https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, April 21, 2017

May Day Martyrs Of Chicago சிகாகோ மேதின தியாகிகள் 6




லூயி லிங் (1864-87)
                 -ஆர்.பட்டாபிராமன்



லூயி லிங் அவர்கள் செப்டம்பர் 9, 1864ல் மான்ஹெயிம் பகுதியில் பிறந்தவர். முக்கிய ரயில் சந்திப்பு நகரமாக இருந்த பகுதியது.  சுவிட்சர்லாந்த் ஆல்ப்ஸ்க்கு அங்கிருந்து ரயில் இணைப்பு இருந்த நடுத்தரமான நகரப்பகுதி. தந்தை பிரடெரிக் லிங் அவர்களுக்கு மரம்வெட்டும் தொழில். தாயாருக்கு சலவைத்தொழில். லிங் குழந்தைப்பருவம் பள்ளிப்படிப்பு மகிழ்ச்சியான காலமாக கடந்தது. தந்தை ஒருமுறை ஐஸ் கட்டிப்பாறையில் மரத்துண்டு ஒன்றை நழுவவிட்டு அதை மீட்க சென்றதால் அத்துடன் சேர்ந்து காணாமல் போனார். அவரை கண்டெடுத்து மீட்டபின்பு செயல் இழந்திருந்தார். மரக்கடை முதலாளி தனக்கு விசுவாசமாக உழைத்த அடிமையை வியாபாரம் மந்தமாகிவிட்டது என சொல்லி அனுப்பிவிட்டார்.
1877ல் லிங் தனது 13 ஆம் வயதில் தந்தையின் மரணத்தை கண்டார். சுரண்டல் கொடுமை என்பதை குடும்ப அனுபவத்திலிருந்தே அவர் பெற்றார். இவர் கண் எதிரே அந்த மரக்கடை முதலாளி பெரும் பணக்காரர் ஆனதை பார்த்தார். தாயின் சலவைத்தொழிலிலும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவது கடினமாகி வந்தது. பள்ளிபுத்தகம் வாங்கக்கூட பணமில்லாத நிலை ஏற்பட்டது. அப்பரண்டிஸ் தொழில் பழகுநருக்கு அப்போதெல்லாம் சம்பளம் கிடையாது. லிங் அதில் எதையும் பெறமுடியவில்லை. கார்பெண்டர் வேலை அம்மாவிற்கு பிடிக்கவில்லை. அம்மாவிற்கு ஏதோ அலுவலகத்தில் காப்பிஸ்ட் ஆக அமர்ந்து சிறிய அளவாவது சம்பாதிக்கலாமே என்கிற ஆவல். லூயி லிங் மனநிலை உலகம் சுற்றவேண்டும் என்பதாக இருந்தது.
லிங் ஜெர்மன் தேசிய தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தார். புகழ்வாய்ந்த லாஸ்ஸேல் சங்கமது. அங்கு அவர் சோசலிசம்- கம்யூனிசம் குறித்து கற்கலானார். 1883ல் சுவிட்சர்லாந்த் சென்ற லிங் நடந்தே பல பகுதிகளை சுற்றினார். அதன் வனப்பில் லயித்தார். பாசல், பெர்ன் என சென்றார். ஜெனிவா, மெளண்ட்பிளாங் என சுற்றினார். அங்கு வேலை கிடைக்காமையால் ஆல்ப்ஸ் மலையடிவாரம் வந்தார். பின்பு ஜூரிச் நகர் வந்தார். சுவிட்சர்லாந்த் மனதுக்கு இதமான பகுதி என்பதால் அங்கு கொடுமையோ வறுமையோ இல்லை என கருதவேண்டாம் என்கிறார் லிங்.
தான் சென்ற பகுதிகளில் அவர் சோசலிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அதே நேரத்தில் அங்கு சமுக ஜனநாயக வாதிகளுக்கும் அனார்க்கிஸ்ட்களுக்கும் மோதல் இருந்து வந்தமை குறித்தும் பேசுகிறார் லிங். இந்த வேறுபாடுகளை உணர்ந்த லிங் தன்னால் புரட்சிகர சோசலிஸ்ட்களான அனார்க்கிஸ்ட் பக்கமே நிற்க முடிந்தது என்கிறார். அனார்க்கிஸ்ட்கள் பேசிய கம்யூனிஸ்டிக் சோசலிசம் என்பதை ஏற்றார்.
சென்ற ஊர்கள்தோறும் போலீஸ் கண்காணிப்பு தொல்லைகளால் எங்கும்  நீடித்து தங்கமுடியாத நிலை லிங் அவர்களுக்கு ஏற்பட்டது. கட்சி தலைமறைவு வாழ்க்கை சில அனுபவ்ங்களை அவருக்கு கொடுத்தது. Party Life experiences led me to the conclusion that in a centralistic organisation, with a representative system, all power and activity is concentrated in the hands of the few, thus inducing them in corruption and imperiousness, while the great masses are inclined to become indifferent and stupid  என இன்றைக்கு 130 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியவர்  லிங். இதை எழுதும்போது அவருக்கு வயது 22 மட்டுமே. வியந்துபோகச் செய்யும் அனுபவ தெறிப்பு. அவரின் மரணவயதும் அதுவே.
தாயார் மறுமணம் செய்துகொண்டு தனது இரண்டாவது கணவர் மூலம் லிங்கிற்கு   பணம் அனுப்பிட ஏற்பாடு செய்தார். அமெரிக்க சென்று வாழ்வது என்ற முடிவிற்கு லிங் வந்தார். பிரான்ஸ் நாட்டின் வழியாக நியுயார்க் பெருநகருக்கு ஜூலை 1885ல் லிங் வந்து சேர்கிறார். அங்கிருந்து சிகாகோ செல்கிறார். சிகாகோவில் சர்வதேச தச்சர்கள் சங்கத்தில் சேர்கிறார்.   கார்ப்பெண்டர் வேலை செய்கிறார். லிங்கிடம் தொழிலுக்கு வேண்டிய கருவிகள் இல்லை. முதலாளி கருவிகளை தந்து அதற்கு தின சம்பளத்தில் பிடித்தம் செய்கிறார்.  இதை குறிப்பிட்டு Noble Boss என லிங் கிண்டல் செய்திருந்தார்.
மரம் அறுக்கும் ஆலையிலும் சங்கத்திலும் பலர் பழக்கமாகின்ற்னர். பொய் சாட்சியாக பின்னால் வரப்போகும் செலிகெர் என்பவரும் தனக்கு நண்பரானதை லிங் சொல்கிறார், அந்த செலிகர்தான் இவருக்கு அறையில் இடம் தந்து ஒன்றாக தங்க வைத்துக்கொண்ட்வர். லிங் தொழிற்சங்கத்தில் முன்னணி தலைவராக வருகிறார்.
அமெரிக்காவை சுதந்திர நாடு என பலர் வர்ணிப்பதை அவர் விமர்சித்தார். அவர்கள் விவரம் அறியா முட்டாள்கள் என்றார். தான் சிறையில் இருப்பதால் இப்படி சொல்லவில்லை என்றார். இந்த நாடு முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மை பூமி என்றார். எங்கள் விசாரணை கூத்தைப்பற்றி பேசுவது கடலுக்கு நீர் கொண்டுபோவது போன்ற வீண்வேலை என அவர் நொந்து எழுதினார்.
பள்ளி சூழலிருந்தே  தராள எண்ணப்போக்குகளுடன் வளர்ந்ததால் கடவுள் மதம் அவசியமில்லை என்கிற எண்ணம்  அவரிடம் இருந்தது. அவர் தன்னை இயற்கையான சுதந்திர சிந்தனையாளர் என்றே குறிப்பிட்டுக் கொள்கிறார். பெரிய சிந்தனையாளர்களுடன் தான் உழன்றதாகவும், மேலும் உயர் சிந்தனைகளுடன்  நடைபோடமுடியும் என்றார் லிங். தூக்கு தண்டனைக்கு முதல்நாள் அவர் தற்கொலை செய்து மரித்துப்போகிறார். கனவுடன் அமெரிக்கா வந்த இளைஞனை அவன் கொண்டிருந்த கருத்துக்காளால் அப்பூமி கொன்று போட்டுவிட்டது. நம்மையெல்லாம் போல் வாழ்வின் கட்டங்களை பார்த்து அனுபவிக்க முடியாமல் வனது வாழ்வின் பயணத்தை நிறுத்திவிட்டனர்.  தூக்குமேடை ஏறிய தியாகிகளுடன் லிங்கும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறான்.



No comments:

Post a Comment