https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, January 28, 2023

சுப்பிரமணிய சிவாவின் எண்ணங்கள்

 

சுப்பிரமணிய சிவாவின் எண்ணங்கள்

சுப்பிரமணிய சிவா தமிழகம் அறிந்த தீவிர தேசபக்தர். விடுதலைப் போராளி. வஉசி யின் தோழராக இருந்து அவருடன் பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளை அனுபவித்தவர்.

சிவா வெள்ளையுள்ளம் கொண்டவர். ஆனால் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப்பேசக்கூடியவர். திலகர் அணியில் நின்ற வ உ சியுடன் நின்றவர். அன்னி பெசண்ட் விமர்சகராக இருந்த டாக்டர் எம் சி நஞ்சுண்டராவ் சிவாவிற்கு சிகிட்சை அளித்தவர். அந்நிய ஸ்திரி நமக்கு சுதந்திரம் வாங்கித்தர வேண்டுமா என பேசிக்கொண்டிருந்தவர்.



சிவா எப்போதும் உரத்து சிரிப்பாராம். முகஸ்துதி செய்ய மாட்டாராம். திரு வி கவை தோழமையுடன் ‘என்ன விளக்கெண்ணெய் முதலியார் என்பாராம். உரிமையுடன் ரூ 10 தாரும் எனக்கேட்டு வாங்கிச் செல்வாராம். சிவா உரிமையாகக் கேட்டால் திரு வி க அதை கடமை எனத் தருவார்.

ஒருமுறை கல்கியிடம் என்ன ஓய் இராட்டை சுற்றினால் சுயராஜ்யம் வந்துவிடுமா என கேலியாக சிவா கேட்டாராம்.

1884 அக்டோபர் 4ல் வத்தலகுண்டில் பிறந்த சிவா ஜூலை 23 1925ல் இளம் வயதிலேயே பாப்பாரப்பட்டியில் மறைந்தார். கிடைத்த போலீஸ் உத்யோகத்தை சில நாளில் உதறிவிட்டவர். 15 வயதில் மணந்த  மீனாட்சியை 18 வயதிலேயெ பிரிந்து தேசாந்திரம் சுற்றியவர். திருவனந்தபுரம் சுதானந்த சுவாமிகள்தான் இவரை சுப்பிரமணியுடன் சிவா என சேர்த்து அழைத்தவர்.

சிவா தன்னை சுதந்திரானந்தர் என்றும் அழைத்துக்கொண்டுள்ளார். சிவா பிரிட்டிஷ் அரசால் 1908 ஜூலை7 முதல் 1912 நவ 2 வரை கொடுந்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். கேழ்வரகு அரைத்தல், பருத்தியடித்து பஞ்சாக்குதல், கம்பளிரோம வேலை என தண்டிக்கப்பட்டார். சரீரம் பெரும் பாதிப்புக்குள்ளானது.  சிறையில் எழுதியதுடன், விடுதலைக்குப் பின்னர் ஞானபாநு, பிரபஞ்ச மித்ரன், இந்திய தேசாந்திரி என பத்திரிகைகளில் எழுதலானார்.

சிவாவின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை படிக்க வாய்ப்பு கிட்டியது. அதில் அவரது விழைவுகள் எண்ணச் சிதறல்களை காணநேர்ந்தது. சிவா அகிம்சையை கொள்கைநிலை என ஏற்காதவர். காந்தியுடன் விவாதம் மேற்கொண்டவர். அரசாங்கத்திற்கு எழுத்துபூர்வமாக என்ன சொல்லி வெளிவந்தாரோ அதை சிவா அனுசரிக்கவேண்டும் என காந்தி அவருக்கு அறிவுறுத்தியிருந்தார். அதேபோல் வஉசி யுடன் சேர்ந்துகொண்டு ருக்மணி அருண்டேல் திருமணம் தொடர்பாக சற்று கலாட்டா செய்தவர் சிவா. இப்படியான சில நிகழ்வுகளில் அவர் மீதான பார்வை ஒருவருக்கு மாறுபடலாம். ஆனால் அவரின் இந்தியா குறித்த பக்தி மெய்யானது என்பதை நாம் அவரது எழுத்துக்களில் காணமுடியும்.

சிவா 1913ல் ஞானபாநு எனும் மாத இதழைத் துவங்கி நடத்தி வந்தார். அதை தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் அவர் பிரபஞ்ச மித்திரன் என்கிற வாரப் பத்திரிகையை 1916ல் நடத்தினார். 1923ல் அவர் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயிலுக்கான நிலத்தை வாங்கி அதற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்தார். ஜூலை 23, 1925ல் அவர் தனது 41 வயதிலேயே மரணமுற்றார். அரசின் அடக்குமுறைகள், ஓயாத அலைச்சல், உடல் உபாதை சிறு வயதிலேயே அவர் வாழ்வை விழுங்கக் காரணங்களாயின.

                                        2

சிவா அவர்கள் எழுதிய சில கட்டுரைகளை வாசித்தபோது அவர் மிகவும் மன எழுச்சி நிறைந்தவராக எதையும் அவ்வாறே வெளிப்படுத்துபவராகவும் இருப்பதைக் காணமுடிந்தது.

ஈஸ்வர சிருஷ்டியின் இயற்கை விநோதங்களை மனிதனுக்கு எடுத்துக்காட்ட வல்லது இந்திய தேசம் எனக் கருதினார் சிவா.

மனிதன் பெருமையைத்தான் விரும்புகிறான். பரிபூரணம் அவனுக்கு விருப்பமானது. ஸ்தூல சுகம் என்றால் குடிசை போதும். ஆனால் ஆத்ம சுகம் வேண்டுமெனில் பிரபஞ்சம் போதாது. தான் யார் என்ற கேள்வி மனிதனுக்கு முக்கியமானது என வினவி அதற்கு பதிலளிக்க சிவா முயற்சிக்கிறார். மனுஷிய ரகஸ்யத்தை எவருமே அறியார். மனிதனே மனிதனுக்கு ஆச்சர்யமான வஸ்து என்றார் சிவா.

இப்போது உள்ள இந்தியனை வைத்து நமது பெருமையை எடைபோடவேண்டாம். பர்வதக் குகைகளிலும் ஆரண்ணியங்களில் உள்ள மகாத்துமாக்களையும் புண்ணிய தீர்த்தங்களை தர்சிக்க எமனையும் எதிர்த்து நின்ற அந்த பண்டைய இந்தியனை சிவா ஆதர்ஷணமாக முன்வைக்கிறார். இதை அவர் 1914ல் எழுதியுள்ளார்.

இந்தியர்களுக்கு எப்படிப்பட்ட கல்வி வேண்டும் என்று விவாதித்த சிவா சில முன்வைப்புகளைத் தந்தார்.

இந்தியாவிற் பிறந்த எல்லோரும் ஒரே தாயின் வயிற்று மக்கள், ஒருவரைப் பீடிக்கும் துன்பம் எல்லோரையும் பீடிக்கும், இது நிச்சயம் என்ற எண்ணத்தை பதிய வைக்கும் கல்வி வேண்டும். ஹிருதயமும் புத்தியும் விரிந்து விசாலமாகும்படியான கல்வியை அளிக்கவேண்டும். ஜன சமூக உணர்ச்சி, பொதுஜன ஊக்கம் போன்றவை ஸ்வய நலமற்று வேலை செய்தலில்தான் வரும். தேச நன்மையைக் கருதி ஸ்வய நலமற்று உழைத்தல் குழந்தைகளுக்கு பாடமாகவேண்டும். குழந்தைகள் இந்தியாவிற்காகப் படிக்கிறார்களா? இந்தியாவினிடத்தில் பக்தி செலுத்துகின்றார்களா? என்று பார்ப்பது அவசியம் என்றார் சிவா.

 இந்தியா உலகிற்கு ஞானகுருவாய் இருந்த தேசம் என்பதை குழந்தைகள் உணரவேண்டும். அகங்காரமின்மையும் பிறரது நன்மையுமே வீரனது லட்சணம் என்பதை குழந்தைகள் அறியச் செய்யவேண்டும். பொறுக்குஞ் சக்தி, சாந்தகுணம், தீரத்துவம் அவர்களுக்கு பயிற்றுவிக்கவேண்டும்.

முப்பது கோடி ஜனங்களும் ஒரே மனதாக நினைத்தால், அம்மனோசக்தியின் வல்லமையை எவரால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தன் பேச்சில் எழுத்தில் தந்தவராக சிவா இருந்தார். அவரது கல்வி குறித்த இக்கருத்தை நவமபர் 1914ல் எழுதியுள்ளார்.

ஆத்ம பலமும் சரீர பலமும் இந்தியர்களுக்கு அவசியம் என்றார் சிவா. யேசுநாதர், புத்தர் இவர்களின் ஜீவகாருண்ய ஸ்வரூபிகளின் பொருட்டு நான் திக்குகளெல்லாம் அவர்களை நமஸ்கரிக்க தயாராயிருந்த பொழுதிலும், இவர்களின் கொள்கைகள் ஜன சமூக முன்னேற்றத்துக் கொவ்வாதன என்று கூறத் துணிகிறேன் என்ற சிவா, அதற்கு விவேகாநந்தரை துணைக்கு அழைக்கிறார். சுவாமி சொன்னதாக சிவா எழுதுகிறார்

யேசு ரோமாபுரி சக்ராதிபத்தியத்தை அழித்தார். புத்தர் இந்தியாவைக் கெடுத்தார். அதாவது அகிம்சை ஏற்பில்லை. சரீரபலம் அவசியம் என்பதை வலியுறுத்த யேசுவையும், புத்தரையும் வம்பிற்கு சிவா அழைப்பதைக் காண்கிறோம்.

குஸ்தி பந்தயம், விளையாட்டை ஊக்குவிக்கவேண்டும் என்றார் சிவா. கஸ்ரத்து, பஸ்கி பழகு என்றார். பஸ்கி குறித்து விரித்து எழுதியுள்ளார். மல்லர்களின் கோதா பற்றி குறிப்பிடுகிறார். ’கரீல்லா’ எனும் கதாயுத பயிற்சியின் அவசியத்தை விளக்குகிறார். புஜபலம் மிகுந்து சரீர உற்சாகம் ஏற்படும் வழிகளைச் சொல்கிறார். சிலம்ப வித்தை  பெருமையை மீட்டுக்கொள்வீர் என்கிறார். முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற கிளித்தட்டு, பலிஞ் சடுகுடு போன்றவற்றை அலட்சியம் செய்யாதீர் என வேண்டுகோள் விடுத்தார். சுதேசியம் என கூப்பாடு போட்டால் போதுமா- இந்த விளையாட்டுக்கள் சுதேசியம் இல்லையா என சிவா வினவினார்.

சிவா வித்தியாநுபவ விசேஷம் எனும் கட்டுரையில் வள்ளுவரின் கற்க கசடற குறளைக் மேற்கோள்காட்டி எழுதுகிறார். தேன்மொழி போன்ற தென்மொழியில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைப் போன்றதோர் நூல் எத்தேசத்திலும் எப்பாஷையிலும் எவராலும் இயற்றப்படவில்லை. அரிய பெரிய ஆராய்ச்சியையெல்லாம் 5 - 6 வார்த்தைகளில் அடக்கி ஆச்சர்ய அநுபவத்தை தரும் நூல் திருக்குறளைத் தவிர வேறு யாது என சிவா வினவினார்.

திருக்குறளுக்கும் பிரம்ம சூத்திரத்திற்குமான வேறுபாட்டை இதில் சிவா பேசியுள்ளார். அதைவிட குறள் உயர்வானது என மதிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமைதான் பலம். உயர்வு தாழ்வு பேசி நாம் பிரித்துக்கொள்ளக்கூடாது. ஜனசமூகத்தை நல்வழியில் இட்டுச்செல்லா அறிவு இல்லாமல் இருப்பதே நல்லது. விசால புத்தியைவிட விரிந்து பரந்த ஹிருதயம் சிரேஷ்டம் என சிவா எழுதுகிறார்.

சமஸ்தகோடி ஜீவராசிகளும் சமஷ்டி ஸ்வரூபமாகிய ஈஸ்வரனே எனக் கருதி, ஜீவராசிகளுக்கு சதாகாலமும் ஸேவை புரிவதே ஆநந்தத்தை அடைய அநுகுணமான வழி. தன்னுயிர்போல் மன்னுயிரை நினைத்து தொண்டாற்ற சிவா சொல்கிறார். அவரின் அக்கால எழுத்தில்  வடமொழி பதங்கள் கையாளப்படுவதைக் காண்கிறோம்.

மே 1914ல் எழுதப்பட்ட இந்த குறள் குறித்த கட்டுரையை தாயுமானவர் வரிகள் மூலம் சிவா முடித்திருப்பார். கற்று மென்பலன் கற்றிடு நூன் முறை சொற்ற சொற்கள் சுகாரம்பமோ நெறி நிற்றல் வேண்டும்.

நமது நாட்டம் என்கிற கட்டுரையில் தன்னை நாடுவன் தன்னந் தனியனே எனும் தாயுமானவர் பாடலுடன் சிவா துவங்கியிருப்பார். மனதை அடக்கு என உபதேசிக்கும் சிவா மனமானது பட்டி நாய் போன்றது என எச்சரிக்கிறார். ஆசையை ஒழித்தல் என்பது பழக்கமாகி ஈஸ்வரனை நாடு என வேண்டுவார்.

அர்த்தம் தெரியாத மந்திரங்களைக் கூறிப் பூஜை புரிவதால் பயனில்லை. சதுர்வேதங்களையும் சாமர்த்தியமாகக் கற்றுத் தலை கீழாகச் சொல்லத் தயாராயிருக்கும் பண்டிதர்களில் பலரும் அஞ்ஞான கூபங்களில் ஆழ்ந்து வீழ்ந்து அவஸ்தைப்படுவதை பார் என்கிறார் சிவா. ஓர் நாள் எமன் வந்துவிடுவான். அவன் போற்றினும் போகான், பொருளொடு போகான், நல்லா ரென்னான் நல்குரவறியன் எனச் சொல்லி மனதை அடக்கு என சிவா அறிவுரைச் சொல்கிறார். இக்கட்டுரை ஆகஸ்ட் 1915 ஞானபாநுவில் வந்துள்ளது.

உயர்வு என்கிற கட்டுரையில் மனித மனம் கீர்த்திக்காக எப்படி ஏங்கி என்னவெல்லாம் செய்கிறது என்று பேசியிருப்பார். ஒருநாள் புகழ் உச்சியில் இருந்தவர்கள் எல்லாம் வெளிச்சமே படாமல் இருட்டாகப் மூலைக்குப்போனதை அவர் குறிப்பிடுவார். வெறும் கருக்காயை விதைத்துவிட்டு தை மாதம் பயிரை எதிர்பார்ப்பவன்போல் மனிதன் வாழ்வு நடத்துவதை அவர் விமர்சித்து எழுதுகிறார். பெரும்பான்மையோர் பழைய செறுக்கை நினைந்துகொண்டு தனிப்புலம்பல்தான் செய்ய வேண்டியிருக்கும் என அற்புத தெறிப்பை சிவா தருவார்.

வாடாத இசை மலர் சாத்தியமா என வினவி பதில் தருகிறார். கீழ்ப்பார்வை வேண்டாம். மேல்நோக்கி- உயர்வை நாடு. அது அந்தகரண  உயர்ச்சி. அதுதான் பெருமையைத் தரும் என்கிறார். பெருமைக்கும் சிறுமைக்கும் கருமமே கட்டளைக்கல் எனச் சொல்லி சடையப்ப வள்ளல், கம்பனின் மேன்மையைக் காட்டுவார். அக்பரை எதிர்த்து உதயபுர பிரதாப சிம்ஹன் பேசியதை உள்ள உயர்வு என மதிப்பிடுகிறார் சிவா. உயர்வு என்றால் தன்மறுப்பு என்கிற பண்பை பற்றி சிவா நமது சரித்திர நிகழ்வுகளிலிருந்து காட்டுவார். அரிச்சந்திரனுக்கான இந்தப்பாடலைக் காட்டுகிறார் சிவா.

பதி இழந்தனம் பாலனை இழ்ந்தனம் படைத்த

நிதி இழந்தனம் இனிநமக்கு உளது என நினைக்கும்

கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றான்.

சிறிய காரியங்களிலும் பெருந்தன்மையைக் காட்டுகிறவந்தான் பெரிய காரியங்களிலும் சிறந்து கொள்ளுவான். மகரவீணை வந்தால்தான் வாசிப்பேன் என வித்வான் சொல்லல் தவறல்லாவா என்று உயர்வை உணர்த்தினார் சிவா. இந்தக் கட்டுரையை செப்டம்பர் 1915ல் எழுதியுள்ளார்.

எதில் விடுகிறாரோ அதில் அடுத்த துவக்கத்தை வைக்கும் பாணியில் சிவா எழுத்து அமைந்துள்ளது. தாயுமானவரிடம் முடித்தால் அடுத்து அவர் அதில் துவங்கியுள்ளார். இங்கு அரிச்சந்திரனிடம் முடித்து அடுத்தக் கட்டுரையை உண்மையையே உரை என அரிச்சந்திரனிடமே துவங்கியுள்ளதைக் காண்கிறோம். அன்னம் தமயந்தியிடம் வந்து பேசும் பாட்டை அவர் குறிப்பிடுகிறார்.

பொய்மைமொழி புகன்றறியோம் புகலமன மெண்னுகினு மெய்ம்மையல துரையாநா வேதநவில் பயிற்சியாய் என்பதை அவர் பொருள் விளக்கி எழுதியிருக்கிறார். பொய் பேசுவது புல்லியர் செய்கை என்கிறார். துரியோதனன் சகாதேவனிடம் தர்மரின் தலையறுந்து விழ அனுகுணமான நல்ல நாள் பார்க்கச் சொல்ல அதை பார்த்துச் சொல்லும் சகாதேவனின் தர்மத்தை சிவா சொல்கிறார். ஆபத்தென அறிந்தும் உண்மை உரைத்த பண்பது என்கிறார். உண்மை என்பது உள்ளக்கிளர்ச்சி, இன்பாநுபவம். அதில் தீமை துக்கம் உண்டாகா என தன் நம்பிக்கையை சிவா வெளிப்படுத்துகிறார். இக்கட்டுரை அக்டோபர் 1915ல் எழுதப்பட்டுள்ளது.

ஜீவகாருண்யம் என்கிற கட்டுரையில் வள்ளலார், தாயுமானவரை அழைத்துப் பேசுகிறார் சிவா. குறளும் கூட வருகிறது. ஜீவஹிம்சையை சண்டாளத்துவம் என்கிறார். வாயில்லா பிராணிகளின் வதையை நம் அகங்காரம் என்கிறார். மாமிசம் சாப்பிடுவதால் ஸ்தூல பலம் அதிகரிக்கின்றது என்பது வீண் பிரமை. குரூர குணம்தான் மிகும். இந்த நாட்டில்தான் இரண்டென்பதில்லை; எல்லாம் ஒன்றே என்ற கம்பீர கோஷம் எழுந்தது. உன்னில் எல்லா வஸ்துக்களையும் பார்  என்ற உபதேசம் எழுந்தது. இங்கு அவர் புத்தரைக் கொண்டாடுகிறார். விவேகாநந்தர் மாம்சம் சாப்பிடுவதை ஏற்றவர்தான் எனபதை சிவா ஒத்துக்கொள்கிறார். ஆனால் சுவாமிகளை இதனால் சிவா இங்கு விமர்சிக்கவில்லை.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

யெல்லா வுயிருந் தொழும்

என வள்ளுவரை அழைத்து இக்கட்டுரையை அவர் எழுதுவதைக் காண்கிறோம். ஜனவரி 1916 ஞானபாநு இதை வெளியிட்டுள்ளது.

இல்லை யென்னாதே எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தந்துள்ளார் சிவா. இதில் கர்ணனைக் காட்டுகிறார். குற்றுயிராய் சாய்ந்து வீழ்ந்து கிடக்கும்போதும் இந்த நிமிஷம்வரை செய்துள்ள தர்மத்தையெல்லாம் கொடு எனக்கேட்டபோது தன் இரத்தத்தை அள்ளி கர்ணன் தத்தம் செய்ததை சிவா எழுதுகிறார். ஏற்பது இகழ்ச்சிதான். அதைவிட இகழ்ச்சி இல்லை என்பது என்கிறார் சிவா. திருமந்திர பாடலை சிவா எடுத்தாள்கிறார்.

ஆர்க்கும் இடுமின் ; அவர் இவர் என்னன் மின்;

பார்த்திருந் துண்மின்; பழம்பொருள் போற்றன் மின்;

வேட்கை யுடையீர்! விரைந்தொல்லை உண்ணன் மின்;

காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

இந்தக் கட்டுரையை அவர் மே 1915ல் எழுதியுள்ளார்.

வீர வாழ்க்கை என்கிற கட்டுரையில் வெறும் ஆசையால் ஜயம் உண்டாகாது என எழுதுகிறார். அறிவு, ஞானம், ஜனரஞ்சகம், நாணயம் இல்லாமல் பெரிய காரியம் நடவாது என்கிறார். வள்ளுவர் சொல்லும் திண்மையுடன் நினைத்தல் வேண்டும். திண்மை ராஜகுணமாம். வெற்றியெல்லாம் தெய்வவாமிசம் எனச் சொல்லி உழைக்காமல் மனிதன் இருக்கலாமா எனக் கேட்கிறார். பிடிவாதம் தேவகடாஷம் என்கிறார்.

ஸ்மைல்ஸ் ஆங்கிலத்தில் எழுதிய ஆத்மோபகாரம், கடமை, யோக்கியதை என்ற புத்தகங்களை சிரத்தையுடன் படிக்க சிபாரிசு செய்தார் சிவா. செல்வம் சேர்ப்பது மட்டும் மனித தொழில் அல்ல. பாண்டித்தியம், கவிதை, சிற்பம், சித்திரம், கானம், ராஜ தந்திரம், பரோபகார ஸ்தாபனம், ஆத்ம தரிசனம் இவையனைத்தும் மனித உரிமையுள்ள தொழில்கள். அவனவன் இயற்கைக்கும் சகவாசத்துக்கும் ஏற்றவாறு தொழிலில் இறங்கலாம். செய்யும் தொழிலில் தவமும் யோகமும் பிரயோகி என்கிறார்.

வீரவாழ்க்கை என்பது ஏதோ போருக்குப் போய் காயம் அடைவதல்ல.  இடுக்கண்கண்டு மனமுடையாமல் கஷ்டம் கண்டு பின்வாங்காமல் ஒரே உற்சாகத்துடன் கடமையைச் செய்வது வீரவாழ்க்கைதான். இந்த விளக்கம் நமக்கு பிப்ரவரி 1916 ஞானபாநுவில் கிடைக்கிறது.

 

                                                                         3

பக்தி பற்றி இராமலிங்கரையும் தாயுமானவரையும் சாட்சியாக்கி சிவா எழுதியுள்ளார். பக்தியென்பது ஹிருதயத்தின் உருக்கமாகும். அது கனிந்து கரைந்து கசிதல். பக்தி தர்க்கமறியாது. விசாரணை செய்யாது. இந்த வஸ்துதான் பக்திக்குரியது என்று எவரையும் மற்றவர் நிர்ப்பந்திக்கமுடியாது. அவரவர் இஷ்டம் அவரவர் தெய்வம். இந்துமத சிரேஷ்டத்திற்கு இது காரணம். எதில் மனம் ரமிக்கிறதோ, எதனிடத்தில் மனம் சென்ற காலத்து சரீரத்தில் மயிக்கூச்சல் உண்டாகின்றதோ, எதனிடத்தினின்றும் பிரிந்த காலத்தில் மனம் பொறுக்கவொண்ணாத துன்பத்தை அடைகின்றதோ, அந்த வஸ்துவே அம்மனத்திற்கு ஈஸ்வரனாகும். இந்த விளக்கத்தை அக்டோபர் 1914 ஞானபாநுவில் பார்க்கலாம்.

ஸ்ருதி, ஸ்மிருதி குறித்து எளிய விளக்கம் ஒன்றை சிவா தருகிறார். மனுஷ்யனுக்கும் ஈஸ்வரனுக்குமுள்ள சம்பந்த வியவகாரங்களைப் பற்றி விவரிப்பது ஸ்ருதி. மனிதர்களுக்குள்ளேயே அந்நியோந்நியம் சம்பந்த வியவகாரங்களைப் பற்றி விவரிப்பது ஸ்மிருதி. விக்கிரகாரதனை வேண்டும் என்ற நிலையை சிவா எடுக்கிறார். பொதுவான மனித மனம் நாமத்தை ரூபத்தை நாடுகிற ஒன்றென்பார். நாய் எனப்படிக்கும்போது அதன் ரூபம் நிற்கிறது. அதேபோல் கல் என்றால் பல ரூபங்கள் வந்தாலும் ஷேத்திரங்களிலுள்ள விக்கிரகம் என்றால் ஈஸ்வர தியானம் என மனம் பழகுகிறது. இதை ஜூன் 1914ல் அவர் எழுதியுள்ளார்.

ஸ்வதர்மம்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சுகம் அடைய மானிடர் திரிகிறார்கள். சுகம்தேடும் செயல்கள் பலிதமானால் சுகானந்த சாகரத்தில் மனிதன் மூழ்குகிறான். மனம் சஞ்சலித்துக்கொண்டேயிருக்கும். ராமாவதாரம் ஸ்வதர்ம போதனக்காகத்தான் என்கிறார் சிவா. பகவத்கீதையும் உபநிஷத்துக்களும் ஸ்வதர்மத்தை பேசுகின்றன. முடியாதவர்களை காப்பது ஸ்வதர்மம். அது நற்செய்கை. ஸ்வதர்ம நாட்டமெனில் மமதை அஹங்காரம், பொறாமை, பேராசை, பொய், புரட்டு, திருட்டு தீய குணங்கள் பூண்டற்றுப் போகும். ’ஸத்யம் வத தர்மம் சரஎனும் மந்திரத்தை நாடெங்கும் கொண்டு சென்று ஸ்வதர்ம அனுஷ்டான ஆனந்த உத்ஸாஹம் பரவவேண்டும் என்கிறார் சிவா. மனிதனின் சுகத்துக்காக ஜீவராசிகள் என்னும் மமதை வேண்டாம். அஹிம்சா பரமோ தர்மஹ என்னும் நீதி நிலைக்கட்டும். ஸத்ய மார்க்க உணர்ச்சி உலகெலாம் ஸ்தாபனமாக மஹாசக்தி அருள் புரியட்டும் என இக்கட்டுரை முடியும். இதை மார்ச் 1916ல் சிவா எழுதியுள்ளார்.

உனது தர்மம்என்கிற கட்டுரை பற்பல ஜன சமூகங்கட்கும் தர்மங்கள் வெவ்வேறாக இருப்பதைப் பேசுகிறது. இதில் எது உனது தர்மம் என கேள்வி எழுப்பி சிவா விவாதிக்கிறார். கலங்கா நெஞ்சுடன் பரிசுத்த செய்கை,  ஞானதீரனாக நிற்றல் . இதை ஏன் கைவிட்டாய் ஆர்ய புத்திர என சிவா கேள்வி எழுப்புவதைக் காண்கிறோம். தர்மம் என்றால் என்னவென்று சிவா ஒரு விளக்கத்தை தருகிறார். சகல ஜீவராசிகளும் துக்க நிவிர்த்தியடைந்து உபசாந்தத்தைப் பெற்று சாட்சாதிகார அநுபூதியில் சதா வீற்றிருப்பதற்கு அநுகூலமாகச் செய்யப்படும் காரியங்கள் எவையோ அவை தர்மங்கள் எனச் சொல்கிறார்.

முக்தி இரண்டு வகையானதாம். சத்யோ முக்தியென்பது ஆகாயப் பறவைகள் பசி எடுத்த மாத்திரத்தில் பழ வர்க்கங்களை புசித்து திருப்தியடைவது போன்ற ஒன்று. கிரம முக்தி எறும்பானது மெல்ல விருட்சத்தின் மீது ஊர்ந்து சென்று பழம் கண்டடைய கொம்புகளிலும் கிளைகளிலும் சுற்றிக் கடைசியாக கண்டு திருப்தியுறுவது போன்றது. நம்மில் பெரும்பாலனவர் கிரம முக்தி வாழ்க்கையே வாழ்கிறோம். விருட்சம் துளிர்க்க அடியில் நீர் ஊற்றவேண்டியது போல, ஜனசமூகம் தழைக்க ஞான அஸ்திவாரம் கண்டு நிலை நிறுத்த வேண்டும். எனவே சகல ஜீவராசிகளுக்கும் ஞான தர்மம் செய் என்கிறார் சிவா. ஜனவரி 1915ல் இதை எழுதியுள்ளார்.

வீண்பொழுது போக்காதே. பலருக்கும் உபகாரமாயிருக்கும் கார்யங்களில் பகலும் இரவும் பாடுபடு. நான் என்ற அகங்காரத்தை சுயநலத்தை உதறிவிடு. உன்னிடத்தில் மிஞ்சியிருப்பவன் ஈஸ்வரனே. காரியங்களெல்லாம் அவனால் ஏவப்பட்டவை. நன்மை தீமை ஆராய்ந்து பின் ஈடுபட்ட கார்யத்தால் துன்பம் நேரிடுனும் எதிர்த்து போராட தயாராக நில். சுகத்தையும் துக்கதையும் சமமாக பாவித்து உனது தொழிலில் கண்ணும் கருத்துமாக இரு. ஆகாராதிகளிலாவது ஆடை ஆபரணங்களிலாவது ஆசையை வையாதே. சாண் வயிற்றுக்கு சம்பிரமமான ஊண் தேடுவதையே முக்கியமாகக் கொண்டு ஜகப் புரட்டுக்கள் செய்து சங்கடப்படாதே. கந்தையுடுத்துத் திரிந்தாலென்ன? கனக பூஷணங்கள் அணிந்து கொண்டாலென்ன? பொன்னானது மண்ணின் மறு ரூபமே. எல்லோரிடத்தும் நன்மாதிரியுடன் நடந்துகொள்ளுதலே புருஷனுக்குச் சிறந்த ஆபரணம். அணிய வேண்டியது மிருது பாஷையாகும். மேனாட்டார் சொல்வதெல்லாம் வேத வாக்கியமாகாது. உன் முன்னோர்களின் அகன்ற அறிவிலும் புத்தியிலும் நம்பிக்கை வை. இந்த உபதேசத்தை அவரின் டிசம்பர் 1914 கட்டுரையில் காண்கிறோம்.

சிவா மதம் என ஒரு கட்டுரை எழுதியுள்ளார். விறகு வெட்டினாலும் உழுதாலும் ஈஸ்வரபூஜையாக கருது. ஜனசமூக நீதிகளை ராஜ்ய வியவகாரங்களை, கைத்தொழில் வியாபாரதிகளை நமது மதம் புறக்கணிப்பதில்லை. சகோதரா ஈஸ்வரனை உன்னிடத்தினின்றும் மற்றவர்களிடத்தினின்றும் பிரித்து ஏன் வைக்கின்றாய்? ஈஸ்வர பிரகாசத்தில் ஜாதிபேதம் ஏது? இனபேதமேது? எல்லாம் ஈஸ்வராம்சம்.

உலகப்பொருட்களை விட்டு ஓட மதம் சொல்லவில்லை. ஆனால் எல்லாப் பொருள்களையும் ஈசுவரனாகக் கருதிவிட வேண்டும். எந்த விஷயத்தை நாம் ஈஸ்வரனிடத்தின்றும் நாம் பிரிக்கமுடியும். உலக வியவாகாரம் என்றும் ஈஸ்வர பூஜையென்றும் தனிப்பட்டு ஒன்றுமில்லை. அதுதான் ஈஸ்வர பூஜை. ஆஷாடபூதி பூஜைகள் எதற்கு? மனமொன்றி வேலை- அது ஈஸ்வர கைங்கர்யம்.

சகோதரா கைத்தொழிலில் முயற்சி செய்; வியாபாரத்தை விருத்தி செய்; ராஜரீகக் கல்வியில் தேர்ச்சியடை; ஓடி விளையாடு; சரீரத்தை வலுவாக்கு; சாஸ்திரங்களை கற்றுக்கொள்; உலக விஷயங்களில் உயர்ந்து நில். ஜாக்கிரதை. மேல்நாட்டினர் போல் அதில் மயங்காதே. ஈஸ்வர சொரூபமாக கருது. ஏழைகளுக்கு இரங்கு. ஈஸ்வரன் அவர்களிடத்தில் பிரகாசிக்கிறார். இக்கட்டுரையை சிவா ஜூன் 1915ல் எழுதியுள்ளார்.

ஒரு மனிதனில் ஹிருதயமும் புத்தியும் ஒன்றையொன்று சீர்திருத்தி இரண்டும் விருத்தியாவது போல, ஜன சமூகத்திலும் மதமும் நாகரீகமும் ஒன்றுக்கொன்று உதவியாயிருக்கவேண்டும். சில மடக்கொள்கைகளை மதமென்று நம்பி அவற்றையே வாழ்நாட்களின் பயனாகக் கடைப்பிடித்தலும் நாகரீகப் பயிற்சிகளை இகழ்ந்து வெறுத்தலும் மிகத் தவறாகும். அன்பின் நிறைவே அறிவின் நிறைவாகும். அறிவின் நிறைவே அன்பின் நிறைவாகும். அன்பும் அறிவும் சேர்ந்திருக்கவேண்டும். இந்த ஆனந்த சேர்க்கை அரிதாயிருக்கிறது என சிவா எழுதுகிறார்.

தற்கால நாகரீகம் அதிகமாக ஜடவுலகக் காரியங்களை பேணி நிற்கின்றது. சிருஷ்டியை ஜெயித்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அது சிருஷ்டியின் மேற்போர்வையைக் கூட இன்னும் நீக்கவில்லை என்பதை மறந்துவிடுகிறது. இந்த நாகரீகம் அன்பை அணைந்துகொண்டால் பெருமை சொல்லுந் தரத்தன்று.

வேதாந்தம் என்றால் ஜனங்களை மலை குகை மடங்களில் கெளபீனதாரிகளாக காஷாயதாரிகளாக தூங்கும்படி போதிக்கும் மதமென்றும் பிரயோசனமற்றது என்றும் அபிப்பிராயப்படுகின்றனர். இது தப்பானது. வேதாந்தம் நாகரீகத்தை வெறுக்கவுமில்லை. விரோதிக்கவுமில்லை. உலகை ஜெயிங்கள் சகல கிரகங்களையும் பார்த்துப் பறையடிங்கள் என்கிறது. ஆனால் வாழ்வின் பயன் ஹிருதய சப்த விருத்தி என்கிறது. துக்க நிவர்த்தி அன்பினால்தான் முடியும். ஞானாநுபூதியே மனுஷிய ஜன்ம நோக்கம். நூதன சிருஷ்டி கண்டுபிடிப்புகள் ஆச்சரியமான புத்தி சாதுரியங்கள் அன்பென்னும் பூஷணத்தை அணியப்பெறாவிடில் மானிட வர்க்கத்தை அணுவளவேனும் நன்னிலைமைக்குக் கொண்டுவரமுடியாது. அன்பே ஆனந்தம் அளிக்க வல்லது.

நமது மதம் எப்பொருளிலும் ஈஸ்வரனைப் பார்த்து அப்பொருளை அனுபவிக்கும்படி போதிக்கின்றது. நவீன நாகரிகமோ எப்பொருளிலும் அப்பொருளையே பார்த்து அப்பொருளை அப்பொருளாகவே அநுபவிக்கும்படி செய்கின்றது. அறிவு அன்பின் சேர்க்கையே ஞானம். இந்த வரிகளை ஆகஸ்ட் 1913 ஞானபாநுவில் சிவா எழுதியுள்ளதைக் காண்கிறோம்.

ஆச்சர்யம்என்கிற கட்டுரை ஒன்றை சிவா எழுதியுள்ளார். அன்பே ஆநந்தம். அது இல்லையேல் ஆநந்தமில்லை. அன்பே பக்தி-பிரியம், கருணை, தயை, இரக்கம், பச்சாத்தாபம், காதல், இச்சை, ஆசை எனப் பல பெயர் கொள்கிறது. அன்பில்லையேல் இவ்வுலகு துகள் துகளாய் போயிருக்கும். ஆனால் மனிதன் மண், பொன், பெண் என மயங்குகிறான். இதையெல்லாம் அநுபவித்த மன்னாதி மன்னர்கள் எங்கே? போன இடம் புல் முளைத்துவிட்டதே. எல்லோரும் மண்ணில் போகப்போகிறோம். என் பூமி உன் பூமி வியாஜ்ஜியங்கள் நியாயாதிபதிகளால் தினந்தோறும் விசாரிக்கப்படுவதைக் காண்கிறோம். தாயாதி வகையாரை போஜனத்தில் மருந்திட்டுக் கொல்லும் மாயம்  அறிந்ததுண்டா? ஆச்சர்யம். இந்த அக்கிரமங்களெல்லாம் மண்ணாசையால்தான்.

இந்த சரீரம் மலச் சுமைதானே. நவத்துவாரங்களின்றும் சதா மலஜலம் கசிந்து கொண்டிருப்பது பிரத்தியட்சமன்றோ- துர்நாற்றம் நிறைந்த அணுக்கள் ஆவி ரூபமாக வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. சொந்த சரீரமே இப்படியிருக்கையில் காமபித்துடன் இன்னொரு சரீரத்துடன் மனிதன்.

மண்ணின் ரூபம்தான் பொன். நான் என்ற  அகங்காரத்தை வகித்த மூடனாய் தனக்கு சமமான சரீரம் வாய்க்கப்பெற்ற மனிதனை இந்திரன், சந்திரன் என்றும் அன்னதானப் பிரபு என்றும் பொன்னின் பொருட்டேயன்றோ? ஜூலை 1914 ஞானபாநுவில் இந்த வேண்டுகோளை சிவா வைத்ததைக் காண்கிறோம்.

சுகப்ராப்தி என்கிற வேறொரு கட்டுரையில் சுகப்படு என சிவா பேசுகிறார். உலகின் அனைத்து சுகங்களையும் அனுபவி என்கிறார். ஊர்ந்த உடை, வேண்டிய ஆபரணம் அணி. உலக நடையுடன் ஒதுங்கியில்லாமல் ஒத்துப்போ என்கிறார். அதே நேரத்தில் ஈஸ்வரனுக்கு பணிவிடை செய் எனவும் சொல்கிறார். ஈஸ்வர நீதிக்கு கட்டுப்படு என்பார். மண், பொன் போன்றவை குழந்தை கை பொம்மைகள். லெளகீக செயல்களை விளையாட்டாக செய்து பழகச் சொல்கிறார். பிரபஞ்சம் நடனசாலை. எல்லாம் ஈஸ்வர லீலைகள். ஓடியாடி விளையாடு என்பார். இங்கும் அவர் மீண்டும் கைதொழில் செய், ராஜ்யதிகாரம் செய், குற்றமற்ற எல்லாச் செய்கைகளையும் செய் என கட்டளை போடுகிறார். மூக்கைப் பிடித்துக்கொண்டு 30 நாட்கள் உட்கார்ந்தால் இந்த விளையாட்டு வாய்க்காது என எச்சரிப்பார். இந்தக் கட்டுரை ஜூலை 1915ல் எழுதப்பட்டது. விளையாட்டு சுகமே சுகம். முன்னின்று விளையாடு என அதில் சிவா சொல்லியிருப்பார்.

ப்ரணவ கோஷம் எனும் கட்டுரையில் ஓம் பற்றி பேசுகிறார் சிவா. ஓம் என்பது ம்மூன்று சப்தங்கள் சேர்ந்தது. அடித்தொண்டையிலிருந்து’, வாய் மூடிகளாகிற உதடுவரைஉருளும். உதடுகள்ம்சப்தத்தில் சேர்ந்து வாயை மூடிவிடுகின்றன. சப்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இம்மூன்று சப்தங்களாலேயே உண்டாகின்றன. ஓம் பிரம்ம ஸ்வரூபம். இந்து மதத்தின் பற்பல பிரிவினரும் இந்த சப்த விஷயத்தில் ஒன்றே. ஓங்காரம் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஓம் என்பதிலிருந்து பாஷை பிறந்ததாக சிவா எழுதுகிறார். ஓம் குறித்து நவம்பர் 1915ல் அவர் எழுதியுள்ளதைக் காண்கிறோம்.

வேறொரு கட்டுரையில் எது நித்திய வஸ்துவோ அதுதான் பிரம்மம் எனப்படும் என சிவா எழுதுகிறார். ஏகம் என்றால்ஸ்ஜாதிய விஜாதிய ஸ்வகத பேத ரகிதம்என்கிறார். ஸ்ஜாதியம் ஒரே ஜாதி. மனிதனுக்கு மிருகம் விஜாதியம். ஸ்வகம் ஒரே ஜாதியின் பிரிவுகள். மனித வயங்கள் ஸ்வகதம். பிரம்ம வஸ்து ஸ்வகதரகிதாமாக இரண்டற்றுள்ளதாம். பரிபூர்ண வஸ்துவாய் அமர்ந்து ஆநந்தம் பொங்கித் ததும்பி வழிந்து வேதாந்தமாய் வீற்றிருக்கும் ஞானிக்கு குறையேது உளது? என சிவா இந்த ஆகஸ்ட் 1914 கட்டுரையில் கேட்பார்.

ஆத்மா ஒன்றுதான் என பகவத்கீதையை அழைத்து சிவா பேசுகிறார். பற்பல நாமங்களுடன் விளங்குபவையெல்லாம் ஆத்ம வஸ்துவின் சாயமாத்திரம் என்பார். ஏகமே வாத்விதியம் பிரம்மம் என சுருதிகள் கோஷிக்கின்றன. இதனால்தான் தாயுமானவர் அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ள எனப் பாடுவதை சிவா காட்டுவார். இதை பிப்ரவரி 1915ல் ஞாநபாநுவில் காணலாம்.

குரு குறித்து சிவா பேசுவார். பிரத்தியட்ச குரு சிஷ்யனுக்கு உபதேசம் செய்து சன்மார்க்கத்தில் இட்டுச் செல்லுபவர். ஆனால் உண்மையான உபதேசம் உள்ளிருந்தே உண்டாக வேண்டும். ராமகிருஷ்ணர் குறித்து பெருமிதமாக சிவா எழுதியிருக்கிறார். விவேகானந்த விஜயம் என்கிற கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். விவேகானந்தர் அம்மான் ராமச்சந்திர தத்தர்தான் அவரை ராமகிருஷ்னரிடம் அழைத்துச் சென்றாராம். ராமநாதபுர ராஜா, மைசூர் மகராஜா, நீதியதிபர் சுப்பிரமணி அய்யர் ஆகிய பிரமுகர்கள்தான் சிகாகோ சர்வமத மகாசபையொன்றில் விவேகானந்தர் உரையாற்ற கேட்டுக்கொண்டனர். அவரும் சென்று ஹிந்து மத பெருமைகளை வேதாந்த கர்ச்சனையை செய்து வந்தார் என சிவா எழுதுகிறார்.

ஞானம் பிற நாடுகளில் வியாபிப்பதற்கு முன் அதற்கு உறைவிடமாயிருந்தது இத்தேசம். பிரபஞ்சம் எத்தகையது என்ற விசாரங்கள் முதன்முதல் இங்கன்றோ நிகழ்ந்தது. மதமும் விசாரமும் எட்டக்கூடிய தூரம்வரை எட்டினமை இங்குதானே? எப்படிப்பட்ட தேசத்தின் பிள்ளைகள் நாம் என விவேகானந்தர் நாடு முழுமையும் பேசி வந்ததை சிவா சுட்டிக்காட்டுகிறார்.

சுதேசமித்திரனுடன் சிவா விவாதம் செய்தபோது ஆங்கிலம் கலக்காத தமிழ் வேண்டும் என்கிறார். அதேநேரத்தில் சமஸ்கிருதச் சொற்கள் கலக்காத தனித்தமிழில் எல்லோரும் எழுத முடியுமென்று தான் கருதவில்லை என்கிறார். அதேநேரத்தில் தமிழ் பாஷை தனிப்பாஷை என்கிற பெருமிதத்தையும் சிவா வெளிப்படுத்துவார். தமிழர் ஆர்யர் பழக்கத்தால் சமஸ்கிருதச் சொற்கள் பழக்கமாகிவிட்டன. தமிழ் பூரண வளர்ச்சி பெற்ற பாஷையென்று பரிசோதக பண்டிதர்கள் கூறுகின்றனர். ஆங்கிலப் பதங்கலுக்கு சரியான தமிழ்ச் சொற்கள் கிடையாவென்று சொல்ல முடியுமா என சிவா கேட்பார். வட இந்தியாவில் வெள்ளையர்களுடன் கூட ஹிந்தியில்தான் சம்பாஷிக்கிறார்கள். ஒரு ஜன சமூகத்திற்கு உயிர் அதன் பாஷைதான். இந்தக் கட்டுரைத்தொகுப்பே இப்படித்தான் முடிகிறது. சிவா எழுதுகிறார்

உங்கள் நா தமிழே பேசுக

நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக

உங்களுடைய ஹிருதயம் தமிழையே நாடுக

உங்களையெல்லாம் தமிழ் மாது தயையுடன் ரட்சித்திடுக.

சிவாவின் கட்டுரைகள் வாசிப்பவருக்கு உபதேச பலகணி போல இருந்தாலும் ரசமானவையாக இருப்பதை உணரமுடியும்.

 

28-1-2023

No comments:

Post a Comment