https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 25, 2024

A letter to PM shri Modi

 அன்புள்ள ‘இந்தியா எனும் பாரத ‘ பிரதமர் அவர்களுக்கு

குடிமகனின் வணக்கம். தங்கள் ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகள்.
ஆர் எஸ் எஸ் தொண்டராக, பாஜக உறுப்பினர் தலைவராக, குஜராத்தின் முதல்வராக, கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக தாங்கள் வளமான அனுபவங்களை பெற்றிருப்பீர்கள். நாட்டின் மூலைமுடுக்கில் உள்ள கோடானுகோடி மக்களை அவர்களது வாழ்நிலை சூழலை, தேவைகளை புரிந்துகொண்டிருப்பீர்கள். உலகத்தின் ஏராள நாடுகளுக்கு சென்ற வகையில் , அந்நாடுகளின் நடைமுறைகளை திட்டங்களை மேம்பாடுகளை பலவீனங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள். அந்த அனுபவங்களின் வழியாக இந்தியா குறித்த கனவை மேம்படுத்திக்கொண்டிருப்பீர்கள்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டம், காந்தியின் அகிம்சை போன்ற அம்சங்களில் தாங்கள் கேடராக வளர்ந்த ஆர் எஸ் எஸ் பயிற்சிக்கூடம் , உள் அரங்க கூட்டங்களில் பல உபதேசங்களை செய்திருக்கக்கூடும். சாவர்க்கர், ஹெட்கேவர், கோல்வால்கர் போன்ற மூலவர்களின் சிந்தனைகள் தங்களைப் போன்ற கேடர்களிடம் படிய வைக்கப்பட்டிருக்கும். ஜனசங்கத்தின் கோட்பாடுகளை வடித்தெடுத்த தீன் தயாள் உபாத்யாய், பின்னர் 1980 களில் பாஜகவை உருவாக்கி வளர்த்த வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டவர்களும் உங்களைப் போன்றவர்களுக்கு ஆதர்சனமாக இருந்திருப்பர்.
உங்களின் தாய் அமைப்பு ஆர் எஸ் எஸ் , ஜனசங்க- பாஜக கொள்கைகளை நிறைவேற்ற 75 ஆண்டுகளுக்கு மேலாக , உங்கள் அமைப்பினர் போராடி பாஜக மத்திய ஆட்சியை வாஜ்பாய் வழி கண்டீர்கள். அதே காலத்தில் துவங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்னும் அந்த வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கவில்லை.
விடுதலைக்கு பின்னர் காந்தி படுகொலை, எமர்ஜென்சி போன்ற அசாதரண காலங்கள் நீங்கலாக, மற்ற ஆண்டுகளில் நேரடியாகவும், சில நேரங்களில் ரகசிய முறைகளிலும் சுதந்திரமாக உங்கள் அமைப்புகள் இந்நாட்டில் செயல்படமுடிந்துள்ளது. தாங்களும் 10 ஆண்டுகளாக ஆளமுடிந்துள்ளது.
எந்த ஆட்சியிலும் குறைகள் இல்லாமல் இருக்காது. குறைகள் மட்டுமேயும் இருக்காது. நேரு அவர்கள் துவங்கி , இது பொருந்தும். தாங்கள் ‘நேருவை விஞ்சிய வரலாற்று உருவாக்கம் தேவை எனக் கருதியிருக்கக்கூடும். காங்கிரசை விஞ்சிய ‘பாஜக வரலாற்று உருவாக்கம்’ கடினமான ஒன்று என நீங்கள் கருதியிருக்கக்கூடும். எனவே தனிநபர் ஹீரோ உருவாக்கம் என்கிற short cut யை தங்களை அந்த ஹீரோவாக முன் நிறுத்தி - personality cult உருவாக்கும் சோதனையை சாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
குஜராத்தை இந்த நாயக வழிபாட்டிற்கான தியேட்டராக்கி, அதில் கிடைத்த தேர்தல் வெற்றி, கட்சி அங்கீகாரம் ஆகியவற்றைக் கொண்டு, பாரத சோதனையை மேற்கொண்டீர்கள். Hero worshipக்கு உகந்த கட்சி கட்டமைப்பை, அமைச்சரவையை, நிறுவனங்களை, மீடியா கட்டமைப்பை மிக சாமர்த்தியமாக செய்துள்ளீர்கள்.
ஆர் எஸ் எஸ் பாஜக தொண்டர்களுக்கு தங்களின் ‘சித்தாந்த அமுலாக்க நாயகன்’ என்கிற காரண்டியை கடந்த 10 ஆண்டுகளில் தந்துள்ளீர்கள். விவரம் தெரிந்த சிலர் அங்கும் too much , unbearable எனச் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் எடுபட்டிருக்கமாட்டார்கள். அவ்வளவு அசுர பலத்துடன் , சங்க் பரிவார் அமைப்புகளை உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்காக நிற்க வைத்து இன்றுவரை மாபெரும் வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் மனதில் கூட தங்களின் attitude ஒருவகையிலான authoritarianism என எப்போதாவது தோன்றினாலும், அதை பொருட்படுத்தாமல், மேலும் மேலும் unbeatable man imageயை, மிகக் கவனத்துடன் கட்டி வருகிறீர்கள்.
இந்தியர் அனைவரும் சமமாக வாய்ப்புகளை பெறவேண்டும்- எவருக்குமான தனி community appeasement கூடாது என உங்கள் அமைப்பினர், உங்களுக்கு முன்பிலிருந்தே பேசிவருகின்றனர். சிறுபான்மையினர் மட்டுமே கொண்டதல்ல ஒரு நாடு , அப்படி பேசுவது செக்யூலரிசம் அல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும். ஆனால் சிறுபான்மையினர் என்கிற தனி கேடகரி குறிப்பாக ‘முஸ்லிம் என்கிற கேடகரி’ பார்வையிலேயே இருக்கக் கூடாது என நினைக்கும் ‘இந்துத்துவா அரசியலை ‘ தாங்களே படைத்தளபதியாக முன் நின்று செய்வது , இந்தியா விடுதலைக்கால அரசியலில் புதிதாக இருக்கிறது.
பிரதமர் என்கிற அரசியலமைப்பு சட்டப்படியான பதவி, பொறுப்பு - மிக அபூர்வமாக இந்திய குடிமகன் ஒருவருக்கு வாய்க்கக்கூடியது. பெரும் மரியாதைக்கும் , நல் மதிப்பிற்கும் , அனைவரின் நல் எண்ணத்திற்கும் உரிய அற்புதமான ஜனநாயகப் பொறுப்பு அப்பதவி. 140 கோடி இந்தியர்களும் ஒரு சேர நின்று , பிரதமர் தங்களுக்கானவர் என்கிற பாத்தியதை உணர்வை உண்டாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நிறைந்த ஆக உயர் அரசியல் நிலை. அரசியல், பொருளாதார, சமூக மதிப்புகளையும் , தார்மீக நெறிகளையும் கோடானுகோடி மக்களிடம் ஓர் இன்ச் அளவாவது உயர்த்தும் பொறுப்பது. இத்தகைய ‘பாத்தியதை’ உணர்வை தங்களால் உருவாக்க முடிந்துள்ளதா என்பதை ஆத்ம சுத்தியுடன் தாங்களும் , தங்கள் அமைப்புகளும் சிந்திக்க வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறேன்.
மொழி அடிப்படையில் , மத அடிப்படையில், இன சாதி வர்க்க அடிப்படையில் சிலரை பிறர் ஆக்கி - demonising and creating the otherness என்பது இந்திய அரசியலில் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே தீவிரம் கொண்டுள்ள அரசியல் செயல்பாடுகளாகவே இருக்கின்றன. இந்திய அரசு- மாநில அரசு என்கிற இரு அரசு முறை மோதல் விடுதலைக்குப் பின்னரான அரசியல் மோதலாக வலுத்து வருகிறது.
விடுதலை கால போராட்டத்தில் இந்தியா என்கிற பேரடையாளத்துடன் தேவைப்பட்ட centralised top down politics என்பது, விடுதலைக்குப் பின்னரான தேர்தல் மய்ய அரசியலில் regionalisation of Indian politics, வட்டார அரசியல் என நிலைக்கொள்ளத்துவங்கியது. நேரு, இந்திரா, ராஜிவ் கால centralised என்பது ஓரளவு நரசிம்மராவ், மன்மோகன் காலத்தில் சற்று பலம் குன்றிப் போனது. ராகுலின் இக்காலத்தில் அவர் வட்டார அரசியலின் பலத்தை நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் இந்த அரசியல் பயணத்தில் ஏக இந்திய அரசியல் என்பதிலிருந்து , வட்டார அரசியல் பலத்துடன் என்கிற நிலையை அவர்கள் எட்டிவிட்டனர். கம்யூனிஸ்ட்களும் தங்களின் ஏக இந்திய அரசியல் சோதனையில் வெல்ல முடியவில்லை. மே வ , கேரளா வட்டார அரசியல் சோதனைகளில் நின்றுபோக வேண்டியதாயிற்று.
பிரதமர் அவர்களே , உங்களின் மூதாதையர் ஏக இந்து பெரும்பான்மை இந்தியக் கனவைக் கொண்டவர்கள். அதற்கான சக்கரவியூகத்தில் எப்போதும் போர் என்கிற முரசை அடித்துக்கொண்டேயிருப்பவர்கள். இந்த முரசை தளபதியாக நின்று தாங்களே அடிக்க பெரு விருப்பத்துடன் இருக்கிறீர்கள். தங்களின் முழு ஆற்றலையும் அப்படியொரு ‘இந்துக்களின் இந்தியா’ Hindu kingdom என நிறுவ சங்க நாதம் செய்கிறீர்கள். எதிரியை சித்தரித்து, அனைத்து இந்துக்களையும் முடிந்தால் அக்னிவீரர்களாக்க முயற்சிக்கிறீர்கள். போர் என்றால் சேதாரம், வளர்ச்சி இருக்காது என்பதை ஆட்சியிலிருக்கும் தங்களைவிட எவர் நன்றாக உணரமுடியும். இந்த கற்பனையான எதிரி உருவாக்கமும், போர் முஸ்தீபுகளும் அவசியமா என சிந்திக்க வேண்டுகிறேன்.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு கோடானு கோடி மக்களுக்கு ரேஷன் அரிசி கொடுக்கவேண்டிய நிலையில்தான் நம் நாடு இருக்கிறது. இன்னும் சில இலவசங்களை சலுகைகளை supportive ஆக கொடுக்கவேண்டிய நிலையில் தான் மக்கள் வாழ்நிலை இருக்கிறது. வேலையின்மை என்பது இந்தியாவில் எப்போதுமே பிரச்சனையாக இருக்கிறது. பல கிராமங்களில் வாழ்க்கை முன்னேற்றம் என்பதை காணமுடியுமா என்கிற ஏக்கமே இருக்கிறது. குழந்தை பெண்கள் ஆரோக்கிய குறியீடுகளும் கவலைத்தரத் தக்க அளவில்தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான உழைப்பாளர்கள் இருந்தும் இன்னும் நாம் நோஞ்சான் குடியரசாகவே இருக்கிறோம்.
ஆக உயர் பில்லியனர், கோடீஸ்வரர்கள், மில்லியனர்கள், இலட்சாதிபதிகள், சொத்தாதிபதிகள் என 20 கோடி அல்லது சற்றுக்கூட இருக்கலாம். இது பெரிய மார்க்கெட் இல்லையென சொல்லவில்லை. அடித்தட்டு 20 கோடி மிக அவல நிலையில் இருக்கிறார்கள். மீதமுள்ள 80-100 கோடி தனவந்தர்கள் அல்ல. கைக்கும் வாய்க்குமான போராட்டத்தை நடத்துபவர்கள்.
இந்திய மக்களில் எவர் எந்த தட்டில் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளார்கள் என்பதை பிரதமர் என்கிற பொறுப்பில் மற்ற எவரையும் விட தாங்களே நன்கு அறிந்திருக்க முடியும். 5 அல்லது 10 ஆண்டுகளில் இவற்றையெல்லாம் மாற்ற முடியும் என்கிற magic wand எவரிடத்தும் இல்லை. மக்கள் நம்பிக்கைகளை மதிக்கிறோம் என்கிற பெயரில் ஆலயம், மசூதி, சர்ச் , சிலைகள் கட்டுவதில் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது என்பதை தாங்கள் அறியாமல் இருக்கமுடியாது.
இந்தியாவில் இச மோதல்கள் என்பதை சற்று தள்ளி வைத்துவிட்டு கோடானுகோடி மக்களுக்கான welfare economics, planning என்பதில் விவாதங்களை கவனப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு, பிரதமர் என்கிற வகையில் தங்களுக்கே இருக்கிறது. விவாத தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பும் தங்களுக்கே கூடுதலாக இருக்கிறது. இந்திய மக்களின் ஆக விஸ்தார ஒற்றுமையை உருவாக்கி பலப்படுத்த வேண்டிய விவாதங்களை தாங்கள் முன்னெடுக்க வேண்டிய கடமை இருக்கிறது எனத் தோன்றுகிறது.
இன்னும் வரக்கூடிய தேர்தல் நாட்களில் தங்கள் உரைகள் என் போன்றவர்களை வழக்கமான பேச்சினால் tired ஆக்காமல், உயர்வான நெறி சார்ந்து இருக்க வேண்டுகிறேன்.
உங்கள் மொழியில் என்னால் இதை எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
அன்புடன் மரியாதையுடன்
இந்திய குடிமகனாக ஆர் பட்டாபிராமன்
24-4-2024

No comments:

Post a Comment