https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, September 7, 2017

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 3

3
இராதாகிருஷ்ணனுக்கு பெண்கள் என்றால் மணவாழ்க்கை, தாய்மை, குடும்பம் என்ற கருத்துதான் இருந்தது . தன் பெண்களை அவர் 11வயது முதல் 16 வயதிற்குள் அவர்கள் ஒப்புதலை பெறாமலேயே, தந்தை என்கிற வகையில்  மணமகனை முன்கூட்டியே பார்க்காமல் கூட திருமணம் செய்து வைத்தார். அவருக்கு திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிற கருத்து இருந்தது. ஆண்களுக்காவே பெண்கள் என்கிற பேச்சு தோரணை அவரிடம் வெளிப்பட்டது . மைசூரில் கிடைத்த நல்வாழ்க்கை அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பை உருவாக்கியது என அவரது மகன் கோபால் பதிவு சொல்கிறது. இவ்வகை செய்திகள்  தவறானவை- சரியானவை என  இரு தரப்பு  வாதங்கள் உள்ளன. The company of women, of which he was a compulsive seeker, was like a gossip and light reading, an agreeable way of passing the time in the intervals of concentrated work and thought... the women who moved in and out of his life were bit- players, acting against the backdrop of a stable marriage and a wife with whom he had his only deep and lasting relationship என்று தந்தையைப் பற்றி சர்வபள்ளி கோபால் எழுதுகிறார்.
மைசூரில் சமஸ்கிருத பண்டிதர் ஹிரியன்னா, தத்துவத்துறை வாடியா, வணிகத்துறை கே டி ஷா போன்றவர்களுடன் நடைப்பயிற்சி விவாதம் என்கிற நட்பை ராதாகிருஷ்ணன் வைத்திருந்தார். கல்லூரியில் அவர் புகழ் உயர்ந்தது. அவரது வீடு எப்போதும் உபசரிப்புகளுக்காக திறந்தே இருந்தது. ஏப்ரல் 1919 ஜாலியன்வாலாபாக் நிகழ்வைத்தொடர்ந்து அவரின் அரசியல் தாகம் அதிகரித்தது. ஆனால் சம்பாதித்யம், குடும்பம் போன்றவற்றையும் அவர் யோசிப்பவராக இருந்தார். அவரால் dignified career making செய்ய முடிந்தது.

1920ல் அசுடோஷ் முகர்ஜி கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சென்னையில் சர் பி எஸ் சிவசாமி அய்யர் வீட்டில் தங்கவைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டார். சிவசாமி ராதாகிருஷ்ணனின் நண்பர். மைசூரிலிருந்து ராதாகிருஷ்ணனை வெளியேக் கொணர விரும்பியவர். அசுடோஷ் 32 வயதே நிரம்பிய ராதாகிருஷ்ணனிடம் நான் நேரிடையாக உன்னை அப்பாயிண்ட் செய்ய முடியாது வயதில் மூத்த பலர் இருக்கின்றனர்-ஆகவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார். மைசூர் நிர்வாகம் செய்தி அறிந்து அவர் சம்பளத்தை உயர்த்தி 5 ஆண்டு ஒப்பந்தம் என்பதை மாற்றி நிரந்தரம் என்றது. ஆனால் அதற்கு முன்பாகவே கலகத்தாவிலிருந்து உலகத்தரம் வாய்ந்த ஜார்ஜ் 5 இருக்கை பேராசிரியராவதற்கான உத்தரவு ரூ 1000 சம்பளத்தில் வெளியானது. அவரும் கல்கத்தா சூழல் மீன் உணவு குறித்தெல்லாம் கவலை கொண்டாலும் வேறு வழியின்றி 1921 பிப்ரவரியில் போய் சேர்ந்தார்.
1924ல் அசுடோஷ் மறைந்தார். அங்கும் ராதாகிருஷ்ணனுக்கு நண்பர்கள் குறைவாகவே இருந்தனர். கிரன் முகர்ஜி, பசந்தகுமார் மல்லிக் போன்ற தத்துவ ஆசிரியர்களுடன், சர் சி வி ராமனும் நன்கு பழக்கமானார். கல்கத்தா வீட்டிலும் தனது சகோதரர்கள் வந்துபோனாலும் அதிக மனிதர்கள் இருப்பது என்பதால் எல்லாம் அவரது வேலைமுறைகளை பாதிக்காமல் நடந்தன. புத்த வாக்கியமான  Concentration is the joy of mind  என்பதை அவர் அடிக்கடி சொல்வார்.
இந்திய தத்துவம் என்கிற இரண்டு வால்யூம் புத்தகத்தை 1923 மற்றும் 1927ல் அவர் கொணர்கிறார். ஏறத்தாழ 1500 பக்கங்கள் கொண்ட பெரும்படைப்பாக வெளிவந்தது. He reconstructed the arguments of the ancient texts and assessed them in relation both to the debates which formed their original context to modern controversies... this was intellectual history of a high quality  என்கிறார் கோபால். தத்துவ வரலாற்றாசிரியன் என்போன் வெறும் குப்பைகளை பொறுக்கி சாக்கில் கிடத்துபவன் அல்ல.  விமர்சனபூர்வ பார்வையில் அது குறித்த விரிவுரையாளன். அவர் புத்தர் சிந்தனைகளை பெர்க்சன்னுடன் ஒப்பிட்டும், ஹீனயானத்தை இப்சன் மேற்கோள்களிலிருந்தும் விளக்கினார். இந்திய தத்துவமுறைகளை மேற்குலகிற்கு காட்டுவதற்கான் பெருமுயற்சி அதில் தெரிந்தது. மேற்குடன் ஒப்பிட்டு பேசுதல் என்பதில் அவர் அதிகம் கவனம் செலுத்தியதால் இந்திய தத்துவத்தின் ஒரிஜினல் டெக்ஸ்ட்  அர்த்தத்திலிருந்து விலகி சென்றுவிட்டார் என்கிற விமர்சனமும் வந்தது.
அவர் இந்து தத்துவம் என சொல்லாமல் இந்திய தத்துவம் எனப்பேசினார். அதே நேரத்தில் சங்கரரின் அத்வைதத்திற்கு இணையான மேற்கு தத்துவம் ஏதுமில்லை என்பதில் உறுதியாக நின்றார். ராதாகிருஷ்ணனைப் படித்த டி எஸ் எலியட்  their subtleties make most of the great European philosophers look like  schoolboys  என அய்ரோப்பிய தத்துவ ஆசிரியர்களை கேலி செய்தார். நமது பண்டைய அடிப்படைகளை மறுகட்டுமானம் செய்வதும் புதியனவற்றின் செல்வாக்கிற்கு உட்படுவதும் தேவைப்படுகின்றன. நமது மரபில் ஏதுமில்லை என்பது அறியாமை, அதில் மட்டுமே அனைத்தும் உள்ளன என்பது மற்றவை பற்றிய அறியாமை.. தனது சிறந்தவற்றுடன் பிற சிறந்தவைகளை இணைத்துக்கொள்வதுதான் மேம்பட உதவும் வழியாகும்.  Radhakrishnan rescued the country's intellectual tradition from mistreatment by inexpert Western enthusiasts and ignorant Indian pedants...  என மதிப்பிடுகிறார் கோபால்.
அவருக்கு வெளிஉலக சிந்தனைகள் தெரிந்ததால் அதன் வெளிச்சத்தில் இந்திய தத்துவமரபை பார்க்க முடிந்தது. மனித இயல்பு எனும் விரிவில் இந்திய மனதை அதன் சிந்தனை ஆதாரங்களை அடுக்குவது மட்டுமல்ல- விளக்குவது, வெளிப்படுத்துவது எனது குறிக்கோளாக இருந்தது என்றார். உலக ஆன்ம விழிப்புணர்விற்கு இந்திய சிந்தனை உதவாது என்பதை மாற்றவேண்டியிருந்தது என எழுதினார் ராதாகிருஷ்ணன். வாழ்க்கை எனும் விளையாட்டில் உங்களால் தேர்ந்தெடுக்கமுடியாத சீட்டுகள் வருகின்றன. அவை கர்ம பலன்கள்.  தோல்வியும் வெற்றியும் அவ்வாட்டத்தில் வருகின்றன. விளையாட்டில் சுதந்திரம் இருக்கிறது என ராதாகிருஷ்ணன் சொல்வார். சீட்டுக்கட்டுகள் கலைக்கப்பட்டவிதம் குறித்து வருத்தம் இருந்தாலும் ஆட்டம் ரசிப்புக்குரியதே என்பார்.
அமெரிக்க உரை ஒன்றில் அவர் இந்தியாவின் சாதிமுறையை அங்கு நிலவிய வேலை அதற்கான மனிதர்களை ஒப்பிட்டு பேசினார். நியுயார்க்கில் பெரும்பாலான போலீஸ்காரர்கள் அய்ரிஷ், தெருக்கூட்டிகள் இத்தாலியர், துரித உணவு கடைகள் கிரேக்கர், குறு மற்றும் ஏவல் வேலைகளில் கறுப்பரென்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய உரைகள் பின்னர்  The Hindu View of Life  என வெளியானது. வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் அப்புத்தகம் புகழ்பெறத்துவங்கியது. சிறையில் ஜவஹர் இருமுறை அதைப்படித்துவிட்டு நண்பர்களுக்கு பரிந்துரைத்தார். பிரதமர் ஆன பின்னர் கூட சிலநேரங்களில் மேற்கோள் காட்டினார்.. சாதி குறித்த அவரது கருத்துக்களை சமுகவியலாளர்கள் மறுக்கக்கூடும் என்கிறார் கோபால். 1940களில் அவர் சாதிவேறுபாடுகளை விமர்சன பார்வையுடன் பேசினார். விடுதலைக்கு பின்னர் அவர் நான்கு வர்ணம் பிறப்பினால் அல்ல செய்யும் தொழில்களால் எனப் பேசத்துவங்கினார்.
அவர் லண்டனில் இந்துமத தத்துவ அம்சங்கள் குறித்து உரைகள் தந்தார்.  சி இ எம் ஜோட் உட்பட பலர் பங்கேற்றனர். லண்டனில் சியாமா பிரசாத் முகர்ஜி சட்டம் படித்துக்கொண்டிருந்தார். அவர் ராதாகிருஷ்ணனிடம் பழகினார். தொடர்ந்த நண்பர்களாக அவர்கள் இருந்தனர். ஹால்டேன், ரஸ்ஸல் , பால்போர், மோர்ர், கீன்ஸ், டிக்கின்சன் ஆகியோருடன் விருந்து உரையாடல்கள் நடந்தன. உலக தத்துவ மாநாடு ஹார்வார்டில் உரையாற்ற ராதாகிருஷ்ணன் அழைக்கப்பட்டார். அங்கு அவர்  Gilson, Dewey, Groce  ஆகியவர்களுடன் நாகரீகத்தின் வரலாற்றில் தத்துவங்களின் பங்களிப்பு குறித்து உரைநிகழ்த்தினார். Every civilisation needed a metaphysic, its own synoptic vision of reality; a civilisation was a philosophy concretised. Any system of philosophy, if it were to adequate and alive, had to be relevant to the problems of the day  என பேசினார். அவர் கையில் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசுவதில்லை. அவர் பேசத்துவங்கிவிட்டால் தத்துவ வளமும் மொழிவளமும் கேட்பவர்களை மெய்மறக்க செய்துவிடும் என்கிறார் கோபால்.


பண்டைய சிந்தனைகளுடனும் புதிய சிந்தனையாளர்களுடனும் இந்தியா பயணிக்க துவங்கியது. வழக்கொழிந்த வறட்டுத்தனங்களால் புதிய சமுகத்தை கட்டி எழுப்பிட முடியாது. தேசப்பெருமிதமும் பக்தியும் உருவாக்கும் கல்விமுறை குறித்து தலைவர்கள் பேசினர். பல்கலைக் கழகங்கள் இந்திய கலாச்சாரம் பற்றி ஏதும் அறியாதவைகளாக இருந்தன. கல்வியை அரசிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் விடுவிக்கவேண்டும் என்கிற சிந்தனையும் எழுந்தது. சுயமரியாதையை உருவாக்காத சுதந்திர மனிதர்களாக வேண்டிய தவிப்பை உருவாக்காமல் அந்நிய நாட்டுக்கு பணி செய்திடும் கருவிகளாக இந்தியர்களை உருவாக்கும் கல்விமுறையை ராதாகிருஷ்ணன் சாடத்துவங்கினார். இந்திய வராலாறை வெறும் தோல்விகளின் வரலாறாக சித்தரிப்பதை அவர் கண்டித்தார். இந்திய சிந்தனை முறைப்பற்றி விமர்சனபூர்வ ஆய்வற்று எழுச்சிபுரிதல்கள் மட்டும் போதாது   The living faith of the dead has become the dead faith of living என்றார்.

No comments:

Post a Comment