில்லை (As I was listening to the PM I was wondering whether it was the voice of Pandit Nehru or of Liaquat Ali Khan, the PM of Pakistan)  என்பது லஷ்மிகாந்த் அவர்களின் விமர்சனம். இதையும் புன்முறுவலுடன் நேரு ஏற்றார்.
 ஹிரன்முகர்ஜி மே 1952ல் நேரு குறித்த விமர்சனத்தை வைத்தார். ராயலசீமா பகுதியில் விவசாயிகளின் துயரை காணாமல் இருக்கிறார் நேரு. விடுதலை போராட்டக்காலத்தில் விவசாயிகளுக்காக நின்ற நேரு எங்கே என்பது ஹிரன் விமர்சன சாரம். இப்படி அவர் நடந்தது தனிமனித துயரல்ல- தேசத்துயர் என்ற கடுமையான பதங்களையும் அவர் பயன்படுத்தி இருந்தார். இதற்காக  பதில் தாக்குதலை தராமல் வரலாற்றில் தனக்கு என்ன நேரப்போகிறது என்பது முக்கியமான ஒன்றே அல்ல. இந்தியாவிற்கும் அதன் லட்சக்கணக்கானவர்க்கும் என்ன என்பதே மிக முக்கியமானது- அதற்கு உழைப்போம் என்று நேரு தன் நிலையை விளக்கினார்.
பண்டிட் நேரு அவர்களுக்கும் ஷியாமாபிரசாத் முகர்ஜிக்கும் ஒருமுறை தொடர்ந்து பத்துநிமிடங்கள் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. அவை விவாதங்களை அமைதியாக கவனித்தது. சபாநாயகர் மாவ்லங்கரும் அமைதியாக இருந்தார். காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்த் மாளவியா சபாநாயகரிடம் எவ்வளவு நேரம் இந்த வார்த்தைபோர் என வினவினார். உடன் நேரு புரிந்துகொண்டு எவ்வளவு பொறுமை முகர்ஜிக்கு இருக்கிறது என சோதித்தேன் என நிலைமையை இலகுவாக்கினார்.
 அதேபோல் வாஜ்பாய் கடுமையான தாக்குதலை நேரு அரசாங்கம் மீது தொடுத்தார். அன்று அவை நிகழ்வுகள் முடிந்தவுடன் வாஜ்பாயை பார்க்கநேர்ந்த நேரு மலர்ந்த முகத்துடன் இன்று கடுமையாக தாக்கி பேசினீர்கள் என்று சொல்லி சென்றார். தன்னை விமர்சனம் செய்தவர்களையும் அவர்கள் இளையவர்களாக இருந்தாலும் அவரை அங்கீகரித்து பாராட்டி சொல்லவேண்டும் என்ற பக்குவம்  நேருவிடம் இருந்ததை நம்மால் உணரமுடிகிறது.
மகாராணி காயத்ரி தேவியுடன் நடந்த விவாதமானாலும் சுசேதா கிருபளானியுடன் நடந்த விவாதமானாலும் அவர் பெண் உறுப்பினர்கள் என்ற வகையில் தன்மீதான தாக்குதலுக்கான பதிலை மிதமாக தந்து  பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தையும் சேர்த்து காப்பாற்றும் பொறுப்புடன் நடந்திருக்கிறார்.
Nehru  Ideology and Practice என்ற ஆக்கத்தில் EMS நம்பூதிரிபாட் கீழ்கண்ட விமர்சனத்தை முன்வைக்கிறார். 1957ல் அமையப்பெற்ற முதல் கம்யூனிஸ்ட் கேரளா அரசாங்கத்தை கலைத்தது குறித்த விமர்சனமது. அரசியல் தார்மீக நெறி வீழ்ச்சி என அவரது விமர்சனம் சென்றது.
The dismissal of an elected ministry was clearly beyond the code of political ethics in which Nehru had been trained...It was necessary in the interest of the party's survival that a liberal democrat like Nehru should come out in his true colours as a bourgeois leader. And so he did"
1962 சீன யுத்தத்தின் போது கிருஷ்ணமேனன் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக்கூட்டத்திலும் நேரு மீது முழு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டாலும் மேனன் போகவேண்டும் என்கிற குரல் வலுவாக இருந்தது.
இராணுவ ஜெனரல் திம்மையாவுடன் பாதுகாப்பு அமைச்சருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடும் திம்மையா ராஜினாமா செய்வேன் என சொன்னதும் வெளிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் முடிவுகள் இராணுவ தளபதிகளின் கட்டளைகளாகவோ நிர்பந்தங்களாகவோ இருந்துவிடக்கூடாது என்பதில் நேரு உறுதியாக இருந்தார். திம்மையாவின் ராஜினாமை திரும்ப பெறவைத்தார். கிருஷ்ணமேனன் ராஜினாமா செய்துவிட்டார் என்பதை தெரிவித்து நிலைமைகளை சீர்படுத்த முயற்சித்தார்.
 சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக நேரு நாடாளுமன்றத்தில் போதுமான தகவல்களை தரவில்லை என்ற விமர்சனம் வலுத்து வந்தது. திபேத் பிரச்சனை உடன்பாடு தொடர்ந்து 1954க்குப் பின்னர் சீன உறவுகள் மேம்படும் என கருதப்பட்டது. சூ என் லாய் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உறவுகளை மேம்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் நேரு செயல்பட்டு வந்தார் . ராஜ்ய சபாவில் இந்திய எல்லைகளை சீன உரிமை கொண்டாடி வருவது குறித்து 1959ல் கேள்விகள் எழுந்தன. இந்தி சினி பாய் பாய் முழக்கங்கள் வலுப்பட்டு உதவும் என்கிற நேருவின் நம்பிக்கை பொய்க்கத் துவங்கியது.
நேரு செப்டம்பர் 26, 1959ல் சூ என் லாய் அவர்களுக்கு எல்லை தாக்குதல்களை விளக்கி கடிதம் எழுதினார். அக்சாய் குன்றுகள் பகுதி நிலைமையையும் அதில் அவர் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இராணுவ நடவடிக்கை என ஏதுமின்றி அமைதியான முறையில் எல்லை தகராறுகள் தீர்க்கப்படவேண்டும் என்கிற விழைவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. அனைத்து விவரங்களும்  ஒளிவு மறைவின்றி நாடாளுமன்றத்தில் சொல்லவேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்திற்கு மிக முக்கிய சென்சிடிவ் விஷயங்கள் கூட தெரிவிக்கப்படாமல் போவதால் வரும் குற்றவுணர்விற்குரிய சுயவிமர்சனம்  இக்கடிதத்தில் நமக்கு புலப்படும்.
கர்நாடகாவை சார்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சீனா படையெடுப்பு குறித்த விவாதத்தின்போது நேருவை அளவுக்குமீறி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். ராஜ்யசபா சேர்மனாக இருந்த ஜாகீர் ஹுசைனிடம் நேருஅய்யா விவாதம் என்னைப்பற்றியோ என் குடும்பம் பற்றியோ அல்ல, சீனா படையெடுப்பு குறித்து- அவரை நிறுத்த சொல்லுங்கள் என எழுந்து சொன்னார். அவசியம் இல்லாமல், பிரச்சனையின் தன்மை அறியாமல் பேசுபவர் தனக்கு நெருக்கமானவர் என்றாலும் அவர் அதை விரும்பாமல் இருந்தார்.
மாஸ்டர் தாரா சிங் விடுதலை போராட்ட தலைவர்களில் ஒருவர். அவர் நேரு அரசாங்கம் எதிர்த்து பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அப்படி ஒரு போராட்டத்தின்போது 1959ல் அவர் சிறையில் வைக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமாக இருந்தது குறித்து ஜெயபிரகாஷ் நாராயணனிடம் சொல்லப்பட்டது. ஜே பியும் நேருவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் எப்படி இதில் உதவமுடியும் என சிலர் நினைத்தனர். ஜேபி நேருவிடம் பேசினார். உங்களை எதிர்க்கும் விடுதலை போராட்டக்காரர்களில் மாஸ்டரும் ஒருவர். அவரை நீண்டநாட்கள் உயிர் வாழவைப்பது நமது கடமை என்கிற செய்தியை நேருவிற்கு தந்தார் ஜேபி. மறுநாள் மாஸ்டர் தாரா சிங் விடுதலையாகியிருந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதுதான் நேருவின் ஜனநாயகபண்பு.
அதேபோல் மாஸ்டர் தாராசிங் உண்ணாநோன்பு போராட்டம் அறிவித்தபோது, அவருக்கு வேண்டுகோள் விடச்சொல்லி இருவரையும் அறிந்த கோபால்சிங் கோரினார். நேரு மிக கோபமாக இந்த மனிதரிடம் உறவாடுவது கஷ்டம் - அவர் ஒத்துக்கொள்வதைக்கூட மாற்றிப் பேசுவார். தேசியப்பார்வை கொண்ட ஒரு கம்யூனிட்டியை அவர் வகுப்புவாத பார்வைக்கு மாற்ற முயற்சிக்கிறார் என தன் விமர்சனத்தை வைத்தார். ஆனாலும் ஏற்றுக்கொண்டு அப்பீல் செய்தார்.
தாராசிங் அவர்களும் தனக்கு நேருவிடமிருந்து வந்த கடித சாரத்தை வெளிப்படுத்தாமல் போராட்டத்தை தள்ளிவைத்தார். நேருவின் கடிதத்தில் மாஸ்டருக்கு தரப்படவேண்டிய விளக்கத்திற்கு பின்னர் தங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் என்ற வரி இருந்தது- ("If, however, you still feel I have hurt your feelings by any chance, I ask your forgiveness.".) . அதைப்படித்தவுடன் தாராசிங் கண்ணீர்விட்டார். இந்த ஒருவரி தன்னை உலுக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
1950-56 ஆண்டுகளில் நிதிஅமைச்சராக இருந்த சி டி தேஷ்முக் நேரு மீது கடுமையான விமர்சனங்கள் வைப்பவராக இருந்தார். ஆந்திராவை பிரித்து தருவது என்கிற முடிவை தனியே அவர் மட்டும் எடுத்துவிட்டார். முறையாக காபினட் முடிவுகள் கூடி எடுக்கப்படுவதிலை என்பதில் அவர் அதிருப்தியுற்றார். நேருவும் அவரது விமர்சனத்தை ஓரளவு பொறுத்துக்கொண்டாலும் பிரதமர் பதவி- அதன் பொறுப்பென்ன என்பதை தான் அறியாதவன் அல்ல என்கிற பதிலை அவருக்கு சற்று காட்டமாகவே தந்தார்.
1957 முந்திரா ஊழல் எனும் எல் ஐ சி சார்ந்த பிரச்சனையை மருமகன் நாடாளுமன்ற உறுப்பினர் பெரோஸ்காந்தி எழுப்பினார். சாக்ளா கமிஷன் போடப்பட்டு கிருஷ்ணமேனன்  மீது தலையீடற்ற விசாரணை நடத்தப்பட்டது.
நேருவின் உயில் ஜூன் 21, 1954ல் பதிவுசெய்யப்பட்டது. இந்திய மக்களின் பேரன்பிற்கு தன்னிடம் செய்வதற்கு கைம்மாறு ஏதுமில்லை. இனிவாழப்போகும் காலமுழுதும் மக்களின் அன்பிற்கு மாறான நம்பிக்கைக்கு மாறான எந்த ஒன்றையும்  செய்யாமல் இருப்பேன் என்கிற விழைவை அதில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
"I have received so much love and affection from the Indian people that nothing that I can do can repay even a small fraction of it, and indeed there can be no repayment of so precious a thing as affection. Many have been admired, some have been revered, but the affection of all classes of people has come to me in such abundant measures that I have been overwhelmed by it. I can only express the hope that in the remaining years I may live, I shall not be unworthy of my people and their affection."
நேரு தான் ஒரே நேரத்தில் சோசலிஸ்ட்டாகவும் ஜனநாயகவாதியாகவும் இருப்பதில் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. அப்படி இருப்பதே சரி எனக் கருதி செயல்பட்டார். அரசியல் அமைப்பு விதிகளும், சட்டங்களுமே எந்த நாட்டையும் உயர்வானதாக ஆக்கிவிடுவதில்லை. அந்நாட்டு மக்களின் ஆர்வங்களும், அவர்களின் உயரிய வெளிப்பாட்டு சக்தியும்தான் நாட்டை உயர்த்தும். வரலாறு எப்போதும் மிக உயரிய மனங்களால், விசாலமான இதயங்களால், அன்பினால் இறுகப்பிடிக்கும் கரங்களால் உருவாக்கப்படுகிறது. மக்களின் பெரும் வியர்வை சிந்தும் உழைப்பால் தேசம் கட்டப்படுகிறது என 1949 விடுதலைதின உரையில் நேரு குறிப்பிட்டார்.
பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் என நம்பி செயல்பட்ட தலைவர்களுள் நேருவும் ஒருவர். ஆட்சிஅதிகாரத்தின் மூலம் பெண்களுக்கு சில சாதக வாய்ப்புக்களை உருவாக்க முடிந்ததை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். மரபுரீதியான சிந்தனையும் செயல்களும் நிறைந்த பழமையான நாட்டில், ஆணாதிக்கம் நிறைந்த நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை, மணவிலக்கு பெறும் உரிமை, பொதுவேலைக்கு செல்ல வாய்ப்புகள் ஆகியவற்றை பிரதமராக இருந்து செய்யமுடிந்ததற்காக அவர் நிறைவடைந்தார்.
ஆங்கிலோ இந்தியர்கள் சார்பிலான நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்த பிராங்க் அந்தோணி நேருவின் சிறப்பை குறித்து கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட எட்டாவது அட்டவணைப்பட்டியலில் இடம்பெறவேண்டும் என்பது பிராங்கின் கோரிக்கை. நேருவிற்கு அதில் உடன்பாடு இருந்தாலும் இந்திமொழி ஆர்வலர் மற்றும் வெறியர்கள் அதை உறுதியாக எதிர்த்ததையும், அதேபோல் தமிழகத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களையும் கணக்கில் கொண்டு அவர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை செய்தார். ஆகஸ்ட் 7 1959ல் கொடுக்கப்பட்ட அவ்வறிக்கையால் இன்றும் மொழிபோராட்டங்களை மட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீட்டிப்பு (Making English the alternate/ associate language for as long as non Hindi speaking people so desire)  என்பது தொடர்புமொழி பிரச்சனையில் இன்றளவும் பேருதவியாக இருந்துவருகிறது.
நேரு 1907ல் கேம்பிரிட்ஜ் டிரினிட்டியில் சேரும்போது அவர் கெமிஸ்ட்ரி, ஜியாலஜி, பாட்டனி எடுத்தார். தேர்ச்சி எனப் பார்த்தால் இரண்டாம் வகுப்பில்தான். பிரிட்டிஷ் அறிவுச் சூழல் அறிவியல் கண்ணோட்டம் நிறைந்து இருந்தது. நேருவும் ஈர்க்கப்பட்டார். பாபியன் சிந்தையாளர்களுடனும் பேராசிரியர் லாஸ்கியாலும் அவர் ஈர்க்கப்பட்டார். மார்க்சியத்தின்பாற் வந்த அவர் மேற்கின் வளர்ச்சியை மார்க்சியவகைப்பட்டே சரியாக விளக்கமுடியும் என நம்பவும் செய்தார்.
ருஷ்ய புரட்சியும் அதன்சாதனைகளும் நேருக்கு ஈர்ப்பை உருவாக்கின. அதே நேரத்தில் கம்யூனிசம் என்பதில் கேள்விக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையை அவர் வைக்கவில்லை. ருஷ்யா போல் இந்தியாவிற்கு ஒற்றை கட்சி ஆட்சிமுறை பொருந்தாது என அவர் நினைத்தார். விஞ்ஞான சோசலிசம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. மகாத்மாகாந்தியின் ஈர்ப்பு அவருடனான கருத்துவேறுபாடுகளையும் தாண்டி இருந்தது. ஜனநாயகம், செக்யூலரிசம், சோசலிசம், கூட்டுசேரா இயக்கம், போரற்ற அமைதி ஆகிய 5 அம்சங்களை அவர் வலியுறுத்திவந்தார்.
இந்தியாவில் செய்யவேண்டியது சொத்து ஒழிப்பல்ல- வறுமை ஒழிப்புதான் என அவர் சோசலிசம் பற்றி பேசும்போது ஒருமுறை குறிப்பிட்டார்.
இந்தியர்களாகிய நாம் வேறு எந்த நாட்டினரிடமிருந்தும் மதசகிப்புத்தன்மையை கற்கவேண்டியதில்லை. நமது மண்ணில் அது நிறைந்தே இருக்கிறது. ஆனால் அரசியல் உரிமைகள் என்பதில் பிரஞ்சு, அமெரிக்க புரட்சிகளிடமிருந்து  செல்வாக்கு நம்மிடம் ஏற்படாமல் இல்லை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நீண்ட வரலாறும் நம்மிடம் செல்வாக்கு செலுத்தவே செய்கிறது. பின்னர் ஏற்பட்ட ருஷ்யபுரட்சியின் தாக்கம் பொருளாதார சமத்துவம் குறித்த சிந்தனைகளை நம்மிடம் உருவாக்கின. உலகின் பல நாடுகளின் அனுபவத்தில் ஒப்பீட்டளவில் பார்த்தால் காங்கிரஸ் நல்ல ஜனநாயக அமைப்பாகவே இருக்கிறது என நேரு தனது அனுபவ மதிப்பீட்டை தந்தார். 
திரு ஆர். வெங்கட்ராமன் குடியரசுத்தலைவராக இருந்தநேரத்தில் நேருவின் பாராளுமன்ற கண்ணியம் பற்றி எடுத்துரைத்தார்.  நேருவை பாராளுமன்றத்தின் அணிகலன் என அவர் விவரித்தார். நேருவை  self apprisal- self assessment நிறைந்த தலைவர் என்றார் ஆர். வெங்கட்ராமன். கேள்வி நேரங்களுக்கு நேரு கொடுத்த முக்கியத்துவத்தை அனைவரும் போற்றாமல் இல்லை.
 நேருவின் விவாதத்திறன் பொறுப்பற்ற குற்றசாட்டுக்களை அவர் எதிர்கொண்டவிதம் குறித்து உமா சங்கர் தீட்சித் தனது பார்வையாக முன்வைக்கிறார். இப்படிப்பட்ட தருணங்களில் நேருவின் அறிவாளுமை கொப்பளிப்பதை தீட்சித் வியந்து பேசுகிறார்
 ” Not unoften, he would effectively intervene to silence an irresponsible speaker or angirily repudiate an ill founded allegation or demolish a virulent pesrsonal attack. During such exchanges he shone out in his intellectual brilliance"  .
  நேரு நாடாளுமன்றத்தைகாம்ரேட் போல் கருதி தோழமை பூண்டவர் என்கிறார் என் ஜி ரங்கா. அளவிற்கு மீறி புகழாரம் செய்யும்போது அவர் நாடாளுமன்ற அவையில் நெளிவதை கண்டுள்ளோம் என்பது என் ஜி ரங்கா நமக்கு தரும் சித்திரம்.
என் ஜி  ரங்கா நேரு குறித்த நினைவுகளை கீழ்கண்டவாறு சொல்லியிருந்தார். நாடாளுமன்ற விவாதங்களில் நேரு குறித்து கடுமையான சுடுசொற்களை வீசியிருப்போம். அவை அனைத்தும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் பெரும்பான்மையின் முடிவுகளை எதிர்கட்சி ஏற்கும்படியான சூழலை அவர் உருவாக்குவார். பெரும்பான்மைக்கு கட்டுப்படுதல் என்பதை கற்கவேண்டியிருக்கும். உலகில் பலநாடுகளில் காணப்படாத அம்சமிது. நேருவிற்கு இதற்காக நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாடாளுமன்ற  நடவடிக்கைகளையும் அரசியல் அமைப்பு சட்ட நடைமுறைகளையும் நன்கு அறிந்த அறிஞர் சுபாஷ் காஸ்யப்   நாடாளுமன்ற அவையின் மாண்பு என்றால் அதற்கு தேற்றம் என நிற்பவர் நேருதான் எனக் குறிப்பிட்டார்.
Nehru was not an individual. He was a norm  என அவர் குறித்து கச்சிதமாக பேசியவர் ரசீதீன்கான். நேருவின் வாழ்க்கை மக்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த வாழ்க்கையாக இருந்தது. அவர் இந்தியாவின் பன்முகத்தன்மைகளை உட்கிரகித்துக்கொண்ட முழு இந்தியன் என உணரப்பட்டவர். அவர் கருத்தொற்றுமை உருவாக்கத்தெரிந்தவராக இருந்ததால் நவீன இந்தியாவின் பெரும் கட்டுமானக்காரராக இருக்க முடிந்தது. ரசீதீன் மேலும் குறிப்பிடும்போது அவர் இந்திய விடுதலை இயக்கத்தின் சிறந்த புதல்வர்கள் பலர் உருவாக்கிய அம்சங்களை உள்வாங்கியவராக இருந்தார் எனவும் குறிப்பிட்டார்.
பெண்கள் சொத்துரிமை, அவர்களின் சம உரிமை- கண்ணியம் பிரச்சனைகளில் துரிதமாக செயல்பட நேரு விரும்பினார். எதிர்ப்புகள் வந்தன.  முந்தரா ஊழல் எனும் பிரச்சனையில் பெரோஸ்காந்தி கடுமையாக தாக்கிப்பேசினார். பொறுமையாக கேட்ட நேரு அவரை பாராட்டி இப்படி விவரங்கள் கொண்டதாகத்தான் உரைகள் அமையவேண்டும் என்றார்.
விடுதலை அடைந்த இந்தியா தனது மக்களுக்கு வயதுவந்தோர் வாக்குரிமை என்கிற மிகப்பெரிய சமத்துவ ஜனநாயக உரிமையை சோதிக்க நேரு மிகப்பெரும் துவக்க நாயகராகவும் கட்டுமானக்காரராகவும் இருந்தார். அவர் சோசலிச கட்டுமானமாக இருந்தாலும், திட்டமிடுதல் ஆக இருந்தாலும் அதில் ஜனநாயக பண்புகள் என்பதை இணைக்கவேண்டும் என செயல்பட்டார். ஒருவகை கலப்புபொருளாதார சோதனையை அவர் நடத்தினார்.
மேற்குநாடுகள் தொழிற்மயமான பின்னர் அரசியல் ஜனநாயகம் நோக்கி நகர்ந்தன. இந்தியாவோ அரசியல் ஜனநாயகம் பெற்றபின்னர் தொழிற்மயமாகவேண்டியிருக்கிறது என்கிற முக்கிய வேறுபாட்டை நேரு சுட்டிக்காட்டிவந்தார். அந்த தொழிற்மயமாதல் கூட ஜனநாயக வழிமுறைகளை அடைத்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதில் அவர் விழிப்புடன் செயல்பட்டார்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் நேரு குறித்து சொல்லும்போது நம்மை போன்ற குழந்தைப்பருவ ஜனநாயகத்தில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
 தோழர் கே கோபாலன் தனது நேரு குறித்த நினைவில் அவரின் நாடாளுமன்ற நடைமுறைகளின் முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டியிருந்தார். சபாநாயகர் ஆசனத்தில் எவர் இருந்தாலும் உரிய மரியாதை, புன்முறுவலுடன் அவைக்கு வருதல், பார்ப்பவர்களுடன் பரிமாற்றம், கோரம் மணி அழைப்பைக் கேட்டால் அவைக்கு ஓடோடி வருதல், கேள்விக்கு பதில் தரும்போது முழுவிவரங்களை அளித்தல், நிர்வாக விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்துகொள்தல் போன்ற மிகப்பேரும் மாதிரிகளை நேரு உருவாக்கினார். அவர் அவையில் இருந்தாலே பெரும் ஈர்ப்புதான் என தோழரின் பதிவு செல்கிறது. தோழர் ஹிரன் முகர்ஜியும் நேரு குறித்து மிக உயர்ந்த மதிப்பீடுகளை கொண்டிருந்தார். அவர் நேரு குறித்து தனியாக புத்தகம் ஒன்றையே தந்துள்ளார்.
 திவான் சமன்லால்  மோதிலால் அவர்களுடன் பழக்கத்தில் இருந்தவர். AITUC  துவக்க காலத்தில் மானிபெஸ்டோ வெளியிட்ட சிறப்புக்குரியவர். அவர் மோதிலாலை  சிறப்பான பார்லிமெண்டேரியன் என்றார். பின்னர் நேருவின் ஆற்றலை வியந்து மிகச்சிறந்த பார்லிமெண்டேரியன் என தந்தையைவிட மேம்பட்ட இடத்தை  சமன்லால் தந்தார். அவரின்  அரசியல் அமைப்பு சட்ட அவையில் objective Resoultion உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்றாக இருந்தது. அதேபோல்  மகாத்மாவின் படுகொலைக்கு பின்னர் அவர் ஆற்றிய வானொலி உரையும் உலகோரை கவனிக்கவைத்த  நெகிழவைத்த உரையாக அமைந்தது.
வழக்கமாக பட்ஜெட் அமர்வு முடிந்தால் நாடாளுமன்றம் கூட்டப்படுவதில்லை. மே 27 1964ல் கூட்டப்பட்டிருந்தது.  நேரு அவர்கள் முக்கியமான திருத்தம் ஒன்றைக் கொணரவேண்டும் என விரும்பியதால்தான் அந்த அமர்விற்காக அறிவிக்கை தரப்பட்டிருந்தது. ஆனால் அன்றுதான் தனது இறுதிநாளின் போராட்டத்தை அவர் நடத்தி மரணித்தார்.
நேரு மூன்று அம்சங்களில் தீரா தாகத்துடன் செயல்பட்டார். சுதந்திர வேட்கை, ஜனநாயக வேட்கை, நவீனமய வேட்கை என்ற மூன்றிலும் அவர் உறுதியாக நின்றார். எந்தவித வறட்டுத்தனங்களுக்கும் இடம்தராத மானுட மதம் என்பதை அவர் பற்றி நின்றார்.
நேரு நூற்றாண்டு நாடாளுமன்ற தொகுப்பு சிவசங்கர் (P. Shiv Shanker ) கட்டுரையில் நேருவின் மிக முக்கிய கவலையை பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் தலையாய பிரச்சனை ஏழ்மை பட்டினிநிலையிலிருக்கும் மக்களை விடுவிப்பதாகவே இருக்கும். இதை செய்யத்தவறுவோமானால் நமது அரசியல் அமைப்பு சட்டம் அர்த்தமற்ற வெறும் காகிகதமாகவே விளங்கும்.
"At present the greatest and most important question in India is how to solve the problem of the poor and the starving. Wherever we tum, we are confronted with this problem. If we cannot solve this problem soon, all our paper Constitution will become useless and purposeless."
நேருவின் இவ்வாசகங்கள் இன்றும் பொருள் பொதிந்ததாகவே செயலுக்கான நிகழ்ச்சிநிரலாகவே இருந்துவருகிறது.


No comments:

Post a Comment