https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 25, 2024

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும்

 எஸ் ஜெயசீல ஸ்டீபன் எழுதியுள்ள தமிழ் மக்கள் வரலாறு seriesல் வந்துள்ள மற்றொரு புத்தகம்

‘தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் ( கி பி 600- 1565)’.
2004 ல் UGS நிதி உதவியுடன் செய்யப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் 4 இதில் இடம் பெற்றுள்ளன. Annual Epigraphy Reports மற்றும் தொல்லியல், கல்வெட்டு தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, பெறப்பட்டவை அடுக்கப்பட்டுள்ளன. அடுக்கப்படும் தகவல் வழி அக்கால தமிழ் சமுதாய மனிதர்கள் செய்த தொழில், குறிப்பிட்ட ஒருவர் வெவ்வேறு தொழில்களை செய்தல், தொழில் பிரிவினைகளை சாதியாக இறுக்கமாக்குதல்- பிறப்பு வழி மேல் கீழாக்குதல் போன்றவற்றை உணரவைக்க ஆசிரியர் ஸ்டீபன் முயற்சி செய்துள்ளார். ஆசிரியர் கண்டெடுக்கும் சில புள்ளிகள்..
பரிபாடல் ‘குலம் ‘ என 44 வகை தொழிற்பிரிவினரைக் காட்டுகிறது.
அகநானூறு 4 வகை தொழில்களைப் பேசுகிறது
கிமு 1500 வரை வர்ணம், தர்மம் கர்மா பற்றி சான்றுகள் காணப்படவில்லை.
சங்க கால கிபி 100-300 மக்கள் சிற்றூர்களில் வாழ்ந்துள்ளனர். மரபுவழி தமிழ் குடியிருப்புகளில் 12 தொழில் வகையினர் சொல்லப்பட்டுள்ளனர். சங்க காலத்திற்கு முன் தமிழகத்தில் மதம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.
சங்க கால ஆட்சிகளில் ஏற்பட்ட கோரமான போர்களால் ஏழ்மை ஏற்பட்டு பரவியிருந்தது.
சங்க காலத்திற்கு பிறகான காலத்தில் பசித்தோர்க்கு உணவு, பசிப்பிணி தீர்ப்பது, வீடற்றோர் உறைவிடம், ஊனமற்றோர்க்கு உதவி போற்றப்பட்டன.
தமிழ்ப் பேசும் பிராமணர்கள் அந்தணர், பார்ப்பனர், அறவோர், வேதியர் என குறிக்கப்பட்டுள்ளனர். நச்சினார்க்கினியர் அவர்களுக்கான ஆறு வகை கடமைகளைச் சொல்கிறார்.
செட்டி என்போர் தனிக் குழுக்களாக, வணிகர்களாக, செல்வந்தர்களாக இருந்துள்ளனர்.
சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் சூத்திரர் என்ற கருத்துப் பயன்படுத்தப்படவில்லை.
இறந்தவர் சவக்குழி பணிகளை புலையர்கள் செய்துள்ளனர். இவர்கள் தீண்டத்தாகாதவர் எனப் பேசப்பட்டுள்ளனர். (நடத்தப்பட்டதால் தான் பேசப்படுதல் வருகிறது என நாம் புரிந்துகொள்ளலாம்.)
சங்க கால சமூகத்தில் பெண்கள் சம நிலையை அனுபவித்தனர் என சொல்ல முடியவில்லை. சங்கம் மருவிய காலத்தில் நிலைமை மோசமானது. தமிழ் இலக்கியங்களில் கற்பு நாணம் இரண்டும் அடிப்படை பண்புகளாக பேசப்பட்டுள்ளன.
கணிகை நடனமங்கை. தனித் தெருக்களில் வசித்துள்ளனர். பதிலியர் என்பவர்கள் இசை ஒலி கொண்ட தனி வீதிகளில் இருந்துள்ளனர். பரத்தையர் தொடர்பு தீமை என்பது பேசப்பட்டுள்ளது.
சங்க காலம் முதல் வேளாளர் தனித்துவமாக, அதிகாரமிக்க சமூகக் குழுவாக இருந்தனர். கோயில்களுக்கு தானமளித்துள்ளனர்
மன்றாடியர்கள் இடையர் என்று ஆடு மேய்ப்பவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் கோன் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். கோயில்களுக்கு நெய் தானம் செய்துள்ளனர். தஞ்சை பெரிய கோயிலுக்கு நந்தா விளக்கு எரிக்க தானம் தந்துள்ளனர்.
சங்கரபாடியர் என்பார் எண்ணெய் உற்பத்தியாளர்கள். இவர்கள் பெரிய தொழிற்பிரிவாக மாறினர்.
பிராமணர்களுக்கு பிரம்மதேயம் நிலத்தானம் வழங்கப்பட்டுள்ளது. 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இதை வேளாளர் எதிர்த்துள்ளனர். சோழர்கள் காலத்தில் ஆரிய, மத்திய, கவுட தேசத்திலிருந்து பிராமண குடும்பங்கள் வந்துள்ள செய்திகள் இருக்கின்றன. கிபி 1053-56 ல் 730 குடும்பங்கள் குடியேற அரசு நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. 13 ஆம் நூற்றாண்டில் கேரளாவிலிருந்து மலையன் என்ற பிராமணர் தஞ்சை வந்து வேதம் படித்த செய்தி இருக்கிறது. வைசிய பெண்களை மணந்து பிராமணர் நெசவுத் தொழில் செய்துள்ளனர். வேறு சாதி திருமணங்கள் பிராமணரிடையே அதிகம் நடந்துள்ளது. இதனால் பல்வேறு தொழில்களில் பிராமணர் ஈடுபடத் தொடங்கினர்.
கோயில் பணிகளில் கம்மாளர், சிற்பிகள், தச்சர், மட்பாண்டம் செய்வோருக்கான பங்கிருந்தது. உள்ளூர் தச்சர்கள் கிராமங்களை விட்டு வெளியேறக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்தது.
கைக்கோளர், சாலியர், தேவாங்கர் துணி உற்பத்தி தொழிலில் இருந்துள்ளனர். 13 ஆம் நூற்றாண்டில் உற்பத்தி தேவை அதிகரித்த நிலையில் பறையர் சமூகத்தினரும் துணி உற்பத்தி செய்துள்ளனர்.
சிதம்பரம் பகுதியில் கிபி 1036ல் கிடைத்த தகவலில் வேளாளர், நெசவாளர், சங்கரபாடியர் குடிகள் என குறிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் நிலப்பகுதியில் தொழிற்பிரிவுகள் சாதியை நோக்கி மாற்றமடைந்து, விரிவடைந்தது. இடைக்காலத்தில் வலங்கை, இடங்கை பிரிவுகளில் அவை அடைக்கப்பட்டதைக் காணமுடிகிறது. 10 ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் காலத்தில் வலங்கை பிரிவும், பின்னர் இடங்கைப் பிரிவும் உருவாயின.
பழங்காலத்தில் எந்தப் பிரிவினர் மீதும் தீண்டாமை ஒட்டியிருந்ததாக தெரியவில்லை. ராஜராஜன் கால கிபி 1014 கல்வெட்டில் தீண்டாச்சேரி சொல்லப்பட்டுள்ளது. பறையர் தீண்டாதோர் என அழைக்கப்படவில்லை. பறைச்சேரி தனியாக காட்டப்பட்டுள்ளது.
சக்கிலியர், வண்ணான், முடிதிருத்துவோர் பற்றி குறிப்புகள் உள்ளன.
அடியாள், உவச்ச அடிமை, அடிமை என சொத்துக்களுடன் மனிதர்களும் சேர்த்து விற்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சாதிப் பிரிவினரும் தங்களுக்கென இலக்கியப் படைப்பை எழுதியிருப்பதைக் காணமுடிகிறது. சோழர்கள் காலத்திற்குப் பிறகு சாதி உறுதியானது . வலங்கை 98 - இடங்கை 98 பிரிவினர் மத்தியில் தீவிர சண்டைகள் இருந்தன. உட்சாதிகளின் தோற்றமும் உருவாகலானது.
ஸ்டீபன் தன் ஆய்வில் இப்படி ஒரு இடத்தில் வந்து நிற்கிறார்
“ தமிழ்ச் சமுதாயத்தில் எல்லா சாதியும், சமூகப் பண்புகளும், திடமாகவோ உறுதியாகவோ இல்லை. சமூகப் பிரிவுகளின் தொடர்புகள் மூலம் இதை புரிந்துகொள்ள முடியும்”
ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் நூலின் ஒரு பகுதியை மட்டுமே தொட்டுக்காட்டியுள்ளேன். பல்வேறு விவரங்களைக் கொண்டதாக இப்புத்தகம் நகர்கிறது.

No comments:

Post a Comment