https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, April 21, 2017

May Day Martyrs Of Chicago சிகாகோ மேதின தியாகிகள் 5

ஜார்ஜ் எங்கெல் (1836-87)

            -ஆர்.பட்டாபிராமன்



 ஜெர்மனியில் காசல் நகரில் ஏப்ரல் 15, 1836ல் பிறந்தவர் ஜார்ஜ் எங்கெல். தந்தை கட்டிடதொழிலில் ஈடுபட்டவர். தந்தை 2 வயது முடிவதற்குள்ளும் தாய் 12வது வயதிலும் இறந்தனர். இரு சகோதரர்கள் அநாதை இல்லம் அனுப்பப்பட்டனர்.  எங்கெல் உட்பட மற்ற குழந்தைகள் 15 டாலருக்கு விற்கப்பட்டனர். குழந்தையிலேயே வறுமை என்றால் என்ன என்பது பாடமானது.
ஜெர்மனியில் 14 வயதுவரை பள்ளிக்கல்வி, பின் கட்ட்யா தொழிற்கல்வி என்ற நிலை இருந்தது. தான் தொழிற்கல்வியுடன் ஞாயிறு பள்ளியில் பாடங்களை பயின்றதாக எங்கெல் தெரிவிக்கிறார்.  அவர் அநாதை என்பதால் எவரும்  அவரை பொருட்படுத்தியதில்லை என்கிற சமுக அனுபவம்தான்  வாய்த்தது. செருப்பு தைப்பவர் ஒருவர் அவருக்கு மனம் இரங்கி அந்த அரும்கலையை எங்கெலுக்கு கற்றுத்தந்தார்.
இருவார பயிற்சிக்கு பின்னர் தெருவில் விடப்பட்டநிலை. அங்கு வாழ்க்கை கைகூடாத நிலயில் பிராங்க்பர்ட் செல்கிறார் எங்கெல். கையில் காசு இல்லையே வேறு என்ன செய்வது நடந்தே கால் கொப்பளிக்க பிராங்கபர்ட் வந்தடைந்தார். உணவிற்காக அங்கு தென்பட்ட சலூன் சென்று தான் வேலை செய்ய தயார் உணவு கிடைக்குமா என கேட்க அவர் விரட்டியடிக்கப்பட்டார். அதைப் பார்த்த  ஒருவர் மனமிரங்கி  வர்ணம் அடிக்கும் தொழிலை கற்றுத் தருவதாக சொன்னார்.  அந்த எஜமானர்  உணவுதந்து தொழிலையும் பழக்கினார்.
பின்னர் 1863ல் ப்ரெமென், மேயென்ஸ், கலோன் ட்ய்யூசல்டிராஃப் போன்ற இடங்களில் சென்று வேலை செய்கிறார். இங்குதான் அவர் ஏராள விஷயங்களை படிக்கத் துவங்குகிறார். 1868ல் ரெக்னா எனும் ஊரில் அவருக்கு திருமணம் நடைபெறுகிறது.    அமெரிக்கவில் சென்று பிழைக்கவேண்டும் என்பது  அவரின் இளம்வயது கனவு. கனவு கைகூடுகிறது. அவர் 1873 ஜனவரியில் பிலடெல்பியா வருகிறார். அங்கு சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை கிடைக்கிறது.
தொழிலாளர் போராட்டம், தெருக்களில் ஊர்வலம் என்பதெல்லாம் எங்கெலுக்கு தெரியவருகிறது. ஒருமுறை நிலக்கரி தொழிலாளர் ஊர்வலத்தின்போது தெருவில் நின்ற ஒருவர் காலிகள் என திட்டிக்கொண்டிருந்தார். தூக்கில் போடவேண்டும் என கத்தினார்.   சிறிய முதலாளி என்கிற வகையில் லேபர் பிரச்சனை எனக்குத்தான் தெரியும் என்றார் அவர். எங்கெலுக்கு குழப்பம் உருவானது, அமெரிக்க சுதந்திர நாடு என்கிறார்களே என அவர்  அப்பாவித்தனமாக கேட்கிறார்.
தினம் 10 மணி வேலைப்பார்த்து சம்பளம் பெற்றுவந்த எங்கெல் நோய்வாய்ப்பட்டர். கையில் இருந்த காசு கரைந்தது. மருத்துவம் பார்த்த டாக்டர் ஏழை என அறிந்தவுடன் ஜெர்மன் உதவிமையத்திற்கு அனுப்பிவிட்டார். அந்த சொசைட்டி எங்கெலுக்கு மருத்துவ செலவை ஏற்றது.   பின்னர் அவர் சிகாகோ குடிபெயர நேர்ந்தது. 1874ல் ஆலை ஒன்றில் பணிக்கு சேர்கிறார். சிகாகோவில்தான் அவர் சோசலிஸ்ட் ஆகிறார். டெர் வோர்பொட் பத்ரிக்கை அவருக்கு அங்கு அறிமுகமாகிறது. ஜெர்மன் சோசலிச பத்ரிக்கையது. அப்பத்ரிக்கை படிக்க ஆர்வமூட்டியதாகவும் பல விஷயங்களை கற்று தந்ததாகவும் எங்கெல் சொல்கிறார். பின்னர் சர்வதேச உழைப்போர் இயக்கம் பற்றி அறிகிறார். ஜெர்மனியில் மாபெரும் தொழிற்சங்கத்தலைவராக விளங்கிய ஃபெர்டினாண்ட் லஸ்ஸேல் புத்தகம் படிக்க கிடைக்கிறது.
1876ல் அவர்   விளையாட்டு சாமான் கடை ஒன்றை வைக்கிறார். தற்போது படிக்க அவருக்கு அதிக நேரமும் கிடைக்கிறது. 1878ல் சோசலிஸ்ட்களுக்கு தடை வருகிறது. அந்நேரத்தில் வட அமெரிக்கா சோசலிஸ்ட் லேபர் கட்சியில் அவர் பணிபுரிந்து வந்தார். தொழிலாளர்களிடம் அக்கட்சி செல்வாக்கு பெறத்துவங்கியது. அக்காலத்தில் மூன்று ஜெர்மன் பத்ரிக்கைகளான அர்பெய்ட்டர் ஜெய்டுங், வொர்போர்ட், ஃபாகல் வரவேற்பை பெற்று இருந்தன.  1883ல் IWPA  பிட்ஸ்பர்க் மாநாடு அனைவரையும்  ஈர்த்தது.. அதன் மானிபெஸ்டோவை எங்கெல் உட்பட பலரும் எடுத்து  மக்களிடம் சென்றனர்.
ஹேமார்க்கெட் சம்பவ தினத்தன்று மே 4 1886ல் வீட்டில் எங்கெல் குடும்பத்தாருடன் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். வாலர் எனும் தோழர் முதல்நாள் சம்பவத்தையும் ஹேமார்க்கெட் கூட்டம் பற்றியும் சொல்கிறார். அவரை வீடு திரும்ப சொல்லிவிட்டு படுக்கைக்கு செல்கிறார் எங்கெல்.
குண்டு வெடித்திராவிட்டாலும் போலிசார் பலரை கொன்றேயிருப்பர் என்ற கருத்தை எங்கெல் பதிவிட்டுள்ளார் . போன்பீல்ட் போன்ற அதிகாரிகள் அங்குள்ள மில்லியனர்களுக்கு லாபம் குவிக்க உதவும் காவலர் என்கிறார். 8 மணி இயக்கத்தை முற்றிலும் துடைத்தெறிய செய்யப்பட்ட சதிதான் வழக்கும் தண்டனையும் என்றார் எங்கெல். எங்கள் எழுவரையும் தூக்கில் போட்டாலும் புரட்சிகர இயக்கங்கள் நின்று போகப்போவதில்லை . போராட்டக்காரர்களால் சிறைகள் நிரம்பும் என்றார். மக்களுக்கு  புரியத்துவங்கிவிட்டால் அவர்கள் வன்முறை புரட்சிகளில் வீறுகொண்டு எழுவர் என்றார்.
அடுத்து வருகிற 25ஆண்டுகளில் பெரும் புரட்சிகர யுத்தம் எழும் என்று எங்கெல்   நம்பினார். அது இறுதி போராக இருக்கும் என்றார். மக்களுக்கு அமைதியையும் சுபிட்சத்தையும் அப்போர் நல்கும் . பிராலிட்டேரியன் அதை செய்வர் என்று உறுதிபட அவர் நம்பினார். அந்த நம்பிக்கை ஆங்காங்கு சோதனைகளை கண்டுவருகிறது. தடுமாறி விழுகிறது. எழும் என்ற கணக்கில்தான் உலகம் முழுதும் சோசலிச இயக்கங்கள் பலவடிவங்களில் போராடி வருகின்றன. விழுவதும் எழுந்து கற்பதுமாக பயணம் தொடர்கிறது.


No comments:

Post a Comment