https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, September 30, 2022

டேவிட் ரியாஜனாவ் (David Riazanov)

 

டேவிட் ரியாஜனாவ் (David Riazanov)

நம் காலத்தின் புகழ் வாய்ந்தமார்க்சோலாஜிஸ்ட்’ தோழர் ரியாஜனாவ். இன்று மார்க்சிய உலகில் பலராலும் வாசிக்கப்படும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் நூல்தொகைகள் உருவாக காரணமான பெரும் அறிஞர். எவ்வளவு பெரும் உழைப்பை மார்க்சிய உலகிற்கு நல்கினாலும் வரலாற்றில் ஆட்சி செய்பவர்க்கு சந்தேகம் இருந்தால் அவர் இல்லாமல் ஆக்கப்படுவார் என்பது டேவிட் வாழ்க்கையிலும் சம்பவித்தது. ஸ்டாலின் ஆட்சியில்செகா’ போலீஸ் அடக்குமுறைகளுக்கு அவர் உள்ளாக நேர்ந்தது. 20 நூற்றாண்டின் குறிப்பாக 1930களில் பெரும் மார்க்சிய அறிஞராக அவர் கருதப்பட்டவர்.



ரஷ்ய கம்யூனிஸ்ட் போல்ஷ்விக் கட்சியின் மத்திய கமிட்டி முடிவையொட்டி மார்க்ஸ்- எங்கெல்ஸ் இன்ஸ்டிடுயுட் (1920-21ல்) அமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர் ரியாஜனாவ். இந்த அமைப்பை நிறுவிட தோழர் லெனின் மிக ஆர்வம் காட்டினார்.

மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுதிய சிறு துரும்பைக் கூட - துண்டு சீட்டுக்களைக் கூட விடாமல் தொகுப்பதில் பெரும் உழைப்பை நல்கியவர் ரியாஜனாவ். எதையும் விடாது என வரும்போது, இதெல்லாம் வேண்டும்- கூடாது என கருத்துக்கள் வருவதும் இயற்கைதான். அவற்றை எதிர்கொண்டு வரலாற்றை நேர்த்தியுடன் வருங்காலம் அறிய நாம் மிக நேர்மையாக இருப்போம் என்ற போராட்டத்தை ரியாஜனாவ் நடத்த வேண்டியிருந்தது. லெனினுடன் கூட இந்தப் போராட்டம் நடந்தது.  Marx- Engels GESAMTAUSGABE MEGA  என நாம் இன்று அறிந்துகொள்ளும் கொண்டாடும் அரிய மார்க்ஸ்- எங்கெல்ஸ் நூல்தொகை தொகுப்பை தன் கடும் உழைப்பால் நமக்கு தந்து போயிருப்பவர் ரியாஜனாவ்.

1930க்குள் தன் வேலைக்காக அவரால் பல மூல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. தவிர 55000 நகல்கள், 32000 வெளியீடுகள், 4.5 லட்சம் புத்தகங்கள், கிடைக்கப்பெற்ற இதழ்களின் பவுண்ட்கள் என ஏராளம் அவரால் கூடுதலாக சேகரிக்கப்பட்டன என்றால் எவ்வளவு ராட்சத கவனக்குவிப்பை அந்த  Institute of Marxism- Leninism  என்பதற்காக அவர் செய்திருப்பார். அதற்கான ஆவண கிடங்கு- நூலகம் ஒன்றை அவர் உருவாக்கினார். ஹெகல்- பாயர்பாக் தொகுப்புகளையும் அவர் எடிட் செய்தார். அவரின் மகத்தான சாதனையை

In the realm of Marxology- acquiring, preparing and publishing for the first time previously unknown writings of Marx- Engels  என பல வரலாற்றாய்வாளர்களால் புகழ்ந்துள்ளனர்.

1917 புரட்சிக்கு முன்னராகவே உலகின் பல மார்க்சியர்கள் மத்தியில் லெனின் டிராட்ஸ்கி அளவிற்கு ரியாஜனாவ் புகழ் வாய்ந்தவராக இருந்தார்.

 மார்ச் 10, 1870ல் பிறந்தவர் ரியாஜனாவ். உக்ரைனில் யூத தந்தைக்கும் ருஷ்ய தாய்க்கும் பிறந்தவர். தனது 15 வயதில் நரோத்னிக் புரட்சியாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. புரட்சிகர சிந்தனையால் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். உக்ரைன் ஒடெஸ்ஸா பகுதியில் சோசலிஸ்ட் குழுவினருடன் உறவிருந்தது. பிளக்கானாவ் தான் அங்கு எல்லோருக்கும் ஆரம்ப குரு.

ரியாஜனாவும் வெளிநாட்டு வாழ் ருஷ்ய மார்க்சியர்களை சந்திக்க செல்கிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் ஜார் போலிசாரால் கைது செய்யப்படுகிறார். அவருக்கு அப்போது வயது 19. 4 ஆண்டு கடும் சிறை. உழைப்பு முகாமில் சித்திரவதை. வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே 15 மாதம் கொடுந்தண்டனை அனுபவிக்க நேர்கிறது.

விடுதலைக்குப் பின்னர் பெர்லின் சென்று அங்கு தலைமறைவாக இருந்த ரஷ்யா மார்ச்கியர்களுடன் சேர்ந்துபோர்பா- போராட்டம்’ என்ற குழுவைத் தொடங்கினார். ஆனால் இவர்களின் குழுவிற்கு ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியின் 1903 மாநாட்டிற்கு அழைப்பில்லை. கட்சியும் போல்ஷ்விக்- மென்ஷ்விக் என பிரிந்து குழுக்களாக போராடிக்கொண்டிருந்தனர். ரியாஜனாவ் குழு இரண்டிலும் வேண்டாம் என முடிவெடுத்தனர்.

ருஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி பிற அய்ரோப்பிய நாடுகளின் வடிவத்தில் இல்லை என்ற தனது ஆய்வை பிளக்கானாவிற்கு மாற்றாக ரியாஜனாவ் வைத்தார். எனவே ரஷ்யாவில் ஜாரை தூக்கி எறிவதன் மூலம் நேரிடையாக சோசலிச பயணம் துவங்க முடியும் என்றார்.

1905ல் ரஷ்யா திரும்பிய டேவிட் தொழிற்சங்கத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் பணியாற்றினார். மீண்டும் 1907ல் கைது- நாடு கடத்தல் என்பதற்கு உள்ளானார்.  பின்னர் மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுத்துக்களை சேகரிப்பது என்பதிலும், அவை குறித்த ஆய்விலும் ஈடுபடலானார். இரண்டாம் அகில மாநாடுகளில் பங்கேற்றார். ரஷ்யாவில் ரயில்வே தொழிற்சங்கத்தை சிறப்பாக்கியவர் ரியாஜனாவ். 1917ல் பிப்ரவரி எழுச்சியில் ஜார் அகற்றப்படுகிறார் என அறிந்து மீண்டும் ரஷ்யா வர வாய்ப்பு கிட்டியது. பின்னர் போல்ஷ்விக்குகளுடன் இணைந்து அக்டோபர் புரட்சியில் பங்காற்றினார். கட்சி பள்ளிகளுக்கு டேவிட் ரியாஜனாவ் பொறுப்பாக்கப்பட்டார்.

1920ல் அறிவியல் கழகம் உருவாக ரியாஜனாவ் துணையாக இருந்தார். பிரெஸ்ட்- லிட்டொவஸ்க் உடன்பாட்டின்போது லெனினை அவர் விமர்சித்தார். குழுக்களில் சிக்காமல் தன்னை முடிந்தவரை தனித்து வைத்துக்கொள்ள முயற்சித்தார். அப்போது அவரின் புகழ் வாய்ந்த வாக்கியம் I am not a Bolshevik- not a Menshevikand not aLeninist. I am only a Marxist and as Marxist  I am a communist  என்பதாகும்.

ஆட்சி குறித்த விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள் தங்கள் ஆட்சியாக இருந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது எனக் கருதினார் ரியாஜனாவ். மரணதண்டனையை லெனின் ஆட்சி ஒழிக்கவேண்டும் என்ற அவரது வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. அதேபோல் 1921ல் தொழிற்சங்க மாநாட்டில் அவர் ஸ்டாலினுடன் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து மாறுபட்டு பேசினார். கட்சியின் தொங்கு சதையாக தொழிற்சங்கத்தை வைக்காமல் அதன் சுயேட்சை வர்க்கத்தன்மையை நாம் வளரவிடவேண்டும் என்றார். அவர்கள் சற்று கீழிறங்கி கூட பேசிக்கொண்ட பதிவு கிடைக்கிறது.

ஸ்டாலின் ரியாஜனாவைப் பார்த்து  Shut up you Clown- கோமாளியே நிறுத்து என பேசியதாகவும் பதிலுக்கு ரியாஜனாவ்  Don't make a fool of yourself. Everybody knows theory is not your field  என்றாராம். அதாவது கோட்பாடு விஷயங்கள் உமக்கு பற்றாது என்பது எல்லாருக்கும் தெரியும்- முட்டாளாக்கிக்கொள்ளாதீர்.  இப்படி எல்லாம் மோதிக்கொண்டபின்னரும் அவர் பல செயல்களை செய்துள்ளார். செய்யவும் விட்டுள்ளனர் என்பதையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.

 ரியாஜனாவ் மென்ஷ்விக்குகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது கசியத்துவங்கியது. மார்க்ஸ்-லெனின் கழகத்தில் இருந்த ஆய்வாளர் ரூபின் மென்ஷ்விக் தலைமறைவு ஸ்தாபனத்தை நடத்துகிறார் என்று சொல்லப்பட்டது. அவர்லாயர்’ ஆக இருந்தும், தன்னை காத்துக்கொள்ள முயற்சித்தும் அது பயனளிக்காது சிறைத்தள்ளப்படார். ரூபின் அச்சுறுத்தப்பட்டதால் ரியாஜனாவ் காரணம் என வாக்குமூலம் தந்தார்.

 ரியாஸனாவ் மீதான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. மா-லெ கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டர். அப்போது மெகா நூல்தொகை திட்டத்தில் 42 வால்யூமிற்கான மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுத்துக்கள் அவரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. 5 வால்யூம் முழுமையாக எடிட் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்சியும் அவருக்கு கதவடைத்தது. அவரை சாரடோவ் நூலக பணிக்கு மாற்றினர்.

1937ல் டிராட்ஸ்கியுடன் தொடர்பு என அவர் கைது செய்யப்பட்டர்.சோவியத் யூனியனின் சுப்ரீம் கோர்ட்டின் மிலிட்டரி பிரிவு அவரை குற்றவாளி எனத் தீர்ப்பிட்டது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றவும்பட்டது. குருசேவ் காலம் அவரை 1958ல் மறுபரீசிலனை செய்து அவர் குறித்துபேசுதல் செய்தது. கோர்பசாவ் காலத்தில் மீண்டும் அவர் பேசப்படலானார்..

ஸ்டாலின் காலத்து மீறல்கள் குறித்து ஏராள பதிவுகள் வந்துள்ளன. அதில் ஒன்றான பதிவாக மெட்வெதேவ் பதிவும் இருக்கிறது.

Roy A. Medvedev, who has carried out a detailed investigation of the case, argued in Let History Judge: The Origins and Consequences of Stalinism (1971) that the Union Bureau of Mensheviks did not exist. "The political trials of the late twenties and early thirties produced a chain reaction of repression, directed primarily against the old technical intelligentsia, against Cadets who had not emigrated when they could have, and against former members of the Social Revolutionary, Menshevik, and nationalist parties."

ரியாஜனாவ் ஜனவரி 21, 1938ல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டார்.

ரியாஜனாவ் எழுதிய மார்க்ஸ்- எங்கெல்ஸ் வாழ்வும் செயலும் குறித்த புத்தகம் பலராலும் வாசிக்கப்பட்ட ஒன்று. அது தமிழிலும் பாரதி புத்தக நண்பர்களால் கொணரப்பட்டுள்ளது.

இன்று நாம் காணும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் அறிவு கிடங்கு புதையலை தேடிக்கொணர்ந்த பெரும் மார்க்சிய அறிஞரின்  150 ஆம் ஆண்டு உலகில் மெளனமாகவே போனது வரலாற்றின் சோகம்..

Dissent  என்பதை சகிக்காத ஆட்சியர் அதற்கு பக்கபலமாக நின்ற சமூகங்கள் தங்களின் அற்புத மனிதர்களை அவர்களின் உழைப்பை கொண்டாடாமல்விட்டாலும் அவர்களை உயிர்ப்பலி கேட்டே நகர்ந்துள்ளன என்பதும் வரலாறு தரும் சோகம்.

27-9-2022

No comments:

Post a Comment