https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, June 8, 2017

மார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx)


                   மார்க்சின் அரசியல் பரிணாமம்

     -ஆர்.பட்டாபிராமன்

உலகின் பல்வேறு நாடுகளுக்கு சில தீர்க்கதரிசிகள் பெயரும் , அவர்களின் பெயரால் சொல்லப்படும் விஷயங்களும் போய் சேர்ந்துள்ளன. புத்தர், ஏசுபிரான், நபிகள் என மதம் சார்ந்த அடையாளங்களுடன் இவர்கள் அனைத்து நாடுகளிலும் உணரப்படுகிறார்கள். அவர்களின் பெயரால் வழிபாட்டுக்கூடங்களுக்கு மக்கள் ஏராள  பொருளை நேரத்தை உயிர் தியாகத்தை செய்துள்ளனர். அதேபோல் சில இலக்கிய மேதைமைகள் குறித்த சொல்லாடல்கள், அவர்களின் பெயரால் இலக்கிய அமைப்புகள் உலக அளவிற்கு சென்றுள்ளன. பிரஞ்சு புரட்சியின் மகத்தான முழக்கம் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவமும் பல நாடுகளின் இயக்கங்களை கவ்வி பிடித்தது. ஆனால் அரசியல் ஆளுமை என்கிற வகையில்  வேறு எவருக்கும் கிடைக்காத இடம் மார்க்ஸிற்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ளது. அவரின் பெயரால்- சிந்தனையால்- வழிகாட்டல் என்கிற முறையில் மார்க்ஸ் செல்லாத நாடு இல்லை எனலாம். மார்க்ஸ் எனும் தனிநபர்  கம்யூனிஸ்ட் இயக்கங்களாகி, தொழிலாளர் இயக்கங்களாகி. சோவியத்- சீனா போன்ற நாடுகளின் அரசாகி கடந்த 100 ஆண்டுகளாக  உலகின் பெரும் Material Force இயக்க சக்தியாகியுள்ளார். உலகம், முதலாளித்துவம் நெருக்கடிகளில் சிக்கும்போதெல்லாம் அவர் பேசப்படுகிறார். மேல் அதிகமாக உணரப்படுகிறார். அந்த மகத்தான ஆளுமையின் பரிணாமம் குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாக முயற்சிக்கப்பட்டுள்ளது.

மார்க்ஸ் தன் இளமைக்காலம் துவங்கி தனிப்பட்ட மனித உறவுகளிலே அன்புடன் இருந்தவர். அதேநேரத்தில் பிரச்சனைகளில் கறாராக, உறவு முறிந்தாலும் அதை பொருட்படுத்தாதவராக அவர் இருந்தார். தந்தையுடன் விவாதிக்கும் தருணமாக இருந்தாலும், இறுதிவரை தந்தையின் போட்டோ ஒன்றை தன்னுடன் வைத்துக்கொண்டிருந்ததாக இருந்தாலும், தாயுடன் கசப்புகளை சந்தித்தபோதும் அவர் இவ்விதம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்சகோதரிகளுடன்  ஆனாலும். பள்ளிகளில் சகமானவர்களுடனும் குறும்பும் கேலியும் செய்து சீண்டும் சிறுவனாக  மார்க்ஸ் இருந்தார்.
எந்த வேலைக்கு எதிர்காலத்தில் செல்லவேண்டும் என்கிற கனவு குறித்த  ஜெர்மன் கட்டுரையில் 17 வயது மார்க்ஸ்  Universal goal, purify Humanity, poison of despair போன்ற பதங்கள் கொண்டு " a profession which affords us the greatest honor, which is grounded on ideas, of whose truth we are completely convinced which offers as the widest field to serve humanity என்று எழுதியிருந்தார். பொதுநலனுக்கும் அதில் நாம் பெறும் முழுமைக்கும் எச்சிந்தனை நம்மால் நம்பிக்கையுடன் ஏற்கப்படுகிறதோ - எப்பணி அழைத்து செல்கிறதோ அப்பணியில் என மார்க்ஸ் அதில் குறிப்பிட்டிருந்தார்.
தனது பட்டப்படிப்பில் 32 மாணவர்களில் அவர் 8வது ரேங்கில் வந்தார்.  அவருக்கு ‘Excellent promise’ என்பது கொடுக்கப்பட்டிருந்தது. பான் பல்கலை காலத்தில் இளைஞர்களுக்கே உரிய குணத்துடன்  பணச்செலவு செய்பவராக கடன்பட்டவராக இருந்தார். தந்தையும், சகோதரியும் கவலை தெரிவிக்கும் கடிதங்களை அனுப்பினர். ’காரலின்’ பாராமுகம் குடும்பத்தில் வருத்தம் ஏற்படுத்தியது. பக்கத்து வீட்டு அழகிய பெண் ஜென்னியுடன் மார்க்சிற்கு 18 வயதிலேயே காதல் ஏற்பட்டது. மணமுடிக்கலாம்  என ரகசிய  உடன்பாடும் ஏற்பட்டது.
இளம் கார்ல் பெர்லினில்   நோய்வாய்ப்பட்டு இருந்தபோது அவர் தந்தை மே 10 1838ல் மறைகிறார். இருக்கிற தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் தந்தையின் இறுதி சடங்கிற்கு அவர் வந்ததாக தெரியவில்லை என்கிறார்  டேவிட் பெலிக்ஸ். 1839ல் அவர் டிரியர் வருகிறார்.  1842ல் திரும்ப ஊர்வந்த மார்க்ஸ் ஜென்னி குடும்பத்தாருடந்தான் தங்குகிறார்.   1842 ஜூலையில்  தாயாருடன் தந்தையின் எஸ்டேட் பணம் கேட்டதில் பிரச்சனை வருகிறது. குடும்பத்தார் அவருக்கு பணம்தர மறுத்தனர்.
பெர்லின் கல்வி சூழல் சட்டம், தத்துவம், வரலாறு, மொழியியல் கற்க தூண்டியது. ஹெகலிய தாக்கம் ஏற்பட்டது. ஆறுமாதம் நோய்வாய்பட்டிருந்த அக்காலத்தை மார்க்ஸ் முழுமையாக ஹெகலை படிக்க பயன்படுத்திக்கொண்டார். Dark fellow from Trier என கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அவர் அறியப்படலானார். அவர் ஏராள கவிதைகள்  எழுதிய காலமது.  ’ஃபாகடரி ஆஃப் ஐடியாஸ்’ என நண்பர்கள் அவரை குறிப்பிட துவங்கினர். Moses Hess  " the greatest perhaps the only living philosopher who can honestly be called a philosopher " என்று  நண்பர் ஒருவருக்கு தெரிவிக்கிறார். Dr Marx my idol- imagine Voltaire, d' Holbach, Lessing, Heine and Hegel united in one person- வால்டைர்,ஹெகல் போன்ற பிரம்மாண்டங்களின் கலவை மார்க்ஸ் என்றார் மோசஸ் ஹெஸ்.
பெர்லின் டாக்டர் கிளப்பில் இளம் இடது ஹெகலியர்களுடன் மார்க்ஸ் சேர்கிறார். A comparision of Natural Philosophy of Democcritus and Epicurus என்பதை ஆய்விற்கு எடுத்து 40 பக்க கட்டுரை- 6 பக்க சுருக்கம் ஒன்றை அவர் தந்தார். தீர்மானகரம்- விருப்புறுதி (Determinism and free will) என்கிற இருமை நிலைகள்  எபிகுரஸ் ஆய்விலேயே மார்க்ஸிற்கு துவங்கிவிட்டதாக  பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.

 பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை 24 வயதிலேயே மார்க்சால் எடுக்க முடிந்தது. ’டாக்டர்கிளப்’ என்கிற சுதந்திர மனிதர் குழாமில் அனார்க்கிசம், நிகிலிசம், கம்யூனிசம் என்கிற பல கதம்ப வாதங்கள் இருந்தன. மார்க்ஸ் தனது எடிட்டோரியல் கொள்கையை இவர்களிடமிருந்து சற்று விலக்கி வைத்துக்கொண்டார். அன்றுள்ள பத்திரிக்கை சட்ட சூழலில் அவர்களின் கருத்துக்கள் பொருத்தமில்லாதவை என இளம் மார்க்ஸ் கருதினார். ரெயினிஸ் ஜெய்டுங் RZ பாரிஸ் நிருபராக மோசஸ் ஹெஸ்  கம்யூனிச சிந்தனைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். வேறு பத்திரிக்கைகள் அவற்றை விமர்சித்தபோது மிக கவனமாக மார்க்ஸ்அதன் கொள்கைகள் இன்று சொல்லப்படும் வடிவத்தில் இன்னும் சோதிக்கப்படாதவைகளாகவே இருக்கின்றன, எனவே நடைமுறையில்தேவை குறைவான’ ஒன்றாகவே படுவதாக’ எடிட்டர் என்ற முறையில்  மார்க்ஸ் அன்று கருதினார்.
RZ பத்ரிக்கை ஆரம்பத்தில் அதன் தாராளவாத சிந்தனைகளால் பொறுத்துக்கொள்ளப்பட்டாலும் சென்சார் தொல்லைகளுக்கு உள்ளானது. ’தனியார் சொத்துரிமை நியாயமற்றது’ என மிக சாதரணமாக இன்று நாம் கருதமுடிந்த ஒன்றை அன்று பிசினஸ் வட்டாரங்கள் ஏற்காமல் கோபமடைந்தன. மோசேல் திராட்சை தோட்ட உரிமையாளர்கள் குறித்து அவர் எழுதிய 4 பகுதி கட்டுரை அரசாங்கத்தையும் குற்றத்திற்கு உள்ளாக்கியது. மார்க்ஸ் பொறுப்பேற்றபின் ரெயினிஸ் ஜெய்டுங் 1000லிருந்து 3300 ஆக விற்பனை உயர்ந்தது. மிக முக்கிய பத்ரிக்கையாக கருதப்படலானதுஜார் பற்றி எழுதிய கட்டுரையால் ருஷ்யாவின் பேரரசர் நிகோலஸ் 1 கோபமடைந்தார். பின்னர் பிரஷ்யாவின் அமைச்சரவை கூடி பத்திரிக்கை தடையை தெரிவித்தது. மார்க்சின் பதில்களால் அரசாங்கம் திருப்தியடையவில்லை. அவர் தனது எடிட்டர் பொறுப்பை மார்ச் 17 1843ல் ராஜினாமா செய்தார். மார்க்ஸ் ஆறுமாத அளவு எடிட்டர் பொறுப்பில் இருந்திருப்பார். பத்ரிக்கை துறையின் மோசமான, சுதந்ததிரத்தை பாதிக்கும் சூழலை அவர் உணர்கிறார். கபடங்களால் தான் சோர்ந்துவிட்டதாக தெரிவிக்கிறார்.
பிரஞ்சு புரட்சியின் அரசியல், இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் தாக்கங்கள், ஜெர்மன் சிந்தாங்களின் முன்னேற்றம் ஆகியவை மார்க்சை புரட்சிகர சிந்தனைகள் நோக்கி அதன் புதிய உருவாக்கங்களை நோக்கி அழைத்து சென்றன.
30 மில்லியன் மக்கள் வாழ்ந்த பிரான்சில் லூயி பிலிப் அரசர் வாக்குரிமையை சற்று விரிவுபடுத்தினர். லூயி பிளாங் சோசலிஸ்ட் கருத்துக்களை வரலாற்றுணர்வுடன் பேசியும் எழுதியும் வந்தார். Society of the friends of the people அமைப்பு  1830 செப்டம்பரில் பெரும் பொதுகூட்ட அழைப்பை விடுத்தது. இதன் காரணமாக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகினர். பின்னர் மனித உரிமை சொசைட்டி அழைப்பில் 1834களில் போராட்டங்கள் நடந்தன. Society of families, Society of seasons என இயக்கங்கள் நடந்தன. 1839ல் palace of Justice யை போராளிகள் 300 பேர் சூழ்ந்து பிடித்தனர். ஆனால் அக்கலகம் நீடித்து நிற்கவில்லை. தலைவர்கள் கைதாகினர். தோல்வியை தழுவிய கலகங்களால் ஆகஸ்ட் பிளாங்கி  33 ஆண்டுகள் சிறைப்பட்டார்.
1789 பிரஞ்சு புரட்சி காலத்தில்  Babeuf  சோசலிச சிந்தனைகள் மூலம் ‘நிலம்  சமுக உடைமை, உணவு’ பிரச்சாரங்களை மேற்கொண்டார். அவரின் கலகம் காரணமாக (Guillotined) கில்லட்டின் முறையில் அவர் கொல்லப்பட்டார். செயிண்ட் சைமன்   ’Economic parliament’ பொருளாதார நாடாளுமன்றம் என்கிற கருத்தை தீர்வாக முன்வைத்தார். முதலாளிகள் தலைமையில்- விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் அறிவுரையில் நாடாளுமன்றம் என்றார். சார்லஸ் ஃபூரியர் கம்யூன்கள் வாழ்க்கை என்றார். ராபர்ட் ஓவன்மாதிரி சமூகம் ஒன்றை’ நிறுவி சோதித்தார். Cabet புத்தகம் 1839ல் வெளியாகி செல்வாக்கு பெற்றது. வறுமைக்கு எதிராக என அவர் குரல் ஒலித்தாலும் வன்முறையற்று என பேசினார். Louis Blanc பிரஞ்சு புரட்சியை உயர்த்திப் பிடித்து அதன் வரலாற்றையும், அதேபோல் அரசாங்க கடன் உதவிகளின் மூலம் தொழிலாளர்களின் ஒர்க்ஷாப் கோரிக்கையும் வைத்தார். புருதான் (Proudhan) சொத்து என்பது திருட்டு என்றார். அனார்க்கிச சோசலிசம் என்கிற கலவையை அவர் பேசினார். இவை அனைத்தையும் மார்க்ஸ் கற்று விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
1760-1840 பிரிட்டனின் தொழில்வளர்ச்சி அபாரமாக 20 மடங்கு வளர்ந்து உயர்ந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்தது. ஜெர்மன் தத்துவ சிந்தனையை அடுத்த உயரத்திற்கு எடுத்து சென்றிருந்தார் ஹெகல். அவரின் பினோமனலாஜி ஆஃப் மைண்ட் வெளியானது. அவர் World Spirit  என்கிற தூய சிந்தனையிலிருந்து தனது இயக்கவியல் கருத்துக்களை பின்னினார்அவரது தத்துவம்இருக்கின்ற சமுகத்தின் செறிவு solidity of established society’ என்பதாக அமைந்தது. புருனோ பாயர் கிறித்துவம் குறித்த கேள்விகளை எழுப்பினார். ஃபாயர்பாக் உலக ஆன்மா என்பதெல்லாம் இல்லை என்றார். இளம் ஹெகலியர்களில் சிலர் நேரடி அரசியல் நடவடிக்கை என்றனர். கடுமையான வதையில் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்த ஆர்னால்ட் ரூகா பத்ரிக்கை ஒன்றை துவங்கினார். இது அரசியல் காலம் (The age has become political) என ஆர்னால்ட் ரூகா பேசிவந்தார். 1843ன் துவக்கத்தில் ரூகா தன்னுடன் இணை ஆசிரியராக பத்திரிக்கையில் பணிபுரிய  மார்க்சை அழைத்தார்.
மார்க்சின் மீதும் அவரின் ஆற்றலிலும் மிகுந்த நம்பிக்கைவைத்து ஜென்னி 7 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தார். இந்த பொறுமை வியக்கத்தக்கது என்றாலும் சில நேரம் மனத்தொய்வுகளை காட்டுவதாகவும் இருந்தது. அமைதியாகிவிடுவது, குறைகளை எழுதுவது, தற்கொலை மனோபாவத்தை வெளியிடுவது போன்ற அழுத்தங்களையும் மார்க்சிற்கு அவர் தந்ததாக டேவிட் பெலிக்ஸ் ( பக் 26  marx as politician david felix) குறிப்பிடுகிறார். திருமணத்திற்கு பின்னர் மார்க்ஸ் ஜென்னியுடன் அவரது தாயார் வீட்டில் ட்ரியருக்கு அருகில்Kreuznach எனும் ஊரில்  தங்குகிறார்..  Philosophy of Rights என்கிற அரசியல் சமுக பிரச்சனைகளை விவாதிக்கின்ற ஹெகல் ஆக்கத்தை மார்க்ஸ் கற்கிறார். அது குறித்து கட்டுரை ஒன்றை எழுதுகிறார்..
பாரிஸ் என்றால் புரட்சி என்கிற ஈர்ப்பு மட்டுமே அவருக்கு தெரிகிறது. அதன் கலாச்சார மேன்மை அழகு என்பதெல்லாம் அவரை பாதிக்கவில்லை. புரட்சிகர கருத்துக்களை தேடி குவித்துக்கொண்டிருந்தார். 1843-45ல் பாரிசில் இருந்தார். Deutsch - Franzosische Jahrbucher பத்ரிக்கையில் ரூகா உடன் இரு கட்டுரைகள் மார்க்ஸ் எழுதினார். பின்னர் வரவிருந்த அவரின்புனித குடும்பம், பொருளாதார தத்துவ கையேடுகள்’  ஆகியவற்றிற்கான வெளிப்பாடுகளை இக்கட்டுரைகள் கொண்டிருந்தன.
1840களில் அரசியல் அகதிகளின் பெரும் புகலிடமாக பிரான்ஸ் இருந்தது. 20000 என்ணிக்கையில் அவர்கள் இருந்ததாகவும் அதில் பாரிசில் மட்டும் 12000பேர் இருந்ததாகவும் பெலிக்ஸ் சொல்கிறார். புரட்சிகரவாதிகளைத்தவிர ஜெர்மானியர்கள் 15000பேர் அங்கு வாழ்ந்து வந்தனர். German peoples club, League of outcasts போன்றவற்றில் ஜெர்மன் கைவினைஞர்கள் இருந்தனர். இக்காலத்தில் ஜெர்மன் தொழிலாளர் தலைவர் கார்ல் ஷாப்பர் (karl Schapper) தீவிரமாக செயல்பட்டுவந்தார். 1837ல் சில தொழிலாளர்களை திரட்டி’ லீக் ஆப் ஜஸ்ட்உருவாக்கினார். அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் லண்டன் சென்று 1840ல் ஜெர்மன் தொழிலாளர் கல்வி என்பதற்கான சொசைட்டி துவக்கினார்.
பாரிஸ் வந்த மார்க்ஸ்க்கும் ஜென்னிக்கும் பொது சமையல் அறை கொண்ட-  நான்கு குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக வசிக்கும்படியான கம்யூனில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. சிலவாரங்களில் இளம் ஜெர்மான்ய இயக்க புரட்சிகர கவிஞர் ஜார்ஜ் ஹெர்வேவின் துணைவியார் தனி இடம் என சொல்லி போனார். ரூகா துணைவியாரின் தொல்லை ஜென்னிக்கு ஏற்பட்டது. அதே பகுதியில் வேறு இடத்திற்கு ஜென்னியுடன் மார்க்ஸ் குடியேறினார். பிரஞ்சு புரட்சிகர தலைவர்களிடமிருந்து கட்டுரைகள் ரூகாவிற்கு வரவில்லை. வந்த சில கட்டுரைகளும் மிகுந்த நாத்திக  நெடி கொண்டிருந்தன .பாரிசில் லூயி பிளாங், பியரி லெராக்ஸ், புருதான் போன்றவர்களை சந்திக்க  மார்க்சிற்கு வாய்ப்பு கிடைத்தது. ரூகாவிற்கு பிரான்ஸ் புரட்சிகர சக்திகள் அங்கீகாரம் தங்களுக்கு கிடைப்பதில்லை, வெளிநாட்டிலிருந்து வருவோர் தனித்துவிடப்படுகின்றனர் என்கிற என்ணம் உருவானது. புருதான் மறைந்தபோது ஒருவரை ஒருவர் காயப்படுத்திகொண்ட விவாத இரவுகளை ரூகே குறிப்பிடுகிறார். புருதான் டைரிகளில் மார்க்ஸ் பற்றிய குறிப்பு இல்லை என பெலிக்ஸ் சொல்கிறார்.(பக் 38ல்).
ரூகா 1844 பிப்ரவரியில் நோய்வாய்பட்டதால் மார்க்ஸ் பத்த்ரிக்கையை எடிட் செய்து கொணர்ந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ், ஹெயின்ரிச் ஹெயின் போன்றவர்களின் ஆக்கங்கங்கள் இடம்பெற்றன. சர்க்குலேஷன் மிக குறைவாக இருந்தது. கப்பல் வழியாக ரைன்லாந்த் பகுதிக்கு அனுப்பப்பட்ட 100 பிரதிகளும் கைப்பற்றப்பட்டன. ஆண்டுக்கு 550 பிரஷ்யன் தாலர் என்கிற ஊதியம் மார்க்சிற்கு தருவதாக சொல்லித்தான் ரூகா (Arnold Ruge) அழைத்திருந்தார். அன்றுள்ள நிலையில் மத்தியதர வாழ்க்கைக்குரிய ஊதியமது. ஆனால் பத்ரிக்கை போகாததால் மார்க்சிற்கு ஊதியம் தரப்படவில்லை. தனது  கலோன் பணக்கார நண்பர்கள் மூலம் 1000 தாலர்கள் பெற்றுத்தான் மார்க்ஸ் குடுமபத்தை நடத்த வேண்டியிருந்தது.
புத்தகம் ஒன்றை எழுதுவதற்காக முன்பணம் 1500 பிராங்க்ஸ் பெற்று கஷ்டத்தை மார்க்ஸ் தணித்துக் கொண்டதாக அறிய முடிகிறது.  Vorwarts பத்ரிக்கை குழு ஒன்று வளர்ந்தது. மார்க்ஸ், பகுனின், ஹெயின், ஹெர்வே என எழுதுபவர்கள் சேர்ந்தனர். பகுனின் தங்கியிருந்த சிறு அறையில் 14 பேர் அளவில் கூடுவதும் விவாதிப்பதும் நடந்தது. முகம் தெரியாத அளவு  புகை மண்டலம் சூழ  அவர்கள் விவாதித்தாக   பெலிக்ஸ் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். நண்பர்கள் குழு விவாதத்தில் ரூகா அந்நியப்பட்டுப்போக மார்க்ஸ் அக்குழுவிற்கு ஏற்புக்குரியவரானார். ரூகா தொழிலாளர் பிரச்சனை குறித்து எழுதிய கட்டுரைக்கு அவரின் முதலாளித்துவ சிந்தனையை தாக்கி மார்க்ஸ் விமர்சனம் எழுதினார். எதிர்படுபவர்களையெல்லாம் மார்க்ஸ் கொன்றுவிடுவார் என ரூகே பதில் விமர்சனம் தந்தார்

No comments:

Post a Comment