https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, October 10, 2023

ஆண்ட் ருஸ்-காந்தி

 

ஆண்ட் ருஸ்-காந்தி

மதிப்பிற்குரிய C F ஆண்ட் ருஸ் முதல்முறையாக காந்தியை சந்திக்கும் காட்சி ரசிக்கத்தக்க  ஒன்று. சுசிலா தனது மகாத்மா வால்யூம் 4 ல் அதைக்கொண்டு வந்திருப்பார்.

தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம் மிக உச்சம் போய்க்கொண்டிருந்த நேரமது. கஸ்தூர் உட்பட பல பெண்களும் கைதாகி, தண்டனை முடிந்து வெளிவந்துகொண்டிருந்தனர். காந்தி, கல்லன்பாக் சிறை வாயில் சென்று வரவேற்று வருகின்றனர். காந்தி மனத்துயரில் இருந்தார். தன்னை நம்பி போராட்டத்தில் ஈடுபட்ட ஹர்பத் சிங் 75 வயது சிறையிலேயே மரித்துப்போனார்.

அந்தோணி முத்துவிற்கு குண்டு காயம், அவரது தந்தையோ சிறைக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் சாய்ந்தார். சூர்ஜ்ஹய் பீனிக்சிலிருந்து அழைத்துப்போகும் போதே துப்பாக்கி குண்டால் துளைக்கப்பட்டதை  அவரது துணைவியார் கண்ணீரும் கம்பலையுமாக காந்தியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.  இளம் வள்ளியம்மா வெளிவந்து, சுகவீனமுற்று இறக்கப்போகும் தருவாயிலும், தன்னால் தியாகம் செய்யமுடிந்தால் பேறு எனச் சொல்கிறார்.

காந்திக்கு என்ன செய்வது - ஏதாவது தன்னுள் கிளர்த்தும் மாற்றத்தை தான் மேற்கொண்டாக வேண்டும் என்கிற தவிப்பு எழுகிறது.  மக்கன்லால், இனி இந்த வக்கீல்  மேற்கு அடையாள உடை வேண்டாம்- தமிழ் உழைப்பாளர் கட்டுகிற வேட்டி சட்டை போதும்- அதை எடுத்துவா என உடன் அந்த உடை முறைக்கு மாறுகிறார். அவர்களின் துக்கத்தை பகிர்ந்துகொள்ள என்னால் செய்யமுடிந்தது அதுதான் என்கிறார். ஜோல்னா பை ஒன்று தோள் ஏறுகிறது. அநேகமாக இந்த நாள் டிசம்பர் 19, 1913 ஆக இருக்கலாம்.

இந்த சூழலில்தான் , கோகலே நிதி வசூல் செய்து தென்னாப்பிரிக்க போராளிகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.  வெஸ்ட், போலக், கல்லன்பாக் என அனைவரும் சிறை என்றால் காந்திக்கு துணையாக நிற்க ஆங்கிலேயர் ஒருவர் இருக்கவேண்டும் என்கிற அவசியத்தை கோகலே உணர்கிறார். அப்போது பழக்கமாகியிருந்த ஆண்ட் ருஸ் பொருத்தமானவர் என அவரை தென்னாப்பிரிக்கா அனுப்புகிறார். அவரது கப்பலும் குறிப்பிட்ட நாளில் அல்லாது தாமதமாக வருகிறது. ஆண்ட் ருஸ் தன்னிடம் இருந்த சேமிப்பான 300 பவுண்டையும் கோகலேவிடம் நிதியாக கொடுக்கப்போனார். ஆனால் கோகலே அன்று இந்திய மதிப்பில் ரூ 1000க்கான 75 பவுண்டை மட்டும் எடுத்துக்கொண்டார்.

ஜனவரி 2 , 1914 அன்று ஆண்ட் ருஸ் வந்தடைந்தார். டர்பனில் போலக், காந்தி ( தனது மாறிய உடையுடன்) மற்றும் கூட்டமாக பலர் வரவேற்றனர். காந்தி முதலில் சென்று கைகுலுக்கி வரவேற்கிறார். போலக்கை பார்த்து( முன்பே இந்தியாவில் போலக்கை பார்த்து பேசியிருந்ததால்) கையசைத்த ஆண்ட் ருஸ் காந்தி எந்த சிறையில் இருக்கிறார், முதல் வேலை அவரை சிறையில் போய் சந்திப்பதுதான் என்கிறார். போலக் சிரித்துக்கொண்டே, நீங்கள் காந்தியை பார்த்தீர்களே, பார்க்கவில்லையா எனக் கேட்கிறார்.

ஆண்ட் ருஸ்க்கு, இந்திய மரபில் முதலில் சந்நியாசி எவரையாவது நிற்கச் சொல்லி வரவேற்பார்கள் போலும், அப்படி தன்னை  முதலில் வரவேற்றவர் ஏதோ ஒரு சந்நியாசி எனக் கருதிவிட்டார். இதை சுசீலாவின் வரிகளில் காண்போம்.

Polak laughed and said, “ you have already met Mr Gandhi. He has been released. There he is”

Andrews was agreeably surprised. He looked at a man who appeared to be renunciation incarnate. His eyes, full of wonder and reverence , glanced at the man in front of him from head to foot. Then moving two steps back, he fell on his knees and touched his feet…it seemed as if long lost friends had come together. They were full of joy and felt as if they were already close friends”

மறுநாள் தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் தங்கள் விமர்சனத்தை வைத்தன. காந்தி முனிவராக இருக்கலாம் ஆனால் இந்தியர். அவர் காலில் புனித ஆண்ட் ருஸ் விழுந்து, தென்னாப்பிரிக்க வெள்ளையர் புகழை பங்கப்படுத்திவிட்டார் என்றனர். ஆண்ட் ருஸ் ஒரே வரியில் அந்த விமர்சனங்களை எதிர்கொண்டார். அவ்வரி  I saw Christ in Gandhi.

இப்படி அவர்களின் முதல் சந்திப்பும் பெரு நட்பும் தொடங்கியது..வாழ்நாள் முழுவதும் நீடித்தது

No comments:

Post a Comment