https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, May 17, 2022

நொபுரு கரோஷிமாவின் பார்வையில் தென்னகச் சமூகம்

 

நொபுரு கரோஷிமாவின் பார்வையில் தென்னகச் சமூகம்

நொபுரு கரோஷிமா ( 1933-2015) ஜப்பானைச் சேர்ந்த இந்திய- தென்னிந்திய சமூக ஆய்வாளர். அதேபோல் தெற்காசிய ஆய்வுகளில் ஈடுபட்டவர். இந்தோ ஜப்பானிய உறவை மேம்படுத்தியவர் என்ற வகையில் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் பத்மஸ்ரீ பெற்றவர். உலகத்தமிழ் மாநாடுகளை குறிப்பாக தஞ்சாவூர் மாநாட்டை உருப்பெற செய்தவர்.

ஏராள ஆய்வுகளை செய்த கரோஷிமாவின்  ஆய்வுகளில் ஒன்று சோழர்கள் காலம் குறித்த சமூகவியல் ஆய்வு- வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (850-1300) என்ற நூல். முப்பதாண்டுகள் இது குறித்து எழுதிய பல்வேறு உள்ளடக்கங்களின் கட்டுரைத்தொகுப்பு. இந்நூல் தமிழ் பல்கலை தொல்லியல் கழகத்தார் சார்பில் மொழிபெயர்க்கப்பட்டு 1995ல் கொணரப்பட்ட நூல். அந்நூல் வாசிப்பின் வழி எழுந்த சுருக்க வரைவாக இந்த அறிமுகத்தை எடுத்துக்கொள்ளலாம்.



வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் புத்தகம் சோழர்கால நிலவுடைமை உறவுகள் குறித்த முக்கிய ஆய்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நிலவுடைமை- சமூக ஒருங்கிணைப்பு- அரசின் அதிகாரம்- வருவாய் ஆகியவை குறித்து பல்வேறு கல்வெட்டுகள் செய்திகளையும் இணைத்து இந்த ஆய்வை கரோஷிமா செய்தார்.

 முன்பாக மார்க்ஸ் துவங்கி எப்படி இந்தியாவை புரிந்துகொண்டனர் என கரோஷிமா குறிப்பிடுகிறார். மார்க்ஸ்இந்திய சமூகம் தன்னிறைவு கிராமம் - தேக்கமுடையது இங்கு வரலாற்றியல் வளர்ச்சி காணல் அரிது என்ற முடிவிற்கு கிழக்கிந்திய ஆவணங்களைக் கொண்டு வந்தடைந்தார்.

 டாங்கேவோ இங்கு அடிமை சமூகம் இருந்ததென்று வாதிட்டு மானுட முரண்பாட்டு இயல் வளர்ச்சி இந்தியாவிற்கும் பொருந்தும் என தனது நூலானபண்டைய இந்தியாவில் பேசினார். மார்க்சிய அறிஞர் டி டி கோசாம்பி கண்மூடித்தனமாக மார்க்சிய கோட்பாட்டை இந்தியாவிற்கு பொருத்தக் கூடாது என்றார். அவர் மேலிருந்து மற்றும் கீழிருந்து கட்டுமானம் பெற்ற நிலமான்யமுறை குறித்து பேசினார். ஆர் எஸ் சர்மா குப்தர் கால நிலக்கொடைகள் நிலமான்ய வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதை குறிப்பிட்டார். இர்பான் ஹபீப் முகலாயர் சமூக ஆட்சிதனை ஆய்விட்டு மார்க்சின் ஆசிய உற்பத்தி முறை குறித்து கேள்வி எழுப்பினார். இவை யாவும் வட இந்தியா குறித்தனவாக இருந்தன.

1960களில் இந்த ஆய்வுகள் பல  தென்னிந்தியாவை தாக்கியதாக கரோஷிமா சொல்கிறார். முன்னோடிகளான கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார் பங்களிப்பை பாராட்டினாலும் அவர்கள் சமூக பொருளியல் மாற்றம்- வளர்ச்சி குறித்து முக்கியத்துவம் கொடுக்காததை கரோஷிமா சுட்டிக் காட்டுகிறார்.

பிரம்மதேய பிராமணர்களுக்கான நிலக்கொடைகளை நீலகண்ட சாஸ்திரி, கிருஷ்ணசாமி ஆய்வு செய்தனர். ஆனால் அதைவிட பழமையான வெள்ளான் ஊர்களில் நிலவிய உற்பத்தி உறவுகள்- சமூக உறவுகள் குறித்த ஆய்வு அவசியம். முற்கால சோழர்களின் காலத்தில் பிரம்மதேயத்தில் தனிவுடைமையும், வெள்ளான் ஊரில் சமூக உடைமையும் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் வெள்ளான் ஊர்களும் தனியார் உடைமை நோக்கி சென்றதாகவும் நிலப்பிரபுக்கள் தோன்றியதாகவும் கரோஷிமா சொல்கிறார்.

சோழ அலுவலர் எனும் அமைப்பு முறை இருந்ததா? கிராமம் தன்னிறைவு பெற்ற இடமாக இருந்தனவா என்கிற முக்கிய விடைதேடும் கேள்விகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. மார்க்ஸ் சொன்னதைவிட கூடுதலாக சோழர் கல்வெட்டுகள் செய்திகளை தருவதாகவும் அன்றாட வாழ்க்கை கிராம்த்திற்குள் முடங்காமல் பெரும் நிலப்பரப்புடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிறார் கரோஷிமா.

 சோழ அரசில் அரசு நிர்வாகம் அலுவலர் தொகுதி இல்லை என ஸ்டெயின் போன்ற ஆய்வாளர் கருதினர். சடங்கு நிலையிலேயே அரசு உருவைப்பெற்றது சமூகம். அச்சமூகம் நன்கு நீடித்த இனமரபு வட்டாரங்களால் அரசின் ஆதிக்கத்தில் இல்லாமல் இருந்ததாக ஸ்டெயின் ஆய்வு செல்கிறது. ஆனால் கரோஷிமா இதில் மாறுபட்டு அங்கு நிலவிய பட்டப்பெயர்களை குறிப்பிட்டு அரசு தொடர்பைச் சொல்கிறார். பிரம்மராயன், பல்லவராயன், விழுப்பரையன், பிரவுவரி  போன்றவை மூலம் இந்த அலுவல் தொடர்பு பற்றி பேசுகிறார். குறைவாக  இருந்திருக்கலாம் என்கிறார். பின்பு வந்த பாண்டியர், விஜயநகர ஆட்சியில்  அவை பெருகலாயின.

ராஜராஜன் காலத்து நிலவளவை அரசு மய்யப்படுத்தலுக்கு சான்று. தனது ஆய்விற்கு 9-10 ஆம் நூற்றாண்டை சார்ந்த ஈசானமங்கலம் என்ற பிராமண ஊரையும், அல்லூர் என்கிற வெள்ளான் ஊரையும் அவர் எடுத்து ஒப்பிடுகிறார். பிரமதேயத்தில்  பிராம்மண உறுப்பினர்களின் சபை உண்டு. பருடை எனும் பிரிவு கோயில் பொறுப்புகளைப் பார்த்தது. ஈசானமங்கலத்தில் அரைப்பகுதி நிலத்துண்டங்கள் தனியாரிடம். சிலநிலங்கள் சபை, பருடை பொறுப்பில் பொதுவானவை.

அல்லூரில் தெய்வத்துடன் தொடர்புடைய நிலத்துண்டங்கள், கணியார் நிலம்- பஞ்சாங்கம் பார்ப்பவர்,சங்கரப்பாடியார் மதிள் எனும் வணிகர்களுக்கானது, நாட்டியத்தார் நிலம், எட்டி எனும் இசைக்கலைஞர் சாதிக்காரர்களின் நிலம். அல்லூர் மத்தியஸ்தன் நிலம் என பலப் பெயர்களில் அங்கு நிலத்துண்டுகள் இருந்ததை கரோஷிமா சொல்கிறார். அவர் வருகின்ற முடிவு அல்லூரில் நிலத்திற்கும் தனியாளுக்குமான பிணைப்பு குறைவானது என்பதே.

 அடுத்து அவர் ஊகிப்பது ஈசானமங்கலத்தில் உடைமையாளர்- பயிரிடுவோர் என வேறுபட்டவர் இருந்திருக்கலாம் . அரசு விளைச்சல் பங்கை பெற்றதா? பருடையும், சபையும் இறைகாத்து எனும் பொருளில் வரிவிலக்கு பெற்றிருக்கலாம். இறையிலி எனும் சொல் வரிநீக்கம் என்பதைக் குறிப்பதாக கரோஷி சொல்கிறார். இந்த இரு பகுதிகளிலும் கொடும்பாளூர்க் குரிசல்கள் திருச்சி வட்டாரம் பெரும்செல்வாக்கு பெற்ற அரசு பிரதிநிதிகள் என்கிற முடிவிற்கு கரோஷிமா வருகிறார்.

 அல்லூரில் ஊரே உழுதுகொண்டு என வருவதால் ஊராரே உழுகுடிகளாக இருந்திருக்கலாம் என்கிறார். ஊராரின் நிலவிளைச்சல் அரசுக்கூறு, உடைமையாளர் கூறு என்றாக்கப்பட்டன. கோயில் நிலம் எனில் அதில் பயிரிடுவோர் கூறு என்பதும் சேர்ந்த ஒன்று.

 ஆரம்பத்தில் தமிழ் வழக்கு காணி என்பது பரம்பரை கிழமையுரிமை என்ற பொருளில் வழங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் இது தெளிவாக மிராசு ஆனது. முன்னர் நிலக்கிழார்கள் கிழவன், அரையன், வேளான், ஆள்வான் என்ற பட்டங்களால் குறிக்கப்பட்டுள்ளனர். பிற்கால சோழர்கள் ஆட்சியில் கீழ்க்காவேரிப் பள்ளத்தாக்கில் வெள்ளான் ஊர்களில் பல நிலக்கிழார்கள் அரசாங்க தொடர்புடன் முக்கிய பதவிகளில் வந்தது முற்கால சோழர் நிலையிலிருந்து மாறிய ஒன்று என்கிறார் கரோஷிமா.

 இதற்கு ராஜராஜன் கால ஆதிக்கப்பரவல்- செல்வ வளம்- நீர்ப்பாசன வசதிகள்- விளைச்சல்- நிர்வாகத் தொடர்பு- நிலச் சொத்துரிமை மாற்றங்கள் எளிமையாக்கப்பட்டது எனச் சொல்கிறார் கரோஷிமா.

 வேதாரண்யத்தில் நிலபரிவர்த்தனை பற்றி தனியான கட்டுரை ஒன்றை தந்துள்ளார். காவேரி கழிமுக தென்கிழக்கு கோடியிலும் நிலப்பரிவர்த்தனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கீழ்க்காவேரி பள்ளத்தாக்கில் தனியார் நிலவுடைமை வாங்கல்- விற்றல் பற்றி தனியாக விவாதிக்கிறார். வேலிக் கணக்கில் நன்செய், புன்செய் நிலங்களை விற்ற சில பெயர்களைக்கூட தேடிச் சொல்கிறார். சுருதிமான் நாயன் சோறன் இருங்கோளனுக்கு, முத்தரையன் சோரன் கண்டன் இலங்கேசுரதேவருக்கு விற்றது- சுருதிமான்கள் பேரையன், நாடாழ்வானுக்கு விற்றது எனப் பார்க்கும்போது அவர்களின் பட்டப்பெயர்களாக அவை இருக்கலாம் போல் ஊகிக்கவேண்டியுள்ளது.

 உய்யக்கொண்டான் கல்வெட்டின் மூலம் குலோத்துங்க சோழ விசயபாலன் எனும் வணிகர் பல நிலத்தை வாங்கி புதிய நகரம் உருவாக்கி அரசு ஒப்புதலுடன் கொங்குகொண்ட சோழபுரம் பெயரிட்டு வெளியூர் வியாபாரிகள் பலரை குடியமர்த்தினார் என்கிறார் நொபரூ.

கீழ்ப்பழுவூர் கல்வெட்டிலிருந்து நில உடைமைக்குவிப்பு இரண்டாம் ராஜராஜன் காலத்தில் நடந்துள்ளதை எடுத்துச் சொல்கிறார் கரோஷிமா. 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் காலத்தில் சோழர் படையில் சேர்ந்தவர் சம்வெளிக்கு வந்து படையாற்றலை பயன்படுத்து நிலப்புலன்களை சேர்த்தனர் என்கிற முடிவிற்கு கரோஷிமா வருகின்றார். சோழர் ஆட்சி வலிமை குன்றும்போது இவர்களின் தீவிரம் அதிகமானது.

 அடுத்தப் பகுதியில் அவர் சோழ அரசின் அதிகாரக் கட்டமைப்பு பற்றி பேசுகிறார். ராஜராஜன் தஞ்சாவூர் கல்வெடுக்கள், கங்கைகொண்ட சோழபுர கல்வெட்டுகளிலிருந்து செய்திகளை கரோஷிமா தருகிறார். தஞ்சை அரசு ஆணையில் கீழ்கண்ட நிலங்கள்: ஊர் நத்தம், கோயில்-குளம், வாய்க்கால், பறைச்சேரி, கம்மாணாச்சேரி- சுடுகாடு சில இடங்களில் ஈழச்சேரி என்பதும் சொல்லப்படுகிறது. பொதுவாக ஊர் எனச் சொல்லப்பட்டாலும் 33 ஊர்களில் 3 வணிக ஊர்களை நகரம் எனக் குறிப்பிடுகிறார் கரோஷிமா.. கங்கைகொண்ட சோழபுரத்தில் அனைத்தும் ஊர் என்றே- நகரமில்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்.

 பறைச்சேரி- பறையர் குடியிருப்பு, கம்மாளர் குடியிருப்பு கம்மாணச்சேரி, கள் இறக்குவோர் ஈழச்சேரி, தீண்டத்தகாதவர் தீண்டாச்சேரி, நீர் தலைவாய் பார்ப்பவர் தலைவாய்ச்சேரி, கோயில் குடியிருப்பு தளிச்சேரி, வெளுப்போர் குடியிருப்பு வண்ணாரச்சேரி என குடியிருப்புகள் தொழில் சார்ந்து இருந்ததைப் பார்க்கிறோம். 33 ஊர்களில் தஞ்சை அரசு ஆணையில் 19 ஊர்களில்தான் பறைச்சேரி எனும் குடியிருப்பு பகுதி பேசப்பட்டுள்ளது.

மூன்று ஊர்களில் குடியிருக்கை, பறைச்சேரி, ஊர்நத்தம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. உழுகுடிகளை குடி என்கின்றனர். ஊரார்- பறையர் எனும் வேறுபாட்டைக் காண்கிறோம். சோதிடர் பகுதி கணிமுற்றூட்டு எனச் சொல்லப்பட்டுள்ளது. மருத்துவர், சோதிடர் தனி குடியிருப்புகளில் இருந்துள்ளனர். உழப்பறை கீழைச்சேரி எனச் சொல்லப்படும் இடத்தில் உழுதொழிலில் அவர்கள் முழுமையாக இருந்திருக்கலாம் என ஊகிக்கிறார் கரோஷிமா.

 குளங்களும் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் பெயரிடப்பட்டுள்ளன. புலத்திற்குளம், கழனிக்குளம், ஊருணிக்குளம், திருமஞ்சனக் குளம், பறைக்குளகுழி ( நீர்க்குட்டை)- வாய்க்கால் எனப் பேசும்போது ஊடறுத்து அதாவது புற ஊர்களுக்கும் பாயும் வாய்க்கால் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.. ஆறு என்பது இரு ஊர்களில் வருவதாகவும், சிறு வாய்க்கால் நீரோடு கால் என்றும் பேசப்பட்டுள்ளன.

 ஸ்ரீகோயில்கள் என்பதில் தெய்வங்கள் மகாதேவர், பிடாரி, காளாபிடாரி, அய்யன், காடுகாள், துர்க்கையார், சேட்டை என அறிகிறோம்.

தஞ்சை 19 ஊர்களில், சோழபுரம் 5 ஊர்களில் சுடுகாடு ஒன்று அல்லது இரண்டு இருந்துள்ளன. 8 ஊர்களில் வேளாளர்- பறையர் என தனித் தனி சுடுகாடுகள் இருந்துள்ளன. எனவே இரு பகுதியினரும் ஒதுங்கி வாழ்தல் தெரிகிறது.

 சோழமண்டலம் என்பதில் தஞ்சாவூர், திருச்சி, தென் ஆர்க்காடு என்றால், சோழபுர ஜெயங்கொண்ட மண்டலத்தில் வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, சித்தூர், நெல்லூர்  பகுதிகளில் உடையான், பிரமராயன், மூவேந்தவேளாண் எனப் பட்டங்கள்.  பதவிநிலைப் பெயர்களாக கண்காணி, ஓலை, கரணம், கூறு, சிவபிராமணர், சேனாதிபதி, தண்டநாயகம், பள்ளிதொங்கல், நகரம், நாயகம், புரவுவரி, ஸ்ரீகாரியம், பெருந்தரம், வெட்டி, வரிபொத்தகம் எனும் பெயர்கள் காணப்படுகின்றன.

கல்வெட்டுக்கள் பெரும்பாலும் தமிழில்- சில சமஸ்கிருதம் தமிழில் காணப்படுகின்றன. சில வருவாய் சொற்கள் தெளிவற்று இருப்பதாகச் சொல்லி அவற்றை பட்டியலிட்டுள்ளார் கரோஷிமா.  ஜெயங்கொண்ட மண்டலத்தில் இவை அதிகம் காணப்படுகின்றன. அமஞ்சி, ஆயம், ஆளமஞ்சி, எச்சோறு, கடமை, குடிமை, காசாயம், கூற்றுநெல், சில்லிறை, நீர்விலை, செந்நீர்வெட்டி, தறி இறை, நெல்லாயம்,வெட்டி, பெருவரி, வேதினை, வேலிக்காசு போன்ற பல சொற்கள் தரப்பட்டுள்ளன.

அரசாங்க ஆணைப்படி நிலத்தீர்வை நெல்லாக வேலி ஒன்றுக்கு 95 முதல் 100 கலமாக வாங்கப்பட்டுள்ளது. ஒரு பூ- இரு பூ விளையும் நிலம் மற்றும் விளச்சலுக்கு தக்க வட்டார தீர்வை மாறுபட்டிருக்கலாம்.

 சோழபுர பகுதியில் பல ஊர்கள் நல்லூர் என முடிவதைக் காண்கிறோம். பவித்திரமாணிக்க நல்லூர், உலகளந்த சோழ நல்லூர், கேரளாந்தக நல்லூர், சரி நல்லூர், இருமுடிச் சோழ நல்லூர் என இந்த நல்லூர்களில் வரித்தீர்வை விலைநிலம் தவிர வரகு எள்ளு நிலம், தெங்கு மாவு தோட்டம் என வசூலிக்கப்பட்டுள்ளது.

செக்கு இரை என்பது எண்ணெய் செக்காலை மீதான வரியாகும். கூற்று அரிசி புதுக்கோட்டைப் பகுதியில் அரசாங்க அலுவலர்களுக்கு தரப்படும் அரிசியாகும்.. தட்டார் மீது தட்டார்பாட்டம், தறிகள் மீது தறி இறை, நாட்டு விநியோகம் எனும் பொதுவரி, மீன்பிடிக்கு பாசிப்பாட்ட வரி, பொன்வரி பொன்னாக பெறப்படுவது என்கிற சில விளக்கம் நமக்கு கிடைக்கிறது. வெட்டி என்பது பொதுப்பணிகளுக்கு தரப்படவேண்டிய கட்டாய உழைப்பாம்.

 தஞ்சை மாவட்டத்தின் 1000 கல்வெட்டுகளிலிருந்து நிலம், சமூகம், வேளாண்மை, வருவாய் எனும் நான்கு அம்சங்களை கரோஷிமா ஆராய்ந்துள்ளார். அதற்கு 1000 சொற்களை தேர்ந்தெடுத்து அட்டவணைப் படுத்துகிறார். சோழர் காலத்தில் காசு என தங்க நாணயம் பேசப்பட்டால், பாண்டியர் மற்றும் பிற்காலத்தில் பணம் என மாறுகிறது. சபை, நகரத்தாரென்பவை இல்லாமல் போகிறது.

 நிலவகையில் கொல்லை, செய், திடல், நத்தம், நந்தவனம், நன்செய், புன்செய், மயக்கல், மனை,விளைநிலம் போன்ற சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஊர் நிலக்கிழமை எனில் அகரம், தேவதானம், பிரமதேயம், தேவதான பிரமதேயம், பெருந்தேவதானம் என்பனவும் - தனிநில நிலக்கிழமை எனில் காணி, திருநாமத்துக்காணி, திருநுதாவிளக்குப்புறம், தேவதானம், மடப்புறம் போன்றவை கிடைக்கின்றன.

சமூகப்பிரிவாக இடையர், உவச்சன், கைக்கோளர், செட்டி, தச்சன், பிராமணர், மன்றாடி, வியாபாரி, வெள்ளாளர் போன்றவையும், உறவின் முறை குழுக்கள் என இடைச்சான்றார், ஊரார், சபையார், நகரத்தார், பெருங்குறி மஹாசபை, மஹாசபா போன்றவை வழக்கில் இருந்துள்ளன.

நம் முன்னோர்களின் வரலாற்றை கரோஷிமா போன்ற பலர் இங்கு துருவி ஆய்ந்து கட்டமைத்துள்ளனர். தென்னிந்திய வரலாற்று குறிப்பில் இந்த ஆக்கமும் நம் வாழ்வின் வரலாற்றுவழி அறிய துணைநிற்கும்.

17-5-2022

No comments:

Post a Comment