https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, October 2, 2022

நேரு- சுபாஷ்- லாலாஜி குறித்து பகத்சிங்

 

நேரு- சுபாஷ்- லாலாஜி குறித்து பகத்சிங்



பஞ்சாபி மொழியில் ஜூலை 1928ல் Kirti பத்திரிகையில் New Leaders and their Different Ideas  என பகத்சிங் எழுதிய கட்டுரையில் அவரது கருத்துக்கள் கிடைக்கின்றன.  1928களில் செல்வாக்குடன் காங்கிரஸ் பழைய தலைவர்களை விஞ்சி வெளித்தெரியத் துவங்கிய இரு முக்கிய தலைவர்களை பஞ்சாப் இளைஞர்களுக்கு சரியாக அறிமுகப்படுத்தவேண்டிய பொறுப்பை பகத்சிங் எடுத்துக்கொண்டிருப்பதை இக்கட்டுரையில் காணமுடியும்.

இந்தியாவில் புதிய தலைவர்கள் புதிய சிந்தனைகளுடன் வந்துள்ளார்கள். தேசபக்தர்கள் கண்களில் நன்றாகவே அவர்கள் தெரியத்துவங்கியுள்ளனர். வங்கத்தின் மரியாதைக்குரிய சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மரியாதைக்குரிய பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகிய இருவரும் இவ்வாறு முன்வந்துள்ள தலைவர்கள். இவர்கள் இருவரும்தான் இளைஞர் இயக்கங்களுடன் நிற்கிறார்கள். ஹிந்துஸ்தான் விடுதலை என்பதற்காக நிற்கிறார்கள். விவரம் அறிந்த புத்தி தெளிந்த உண்மையான தேசபக்தர்களாக இருவரும் காட்சியளிக்கின்றனர். அவர்களின் சிந்தனையில் வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. ஒருவர் பாரத் எனும் பழமை வாய்ந்த கலாச்சாரத்தின் அவசியம் பற்றி பேசுபவர். மற்றொருவர் மேற்கின் மாணவர். ஒருவர் அமைதியான குரலில் பேசிவரும் கனவான். மற்றவர் புரட்சிகரமாக பேசிவருபவர்.

இவர்களுடன் சாது வாஸ்வனி என்பாரும் அதிக அறிமுகமில்லாதவர் என்றாலும் பாரத் யுவ சங்கம் மூலம் ஏராள இளைஞர்களை ஈர்த்து வருகிறார். அவர் ஆர்ய சமாஜிகள் போல வேதத்திற்கு திரும்புக என்கிறார். இளம் கூட்டம் அவருடன் செல்கிறது. வாஸ்வனியும் பேசுகிறார்- நமது இளைஞர்கள் மாஜினி, வால்டேர் இலட்சியங்கள் நோக்கி செல்கிறார்கள். டால்ஸ்டாய், லெனின் என தெரிந்துகொள்கிறார்கள். இங்கே நம்மிடையே பழம்பெரு ரிஷிகளிடம் உயர் இலட்சியங்கள் குடிகொண்டிருந்தன. அவைகளை கற்கவேண்டும் என்கிறார்.. நமக்கு சக்தி தேவை என கவித்துவமாக அவர் பேசிவருகிறார். பாரதமாதாவின் விடுதலை எவரும் தள்ளிப்போடமுடியாதென்கிறார். அந்த ரிஷிகளின் கரம்பற்றி ஹிந்துஸ்தான் எனும் புனிதம் எழட்டும் என்கிறார். தாய்நாடு என தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால் அதே நேரத்தில் இந்தியா போல்ஷ்விக் எனும் வர்க்கப்போராட்ட திசையில் சென்றுவிடக்கூடதென்றும் சொல்கிறார். இவையெல்லாம் இளைஞர்களிடம் செல்வாக்கை செலுத்துகின்றன.

சரி இனி சுபாஷிடம் வரலாம். அவரை புரட்சியாளராக பிரிட்டிஷ் பார்ப்பதால்தான் அவரை தனிமை சிறையில் அடைத்தது.. அவர் முழுவிடுதலை என பேசுபவர். நேரு மோதிலால் அவர்களின் மகன். பாரிஸ்டர். படித்தவர். ருஷ்யா சென்று வந்தவர். அவரும் சுபாஷ் போல தீவிர குழுவாளர். முழுவிடுதலை தீர்மானத்தை சென்னை கூட்டத்தில் நிறைவேற்றியவர்.

பம்பாய் கூட்டம் ஒன்றில் நேரு தலைமையில் சுபாஷ் உரையாற்றினார். அவர்  emotional Bengali. நாட்டின் ஆன்மீகத்தன்மையை சொன்னார். வேதத்திற்கு திரும்புவது பற்றியும் பேசினார். புனாவில் பேசும்போது தேசியம் பிற்போக்கானது என சில சர்வதேசியவாதிகள் பேசுவது தவறென்றார். இந்துஸ்தானி தேசியம் என்பது வேறுவகையானதென்றார். அது குறுகிய மனம் கொண்டதல்ல. அதன் அடிப்படை சத்யம் சிவம் சுந்தரம் என்றார். இப்படி சுபாஷ் பேசுவதுஎமோஷனல் ரொமாண்டிசம்’. அவரைப் பொறுத்தவரை குடியரசு ஜனநாயகம் என்பதெல்லாம் இந்துஸ்தானின் பழைய கருத்தாங்கங்களாம்.. கம்யூனிசம் கூட இந்துஸ்தானுக்கு புதியதில்லையாம்.

நேரு முற்றிலும் மாறாக பதிலை தந்தார்.  எனது நாட்டிற்கான தனிச்சிறப்பு ஏதுமில்லை. சுபாஷ் பாபுவிற்கு அதில் நம்பிக்கை இருக்கிறதென்றார். என்னைப்பொறுத்தவரை அது வேதமானாலும் குரான் ஆனாலும் பொருந்தாதவை இருந்தால் அவற்றை விட்டுவிடவேண்டும் என்றார் நேரு.

ஒருவர் நமது மரபு சிறந்தது என்றார். மற்றவர் அதை எதிர்த்து கலகம் என்றார். ஒருவர் எமோஷனல் ஆக உரையாற்றுகிறார். நேரு புரட்சிகரமாக கலகம் பற்றி பேசுகிறார். நேரு மேலும் தெளிவு படுத்தினார். பல நூற்றாண்டு பெருமை எனப்பேசி அதை நோக்கி போகமுடியாது. அப்படியெனில் உலக கற்பனை வளமற்று தேங்கிப்போகும். அதனால்தான் அவருக்கு புரட்சிகர சிந்தனை தேவைப்படுகிறது போலும்.

இருவரும் முழுவிடுதலை என்றே சொல்கின்றனர். ஒருவர் கிழக்கு எனப்பேசி சொல்கிறார். நேரு நமக்கான விதிகள் சிஸ்டம் உருவாக்குவோம் என்கிறார். . சுபாஷ் தொழிலாளர் முன்னேற்றம் பற்றி நினைக்கிறார். பண்டிட்ஜி புரட்சிகர மாறுதலுடன் புதிய சிஸ்டம் என்கிறார். சுபாஷ் சென்சிட்டிவ். அவர் இதயத்துடன் நிற்கிறார். ஆனால் நேரு இதயத்துடன் தலையை இணைக்கிறார். சோசலிசம் சார்ந்த மக்கள் விடுதலை என்கிறார். இந்துஸ்தானுக்கு உதவத்தகுந்த அளவில் உலக அரசியலை சுபாஷ் பேசினால், நேரு எந்த குறுகிய தேசியம் என அடைப்பட்டுக்கொள்ளாமல் உலகம் சுற்றி அறியக்கூடியவராக இருக்கிறார்.

எப்பக்கம் செல்வது? பஞ்சாப் பத்திரிகை ஒன்று சுபாஷை வாழ்த்தி, நேரு போன்ற புரட்சி பேசுபவர்கள் சுவரில் முட்டி சாவார்கள் எனச் சொல்கிறது. பஞ்சாபியர்கள் எமோஷனலாக இருப்பவர்கள் என்பதை நாம் அறிவோம். சுபாஷ் தருவதில் இதயத்திற்கான உணவு கிடைக்கலாம். ஆனால்  mental stimulus  கிடைக்கவில்லை. நேருவிடம் இதயமும் மூளைத்தூண்டலும் ஒருங்கே கிடைக்கிறது. அதற்காக நேருவை கண்மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பஞ்சாபிய இளைஞர்கள் அவரின் புரட்சிகர சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இந்துஸ்தானுக்கு தேவையான புரட்சிகர சிந்தனைகள் அவை. சரியாக உள்வாங்கிக்கொண்டு சில நேரங்களில் ஏமாற்றங்கள் அவநம்பிக்கை வந்தாலும் சமாளித்து அவைகளை களைந்து உலகை இளைஞர்கள் சந்திக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களால்தான் புரட்சி வெற்றிபெறும்.

லாலாஜியும் இளைஞர்களும் என்கிற கட்டுரை ஒன்றையும் பகத்சிங் எழுதியுள்ளார். 1928ல் பஞ்சாபியில் எழுதப்பட்ட கட்டுரை. அது லாலாஜி மீதான மதிப்பீடாகவும் விமர்சனமாகவும் இருக்கிறது.

லாலாஜி ஆரம்பத்திலிருந்தே  சில காரணங்களால் இளைஞர் இயக்கங்களுக்கு எதிராகவே இருக்கிறார்.. லாலாஜி இத்தாலியின் மாஜினியால் கவரப்பட்டவர். மாஜினியோ இளைஞர்களை முழுமையாக விடுதலைப்போருக்கு தயாரித்தவர். எப்படி இந்த வேறுபாடு. 1907-08க்கே போகவேண்டாம். இப்போது பார்த்தாலே போதும். கடந்த கவுன்சில் தேர்தலில் லாலாஜி காங்கிரசை கைவிட்டார். சில  இளைஞர்கள் இதை ஆட்சேபித்தனர். ஆனால் இதற்கு பதில் அளித்த லாலாஜியோ இந்த இளைஞர்கள் ஆபத்தானவர்கள்- புரட்சிக்கு ஆதரவாளர்கள்- அதற்கு லெனின் போல் தலைமை வேண்டும் என நினைப்பவர்கள் என விமர்சித்தார். என்னால் லெனின் போல் ஆகமுடியாதப்பா- இந்த இளைஞர்களுக்கு ரூ 50க்கு வேலை கிடைத்தால் போய்விடுவார்கள் எனவும் அவர் தனது உரையில் பேசினார்.

லெனின் இப்படிப்பட்ட பணத்திற்கு போகும் இளைஞர்களையா வைத்திருந்தார்? லாலாஜி என்ன செய்துள்ளார்- ஒரு பக்கம் அரசாங்கம்  இந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவியுள்ளார். மறுபக்கம் பொதுவெளியில் குறைவான மதிப்பீட்டை தந்துள்ளார்.

பிற மனிதரின் செயல் சிந்தனைகளைப் பற்றி நல்ல உணர்வுடன் ஒருவர் விமர்சனம் செய்யலாம். ஆனால் திசைதிருப்பி ஒருவருக்கு கெடுதல் செய்யும் நோக்கத்துடன் செய்யக்கூடாது. அது லாலாஜியானாலும் வேறு இளைஞனானாலும் பொருந்தும். லாலாஜி தான் எழுதிய கட்டுரையில் மண்டைச் சூடு நிறைந்த இந்த இளைஞர்களிடம் ஜாக்கிரதையாக மக்கள் இருக்கவேண்டும் என எழுதியுள்ளார். அவர்கள் புரட்சி எனப் பேசி சொத்துக்களுக்கு ஆபத்தை பொதுவெளியில் முன்வைக்கிறார்கள். அவர்கள் கம்யூனிச சிந்தனைகளை பிரச்சாரம் செய்வதால் தேசிய இயக்கத்திற்கு குந்தகம் செய்கிறார்கள். இதன் மூலம் வர்க்கப்போர்தான் மிஞ்சும். இவையெல்லாம் சில அந்நிய சக்திகளின் தூண்டுதல் எனவும் லாலாஜி எழுதுகிறார்.

இந்த சக்திகள் தேசிய இயக்கத்தில் பிளவை உருவாக்குகிறார்கள். இப்படி பிரச்சாரம் செய்வதால் சொத்து படைத்தவர்கள் பிரிட்டிஷ் அரசின் பக்கம் போய் நின்றுவிடும் ஆபத்தும் இருக்கிறது. தவறாக பேராசையுடன் வழிகாட்டப்பட்ட இளைஞர்கள் என்று விமர்சித்த லாலாஜி நேரு மீது தனக்கு நம்பிக்கையிருப்பதாக தெரிவிக்கிறார். அற்புதம். நேருவின் சிந்தனைகளோ ருஷ்யாவின் செல்வாக்கால் தீட்டப்பட்டவை. அங்கிருந்து திரும்பிய பின்னர் அதை நேரு பிரச்சாரம் செய்தார். அவர் நோக்கத்தில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அவர் என்ன அந்நிய சக்திகளின் மொழியிலா பேசுகிறார்?. நேருவின் கெளரவம் இதனால் மிக உயர்ந்து இருக்கிறது. அவர் விரைவில் காங்கிரஸ் தலைவராகவும் ஆவார்.. இதனால் அவரை எதிர்த்து எழுதமுடியாமல் இளைஞர்கள் குறித்து எப்படி வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். லாலாஜி அவருக்கு விருப்பமானதை செய்யட்டும்.

 சிலவற்றை லாலாஜிக்கு தெளிவு படுத்தவேண்டும். எங்களை எந்த வெளிநாட்டு சக்தியும் தவறாக நடத்தவில்லை. சொந்த நாட்டின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில்தான் அவர்கள் புரட்சிகரமாக இயங்குகின்றனர். லாலாஜி சிறந்த மனிதர். ஆனால் அவர் முதல் வகுப்பில் செல்பவர். மூன்றாம் வகுப்பில் செல்பவர்கள் பற்றி அவருக்கு தெரியாது. அவர் கிராமங்களுக்கும் தனது நண்பர்களுடன் சிரித்து பேசி வசதியாக மோட்டார் காரில் செல்பவர். ஆனால் ஆயிரக்கணக்கானவர் எப்படி வாழ்கிறார்கள்? Unhappy India  எழுதியவரிடம் கோடிக்கணக்கானவர்களின் படுமோசமான வாழ்க்கை குறித்து சொல்வோமா. வியர்வை சிந்த உழைத்தும் பட்டினியால் கோடிக்கணக்கில்.. அவர்களிடம் வெளியிலிருந்து வந்து வயிறு நிரப்ப வழிகளை சொல்ல வேண்டுமா?

வயல்களில் பாடுபட்டும் விவசாயி கடனில் மூழ்குகிறார். இது நம்மை கோபமூட்டாதா? இதற்கு வெளியிலிருந்து ஒருவர் வந்து நமக்கு சொல்லவேண்டுமா? இந்த பொருளாதார ஏற்பாட்டின் கேடுகளை நாம் சொல்ல வேண்டாமா? குற்றமும் கேடுகளும் மலிந்த நிலையில் புரட்சி வேண்டும் என சொல்ல வெளியிலிருந்து நமக்கு யாராவது வரவேண்டுமா என்ன?

இந்த மக்களால் நமக்கும் உலகத்திற்கும் செல்வ வளத்தை உருவாக்க முடியும்? ஏன் நாம் அவர்களை சுமையாக கருதவேண்டும்? சமூக பொருளாதார மாற்றத்திற்காக புரட்சி வேண்டாமா? நம்மிடமே இரக்க மானுட உணர்வு இல்லையா? ருஷ்ய புரட்சி புதிய மாதிரியை தந்துள்ளது என்பது உண்மை. நாம் நம்மிடம் இருக்கிற பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள ருஷ்ய அறிவாளிகள் உலகம் முன் வைத்துள்ள சிந்தனை பயன்படும் என்றால் எடுத்துக்கொள்ளக் கூடாதா? ஏற்புடைய ஒத்த சிந்தனைகளை தூண்டிவிடல் எனச் சொல்லலாமா? அப்படியெனில் மாஜினி லாலாஜியை தவறாக வழிநடத்திவிட்டாரா? பிரஞ்சு புரட்சி, ருஷ்ய புரட்சி போன்றவைகளிலிருந்து நமது இலட்சியத்தை உருவாக்கிக் கொள்கிறோம். லாலாஜி பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய பணக்காரர்களிடம் விடுதலையை வாங்கித் தரப் போகிறாரா? 400 ஆண்டுகள் பசி பட்டினியுடன் இரத்தம் சிந்தி போராடிவிட்டு மீண்டும் முதலாளிகளுடன் போராடும் நிலை மோசமானது.

லாலாஜி போன்றவர்கள் சொல்கிறார்கள் நாம் சோசலிச இலட்சியம் பேசுவதால் முதலாளிகள் அரசாங்கம் பக்கம் நிற்பார்கள் என்று. ஆஹா இப்போ மட்டும் அவர்கள் எங்கே நிற்கிறார்கள்? தங்கள் சொத்திற்கு புரட்சியால் ஆபத்து என்று நினைப்பவர்கள் அஞ்சுவார்கள். எத்தனை முதலாளிகள் மாற்றத்தை வரவேற்பார்கள்? பிரிட்டிஷார் அவர்களுடன் நின்றாலும் தங்கள் நாட்டு முதலாளிகளுக்கு இவர்களிடமிருந்து மாற்றித்தரவே நினைப்பார்கள். எனவே புரட்சிதான் இந்துஸ்தான் முதலாளிகளுக்கும் எதிர்கால நிம்மதியைத் தரும். முதலாளிகள் வரவேண்டும் என தொழிலாளர் புரட்சிக்காக காத்திருக்கவும் முடியாது. இளைஞர்கள் இதற்காக கவலைப்படவேண்டாம்.

லாலாஜி போன்றவர்கள் முதலாளித்துவ மதிப்புகளை வைத்துக்கொண்டு பீல்டிலிருந்து வெளியேறிவிட்டனர். முன்பே  சுரேந்திர பானர்ஜி வெளியேறிவிட்டார்.  சாப்ரு சிந்தாமணி அதை இப்போது செய்து வருகின்றனர்.. ஆனால் இறுதியில் தொழிலாளர் புரட்சிதான் வெற்றிகரமாக எழும். சோசலிஸ்ட்களுக்கு வெற்றி கிடைக்கட்டும். புரட்சி நீடுழி வாழட்டும்!

மூத்த தலைவர் லாலாஜியின் சிந்தனை நடைமுறையுடன் பகத்சிங் நடத்திய மேம்பட்ட உரையாடலாக இக்கட்டுரை இருப்பதை உணரமுடியும்

 

No comments:

Post a Comment