Skip to main content

தோழர் கோர்பசேவ் மறைவு அஞ்சலி

 

                    தோழர் கோர்பசேவ் மறைவு அஞ்சலி

கோர்பசேவ் பதவிக்கு வந்தவுடன் அவரின் பெரிஸ்த்ராய்கா- கிளாஸ்நாத் குறித்து பல தலைவர்கள் நேரிடையாக பேசியதைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியவர்களில் நானும் ஒருவன். ராஜேஸ்வரராவ் திருவாரூரில், என் பலராம் தஞ்சாவூரில், பரதன் தஞ்சாவூரில், தோழர் ஞானையா பல வகுப்புகளில் என அப்போது அவர்கள் பேசியதும் விவாதித்ததும் நினைவிற்கு வருகிறது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் கோர்பசாவ் உரைகள் அவரது அட்டைப்படத்துடன் சிறுவெளியீடுகளாக அப்போது எங்களுக்கு கிடைத்தன. மெயின்ஸ்ட்ரீம் ஏராள கட்டுரைகளை எழுதியது. சிபிஅய் தனது பார்ட்டி லைஃப் பத்திரிகை மூலம் எதிரும் புதிருமான ஏராள கட்டுரைகளை வெளியிட்டது. என் பலராமும், பி பரதனும் எதிரும் புதிருமாக இரு பார்வைகளை வைத்த கட்டுரைகள் ஓரளவிற்கு மனதில் நிழலாடுகின்றன. சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர் இவை பெருமளவிலான விவாதங்கள் ஆயின.



நியுஏஜ், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, இண்டெர்னேஷனல் புல்லட்டின், மார்க்சிஸ்ட் , பிராண்டியர், மெயின்ஸ்ட்ரீம், ஜனதா, மன்திலி ரிவ்யூ என வெளிவந்த கட்டுரைகளை கையில் தாங்கிக்கொண்டு அவற்றை சுட்டி பேசிக்கொண்டு தெருவில், சிபிஎம் அலுவகத்தில், ஞானையா முகாம்களில்  இருந்த காலமது. கட்சி காங்கிரஸ்கள் கூடி சோவியத் வீழ்ச்சி குறித்து தனி ஆவணங்களை அணிகளுக்கு அனுப்பி புரியவைக்க முயற்சித்ததும் நினைவிற்கு வருகிறது. சோசலிசம் வீழவில்லை- ஒரு மாடல்- சோசலிச கட்டுமான சோவியத் மாடல் சோதனைக்கு உள்ளானது. மார்க்சியம் பொருந்தக்கூடியதே என்றமுடிவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தன.

பல நாடுகளில் கட்சிகள் தங்கள் பெயரை அமைப்பு விதிகளை மாற்ற முனைந்தபோது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை தங்கள் அணிகள் சோர்ந்து போவதை தடுப்பதற்கான பெருமுயற்சிகள் எடுத்தனர்.

அப்போதைய என் குறிப்பு நோட்டை கோர்பி மறைவையொட்டி அதன் தூசு வாசத்துடன் – சைனஸ் வதையுடன் பார்த்தேன்.  லெனினிலிருந்து மாலங்கோவ் வரை என லண்டனில் பேராசிரியராக இருந்த ஹக் வாட்சன் புத்தகத்தை படித்தது ஆரம்பத்திலேயே இருந்தது.

அதிலிருந்து சில வரிகள்

“ சிலநூறு பேர்கள்தான் சண்டையில் அக்டோபர் புரட்சி காலத்தில்..4 நாட்கள் சண்டை..போல்ஷ்விக் அரசாங்கம் வடக்கு, மத்திய ரஷ்யாவில்..பின் சைபீரியாவில்

அரசியல் நிர்ணயசபையில் 410 சோசலிஸ்ட் புரட்சிவாதிகள், 175 போல்ஷ்விக், 16 மென்ஷ்விக், 17 லிபரல்கள், மீதி உபரிகள்..தேர்தலை மக்கள் தீர்ப்பாக ஏற்கமுடியாது – சோவியத்துகளே அதிகாரம் மிக்கவை என்றார் லெனின். ஆனால் லெனினின் வாதத்தை அரசியல் நிர்ணய சபை நிராகரித்தது..”

தொடர்ந்து எரிக் பிராம், கிராம்சி, பெளலண்ட் சாஸ், மிஷேல் பூக்கோ, எட்வர்ட் செய்த், அம்ப்ர்த்தோ எக்கோ, தமிழவன் அமைப்பியல்,, மார்க்யூஸ் என என் குறிப்புகள் அந்த நோட்டில் செல்கிறது.

அடுத்த குறிப்பாக ரெஜி சிரிவர்த்னேவின் சோவியத் யூனியனின் உடைவு காணப்படுகிறது. இதையும் God that Failed இரண்டையும் ஜெயமோகன் அனுப்பி படிக்க சொன்னார். ரெஜியைப் படித்தபோது எழுதியிருந்த குறிப்பிலிருந்து சில வரிகள்..

 கோர்பி சொன்னார் – வரலாறு திறந்திருக்கிறது என்றோ அது முன்னரே திட்டமிட்ட தண்டவாளத்தில் செல்கின்றது என்றோ நாம் கருதக்கூடாது.

இது விதிவாதம்- டிடெர்மினசிசம் என்பதற்கானவை குறித்த எச்சரிக்கை அறிவுரை போல் தோன்றியது.

ரெஜி கேள்வியை எழுப்பினார்  - சோவியத் உள் அமைப்பிலேயே எதேச்சகரமானது என்றால் கோர்பி போன்ற சீர்திருத்தவாதியை எப்படி அது உருவாக்கியது. அங்கு தாராளவாத கூறுகளும் இருந்திருக்க வேண்டாமா?

” கிழக்கு அய்ரோப்பாவில் நிராகரிக்கப்பட்டது ஸ்டாலினிசம் என சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் லெனினிசமும் கூடத்தான்..”

“ ஒரு புரட்சிகர குழாம் முதல் தரமானது. அது எந்த வரலாற்று குறிக்கோளை தேர்ந்துகொண்டதோ அதை நோக்கி ஏனையோரை தலைமைதாங்கி நெறிப்படுத்தி அழைத்துச் செல்ல உரித்துடையது என்ற சிந்தனை…கேள்விக்கு உட்படுத்த முடியாத சித்தாந்தமாக அரசியல் ஞானத்தின் ஊற்றுமூலமாக லெனினிசன் எனச் சொல்லி லெனின் தெய்வமாக்கப்பட்டது…”

அப்புத்தகத்தின் பக் 89 எனப்போட்டு எழுதிய குறிப்பு

”மனித குலத்தை இறுதியாக அதன் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் விடுவிக்கும் ஒரு பூரணத்துவமான சமூகத்தை உருவாக்க முடியும் என்று நம்புவது மிகவும் ஆபத்தானதாகும்”

அடுத்து அய்சக் டாயிச்சர் எழுதியது பற்றிய குறிப்புகள்- அதில் புகாரினை அவர் துன்பியல் நாயகன் என எழுதியிருப்பார். இப்போது நம் காலத்தில் கோர்பி அப்படிப்பட்ட துன்பியல் நாயகனாக தெரிகிறார்.

சார்த்தர் எழுதிய Existentialism and Human Emotions   (sent by Jayamohan) என்ற தகவலுடன் குறிப்பெடுத்துள்ளேன். அதில் காணப்பட்ட வரிகள் அப்புத்தக பக் 30-31 எனப்போட்டு எழுதியுள்ளேன்.

I do not know what will become of the Russian Revolution…that at the present time that the proletariat plays a part in Russian that it plays in no other nation. But I can’t swear that this will inevitably lead to a triumph of the proletariat..I have got o limit myself to what I see

அடுத்து தோழர் கோவை ஞானியின் புத்தகம் பற்றியும், டி எஸ் இலியட் பற்றியும் இருக்கிறது.

இலியட் வரிகளாக -  ஒவ்வோரு தலைமுறையும் ஒவ்வோரு தனிமனிதனைப் போலவே ரசனைக்கான தனது சொந்த வரையறைகளை கலைச்சிந்தனையில் கொள்வதுடன் கலையில் தன் சொந்த தேவைகளை நாடுகிறது.

நுஃமான்,ஓஷோ, இ எம் எஸ், நேதாஜி, மண்டேலா, அக்ஞேயா, அரவிந்தர், தளய சிங்கம்,சுந்தர ராமசாமி, அ.மார்க்ஸ், சூசன் சோன் டக், நகுலன் என என் குறிப்புகள் சிறு அளவில் செல்கின்றன. நகுலனை வங்கித் தலைவர் ரகு கொடுத்திருக்கவேண்டும். அதில் ஒரு வரி

”மனம் தெளிந்த நிலையில் வெகு தொலைவிலிருந்து தகவல்கள் வந்து சேரும்.”

ஓஷோவிடமிருந்து

”வாழ்விற்கு எதிர்முனை தேவை…உயிர்ப்பான சமன் உயிர்ப்பான மெளனம் வேண்டும். முயற்சியில் ஓய்ந்து போய்விடு. ஓய்வெடுக்கும்போது அது நிஜமான ஓய்வாக இருக்கும். பாதையாக இரு- சர்வாதிகாரியாக இருக்காதே”

அடுத்து அந்த என் நோட்டின் 127 பக்கத்தில் ஆகஸ்ட் 1994ல் சிபிஅய் எம் எல் லிபரேஷன் செண்ட்ரல் பார்ட்டி ஸ்கூல் பேப்பர்ஸ் குறிப்புகளை எழுதியுள்ளேன். அது போஸ்ட் மாடெர்னிசம் குறித்த விமர்சன உரையாடல். அதில் ஓரிடத்தில் பூக்கோ எனப்போட்டு மேற்கோளை power is that which represses என குறித்துள்ளேன். தொடர்ந்து நிறப்பிரிகை இதழ் 8 பின் நவீனத்துவம் பற்றிய குறிப்புகளாக இருக்கிறது.

காவ்யாவின் காட்டு மலர்கள்,  பூரண சந்திரனின் ஸ்ட்ரக்சுரலிசம், காம்யூவின் மனிதநேயம் ஸ்ரீராம், வ கீதாவின் காம்யூ, நிகழ், படிகள், ஊடகம், ழான் போத்ரியா, ரவிக்குமார், அந்தோணி எஸ்தோப் சொல்லாடல், கைலாசபதி, வித்தியாசம் இதழ், ஜமாலன், அமீபா 2 என என் குறிப்புகள் சிறு அளவில் செல்கின்றன.

அமீபா  வரிகள் வெள்ளை அறிவியல்வாதத்தின் கொடுமை, இந்திய பார்ப்பன பாசிசம் என்பதை விமர்சித்துவிட்டு இறுதிவிடுதலையை அறிவிக்கும் பாட்டாளிவர்க்க கதையாடல்கள் பற்றிப் பேசுகின்றன.

” எல்லா சரித்திரத்தையும் அறியும் பொதுமுறை பன்மை அழிப்பு உத்தியாகச் செயல்படுகிறது. உலகின் தொல்சமூக அமைப்புக்களை, ஆதிகுடிகளை, நாடோடிகளை அர்த்தமற்றவையாக இருப்பு நியாயம் அற்றவையாக மாற்றியதில் இந்த பாட்டாளி வர்க்க தொழில்நுட்ப வன்முறை பெரும்பங்கு வகிக்கிறது”

“ சரித்திரம் என்பது நிகழ்காலத்தின் அதிகாரம் கூறும் மாயக்கதை…வரலாறு எப்போதும் பேசப்படமுடியாத எண்ணற்ற மெளனங்களை புதைக்கும் மொழிப்பரப்பு… அறிவு அதிகாரத்தின் சிக்கலான வெளியில் உற்பத்தியாகிறது. வித்தியாசங்கள், வேறுபாடுகள், பன்மை உருவங்கள் மட்டுமே வாழ்தலின் செயல்…”

Althusser and the Semiostics of Karl Marx   என சிறிய குறிப்பு எடுத்துள்ளேன்.  சித்த பிஸ்வாஸ் பால் ராப்சன் நியுஏஜ் கட்டுரையுடன் அந்த குறிப்பு நோட்டு தன் பக்கங்களை பவுண்ட் செய்துகொண்டுள்ளது. ராப்சன்-ல் கண்ட வரி 

          I must keep fighting unil I am dying

கோர்பசாவ் மறைந்தார். அவருக்கு அஞ்சலி என எழுதத் துவங்கியவன் அவரால்- அங்கிருந்த உள் மற்றும் வெளிநிலைமைகளால் சோவியத் என்ற சோதனை முடிவிற்கு வந்த காலத்தின் எண்ணத்தை எல்லோரையும் போல் என்னாலும் தவிர்க்கமுடியவில்லை.

தோழர் கோர்பியை பற்றிய மதிப்பிடல் தீர்ப்பிடல் என்பதைவிட அந்த தாக்கத்தில் அக்காலத்தில் என் சிந்தனை அலைக்கழிப்புகள்- தேடல் அலைச்சல்கள் ஓயாது எப்படி பயணப்பட்டன என்பதை கிடைத்த ஒரு நோட்டு புத்தகத்தைக்கொண்டு இங்கு எழுதிப்பார்த்துள்ளேன்.

சோவியத்துடன் சேர்ந்து தன் வரலாற்று முக்கியத்துவத்தையும் மூடிக்கொண்ட அந்த நாயகனுக்கு என் அஞ்சலி

2-9-2022 20 hrs.

 

 

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு