https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, February 22, 2017

E M S தோழர் நம்பூதிரிபாட் 3

III  இ எம் எஸ் பகுதி 3
மார்க்சின் ஆசியவகை உற்பத்திமுறை என்ற கருத்துருவில் இந்திய மார்க்சியர்கள் பலர் நின்றாலும், இ எம் எஸ் அதிலிருந்து மெல்ல நகர்ந்துவிட்டதாக பிரபாத் பட்நாயக் தனது  நம்பூதிரிபாட் குறித்த கட்டுரையில் தெரிவிக்கிறார். பண்டைய அய்ரோப்பிய சமுகம் போல் இங்கு அடிமை முறையில்லை என்பதற்கும் அவர் வருகிறார். அதே நேரத்தில் முதல் மூன்று வர்ணங்களும் நான்காவது சூத்திர வர்ணத்தாரை சுரண்டும் வர்க்கங்களாக இருந்தன என குறிப்பிடுகிறார் இ எம் எஸ். “The defeat of oppressed castes at the hands of Brahminic overlordship, of materialism by idealism, constituted the beginning of the fall of India's civilisation and culture, which in the end led to the loss of national independence” என்கிற வரலாற்று பார்வையை அவர் தந்தார்..  . செவ்வியல் முதலாளித்துவம் போல் அல்லாமல் இந்தியாவில் முதலாளித்துவம் கட்டவிரும்பிய அவ்வர்க்கம் வரலாற்றில் தாமதமாகவே நுழைந்தது. நிலபிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டே முதலாளித்துவ உறவுகளை சூப்பர் இம்போஸ் செய்தது என இ எம் எஸ் குறிப்பிடுகிறார். இங்கு ஏவுகணை விடும்போதும் பூஜை நடத்திதான் விடுவார்கள் என கேலி பேசினார். நில சொத்து உறவுகள், சாதி- வர்க்கம் பற்றி தோழர் இ எ ம் எஸ் ஆய்வுகளை தந்தார். 1957 முதல்வராக இருந்தபோது நிர்வாக சீரமைப்பு கமிஷனில் மேல்தட்டிற்கு சென்ற பகுதிக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார்.  தற்போது வழக்கத்தில் நிலவும் creamy Layer approach அன்றே அவரால் எடுக்கப்பட்டதாகவும் பிரகாஷ் காரத் பதிவு செய்கிறார். இதை ஒட்டிதான் மண்டல் பிரச்ச்னையின்போதும் சி பி எம் கட்சி நிலைப்பாடாக வந்தது.
நாடாளூமன்ற அரசியல் குறித்தும் இ எம் எஸ் தனது ஆய்வுகளை முன்வைத்தார். முதல் கம்யூனிஸ்ட் மாநில ஆட்சி அனுபவ நினைவுகளை அவர் பகிர்ந்தபோது நாடாளுமன்ற- சட்டமன்றங்களில் பெரும்பான்மை பெறுவதும் வர்க்கப்போராட்ட வடிவங்களே. அதே நேரத்தில் அவை நாடாளுமன்றத்திற்கு வெளியேயான மக்கள் திரள், வர்க்கப்போராட்டத்திற்கு  கட்டுப்பட்டவையே என்ற வரையறையை அவர் தந்தார். சிந்தா  வார இதழில் அவர் அளித்த பதில்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கமும் நாடாளுமன்ற அரசியலும் என்ற புத்தகமாக 1981ல் வெளிவந்தது. தங்கள் சட்டமன்ற ஆட்சிகள் மூலம் போலீஸ் தொழிலாளர்களை ஒடுக்கிவந்ததை தடுக்க முடிந்ததாக தெரிவிக்கிறார். பலாத்கார புரட்சி நடத்துவதற்கு தேவையான வலுவுள்ள வெகுஜனப்படையை உருவாக்க நாடாளுமன்றம் உட்பட அனைத்து சட்டரீதியான முறைகளையும் அங்க்கீகரிக்க வேண்டியது பற்றி மார்க்சிசம்-லெனினிசம் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். வர்க்க எதிரி என்ற சொல் குறிப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான பொருளாதார நலன்களை கொண்ட முதலாளித்துவ- நிலபிரபுத்துவ வர்க்கங்களையும் அவர்களை அண்டி நிற்பவர்களையும்தான் என விளக்கமளிக்கிறார். அதேபோல் அமைதியான முறையில் சோசலிச மாற்றம் சாத்தியமா என்ற கேள்விக்குரிய பதில் அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்கிறார். வாய்ப்பு மிக குறைவு. ஆனால் அப்படி எங்குமே நடக்காது எனக்கூறுவது சரியாக இருக்காது என்கிறார்.

 1955-56களில் நியுஏஜ் பத்ரிக்கையில்  காந்தி குறித்த கட்டுரைகள் பின்னர் 1958ல் மகாத்மாவும் இசமும் என்ற பெயரில் வெளியானது. அதில் இ எம் எஸ் அவர்கள் ஆழமாக காந்தி குறித்து தனது பார்வையை முன்வைத்திருந்தார்.. காந்தியடிகளின் பங்களிப்பும் அதே நேரத்தில் போதாமைகளும் தனிநபர் பார்வையில் மட்டும் வைக்காது தேசிய பூர்ஷ்வாக்களின் எல்லைக்குள் என்ற பார்வையில்  இ எம் எஸ் அலசியிருந்தார்.  அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகளில் முதலாளித்துவ வர்க்க மேலாதிக்கத்தை அரசியல் பொருளாதார தளங்களில் மட்டுமல்லாது கலாச்சார தளங்களில் எதிர்கொள்வது குறித்தும் விவாதித்தார். கிராம்சி குறித்தும் கூட தனது பார்வையை முன்வைத்தவர் அவர்.
சோவியத்- சீனா சர்வதேச விவாதங்களை கவனித்த தோழர் இ எம் எஸ் போன்றவர்கள்  அந்தந்த நாடுகளின் பிரத்யேக தன்மைக்கு ஏற்ப புரட்சிகர இயக்கங்களை கட்டுவது- சோசலிசத்திற்கான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம் என்ற முடிவிற்கு வந்தனர். சோவியத்துடன்  அல்லது சீனாவுடன்  என்ற பார்வையிலிருந்து விடுபடுவது என்ற முடிவிற்கு வந்தனர். சமதூரம் என்ற கொள்கையை கட்சி பிளவிற்கும்- நக்சல் அனுபவத்திற்கும் பின்னர் சி பி எம் கட்சி எடுத்தது. சீனாவில் டெங்ஷியோபிங் காலத்தில் எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் எதிர்மறை விளவுகளை தரும் என்ற கருத்துடன் இ எம் எஸ் உடன்படவில்லை என்கிறார் பிரகாஷ் காரத். சோவியத் வீழ்ச்சியிலிருந்து சோசலிச கட்டுமான படிப்பினைகளை கட்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என இ எம் எஸ் தெரிவித்து வந்தார்
கேரளாவில் வெகுமக்கள் மத்தியில்  அரசியல் மற்றும் தத்துவார்த்த உரையாடலை தொடர்ந்து செய்து வந்தவர் இ எம் எஸ் அவர்கள். தனது தாய்மொழியில் ஏராளம் அவர் எழுதி குவித்துள்ளதாக அறிகிறோம். 1942ல் கட்சி சட்டரீதியாக இயங்க வாய்ப்பு பெற்றது. சி பி அய் கட்சியின் முதல் காங்கிரஸ் 1943ல் நடந்தது. அதில் இ எம் எஸ் மத்திய கமிட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார். 1953-54ல் நடந்த மூன்றாவது கட்சி காங்கிரசில் அவர் பொலிட்ப்யூரோ உறுப்பினராகிறார். நியுஏஜ் பத்திரிக்கை ஆசிரியராகிறார். கட்சியில் காங்கிரஸ் குறித்த அணுகுமுறை, சீன யுத்த கருத்துவேறுபாடுகள் தீவிரமாக இருந்தன. கட்சியின் 6வது காங்கிரசில் விஜயவாடாவில் மூன்று திட்ட நகல்கள் வந்தன. வலதுசாரி திரிபு- இடது வறட்டு சூத்திரவாதம் தவிர்த்த தனது மூன்றாவது நகல் என தனியான ஒன்றை இ எம் எஸ் முன்வைத்தார். இறுதியாக முடிவிற்கு வரமுடியாமல் அஜாய் சொற்பொழிவின் பொது அம்சங்கள் மட்டும் அரசியல் தீர்மானமாகியது.  தோழர்  அஜாய் மறைவிற்கு பின்னர்  ஒன்றுபட்ட கட்சிக்கு இ எம் எஸ் பொதுச்செயலரும் ஆகிறார். டாங்கே சேர்மன் என்ற சமரசம் ஏற்பட்டது. இ எம் எஸ் ரிவிஷனிசம் எதிர்த்த போராட்டம் என்பது செக்டேரியன் பாதைக்கு கட்சியை அழைத்துசென்று விடக்கூடாது என்பதையும்  பேசிவந்தார். கட்சி உடைவு தவிர்க்கமுடியாத்து என்பதை பல தோழர்கள் அவருடன் விவாதங்கள் மூலம் ஏற்கவைத்தனர் என்ற பதிவு ஒன்றை தோழர் சுர்ஜித் செய்துள்ளார். கட்சியில் நிலவிய வேறுபாடுகள் காரணமாக  இடதுநிலை எடுத்தவர்கள் என் அறியப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். இ எம் எஸ் செய்யவில்லை, பொதுச்செயலராக தொடர்ந்தார். ஆனால் டாங்கேவின் அகம்பாவமான பேச்சு அவரை பாதித்தது என அவர் குறிப்பிட்டு சொல்கிறார். நீர் பொம்மைதான் நாங்கள்தான் கட்சி விஷயங்களை முடிவு செய்வோம் என்ற டாங்கே பேச்சும், பொதுச்செயலராக இருந்தும் அவரது கட்டுரை ஒன்றை ’கருத்துவேறுபாடு இருக்கிறது என்ற பெயரில்’ வெளியிடாத சூழலில் அவர் ராஜினாமா செய்தார். பின்னர் நடந்த தேசிய கவுன்சிலில் டாங்கே பிரிட்டிஷாருக்கு தனது விடுதலைக்கு வேண்டி எழுதிய கடிதம் சர்ச்சையானது. 32 தேசியகவுன்சில் உறுப்பினர்கள் வெளியேறினர். 1964ல் சி பி எம் கட்சி அமைக்கப்பட்டது.

சீனகட்சி சி பி எம் கட்சியை நவீன திருத்தல்வாத கட்சி என முத்திரை குத்தியது. சீனா நிலைப்பாட்டில் இருந்த சிலர் வெளியேறி நக்சல் இயக்கமான சி பி எம் எல் துவங்கினர். இந்திராவின் அவசர நிலை பிரகடன காலத்தில் சி பி எம் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பொதுச்செயலராக இருந்த சுந்தரையா அவர்கள் கொரில்லா போர் முறை, தலைமறைவு போராட்ட கருத்துக்களை முன்வைத்தார். கட்சியில் ஏற்பில்லாமல் போனதால் சுந்தரையா பொதுச்செயலர் பொறுப்பை ராஜினாமா செய்தார். 1977ல் நம்பூதிரி அவர்கள் சி பி எம் கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 14 ஆண்டுகள் செயல்பட்டார்.. 1965 இந்திய பாகிஸ்தான் யுத்த காலத்தில் சி பி எம் கட்சியின் பிரதான பரப்புரையாளராக அவர் செயல்பட்டார். மண்டல் கமிஷன் பிரச்சனையிலும் அவர் நிலைப்பாட்டை விளக்கி பிரசுரம் கொணர்ந்தார். Mahatma and the Ism, Nehru Ideology and Practice, Indian Freedom Struggle , கேரளா குறித்த ஆய்வுகள், இந்தியாவின் சோசலிச பாதை, கம்யூனிஸ்ட்களும் நாடாளுமன்ற ஜனநாயகமும் போன்றவை அவரின் குறிப்பிட தகுந்த முக்கிய ஆக்கங்கங்கள். ஆதிசங்கரின் தத்துவம், இந்திய விடுதலை இயக்க வர்க்கத்தன்மை, கேரளாவில் விவசாய இயக்கம், வர்க்கம்- சாதி- கட்சி, முதலாளித்துவ நீதித்துறை, கிராம்ஸி சிந்தனை போன்ற சில முக்கிய கட்டுரைகளை அவர் எழுதினார்.. அவரது முக்கிய கட்டுரைகள் ஆங்கிலத்தில் இரண்டு வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ளன.
ஆரம்பநாட்களில் தோழர் ஜோஷியுடன் இ எம் எஸ்க்கு நெருக்கம் இருந்தது. பின்னர் பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து தோழர் ரணதிவே விடுவிக்கப்பட்டு அவர் மீது விசாரணை நடந்த கமிட்டியில் 1950ல் இ எம் எஸ் உறுப்பினராக்கப்பட்டிருந்தார். ஆந்திர கொள்கைப்படி அமைந்த மத்திய கமிட்டியிலும் அவர் உறுப்பினர். மாஸ்கோ சென்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் நால்வர் குழு ஆலோசனை நடத்தி வந்தது. தோழர் ரணதிவே மீது நடவடிக்கை கைவிடப்பட்டதாக இ எம் எஸ் பதிவு செய்கிறார். தோழர்கள் இ எம் எஸ் ராஜேஸ்வரராவ் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவினாலும் பரஸ்பர மரியாதையுடன் உறவு இருந்த்தாகவும், 1976க்கு பின்னர் இரு கட்சி அரசியல் நிலைப்பாட்டின் நெருக்கத்திற்காக, கூட்டான செயல்பாட்டிற்காக  லிங் பத்திரிக்கை ஆசிரியர் இல்லத்தில் சி ஆர்- இ எம் எஸ் சந்திப்பிற்கு ஆசிரியர்  எடட்டா நாராயண்  ஏறபாடு செய்தார். தொடர்ந்து 6 முறை சி ஆர் அவர்கள் நம்பூதிரிபாட் இல்லம் சென்று கட்சிகளின் இணந்த செயல்பாட்டிற்கான விவாதம், உடன்பாடு வர உதவி செய்தார் என்ற பதிவையும் இ எம் எஸ் செய்துள்ளார்.

எளிய வாழ்க்கையில் நிறைவுபெற்றவராகவும், எந்நேரமும் தளர்வின்றி உழைப்பவராகவும் அவர் இருந்தார். Marxist Scholar என அவர் ஏற்கப்பட்டவராக இருந்தார். விவசாய இயக்கத்திலிருந்து தனது வர்க்கப்போராட்ட களப்பணியை துவக்கினார். காலை 4 மணிக்கே எழுந்து தனது கட்டுரைகளை எழுதும் வழக்கம் அவரிடம் இருந்தது என்பதை ராமச்சந்திரகுஹா தெரிவிக்கிறார். தனது இறுதி நாளில்கூட அவர் தனது உதவியாளரிடம் இரு கட்டுரைகளை டிக்டேட் செய்ததாக அறிகிறோம் நாட்டின் விடுதலையை அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார். அவரது தலைக்கு ரூ 5000 என அறிவிக்கப்பட்டிருந்தது. 1967-69 காலத்திலும் அவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தது. எதிர்கட்சி தலைவராக 60-64 மற்றும் 70-77 ஆண்டுகளில் அவர் பணியாற்றினார். சி பி எம் கட்சியின் பொதுச்செயலராக அவர் 1977-92 ஆண்டுகளில் செயல்பட்டு கட்சிக்கு வழிகாட்டினார். வாழ்நாள் முழுதும் உழைத்த, சிந்தித்த  தோழர் இ எம் எஸ் மார்ச் 19, 1998ல் தனது 89ஆம் வயதில் அவர் காலமானார். இந்திய மார்க்சியர் முன் வரிசையில் வரலாறு அவருக்கு இடம் கொடுத்துள்ளது.
References: .  1. How I Became A Communist- EMS    2. Communist Party Documents
3. Peoples Democracy Articles of Surjit, Ramachandran, Prakash Karat, Patnaik
4. FrontLine – A G Noorani
5. EMS- Syed, Pk Singh
6. Being Brahmin- The Marxist Way
7. இந்தியாவில் சோசலிச பாதை       8. நாடாளுமன்ற ஜனநாயகம்


No comments:

Post a Comment