https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, September 13, 2023

ஈரோட்டுப் பாதை சரியா - ப. ஜீவானந்தம்

 தோழர் ஜீவாவின் முழு திரட்டை என் சி பி எச் 2007 ல் கொணர்ந்தார்கள். இரு பாகங்களாக 1938 பக்கங்களில் கொணரப்பட்ட அத்தொகுப்புகளுக்கு பேரா அரசு பதிப்பாசிரியர்.

2002ல் சந்தியா பதிப்பகம்  ஜீவாவின் கட்டுரையான ‘ஈரோட்டுப் பாதை சரியா’ என்பதை சிறு வெளியீடாக பேரா அரசின் முன்னுரையுடன் கொணர்ந்தனர். சுயமரியாதை இயக்கத்திலிருந்து , காங்கிரஸ் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி என பயணித்த ஜீவா, சுயமரியாதை இயக்கம்- பெரியாரின் கருத்துக்களை முன்வைத்து இதில் எதிர்வினையாற்றிருப்பார். அதில்  உப்பு சத்தியாகிரகத்தை பெரியார் ஏற்காததை ஜீவா சுட்டிக்காட்டியிருப்பார்.

பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையை கண்டித்து தீர்மானம் போடவேண்டும் என சில சுய மரியாதை இயக்க இளைஞர்கள் கோரியபோது, ஆர்.கே சண்முகம் அவர்கள் தலைவராக தனது தீர்ப்பைச் சொன்னார். சுயமரியாதை இயக்கம் ‘அரசியலில் கலக்கலாமா’ என்ற முடிவு இருந்தால்தான் தீர்மானத்தையே எடுத்துக்கொள்ள முடியும் என்றார்.  பெரியார் உடனே சு.ம.இ ‘அரசியலில் கலக்ககூடாது’ எனச் சொன்னதால் , தீர்மானத்திற்கு இடமில்லாமல் போனதை ஜீவா இதில் சுட்டிக்காட்டியிருப்பார். 

அரசியலில் பங்கேற்பதில்லையானால்,  நீதிக்கட்சி வெற்றிக்கு ( காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்கும் முன்னர்) பெரியார் காரணம் எனச் சொல்வது சரியாகுமா என்கிற தொனியிலான கேள்வியை ஜீவா இதில் எழுப்பியிருப்பார்.

1932 தஞ்சை  மாநாட்டில் வருத்தமுற்ற முனுசாமி நாயுடு விலக நேர்ந்தது. பொப்பிலி அரசரை நீதிக்கட்சி தலைவராக்கியதுடன், முதலமைச்சரும் ஆக்கினர். இவருக்கு சுயமரியாதைக்காரர்கள் தஞ்சையில் ஆதரவு தந்ததை கேள்விக்குள்ளாக்குவார் ஜீவா.

குடியரசுப் பதிப்பகம் சோசலிசம், உழைப்பாளிகளுக்கு ஏன் உலகமில்லை என்ற சிறு நூல்களை நரசிம்மன், சிவசாமி  ஆகியோர் எழுதி வெளியிட்டது.  இருவரும் ஆரியர்கள் . இது ஆரிய சூழ்ச்சி எனப் பெரியார் அப்போது நல்லவேளை சொல்லவில்லை என்கிறார் ஜீவா.

பொப்பிலி  நீதிக் கட்சி ஆட்சியில்தான் பெரியார் எழுதிய ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்’ என்பதற்கு பெரியார் தண்டிக்கப்பட்டார் என்கிற செய்தியையும் ஜீவா இதில் சொல்கிறார்.

ஈரோட்டில் பெரியாரை சந்தித்த ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம், சுயமரியாதை இயக்கத்தை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைக்க ஒப்புக்கொண்டார் என்ற செய்தியை ( என்றைய தேதி  எழுத்து பூர்வ ஆதாரம் என ஜீவா இதில் தரவில்லை) ஜீவா இந்த நூலின் 23 ஆம் பக்கத்தில் தந்துள்ளார். ஜெயப்பிரகாஷ் அவர்களை சந்திக்கும்படி ஜோலார்பேட்டையில் இருந்த ஜீவாவிற்கு தந்தியும் அனுப்பினாராம் பெரியார்.

பெரியார் ஏற்ற இணைப்பு நடை பெறவில்லை. இரண்டே நாட்களில் பெரியார் மாற்றிக்கொண்டுவிட்டார். ‘காங்கிரஸ் மேனியா’ வில் சில வாலிபவர்கள்  இருக்கிறார்கள் என விமர்சிக்கலானார். இவ்விடத்தில் ஜீவா “ஷனச்சித்தம் ஷனப் பித்தம்”  ‘பெரியார்’களிடம் உண்டு என எழுதியுள்ளார். 

காங்கிரஸ் எதிர்ப்பில்  நின்று சோசலிசம் எதிர்த்த ஆர் கே ஷண்முகத்தையும், சுயமரியாதை இயக்கத்தை கேலி பேசிய நாயுடுவையும் பெரியார் ஆதரித்தார்.  இதை ஜீவா விமர்சித்தார்.

பகத்சிங்  ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ எழுத்தை ஜீவா மொழிபெயர்க்க, ஈ வெ கிருஷ்ணசாமி வெளியிட இருவரும் கைது செய்யப்பட்டனர். பொப்பிலி ஆட்சிதான். 

இங்கு ஜீவா எழுதுவது

“ சர்க்கார் ( பிரிட்டிஷ்) அழிவு நடவடிக்கையைக் கண்டு ஈவெரா மிரண்டார். ஆர் கே சண்முகம்  போன்றவர் தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர். உள்நாட்டு மந்திரி பன்னீர்செல்வம், சி டி நாயுடு மூலம் நாஸ்திக பொதுவுடைமை பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழித்துவிட முடிவு கட்டிவிட்டதென்றும் ஈவெராவை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்”

“ என்னை ( ஜீவாவை) மானங்கெட்டத்தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளியே வரும்படி ஈவெரா , கே எம் பாலசுப்பிரமணியம் மூலம் கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பி கட்டாயப்படுத்தினார் ( அக்கடித ஆவணம் இந்த நூலில்  ஜீவாவால் இணைக்கப்படவில்லை) . ‘பெரிய நாயக்கர்’ வேண்டுமானால் மன்னிப்புக் கொடுத்துவிட்டு போகட்டும், தான் முடியாதென்றும் பிடிவாதமாக கூறினேன். நான் மன்னிப்பு கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டுவிடும் என்றும், இது சர்க்கார் சட்டத்தை நன்கு அறிந்த ஆர் கே ஷண்முகம்கருத்து என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்றும் குடியரசில் எழுதிவிடுவதாக ஈவெரா பாலசுப்பிரமணியம் மூலம் கட்டாயப்படுத்தினார்”

“ இந்த நிலையில் சு.ம.இயக்கம் ‘நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும் கொள்கையுடைய பொது உடைமை இயக்கமல்ல’ என்று அரசாங்கம் 

நம்பும்படி ஏதாவது செய்ய வேண்டியதாயிற்று “ என ஜீவா இதை முடித்திருப்பார். இந்த செய்தி பக் 26ல்  இந்த சிறு நூலில் இருக்கிறது. இங்கு ஜீவா - நேரிடையாக மன்னிப்பு  எழுதிக் கொடுத்தாரா, என்ன எழுதிக்கொடுத்தார் என்பதை சொல்லவில்லை . ‘ஏதாவது செய்யவேண்டியிருந்தது ‘ என்கிற பதிவை அவர் செய்திருப்பார்.

பெரியார் ‘மத்திய சர்க்கார் தலையில் பழியைப்போட்டு’, 

மாகாண ஜஸ்டிஸ் கட்சியின் குற்றவாளித்தனத்தை மறைத்ததாக ஜீவா எழுதியிருப்பார். இங்கு கடுமையான விமர்சனங்களை ஜீவா வைப்பதைக் காணலாம்

1935 மார்ச் 10 ல் பெரியார் விட்ட  அறிக்கைப்பற்றியும்  ஜீவா கடுஞ்சொற்களால் பேசியிருப்பார்.  காங்கிரஸ் ஆட்சியைவிட  பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்பிராயம் என இதில் பெரியார் தெரிவித்திருந்தார்.

பக் 28ல் ஜீவா  எழுதுகிறார் “ ஈவெரா மன்னிப்புக் கொடுத்த பிறகு , உண்மையான சுயமரியாதை தர்மிகள் ஈவெரா தலைமையை வெறுத்தனர்…” 

திருத்துறைப்பூண்டி மாநாட்டில்  ஜீவா பெரியாரை விமர்சித்து வெளியேறினார். சுயமரியாதை சமதர்ம கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் திருச்சி மாநாட்டிற்கு 1936 நவம்பரில் டாங்கே வந்து உரையாற்றியுள்ளார். பின் அது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தது. இங்கு ஜீவா ‘பெரியார் மன்னிப்பு கொடுத்த பிறகு’ என எழுதுவதைப் பார்க்கிறோம். ( பெரியாரிய தோழர்கள் பெரியார் மன்னிப்புக் கேட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டு வருகின்றனர்)

இந்த கையேட்டில் பெரியார் தமிழ் நாட்டின் ஜின்னா ஆனார் என்ற விமர்சனத்தையும், அம்பேத்கர் ஜின்னா தயவை நாடி காங்கிரசை எதிர்க்க வட நாட்டிற்கு காவடி எடுத்தார் எனவும் ஜீவா விமர்சிக்கிறார். ‘துரோகி எம் என் ராயுடன் ‘ ஈவெரா ஆருயிர்த் தோழனானதைச் சொல்கிறார். ஈவெரா ‘தமிழ் நாட்டின் எம் என் ராய்’ ஆகிவிட்டார். ஏகாதிபத்திய பரம்பரை பக்தர்களின் ஜஸ்டிஸ் கட்சி தலைவரான பின் அதைத்தான் செய்யமுடியும் என கடுமையாக விமர்சனம் செல்கிறது.

மேலும் சென்னை கவர்னர் சர் ஆர்தர்ஹோப்பின் அந்தரங்க நண்பரும் ஊழியரும் ஆனார் ஈவெரா. கவர்னரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார்கள் என ஜீவா எழுதியுள்ளார்

இறுதியாக ஜீவா இக்கட்டுரையை இப்படி முடித்திருப்பார்

“ ஈரோட்டுப் பாதையின் இருபது வருட சரித்திரத்தை எனது கட்டுரையில் குறிப்பிட்டு வந்துள்ளேன். அந்தச் சரித்திரம் எடுத்துக் காட்டுவதென்பது ஈவெரா என்றும் சமூகப் புரட்சிக்கு விஞ்ஞானியாக பாதை காட்டியதில்லை..புரட்சி கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார். ஜனநாயக ஸ்தாபனங்களைத் திருத்துவதற்குப் பதில் அழிக்க முற்பட்டிருக்கிறார்..இந்நாட்டில் பிற்போக்கு சக்திகளான ஜமீந்தாரி நிலச்சுவான்தார்- முதலாளி வர்க்கங்களின் கையாளாக கடனாற்றி வந்துள்ளார்..பிற்போக்கு பணமூட்டைகளின் பாதை ஈரோட்டுப்பாதை..”

ஆதாரம்  ஈரோட்டுப் பாதை சரியா  - ப. ஜீவானந்தம்

No comments:

Post a Comment