https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, April 21, 2017

May Day Martyrs Of Chicago சிகாகோ மேதின தியாகிகள் 3

ஆகஸ்ட் ஸ்பீஸ் (1855-87)

                     -ஆர்.பட்டாபிராமன்


ஆகஸ்ட் வின்சென்ட் த்யோடர் ஸ்பீஸ் மத்திய ஜெர்மனியில் லாண்டெக் எனும் பகுதியில் 1855ல் பிறந்தவர். தந்தை அரசாங்க காட்டுஇலாகா நிர்வாகி. அவரது குழந்தைப்பருவம் விளையாட்டும் படிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒன்று  ஆனால் பாட்டாளி வீட்டு குழந்தைகளுக்கு  என்ன கிடைக்கிறது என்ற கேள்வி அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்காபோல் எங்கள் நாட்டில் அவ்வளவு கொடுமையை தான் பார்க்கவில்லை என்கிற பதிவையும் அவர் தருகிறார்.
ஸ்பீஸ் பாலிடெக்னிக்கில் சேர்கிறார். அவருக்கு 17 வயதாகும்போது தந்தை இறக்கிறார். குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்கிற பொறுப்பில் மரஇருக்கைகள் வியாபாரத்திற்காக நியுயார்க் 1872ல் ஸ்பீஸ் வருகிறார். அவரின் பணக்கார உறவினர் சிலரை நம்பித்தான் அவர் வருகிறார். அடுத்த ஆண்டு அவர் சிகாகோ வந்து அங்கேயே தங்குகிறார். சோசலிஸ்ட்கள் பற்றி அப்போது அவருக்கு ஏதும் தெரியாது. மற்றவர்களைப்போலவே வேலைவெட்டி இல்லாதவர்கள் மக்களை பிரிப்பவர்கள் என்றே அவரும் கருதினார்  . நமது பிரச்சனையே பெரும் இயக்கங்களைக்கூட தனி மனிதரின் சாதனையாக்கிவிடுவோம் என்கிற ஸ்பீஸ் அப்படித்தான் மதத்தலைவர்களையும் ஆக்கினோம் என்கிறார். லுத்ரன் கிறிச்துவ இயக்கம் பற்றி குறிப்பிடுகிறார்.  அவரது ஊர் ஜெர்மனியிலும்  பிரான்சிலும் 1000 ஆண்டுகளாக வரலாறு எப்படிப்போனது என்பது குறித்து ஸ்பீஸ் பேசுகிறார்.
அன்றாடம் பார்க்கும் உழைப்பாளர்கள் கூனி குறுகி வேலைக்கு இறைஞ்சுவது,  அடிமைத்தன்மையை காட்டுவது ஏன் என்கிற கேள்வி ஸ்பீஸ்க்கு உருவானது. அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை ஏதும் அப்போது இல்லை. சற்று கூடுதலாக கவனம் செலுத்தினால் மேம்பட்ட வியாபாரியாக அவர் வரக்கூடிய சூழல்தான் இருந்தது. கிறிஸ்துவம் பேசுகின்ற துறவு இயற்கைக்கு விரோதமானது , வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பது என்பதுதான் என்கிற கருத்து ஸ்பீஸ்க்கு உருவானது.
அதுவரை சோசலிசம் குறித்து எதையும் படித்து அறியாமல் இருந்த ஸ்பீஸ் கிரேக்க சிந்தனையாளர்கள், கார்ல்மார்க்ஸ் பற்றி அறியத் துவங்குகிறார். 1875ல் இலியனாயிஸ் தொழிலாளர் கூட்டத்திற்கு நண்பர் ஒருவர் அழைக்க போகிறார். அங்கு சோசலிசம் குறித்து பேசியதை கேட்டார். உடன் வந்து ஏராள புத்தகங்களை வாங்கினார். பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கில பொருளாதாரவாதிகள், சமுக விஞ்ஞானிகள் எழுதியதை கற்க துவங்கினார். பக்கில் எழுதிய நாகரிகத்தின் வரலாறு,  மார்க்சின் காபிடல், மார்கனின் பழங்கால சமுதாயம் ஆகியவை அவரை பாதித்தன. ஸ்பீஸின் மரச்சாமான் கடை 7 ஆண்டுகள் வியாபாரம் முன்னேற்ரம் காரணமாக தாயார் சகோதரர்கள் இவருடன் வந்து குடியேறுகிறார்கள்.
1877ல் ஸ்பீஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைகிறார்.  ஆயுதம்  ஏந்தும் குழுவில் தன்னை இணைத்துக்கொள்கிறார். தன்னைப்போல மிக ஒழுங்குடன் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் 1500 பேர்கள் இருந்ததாக ஸ்பீஸ் தனது குறிப்பில் சொல்கிறார். அரசியல் வேலைகளையும் அவர் செய்துவந்தார். ஆனால் அவை பிரச்சாரத்திற்கு உதவுகிறதே ஒழிய தீர்விற்கு  மாற்றத்தை கொணர்வதாக இல்லை என்பதை அவர் உணர்ந்தார். 1880ல் அர்பெட்டர் ஜெய்டுங் என்கிற ஜெர்மன் தொழிலாளர் வாரப்பத்ரிக்கையுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். Knights of Labour உறுப்பினராக மூன்று ஆண்டுகள் அவர் இருந்தார். பின்னர் புதுப்பித்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் கூட்டங்களுக்கு அழைக்கும் போதெல்லாம் சென்றார். உரைகள் நிகழ்த்தினார். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாநாடுகள், சர்வதேச தொழிலாளர் சங்க மாநாடுகள் ஆகியவற்றில் பங்கேற்றார்
ஹேமார்க்கெட் மே 4 நிகழ்வை பொறுத்தவரை அவர் கூட்டத்திற்கு பேச அழைக்கப்பட்டார் என்பதை தாண்டி எந்த தொடர்பும் இல்லை . ஜெர்மன் மொழியில் பேசத்தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆங்கில பேச்சாளர்கள் அப்போது யாரும் இல்லாததால் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றவேண்டியிருந்தது. அக்கூட்டத்திற்கு பலதரப்பட்ட தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அனார்க்கிஸ்ட்கள் மட்டுமல்ல. அங்கு பேசியவர்கள் கூட 8 மணி வேலையை வற்புறுத்தி மட்டுமே பேசினர். அனார்க்கிச சித்தாந்தம் பற்றி தான் பேசவில்லை என ஸ்பீஸ் தனது குறிப்பில் வெளிப்படுத்துகிறார்.

எங்களை தூக்கில்போடப்போகும் மனிதரும் மக்களும் இதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றார். ஸ்பீஸ். எங்களை காட்டுமிராண்டிகள், பயங்கரவாதிகள் சமுகத்திற்கு தீமையானவ்ர்கள் என காட்டி அவர்களது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்றார் ஸ்பீஸ். மனிதகுல மேம்பாடு எனும் காரணத்திற்காகவும் அதன் ஒளிக்காகவும் எப்போதும் நிற்பான் ஸ்பீஸ் என்றார் அவர். தனது தியாக வாழ்க்கையின் மூலம் நம்மால் பேசப்படும் மனிதராகியுள்ளார் ஸ்பீஸ்.

No comments:

Post a Comment