https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, September 24, 2022

பெரியாரின் அரசியல் நாத்திகம்

 

பெரியாரின் அரசியல் நாத்திகம்

கார்த்திக் ராம் மனோகரன் எழுதிய Periyar A study in Political Athesim சமீபத்தில் வெளியான புத்தகம். 130 பக்க அளவிலான சிறிய ஆங்கில புத்தகம் என்றாலும், பெரியார் ஆய்வுலகிற்கு கிடைத்துள்ள தேர்ந்த ஆக்கமாகும். Orient Blackswan ரூ 225க்கு போட்டிருக்கிறார்கள்.



முழுமையான பகுத்தறிவாளர் எதிர் தத்துவவாதி என்கிற வகையில் பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சாமி சிதம்பரனாரின் பெரியார் இதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பெரியார் சோவியத் போய்வந்தவரையிலான வாழ்க்கை செய்திகள் பேசப்படுகின்றன. அதற்குப் பின்னர் அவரின் அரசியல், சுயமரியாதை போராட்டத்தன்மை பேசப்படுகிறது.

காந்தியைப்போலவே பெரியாரும் தன் கருத்துக்களை உருத்திரண்ட கோட்பாட்டுவடிவமாகவோ, அதில் ஒரு consistency கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றோ நினைக்கவில்லை என்பதும் பேசப்படுகிறது. சக மனிதனுடன் அவனது சுயமரியாதைக்கு எதிரானவையாக அவர் கருதிய மதம் சாதி அதை கட்டிக்காக்கும் பிராமணியம்- பிராமணியத்திற்கு துணை நிற்கும் புனித இலக்கியங்கள், அரசியல் அரசாங்கம் எதிர்த்த உரையாடல்களை எழுத்துக்களை பெரியார் தந்தார்.

ஆய்வாளர்கள் அதில் ஏதாவது கோட்பாட்டாக்கம் செய்ய முடியுமா எனத் தேடுகிறார்கள். சில consistent அம்சங்களை கண்டறிந்து பெரியாரியம் எனத் தருகிறார்கள்.

கார்த்திக் மனோகரன் இவ்வாறு எழுதுகிறார்

Periyar’s deceptively simple anti brahminism contained in it a critique of not just brahminical religion, but also political power, nationalism, caste hierarchies, linguistic chauvinism, gender inequalities, economic disparities and racial supremacy. It appealed to diverse audiences in his time and retains relevance even today- his followers till date cut across caste and party lines. Further he conveyed his message in simple, direct and often coarse Tamil..

நூலாசிரியர் பெரியாரை சாக்ரடிஸ், ரூசோ, வால்டேர் என பல சிந்தனையாளர்களுடன் ஒப்பிட்டு பெரியார் எங்கு மாறுபடுகிறார் எனப் பேசுகிறார். சிலர் தத்துவ கட்டுமானங்களை செய்பவர்கள், வேறு சிலர் அக்கட்டுமானங்களை உடைப்பவர்கள் அதாவது anti philosopher வரிசையில் வருபவர்கள். மார்கஸ் இதில் வருகிறார் என டெரி ஈகிள்டன் சொல்வதை ஆசிரியர் விளக்கிவிட்டு பெரியாரையும் இந்த வரிசையில் வைக்கிறார்.

இந்த புத்தகத்தின் தலைப்பை ஒட்டிய மய்ய பொருளாய்வு இரண்டாம் அத்தியாயத்தில் political Atheism என்பதில் இருக்கிறது. அடுத்தப்பகுதி ராமசாமியும் ராமாயணமும் என்று செல்கிறது. Paula Richman ஆய்வில் ராமாயணம் பெரியாரின் வாசிப்பு என்ற கட்டுரையை துணையாகக் கொண்டு இந்தப்பகுதி செல்கிறது. அடுத்த இரு பகுதிகளில் பெரியாரின் மதமாற்றம் குறித்த அவரின் புத்தம், இஸ்லாம் குறித்த பேச்சுக்கள் சொல்லப்படுகின்றன. இறுதிஅத்தியாயம் நம் காலத்தில் பெரியார் என்ற பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது.

political Atheism என்கிற கட்டுரைதான் இந்த நூலின் மய்யச் சரடாக நீள்கிறது. சோவியத் செல்தல், கம்யூனிச இலக்கியங்களை வெளியிடல், மார்க்ஸ் குறித்து பேசுதல் இவையெல்லாம் நடந்தாலும், பெரியார் மார்க்சைவிட அனார்க்கிஸ்ட் ஆசான் பகுனினிடம் தான் நெருங்கியிருப்பதாக கார்த்திக் ராம் மனோகரன் இந்த புத்தகத்தில் தன் வாதத்தை நகர்த்துகிறார்.

பெரியார் தனது பேச்சிலோ, எழுத்திலோ ஒருதடவையாவது பகுனின் குறித்து ஏதாவது சொன்னாரா என்பது இந்நூலில் எங்கும் சுட்டிக்காட்டப்படவில்லை. பகுனின் எழுதிய God and State முக்கியமான ஆக்கம். பகுனின் சிந்தனையின் அற்புத தெறிப்பான ஆக்கம். கடவுளுக்கும் அதை ஏதோவொருவகையில் காத்து நிற்கும் அதிகாரத்திற்குமான உறவு குறித்த பேச்சில் பெரியார் பகுனின் அவர்களின் இந்த ஆக்கத்திற்கு நெருக்கமாக வருகிறார் என்ற புரிதலை இந்நூல் தருகிறது. மதம் குறித்து மார்க்ஸ், லெனின் பேசியமைக்கும் பகுனின் பார்வைக்கும் ஆன புரிதல்களை சொல்லிவிட்டு, பெரியார் பகுனின் பார்வையுடன் நெருக்கமாக இருப்பதாக மனோகரன் முடிவிற்கு வருகிறார். இதையும் மனோகரன் தருகிறார்.

While Periyar hopes that the state will be abolished in the future, unlike the Bakuninists, he does not take any immediate steps to try to abolish the same. His organizational strategy was to hold politics accountable to society… subaltern communities’ power to change things than a vanguard capturing power over society

மேற்கூறிய வேன்கார்டிசம் என்பது லெனினிய வகைப்பட்ட கருத்து என்பதை அறிவோம். அகில் பில்கிரேமி இதை காந்தி குறித்த ஆய்வில் வெளிப்படுத்துவார். ஆனால் சற்று மாறுபட்டு வெளிப்படுத்துவார். வேன்கார்டிசம் என்பதற்கு மாறாக  exemplariness  தானே முன் நின்று ஒன்றை செய்துகாட்டுவதன் மூலம், சரி என மற்றவர் நினைத்தால் அவர்களுடன் நிற்பது என்கிற முறை. இதை பெரியார் செய்தாரா என்பதை மதமாற்ற ஆலோசனையில் பார்க்கமுடியவில்லை. பிறருக்கான உபதேசமாகவே பெரியாரின் மதமாற்ற அறிவுரை நிற்கிறது.

அம்பேத்கர் இதில் தன் எக்சம்பளரி தன்மையை புத்தமதம் தழுவுதல் மூலம் தானே முன் உதாரணமாக நின்றார். பிறருக்கு பேசும் ஒன்றில் தான் உதாரணமாக நிற்றல் என்பதில்- மதமாற்ற  கருத்தில் பெரியார் அப்படி நிற்கவில்லை. இந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டால் இவ்வளவு சுதந்திரமாக தன்னால் விமர்சிக்கமுடியாது என்பதில் பெரியார் புகவேண்டியிருந்தது.

பெரியார் மற்றவர்களுக்காக பேசியவற்றில் தான் சொன்னபடி நடக்க முடியாமல் போன  அம்சங்கள் குறித்த உரையாடல் தொகுக்கப்பட்டு ஏதேனும் இருக்கிறதா எனத்தெரியவில்லை.

தோழர்கள் எஸ்விஆர் கீதா வந்த பெரியாரும் மார்க்சும் நெருக்கமானவர்கள் என்பதிலிருந்து மனோகரன் மாறுபடுவதைக் சுட்டிக்காட்டியுள்ளார். பெரியார் கம்யூனிசம் சோசலிசத்திற்கு எதிரானவர் அல்ல என தன்னை பலமுறை அறிவித்துக்கொண்டுள்ளார். அதேநேரத்தில் இந்திய கம்யூனிச தலைவர்களில் பலர் பிராம்மணர்களாக இருப்பதை சுட்டிக்காட்டி தன் விமர்சனங்களை வைத்துள்ளார். பிராம்மணியத்தை வைத்துக்கொண்டு கம்யூனிசம் பேசமுடியாது என்பதில் பெரியார் உறுதிபட நின்றார்.

மார்க்சியத்தின் சர்வதேசியத்தன்மை என்பதை அப்படியே பொருத்துவதை பெரியார் ஏற்க மறுத்தார். அது இந்திய சாதி- பிராம்மண மேலாண்மையை புரிந்துகொள்ளத்தவறுகிறது என அவர் விமர்சித்தார். பெரியாரின் முதலாளித்து எதிர்ப்பில் பிராம்மணிய முதலாளித்துவ ஒழிப்பு என்ற நிகழ்ச்சிநிரல் இருந்தது. வெறும் முதலாளித்துவ ஒழிப்பு என்பதை அவர் ஏற்க மறுத்தார்.

Political Brahmin Theology என்பதற்கு மாற்றான political Atheism  என்பதை பெரியாரின் சாரமாக இந்த நூல் முன்வைக்கிறது. திராவிடர்கள் அனைவரும், ஆதிதிராவிடர்கள் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என பெரியார் பேசியிருப்பார். ஆனால் அவை moments and context based not essence of Periyar  என இந்நூல் வாதாடுகிறது.

அனைவரும் இஸ்லாமியராக மாறிவிட்டால் பிராம்மணியம் இருக்காது- ஏற்றத்தாழ்வு போய்விடும் என பெரியார் பேசியதன் மீது மனோகரன் விமர்சன பார்வைகொள்ளாமல் இல்லை. அது வாயடிப்பு எனச் சொல்லாமல் இல்லை. அங்குள்ள ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் குறித்தும், கோல்வால்கர் பேசுவதுபோலவே சையத் குதுப் போன்ற ராடிகல் இஸ்லாமியர் பேசுவதையும் மனோகரன் சுட்டிக்காட்டாமல் இல்லை.

மனோகரன் இந்நூலின் வாதங்களை இப்படி தொகுத்து முன்வைப்பதாக புரிந்து கொள்ளலாம்.

பெரியாரின் பிராம்மண எதிர்ப்பு என்பது அரசியல் நாத்திகமாகும். அது பிராம்மண அரசியல் இறையியலை துவம்சம் செய்கிறது.

கடவுள்- மதம் குறிப்பாக இந்து சார்ந்தவற்றை- அதன் அரசியல் அதிகாரத்தை விமர்சிக்க பெரியார் தனது பரிபூர்ண சுதந்திரத்தை உணர்ந்தது. அதே நேரத்தில் குன்றக்குடிஅடிகளார் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை தவிர்க்காதது.

அவரது அரசியல் நாத்திகம் சமத்துவத்தை முன்வைப்பதாக இருக்கிறது.

பெரியார் வறட்டுக்கோட்பாட்டுக்குள் தன்னை தாழிட்டுக்கொள்ளது anti philosopher- critically examining political theology என்ற வகையில் செயல்பட்டது.

பெரியாரியம் என்பது உலகளாவிய விவாதப்பொருள் கொண்டவை. அவர் மார்க்சியத்தைவிட அனார்க்கிசம்- மார்க்சைவிட பகுனினிடம் நெருக்கமாக வருகிறார்.

இந்தியாவில் பிராம்மணியம் தான் ruling political theology

கார்த்திக் ராம் மனோகரனின் இந்த நூல் தமிழ் உலகில் விரிவாக வாசிக்கப்படவேண்டும் என வேண்டுகிறேன். காந்தியையும் அனார்க்கிஸ்ட் என வகைப்படுத்துவோர் உண்டு. அவரை அப்படி வசவுப்பொருளில் சங்கரன் நாயர் விமர்சித்து எழுதியதும் உண்டு.

சிகாகோ தியாகிகளை அவர்களது கிடைத்த எழுத்துக்கள் உரைகள் முலம் நாம் அவர்கள் அனார்க்கிசத்திற்கு நெருக்கமாக வந்தார்கள் என பார்க்கமுடியும். பகத்சிங்கும் மார்க்ஸ்- லெனின் வாசிப்பை கொண்டிருந்தாலும் அனார்க்கிசம்  செல்வாக்கில் இருந்தார் என்பதையும் பார்க்கமுடிகிறது. அரசாங்க அதிகாரம் என்பதுடன் நெருங்காமல் அதை கேள்விக்கு உட்படுத்தும் பலர் அனார்க்கிசத்துடன் நெருக்கமாக இருப்பதை உணரலாம். மனோகரனுக்கு பெரியார் வாசிப்பு அப்படியொரு உணர்வை கொடுத்துள்ளதை இந்த நூல் விதந்து பேசுகிறது.

24-9-2022

No comments:

Post a Comment