Skip to main content

இந்திராணி ஜெகஜீவன்ராம்

 

 

 

இந்திராணி ஜெகஜீவன்ராம்

 


சுயசரிதைகள் சுவையானதாகவும் செய்திகளைத் தரக்கூடியதாகவும் இருக்கும்.  சில நேரம் நல்ல அனுபவமாக இருக்கிறதே எனக்கூடத் தோன்றும். அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் மனோபாவம் இருக்கத்தானே செய்கிறது.

திருமதி இந்திராணி ஜெகஜீவன்ராம் தன் வரலாறு நினைவுக் குறிப்புகள் ஆங்கிலத்தில் Milestones என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. வந்து மாமாங்கம் ஆகிறது. இந்தியில் 1990களில் மூன்று வால்யூம்களாக அவை இந்தியர்களுக்கு கிடைக்கப்பெற்றன. ஆங்கிலத்தில் 300 பக்கங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது . பெங்குவின் இந்தியா கொணர்ந்துள்ளனர்.  மகள் புகழ்வாய்ந்த மீராகுமார்  சிறிய முன்னுரை எழுதியுள்ளார்.

1946 லிருந்து மிக உயர்ந்த அதிகார ஆட்சிமுறை வீட்டின் பெண்மணி என்கிற வகையில் இந்திய அரசியலின் நுணுக்கங்களை- அதன் மேடு பள்ளங்களை நன்கு அறிந்தவராகவே இந்திராணி அம்மையார் இருந்திருப்பார்.  எதைச் சொல்லலாம் - கூடாது என்பதில் அவருக்குள் போராட்டம் நடந்திருக்கும்.

பாபுஜி என அழக்கப்பட்ட ஜெகஜீவன் வாழ்க்கையில் சக தோழியாக, இந்திய விடுதலைப் போரின் கட்டங்கள், காந்தி படுகொலை, ஜெகஜீவன் பல்வேறு துறை அமைச்சர் அனுபவங்கள், பாகிஸ்தான் மற்றும் சீன போர், நேருவின் மறைவு என பல்வேறு விஷயங்களை இந்திராணி தன் நினைவுகளிலிருந்து பேசுகிறார். ஜெகஜீவன் மறைந்த பின்னர் 15 ஆண்டுகள் வாழ்ந்து தனது 91 ஆம் வயதில் வாழ்வை நீத்தவர் இந்திராணி.

அவரது வாழ்வின் இளம் பகுதியிலிருந்து

1900த்தின் ஆரம்ப ஆண்டுகளின் சாதிய ஏற்றத்தாழ்வின் வெம்மையை உணர்ந்தே இந்திராணியின் கல்வி வாழ்க்கை கடந்தது.   1850 களின் காலத்திய தந்தையார் பீர்பால்தாஸ் - பிரிட்டிஷ் ஆசிரியர் மற்றும் இங்கிருந்த சில நல்லாசிரியர்கள் துணையுடன் கல்விக்கூடம் நுழைந்ததுடன் இராணுவ  டாக்டரின் உதவியுடன் மருத்துவம் தேர்ச்சி பெற்று கான்பூரில் டாக்டர் தொழிலை நடத்தலானார். ஆரம்பத்தில் பிரிட்டிஷ் இராணுவ மருத்துவராக இருந்த அனுபவம் உதவியது.

துசியாஸ் ( dhusias ) என்கிற துணைச்சாதி ஒன்றில் பிறந்த பூர்வீக குடும்பமது. துசியாஸ் பொதுவாக தோல் தொழில்,  விவசாயக் கூலிகளாக இருந்தனர். பீர்பால்  கல்வியின் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்தினார். பெண்களை கல்வி கற்க அனுப்பினார். வீட்டில் உருது சமஸ்கிருதம் கற்க வைத்தார்.  பெண் குழந்தைகள் காயத்ரி சொல்லின. ஆரிய சமாஜம் பீர்பாலை அரவணைத்தது. பீர்பால் அவ்வூரின் அனாதை குழந்தைகளுக்கென தனி விடுதி உருவாக்கி , கல்வி கற்க வைத்தார். அனாதையான பிராமண, சத்திரிய குடும்ப குழந்தைகள், பீர்பால் வீட்டு குழந்தைகளுடன் தங்க வைக்கப்பட்டனர்.

டிஸ்பென்சரியிலிருந்து பீர்பால் இரவு 9 மணிக்கு வரும்போது, அனைத்து குழந்தைகளுக்கும் தினம் பழங்கள் கிடைக்கும்.

கான்பூரில் இந்திராணி சாதி அறிந்த அந்த பலிகா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி சேர்க்க மறுத்தபோது, லக்னோ பள்ளியில் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர். இந்திராணி உட்பட மாணவிகளுக்கு பிராமண சமையல் அம்மாவும், பாத்திரம் சுத்தம் செய்ய சாதி இந்து அம்மாவும் இருந்தனர். இந்திராணி சாதி தெரிந்தவுடன் அவர் தட்டை சுத்தம் செய்ய முடியாது என்ற நிலை உருவானது. சக மாணவிகள் உடன் அமர்ந்து உணவு எடுத்துக்கொள்ள மறுத்தனர்.

ஆங்கிலோ இந்திய வார்டன் மாது இந்திராணி பக்கம் நின்றார். பின்னர் நிலைமைகள் சரியாகி, பிராமண பெண்கள் நல்ல தோழிகளாகினர். இந்திராணி உடல் நலம் பாதித்த போது, அவளுக்கு பதில் என்னை எடுத்துக்கொள் கடவுளே என வேண்டும் அளவிற்கு நட்பின் ஆழம் சென்றது.

பீர்பால் ஏராளம் சம்பாதித்தார். பல முதலீடுகள் நட்டமாயின.  மகனுக்கு கொடுத்த நிதிகளும் முடங்கி , 70 ஆம் வயதுகளில் பணம் இல்லாமல் குடும்பம் கஷ்டத்திற்கு உள்ளானது. அம்மா சைதன்ய தேவி சமாளித்தார். மூத்த பெண் மட்டுமே திருமணமான நிலை.  அண்ணன், அப்பா, அம்மா  என இறப்புகள் நேர அக்கா மற்றும் அவரது கணவரின் பராமரிப்பில் இந்திராணி வந்தார். ஆசிரியப்பணி கிட்டியதால் குடும்பத்தை சமாளிக்க முடிந்தது.

மற்றொரு சகோதரி பாரத்தை நீக்க கொடுமைக்கார குடும்பம் ஒன்றில் தன்னை ஒப்படைப்பு செய்துகொண்டார். இச்சூழலில்தான், காங்கிரஸ் முழுநேர ஊழியர் ஜெகஜீவன் ராமை இந்திராணிக்கு பார்க்கலாம் என உறவுக்காரர் சொல்லி திருமண பேச்சுவார்த்தை நடந்தது.

சந்த்வா கிராமம் போகவேண்டுமெனில் காலையில் இரயில் ஏறினால் மாலையில் போகலாம். நகைநட்டு போட்டு திருமண பழக்கம் இல்லை என ஜெகஜீவன் குடும்பத்தார் தெரிவித்தனர். மாப்பிள்ளை கல்வித்தகுதி என்ன என இந்திராணி குடும்பம் கேட்டது. அதற்கு ஜெகஜீவன் நான் வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை. பயோடேட்டா எதற்கு என்றாராம். ஒரு வழியாக திருமணம் ஜூன் 1, 1935 ல் நடந்து புதிய உலகத்திற்கு , கிராமத்திற்கு  நகர வாழ்க்கையின் இந்திராணி வந்து சேர்கிறார். குடும்பத்தார் அன்புடன் நடத்துகின்றனர்.

கொந்தளிப்பான அரசியல் சூழல்களில் ஈடுபட்ட கணவனுடன் இந்திராணி எப்படி சக பயணியாக வாழ்ந்தார் என்பதை வாய்ப்பு உள்ளபோது அடுத்து பார்க்கலாம்..  (nov 25 2023)

 

2.

Milestones-இந்திராணி ஜெகஜீவன்ராம்

திருமதி இந்திராணி அம்மையார் தனது வாழ்க்கை குறித்த நினைவுக்குறிப்புகளில் இந்திய விடுதலைபோராட்டக் காலத்தின் சில கட்டங்களையும் சொல்லியே நகர்கிறார். 

ஜெகஜீவன் கல்விச் சூழலில் தீண்டாமை எதிர்த்து போராடியது, ரவிதாஸ் இயக்கம் தொடங்கி இளைஞர்களை அணிதிரட்டியது, இந்து மகாசபை மாநாடுகளில் தலித் மக்களின் நலனுக்கான தீர்மானங்களை கொணர்வது , முனிசிபல் மற்றும் 1935 சட்டப்படியான தேர்தல்களில்  பாபு ஜெகஜீவன் பங்கேற்றது குறித்து இந்திராணி சொல்லிச் செல்கிறார்.

ஜெகஜீவன் குடும்பத்தில் தாயாரும் அண்ணிமாரும் துளசிதாசர் பஜன்களை ஊராருடன் பாடுவது, பக்தி மார்க்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

வட்டமேஜை மாநாடு துவங்கி 1937 காங்கிரஸ் வெற்றி -அமைச்சரவை காலத்தில் அவர் பதிவு செய்த மூன்று முக்கிய அம்சங்களை இங்கு தந்துள்ளேன். காந்தியுடன் பிரசாத் வழியாக பயணித்தல், காந்தியுடன் வேறுபாட்டை சொல்தல், அம்பேத்கருடன் முரண்படுதல் அவரை சந்தித்து இணக்கமாதல், பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணங்குவதா முரண்படுவதா போன்ற அம்சங்களில் இந்திராணி பதிவை தந்துள்ளேன்.

 பிரிட்டிஷ் பிரதமராக இருந்த ராம்சே கொடுத்த 1932 கம்யூனல் அவார்ட், அதில் தனித்தொகுதி என்பது  depressed class பகுதியை இந்துக்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதற்கான காரணங்களைச் சொல்லி காந்தியின் உண்ணாவிரதம், புனே உடன்பாடு ஆகியவற்றை இந்திராணி சொல்கிறார். அவர் தன் பதிவை கீழ்கண்டவாறு தந்துள்ளார்.

The British backed him ( dr Ambedkar) against Gandhi in order to spread disunity in the nationalist movement, but the general public was highly agitated. Gandhiji was a symbol of freedom for the common man.

அடுத்து ஜெகஜீவன் அறிக்கை ஒன்றை சுட்டும் பதிவு

The All India Dalit Varga Sangh had gained prominence as a representative of Harijan body. Dr Ambedkar felt that it had become a challenge to his leadership.Jagajivan said that it is sad that a brilliant person like Dr Ambedkar is separating from Dalit varga movement, but we are happy that Hindu society will not be divided.

ஜெகஜீவன் புனேயிலிருந்து பம்பாய்க்கு அம்பேத்கரை பார்க்கப்போனார். பரஸ்பர மரியாதையுடன் உரையாடல் இருந்தாலும், இந்து மதத்திலிருந்து மாறவேண்டிய அவசியத்தை அம்பேத்கர் வலியுறுத்தினார். தலித் பிரச்சனைகளை மதமாற்றத்தால் தீர்க்கமுடியாது என்கிற தன் முடிவை ஜெகஜீவன் தெரிவித்து திரும்பியதாக இந்திராணி எழுதியுள்ளார் ( பக் 51)

இங்கு இந்திராணி எழுதியிருக்கும் மற்றொரு வரி

 Dr Ambedkar’s call for conversion made him the centre of attraction in the entire Indian social set up. (nov 29 2023)

3.

Milestones இந்திராணி ஜெகஜீவன்ராமின் நினைவுகள் போன்ற புத்தகங்கள்  விடுதலைக்கு பின்னரான நவீன இந்திய அரசியலின் நுட்பங்களை புரிந்துகொள்வதற்கு பயன்படலாம்.

எதை இந்திராணி போன்றவர் வெளிப்படுத்த முடிகிறது, எங்கு அவர்கள் மெளனமாகி போகின்றனர் என்பதை கவனப்படுத்திக்கொள்ளமுடியும். அடித்தட்டில் சிறு கிராமத்திலிருந்து உயர் அதிகாரம், சொகுசு தோரணைகளுக்கு செல்பவர்களின் பிம்பங்களும்  அவர்கள் உளவியல் பாடுகளும்  இந்நூல் போன்றவற்றில் ஓரளவிற்கு கிடைக்கும்.

இந்திராணி , கணவனே கண்கண்ட தெய்வம்- மாமியாரை மெச்சும் மருமகள் என்ற பிம்பத்தை எனக்குத் தருகிறார். நேரு கால காபினட்டிலிருந்து இந்திரா கால வங்கதேச உதயம் வரையிலான காலம் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ந்த அத்துனை நல்லதிலும் ஜெகஜீவன் பங்கு, பங்கே விதந்து பேசப்பட்டுள்ளது. ஜெகஜீவனுக்கு சோதனை என்றால் அவையெல்லாம் சதிகளாக, பொறாமை பொச்சரிப்புகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெகஜீவன் பீகாரின் கிராமத்திலிருந்து டெல்லியின் உயர் ஆட்சி அதிகாரத்தின் பெருவெளிகளைக் கண்டவர். அரசியலில் விளைந்து நின்றவர். பாபு ராஜேந்திரபிரசாத்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். காங்கிரசின் மேல்தட்டு விவகாரங்களை அவர் மூலம் பார்த்தவர். தொழிலாளர் அமைச்சராக , விவசாய அமைச்சராக, தகவல் தொடர்பு, போக்குவரத்து, ரயில்வே, பாதுகாப்பு என பல்வேறு இலாகாக்களின் நுட்பங்களை அறிந்தவர். சிலநேரம் radical toneகளை வெளிப்படுத்தியவர்.

காமராஜரின் கே பிளானால் ஜெகஜீவன் பழிவாங்கப்பட்டார் என்ற உணர்வை இந்திராணி வெளிப்படுத்தியுள்ளார். நேரு  மறைவிற்கு பின்னர் லால்பகதூர் அமைச்சரவையில் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பெற்ற அதே தொழிலாளர் துறை தரப்பட்டபோது அவரது மனைவி, மகள் மீரா, மகன் சுரேஷ் கோபமடைந்தனர். மொரார்ஜியைவிட தான் சீனியர் என்ற உணர்வு நியாயமாகவே ஜெகஜீவனிடம் இருந்தது.

சிண்டிகேட் இந்திரா காங்கிரஸ் என்கிற பிளவு வந்தபோது, மொரார்ஜியா இந்திராவா என வெளிப்படையாக நிற்காமல் ஜெகஜீவன் இருந்தார் என்கிற சந்தேகம் இருபக்கமும் இருந்தது. இந்திரா சாதுர்யமாக ஜெகஜீவனை இழுத்துவிட்டார் என்பதை இந்திராணி எழுத்துக்கள் காட்டும். குடியரசு தலைவர் தேர்வு குறித்து காங்கிரஸ் கமிட்டி விவாதித்தபோது ஜெகஜீவன் பெயரை இந்திராகாந்தி முன்மொழிந்தார். மொரார்ஜி எதிர்த்ததை இந்திரா சாதகமாக்கிக்கொண்டார். அத்தேர்தலில் வி வி கிரியை வெற்றிபெறவும் வைத்தார். உடைந்த காங்கிரசின் இந்திரா பிரிவின் அகில இந்திய தலைவராக ஜெகஜீவன் ஆக்கப்பட்டார். இந்திரா காங்கிரஸ் என பொதுவாக அறியப்பட்ட ஒன்றை ஜெகஜீவன் காங்கிரஸ் என இந்திராணி எழுதியுள்ளார்.

மாடு கன்று சின்னம் கூட தன் மகன் சுரேஷ் சொல்லி, காங்கிரஸ் சின்னமானதாக இந்திராணி செய்தி தருகிறார். வங்கதேச விடுதலைக்கான - அகதிகள் சமாளிப்பு பெயரிலான யுத்தத்தின் போது ஜெகஜீவன் பாதுகாப்பு அமைச்சர். அந்த வெற்றிக்கு பின்னரான அரசியல் சாதுர்யத்தை தன் கணவர் அற்புதமாக வெளிப்படுத்தியதாக, வங்க விடுதலைக்கு காரணமாக இருந்ததாகவும் இந்திராணி பதிவு சொல்கிறது.

1972 உடன் இந்த ஆங்கில மைல்ஸ்டோன் பதிவை நிறுத்திவிட்டனர். இந்நூலுக்கு முன்னுரை எழுதிய மீராகுமார் கீழ்கண்ட வரிகளை எழுதியுள்ளார்.

The unpublished script, apart from offering insight into other events, also gives an insider’s account of the Emergency and the subsequent events that changed the course of India’s political history. Babuji was keen that Ma’s work be published in English as well

இந்த நூலை படித்தபோது எனக்கு தோன்றிய உணர்வு- ஜெகஜீவனை குடியரசு தலைவராகவோ, பின்னர் ஜனதா காலத்தில் பிரதமராகவோ ஆக்க இந்திய அரசியல் தயங்கிவிட்டதோ என்பதாக அமைந்தது. அவர்  நேரு , ஜாகிர் ஹுசைன் , நாரயணன், அப்துல்கலாம், மன்மோகன் போல்  அறிவுஜீவியாக இல்லாமல் இருந்திருக்கலாம். அரசியல் சாதுர்யத்தில், நடைமுறை சார்ந்த உத்தி முடிவுகள் எடுப்பதில்  அவர் குறைந்தவராக இருந்திருக்கமாட்டார்.  கே ஆர் நாரயணன், அப்துல்கலாம் போன்றவர்களைவிட பெரும் அரசியல் பங்களிப்பை செய்திருந்தும் , அரசியல் உலகம் அவரை குடியரசுதலைவராக்காமல் விட்டது. பிரணாப் விட கூடுதலான அரசியல் பங்களிப்பை அவரிடம் நாம் காணமுடியும்.

சரண் சிங், தேவகெளடா, வி பி சிங், குஜ்ரால், சந்திரசேகர் போன்றவர்கள் வரமுடிந்த பிரதமர் பதவிக்கும், ஜனதா சோதனையில் ஜெகஜீவன் வரமுடியாமல் போனது. அவரிடம் அவர் குடும்பத்தார்களிடம் அதிகார சொகுசு விருப்பார்வங்கள் இருந்திருக்கலாம். அவர் ஒரு போதும் டிக்டேடர் ஆகியிருக்க மாட்டார். விடுதலைக்கால மாண்புகளின் தன்மைகளை, ஜனநாயக பண்புகளை தவறவிட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

ஆங்காங்கே இடைவெளிகளையும்  இட்டு நிரப்ப வேண்டிய தேடல்களையும் இந்த நூல் வரலாற்று மாணவர்களுக்கு வேலைகளாக கொடுத்திருப்பினும் சமகால அரசியலுக்கு , ஜெகஜீவன் வழியாக இந்திராணி அளித்துள்ள பங்களிப்பு என  இந்த மைல்ஸ்டோன் புத்தகத்தைக் கருத முடியும்.

இந்திய அரசியல் உள் விளையாட்டுகள் , பதவிக்கான அரசியல் snake and ladderல் நடைபெறுபவை, பல்வேறு பிரச்சனைகளில் முடிவுகள் எப்படி எவர் தாக்கத்தில் எடுக்கப்படுகின்றன, அவற்றின் பாரதூர விளைவுகள் குறித்து ஏராள புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அப்படி ஒன்றாக பத்திரிகையாளர் நிரஜா செளத்ரி எழுதிய ஒன்று how PM decides விவாதிக்கப்பட்டு வருகிறது. Insiders account என்கிற முடிந்தவரை நேர்மையான பதிவுகள் தான் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் , புரிதலை மேம்படுத்த உதவக்கூடும்.

(dec 13 2023)

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா