II
ஒத்துழையாமை என்பதை லஜ்பத் அழுத்தமாக பேசினார். நம்மை பிடித்து அடக்கி ஆளும் அந்நிய அரசாங்கத்துடன் நாட்டில் உள்ள சிறந்தவர்களால், மூளை உள்ளவர்களால் ஒத்துழைக்கமுடியாது என்றர் லாலஜி. பஞ்சாப் மாநில காங்கிரசின்
தலைவராக இருந்தபோது நாக்பூர் காங்கிரஸ் அமர்வில் தேர்தல்களில் பங்கேற்பு என்பதை லாலாஜி
ஏற்கவில்லை. காங்கிரசின் தீர்மானங்களை மாவட்டந்தோறும்
எடுத்துசெல்ல அவர் தவறவில்லை. வகுப்புகளை புறக்கணித்து, அரசுவேலைகளை உதறி வாரீர் என
அழைத்தார். அவ்வியக்கம் பஞ்சாபில் வெற்றிகரமாக நடக்க பெரும்பணியாற்றினார்.
பிரிட்டிஷ் சர்க்கார் மோதிலால், சி ஆர் தாஸ், லஜ்பத், ராஜேந்திரபிரசாத், ஜவஹர் போன்றவர்களை சிறையில் அடைத்தது. பல இடங்களில் சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்டனர். அரசாங்க ஊழியர்கள் வேலையிழந்தனர். மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் போனது. செளரி செளரா வன்முறை நிகழ்வு பிப்ரவரி 5 1922ல் நடந்தது. வன்முறையால் மனம் பாதிக்கப்பட்ட காந்தியடிகள் ஒத்துழையாமையை விலக்கிக்கொண்டார். மோதிலால், லஜ்பத் கடுமையாக இந்நடவடிக்கையை விமர்சித்தனர். லஜ்பத் காங்கிரஸ் கமிட்டிக்கு 72 பக்க கடிதத்தில் காந்தியின் நடவடிக்கையால் நாம் துடைத்தெறியப்பட்டுள்ளோம். “Mahatmaji's
overconfidence in his judgment, in his impulsiveness, has often landed us, his humble collegues, in
very false positions, but now we are simply routed” என எழுதி விமர்சித்திருந்தார்.
படித்த இங்கிலீஷ்காரர்களால்தான் நமக்கு விமோசனம் என்றால் அது வரப்போவதில்லை. நமது கோரிக்கைகள் பின்னால் நம் மக்கள் நிற்கிறார்களா என்பதுதான் அளவுகோல் என்றார் லஜ்பத். மக்களை அரசியல்படுத்தாமல் இன்றுள்ள காங்கிரஸ் தலைவர்கள் நடைமுறைகள் பலன் அளிக்கப்போவதில்லை என வெளிப்படையாக காந்தியின் மீதான தனது விமர்சனத்தை லஜ்பத் வைத்தார். நமது மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வெகுஜனம் என்றாலே அலர்ஜி ஆகிவிடுகிறது என கேலி செய்தார் லஜ்பத்.
நம் மத்தியில் லட்சக்கணக்கான வருவாய் பெறும் சிலர் இருக்க,
அய்ந்துக்கும் பத்திற்கும் அல்லாடும் ஏழை மக்களைப்பற்றி கவலை கொண்டு அவர்களை உயர்த்திட நடவடிக்கை வேண்டும் என்றார். எத்தனை தலைவர்கள் அம்மக்களின் மோசமான வாழ்க்கை சூழலை நேரிடையாக பார்த்திருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். அவ்வப்போது செய்யும் தர்மகாரியங்கள் போதும் என நின்றுவிடக்கூடாது. வக்கீல்கள் கேஸ்களுக்கு 1000, 5000 என சம்பாத்தித்துவிட்டு குளுகுளு மலைப்பிரதேசங்களுக்கு ஓய்விற்கு போகிறார்கள். விவசாயிகளும், அலுவலக ஊழியர்களும் 100, 200 கூட கிடைக்காமல் கடுமையாக உழைக்கிறார்கள். இந்த நாட்டில் விவசாயத் தொழிலைவிட வக்கில் தொழிலுக்கு முக்கியத்துவம் அவசியமா என கேள்வி எழுப்பினார் லஜ்பத்.
நமது படிக்காத பாமர உழைக்கும் மக்களுக்கு வேண்டியதெல்லாம் வேத உபதேசங்கள் அல்ல. சுய ஆட்சி என்றால் என்ன என்கிற ஆவேச பேச்சுக்கள் அல்ல. மாறாக படித்தவர்கள், வசதியுள்ளவர்கள் அவர்களுடன் முதலில் கலந்து உறவாடவேண்டும். உலக நாடுகளின் அனுபவங்களை வைத்துப்பார்த்தால், நமது மக்கள் ஒப்பீட்டளவில் முட்டாள்கள் அல்லர். அமைதியானவர்கள்தான் நிதானபோக்குடையவர்கள்தான். அவர்களின் ஆற்றலை தட்டிக்கொடுத்து வெளிக்கொணர நாம் உழைக்கவேண்டும். அவர்களுடன் நின்று அதற்காக ஒத்துழைக்கவேண்டும் என்றார் லஜ்பத். அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் என்பதுதான்
நாட்டின் தலையாய பிரச்சனைகள். பிரிட்டிஷ் அரசே இவற்றை உத்தரவாதப்படுத்து- இல்லையேல்
வெளியேறு. எங்களை நாங்களே ஆண்டு கொள்கிறோம் என கடுமையாக எழுதினார் லஜ்பத்.
நமது அரசியல் போராளிகள் வாய்சவாடல்களை நிறுத்துவோம். மாவட்டந்தோறும் அமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும். அது ஆண்டுதோறும் பொருளாதார சர்வே ஒன்றை எடுத்து வெளியிடவேண்டும். குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதத்திற்கு அம்மாவட்ட மக்களுக்கு தேவைகள் என்ன, உணவு- உடை, உடல் ஆரோக்கியம் குறித்த கணெக்கெடுப்பீர். நான் ஏதோ புள்ளிவிவரங்கள் நம் பசியை வறுமையை போக்கிவிடும் என்பதற்காக இதை சொல்லவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். அவை
ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவதற்கு உதவும். நமக்கும் தெளிவைத் தரும் என்றார்
லஜ்பத். வெற்று
வார்த்தைகளால் அல்லாமல் நமது தேசம் உண்மைகளால் நிரம்பட்டும் என்றார்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுயநலம் கொண்டது என்பதை முதலில் நாம் உணரவேண்டும். பிரிட்டிஷ் வகைப்பட்ட நீதி, விடுதலை பார்வை என்பதெல்லாம் நமக்கு உதவாது என்பதை அறிவோம் என்றார். ஏகாதிபத்திய நீதி என்பதை தாண்டி பிரிட்டிஷ் நியாயம் என ஏதுமிருக்கமுடியாது
என்றார். அமெரிக்க, ருஷ்யாவில் உள்ளது போன்று சில நல்லெண்ணம் கொண்ட சர்வதேசவாதிகள்
பிரிட்டனிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக சிறுபான்மையினார். ஏதும் செய்ய இயலாதவர்கள்
என வெளிப்ப்டையாக பேசினார் லஜ்பத். லிபரல்கள் ஆனாலும் டோரிகள் ஆனாலும் அவர்கள் ஏகாதிபத்தியத்தைதான்
பிரதிபலிக்கிறார்கள். லிபரல் ஜனநாயகம் அதிகம் பேசுவர். நடைமுறையில் அவர்கள் டோரிகள்
செய்வதைக்கூட செய்வதில்லை என பிரிட்டிஷ் அரசியல் சூழலை விமர்சித்தார். அங்கு சோசலிஸ்ட்களுடன்
மட்டும்தான் நாம் சர்வதேசியம் பேசமுடியும் என்றார்,
இந்தியர்கள் தங்கள் உரிமைக்கு தாங்கள்தான் திரளவேண்டும் என்பதை உணரவேண்டும். இதை தெளிவாக தலைவர்கள் உணர்த்தவேண்டும். அங்குள்ள லிபரல்களை நம்பி இருக்கக்கூடாது என எச்சரித்தவர் லஜ்பத். . மைக்கேல் டயர் வருவதற்கு முன்பு 1914களில் இருந்த போலீஸ்
நிர்வாகம் பொதுமக்கள் எண்ணத்திற்கு அஞ்சுவதுபோலவாவது இருந்தது. டயர் வந்தவுடன் நிலைமைகள்
மிக மோசமாகிவிட்டது. காங்கிரஸ் இயக்கத்திலும் 1920 செப்டம்பர் முதல் 18 மாதங்களாக நிறைய
தவறுகள் செய்துள்ளோம். அதை நாம் வெளிப்படையாக ஏற்று சரிசெய்திடவேண்டும் என காங்கிரஸ்
கமிட்டிக்கு கடிதம் எழுதினார் லஜ்பத்.
காந்தியே பேசிவருவதுபோல் அவர் இமாலயத் தவறுகளை செய்துள்ளார்.
ஆனால் அவர் உண்மையாக நடப்பதற்கும் தியாகங்களை
செய்வதற்கும், எளிமையாக இருப்பதற்கும், சகிப்புத்தனமையையும் கற்றுக்கொடுத்துள்ளார்.
இதை சொல்வதற்கு தனக்கு தயக்கமில்லை என்றார் லஜ்பத். சக மனிதராக இருந்தாலும் அரசாங்கத்துடன்
ஆனாலும் நேர்மையாக செயல்படுதல் என்பதை அவர் நடைமுறைப்படுத்த கற்றுத்தருகிறார் என்றார்
லஜ்பத். இந்து
முஸ்லீம் ஒற்றுமைக்கு முன்னுரிமை என்பதை அடுத்த
உயரத்திற்கு அவர் கொண்டு செல்கிறார். நம்மில் பலர் அவர் வருவத்ற்கு முன்னரே விடுதலை
இயக்கத்தில் பணியாற்றி வருபவர்கள்தான். ஆனால் அவரைப்போல சக்தியை, வசீகரத்தை, மக்களை
ஈர்க்கும் ஆற்றலை சலியாத உழைப்பை வேறு எவராலும் தரமுடியவிலலை என்றார் லஜபத் .
அகிம்சை என்பதை எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய நம்பிக்கை
என தான் ஏற்கவில்லை என்றாலும் வன்முறை என்கிற பைத்தியக்காரத்தனம் தேவையில்லை என்றார். வன்முறைவழி முட்டாள்தனமானது,
தேவையில்லை என்றார். Ethics aside, the policy of using violence or force to
oust the British from India is foolish என அவர் எழுதினார். மகாத்மா தன் முன்மொழிவுகளை
லட்சியமாக பெரும் உயரத்தில் வைப்பதால் நடைமுறையில் சாதிக்க முடியாமைக்கு அப்பால் அவை இருப்பதாக லஜ்பத் கருதினார். மனிதகுலம் தனது பாதையில்
வன்முறையை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு பயணிக்கமுடியுமா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக
தெரிவித்தார். கிலாபத் பற்றி பேசும்போது முஸ்லீம்கள் மத்தியில் போதுமான அரசியல் உணர்வு
வளரவில்லை என்கிற கருத்து அவரிடம் இருந்தது..
1922 உறுப்பினர் கட்டணம் செலுத்தாமை குறித்துக்கூட காந்தி விசனப்படுகிறார்.
அவர் சொன்னதால்தான் ஆயிரக்கணக்கில் நாம் சிறைகளை நிரப்பினோம். சிறையை நிரப்ப சொல்லிவிட்டு
சந்தா வரவில்லை என்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார் லஜ்பத். அரசியல் தலைவர் என்பவர்
இராணுவ தளபதி போல் இருக்கவேண்டும் . கோழை நெஞ்சினனாக இருக்ககூடாது . விடுதலை போராட்டத்தில் முன்நிற்கும் தலைவர்கள் உடனுக்குடன்
தங்கள் உள உணர்ச்சிகளை வெளிக்காட்டிவிடக்கூடாது.
மகாத்மாவை நான் கோழை என சொல்லவில்லை . அவர்
தனது கடமையின்போது உயிர்துறப்பாரே தவிர ஒதுங்கி நிற்பவர் அல்ல என்பது தனக்கு நன்றாக
தெரியும் என லஜ்பத் எழுதினார்.
பிரிட்டிஷாரிடமிருந்து நம் நாட்டு முதலாளிகளும், நிலப்பிரபுக்களும்
ஆட்சியை பிடித்துவிட்டால் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும்
முன்னேற்றம் கடுமையானதாகிவிடும் என்பதை உணர்ந்து அதை வெளிப்படையாக எழுதவும் செய்தார்
லஜ்பத்ராய். இந்திய அதிகாரிவர்க்கம் பிரிட்டிஷ் அதிகாரிகளைவிட தாராள சிந்தனையும், சிறப்பான
சேவையும் செய்துவிட போகிறார்களா என்ன என்ற கேள்வியும் அவரிடம் இருந்தது. முதலாளிகளும்
நிலபிரபுக்களும் பெர்ற புதிய அதிகாரம் மூலம் விவசாயிகளை, தொழிலாளர்கலை நசுக்கிவிடுவர்
என்றார்.
இரட்டை ஆட்சிமுறை மோசமானது என்பது அவர் கருத்தாக இருந்தது.
ஆனாலும் இரு முதலாளிகளையும் ஒரே நேரத்தில் அகற்றுவது கடினம் என்பது உணரப்படுகிறது,
முதலில் பிரிட்டிஷ் முதலாளிகளை அகற்றுவோம் பின்னர் நமது முதலாளிகளிடம் கணக்கு பார்க்கலாம்
என்கிற கருத்தையும் அவர் வேறு இடத்தில் பேசுகிறார். தேசங்கள் பிரச்சனையில் ஒருதேசம் பிற தேசத்துடன் கருணைகூர்ந்து
நடக்கும் என எதிர்பார்க்கக்கூடாது என்பார் லஜ்பத். தனிநபர்கள் தூய உந்துதல்களின் செல்வாக்கில்
செயல்படலாம். ஆனால் நாடுகள் அப்படி நடக்கமுடியாது என்றார்.. அவை அதிகாரத்தை நிர்பந்தமின்றி
இழந்துவிடாது என்றார். டொமினியன் அந்தஸ்து என்பதெல்லாம் ஏற்புடையதல்ல, பரிபூர்ண சுதந்திரம்
என்பதற்கு நிற்பவன் நான் என்றார் லஜ்பத். அதற்கு இரகசிய முடிவெடுத்தல்களும் வன்முறையும் கூட தேவைப்படலாம்
என கருதினார்.
அந்நியர் ஆட்சி சாபம், குழப்பமானது , ஆனால் அந்நியர் ஆட்சியை
வெறும் செண்டிமெண்ட்களால் மெலொ டிராமாக்களால் அகற்ற முடியாது என்றார். அந்தந்த வகுப்பார்
தங்கள் மதம், அதன் நம்பிக்கைகள் என சொல்லி, அரசியலில் மதவேறுபாடுகளை பார்த்துக்கொண்டிருப்பது
சரியான பாதையாகாது . அரசியல் களத்தில் ஒற்றை பற்றுறுதியுடன் மத வேறுபாடுகளை இணக்கப்படுத்தி
முன்னேறுவது என்பதுதான் சவால். அதேபோல் ஒத்துழையாமை போன்ற அரசியல் நடவடிக்கைகளில் மத
உரையாடல்களை கொணர்வது தவறானது.
Comments
Post a Comment